Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for பிப்ரவரி, 2021

நேற்று மாலை என் பெண்ணுக்கொரு வகுப்பு இருந்தது.

அவளை அழைத்துச் சென்று வகுப்பு முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

ஒரு மணி நேரம் மோட்டுவளையைப் பார்ப்பதைவிட, காதில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு அவள் வகுப்பிருக்கும் தெருவைச் சுற்றியபடி பாட்டு கேட்பது வழக்கம்.

நேற்றைய நடைக்கு காருகுறிச்சியாரின் வாசஸ்பதி.

28 நிமிடங்கள் வாசித்துள்ள ஆலாபனையை ஒருமுறை கேட்டுவிட்டு, அதில் ஸ்தாயி விட்டு ஸ்தாயி தாவும் வாதி-சம்வாதி பிரயோகங்கள் வரும் ஆறு நிமிடங்களை மட்டும் இன்னொருமுறை கேட்க ஆரம்பித்தேன்.

ஒன்றரை நிமிடங்கL ஆனதும் தார ஸ்தாயி காந்தாரத்தில் ஒரு கூவல். சத்தியமாய் கூவலேதான். மனித வாசிப்பில் அந்தக் காந்தார வளைவு சாத்தியமேயில்லை. குயிலாக மாறினால்தான் அந்தக் குழைவும் வளைவும் சாத்தியமாகும்.

கைபேசியை நிறுத்திவிட்டு மனத்துள் அந்தக் கூவலை மட்டும் மந்திர ஜெபம் போல ஒலிக்க வைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

திடீரென்று யாரோ தோளைத் தொட்டது போன்ற உணர்வு.

திரும்பிப் பார்த்தேன் – நிஜமாகவே யாரோ என்னைத் தொட்டுக் கூப்பிட்டிருக்கிறார்.

சதுரமான முகம். சென்னையில் ரிச்சி ஸ்டிரீட்டில் இந்த ஜாடையில் நிறைய பேரைக் காணக் கூடும். பழுப்பேறிய சட்டை, அதைவிட பழுப்பான பற்கள். நீண்ட தலை முடி மட்டும் வழித்துப் படிய வாரி இருந்தது.

காதிலிருந்து ஹெட்ஃபோன்ஸைக் கழட்டினேன்.

என்னை நிறுத்தியவர் ஏதோ கேட்டார். மனத்தில் ஒன்றும் ஏறவில்லை.

“கியா?”, என்று வினவினேன்.

“இதர் வைன் ஷாப் கிதர் ஹை?”

அடப்பாவி! அந்தக் காந்தாரத்தின் போதையில் தள்ளாடியா நடந்தேன்?

நான் கேட்கும் வைன் ஷாப்பை 1964-லேயே மூடியாகிவிட்டதே என்று சொல்ல நினைத்தேன்.

சிரிப்பை அடக்க முடியாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

Read Full Post »

கர்நாடக இசையின் அங்கங்களில் ஸ்தூலமானதைப் பற்றி நிறைய பேச முடியும். அவற்றைப் பற்றி பேசும் போது சாற்றை நீக்கி சக்கையைப் பேசினது போலத் தோன்றும். ஆனால் சூட்சுமமாய் பல அங்கங்கள் உண்டு. அவற்றை திரும்பத் திரும்ப கேட்பதன்/பாடுவதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். உணர்ந்து கொண்டால்கூட அவற்றைப் பற்றி பேசுவது கடினம். நல்ல குருவால் கோடி காட்டமுடியும். கேட்பவருக்குக் கொடுப்பினை இருந்தால் அந்த வழிகாட்டல் அர்த்தமுள்ள பயணமாய் மாறும்.

ஒருமுறை பல்லவிகளைப் பற்றி பேசும் போது, வித்வான் டி.ஆர்.எஸ் சபையினரை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார்.

“கண்டிகி சுந்தர” என்கிற பிரபல வரியை ஒரு பல்லவியாக எப்படி மாற்றுவது?

இதுதான் கேள்வி.

உடன் இருந்த மாணவி பாடிக் காண்பித்தார். பூர்வாங்கம் – அருதிக் கார்வை – உத்தராங்கம் என்று மூன்று பகுதிகள் கொண்ட பல்லவியாய் அந்த வரி மலர்ந்தது.

உடனே டி.ஆர்.எஸ், “பாடிக் காட்டிவிட்டீர்கள். சரிதான். இப்போது சொல்லுங்கள் கீர்த்தனையில் இருந்த வரிக்கும் இப்போது பாடிய பல்லவிக்கும் என்ன வித்தியாசம்?”

பாடிய மாணவி சொல்ல முயன்றார். வார்த்தைகள் வெளிவராமல் திக்கித் தவித்தார்.

டி.ஆர்.எஸ் அந்த வரியை இனொருமுறை பாடினார்.

“நன்றாக கவனியுங்கள். சுந்தர என்று அருதியை நெருங்கும் இடத்தை கவனியுங்கள். ஒருவித ஃப்ரிக்‌ஷனை உணரமுடிகிறதா? இந்த ஃப்ரிக்‌ஷன் கர்நாடக சங்கீதத்தின் சூட்சமங்களில் முக்கியமான ஒன்று”, என்றார்.

பின்னர் ஒருமுறை அவரை அண்ணா நகர் வீட்டில் சந்திக்கும் போது, “சார், நீங்கள் சொன்ன ஃப்ரிக்ஷன் பல்லவிக்கு மட்டுமில்லை என்று தோன்றுகிறது. செம்மங்குடி பாடும் ‘இந்த பராகா’-வில் ரகரத்தைக் கொஞ்சம் வல்லினமாக்கி ஒலிக்க வைப்பது கூட இந்த ஃப்ரிக்‌ஷன்தானோ என்று தோன்றுகிறது”, என்றேன்.

“சந்தேகமென்ன? ஒரு சீரான போக்கில் சிறு சலனம் ஒன்றை எழுப்பினால்தான் ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. அவை சுழன்று கொண்டெ இருக்கும். இந்த ஃப்ரி்க்‌ஷனை வைத்துதான் அந்தச் சக்கரங்களை ஒன்றோடு ஒன்று உராயச் செய்யமுடியும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களும் உணர்ந்து கொள்ள வைக்கும். நிரவலில் ஒதுக்கல்கள், கோர்வைகளில் மௌனமாய் ஒலிக்கும் கார்வைகள் எல்லாம் இந்த ஃப்ரி்க்ஷன்தான்”, என்றார்.”

இந்த ஃப்ரி்க்ஷன் தேவைப்படாதவர்கள் இரண்டே பேர்தன் நம் சங்கீதத்தில்”, என்று அவரே தொடர்ந்தார்.“ஒன்று ராஜரத்தினம் பிள்ளை. அவர் வாசிப்பு காட்டாற்று வெள்ளம். கண்ணை மூடிக் கொண்டு அந்த சுழலுக்குள் சென்றுவிட வேண்டியதுதான். அரை மணியோ, ஆறு மணியோ – அதன்போக்கில் சுழன்றுவிட்டு வெளியில் தள்ளும் போது கண்ணைத் திறந்தால் போதும். இன்னொருவர் மதுரை மணி. பனிச்சறுக்கு செல்லும் போது ஃப்ரிக்ஷன் வேண்டுமென்றா கேட்போம்? ஒலிம்பிக்கில் ஐஸ் ஸ்கேட்டிங் பார்க்கும் போதெல்லாம் மதுரை மணி ஐயரைத்தான் நினைத்துக் கொள்வேன்”. என்றார்.

இன்று டி.ஆர்.எஸ் இருந்திருந்தால், காருகுறிச்சியாரின் சங்கீதத்தில் நீங்கள் சொன்ன ஃப்ரிக்ஷனைக் கண்டுகொண்டேன் என்று சொல்லியிருப்பேன்.

அவரிடம் ஒரு கருத்தைச் சொன்னால், ‘உனக்கென்னடா தெரியும்? உளராதே!’, என்று ஒருநாளும் சொன்னதில்லை. நம் கருத்தை அமோதிப்பது போல் தொடங்கி இன்னும் துலக்கிக் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.

காருகுறிச்சியாரின் ராக ஆலாபனைகளில் ஆங்காங்கே பொறி பறக்க அவரது நையாண்டி மேளப் பின்புலத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என்று தோன்றுகிறது.

கர்நாடக இசை கச்சேரி வடிவத்தின் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளைப் பார்த்தால் பல ராகங்களிலும், பாடல் வடிவங்களிலும் உள்ள ‘கர்நாடக’ தன்மை அதிகரித்து வருவதை உணர முடியும். தேசீய ராகத்தையோ, காவிடிச் சிந்தையோ எடுத்துக் கொண்டு நூறு வருடத்துக்கு முன்னால் இருந்த வடிவத்தோடு இன்றைய வடிவத்தை நோக்கினால் இதை உணர்ந்து கொள்ள முடியும்.

செவ்வியல் இசையாக இருந்தாலும் கிராமிய இசை என்றாலும் இருக்கின்ற ஸ்வரஸ்தானங்கள் ஒன்றுதான். அந்த ஸ்வரங்களின் சஞ்சாரங்களில் உள்ள அசைவுகளும் வளைவுகளுமே இவ்விரு இசை வடிவத்துக்கான வேறுபாட்டைக் காட்டுகின்றன. காருகுறிச்சியாரின் வாசிப்பில் எதிர்பாரா சமயங்களில் வெளிப்படும் கர்நாடக இசையில் அதிகம் காணக்கிடைக்காத கிராமிய வளைவுகள் ஆங்காங்கே மின்னி கேட்பவரின் மனக்கண் முன் டி.ஆர்.எஸ் சொன்ன தீப்பொறிகளைக் காட்டுகின்றன.

இந்த அணுகுமுறையை உசைனி, யதுகுலகாம்போதி போன்ற கிராமிய பின்புலம் கொண்ட ராகங்களில் மட்டுமல்ல – உங்களுக்கு பேறிருப்பின் வாசஸ்பதியிலும், நடபைரவியிலும் கூட கண்டுகொள்ளலாம்.

Read Full Post »

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி.

துருவ நட்சத்திரம்

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பர் பாஸ்கர் பேசினார். சொல்வனம் பதிப்பகம் என்று ஒன்று இருந்த போது, அவர் அதில் அங்கமாக இருந்தார் என்பது சிலருக்கு நினைவிலிருக்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னால் அந்தப் பதிப்பகம் சார்பாக வீட்டின் கிடப்பில் போட்ட ‘துருவ நட்சத்திரம்’ (மிருதங்க மேதை பழனி சுப்ரமண்ய பிள்ளையைப் பற்றிய நூல்) அவரை திடீரென்று கனவில் வந்து மிரட்டியதாம்.

அவருக்கு அபயமளிக்க வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

தற்சமயம் அந்த நூலின் 35 பிரதிகள் நண்பர் ஜெயராமனிடம் உள்ளன.பிரதி வேண்டுவோர் அவரை 8056165831 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை புத்தகத் திருவிழாவிலோ அல்லது தபால் மூலமாகவோ உங்களுக்கு அனுப்பி வைப்பார்.

நன்றி! வணக்கம்!

Read Full Post »

கொஞ்சும் சலங்கையில் காருகுறிச்சியார் என்றதும் எல்லோருக்கும் சிங்கார வேலனே தேவா நினைவுக்கு வரும்.

“அந்த ஆபேரிதான் எல்லாருக்கும் தெரியுமே! அதைத் தவிர ஒரு பிலஹரி வாசிச்சு இருக்காரே”, என்று சூலமங்கலம் ராஜலட்சுமி பாடியுள்ள அருட்பாவைத் தொடர்ந்து அருணாசலம் அவர்கள் வாசித்துள்ள பிலஹரியை சிலர் குறிப்பிடக்கூடும்.

நானும் இவை இரண்டையும்தான் காருகுறிச்சியார் திரையில் வாசித்துள்ள பதிவுகளில் நமக்குக் கிடைப்பவை என்று நினைத்திருந்தேன்.

சில நாட்களுக்கு முன்னால் தில்லானா மோகனாம்பாள் படத்தைப் பற்றி ஒரு பேச்சு வந்தது. அந்தப் படத்தில் வரும் நாகஸ்வர வாசிப்பைப் பற்றி பலர் விரிவாகப் பேசி இருந்தாலும், சிக்கல் சண்முகசுந்தரம் தன் குருநாதரை சந்திக்கப் போகும் காட்சி ஒன்று வரும். அதில் வீட்டில் அமர்ந்து குருநாதர் வாசிப்பது போல ஒரு தோடி ராகம் இசைக்கப்படும். அற்புதமான அந்தத் தோடியைப் பற்றி யாரும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை என்று நண்பரிடம் சொல்லும் போதே உள்ளுக்குள் பொறி தட்டியது.

இந்தத் தோடியைப் போல கொஞ்சும் சலங்கையில் புதையல்கள் ஏதும் இருந்தால்?

இணையத்தில் தேடியதில் முழு படமும் கிடைத்தது.

பொறுமையாகப் படத்தைப் பார்த்த போது (நிச்சயம் பொறுமை வேண்டும்) நான் நினைத்தபடியே சில முத்துகள் கிடைத்தன.

படத்தின் கதாநாயகன் ஒரு நாகஸ்வர கலைஞன். அவனது அறிமுகக் காட்சியே அவன் தோடி ராகத்தில் வாசிக்கும் ஸவரப்ரஸ்தாரத்துடன்தான்

அமைந்துள்ளது. காருகுறிச்சியாரின் வாசிப்புடன் நாம் தொடர்புபடுத்தும் குளுமையும், முழுமையும் இந்தப் பதிவிலும் கேட்கக்கிடைக்கிறது. தார ஸ்தாயி காந்தாரத்தின் கம்பீர அசைவும், மத்ய ஸ்தாயியில் வழுக்கிச் செல்லும் ஜாரு பிரயோகங்களும் நிமிடத்துக்கு குறைவான பதிவென்றாலும் மனத்தில் ஒட்டிக் கொள்ள வைக்கின்றன.

இன்னொரு காட்சி அரண்மனையில் நடக்கும் கலைவிழா. அதில் தன் திறமையைக் காட்டுகிறான் கதாநாயகன். கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதி ராகமாலிகையாய் அமைந்துள்ளது. கீழ் கால ஸ்வரங்களாய் அமைந்துள்ள இந்தப் பகுதி பேகடாவில் தொடங்கி கானடாவில் முடிகிறது. இந்தக் கானடாவை காருகுறிச்சியார் வாசித்துள்ளார் என்பதைவிட பெரும்பள்ளம் வெங்கடேசன் வாசித்துள்ளார் என்றே சொல்லலாம். அந்தத் தவிலில் ஒலித்திருக்கும் கும்காரங்களின் அழகைச் சொல்லி மாளாது.

படத்தின் ஒரு கதாநாயகி குமாரி கமலா. அவருக்கும் இன்னொரு நாட்டிய கலைஞருக்கும் போட்டி நடக்கிறது. கமலாவின் கால்கள் விஷப்பொடியைத் தீண்டியதால் தளர்ந்து போகின்றன. அவர்  விழுந்துவிடும் நிலை வரும்போது எங்கிருந்தோ கேட்கிறது அந்தக் கந்தர்வ இசை. அந்தக் கருங்குழலின் இசை நெருங்க நெருங்க வலியும் மறந்து போகிறது. தன்னிச்சையாய் உடல் நடனமாடத் தொடங்குகிறது. இந்தக் காட்சிக்கு செஞ்சுருட்டி ராகம் கொஞ்சமும், அதே ராகத்தில் அமைந்த தில்லானாவில் சில வரிகளும் இடம்பெற்றுள்ளன.

முதல் இருபது நொடிகளில் இது காப்பியா, சாமாவா என்றெல்லாம் பூச்சி காட்டிவிட்டு கிராமிய இசைப் பிரயோகம் மூலம் சபைக்கு வருகிறது அந்தச் செஞ்சுருட்டி. இந்தப் பகுதியை மட்டும் இருபது முறை தொடர்ந்து கேட்டிருப்பேன். ராகம், அதன் இலக்கணம், அதில் வரக்கூடிய ஸ்வரங்கள்/பிரயோகங்கள் என்றெல்லாம் மனம் செல்லாமல் அதற்கும் மேலான ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும் லட்சிய கீற்றாய் அமைந்துள்ளது இந்தப் பகுதி. என்னைக் கேட்டால் இந்தப் படத்தில் காருக்கிறிச்சியாரின் உச்சம் என்று இதைத்தான் சொல்லுவேன்.

இந்தத் தேடலில் எனக்குக் கிடைத்த கடைசி முத்து கேதாரகௌளை. காதலும் காதலியும் பிரிந்திருக்கும் போது கற்பனைக் காட்சியாய் அவன் இசைக்க அதற்கு அவள் ஆடுவது போல அமைந்த காட்சி. கேதாரகௌளையின் ஜீவனான தார ஸ்தாயி ரிஷபத்தில் சஞ்சரித்து ராகத்தை வளர்த்து தவிலின் ஸ்வர்வலகுவில் சவாரி செய்தபடி இரண்டாம் கால ஸ்வரங்களில் பவனி வரும்போது பட்டென்று நின்று நம்மை ஏங்கச் செய்யும் பதிவு.

கையிலேயே இருக்கும் விஷயமென்றாலும் நம் கண்ணுக்கு புலப்படுவதற்கென்று ஒரு தருணம் விடிந்தால்தான் உண்டு.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று பாரதி சொன்னது சரிதான். ஆனால் அத்தனையும் உணர்ந்திடும் தருணத்தை இந்தப் பிறவிக்கு விதித்தானா என்றுதான் தெரியவில்லை.

Read Full Post »

இரண்டு நாட்களாய் காருக்குறிச்சியாரின் ஹேமவதியைத் தாண்டி வரமுடியவில்லை.

ஆலாபனையைக் கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வரி மங்கலாய் மனத்தில் வந்து வந்து போனது. ”தொண்டையில் இருக்கிறது – வாயில் வரவில்லை”, என்ற நிலை.

ஆலாபனைக்கு ஏது வரி?

கற்பனைதான் – இருந்தாலும் மீண்டும் மீண்டும் மனத்துள் தோன்றியும் மறைந்தும் பூச்சி காட்டிக் கொண்டிருந்தது.

இன்று காலையில் இன்னொருமுறை கேட்டேன் அந்த ஆலாபனையை.

தைவதத்தை மையமாக்கி – மத்யம ஸ்தாயி மத்யமம் முதல் தார ஸ்தாயி மத்யமம் வரை யாரோ சாவகாசமாய் ஏறி ஏறி இறங்குவதைப் போலத் தோன்றியது.

சுழற்றி சுழற்றி மத்யமத்தைத் தாண்டி தார பஞ்சமத்தைத் தொட்ட போது நெடிய விக்கிரகத்துக்கு தீபாராதனை காட்டியது போல இருந்தது.

தீபக்கீற்றில் நிழலும் ஒளியுமாய் அந்த மந்தஹாசம். ஆங்காங்கே வைரங்களாய் மின்னிய நீர்த்துளிகள்.

நீர்த்துளிகள்.

எனக்கு அந்த வரி கிடைத்துவிட்டது.

“ஸஹஸ்ர கலஸ அபிஷேக மோதாம்” என்கிற தீட்சிதரின் வரி.

ஆயிரம் கலசங்களில் அன்னைக்கு அபிஷேகம்.

அருணாசலம் மத்யமத்திலிருந்து நீரை மொண்டு தைவதம், நிஷாதம், ஷட்ஜம் என்று அன்னையும் ஒவ்வொரு அங்கத்திலும் நீரால் நிறைக்கும் காட்சி இப்போது மனக்கண்ணில் விரிந்தது.

ஆயிரம் கலசங்கள் ஆனதும் தார பஞ்சமத்தில் தீபாராதனை!

காந்திமதி அன்னையின் முகத்தில் குறுநகை.

“இரண்டு நாள் அலைக்கழிப்பு தீர்ந்ததா?”, என்று என்னைக் கேட்பது போலிருந்தது.

Read Full Post »