இதை நான் 2004-ல் மரத்தடி குழுமத்தில் இதை எழுதினேன். இன்று கண்ணில்பட்டது. இருக்கட்டுமே என்று இங்கு இடுகிறேன்.
கர்நாடக சங்கீத கச்சேரிகள் கேட்க ஆரம்பித்த காலத்தில், தியாகராஜரின் கிருதிகள் என்றால் ‘சரணாகதி தத்துவம்’ மட்டும்தான் இருக்கும். ‘ராமா! நான் ரொம்பவே கஷ்டத்துல இருக்கேன். சம்சார சாகரத்துல தவிக்கறேன். எத்தனையோ பேரைக் கரை சேர்த்தா மாதிரி என்னையும் காப்பாத்து’ என்பதையே மையக் கருத்தாகக் கொண்டு எழுதப்பட்ட பாடல்கள்தான் நிறைந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இதில் வேடிக்கை என்னவெனில், இக்கருத்தை நான் பலமுறை பலரிடம் கூறியிருக்கிறேன். ஒரே ஒருவரைத் தவிர எனது கருத்தை மறுத்தலித்தவர் எவரும் இல்லை. என் கருத்தை முதன் முதலில் மறுத்தவருக்கு மறுமொழி சொல்லவே, முதன் முதலாக தியாகராஜ கீர்த்தனைகளின் அர்த்தத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
நான் புத்தகத்தை பிரித்தவுடன் கிடைத்த முதல் பாடல்,
“இந்த சௌக்கிய மநிநே ஜெப்பஜால
எந்தோ ஏமோ எவரிகி தெலுஸுனோ”
காலைப் படித்துக் கதறும் சோக மயமானவராகவே என் கற்பனைக்கு அது நாள் வரை காட்சியளித்திருந்த தியாகராஜர், “ராமன் என்ற இன்பத்தை எப்படி வருணிக்க முடியும்? அது என்னமோ, ஏதோ, யாருக்கு தெரியும்? ஒருவேளை சங்கரனுக்குத் தெரியலாம்!” என்று பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டார். அன்றிலிருந்து தியாகராஜர் பாடல்களின் அர்த்தங்களை படிக்க ஆரம்பித்தேன். (இதனால் வந்த பெரிய சங்கடம் என்னவென்றால், கச்சேரியில் பாடகர் தவறாகப் பாடும் போதெல்லாம் புரிந்து தொலைத்து இசை பல சமயங்களில் ரசிக்க முடியாமல் போனது.)
தியாராஜரை ‘ரசக் கடல்’ என்கிறார் பாரதி. அந்த ரசக் கடலில் ஒரு துளியைக் காண “ஏல நீ தயராது” என்ற மிகப் பிரபலமான பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலை கேட்கும்போதெல்லாம், பல்லவியில் “உன் தயை ஏன் என் மேல் விழவில்லை” என்று கூறியிருப்பது மட்டும் புரியும். அதற்குப் பின் வருவதும் இப்படித்தான் புலம்பலாகும் என்று முடிவு கட்டியிருந்தேன். ஒழுங்காகப் படித்தபோது, ஒரு தாய் – கோபமாக இருக்கும் குழந்தையை சமாதானப் படுத்துவது போன்ற பாவத்தை மிக அழகாகக் கொண்டு வந்து இருக்கிறார் தியாகராஜர் என்று விளங்கியது.
“பால கனகமயசேல ஸ¤ஜனபரிபால
ஸ்ரீ ரமாலோல வித்ருதசர
ஜால சுபத கருணாலவால கன
நீல நவ்யவந மாலிகாபரண” (ஏல நீ தயராது)
“பால”, “சேல”, “பால”, “லோல”. “ஜால” “வால, “நீல” என்று வார்த்தைகளால் விளையாடியிருக்கும் இந்த அனுபல்லவியைப் படிக்கும் போதும், முதல் வார்த்தையான “பால” மற்றும் கடைசி வார்த்தையான “ஆபரண” என்று வருவதைப் பார்க்கும் போதும், மற்ற வார்த்தைகள் புரியாவிடினும், அது ஒரு பாலகனைப் பற்றிய வர்ணனை என்று புரிந்துகொள்ள முடிகிறது. திருப்புகழை படித்தாலே ‘லயம்’ வெளிப்படுவதுபோல, இந்த வார்த்தைகளைக் ‘அடாணா’ இராகத்தில் கேட்டாலே, கோபித்துக் கொண்டு முரண்டு பிடிக்கும் குழந்தையை, ‘நீ எவ்வளவு அழகு, நீ என்ன ஒரு பராக்கிரமசாலி, உன்னை எல்லாருக்கும் பிடிக்கும், நீ வரலைன்னா நான் ரொம்ப வருத்தப்படுவேன். நான் வருத்தப்பட்டா பரவாயில்லையா? என் மேல தயை இருக்கா இல்லையா?’. என்று சமாதானப் படுத்துவது போன்ற பாவம் அழகாக வெளிவரும்.
அனுபல்லவிக்குப் பின் மறுபடியும் “ஏல நீ தயராது” என்று சொல்லிப் பாருங்கள், “என் மேல் உன் தயை ஏன் இன்னும் விழவில்லை” என்று தியாகராஜர் பாடுவது புலம்பலாகத் தெரியாது. இதனால்தான் பல கச்சேரிகளில் இப்பாடலை அனுபல்லவியிலிருந்து தொடங்கி இருக்கிறார்கள் போலும். தியாகராஜரின் இந்த பாடலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தாலே ஒரு முனைவர் பட்டம் தேரும். மூன்று சரணங்கள் கொண்ட இப்பாடலின் முதல் சரணத்த்தின் முதல் வரியை மட்டும் பார்ப்போம்.
“ராரா தேவாதி தேவா, ராரா மஹாநுபாவ” ‘ராரா’ என்றால் ‘வாடா’ என்று எல்லோருக்கும் தெரிந்ததுதான். கச்சேரியில் பாடும் போது இந்த வரியை மட்டுமே பலமுறை பலவிதங்களில் பாடகர் பாடுவார். அப்படி பாடப்படும் பல்வேறு விதங்களுக்கு ‘சங்கதிகள்’ என்று பெயர். ‘ராரா’ என்ற சொல்லை வேறு வேறு சங்கதியில் நினைத்துப் பாருங்கள். “என் செல்லம் இல்ல, வாடா” என்று கெஞ்சலாய் ஒருமுறை, “நீதான் சமர்த்து பையனாச்சே வாடா”, என்று கொஞ்சலாய் ஒருமுறை, “உன்னைக் காணலைனு உன் சினேகிதர்கள் எல்லாம் தேடறா, வாடா” என்று ஆசைக் காட்டி ஒருமுறை, “நேரமாச்சு நான் போறேன், நான் கூப்பிட்டா வருவியா மாட்டியா, சொல்றதைக் கேட்டுச் சமர்த்தா வாடா” என்று மிரட்டல் கலந்த கெஞ்சலுடன் ஒரு முறை!
இதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத குழந்தையை என்ன செய்ய? மிரட்ட வேண்டியதுதான்! “நீ வரப் போறியா இல்லை அப்பாவை கூப்பிடட்டுமா, மரியாதையா வாடா”, என்று பல பாவங்கள் பரிமாணிக்கும்படி சங்கதிகள் அமைத்து பாடலைப் புனைந்து இருக்கிறார்.
இந்த அர்த்தங்களையெல்லாம் உள் வாங்கி ஒரு பாடகன் பாடினானெனில், கேட்பவருக்கு பாஷை புரியாவிடினும் அர்த்தம் நிச்சயமாய் விளங்கும். ‘அடாணா’ என்பது வீரத்தைக் குறிக்கும் ராகமாகவே பெரும்பாலும் கருதப் படுகிறது. ‘சினிமாவுல, சிரிச்சா சித்தார்..செத்தா ஷெனாய்’ என்று ஒரு வசனம் உண்டு. அதைப் போல அடாணா என்றாலே வீரம் என்று நினைத்துக் கொண்டு இப்பாடலைப் பாடினால் உண்மையான பாடலின் பாவம் வெளிப்படாது. பாடலின் அர்த்தம் உணர்ந்து பாடினால், ஒரே ராகத்தில் பல ரசங்களை வெளிப்படுத்தக் கூடிய சூட்சுமம் புரிபடும்.
இராமனிடம் பேசுவது போல, அப்போது அவரைச் சூழ்ந்திருந்தவர்களின் பொறாமையையும், அறியாமையும், ஏமாற்று வேலையையும் கடுமையாகச் சாடுகிறார். ‘தெலிஸி ராம’ என்ற பாடலில், குதர்க்க புத்தி நிறைந்தவரை “ராமா என்றால் பரப்பிரம்மம் என்றும் பொருள், ஆனால் சிலர், பெண் என்றொரு அர்த்தமும் அத்ற்கு இருப்பதாகக் கூறுவர். அவர் காமாந்தகராய் இருந்தாலன்றி அவருக்கு இந்த அர்த்தம் தோன்றாது”, என்கிறார்.
‘மனஸு நில்ப’ என்ற பாடலில் “மனதை நிறுத்த (அடக்க) சக்தியில்லாத ஒருவன், காதிற்கு இனிமையான மணியை அடித்து பூஜை செய்தால் புண்ணியம் கிடைத்துவிடுமா என்ன?” என்று பூஜை என்கிற பெயரில் ஊரை ஏமாற்றுபவரைச் சாடுகிறார்.
‘எந்த முத்தோ’ என்ற பாடலில் “பாகவதர் போல உடையணிந்தால் மட்டும் ஒருவன் உண்மையில் பாகவதராகிவிடுவானா என்ன? இப்படி வெளிப்புறக் காட்சியளித்தபடி, தனது அத்தையின் கடைக்கண் பார்வை தன் மேல் விழாதா என்று ஏங்குபவனைப் பார்க்கையில், எவ்வளவுதான் சுவையான பாலாக இருந்தாலும், அதன் சுவை, அது இருக்கும் பாத்திரத்திற்கு எப்படித் தெரிவதில்லையோ, அதைப்போலவே இருக்கிறது இந்த பாகவதர்களின் லட்சணம்” என்கிறார்.
இவரது கேலி, போலி ஆசாமிகளைச் சாடி மட்டுமல்ல, அவர் இஷ்ட தெய்வமான இராமனையே கேலி செய்திருக்கிறார். “மா ஜானகி” என்ற பாடலில், “ராமா! நீ பராக்கிரமசாலிதான். உன் பராக்கிரமம் எல்லாம் உலகுக்கு தெரிந்தது எப்படி? “எங்கள்” சீதையை நீ மணம் முடித்ததால். (எங்கள் என்ற சொல்லை கவனிக்க வேண்டும்). அவளை இராவணன் தூக்கிச் சென்றிருக்காவிடில் உன் புகழ் எப்படி வெளி வந்திருக்கும்? அவள் நினைத்திருந்தால் இராவணனை அழித்திருக்க முடியாதா? உன் புகழ் நிலைக்கட்டுமே என்று கஷ்டங்களை எல்லாம் பொருட்படுத்தாது அவள் பொறுமையின் சிகரமாய் இருந்ததால்தான் உனக்குப் பெருமை.” என்கிறார்.
“எவரி மாட” என்ற பாடலில், “யார் சொல் பேச்சைக் கேட்டு, நீ இங்க வராம இருக்க?” என்று உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார்.
“எவர நீ” என்ற பாடலில் ‘ராம’ என்ற சொல்லுக்கு அழகிய அர்த்தத்தைக் கூறுகிறார். சிவனுக்கு உகந்த பஞ்சாக்ஷர மந்திரமான “நமசிவாய” என்பதில் ‘ம’ என்ற எழுத்தே ஜீவன். அது இல்லாவிடில் ‘ந சிவாய’ (அதாவது “சிவம் இல்லை” என்ற பொருள்) ஆகிவிடும். விஷ்ணுவிற்கு உகந்த “நாரயணாய” என்ற மந்திரத்தில், ‘ரா’ என்ற எழுத்தே ஜீவன். அதை நீக்கிவிட்டால் ‘ந அயனாய’ என்று ஆகிவிடும். நாராயணன் என்றால் எங்கும் நிறைந்தவன் என்று பொருள். ‘ந அயனன்’ என்றால் எங்குமே இல்லாதவன் என்று பொருள். இந்த இரு ஜீவ எழுத்துக்களைக் கோத்து ‘ராம’ என்ற பெயர் பிறந்ததாக தியாகய்யர் கூறுகிறார்.
இன்றைய நிலையில், இந்த அர்த்தமெல்லாம் உணர்ந்து, சரியாகப் பிரித்து, ஒழுங்காகப் பாடுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்து கச்சேரிக்குச் சென்று நீங்கள் ஏமாந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.