தியாகராஜர் “எவர நீ” என்ற பாடலில் ‘ராம’ என்ற சொல்லுக்கு அழகிய அர்த்தத்தைக் கூறுகிறார். சிவனுக்கு உகந்த பஞ்சாக்ஷர மந்திரமான “நமசிவாய” என்பதில் ‘ம’ என்ற எழுத்தே ஜீவன். அது இல்லாவிடில் ‘ந சிவாய’ (அதாவது “சிவம் இல்லை” என்ற பொருள்) ஆகிவிடும். விஷ்ணுவிற்கு உகந்த “நாரயணாய” என்ற மந்திரத்தில், ‘ரா’ என்ற எழுத்தே ஜீவன். அதை நீக்கிவிட்டால் ‘நா அயனாய’ என்று ஆகிவிடும். நாராயணன் என்றால் எங்கும் நிறைந்தவன் என்று பொருள். ‘நா அயனன்’ என்றால் எங்குமே இல்லாதவன் என்று பொருள். இந்த இரு ஜீவ எழுத்துக்களைக் கோத்து ‘ராம’ என்ற பெயர் பிறந்தது என்கிறார்.
இப்படியாகவோ, அல்லது வேறு எப்படியாகவோ பிறந்த பெயர் ராமன். சிறு வயதில் ‘ஆ-அம்’ ஊட்ட ஆரம்பிக்கும் போதே ராமனின் கதையும் நம்மூரில் ஊட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
வட நாட்டுக்குப் போனால், காலை எழுந்தவுடன் முகமனே ‘ராம் ராம்’ என்கிறார்கள்.
“இப்ப அதுக்கு என்ன?”, என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன்.
இப்படிப்பட்ட பெயர் என்னுடையதும்தான். ஆனால் என்னுடையது மட்டுமே அல்ல.
மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தப் பெயரால் ஒரு பிரச்னை. நான் எழுதிய புத்தகமும், எல்லே ராம் எழுதிய புத்தகமும் ஒன்றாய் விகடனில் வெளியாயின. அந்தச் செய்தி ஹிந்து நாளிதழில் வெளியானது. அதைப் படித்தவரெல்லாம், எல்லே ராமின் மனைவி லலிதா ராம் என்றும். கணவனும் மனைவையும் ஜோடியாக புத்தகங்கள் வெளியிட்டுளனர் என்றும் எண்ணத் தொடங்கினர். “நீங்க ராம். டிசம்பர் தர்பார் எழுதியிருக்கேள். உங்க ஆத்துக்காரி லலிதா வரலியா?”, என்றெல்லாம் என்னைக் கேட்ட போது காமெடியாக இருந்தது.
சில மாதங்களாக, அடிக்கடி யாராவது ஒருத்தர் “நீங்கதான் ஜெயமோகனுக்கு இசையைப் பத்தி லெட்டர் எழுதற ராமா?”, என்று கேட்கிறார். ஆரம்பத்தில் விளையாட்டாகத்தான் எடுத்துக் கொண்டேன். நாட்பட நாட்பட, விசாரிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. கூடிய விரைவில் டீசல் ஆட்டோ வீட்டிற்கு வருமோ என்று கூடத்தோன்றுகிறது.
ஐயா பொது ஜனங்களே! நம் நாட்டில் கூட்டத்தில் நின்றபடி “ராம்” என்று உரக்கக் கூவிப் பாருங்கள். நூற்றுக்கு முப்பது பேர் திரும்பிப் பார்க்கக் கூடும். ராமநாராயணன், ராமசுப்பு, ராமகிருஷ்ணன், ராமராஜன், ராமசந்திரன் என்று பலதரப்பட்ட பெயர்களின் சுருக்கம் ‘ராம்’-ஆக இருக்கக் கூடும். இணையத்திலேயே கூட எத்தனையோ ‘ராம்’-கள் இருக்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், அடிக்கடி எழுதிய போதும் சரி, ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை பதிவிட்ட போதும் சரி, ‘லலிதா’ என்ற முன்னொட்டு இல்லாமல் என் பெயரில் எழுத்து வெளி வந்ததில்லை. இருப்பினும், நானே அவன், என்று பலர் உறுதியாக நம்புவது ஆச்சர்யமாக இருக்கிறது.
நேற்று கூட ஜெ.ராம்கி கேட்டார், “நீங்கதான் அவனா?”.
ராம்கியாவது நல்ல மனிதர். நான் அவனில்லை என்றதும் உடனே நம்பிவிட்டார். இன்னொரு நண்பர் ஜெயமோகன் தளத்தில் வந்த ஒரு வலை இதழின் விமர்சனத்தைப் படித்துவிட்டு பயங்கர கடுப்பிலிருக்கிறார். நான் என்ன சொல்லிப் பார்த்தும், “இசையைப் பற்றி இருக்கிறது. கடுமையான விமர்சனமாகவும் இருக்கிறது. இது நீயாகத்தான் இருக்க முடியும்”, என்கிறார். இத்தனைக்கும் எங்கள் நட்பு பள்ளி நாட்களில் முளைத்த ஒன்று.
நானும் ஜெயமோகன் தளத்தை தினமும் பார்க்கிறேன். அவர் எழுத்தின் மேல் எனக்கு ஈர்ப்பு உண்டு. அவருடைய விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் புத்தகம் வைத்து இருக்கிறேன். அதை விட முக்கியம் – வாசித்திருக்கிறேன். அவர் காந்தியின் பிள்ளைகள் பற்றி எழுதிய கட்டுரைகளை சிலருக்கு forward செய்து இருக்கிறேன். ஜெயமோகன் தமிழ்ஸ்டுடியோ தளத்தைப் பற்றி எழுதிய 4 வரியில், ஒரு வரி நான் எழுதிய கட்டுரைகளைக் குறித்து இருந்ததைக் கண்டு இரண்டு நாட்கள் தலையில் கொம்பு முளைத்தது போல நடந்து கொண்டிருக்கிறேன்.
எனக்கும் ஜெயமோகனுக்கும் இருக்கும் சம்பந்தம் அவ்வளவே!
பொதுவாகவே எனக்குப் பிரபலங்களைப் பார்த்தால் ஒரு வித பயம். நெருங்கினால் குதறிவிடுவார்களோ என்று தோன்றும். அதுவும் இல்லாமல், அவர்கள் ஆளுமையைப் பார்த்து, கற்பனையாய் எனக்குள் இருக்கும் பிம்பம், அருகில் சென்றதும் தகர்ந்து விடுமோ என்ற அச்சம் வேறு. அதனாலேயே, நான் ரசிக்கும் பலரின் ஆளுமையை, எட்ட நின்று ரசித்து மகிழவே விரும்பிகிறேன். அப்படிப்பட்ட அளுமைகளுள் ஒன்றுதான் ஜெயமோகனின் எழுத்தும்.
இசை என்ன “எங்கப்பன் வீட்டு சொத்தா?”. என்னை விட கடுமையான வார்த்தைகள் கொண்டு விமர்சனம் செய்யும் ‘ராம்’-கள் இணையத்தில் இல்லையா?, என்ற கேள்விகள் எல்லாம் கேட்கப் போவதில்லை. கேட்டால் அதற்கும் தயாராக பதில் வைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்படியே போனால், நானே கூட “நான் யார்”, என்று தத்துவ விசாரத்தில் இறங்கக் கூடும். இறுதியில், நானும் கடவுள், அந்த ராமும் கடவுள், ஆதலால் நானும் அந்த ராமும் ஒன்றுதான் என்று அத்வைதத்தில் முங்கி, முடிவுக்குக் கூட வந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
ஆதலால், நான் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில், நான் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதினால், நிச்சயம் லலிதா ராம் என்ற பெயரிலேயே எழுவேன். மற்றபடி எந்தப் பெயரில் வந்தாலும் அது என்னுடைய கடிதம் இல்லை.
நண்பர்களே! நம்புங்கள்.
நான் அவனில்லை!
இப்போது தெளிவாகிவிட்டது 😉
நண்பர் சேது மூலம் உங்கள் வலைத்தளம் பற்றி அறிந்தேன். அற்புதமான பத்திகள். எப்போது படித்து முடிப்பேன் எனத் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் படித்து முடித்துவிடுவேன்!!
நன்றி!
ரா.கிரிதரன்
அன்புள்ள கிரிதரன்,
சொல்வனத்தில் உங்களின் கட்டுரைகள்/மற்ற படைப்புகளைத் தொடர்ந்து படிக்கிறேன். வி.எஸ்.நரசிம்மனின் ராகசாகா பற்றிய கட்டுரை class. அப்போதே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இப்போதுதான் வாய்க்கிறது.
ராம்’ என்றாலே பிரச்சினைதான் போலிருக்கிறது. 🙂
பேசாமல் உங்களை பெயரை ‘ஹேராம்’ என்று மாற்றிக் கொள்ளலாம். ” ஏ ராம்! என்று யாரும் உங்களை மரியாதையில்லாமல் அழைக்க முடியாது. புகழ்பெற்ற திரைப்படம் என்ற கெத்தும் இருக்கும். காந்தி இறக்கும் போது என் பெயரைச் சொல்லி விட்டுத்தான் செத்துப் போனார் என்று வரலாறு தெரியாதவர்களிடம் உதார் விடலாம்.
எவ்வளவு வாய்ப்புகள். 🙂
சுரேஷ்,
பேரை மாத்தறது-னு ஆனதுக்கு அப்றம், ‘ராம்’ எதுக்கு. ’அத்யந்தகாமன்’, ‘சங்கீரண ஜாதி’ மாதிரி பல்லவர் கால பட்டப் பெயரா வெச்சுக்க வேண்டியதுதான்:-)
லலித், ராம் பெயர் விளக்கம் ரொம்ப சுவாரஸ்யம். இதுவரை நான் கேள்விப் படாதது. உங்களை சங்கீத ஜாதி முல்லை என்று மட்டும்தான் நினைத்தேன். சகல ஜாதி முல்லை போலிருக்கிறதே? எழுதுகிற நடையும் பொகு சுவாரஸ்யம். உங்கள் மெயில் ஐடி தெரிந்தால் நான் கம்போஸ்(!) செய்த பாட்டுக்கள் சிலதை அனுப்புவேன். அது கம்போசா டிகம்போசா என்று நீங்கள் சொல்லலாம்!
http://kgjawarlal.wordpress.com
ஜவஹர்
ramchi@gmail.com-க்கு அனுப்பவும்.
🙂
அச்சச்சோ………….. நீங்க ‘அவள்’ இல்லையா?
முந்தாநாள் காயத்ரி வீணை (பார்த்தசாரதி சபா) கேக்கப்போனப்ப, என் முன்னால் ஒரு வரிசை தள்ளி இருந்த பச்சைப்புடவையைப் பார்த்துட்டு, லலிதா ராமுன்னு நீ சொல்லிக்கிட்டே இருப்பயே அது அவுங்கதான்ன்னு அடிச்சுவிட்டார் கோபால்.
நெசந்தானோன்னு நானே அடிக்கடி அவுங்களைப் பார்த்துக்கிட்டே இருந்தேன். (அவுங்க தலையில் வச்சுருந்த கல்வச்ச க்ளிப் ப்ரமாதம்)
என் அவச்தையைப் பார்த்துட்டு, நான் வேணாப் போய்க் கேக்கட்டுமான்னு துடிச்ச கோபாலை நிறுத்த நான் பட்ட பாடு இருக்கே……..
வீணைக்கு முன்னே அபிநயம் நானாத்தான் இருக்கும். ரௌத்த்ரம் பழகிண்டு இருந்தேன்!
இதெல்லாம் too much-ஆ இல்லை?
படத்தைதான் வலைப்பூ-ல போட்டு இருக்கேனே! அதைப் பார்த்தா ’அவள்’ மாதிரியா இருக்கு?
என்ன மச்சி,
பிரச்சனை ரொம்ப அதிகமாயிடுச்சு போல இருக்கு. கொளுத்தரத கொளுத்திப்போட்டு நான் ரிலாக்ஸா இங்கே வைன் அடிச்சுட்டு இருக்கேன் போ… ஒரே காமெடியா இருக்கு…!! ஹஹஹஹஹ்ஹஹா!!! அது சரி நானும் எதாவது ஒரு ஒட்டு வெச்சுக்கலாமான்னு பாக்கறேன்.
//படத்தைதான் வலைப்பூ-ல போட்டு இருக்கேனே! அதைப் பார்த்தா ’அவள்’ மாதிரியா இருக்கு?//
ஆஹா….. அப்ப என்னைப் பார்த்தால் பூனை மாதிரி இருக்கும்:-))))))))
துளசி,
ஆஹா….எப்படி இப்படி? என்னமா லாஜிக்காப் பிடிக்கிறீங்க…தாங்கலை:-))
வாய்யா ராம்…வயித்தெரிச்சலைக் கிளப்பி விட்டுட்டு வயின் வேறயா…ஹ்ம்ம்…நடத்து ராஜா…நடத்து.
ஓ, அப்படியா!, விளக்கத்திற்கு நன்றிகள்!
அப்படியே நம்ம வலைப்பூவிற்கும் விசிட் அடிக்கணும்!
Very funny.. including the comments..