Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2019

நாகஸ்வரம் என்றதும் மனத்தில் தோன்றும் பெயர் மேதை ராஜரத்தினம் பிள்ளையினுடையதுதான். அவரின் நீங்காப் புகழுக்கு அவருடைய அதீத கற்பனையும், அதை வெளிக்காட்டக் கூடிய அற்புதத் திறனும் காரணங்கள் என்றாலும் இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.

அது அவர் வாசித்த வாத்யம். ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கத் தொடங்கிய காலத்தில் அளவில் சிறிய, ஐந்து கட்டை ஸ்ருதியில் ஒலித்த திமிரி நாயனம் என்கிற வகை நாகஸ்வரமே உபயோகத்திலிருந்தது. திமிரி நாயனத்தில் அனைத்து ஸ்வரங்களையும் துல்லியமாக வெளிப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக சுத்த மத்தியம ஸ்வரத்தை வாசிக்க கலைஞர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

96b98603-325f-4b0b-9c02-5f0a45308547

1945-ல் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நரசிங்கம்பேட்டையில் இருந்த ரங்கநாத ஆசாரி என்பவர். இரண்டு கட்டை ஸ்ருதியில் வாசிக்கக் கூடிய, அளவில் சற்று பெரிய நாகஸரத்தை வடிவமைத்தார். அடுத்த ஊரான திருவாவடுதுறையில் இருந்த ராஜரத்தினம் பிள்ளையைச் சந்தித்து தன் கண்டுபிடிப்பைக் காட்டினார். வாசித்துப் பார்த்த ராஜரத்தினம் அனைத்து ஸ்வரங்களும் துல்லியமாய் சேருவதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்.. சுத்த மத்யமத்தை இடைஞ்சலின்றி வாசிக்க முடிந்ததால் அதுவரை கடக்க முடியாத எல்லைகளை எல்லாம் அவரது வாசிப்பு கடக்கத் தொடங்கியது. தன்னுடனே இருந்து தனக்கு மட்டுமே இந்த வாத்தியத்தை அளிக்குமாறு ரங்கநாத ஆசாரியைக் கேட்டுக் கொண்டார் ராஜரத்தினம்.

தன் வாழ்வின் கடைசியில், ஒரு கடிதம் ஒன்றை ராஜரத்தினம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசும், மற்ற நாகஸ்வர கலைஞர்களும் ரங்கநாத ஆசாரிக்கு ஆதரவு வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளார். ராஜரத்தினம் பிள்ளைக்குப் பின் அந்த வாத்யத்தை மேதை காருக்குறிச்சி அருணாசலத்துக்கு அளித்தார் ரங்கனாத ஆசாரி. ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தில் ‘சிங்கார வேலனே தேவா’ பாடலில் காருக்கிறிச்சி வாசித்ததும் அந்தப் பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. அப்போது அந்தப் பாடலின் வெற்றிக்கு காரணம் தன் வாசிப்பு மட்டும் காரணமல்ல, ரங்கநாத ஆசாரியின் வாத்தியமும் காரணம் என்று உலகுக்கு தெரியப்படுத்தினார் அருணாசலம். அதோடு தன் செலவில் ஒரு வைர மோதிரம் ஒன்றையும் ரங்கநாத ஆசாரிக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

81c12041-5ea2-4065-a20d-a6b276602297

அதன் பின்னரே, அனைத்து கலைஞர்களும் ரங்கநாத ஆசாரியின் கண்டுபிடிப்பை உபயோகப்படுத்தத் தொடங்கினர். அவர் கண்டுபிடித்த வகையிலேயே இன்றைய நாகஸ்வரங்கள் செய்யப்படுகின்றன. ரங்கநாத ஆசாரியின் பிள்ளைகள் இன்றளவும் நரசிங்கம்பேட்டையில் நாகஸ்வரம் செய்து வருகின்றனர்.

ஒரு ஆளுமையின் நூற்றாண்டு, அவரின் பங்களிப்பைத் திரும்பிப் பார்க்க ஓர் அரிய வாய்ப்பு. ரஙநாத ஆசாரியின் நூற்றாண்டான இந்த வருடத்தில் அவரின் பங்களிப்பின் மேல்போதிய வெளிச்சம் விழ இசைத்துறை கடமைப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர் பட்டம்.

Read Full Post »

இந்தக் கட்டுரை, மாணவர்களுக்காக தினமலர் வெளியிடும் பட்டம் இதழில் வெளியானது. என் சேமிப்புக்காக இங்கும் இட்டுக் கொள்கிறேன்.

PHOTO-2019-07-31-11-40-14

திருச்செந்தூரின் கடலோரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களை கிருபானந்தவாரியாரின் சொல்லமுது கட்டிவைத்திருந்தது. அப்போது ஒரு வித்வான் அரங்குக்குள் நுழைவதைப் பார்த்து வாரியார் சொன்னார், “இவ்வளவு நேரம் நான் என் அப்பன் முருகனைப் பத்திச் சொன்னேன். என் தம்பி இதோ வந்துட்டான், அவன் முருகனைக் கையைப்பிடிச்சுக் கொண்டுவந்து உங்க கண் முன்னால நிறுத்துவான்”.

வாரியார் குறிப்பிட்ட கலைஞர் ரஞ்சிதகானமணி மதுரை எஸ்.சோமசுந்தரம்.  ஃபெப்ரவரி 09-ம் தேதி, 1919-ல் (ஆம்! இந்த வருடம் நூற்றாண்டுதான்) சுவாமிமலையில் பிறந்த சோமுவின் இயற்பெயர் பரமசிவம். அரசுப்பணியில் இருந்த சோமுவின் தந்தையார் பணி நிமித்தமாக குடும்பத்துடன் மதுரைக்குப் பெயர்ந்தார்.

சிறு வயதில் குஸ்தி, சிலம்பம் போன்றவற்றில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வந்தார் சோமு. அங்கு பயிற்சியாளராக இருந்த நாராயண கோனார் காளீஸ்வரன் கோயிலில் பக்திப்பாடல்கள் பாடுவார். அவருக்குத் துணையாய் ஸ்ருதிப்பெட்டியை இசைப்பார் சோமு. ஒருநாள் நாராயணக் கோனாருக்காக கோயிலில் காத்திருந்த சோமு களைப்பில் தூங்கிப் போனார். அப்போது அவர் கனவில் காளி வந்து, “நீ இசைக் கற்றுக்கொள்”, என்று பணித்ததாக ஒரு நேர்காணலில் சோமுவே குறிப்பிட்டுள்ளார்.

ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு சங்கீத்தத்தில் மூழ்கிய சோமு, ஒரு கச்சேரியில் சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை பாடியதைக் கேட்டுமயங்கி அவரிடம் மாணவனாகச் சேர்ந்தார். பதினான்கு வருடங்கள் குருகுலவாசம் செய்து நாயனாப் பிள்ளை இசைப் பாரம்பரியத்தின் முக்கிய வாரிசாக தன்னை உருவாக்கிக்கொண்டார்.

ஒரு மாணவனின் வளர்ச்சிக்கு குருவிடம் கற்பதைத் தவிர, தன்னைச் சுற்றியுள்ள நல்ல இசையை செவியாறுதலிலும் முக்கிய பங்குவுண்டு. அவ்வகையில், மதுரை சோமு அந்தக் காலத்தில் கோலோச்சிய ராஜரத்தினம் பிள்ளை, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என்.பி போன்றவர்களின் இசையை தொடர்ந்து கேட்டு அவற்றுள் உள்ல நல்ல விஷயங்களை தன் குரலுக்கேற்ப மாற்றிக் கொண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். 1940-களில் கச்சேரி அரங்கில் நுழைந்த சோமு, வெகு சீக்கிரத்திலேயே இசை ரசிகர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தார்.

1950-களில் உச்சிக்கு வந்த சோமு கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இசையரசராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவர் கச்சேரி நடக்காத கிராமமே தமிழகத்தில் இல்லையெனலாம். “ஒருமுறை வீட்டை விட்டு கச்சேரிக்கு கிளம்பிவிட்டால் திரும்ப வீட்டுக்கு வர குறைந்தபட்சம் 35 நாட்கள் ஆகும். ஊர் ஊராய் கச்சேரிக்காக பயணித்துக்கொண்டே இருப்போம்.”, என்கிறார் சோமுவின் சீடர் மழையூர் சதாசிவம்.

கர்நாடக இசையைப் பொருத்த வகையில், அந்த வடிவத்தின் ஆழங்களைத் தொட்டுப் பாடுபவர்களுக்குப் பெரும்பாலும் பெரிய ரசிகர்கூட்டம் வாய்க்காது. ஜனரஞ்சகமாகப் பாடி கூட்டத்தைக் கவர்பவர்கள் பாட்டில் ஆழங்களைக் காணமுடியாது. சோமுவைப் போன்ற ஒருசில மேதைகளுக்குத்தான் இவ்விரண்டும் ஒருசேர சாத்தியமாகிறது. இசை இலக்கண தேர்ச்சி என்பது பலசமயங்களில் கலைஞனை தன்னை இழந்துபாடுவதிலிருந்து தடுத்துவிடுவதுண்டு. சோமுவைப் பொருத்தமட்டில் இலக்கணம் அவரை என்றும் தடுத்ததில்லை. கற்பனையைக் குலைக்கும் பட்சத்தில் அந்தத் தளையைத் தூக்கியெறிவதையும் அழகுணர்ச்சிகெடாமல் செய்தவர் சோமு.

மேடையேறிவிட்டால் அங்கு சோமு என்னும் இசைக் கலைஞரைப் பார்க்க முடியாது. மாறாக சங்கீத தேவதையின் உபாசகராக, ராக சௌந்தர்யத்தின் ரசிகராக சோமு வீற்றிருப்பதைத்தான் காண முடியும். தன் அனுபவத்தை ரசிகரின் அனுபவமாகவும் கடத்த முடிந்தததால், பாட்டுக்கிடையில் சோமு விக்கத்த போது ரசிகர்களும் விக்கினர். அவர் கண்கலங்கிய போது ரசிகர்களும் அழுதனர், அவர் துள்ளிக் குதித்த போது ரசிகர்களும் ஆனந்தக் கூத்தாடினர்.

செம்மங்குடி சீனிவாஸ ஐயர் ஒருமுறை, “ராகங்கள் எல்லாம் தேவதைகள். ராக ஸ்வரூபம் வெளிப்படும்படி பாட அந்த ராக தேவதையின் அருள் வேண்டும். பொதுவாக கலைஞர்கள் எல்லாம் அந்த தேவதையின் அருளை நோக்கி தவமிருப்பார்கள். சோமுவைப் பொறுத்தவரை ராகங்கள் எல்லாம் “என்னைப்பாடு சோமு”, என்று சோமுவிடம் தவம்கிடக்கின்றன.”, என்றுள்ளார். இதைவிட அந்த நூற்றாண்டு நாயகனைப் பற்றி வேறென்ன சொல்லிவிடமுடியும்?

பெட்டிச் செய்தி

கர்நாடக இசைக் கலைஞராக ஒவ்வொரு ஊரிலும் அறிந்தவராக இருந்த சோமுவை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் தெரியப்படுத்திய பெருமை ‘தெய்வம்’ படத்தில் அவர்பாடியுள்ள ‘மருதமலை மாமணியே’ பாடலையே சேரும். தர்பாரி கானடா ராகத்தில் சோமுவின் பாணியிலேயே அமைந்த அந்தப்பாடல் இன்றளவும் தமிழகத்தில் ஒலிக்காத நாளில்லை. எந்த ஊரில் சோமுவின் கச்சேரி எத்தனை மணி நேரங்களுக்கு நடந்தாலும், இந்தப்பாடலை எப்போது பாடுவார் சோமு என்று காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத் தந்தபாடலிது. இதைத் தவிர ’சஷ்டி விரதம்’ என்கிற படத்திலும் சோமு பாடியுள்ளார். (This line is edited out in the published article due to want of space). சோமு இசையமைத்துப்பாடி வெளிவராத படமான ‘அவளுக்காகவே நான்’ என்கிற படத்தைப் பற்றி சமீபத்தில் இசையாய்வாளர் சரவணன் (Saravanan Natarajan) கவனப்படுத்தியுள்ளார்.

Read Full Post »

மேற்கத்திய வாத்தியங்கள் தென்னாட்டு செவ்வியல் இசையில் பிரவேசித்து, காலப்போக்கில் கர்னாடக இசையின் ஓர் அங்கமாகவே மாறிவிடுவதைக் கடந்த சில நூற்றாண்டு வரலாற்றைப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். வயலினில் தொடங்கி, கிளாரினெட், மாண்டலின் வரிசையில் சாக்ஸஃபோனுக்கும் அந்த இடம் கிடைக்கச் செய்தவர் கத்ரி கோபால்நாத்.

நாகஸ்வரப் பரம்பரையில் தோன்றிய கோபால்நாத், ஆரம்பத்தில் தன் தந்தையிடமே நாகஸ்வரம் பயின்றார். தனது பதினைந்தாவது வயதில் மைசூர் அரண்மனையில் பாண்டு வாத்தியங்களில் ஒன்றாக சாக்ஸஃபோன் இசைப்பதைக் கேட்டு அதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளார். முன்னோடிகள் இருக்கும் வாத்தியத்தை எடுத்துக்கொள்ளும்போது செல்ல வேண்டிய பாதை ஓரளவாவது தெளிவாக இருக்கும். தணியாத வேட்கையால் செலுத்தப்படும் வெகு சில கலைஞர்களே முன்னோடிகளாகும் கடினமான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அடிப்படையில், சாக்ஸஃபோன் என்பது இந்திய செவ்வியல் இசைக்கான கருவியன்று. மேற்கத்திய இசையில் ‘ஸ்டக்காட்டோ’ எனப்படும் தனித்தனியாய் ஒலிக்கும் ஸ்வரங்களை வாசிக்க முடியுமே அன்றி, இந்திய இசையின் உயிரான கமகங்களை வாசிப்பது மிகக் கடினம்.

 

இன்னிசை சவால்

ஒரு முழு நேர இசைக் கலைஞனின் முதல் கச்சேரி பெரும்பாலும் அவனது பதின்ம வயதில் நிகழ்ந்துவிடும். கத்ரி கோபால்நாத் முதன்முதலில் சாக்ஸஃபோனைக் கேட்டதற்கும், அவரது 28-வது வயதில் நடந்த அவரது முதல் கச்சேரிக்கும் இடையில் 12 ஆண்டுகள் உருண்டோடியுள்ளன.

kadri

இந்தக் காலத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை கோபால்நாத் சாக்ஸஃபோனில் செய்துள்ளார்.

1) வழமையான சாக்ஸஃபோனில் 3.5 ஸ்தாயிகள் வரை வாசிக்க முடியும். பெரும்பாலான கர்னாடக இசைக் கிருதிகளை இரண்டு ஸ்தாயியில் வாசித்துவிட முடியும். கற்பனைகளைப் பறைசாற்றும் ஆலாபனைகள், ஸ்வரங்கள் போன்றவற்றில்கூட பெரும்பாலான விஷயங்கள் இரண்டு ஸ்தாயிக்குள் அடங்கிவிடும். இதை உணர்ந்து கருவியில் சில விசைகளைக் களைந்து வாசிப்பதற்கு லகுவாக வாத்தியத்தை மாற்றியுள்ளார். 2) இரும்பினாலான இணைப்புகளை ரப்பர் இணைப்புகளாய் மாற்றி கமகங்கள் வாசிக்க ஏதுவாக்கியுள்ளார். 3) விசைகளை அழுத்தும்போது கருவியில் உள்ள துளைகள் திறக்கவும் மூடவும் பயன்படும் தோலினாலான பட்டைகளை மிருதுவான ஃபெல்ட் பேப்பரால் மாற்றியுள்ளார்.

முதலில் வாத்தியத்தைக் கைவரப் பெற்று, அதன் பின் அதன் எல்லைகளை உணர்ந்து, பிறகு அதன் போதாமைகளை நீக்கப் பரிசோதனைகள் செய்து, இறுதியில் கர்னாடக இசைக்கு ஏற்றதாய் மாற்ற வேண்டிய கடினமான பாதையைக் கடந்துள்ளார்.

துணிச்சலான பரிசோதனைகள்

கத்ரி கோபால்நாத்தின் இந்த முயற்சியின் வீச்சை உணர அதன் காலத்தில் வைத்துப் பொருத்திப் பார்க்க வேண்டும். அவர் சாக்ஸஃபோனில் பரிசோதனை முயற்சிகள் செய்துகொண்டிருந்த சமயத்தில் சென்னையில் கிதாரில் கர்னாடக இசைக் கச்சேரிகள் செய்ய முயன்றுவந்தார் இசைக் கலைஞர் சுகுமார் பிரசாத். இன்று கிடைக்கும் அவரது இசைப் பதிவுகள் அவரை உன்னதக் கலைஞராகவே காட்டுகின்றன. இருப்பினும், அன்றைய சூழலில் புதியதொரு மேற்கத்திய வாத்தியத்தை கர்னாடக சங்கீத மேடையில் ஏற்றக சபாக்களுக்கும், ரசிகர்களுக்கும்கூட மனத்தடை இருந்துள்ளது. வாத்தியத்தை வசப்படுத்திய பின்னும் மேடையேற்ற முழு நேரம் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்த சூழலில், எண்பதுகளின் கடைசியில் சுகுமார் பிரசாத் இசைத் துறையை விட்டு முற்றிலும் நீங்கிவிடுகிறார்.

இந்தச் சூழலில்தான் சாக்ஸஃபோனை ஒரு கர்னாடக இசைக் கருவியாக கோபால்நாத் முன்னிறுத்தியுள்ளார் என்பது பிரமிப்பாக இருக்கிறது. தன் முடிவின் மீது அசாத்திய நம்பிக்கையும், எடுத்ததை சாதித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதமும் இன்றி வெளி மாநிலத்தவர் ஒருவர் கர்னாடக இசையுலகின் மையமான சென்னையில் காலூன்றுவது சாத்தியமே அல்ல. தனக்குப் பின்னால் வந்த/வரப்போகிற கீபோர்ட் முதலான மேற்கத்திய வாத்தியங்களில் செவ்வியல் இசை வாசிப்பவர்களுக்காகச் செழுமையான பாதையை அமைத்துக்கொடுத்தவர்களுள் முக்கியமான ஆளுமை என்றும் இசையுலகம் அவரை நினைவில் கொள்ளும்.

 

திரையுலகப் பிரவேசம்

கத்ரி கோபால்நாத்தின் வாழ்வில் திருப்புமுனை அவர் ‘டூயட்’ திரைப்படத்தில் வாசித்ததுதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அந்தப் படம் வந்த 1994-க்கு முன்னாலேயே அகில இந்திய வானொலியின் ஏ-டாப் கலைஞர் என்கிற அங்கீகாரம். மியூசிக் அகாடமி முதலான பிரதான சபைகளில் வாசிக்கும் வாய்ப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளுக்குச் சென்று வாசிக்கும் வாய்ப்பை அவர் பெற்றிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

திரையிசையில் வாசித்தது இவரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கலாம். அந்தத் தொடக்கப்புள்ளியைத் தொடர்ந்து அவரைக் கேட்க வைத்தது அவர் வாசிப்பில் இருந்த ஜிலுஜிலுப்பு. இயற்கையாகவே கம்பீரமான தொனியில் ஒலிக்கும் வாத்தியத்தில் குழைவையும் வெளிப்படுத்திய விந்தை மக்களைக் கட்டிப்போட்டது. அவரது மந்திர ஸ்தாயிப் பிரயோகங்கள் ஆழமும் மென்மையும் சேர்ந்த அபூர்வக் கலவையாக்கி சொக்க வைத்தன. உச்சஸ்தாயியில் ஒற்றை ஸ்வரத்தில் காலக்கடிகாரத்தைக் கேலிசெய்தபடி அவர் நின்றபோது ரசிகர்களுக்குள் எழுந்த மனவெழுச்சி எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அனுபவமாய் அமைந்தது. நான் நேரில் கேட்ட பல கச்சேரிகளில் எந்தக் கச்சேரியிலும் அவர் திரையில் வாசித்ததையோ அல்லது வேறு திரையிசைப் பாடல்களையோ வாசிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

எளிமையும் பணிவும்

 

2000-ல் தன் புகழின் உச்சியில் இருந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் கத்ரி தன் பயணத்தைத் திரும்பிப் பார்த்தபடி இப்படிக் கூறுகிறார், “என் முயற்சியாலும், குருவின் அருளாலும் இந்தக் கருவியில் சாதகம் செய்து, கர்னாடக இசைக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து வாசித்துவருகிறேன். இருப்பினும், சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, சாதாரண காந்தாரத்தை இன்னும் சரளமாக வாசிக்க முடிவதில்லை” என்கிறார். சிகரங்களைத் தொட்டபோதும் போக வேண்டிய தூரத்தைப் பற்றிய தெளிவும், அதை வெளிப்படுத்தக்கூடிய நேர்மையும் பகட்டும் படாடோபமும் நிறைந்த இந்தத் துறையில் அதிகம் காணக்கிடைக்காதவை.

அவரது விமர்சகர்கள், அவர் கச்சேரியில் தோடி, தன்யாஸி, சஹானா போன்ற ராகங்களை அதிகம் கையாளாததைக் குறிப்பிடுவர். அது வாத்தியத்தின் தற்கால எல்லைக்கு அப்பாற்பட்டதே அன்றி, கலைஞனின் குறையல்ல என்று சொல்லத் தோன்றுகிறது. ஆரம்பத்தில், நாகஸ்வர கச்சேரிகள்போல இன்னொரு சாக்ஸஃபோனைத் துணைக் கருவியாகக் கொண்டு தவிலுடன் கச்சேரிகள் செய்தாலும், காலப்போக்கில் வயலின், மிருதங்கம், மோர்சிங்குடன் அவர் கச்சேரிகளைத் தனக்கேயுரிய பாணியில் அமைத்துக்கொண்டார். குறிப்பாக, வயலின் விதுஷி கன்யாகுமரிக்கு சம பங்களித்தபடி அவர் வாத்தியத்தின் எல்லைக்கு உட்பட்ட மோகனம், ஆபேரி, கல்யாண வசந்தம் போன்ற ராகங்கள் காலம் கடந்தும் நிற்கக்கூடியவை.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சாக்ஸஃபோன் கலைஞர்கள் உருவாகியிருப்பது கண்கூடு. குறிப்பாக, கர்நாடகத்தில் வீட்டு விழாக்களிலும், கோயில் திருவிழாக்களிலும் மங்கல வாத்தியமாக நாகஸ்வரத்துக்கு இணையாக சாக்ஸஃபோன் ஒலிப்பதைக் காணலாம். பரபரப்பான கச்சேரி வாழ்வுக்கு இடையிலும் தன் குருநாதர் டி.வி.கோபாலகிருஷ்ணனின் மகன் ஜி.ராமநாதன் போன்ற அற்புத சீடர்களை அவர் உருவாக்கத் தவறவில்லை. அவர் சாதனைகள் அத்தனையையும் ஒதுக்கினாலும்கூட, கர்னாடக சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாத எத்தனையோ ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்களை இசையின்பால் ஈர்த்தவர் என்கிற ஒரு காரணத்துக்காகவே அவர் ஒரு நிரந்தரர்.

நன்றி: இந்து தமிழ் திசை

Read Full Post »

கர்நாடக சங்கீதம் என்னை இழுத்துக் கொண்டது கல்லூரி நாட்களில்தான். அப்போது வெளிச்சத்துக்கு வந்து உச்சத்துக்குச் சென்றவர் கத்ரி கோபால்நாத்.

தொண்ணூறுகளின் கடைசியில்  அவர் கச்சேரிக்கு எல்லாம் ஏராளமாய் கூட்டம் வரும்.

கர்நாடக சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாத எத்தனையோ ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்களை இசையின்பால் ஈர்த்தவர்கள் என்று சிலரைத்தான் சொல்ல முடியும். என் தலைமுறையில் நான் நேரிடையாகப் பார்த்தது இவரைத்தான்.திரையிசையில் வாசித்தது இவரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கலாம். அந்தத் தொடக்கப்புள்ளியை தொடர்ந்துக் அவரைக் கேட்க வைத்தது அவர் வாசிப்பில் இருந்த ஜிலுஜிலுப்பு. நான் நேரில் கேட்ட பல கச்சேரிகளில் எந்தக் கச்சேரியிலும் அவர் திரையிசையில் வாசித்தப் பாடல்களை வாசித்துக் கேட்டதில்லை.

kadri

திருவையாறு தியாகராஜ உத்சவத்தில் எல்லோருக்கும் அரை மணி கிடைத்தாலே அதிகம் என்ற போது, ஜாகிர் ஹுசைன் வந்து வாசித்த வருடம் கத்ரியின் கச்சேரிக்கு ஒரு மணி நேரம் (ஹரித்வாரமங்கலத்துடன் தனி ஆவர்த்தனத்துக்காக அந்த கூடுதல் அரை மணி என்றாலும்). அன்று கேட்ட ஹிந்தோளம் இன்றும் ரீங்காரமிடுகிறது.

சாக்ஸபோனில் தோடியோ, தன்யாஸியோ, சஹானாவோ விஸ்தாரமாய் வாசித்து நான் கேட்டதில்லை. ஆனால் அந்த வாத்யத்தின் எல்லைக்குள் உட்பட்ட ராகங்களை கத்ரி கையாள்வதை, அதிலும் வயலின் விதுஷி கன்யாகுமரிக்கு சமபங்களித்து அவர் வாசித்த மோகனங்கள், கல்யாண வசந்தங்கள், சிவசக்திகளை மறக்கமுடியாது.

சமீபத்தில் நிறைய பேர் இப்படிச் சொல்லிக் கேள்விப்படுகிரேன். “சாக்ஸஃபோனில் வருகை நாகஸ்வரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது”, என்கிறார்கள். அவர்களிடமெல்லாம், “கத்ரி கோபால்நாத்தைத் தவிர இன்னொரு சாக்ஸஃபோன் கலைஞரின் பெயரைச் சொல்லுங்கள்?”, என்று நான் கேட்பதுண்டு. பெரும்பாலும் அவர்களுக்கு இன்னொரு கலைஞரைத் தெரிவதில்லை. “ஒரே ஒரு கலைஞனின் ஆகிருதி எப்படி ஒரு பெரிய பாரம்பரியத்தையே பேர்த்தெரிய முடியும் என்ற கேள்விக்கு பதில் இருப்பதில்லை.

சில விஷயங்கள் கேட்கக் கேட்க அலுப்புத் தட்டிவிடும். உச்சஸ்தாயியில் ஒற்றை ஸ்வரத்தில் காலக்கடிகாரத்தை கேலி செய்தபடி கத்ரி நிற்கும் போது ஏற்படும் அனுபவம், எத்தனை கேட்டாலும் அலுக்காத ஒன்று.

அவர் மறைந்த இந்த வேளையில் அந்த ஆபேரியின் தார ஸ்தாயி காந்தாரத்தில் என் மனத்தை நிறுத்திக் கொள்கிறேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரர்த்தனைகள்.

RIP Kadri Gopalnath.

Read Full Post »

ஆறாம் நாளில் வித்வான் மாரியப்பன் வாசித்துள்ள ராகம் வசுகரி. ஒரு ரேடியோ நேர்காணலில் இந்த ராகத்தைப் பற்றி வித்வான் மதுரை சோமு கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சண்முகப்ரியாவின் ஜன்யமான இந்த ராகத்தை வாசித்துள்ளார்.

 

ஏழாம் நாளில் உலா வரும் ராக தேவதை மாயாதாரிணி. சுபபந்துவராளியில் ரிஷப ஸ்வரமில்லாத ஜன்யமான இந்த ராகத்தில் சுருக்கமாகவும் உருக்கமாகவும் ஒரு ராகம் தானம் பல்லவியை இசைத்துள்ளார் மாரியப்பன்.

 

எட்டாம் நாளில் கீரவாணி ராகத்தின் ஜன்யமான ரிஷிப்ரியாவை இசைத்துள்ளார் மாரியப்பன். இந்த ராகத்துக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் வித்வான் மதுரை சோமு அவர்கள்தான்.

 

நவராத்ரி நவராக தேவதைகளின் உலாவை நிறைவு செய்யும் வண்ணம் மாரியப்பன் வாசித்திருக்கும் ராகம் 72-வது மேளகர்த்தாவான ரசிகப்ரியா.

இந்தத் தொடருக்கு ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கும் பரிவாதினியின் சார்பிலும், வித்வான் மாரியப்பன் சார்பிலும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒன்பது ராகங்களையும் இந்த இணைப்பில் கேட்கலாம்:

Read Full Post »

ஐந்தாம் நாளில் உலா வரும் ராக தேவதை  காந்தாமணி.

61-வது மேளகர்த்தா ராகமான காந்தாமணியில் வித்வான் மாரியப்பன் சுருக்கமாக ஒரு ராகம் தானம் பல்லவி வாசித்துள்ளார்.

விவாதி ராகங்களின் எழிலை வெளிக்கொணருமாறு அவர் வாசித்துள்ளதை இங்கு காணலாம்.

Read Full Post »

நான்காம் நாளில் உலா வரும் ராக தேவதை ஸ்ரோதஸ்வினி.

ஸ்ரோதஸ்வினியின் சுத்த தன்யாஸி ராகத்தை ஒத்தது. நிஷாத ஸ்வரம் மட்டும் காகளி நிஷாதமாய் அமைந்துள்ளது.

அறிஞர்கள் இது பழமையான ராகமான உதய ரவிசந்திரிகாவின் அமைப்பென்று கூறுவர். தீட்சிதரின் “ஸ்ரீ குருகுஹமூர்த்தே” இந்த ராகத்தில் அமைந்தவொன்றுதான்.

இன்றைய நிலையில் சுத்த தன்யாஸியும் உதய ரவிசந்திரிகாவும் ஒரே ராகம் என்றே கொள்ளப்படுகின்றது. ஆதலால் காகளி நிஷாதம் வரும் ராகத்தை ஸ்ரோதஸ்வினி என்று குறிக்கின்றனர்.

கர்நாடக இசைக் கச்சேரிகளில் அதிகம் கேட்கக் கிடைக்காத ராகமென்றாலும், இந்த ராகத்தில் பல அற்புத திரையிசைப்பாடல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இசைஞானி இளையராஜாவின் இசையில் தமிழிலும் (உதா: ஓ வசந்த ராஜா) தெலுங்கிலும் (சுமம் ப்ரதி சுமம்) பல பாடல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ராகத்தை வாசித்துள்ள வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பன் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு இந்த ராகத்தின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது என்கிறார்.

Read Full Post »

மூன்றாம் நாளில் உலா வரும் ராக தேவதை ஓம்காரி.

நீங்கள் மதுரை சோமுவின் ரசிகரெனில் இந்த ராகத்தை கேட்டிருக்கக்கூடும். இந்த ராகத்தில் வர்ணமும், கீர்த்தனையும் பாடியுள்ளார்.

கரஹரப்ரியாவின் ஜன்யமான இந்த ராகத்தில் தாய் ராகத்தில் வரும் நிஷாதம் இல்லை.

வித்வான் இஞ்சிக்குடி மாரியப்பன் நமக்காக சுருக்கமாய் ஒரு ராகம் தானம் பல்லவியை இந்த ராகத்தில் வழங்கியுள்ளார்.

 

Read Full Post »