2011-ல் சங்கீத சீஸனுக்கு முன் எழுதியது. இன்றும் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை.
கர்நாடக சங்கீத உலகின் பிரபலங்களின் பெயரை எடுத்துப் பார்த்தால், அவற்றுக்கு முன்னால் ஏதேனும் ஓர் ஊர் பெயரை நிச்சயம் பார்க்க முடியும். இன்னும் சொல்லப் போனால், அரியக்குடி, ஆலத்தூர், செம்மங்குடி, செம்பை, லால்குடி, காருக்குறிச்சி என்று பல கிராமங்களின் பெயர் உலகெங்கும் பரவ இசைக் கலைஞர்களே காரணம். இன்றும் இளம் கலைஞர்களின் பெயரில் ஊர்கள் இடம் பெற்றுள்ளன. ஒரே வித்தியாசம் – “பெயரளவில்”தான் இடம் பெற்றுள்ளன. இவர்களுள் பெரும்பாலானவர்களின் விலாசங்கள் மயிலாப்பூரிலும், மந்தைவெளியிலும் மட்டுமே அடங்கிவிடக் கூடும். இந்த மாற்றம் இன்று நேற்று நிகழ்ந்ததன்று. கடந்த 70-80 ஆண்டுகளில் மெதுவாய் நிகழ்ந்த ஒன்று.
வரலாறைப் பார்த்தால், தென்னாட்டு மரபிசை கோவில் கலைகளுள் ஒன்றாகவே தழைத்தது. சோழர்களின் தலைநகரமான தஞ்சாவூர், அவர்களுக்குப் பின்னால் வந்த நாயக்கர், மராட்டியர் காலத்திலும் செழிப்பான நகரமாகவே விளங்கியது. உழவுத் தொழில் முதன்மைத் தொழிலாக விலங்கிய காலகட்டத்தில், காவிரி வளம் சேர்த்த இடங்கள் செழிப்புடன் விளங்கின. இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் ஒரு கோயிலுடன் தொடர்புடையவர்களாகவோ, அரசவைக் கலைஞர்களாகவோ விளங்கினர். ஆன்மீக விஷயங்களைத் தவிரவும், பொது மக்களின் வாழ்க்கையில் கோவில் இன்றியமையாத பங்கை வகித்தது. இதனால் கோயில் வளர்த்த கலைகளான இசையும் நாட்டியமும் பொது மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தன. தொலைக்காட்சியும், இணையமும், செல்ஃபோன்களும் இல்லாத காலமென்பதால், பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்காகவும் கோவில் கலைகள் விளங்கின. இதனால், ஒரு சாதாரணனுக்குக் கூட மரபிசையும் ஆழ்ந்த தேர்ச்சியில்லை என்றாலும் குறைந்தபட்ச பரிச்சயமாவது இருந்தது.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின், கல்வி முறையிலும் ஆட்சி முரையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து, விவசாயம் தவிர மற்ற தொழில்களின் பாலும் மக்கள் ஈர்க்கப்பட்டனர். சென்னை பட்டிணமாகி கிராமங்களில் இருந்து பலரை ஈர்த்தது. குருகுல கல்விமுறை வழக்கொழியத் தொடங்கியது. ஒரு குறுநில மன்னன், ஒரு செல்வந்தர் என்று தனிப்பட்டவர்கள் அளித்த கலை ஆதரவுக்கு பதிலாக, சமூகத்தில் உயர்நிலையில் இருந்தோர் ஒன்று கூடி சபை அமைத்து கலை வளர்க்க வழி செய்தனர்.
1880-களில் தொண்டைமண்டல சபா சென்னை, மிண்ட் ஸ்ட்ரீடில் இயங்கி வந்தது. ராம நவமியையும், கோகுலாஷ்டமியையும் ஒட்டி கச்சேரிகள் நடந்தன.
முதலில் செல்வந்தர்கள் அளித்த ஆதரவைப் போலவே இந்தச் சபைகளும் இயங்கின என்றாலும், காலப்போக்கில் பொது மக்களிடையே கட்டணம் வசூலித்து கச்சேரிகள் நிகழ்த்தப்பட்டன. தஞ்சாவூர் ஜில்லாவில்லிருந்து வந்து இசைத்த கலைஞர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததைப் பார்த்து இன்னும் சில சபைகள் தோன்றின. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூர் சங்கீத சபா, ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா போன்ற சபைகள் தோன்றின. தனவந்தர்களின் நேரடியாகக் கலைஞர்களை ஆதரித்த நிலை மாறி, இது போன்ற சபைகளை ஆதரிக்கத் தொடங்கினர்.
1927-ல் காங்கிரஸ் ‘அகில இந்திய இசை மாநாடு’ ஒன்றை சென்னையில் நடத்தியது. அந்த மாநாட்டின் முடிவில் கர்நாடக இசையின் வளர்ச்சிக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டு, 1928-ல் மெட்ராஸ் ம்யூசிக் அகாடமி தொடங்கப்பட்டது. இன்று பிரபலமாய் விளங்கும் டிசம்பர் இசை விழாவை முதன் முதலில் தொடங்கி வைத்ததும் அகாடமிதான்.
சபைகளும் கச்சேரி வாய்ப்புகளும் சென்னையில் பெருகப் பெருக இசைக் கலைஞர்களும் சென்னைக்குப் பெயர்வது சுதந்திரத்துக்கு முன்னிருந்தே தொடங்கிவிட்டது.
தஞ்சாவூர் ஜில்லா கலைஞர்களின் புலம் பெயர்தல் காலப்போக்கில் மற்ற மாநிலக் கலைஞர்களிடையேயும் வழக்கத்துக்கு வந்தது. துவாரம் வெங்கடசாமி நாயுடுவை சென்னைக்கு வரவழைக்க ரசிகர்கள் நிதி திரட்டி திருவல்லிக்கேணியில் ‘துவாரம் இல்லம்’ என்று ஒரு வீட்டையும் கட்டிக் கொடுத்தனர். இசையுலகின் சிகரங்களைத் தொட்டுள்ள பாலமுரளிகிருஷ்ணா, “நீங்கள் சென்னைக்கு வாருங்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் அங்குதான் உள்ளன என்று பழனி சுப்ரமணிய பிள்ளை அறிவுரைத்தார். அதன் பெயரில் சென்னைக்குக் குடி பெயர்ந்தேன்.” என்று கூறியுள்ளார்.
குன்னக்குடியானாலும், லால்குடியானாலும் இன்று சென்னையில் வசித்தாலன்றி ஜீவனம் நடத்த முடியாது. இன்று சென்னையில் எழுபது சபைகளுக்கு மேல் இயங்கி டிசம்பரில் மட்டும் இரண்டாயிரம் கச்சேரிகளுக்கு மேல் நடத்தப்படுகின்றன.
கடந்த 10-15 ஆண்டுகளில் சங்கீதத் துறையில் முன்னணிக்கு வந்துள்ள கலைஞர்களை மட்டும் கணக்கில் கொண்டால், கிராமபுறங்களில் பிறந்து வளர்ந்த கலைஞர்கள் சிலராவது தேருவார்களா என்பதே சந்தேகம்தான். பெரும்பாலான கலைஞர்கள் சென்னை அல்லது குறைந்தபட்சம் திருச்சி, மதுரை போன்ற சிறு நகரங்களில் இருந்து வந்தவர்களாகவே இருக்கின்றனர்.
கோவில்கள் சார்ந்த சமூகம் என்ற நிலை மாறி கோவில்கள் ஆன்மிகத் தலங்களாகவும், சுற்றுலாத் தலங்களாகவும் ஆகிவிட்ட நிலையில், கிராமங்களில் கோவில் சார்ந்தே தழைத்த கலையான கர்நாடக இசை நீர்க்கத் தொடங்கியது. இன்று கிராமப்புறங்களில் உள்ள நாகஸ்வர கலைஞர்கள் ஒரு மகத்தான வரலாற்றின் எச்சங்களாகவே இருக்கின்றனர். சின்னச் சின்ன ஊர்களிலும் கூட அந்தந்த ஊர் கோவில்கள் ஆதரித்து வந்த நாகஸ்வர குழுவினரை இன்று நாராசமாய் ஒலிக்கும் தானியங்கி முழக்கு இயந்திரங்கள் வெளியேற்றிவிட்டன.
கோவில்களில் அடிக்கும் இந்த எலக்டிரானிக் மணிகள் ஆண்டவனை ஆராதிக்கும் ஆன்மிக மணிகளல்ல. மரபிசை தந்த மாணிக்கங்களை குப்பையில் கிடத்திவிடாமல் இருக்க வேண்டி சங்கீதத் துறைக்கு ஒலிக்கும் எச்சரிக்கை மணிகள் அவை. எவ்வளவோ சிறந்த நாகஸ்வர கலைஞர்கள் இருப்பினும், மிகச் சில கலைஞர்களுக்கு மட்டுமே சென்னைக் கச்சேரிகளில் வாசிக்கும் (சொர்ப்ப) வாய்ப்புகள் கிட்டுகின்றன. இவர்கள் நிலை இப்படியே தொடர்ந்தால், அடுத்த தலைமுறையினர் கிராமப்புறங்களில் திருமணம் செய்து கொண்டால் ‘கெட்டி மேளம்’ கொட்டக் கூட சி.டி-யை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
”இனி ஒரு மாகலைஞன் செம்மங்குடியில் இருந்தோ காருக்குறிச்சியில் இருந்தோ வர சாத்தியமே இல்லையா?” என்ற கேள்வி நம் முன் பிரம்மாண்டமாய் நிற்கிறது.
இந்தக் கேள்விக்கான பதிலும், “இனி ஒரு பெரிய விஞ்ஞானி தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருந்து வருவதற்கு சாத்தியமே இல்லையா?”, என்ற கேள்விக்கான பதிலும் ஒன்றுதான்.
ஐ.ஐ.டி-களும், என்.ஐ.டி-களும் கிராமங்களில் இல்லாத போதும், ஐ.ஐ.டி-யில் சேர வேண்டிய அடிப்படை அறிவையாவது பெறுவதற்கான வசதிகள் பல கிராமங்களில் உள்ளன. சங்கீதத் துறையிலும் இது சாத்தியமானால், கிராமப்புறங்களில் இருந்து இசைக் கலைஞர்கள் வெளி வர முடியும்.
குக்கிராமத்திலும் திரைப்படங்கள் பார்க்கவும், திரையிசையைக் கேட்கவும் வாய்ப்புகள் இருப்பது போல, மரபிசையைக் கேட்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தினாலன்றி கிராமங்களில் கர்நாடக இசை தழைக்காது. “கிராமங்களில் கச்சேரி வைத்தால் கூட்டம் வருமா?” என்று கேள்வி எழலாம். ஒரு மாத காலத்தில் இரண்டாயிரம் கச்சேரிகளை ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் நடத்தும் போது வரும் கூட்டத்தில் பாதியாவது இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடக்கும் ஒரே கச்சேரிக்கு வராமலா போய்விடும்?
சில பத்தாண்டுகள் முன் வரை, இந்திய இசை என்றால் என்னவென்றே அறிந்திருக்காத க்ளீவ்லேண்டுக்குச் சென்று இன்று கச்சேரி செய்யாத பெரிய வித்வானே இல்லை. “அமெரிக்கா பணக்கார நாடு. அவர்கள் கொடுக்கும் சன்மானம் கலைஞர்களை இழுப்பதில் என்ன ஆச்சர்யம்”, என்பதும் உண்மைதான்.
அந்தக் கால இசைக் கலைஞர்களுள் பெரும்பாலோர் முறையான பள்ளிப் படிப்பை பெறாதவர்கள். குருகுலவாசம் மூலம் கலையைப் பயின்று, கச்சேரி வாய்புகள் அமைந்தாலும் அமையாவிட்டாலும் கலைஞர்களாகவே கடைசிவரை வாழ்ந்தவர்கள். இன்று சங்கீதத் துறைக்கு வரும் இளைஞர்கள் வெறொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர். தம்மை சங்கீதத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலும் பொருளாதாரத்துக்கு எந்த பங்கமும் வராது என்று உணர்ந்த பின்னரே துறையில் முழு நேரக் கலைஞராக மாறுகின்றனர். இதில் தவறொன்றுமில்லை.
நல்ல சன்மானம்தான் கலைஞர்களை ஈர்க்கக் கூடுமெனில், அதைச் செய்யும் வழிகளைக் கண்டு அடைய வெண்டும். மந்தைவெளியில் பத்தடிக்குப் பத்தடி மொட்டைமாடியில் ஷாமியானா போட்டு கச்சேரி வைத்தால் கூட ஸ்பான்ஸர் செய்ய ஆட்கள் உண்டு. இந்த ஸ்பான்சர்களுக்காகவே டிசம்பரில் மட்டும் முளைக்கும் சபாகள் இருக்கும் போது, நல்ல சன்மானம் கொடுத்து கிராமங்களில் கச்சேரிகள் நடத்துவதா கடினம்? மனமிருந்தால் மார்க்கமுண்டு.
மனமிருக்கிறதா நம்மிடம்?