Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2021

இன்று நாகஸ்வர கலாநிதி காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு தொடங்குகிறது. இந்தத் தருணத்தில், சென்ற மாதம் சொல்வனத்தில் வெளியான இந்தக் கதையை இங்கு பகிர்கிறேன். காருகுறிச்சியாரின் வாழ்வில் நடந்த நிகழ்வை கதையாக எழுதியுள்ளேன்.

வேம்பு மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் தன் வழக்கமான இடத்துக்குச் சென்று கூடையை இறக்கி வைத்தார்.

ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்துக்குச் சென்று சிறிய மேஜை ஒன்றைத் தூக்கி வந்து கூடைக்கு அருகில் வைத்தார். மேஜையின் மேல் வெள்ளைத் துணியை விரித்து, அதன்மேல் மந்தாரை இலைகளைப் பரப்பினார். அதன்பின் கூடையில் கொண்டு வந்திருந்த கடம்பூர் போளிகளை ஒவ்வொன்றாக எடுத்து இலைகளின் மேல் அடுக்கி வைத்தார்.

அவர் வாய் முனக அன்று மோகன ராகத்தை எடுத்துக்கொண்டது. அத்தனை போளிகளையும் எடுத்து வைத்தவுடன், வெறும் கூடையை எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இன்னும் ரயில் வர அரைமணி இருந்தது. மோகனத்தின் தைவதத்தின் சௌந்தர்யத்தை வியந்தபடி அவர் நடக்கும் போது எதிரில் யாரோ வருவது போலத் தோன்றியது. வருபவர் வேம்புவை நோக்கி கையை ஆட்டிக்கொண்டிருந்தார்.

ஆள் நெருங்கியதும் வருபவர் பெரிய அருணாசலம் என்று தெரிந்தது. காருகுறிச்சி அருணாசலத்தின் உடன் பிறவா சகோதரர். இருவர் ஊரும் பெயரும் ஒன்று என்பதால் இவர் பெரிய அருணாசலம். இரண்டு அருணாசலங்களுக்கும் கடம்பூர் போளி என்றால் உயிர். அதிலும் வேம்பு கொண்டு வந்து விற்கும் போளி துணைக்கு வரும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ரயிலில் செல்லத் தயாராக இருப்பார்கள். இவ்விருவரும் பழக்கிவிட்டதில் மொத்த நாகஸ்வரக் குழுவுமே இந்தப் போளிகளுக்கு அடிமை.

அருணாசலம் கச்சேரிக்காக ரயிலில் மணியாச்சி வழியாகச் செல்லும்போதெல்லாம் அவசர அவசரமாக ஒரு பையன் முதல் கிளாஸிலிருந்து ஓடி வருவான். அவனைப் பார்த்ததுமே இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கத் தொடங்குவார் வேம்பு. ஒவ்வொரு இலைகளிலும் பத்து போளிகள் இருக்கக்கூடும். அவன் வந்ததும் அவர் கைகளில் உள்ள இலைகளை அவன் கைக்கு மாற்றிவிட்டு. “ஓடுடே! ஓடுடே!”, என்று பையனை விரட்டுவார்.

ஒவ்வொரு முறை அவர் இப்படிச் செய்யும் போதும் போளி விற்றதில் வரும் அவருடைய அந்த வாரப் பங்கைத் தாரை வார்க்க நேரிடும். அவர் மனைவி சுந்தரி எப்படியும் இழுத்துப் பிடித்துச் சமாளித்துவிடுவாள் என்று அவருக்குத் தெரியும். சமாளிக்க முடியாவில்லை என்றாலும் அருணாசலத்திடம் பணம் கேட்கமாட்டார் வேம்பு. அவரைப் பொருத்தமட்டில் அந்த மண்ணின் பெருமையே அருணாசலம்தான். சங்கீதம் என்றாலே தஞ்சாவூர் ஜில்லா என்ற நிலையை மாற்ற திருநெல்வேலி ஜில்லாவில் அவதாரம் செய்த கந்தர்வன் அருணாசலம் என்பது அவர் துணிபு.

திருச்செந்தூர் பச்சைசாற்றி, திருக்குறுங்குடி உற்சவம், சுசீந்தரத்தில் ஆறாம் திருநாள் என்று அருணாசலம் வாசிக்கும் இடங்களில் எல்லாம் வேம்புவை நிச்சயம் பார்க்கலாம். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இவர் வந்தால் அருணாசலத்துக்குத் தெரிந்துவிடும். வேம்புவை அழைத்து முதல் வரிசையில் உட்காரச் சொல்லுவார். ’அந்த மரியாதைக்கு உயிரையே எழுதி வைக்கலாம். போளி எல்லாம் எம்மாத்திரம்?’ என்று நினைத்துப் புளகாங்கிதம் அடைவார் வேம்பு.

என்றுமில்லாத அதிசயமாய் இன்று ஏனோ ரயில் வராத வேளையில் பெரிய அருணாசலம் வந்திருக்கிறார்.

“இன்னிக்கு ராத்திரி ஒட்டபிடாரத்துல கச்சேரி. போற வழியில மணியாச்சி போர்டைப் பார்த்ததும் அவாளுக்கு உங்க ஞாபகம் வந்துச்சு. அதான் இங்க வந்தோம். கார் வெளியில நிக்கி.”

வேம்பு அவசர அவசரமாக ஐந்தாறு இலைகளில் போளியை எடுத்துக்கொண்டு சாலைக்கு ஓடினார்.

அவர் வருவதைப் பார்த்ததும் தன் ப்ளைமவுத் காரிலிருந்து இறங்கினார் அருணாசலம்.

“ஒட்டபிடாரத்துல கச்சேரினு தெரியாமப் போச்சே! ராத்திரி வந்துடுவேன்” என்றபடி கைகளில் இருந்த போளிகளை நீட்டினார் வேம்பு.

“ஐயர்வாள்! நானும் மாசக்கணக்கா உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பேசிடணும்னுதான் வந்திருக்கேன்” என்றார் அருணாசலம்.

வேம்புவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கைகள் இன்னும் இலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. அதை வாங்காமல் அருணாசலம் தொடர்ந்தார்.

“ஒவ்வொரு தடவை நம்ம பய வரும்போதும் நீங்க பாட்டுக்கு போளியைக் குடுத்துட்டு துரத்திவிட்டுறதீய, அவம் பணத்தை நீட்டக்கூட விடமாட்டீங்கீய-ங்கான். எப்பவோ ஒரு தடவைன்னா சரிங்கலாம். இதையே வழக்கமா வெச்சுகிட்டா ?”

வேம்பு லேசாகப் புன்னகைத்தார்.

“நீங்க காசு வாங்கலைன்னா இனிமேல் உங்க கிட்ட போளி வாங்கப் போறதில்லை.”

வேம்பு புன்னகை மறையாமல் பேச ஆரம்பித்தார்.

“ஏ! நீ வாசிக்கற பைரவிக்கும், உசைனிக்கும் உலகத்தையே எழுதி வைக்கலாம். எனக்கு வக்கிருக்கிறது இந்தப் போளிக்குத்தான். மாசாமாசம் எங்கையாவது வாசிச்சுக் காதைக் குளிர வைக்கியே! அது போதாதா? பணம் வேற குடுக்கணுமாங்கேன்?”

“ என்ன சொன்னாலும் இன்னிக்கு எடுபடாது. பைசா வாங்கிகிட்டாத்தான் இனி உங்க கிட்ட போளி வாங்குவேன்” என்று பிடிவாதம் பிடித்தார் அருணாசலம்.

”இப்ப நான் உன்கிட்ட எதாவது வாங்கிக்கணும். அவ்வளவுதானே?”

“ஆமா”

“அப்ப எனக்கு பணம் வேண்டாம். வேற ஒண்ணு கேக்கேன்.”

“என்ன வேணும்னாலும் கேளுங்க” என்று அவசரப்பட்டார் அருணாசலம்.

“யோசிச்சுட்டு சொல்லு. அப்புறம் முடியாதுனு சொல்லக் கூடாது” என்று குழந்தையுடன் பேரம் பேசுவது போலக் கேட்டார் வேம்பு.

“அதெல்லாம் யோசிச்சாச்சி! உங்களுக்கு வேணுங்கறதைச் சொல்லுங்க.”

“திருனேலி ஜில்லால ஓங் கச்சேரி நடக்காத ஊரே இல்லைங்காவோ. ஆனால் நீ வாசிக்க ஆரம்பிச்ச இந்த இருபத்தஞ்சு வருஷத்துல இந்த மணியாச்சியில மட்டும் உன் கச்சேரி நடக்கவே இல்லை. நான் பொறந்து வளர்ந்த ஊருல உன் நாகஸ்வரத்துல இருந்து ராகம் ஆறா ஓடணும். அது நடந்தாப் போதும். எனக்கு ஜென்ம சாபல்யம்தான்.”

இப்படி ஒரு வேண்டுகோளை அருணாசலம் எதிர்பார்க்கவில்லை.

“வாசிச்சுட்டாப் போச்சு. உங்க வீட்டுக்கே வந்து வாசிக்கறேன்.”

”இல்லை! இல்லை!”, தலையைத் தீர்மானமாய் ஆட்டினார் வேம்பு.

அவர் மனக்கண் முன் பெரிய மேடையில் அருணாசலம் அமர்ந்து வாசிக்க ஆயிரக்கணக்கான ரசிகர் கூட்டம் பந்தலில் உட்கார்ந்து கேட்கும் காட்சி விரிந்து விட்டது.

“சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு இந்த ஸ்டேஷன் பிள்ளையார் கோயில்ல நீ வாசிக்கணும்” என்று சொல்லிவிட்டு கையில் இருந்த போளிகளை அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு திரும்ப நடைமேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வேம்பு.

உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது வேம்புவுக்கு. “முட்டாப்பயலுவோ! மாணிக்கத்தைக் கையில வெச்சுக்கிட்டு அனுபவிக்கத் தெரியலையே இந்த மூதிகளுக்கு. எவ்வளவு கட்டியாண்டா என்ன? ஆபோகியில் மத்யமத்தைத் கம்மலா தொடும்போது வாய்விட்டு ‘ஆமாம்பா’-னு ரசிக்கத் தெரியாதவன் மனுஷனா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு நடந்தார்.

அடுத்த நாள் விழித்ததும்தான் தான் எடுத்துக் கொண்டுள்ள காரியத்தின் முழுப் பரிமாணம் அவருக்குப் புலப்படத் துவங்கியது.

அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபிமானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான். ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப்பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும். அருணாசலம் கச்சேரி என்றால் எத்தனையோ ஊரிலிருந்து பெரிய பிரமுகர்கள் வருவார்கள் – அவர்கள் உட்கார நாற்காலிகள் வாடகைக்கு எடுக்க வேண்டும். ஊரைக் கூட்டி சாப்பாடு போடாவிடினும், ஆளுக்கு ஒரு கை சுண்டலாவது பிரசாதமாகக் கொடுக்க வேண்டாமா?

இந்தச் செலவுகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போதே அவருக்குத் தலை சுற்றியது. இந்த வார போளிக் கணக்கை கடம்பூருக்குச் சென்று பைசல் செய்தால் கையில் முப்பதைந்து ரூபாய் மிஞ்சும். அதை வைத்து என்ன கச்சேரி நடத்துவது?

வேம்பு தனக்குத் தெரிந்த ஊர்காரர்களை சென்று சந்தித்து விஷயத்தைச் சொன்னார். இவர் கேட்பதற்கு உதவக் கூடிய ஊரென்றால் இது நாள் வரை அருணாசலம் கச்சேரி அங்கு நடக்காமலா இருந்திருக்கும்? பல இடங்களில் தம்படி கூடப் பெயரவில்லை. அருணாசலம் பெயருக்காக சிலர் அஞ்சும் பத்தும் கொடுத்தனர். மூன்று நாட்கள் அலைந்ததில் மொத்தம் நூற்றி ஐம்பது ரூபாய் தேறியது.

சதுர்த்திக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வேம்பு போளி விற்க ரயிலடிக்குப் போன நேரம் போக வசூல் விஷயமாக யாரையாவது சந்தித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு ஒன்றும் பெரியதாகத் தேறவில்லை.

’அருணாசலம் வேண்டாம் என்பதற்காக வெறும் தேங்காய் மூடியோடா அனுப்ப முடியும்? இன்னும் ஐந்நூறு ரூபாயாவது இருந்தால்தான் ஓஹோவென்று இல்லாவிடினும் ஓரளவவாவது ஒப்பேற்ற முடியும்,’ என்று வெதும்பியபடி வீட்டுக்குள் நுழைந்தார் வேம்பு.

இரவுச் சாப்பாடு முடிந்ததும் வேம்புவின் மனைவி ஒரு கவரை எடுத்து வந்தாள். அதில் நானூறு ரூபாய் பணமிருந்தது.

“ஏதிந்தப் பணம்?” என்று வேம்பு கேட்டு முடிக்கும் முன்பே கழுத்தில் கட்டியிருந்த மஞ்சள் கயிரை எடுத்துக் காட்டினாள் சுந்தரி.

“என்ன சுந்தரி இப்படிப் பண்ணிட்ட? உன் கிட்ட இருந்த ஸ்வர்ணமே அதுதானே? அதைப் போய் வெக்கலாமா?” என்று தழுதழுத்தார் வேம்பு.

“உதவிக்கு இல்லாத ஸ்வர்ணம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? ஒரு வாரமா நீங்க படற வேதனையை என்னால பார்க்க முடியல.” என்று சலனமேயில்லாமல் கூறினாள் சுந்தரி.

வேம்பு அவள் கைகளை இழுத்து விரல்களைக் கோர்த்துக்கொண்டார்.

சதுர்த்தியன்று மாலை ஆறு மணிக்கு அருணாசலம் காரில் வந்திறங்கினார். சற்றைக்கெல்லாம் பெரிய அருணாசலம், பெரும்பள்ளம் வெங்கடேசன், அம்பாசமுத்திரம் குழந்தைவேலு முதலான அவர் குழுவினர் பெரிய வண்டியில் வந்து இறங்கினர். வேம்பு அருணாசலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு பிள்ளையார் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். குருக்கள் அர்ச்சனை செய்த பின் மாலை முதலான மரியாதைகளை குழுவினருக்குச் செய்தார்.

பந்தலில் கூட்டம் அம்மியது. சங்கரன்கோயில், கழுகுமலை, களக்காடு, கடையநல்லூர், சுரண்டை, எட்டையபுரம், புளியங்குளம் என்று பல ஊர்களில் இருந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அருணாசலம் மேடையேறி உட்கார்ந்த போதே கரகோஷம் ஊரை நிறைத்தது. வேம்பு முதல் வரிசையில் அருணாசலத்துக்கு நேராக அமர்ந்து கொண்டார்.

அருணாசலம் கௌளையை கொஞ்சம் கோடிகாட்டிவிட்டு, ‘ப்ரணமாம்யஹம்’ வாசிக்கத் துவங்கினார். எடுத்துக் கொண்ட காலாப்ரமாணம் மின்னல்! புரவிப்பாய்ச்சலில் ஒலித்த தவில்சொற்கள் உந்தித்தள்ள கல்பனை ஸ்வரங்கள் மட்டும் பதினைந்து நிமிடங்களுக்கு பொறி பறந்தன. வேம்பு தன்னை மறந்து தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தார்.

பாடல் முடிந்ததும் வேம்பு ஒரு நிமிடம் தலையைச் சுழற்றி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால்கூட சுந்தரியின் தாலிக்கொடி தப்பியிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.

அருணாசலம் கர்நாடக பெஹாகை வாசிக்க ஆரம்பித்தார்.

“நேனெந்து வெதுகுதுரா”

”வெதுகுதுரா”-வில் அந்தக் குழைவு அவரை என்னமோ செய்தது. ‘உன்னை நான் எங்கப் போய் தேடுவேன்’ என்கிற வரியில் அலைந்து திரிந்து களைத்த அத்தனை சோர்வையும் குழைத்துச் சமைத்தது போல அந்த ‘வெதுகுதுரா’ ஒலிப்பது போல வேம்புவுக்குப் பட்டது.

“உண்மைதானே! என் குரலுக்கு அகப்படறவனா இருந்தா இப்படித் தாலிக் கொடியை வெச்சு இந்தக் கச்சேரி வெக்கற நிலைமைலையா என்ன வெச்சுருப்பான்?”

வேம்புவுக்கு கண்கள் கலங்கின. தலையைக் கவிழ்த்துக் கொண்டு துண்டை முகத்தில் ஒற்றிக் கொண்டார். அருணாசலம் வாசிக்க வாசிக்க அவருக்குக் கண்ணீர் பெருகியது. சில நிமிடங்கள் பொலபொலவென கண்ணீர் உதிர்த்தவுடன் அவர் மனத்திலிருந்து பெரும் பாரம் நீங்குவது போலத் தோன்றியது. அவர் கச்சேரியை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தார்.

அன்றைய பிரதான ராகம் கரஹரப்ரியா. தார ஸ்தாயியில் சஞ்சாரங்கள் ஆரம்பித்ததும் காலக் கடிகாரம் ஸ்தம்பித்துப் போனது. பெரிய பெரிய ஸ்வரச் சுழல்களை தன் அமானுஷ்ய மூச்சுக் காற்றின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாய் ஏவிக் கொண்டிருந்தார் அருணாசலம். ஒவ்வொரு சுழலும் ஒவ்வொரு புஷ்பம் போல விரிய, அந்தப் புஷ்பங்களை இணைக்கும் சிறு நூலாய் ஒலித்தது அவர் மூச்சை அவசரமாய் உள்ளுக்குள் இழுக்கும் ஒலி. ஆலாபனை நிறைவடைந்த போது பெருமாளின் விஸ்வரூபத்துக்குத் தொடுத்த மாலை அந்த காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருந்தது.

‘சக்கனி ராஜமார்கமு’

அருணாசலம் கீர்த்தனை வாசிக்க ஆரம்பித்த போது வேம்புவுக்கு மனம் துலக்கிவிட்டது போல ஆகிவிட்டது. ஒவ்வொரு சங்கதிக்கும் ‘ஆமாம்பா! ஆமாம்பா!’ என்று வாயாரச் சொல்லிச் சொல்லி ரசித்தார் வேம்பு.

கச்சேரி இன்னும் இரண்டு மணி நேரம் தொடர்ந்தபின் வேம்புவை அருகில் அழைத்தார் அருணாசலம்.

“நாளைக்கு ஈரோட்டிலே முகூர்த்தம். இப்ப கிளம்பினாத்தான் ரயிலைப் பிடிக்க முடியும். உத்தரவு கொடுக்கணும்” என்று கையைக் கூப்பி வேண்டிக் கொண்டார்.

“ஆஹா! ஆஹா!” என்றபடி அருணாசலத்தின் விரல்களைப் பற்றிக் கொண்டார் வேம்பு. அவருக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் எழவில்லை.

பிள்ளையாருக்கு தீபாராதனை ஆனதும் மங்களம் வாசித்து கச்சேரியை முடித்தார் அருணாசலம்.

வாத்தியங்களை சிஷ்யர்கள் கட்டிக் கொண்டிருந்த போது மேடையில் பிரமுகர்களும் ரசிகர்களும் அருணாசலத்தை மொய்த்துக் கொண்டனர். வேம்பு ஐயர் மேடைக்கு கீழே காத்துக் கொண்டிருந்தார்.

ஒருவழியாய் மேடையிலிருந்து இறங்கிய கலைஞர்கள் அவசர அவசரமாக ரயிலடிக்குள் புகுந்தனர். முதல் கிளாஸ் பெட்டி வருமிடத்தில் சந்திர விலாஸிலிருந்து சாப்பாட்டுடன் ஓட்டல் பையனொருவன் தயாராக நின்றிருந்தான்.

அருணாசலம் வருவதற்கு காத்திருந்தது போல் வண்டி நடைமேடைக்கு வந்தது.

ரயிலில் ஏறி ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டார் அருணாசலம். ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்தார் வேம்பு.

“ஐயர்வாள்! திருப்திதானே?” என்று கேட்டார் அருணாசலம்.

“இப்பவே எமன் வந்தா சந்தோஷமா செத்துப் போவேன்!” என்றபடி ஒரு பையை நீட்டினார் வேம்பு.

துணிப்பைக்குள் பழங்கள், பூ முதலான பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றுக்கடியில் ஒரு சிறிய கவரில் நூறு ரூபாய் பணத்தை வைத்திருந்தார் வேம்பு. வண்டி ஏறியதும் கொடுத்தால் அதை அருணாசலம் பார்த்து மறுக்க வாய்ப்பு ஏற்படாது என்பது அவர் எண்ணம்.

அருணாசலம் அந்தப் பையை வாங்கி இருக்கையில் வைத்துக் கொண்டார்.

வண்டி கிளம்ப ஆயத்தமானது.

”ஐயர்வாள்! நான் நேற்றைக்கு திருச்செந்தூர் போயிருந்தேன். உங்களுக்குப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்” என்று சிறு பையை எடுத்து வேம்புவிடம் கொடுத்தார்.

வேம்பு வாங்கிக் கொண்டதும் வண்டி நகர ஆரம்பித்தது. கைகளை அந்தப் பையுடன் சேர்த்துக் கூப்பி அருணாசலத்துக்கு விடை கொடுத்தார்.

வண்டி கண்ணை விட்டு நீங்கியதும் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நடந்தபடி கையிலுள்ள பையைப் பிரித்துப் பார்த்தார். திருச்செந்தூர் இலை விபூதி கண்ணில் பட்டது. அதைப் பிரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள நினைத்து கையைப் பைக்குள் விட்டார் வேம்பு.

அவர் விரல்கள் சில்லென்று எதையோ ஸ்பரிசித்தன.

அந்தப் பொருளை வெளியில் எடுத்துப் பார்த்தார் வேம்பு.

சுந்தரியின் தாலிக்கொடி அவர் கண்முன் ஆடியது.

Read Full Post »

இன்று டாக்டர் ராகவனின் நினைவு நாள். அதையொட்டி முன்பெழிதிய சிறு குறிப்பை இங்கு இடுகிறேன்.

‘சாம வேதமும் இசையும்’, ‘மேற்கத்தியர்களின் நாட்டியமும் இசையும்’, ‘ஐம்முக முழவு’, ‘ஹீப்ரூக்களின் இசை’, ‘நேபாள பௌத்த தாந்த்ரீகர்களின் இசைக் கருவிகள்’, ‘ஆனை ஐயாவின் கீர்த்தனைகள்’, ‘லிங்கபுராணத்தில் இசைக் குறிப்புகள்’, ராமாமத்யரின் ஸ்வரமேவ கலாநிதி’.

மேற்கண்ட தலைப்புகளைப் படிக்கும் போது ஏதோ ஒரு இசை மலருக்காக பல அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் விவரம் என்று நினைக்கக் கூடும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இந்தத் தலைப்புகளை விரிவான கட்டுரைகள் எழுதியவர் ஒருவர்தான். அவர்தான் இந்த ஆண்டின் நூற்றாண்டு நாயகராய்த் திகழும் டாக்டர் வே.ராகவன்.

சென்னையில் கர்நாடக இசை என்றதும் மனதில் தோன்றும் முதல் இடம் மியூசிக் அகாடமி. மியூசிக் அகாடமி என்றதும் முதலில் தோன்றும் பெயர் வே.ராகவனாகத்தான் இருக்க முடியும். 50 வருட காலத்துக்கு சங்கீதம், நாட்டியம், நாடகம் தொடர்பாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எண்ணற்ற கட்டுரைகளைச் சமைத்து இசைத் துறைக்கு செரிவைச் சேர்த்தவர் டாக்டர் ராகவன். 1930-களில், நூலகங்களில் மட்டுமே இருந்த, அச்சில் வராத சங்கீத நாட்டிய சம்பந்தமான புத்தகங்களை முதன் முதலில் அறிமுகம் செய்வித்த பெருமை இவரையே சேரும். Journal of music academy தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளிலேயே முடங்கியும் போனது. அதனை மீட்டுருவாக்கியதில் முதன்மைப் பங்கு இவருடையதே.

அகாடமியின் இயக்கத்துக்கு அச்சாணியாய் திகழ்ந்த டாக்டர் ராகவனின் முயற்சியால், ‘சங்கீத சுதா’, ‘சதுர்தண்டி பிரகாஸிகா’, ‘சங்கீத சாராம்ருதம்’ போன்ற புத்தகங்கள் அகாடமி வெளியீடாக வந்தன. இவை தவிர, சுப்பராம தீட்சிதரின் சங்கீத சம்பிரதாய பிரதர்ஷிணி என்ற நூலை தமிழில் கொண்டு வரும் பெரும் முயற்சியை எஸ்.இராமநாதன், பி.கிருஷ்ணமூர்த்தி, பி.ராஜம் ஐயர் ஆகியோருடன் சேர்ந்து தொடங்கி, தனது வாழ்நாளுக்குள் அந்நூலின் நான்கு தொகுதிகளையும் வெளியிட்டார். ஐந்தாம் தொகுதி அவர் மறைவுக்குப் பின் டி.எஸ்.பார்த்தசாரதியின் முயற்சியில் வெளியானது.

சங்கீத மும்மூர்த்திகளைப் பற்றி எவ்வளவோ பேர் எழுதியிருப்பினும், ஐம்பது வருடங்களுக்கு முன் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு இணையாக அதற்கு முன்னால் உள்ளவற்றையோ, அதற்கு பின்னால் வந்தவற்ரையோ கூற முடியாது. இராமகிருஷ்ணா மடம் வெளியீடாகக் கிடைக்கும் ‘Spiritual Heritage of Tyagaraja’, என்ற புத்தகம் பல பதிப்புகள் பெற்றிருக்கிறது. பாரதி ஏன் தியாகராஜரை ‘ரஸக் கடல்’ என்கிறான் என்று இந்தப் புத்தகத்தைப் படித்தால் நன்குணரலாம். சரணாகதி தத்துவத்தைத் தவிர, அழகான உவமைகள், நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்கள், போலித்தனத்தை சாடும் சாட்டையடிப் பாடல்கள், பிரம்மானந்த அனுபவத்தைப் பறை சாற்றும் அத்புத ரஸம் ததும்பும் பாடல்கள் என்று டாக்டர் ராகவனின் அலசல், பல கோணங்களில் தியாகராஜரின் கிருதிகளை ரசிக்க உதவிகிறது. முத்துஸ்வாமி தீட்சிதரின் பற்றி டாக்டர். ராகவனின் எண்ணற்ற கட்டுரைகள் கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று “தீட்சிதரும் கோயில்களும்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை. ஊர் ஊராய்ப் போய்ப் பாடிய நாயன்மார்களோடும், ஆழ்வார்களோடும் தீட்சிதரை ஒப்பிட்டு, அவர் பல்வேறு இடங்களில் பாடியிருக்கும் கிருதிகளை அழகுற விளக்கியுள்ள விதம் மிகவும் ரசிக்கத்தக்கது. தீட்சிதரின் கிருதிகளில் உள்ள சங்கீதமாக மட்டுமின்றி, ஆகமங்கள், ஸ்தல புராணங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை எடுத்துக் கூறும் கருவூலமாகவும் காணலாம் என்ற பார்வையை முதன் முதலில் வைத்தவர் டாக்டர். ராகவன்தான். இதே கட்டுரையில், சில கிருதிகள் குறிக்கும் விஷயங்கள் சரிவர விளங்கவில்லை என்று தயக்கமின்று கூறுவதிலிருந்து ராகவனின் எழுத்திலுள்ள நேர்மையை நாம் உணரலாம். சியாமா சாஸ்திரியின் கீர்த்தனங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த ராகவன், ‘சியாமா சாஸ்திரின் நமோஸ்துதே’ என்ற கிருதியைக் கவனம் செய்துள்ளார். இந்தக் கிருதியை சாமா ராகத்தில், மிஸ்ர சாபு தாளத்தில் எம்.எல்.வசந்தகுமாரி பாடியுள்ளார்.

“காஞ்சி பரமாச்சாரியாருக்கு சமஸ்கிருதத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்படின் டாக்டர் ராகவனைத்தான் கேட்பார். அப்பேர்ப்பட்ட சமஸ்கிருத ஞானி அவர். ரேடியோவில் அவர் ஆற்றிய உரைகளில் பாடல்களைப் பாடும் பேறு எனக்குக் கிடைத்துள்ளது. ஒரு முறை தீட்சிதரின் நவகிரக கிருதியான சூர்யமூர்த்தே பாடலுக்கு எப்படி சரியாகப் பதம் பிரிப்பது என்று விளக்கினார். சின்னச் சின்ன விஷயங்களில் கூட தவறு வராமல் இருக்க முனைந்து செயல்படுவார். மியூசிக் அகாடமி இன்று அடைந்து இருக்கும் உயர்வான நிலைக்கு முக்கிய காரணம் ராகவனின் ஆளுமைகள்தான். அகாடமி expert’s committee விவாதங்களை கௌரவமாய் அவர் வழி நடத்திய விதத்தை என்றும் மறக்க முடியாது”, என்று ஸ்ருதியில் வந்த நேர்காணலில் வித்வான் எஸ்.ராஜம் கூறியுள்ளார்.


அகாடமி கருத்தரங்கில் கர்நாடக இசை மட்டுமின்றி, ஹிந்துஸ்தானி இசை பற்றியும் பல விவாதங்களுக்கு வழி வகுத்தார். அசாம் மாநில கிராமிய இசை, ஒரிசாவின் நடனமான ஒடிசி, என்று இந்தியாவின் பல்வேறு கலைகளை சென்னைக்குக் கொண்டு வந்த பெருமை டாக்டர் ராகவனையே சேரும். இந்தியாவின் சார்பாக பல நாடுகளுக்குச் சென்று நம் இசையைப் பற்றியும் நாட்டியத்தைப் பற்றியும் பல கட்டுரைகள் வாசித்த டாக்டர் ராகவன், மேற்கத்தியவரை அகாடமிக்கு அழைத்து, இந்தியாவுக்கு உலக இசை வடிவங்களை அறிமுகப்படுத்தவதிலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். யுகாஸ்லாவியா, ரொமேனியா போன்ற நாடுகளின் இசை வடிவங்களை அறிமுகம் செய்ய டாக்டர் ராகவன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் இன்றளவும் பேசப்படுகின்றன. நிகழ்ச்சிகள் நடத்தியதோடன்றி, பல்வேறு இசை வடிவங்களைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரைகள் இன்றைய தலைமுறையினருக்கு reference material-ஆக பயன்படுகின்றன.

ஐம்பது வருடங்களுக்கு அகாடமி என்றால் அது ராகவன்தான் என்ற நிலையாக இருந்தது. இன்றும், மார்கழி இசை விழாவில் அகாடமியின் காலை வேளை கருத்தரங்க நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, டாக்டர் ராகவனின் ஆன்மா அங்கிருக்கும் அவரது அழகிய உருவப்படத்தின் வழியாக நிகழ்வுகளைக் கவனித்தபடிதான் இருக்கும்.

Read Full Post »

இன்று விதுஷி சுகுணா புருஷோத்தமனின் எண்பதாவது பிறந்த நாள்.

நான் அவரைப் பற்றி 2007-ல்தான் தெரிந்து கொண்டேன்.

அந்த வருட டிசம்பர் இசை விழாவில் அகாடமியில் அவர் சிம்மனந்தன தாளத்தில் அமைந்த பல்லவியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார் என்ற செய்தியில்தான் நான் அவரைப் பற்றி முதன் முதலில் தெரிந்து கொண்டேன்.

நான் லக்ஷுமீஸம், சிம்மனந்தனம் போன்ற தாளங்களின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனேயன்றி அவற்றை யாரும் பாடிக் கேட்டிருக்கவில்லை. அதனால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல ஆவல் எழுந்தது.

பல்லவியை விதுஷி சுகுணா பாடுவதற்கு முன் சிறியதாக தோடி ராகத்தில் ஆலாபனையும், தானமும் பாடினார். பத்து நிமிடங்களுக்குக் குறைவாகவே அவற்றைப் பாடியிருப்பார். ஆனால் அவற்றில் சொட்டிய தோடி ராகம் அன்று அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது பல்லவிக்காகத்தான் என்கிற எண்ணத்தை மறக்கடிக்கச் செய்தது.

தாளங்களில் அதிக அளவு அட்சரங்கள் கொண்ட தாளம் சிம்மனந்தனம் (128 அட்சரங்கள்). அதிகம் காணக் கிடைக்காத குரு, புளுதம், காகபாதம் போன்ற அங்கங்களைக் கொண்ட தாளத்தை அன்று அவர் பிரமிக்கத்தக்க வகையில் கையாண்டார். திரிகாலம், திஸ்ரம் போன்ற பல சாகஸங்களை அனாயாசமாகச் செய்தார். அவற்றைக் காணத்தான் நான் அங்கு சென்றிருந்தேன் என்றாலும் என் மனம் அவர் பாடிய தோடியிலேயே சொக்கிக் கிடந்தது. வெறும் சதுஸ்ர நடையை மனத்தில் ஓட்டியபடி அவர் பாடிய தோடியின் சௌந்தரியத்தில் மட்டும் திளைக்கவே மனம் விரும்பியது.

அன்று தொடங்கி எனக்கு வாய்ப்பு அமைந்த போதெல்லாம் அவருடைய கச்சேரிகளையும், பதிவுகளையும் கேட்டு வந்தேன். அவருடைய சங்கீதத்துக்கு இணையாக அவருடைய மேடை ஆகர்ஷணமும் (stage presence) அவர் பேசிய போதெல்லாம் பளீரிட்ட நகைச்சுவையுணர்வும் என்னை அவர் நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் நாட வைத்தன.

அடுத்த 5/6 வருடங்களில் கிட்டத்தட்ட பத்து கச்சேரிகளை நேரில் கேட்டிருப்பேன். 2010-வாக்கில் இசைக் கலைஞர்களைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில் விதுஷி சுகுணாவையும் ஒரு நாள் சந்திக்க வேண்டுமென்ற நினைத்திருந்தேனே தவிர அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. 2013-ல் பரிவாதினி தொடங்கிய போது, அதில் நிறைய நேர்காணல்கள் செய்ய வேண்டுமென்றும் திட்டமிருந்தது. அப்போதுதான் விதுஷி சுகுணாவை எனக்குத் தெரிந்தவர் மூலமாக தொடர்பு கொள்ள முயன்றேன்.

அப்போது அவர் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தார். சில வாரங்களுக்கு ஒருமுறை விசாரித்து வந்தேன். நிலைமையில் முன்னேற்றமில்லை என்ற செய்திதான் வந்துகொண்டிருந்தது. ஒருநாள், “ராம்! அந்த நேர்காணல் நடக்காதுனு நினைக்கறேன்”, என்று என் நண்பர் சொல்லவும் நான் வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டேன். பல மாதங்கள் கழித்து 2014 செப்டம்பரில் ஒருநாள் அதே நண்பர் அழைத்தார். “நீ அதிர்ஷ்டசாலி! சுகுணா மாமி நன்றாகத் தேறி வந்துவிட்டார். நீ அவர்களைச் சந்திக்கலாம்”, என்றார்.

நேர்காணலுக்கு அனுமதி வாங்கித் தருவதாகவும் சொன்னார். சொன்னவரை அடுத்த பல நாட்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இறுதியில் ‘நாத இன்பம்’ சபையை நடத்தும் திருமதி.ஜெயலட்சுமியின் முயற்சியில் நேர்காணலுக்கான வாய்ப்பு கிடைத்தது.

2014-ல் செப்டம்பர் மாதக் கடைசியில் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். நான் முன்பு பார்த்திருந்ததற்குப் பாதியாய் இளைத்திருந்தார். முகத்தில் இருந்த பிரகாசமும், அவ்வப்போது பளீரிடும் குறும்பு கலந்த புன்னகையும் வழக்கம் போல இருந்தன. சந்தோஷமாகப் பேசவும், பாடவும் செய்தார் என்றாலும் பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை இளைப்பாற வேண்டியிருந்தது.

இரண்டு மணி நேரத்துக்கு அவரைப் பதிவு செய்த பின்னும் கூட எனக்குக் கேட்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் அவரை அதற்கு மேல் துன்பப்படுத்தலாகாது என்று சம்பிரதாயமாய் கேட்கும் கடைசி கேள்விக்குள் தாவினேன்.

உள்ளுக்குள் இன்னொரு முறை சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக அந்த இன்னொரு சந்திப்புக்கான வாய்ப்பே அமையவில்லை. சில மாதங்களுக்குள் அவர் உடல்நிலை மீண்டும் மோசமாகி 2015-ன் தொடக்கத்தில் அவர் மறைந்தும் போனார்.

அவரை இன்னொருமுறை சந்திக்கலாம் என்று எழுதாமல் வைத்திருந்த நேர்காணலை அவர் மறைவுக்குப் பின் எழுதக் கைவரவேயில்லை. சில நாட்களுக்கு முன்னால் அவருடைய 80-வது பிறந்த நாள் ஏப்ரல் 4-ம் தேதி வருகிறது என்று ஒரு பதிவைப் பார்த்தேன். அந்தப் பதிவு என்னை மீண்டும் அந்த நேர்காணலை நோக்கிச் செலுத்தியது.

மீண்டும் ஒருமுறை கேட்டுப் பார்த்த போது நான் பதிவு செய்து வைத்திருந்தது முழுமையான பார்வையைக் கொடுக்காது என்றாலும், இருக்கும் வரையிலும் கூட அது ஒரு பொக்கிஷம் என்றுபட்டது. பிறந்த நாளுக்குள் எழுதிவிட வேண்டும் என்று கையோடு எழுதி முடித்துவிட்டேன்.

அவர் என்னிடம் சொன்னதை ஒன்று விடாமல் இந்த நேர்காணலில் கொடுத்துள்ளேன். சொல்லாமல் போனதை நினைத்துக் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் அவையும் காற்றுமண்டலத்தில் எங்கோ மிதந்து கொண்டுதான் இருக்குமென்று தோன்றுகிறது.

ஏனெனில் உன்னதக் கலைஞர்கள் சாஸ்வதர்கள். அவர்கள் எழுப்பிய கலையலைகள் காலச்சுழலில் சில காலம் வெளியில் தெரியாமல் இருக்கலாம். கீழ் செல்லும் அலை ஒருநாள் மேல் வந்துதானே ஆக வேண்டும்?

ஆர்ப்பரிக்காத ஆனால் அழுத்தமான இந்த இசையலையின் சிறு ஸ்பரிசத்தை அவரது எண்பதாவது பிறந்த நாளையொட்டிப் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி என்று சொல்வதைவிட ஆசுவாசமாய் இருக்கிறது.

நேர்காணல் வரவிருக்கும் கனலி இதழில் வெளியாகும்.

Read Full Post »