Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2010

91 வருடங்கள் நிறைவான வாழ்வு வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கலைக்காகவே செலவு செய்த ‘சங்கீத கலாச்சாரியா’ எஸ்.ராஜம், இன்று மாலை 7.35 மணி அளவில் காலமானார்.

அவர் கடைசியாக என்னிடம் தெரிவித்த விருப்பம், கோடீஸ்வர ஐயருக்கென்று ஒர்ய் தினம் கொண்டாடி, நாள் முழுவதும் அகண்டமாக அவர் பாடல்களைப் பாட வைக்க வேண்டும் என்றது.

அதை நிறைவேற்ற இறையருள் வேண்டும்.

Read Full Post »

ஆறு மாசமாய தமிழ்ஸ்டுடியோ.காம் உடன் இணைந்து எஸ்.ராஜத்தின் மீது ஆவணப்படம் எடுத்து வருகிறேன். ஷூட்டிங் எல்லாம் முடிந்தாகிவிட்டது. எடிட்டிங் வேலை முடிய இன்னும் ஒரு மாசம் ஆகும்.

விரைவிலேயே, ஒரு ஜீனியஸை அவர் இருக்கும் போதே ஆவணப்படுத்திய பெருமையை அடையப் போகிறோம் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தேன்.

போன ஞாயிற்றுக் கிழமை கூட அவரைச் சந்தித்தேன். கொஞ்சம் தளர்ந்திருந்தாலும், உற்சாகமாகப் பேசினார்.

திங்கள் முதல் மூச்சுத் திணரலாம். நேற்றிலிருந்து பல்ஸ் குறைந்து கொண்டே வருகிறதாம்.

என்ன சொல்லியும் மனது கேட்க மாட்டேன் என்கிறது.

Positive thoughts-க்கு பவர் உண்டாமே!

இணைய அன்பர்கள் எல்லோரும், அவர் பிழைத்தெழ ஒரு நிமிடம் பிரார்த்தியுங்களேன்.

நமக்குக் கொடுப்பினை இருப்பின், அவர் பிழைத்தெழக் கூடும்.

ராஜம் பற்றிய விவரங்கள் இங்கே

Read Full Post »

ஆழ்வார்கள், நாயன்மார்கள், தியாகராஜர், தீட்சிதர் போன்ற பலர், பல க்ஷேத்ரங்களுக்குச் சென்று, அந்த இடங்களின் மேல் பாடல் புனைந்துள்ளனர். அப்படிப் ப்ட்ட இடங்களைத் தேர்வு செய்து, அந்த ஊரின் தனிச் சிறப்பு, அங்கிருக்கும் கோயில்கள், அந்த இடத்தைப் போற்றும் பாடல்களின் பெருமை ஆகியவற்றை விளக்கி, தேவாரம், பிரபந்தம், கிருதிகள், திருப்புகழ் ஆகியவற்றைக் கொண்டு கச்சேரியும் செய்ய விதுஷி விஜயலட்சுமி சுப்ரமணியம் ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

அந்த வரிசையில் முதல் கச்சேரி ஜனவரி 31-ம் தேதி,நாரத கான சபா மினி ஹாலில், காஞ்சிபுரத்தைப் பற்றி நடக்கவிருக்கிறது.

விஜயலட்சுமி கொடுத்த விவரங்கள் கீழே:

First Kshetra Sangeetham Episode : KANCHI Kshetra

Date: January 31, 2010, Sunday
Time: 6 :00 PM
Venue:  Narada Gana Sabha mini hall, 6 pm.
Guest of Honour: Smt. Devaki Muthaiah

Presentation on KANCHI: Dr. Sarada Nambi Arooran, eminent Tamil scholar and Orator. Kalaimamani Dr. Sarada Nambi Arooran is a renowned Tamil scholar, actively spreading the glory of Tamil and saivite literature across the Globe. She belongs to the Maraimalai Adigalar family. She also holds the position of the State Information Commissioner.

Vocal: Smt Vijayalakshmy Subramaniam
Violin: Dr. R. Hemalatha
Mridangam: Sri. B. Ganapathyraman  

Vijayalakshmy Subramaniam is one of the leading exponents of Carnatic music. A disciple of Sangita Kala Acharya Shri S. Rajam, she has been performing since the age of twelve and has an impressive list of achievements to her credit. Vijayalakshmy has held audiences worldwide spellbound with her rich and mellifluous voice, her vast repertoire of ragas and compositions, and her perfect control on rhythmic aspects of music. Her concerts are rich with raga bhava and sahitya bhava, imparting tremendous refinement and sophistication to her presentations. She has conducted many workshops for the initiated and the layman with equal felicity.

www.vijayalakshmysubramaniam.com

Read Full Post »

ஜனவரி 4 அன்று ஜி.என்.பி பற்றிய ஆவணப் படம் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில் வெளியிடப்பட்டது. வருடத்தின் முதல் வேலை நாள் அன்று, மதியம் மூன்று மணிக்கு திரையீடு என்ற போது கூட்டம் அதிகம் வர வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். 2-மணி அளவில், “ஜி.என்.பி-க்கு பத்து குழந்தைகள் பிறந்தார்களோ தப்பித்தோம். அவர் குடும்பத்தினர் மட்டுமே அரங்கை ஓரளவு நிறைக்கின்றனர்”, என்றேன். மூன்று மணியை நெருங்கும் போது ஆச்சர்யப்பட்டுப் போனேன். சிறு துளி பெரு வெள்ளமென மாறியது.

வழக்கமாய் கச்சேரிகளுக்கே, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் அவ்வளவு கூட்டம் வராது. படம் தொடங்கும் போது, கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்திருந்தது. ஆவணப்படத்தில் பல இடங்களில் அப்ளாஸ். (அவற்றில் ஒன்று கூட எங்களுக்க்குச் சொந்தமானது அல்ல. அனைத்தும் அவர் இசைக்குக் கிடைத்தவையே). ஜனவரி 6-10 நாரத கான சபையில் நடந்த Global GNB festival-லிலும் இந்த ஆவணப்படம், நாளுக்கு அரை மணி நேரக் கணக்கில் திரையிடப்பட்டது. ஒவ்வொரு நாளும் நல்ல கூட்டமாம். என்னால் போக முடியவில்லை.

படம் வெளியான நாள் முதல், ஒரு ஞாயிற்றுக் கிழமையாய் பார்த்து படத்தை திரையிடக்கூடாதா, என்று பலர் படத்தை வெளியிட்டிருக்கும் ஸ்வாதி நிறுவனத்தைக் கேட்ட வண்னம் இருந்திருக்கிறார்கள். முதல் நாள் திரையீட்டுக்கு வந்திருந்த கிரேஸி மோகன், “ஜி.என்.பி. இந்த ஃபீல்டுல ரஜினி-னு புரிஞ்சுண்டேன்”, என்றார். அவர் சொன்னது சரிதான். வெறொரு பாடகருக்கு, அதுவும் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும், இவ்வளவு கூட்டம் கூடுமா என்பது சந்தேகம்தான்.

Public Demand-க்கு தலை வணங்கி, சென்னை எல்டாம்ஸ் ரோட் தத்வலோகா-வில் வரும் ஞாயிறு, காலை 10.30 மணிக்கு ‘இசை வசீகரன்’ மீண்டும் ஒரு முறை திரையிடப்படுகிறது. முந்தைய திரையிடல்களுக்கு வர முடியாமல் போன நண்பர்கள், இந்த முறை வந்து பார்த்து, கருத்துகளைப் பகிர்ந்து கொண்டால் சந்தோஷமாக இருக்கும்.

Read Full Post »

International Foundation for Fine art, Music Forum சார்பில் வழங்கும் Media Award, இந்த ஆண்டு ஸ்ருதி பத்திருக்கையின் ஆசிரியர் வி.ராம்நாராயணுக்குக் கிடைத்துள்ளது. இவரை சில மாதங்கள் முன்தான் நேரில் முதன்முதலில் சந்தித்தேன் என்ற போதும், ஜி.என்.பி நூற்றாண்டு மலரை இருவரும் சேர்ந்து தொகுத்ததால், சில மாதங்களிலேயே மிக நெருக்கமாகிவிட்டதாய் உணர்கிறேன்.

ராம் இந்தத் துறையில் மிகவும் சீனியர் என்ற போதும் மிக மிக அடக்கமானவர். பேசுகின்ற பத்தாவது வார்த்தையில் தன்னைப் பற்றிப் பேசிக் கொள்பவர் மலிந்திருக்கும் நேரத்தில், அவரைப் பற்றி பேச ஆரம்பித்தால், பேச்சை ஸ்ருதியைப் பற்றித் திருப்பிவிடுவார். இன்றைய நிலையில், சங்கீதத்துக்காகவும், நாட்டியத்துக்காகவும் நடத்தப்படும் ஒரே தரமான இந்திய இதழ் ஸ்ருதிதான். அந்த இதழுக்கு ஆசிரியர் என்ற கர்வம் ஒரு துளி கூட தென்படாத மனிதர். பல விழாக்களில் கடைசி வரிசையில் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார். கூச்ச சுபாவம் நிறைந்தவர்.

முதலில் ஒரு நல்ல இசை ரசிகர். எந்த ஒரு கலைஞரின் பாட்டையும் திறந்த மனதோடு அணுகுபவர். இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதை ஸ்ருதியின் முக்கிய கொள்கைகளுள் ஒன்றாக கருதுபவர். தன் கருத்துகளையும், ஸ்ருதி ஆசிரியர் பொறுப்பையும் அவர் அழகாக வேறுபடுத்தி வைத்திருப்பதைக் காண ஆச்சரியமாய் இருக்கிறது.

ஸ்ருதியில் profile செய்ய விட்டுப் போன இசை மேதைகளை எப்படியும் செய்துவிட வேண்டும் என்று நினைப்பவர். இவரது முயற்சியால்தான் மதுரை மணி, பாலக்காடு மணி பொன்றவர்களைப் பற்றிய இதழ்கள் (இவ்வளவு ஆண்டுகள் கழித்து) வெளியாயின. இதையெல்லம அவரிடம் சொன்னால், இன்னும் என்னென்ன செய்திருக்க வேண்டும், எங்கெல்லாம் தவறுகள் நுழைந்துவிட்டன என்று மட்டுமே பேசுவார்.

சம கால கலைஞர்களைப் பற்றி இவர் ஸ்ருதியில் செய்யும் பதிவுகள் மிகவும் முக்கியமானவை. விஜய் சிவாவும், ஜெயஸ்ரீ-யும் மறைந்த பின், அவர்களைப் பற்றி கிளருவதை விட, அவர்கள் உச்சியில் இருக்கும் போதே அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிடுவது மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன்.

இசைத் துறைக்கு வருவதற்கு முன், கிரிக்கெட்டில் ஆட்டக்காரராகவும், எழுத்தாளராகவும் நிறைய சாதித்தவர் ராம். தமிழ்நாடு கிரிக்கெட் வரலாற்றைப் பற்றி இவர் எழுதியுள்ல நூல் மிக அரிய பதிவு. இந்தத் துறையிலும் இவர் தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.

ஸ்ருதியைப் பொறுத்த மட்டில், ராம்நாராயணுக்கு இன்னும் நிறைய கனவுகள் இருக்கின்றன. இசை உலகுக்கு பேறிருந்தால் அவை மெய்ப்படும்! தன்னை முன் நிறுத்திக் கொள்ளாமல் பத்திரிக்கையை முன் நிறுத்தும் இவர் பணியை உணர்ந்து, இவருக்கு இந்த வருடம் விருது வழங்கிய அமைப்புக்கு பாராட்டுகள்.

Read Full Post »

இம்மாதம் அம்ருதாவிலே வெளியான கட்டுரை (வெளியாகியிருக்கும் என்று நம்புகிறேன்)

வாருங்கள் செல்வோம் 1992-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதிக்கு. நேற்றும், அதன் முன் தினமும், ஸ்ருதி ·பௌண்டேஷன், ஜி.என்.பி-யின் இசையைப் பற்றிய ஆய்வின் முடிவுகளை நாரத கான சபையில் நடந்த கருத்தரங்கில் வெளியிட்டது. அதைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். குறுக்கிடாமல் கேளுங்கள்.

ஸ்ருதி பத்திரிகையின் நிறுவனர் என்.பட்டபிராமன் தலைமையில், எஸ்.ராஜம், கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி, என்.ராமநாதன், ரிதா ராஜன், சுலோசனா பட்டாபிராமன் போன்ற கலைஞர்களும், இசை ஆய்வில் பல சாதனைகளைப் புரிந்தவர்களும் இருந்த குழு, ஆய்வின் முடிவுகளை ஜி.என்.பி இசைப் பதிவுகளின் வழியாக நிறுவியது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், சுமார் 150 மணி நேரம் செலவு செய்து, ஸ்ருதியின் ஆய்வுக் குழு ஜி,என்.பி-யின் இசையின் பல்வேறு கூறுகளைப் பற்றி ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளது.

முதலில், ஜி,என்.பி பாட வந்த காலகட்டம், அப்போது வெகு பிரபலமாக இருந்த அரியக்குடியின் கச்சேரி முறை, ஜி.என்.பி-யின் கச்சேரி முறை அவருக்கு முன் இருந்தவர்களின் முறையைத் தொடராமல், அறிவுப் பூர்வமாய் அணுகி, பல புதுமைகளைப் புகுத்தியது என்று பல விஷயங்களைத் தொட்ட பின், ஜி.என்.பி-யின் கச்சேரியின் பல்வேறு அம்சங்கள் ஆழமாக அலசப்பட்டன.

ஆரம்ப காலத்தில் ஜி,.என்.பி-யின் குரல், காலப்போக்கில் அது அடைந்த மாற்றங்கள் ஜி.என்.பி-யின் கச்சேரி தொடக்கம், ஒரு கச்சேரியை எப்படித் தொடங்கினாலும் அது கச்சேரியை எப்படி களை கட்ட வைத்தது போன்ற பல விஷயங்கள் அழகான ஆங்கிலத்தில் தெளிவாக விளக்கப்பட்டன.

ஜி.என்.பி-யின் ஆலாபனைகள், ராகத்தின் சிறு சித்திரம் (sketch), பிரதான கிருதிகளுக்கு முன் பாடும் ராகம், ராகம் தானம் பல்லவியின் பாடப்படும் ராகம், விருத்தங்களில் பாடும் ராகம் என பகுப்பட்டு, இவை ஒவ்வொன்றிலும் அவரின் அணுகு முறை எப்படி இருந்தது என்று தெளிவாக, உரிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

முதல் பிடியிலேயே ராக சாயலைக் காட்டுதல், மாளவி, செஞ்சு காம்போதி போன்ற அபூர்வ ராகங்களைப் பாடும் போதும் கேட்பவருக்கு ராக லட்சணம் பதியும் படியாகப் பாடுதல், பாடுகின்ற கிருதிக்கு ஏற்ப ஆலாபனையை அமைத்துக் கொள்ளுதல், பல்லவிக்கு ராகம் பாடுவதில் தனக்கென்று ஒரு வழியை வகுத்து, நாதஸ்வரத்தில் மட்டும்தான் விஸ்தாரமான ராக ஆலாபனைகள் கொடுக்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றி, ராகத்தில் வெவ்வேறு இடங்களில் ஆலாபனையின் மையத்தை இருத்தி, அந்த மையத்தைச் சுற்றி சுற்றி பல நகாசு வேலைகள் செய்து, படிப் படியாய் வெவ்வேறு ஸ்தாயிகளில் ராகத்தின் ஸ்வரூபத்தை ஜி.என்.பி வெளிப்படுத்தியதை வெகு அழகாக விளக்கினர் ஸ்ருதி ஆய்வுக் குழுவினர்.

ஜி.என்.பி-யின் தானம், அவர் எடுத்துக் கொண்ட பல்லவிகள், பல்லவிக்கு எடுத்துக் கொண்ட ராகங்கள், ராகமாலிகை ஸ்வரங்கள் போன்றவற்றை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய விதம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. ஜி.என்.பி கிருதிகளை அணுகிய விதம், பெரும்பாலும் பதச் சேதம் இன்றிப் பாடும் அவர் முறை (மறுகேலரா பாடலில் தவறாக பதம் பிரித்து இருப்பதையும் இந்தக் குழு சுட்டிக் காட்டத் தவறவில்லை), ஒரே அடியை பல முறை பாடும் போது வேறாக ஒலிக்கும் சங்கதிகளை அவருக்கு உரிய வகையில் அமைத்துக் கொண்ட விதம், அவர் அமைத்த சிட்டை ஸ்வரங்கள் ஆகிவற்றை அவர் பாடியிருக்கும் கிருதிகளின் ஒலிபரப்பின் மூலம் அழகாக விளக்கினர்.

நிரவலுக்கு அவர் எடுத்துக் கொண்ட அலாதியான இடங்கள், ஸ்வரப் ப்ரஸ்தாரத்தில் அவர் உபயோகித்த ஸர்வலகு முறை, பொருத்தங்கள் அமைப்பதில் முன்னோடியாக விளங்கிய விதம், ஸ்வராக்ஷரங்களின் மேல் அவருக்கு இருந்த காதல் என்பதையெல்லாம் விளக்கிய பின் ஜி.என்.பி இசையின் கூறுகள் என்று தவறாக நம்பப்பட்டு வந்த பல பரவலான கருத்துகளை உடைத்தெரிந்தன அந்தக் குழுவின் முடிவுகள்.

ஜி.என்.பி கிருதிகள் பாடிய விதம் அதீத வேகம் என்ற கருத்தை மறுத்து பாலகோபால, மாமவ பட்டாபிராமா, ஸ்ரீ சுப்ரமண்யாய போன்ற கிருதிகளை அவர் கே.வி.என், டி.கே.பி போன்ற விளம்ப காலத்துக்கு பெயர் போன வித்வான்களை விட குறைந்த வேகத்தில் பாடியிருப்பதை அறிவியல்பூர்வமாய் நிறுவினார்கள். Speed என்பது வேறு tempo என்பது வேறு. Speed என்பது நிஜம். Tempo என்பது போலி (Perception). ஜி.என்.பி-யின் இசையின் விறுவிறுப்பே வேகமென தவறாக் கருதப்பட்டது, என்கிறது ஆய்வுக் குழு.

ஜி.என்.பி-யின் ஸ்ருதி சுத்தத்தை அலசி, அவரது கடைசி காலத்தில் தள்ளாமையால் ஸ்ருதி விலகல்கள் ஏற்பட்டிருப்பது உண்மையெனினும், அவருக்கு ஸ்ருதி ஞானம் கிடையாது என்ற கூற்றில் உண்மை ஏதுமில்லை என்பது குழுவின் ஒருமித்த கருத்தாக இருந்தது. பிருகா என்றால் அது ஜி.என்.பி பாடுவதுதான் என்பது உண்மைதான் என்ற போதும், பிருகா மட்டுமே அவர் சங்கீதம் ஆகாது என்பதை விளக்கி, அவர் ஆலாபனையில் இருந்த சுத்த ஸ்வரங்களையும் கமகங்களையும் விளக்கி, குறிப்பாக ஜாருவை அவர் பயன்படுத்திய விதத்தை சாவேரி ராகத்தின் மூலம் வெளிப்படுத்திய விதம் வெகு ஜோர்.

சிறந்த பாடகராய் விளங்கியதைத் தவிர சிறந்த வாக்கேயக்காரராகவும் விளங்கிய ஜி.என்.பி-யின் கற்பனையில் உருவான கிருதிகளின் விரிவான அலசல் இடம் பெற்றது. அரிய ராகங்கள், தெரிந்த ராகங்களில் புதிய பிரயோகங்கள், அரிய ஸ்வராக்ஷரங்கள், கிருதிகளின் சங்கதி அமைப்பு, சிட்ட ஸ்வரங்கள், அவர் வழியைப் பின்பற்றுவோர் மட்டும் என்று இல்லாமல், மற்ற பாணியைப் பின்பற்றுவோரும் விரும்பிப் பாடும் பாடல்களாய் ஜி.என்.பி-யின் கிருதிகள் விளங்குவது என்று பல கருத்துகளை சுவை படக் கூறி, மாணவர்களைக் கொண்டு அவர் கிருதிகளை இசைக்கவும் வைத்ததைக் கேட்க கர்ணாம்ருதமாய் இருந்தது.

அவர் வழி நிலைக்கும் படி மாணவர்களை உருவாக்கியவர் ஜி.என்.பி. அவரின் பிரதான சிஷ்யர்களான எம்.எல்.வி மற்றும் தஞ்சாவூர் கல்யாணராமனின் இசையில் உள்ள ஜி.என்.பி பாணியின் கூறுகளையும், ஜி.என்.பி-யின் பாணியிலிருந்து வேறுபடும் கூறுகளையும் விளக்கி, ஒரு நல்ல சீடன், குருவின் பாணியை முழுவதுமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாததை படம் பிடித்துக் காட்டினர்.

கடைசியாக, ஜி.என்.பி இசைத் துறையில் ஆற்றிய பங்கையும், அவர் இசை இன்றும் ஏற்பொஅடுத்தும் தாக்கத்தைப் பற்றியும் அவருடன் பல முறை மேடையைப் பகிர்ந்து கொண்ட லால்குடி ஜெயராமன் விரிவாகப் பேசி, “சங்கீதத்துக்கு அழகும் புதுமையும் புத்துணர்ச்சியும் கொண்டு வந்து சங்கீதத்தின் எல்லைகளை விஸ்தரித்தவர் ஜி.என்.பி” என்று உரையை முடித்த போது அரங்கம் அதிர்ந்தது.

ஜீலியஸ் சீஸரின் ‘வினி விடி விஸி’ ஜி.என்.பி-க்கும் பொருந்தும் என்ற உமையாள்புரம் சிவராமன், பக்கவாத்தியங்களை ஊக்கப்படுத்துவதில் ஜி.என்.பி-க்கு நிகர் ஜி.என்.பி-தான் என்றார். இளம் பாடகரான சஞ்சய் சுப்ரமணியம், ஜி.என்.பி-யின் இசை எப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவும், புதியதை நோக்கி பயனிக்கவும் உதவுகிறது என்பதை உணர்ச்சி பொங்கப் பேசியும் பாடியும் காண்பித்தார்.

“He had his faults but they fall into insignificance before his achievements. He himself knew to seperate the sand from gold. We must also do so”, என்று முடிவுரையுடன் கருத்தரங்கம் இனிதே முடிந்தது. கருத்தரங்கில், நான் கேட்டு மனதில் பதித்துக் கொண்டவற்றை விட தவறவிட்டவை அதிகம். நான் மனதில் ஏற்றிக் கொண்டவற்றுள் சொன்னதை விட சொல்லாமல் விட்டவை அதிகம். அப்படியென்றால் எப்பேர்ப்பட்ட தகவல் சுரங்கமாய் அந்தக் கருத்தரங்கம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்களேன்.

வயிற்றெரிச்சலாய் இருக்கிறதா?

“இந்தப் படுபாவி, பின்னோக்கி கூட்டிப் போனதுதான் போனான், இன்னும் இரண்டு நாள் பின்னாடி சென்றிருக்கக் கூடாது. நானும் கருத்தரங்கை நேரில் கண்டு களித்திருப்பேனே. ஜாங்கிரி நன்றாக இருந்தது என்று எழுதியதைப் படித்தால் ஜாங்கிரியின் சுவை தெரிந்துவிடுமா என்ன? நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்தானே மிஞ்சும்”, என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.

காரணமாகத்தான் உங்களைக் கூட்டிச் செல்லவில்லை. 2009-ல் அமர்ந்து கொண்டே, நினைத்த மாத்திரத்தில் அந்தக் கருத்தரங்கைக் கண்டு களிக்கும் வசதி இருக்கும் போது, பின்னோக்கிப் போவானேன்?

1992-ல் நிகழ்ந்த கருத்தரங்கின் விடியோ பல வருடங்களாய் ஒரு சிலரிடம் மட்டுமே இருந்து வந்தது. ஜி.என்.பி-யின் நூற்றாண்டை உலகமே கொண்டாடும் இவ்வேளையில், ஸ்ருதி பத்திரிகையே அந்தக் கருத்தரங்கின் பதிவை, “The Music of GNB”, என்ற பெயரில் டிவிடி-களாக வெளியிட்டுள்ளது. அதை வாங்கினால் (விலை ரூ. 2000), வேண்டிய போதெல்லாம் பார்த்து மகிழலாமே. 

டிவிடி வாங்க விழைவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தி ஸ்ருதி ·பௌண்டேஷன் 9, கதீட்ரல் சாலை, சென்னை – 600 086 தொ: 044 28128070 மி: sruti.magazine@gmail.com

Read Full Post »