Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for செப்ரெம்பர், 2014

இரண்டு நாட்களாய் ஸ்ரீனிவாஸ் என் வாழ்வை நிறைத்த கணங்கள் மனம் முழுதும் அலையடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரே ஒரு கச்சேரி மட்டும் மீண்டும் மீண்டும் வந்து போய்க் கொண்டிருக்கிறது.

Shrinivas

ஸ்டேஜ் டிக்கெட் வாங்கி ஸ்ரீநிவாஸுக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டு கேட்ட கச்சேரி. பிரதானமாய் வகுளாபரண ராகத்தை எடுத்துக் கொண்டு ஆலாபனை. மத்ய ஸ்தாயியில் ஆரம்பித்து ஸ்வரம் ஸ்வரமாய் ராகத்தை வளர்த்து, தார ஸ்தாயியில் புயல் போல் மையம் கொண்டு மின்னல் சஞ்சாரங்களை மேலும் கீழுமாய் உதிர்த்து மீண்டும் ஒரு முறை மந்தர ஸ்தாயிக்கு வந்ததும் இப்போது முடிந்துவிடும் ஆலாபனை என்று நினைக்கையில் மந்த்ர ஸ்தாயி விஸ்ரூபமாய் தன்னைக் காட்டிக் கொள்ள முடிவெடுத்தது. ஸ்ரீநிவாஸ் கருவியானார், மாண்டலின் அக்கருவியின் ஓர் அங்கமானது. கையும் கருவியும் ஒன்றரக் கலந்தன. அதிகமில்லை இரண்டு மூன்று நிமிடங்களில் வாத்யத்தின் எல்லைக்குத் தள்ளப்பட்டது அந்த இடக் கரம். இனி செல்ல இடமில்லை என்ற நிலையிலும் மந்த்ர ஸ்தாயியின் பவனி முடிந்தபாடில்லை. இன்னும் இன்னும் என்று அந்தக் கரங்களை எக்கித் தள்ளின ராக சஞ்சாரங்கள்.

ஸ்ரீனிவாஸின் வலக் கரம் பிரடைக்குச் சென்றது. துல்லியமாய் ஸ்ருதி சேர்க்க மட்டும் பிரடையைத் தீண்டும் கரம் இன்று தந்தியின் இறுக்கத்தை தளர்த்தத் துவங்கியது. பிரடையை எவ்வளவு திருகினால் தந்தி எவ்வளவு தளரும், அந்தத் தளர்ந்த நிலையின் எந்த எடத்தில் என்ன ஸ்வரம் பேசும் என்று ஒருவனுக்குத் தெரிந்திருக்க முடியுமா? ஸ்ரீநிவாஸாகவே இருக்கட்டுமே!

பல்லாயிர மணி நெர உழைப்பில் கிட்டும் கனியா? அல்லது பல்லாயிர ஜென்ம பூர்வ புண்ணிய பலனா? யாருக்குத் தெரியும்?

பளிச்சென்று கண்கூசி மறையும் அமானுஷ்யக் கீற்று!

தளர்ந்த அந்தத் தந்தியில் இன்னும் இரண்டு மூன்று சஞ்சாரங்கள் வாசித்ததும் ராகத்துக்கு முழுமையாய் வெளிப்பட்டுவிட்ட திருப்தி ஏற்பட்டிருக்க வேண்டும். ஸ்ரீனிவாஸில் விரல்கள் ராகத்தை ஷட்ஜத்துக்கு நகர்த்தி ஆலாபனையை நிறைவு செய்தன. குறைந்த பட்சம் தம்புராவைத் தொட்டாவது பர்த்தவர்களுக்கு அன்று நடந்த விஷயத்தின் வீச்சு கொஞ்சமாவது புரியக் கூடும்.

தான் என்ன செய்தோம் என்பதை ஸ்ரீனிவாஸ் உணர்ந்திருப்பாரா? எத்தனையோ கச்சேரிகள் நேரில் கேட்டிருந்த போதும் இது போன்ற நிகழ்வை வேறெப்போதும் நான் கண்டதில்லை, ஒரு வேளை இது என் அதீத கற்பனையொ என்று கூட நினைத்துக் கொள்வதுண்டு. அப்போதெல்லாம் என்னருகில் அமர்ந்தபடி “டேய்!” என்று வாயடைத்த நண்பன் வத்ஸனின் கையை கெட்டியாக நான் பிடித்தது கனவில்லைதானே என்று வத்ஸனுக்குத் தொலைபேசி உறுதிப் படுத்திக் கொள்வேன். மேடையில் வெகு அருகில் இருந்தவர்களுக்கு மட்டுமே புரிந்திருக்கக் கூடிய அந்தக் காட்சியை ஸ்ரீனிவாஸ் நினைத்திருந்தால் விஸ்தாரமான நாடகமாக்கி அரங்கமே அறிய செய்திருக்க முடியும். அந்தக் பிரக்ஞையெல்லாம் இருந்தால் அவன் அவதார புருஷனாக முடியுமா என்ன?

ஸ்ரீனிவாஸை என் போன்ற ரசிகர்கள் எங்களுக்கானவனாய், எங்கள் வீட்டில் ஒரு ஆளாய், பிரத்யேகமாய் எங்களுக்கே வாசிப்பவனாய் நினைத்ததில் ஆச்சரியமில்லை. எந்த ஒரு படைப்பும் உருவாக்கும் மாயத் தொற்றம் அது. பெரும்பாலான சமயங்களில் படைப்புக்குரியவனை நேருக்கு நேர் சந்திக்கும் போது அந்த மாய பிம்பம் வெடித்துச் சிதறிவிடும். ஸ்ரீனிவாஸுடன் எதேச்சையாய் நிகழ்ந்த ஒரு சில சம்பாஷணைகளில் ”நம்ப ஸ்ரீனிவாஸ்” என்கிற எண்ணம் இன்னும் இறுகித்தான் போனது. நேற்று ஒரு அம்மா எழுதியிருந்தார், “என் மகனை இழந்தது போல இருக்கிறது”, என்று. எத்தனை உண்மையான உணர்வு!

அவன் ராக அலையெழுப்பி மேலே சென்ற போது நானும் சென்றேன். அவன் ராகக் கடலில் மூழ்கி முத்தெடுத்த போது அது எனக்கே கிடைத்த முத்தாய் கூத்தாடினேன். பிரமாதமாய் ஒரு சங்கதி வாசித்து முடித்து தலை எழுப்பி அவன் சிரித்த போது அது எனக்கும் அவனுக்கும் நிகழ்ந்த சங்கேத சம்பாஷணையாய் நினைத்துக் கொண்டேன். வாகதீஸ்வரி, வனஸ்பதி, விஜயஸ்ரீ, வீரவசந்தம், வந்தனதாரிணி, வர்தினி, சூர்யகாந்தம், பிந்துமாலினி, ஸ்ருதிரஞ்சனி, ஊர்மிகா என்று எததனை எத்தனை அறிமுகங்கள் ஏற்படுத்திக் கொண்டுத்த நண்பன் அவன். காதில் மாட்டிய ஹெட்ஃபோனில் அவன் ஒலிக்க எத்தனை மணி நேர நடை பயணங்களில் துணையாய், வழியாய் நின்றவன். இன்னும் எத்தனையோ பயணங்களை அவன் அழைத்துப் போக தயாராய்தான் இருந்தான். சென்ற மாதம் கூட இரண்டு தெரு தள்ளியிருக்கும் உன்னதியில் கோகுலாஷ்டமிக்கு வாசித்துப் பொயிருக்கிறான். “எங்கப்பா போயிடப் போற நீ? மத்த வேலையும் கொஞ்சம் பார்க்க வேண்டாமா? அடுத்த தடவைக்கு வந்துடறேன்”, என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்ட நான் தான் எவ்வளவு மடையன்?

இப்போது இறுதிப் பயணத்தில் பறந்தேவிட்டான். இனி கத்தினால் வருவானா? கதறினால் கிடைப்பானா?

அவன் போனாலும் அவன் இசை வாழும் என்கின்றனர். அவன் இசையை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு அவனைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். இந்த ஜென்மத்துக்கு அது போதும்.

Read Full Post »

சென்ற வருடம் நவம்பரில் வலை மேய்ந்து கொண்டிருந்தேன். டிசம்பரில் நடக்கவிருக்கும் கச்சேரிகளின் பட்டியல்கள் வெளியிட்ட நிலையில், எனக்குப் பிடித்த பல கலைஞர்கள் பலருக்கு மிக சொற்பமான அல்லது கச்சேரி வாய்ப்புக அல்லது வாய்ப்பே இல்லாமல் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனேன். அவர்களுள் ஒரு சிலரை மட்டுமாவது மேடையேற்றி ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாதான் பரிவாதினியின் 2013 இசை விழா. மொட்டை மாடி கூட காலியாய் இல்லத நிலையில், ஏழு நாள் விழாவை மூன்று இடங்களில் வைத்துச் சமாளித்தோம். எங்களது அனுபவமின்மை, சுமாரான ஒலி அமைப்பு, ஆள் பற்றாக்குறை என்று பல தடங்கல்களை மீறி மனதுக்கு நிறைவாக பல கச்சேரிகள் அமைந்தன. இஞ்சிக்குடி வாசித்த பஹுதாரியும், வீணை பார்த்தசாரதி வாசித்த பெஹாகும், எம்.எஸ்.வித்யா பாடிய யாகப்ரியாவும், மல்லாடி சூரிபாபு பாடிய ஜோகும் என்றும் அகலா நாதத் திவலைகள்.

இந்த வருடம் டிசம்பர் களேபரத்தைத் தவிர்த்து, நவம்பரில் வருகிறது பரிவாதினி இசை விழா.

ஏழு நாட்கள் நடை பெரும் விழாவில் 14 கச்சேரிகள் இடம் பெறவுள்ளன. தினமும் ஒரு வாத்தியக் கச்சேரியும் ஒரு வாய்ப்பாட்டு கச்சேரியும் இடம் பெரும். வருங்காலத்தில் உச்சம் தொடப் போகும் இளைஞர்கள் எழுவரும், இன்னும் கொஞ்சம் இவர்களை கேட்க மாட்டோமா என்று நல்ல ரசிகர்களை ஏங்க வைக்கும் முதிர்ந்தவர்கள் எழுவரும் இசைக்க உள்ளனர்.

high resolution banner

இந்தக் கச்சேரி தொடரில் இடம் பெரும் ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் தனித் தனியாய் பதிவிடுகிறேன்.

இசை விழாவுடன் கூட, சென்ற ஆண்டு தொடங்கியுள்ள வருடாந்திர விருதான பர்லாந்து விருது (Fernandes Award of Excellence) இந்த வருடம் தேர்ந்த மிருதங்க வினைஞர் வரதன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மிருதங்க மேதை முருகபூபதி அவர்களின் மிருதங்க நாதத்தைப் போஷித்த கைகளுக்குச் சொந்தக்காரர் வரதன்.

அது என்ன பர்லாந்து விருது?

இசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்ரைச் செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்கலையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப் பட்ட அரிய மிருதங்க வலைஞர்தான் பர்லாந்து. மிருதங்க உலகின் அரசர்கள் என்று கருதப்படும் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை – இருவருக்கும் மிருதங்கம் செய்து கொடுத்தவர் பர்லாந்து என்கிற Fernandes-தான். அவரைப் பற்றிய பல சுவாரஸ்ய கதைகள் உண்டு. அவற்றுள் சிலவற்றை நானே முன்பு இந்த வலைப்பூவிலேயே எழுதியுள்ளேன். அவர் பெயரால் விருதை சென்ற வருடம் தொடங்கி, பர்லாந்து அவர்களின் மகன் திரு. செல்வத்துக்கு அளித்தோம்.

சென்ற வருட விழாவில் சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும்தான் காரணம்”, என்று உருக்கமாய் கூறிய உண்மை அங்கிருந்தவர்களை சற்றே அசைத்தது.

இந்த விருதையும், வருடாந்திர கச்சேரிகளையும் எல்லா வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டி பல வழியில் முயன்று வருகிறோம். அதில் ஒரு வழி crowd funding. சென்ற வருடமே பல நண்பர்கள் பங்களிக்க விரும்பியதாய் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினர். அந்த எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த்ச் சுட்டியில் சென்று தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.

https://www.indiegogo.com/projects/parlandu-award-parivadini-concert-series-2014/x/8248462

கச்சேரிகளும், விருது வழங்கும் விழாவும் நடக்கும் இடம் சென்னை ராக சுதா ஹால், மயிலாப்பூர். தேதி – நவம்பர் 12 முதல் 18 வரை.

Read Full Post »

என் பழனி சுப்ரமண்ய பிள்ளை நூலைப் படித்திருப்பவர்களுக்கு பர்லாந்தின் அறிமுகம் தேவைப்படாது. ஒற்றை வரியில் சொன்னால் மணி ஐயருக்கும், பழனி சுப்ரமணிய பிள்ளைக்கும் மிருதங்கம் செய்துகொடுத்த மேதாவி. அவர் பெயரில் ஒரு விருதைத் தொடங்கி சென்ற வருடம் அவர் மகன் செல்வம் அவர்களுக்கு வழங்கினோம். அந்தச் சமயத்தில் பர்லாந்தைப் பற்றிய ஆவணப் படம் ஒன்ரையும் எடுக்கத் தொடங்கினோம். அதிலிருந்து ஒரு துளி இங்கே உங்களுக்காக.

முழுமையான ஆவணப்படத்தின் வெளியீட்டைப் பற்றியும், இந்த வருடத்துக்கான பர்லாந்து விருதினைப் பற்றிய விவரங்கலையும் விரைவில் தெரியப் படுத்துகிறேன்.

Read Full Post »

இந்தப் பக்கம் ஒதுங்கி ரொம்ப வருஷம் ஆகிவிட்டது. குறைந்த பட்சம் பரிவாதினியில் நடப்பவையாவது தொடர்ந்து இங்கு பகிர எண்ணம். பார்க்கலாம்.

முதல் படியாய், இன்று வெளியான விதுஷி லால்குடி ராஜலட்சுமியின் நேர்காணல். சங்கீதத்தால், சங்கீதத்துக்காகவே உயிர்த்திருக்கும் ஓர் உன்னதக் கலைஞர்.

 

Read Full Post »