Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சங்கீதத் துறை’ Category

இன்று எழுத்தாளர் பா.ராகவன் தனது பேஸ்புக் பதிவில் மூக்குப்பொடியைப் பற்றி எழுதியிருந்தார். எனக்கு நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் மரத்தடிக்காக எழுதிய இந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது. தூசிதட்டி இங்கு இடுகிறேன்.

ஆளை மயக்கச சொக்குப் பொடி போடுவது வழக்கம். ஆனால் சங்கீதத்தால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை மயக்கியவர்களை ஆராய்ந்து பார்த்தால், அவர்களுக்குக் கைகொடுத்தது சொக்குப் பொடியல்ல, மூக்குப்பொடி என்று தெரிய வரும். மும்மூர்த்திகளுக்கும் மூக்குப் பொடிக்கும் சம்பந்தம் உண்டா என்று நான் அறியேன். மும்மூர்த்திகளுக்குப் பிறகு வாழ்ந்த இசை வல்லுனர்களைப் பற்றி நமக்குக் கிடைக்கும் தகவலின்படி, மானோம்புச்சாவடி வெங்கட சுப்பைய்யரே மூக்குப் பொடிக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள உன்னத பந்தத்தை தொடங்கி வைத்த மஹானுபாவர்.

மானோம்புச்சாவடி வெங்கட சுப்பைய்யர் என்றதும் முதலின் நினைவுக்கு வருவது அவரது குருவான ‘தியாகராஜர்’, அதன்பின் நினைவுக்கு வருவது, அவரது இரு பிரதான சிஷ்யர்களான மஹாவைத்தியநாத சிவனும் பட்டணம் சுப்ரமண்ய ஐயரும். மஹா வைத்தியநாத ஐயர் மூக்குப்பொடி போட்டதற்கான தகவல் ஏதும் இல்லாததால், அவரை உடைப்பில் தூக்கி போட்டுவிட்டு, பட்டணம் சுப்ரமண்ய ஐயரைப் பார்ப்போம். குருவிடமிருந்த கற்ற அவரது சங்கீதம் எப்படி உலகப் பிரசித்தியை அடைந்ததோ அதே அளவிற்கு குருவின் தாக்கத்தால் விளைந்த அவரது மூக்குபொடியின் மகத்துவமும் பெரும் பிராபல்யத்தையடைந்தது.

குருவும் சிஷ்யரும் ஒரு பிரயாணத்தின் பொழுது பொடிமட்டை கிடைக்கா அத்துவானக் காட்டில் மாட்டிக் கொண்டனர். கையிருப்பிலிருந்த பொடி அத்தனையும் தீர்ந்த போக, எத்தனை காசு கொடுத்தாலும் பொடி கிடைக்காத நிலை. பார்த்தார் சிஷ்யர், தனக்குப் பிடித்த இரு விஷயங்களுள், ஒன்றின் மேலிருந்த ஏக்கதை மற்றொன்றின் வழியாய் வெளிப்படுத்த ஆரம்பித்தார். அதாவது, அவருக்குப் பிடித்தமான பொடி இல்லாத ஏக்கத்தை, அவருக்கு பிடித்தமான சங்கீதத்தின் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தார். இப்படியாகப் பிறந்ததுதான் “தூம பத்ர தூளி” என்ற சாவேரி ராகக் கீர்த்தனை. (தூமபத்ரம் என்றால் புகையிலை, தூளி என்றால் பொடி).

எதையோ தேடும்போது ரோஜா முத்தைய்யா நூலகத்தில் 1933-ம் வருட ஜூலை ஆனந்த விகடனில் எனக்கு அந்தப் பாடல் கிடைத்தது. இந்தக் கிருதியைப் பற்றி பல இடங்களில் குறிப்புகள் கிடைக்கக் கூடும். எனினும், இந்தக் கிருதியின் முழு சாஹித்யம் இங்குதான் வெளியாகியுள்ளது.

பல்லவி

தூமபத்ரதூளி தகலுனா
ஈ தரித்ர ஊரிலோ
தயதோனிபுடு தெலுபவய்யா

அனு பல்லவி

காமிதார்த்தபல முவிச்சுனே
ஒகசிமிடாதூளி
பூமிலோனு லக்ஷகுடுனு
பிக்ஷகுடுனு விச்வஸிஞ்சே (தூம)

சரணம

மெப்புகைன மொகடநின்னு
கொனுடஸம்ப்ரதாயமே
அப்புதீஸி வெனுகநின்னு
புச்சுகொண்டே நியாயமா
நிப்புநீள்ளு காலிவலெனு
நீவுப்ராணாதாரமே
கொப்பவரத வெங்கடேச
ஸுப்ரஸாத ஸாரமே (தூம)

அந்த பாடலில், “ஐயா! இந்த தரித்திர ஊரில் மூக்குப்பொடி கிடைக்குமா? தயவுடன் இயம்புவாய்! ஒரு சிட்டிகை பொடி, ஆண்டியையும் அரசனையும் பாரபட்சமின்றி பரவசப்படுத்தும். ஏ பொடியே! உன்னை இயன்றவரை கையிருப்பில் வைத்திருப்பது உத்தமம். அப்படியில்லாத பட்சத்தில், இருப்பவரிடம் கையேந்தி பெற்றாலும் பாதகமில்லை. நீர், காற்று, நெருப்பு போல நீயும் ஒரு அத்தியாவசியப் பொருள்! என்னய்யன் திரு வேங்கடமுடையான் அருளிய பிரசாதம் நீ!” என்கிறார் பட்டணம்.

கர்ணனனுக்குக் கவச குண்டலத்தைப் போல, பட்டணம் சுப்ரமண்ய ஐயருக்கு அவரது பொடிடப்பா. ஒருமுறை மைசூர் மகாராஜா முன்னிலையின் பட்டணம் பாடிக் கொண்டிருக்கும் போது, தனது ஆருயிர் பொடியைக் காணாமல் பதறிப் போய், பாட்டை நிறுத்திவிட்டுப் பொடி-டப்பாவைத் தேட ஆரம்பித்துவிட்டார். இதனைப் பார்த்த மகாராஜா, அவருக்கு ஒரு ‘தங்க பொடி டப்பாவை’ பரிசாகக் கொடுத்ததுமே சாந்தமடைந்து கச்சேரியைத் தொடர்ந்தார்.

.சேலம் மீனாட்சி அம்மாள் என்ற பிரபல நடனக் கலைஞரின் புதல்விகளுக்குப் பாட்டு கற்று கொடுக்க வேண்டி, சென்னைப்பட்டணத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்ததே அவர் பெயருக்கு முன் “பட்டணம்” முளைக்கக் காரணம் என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறினாலும், ‘பட்டிணம்’ பொடிக்கும் அந்த முன்னொட்டுக்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்று உள்ளுணர்வு உணர்த்துகிறது. தன் குருவிடமிருந்து கற்றதை தனது சிஷ்யருக்குச் சேர்ப்பதைக் கடமையாகக் கருதிய ‘பட்டணம்”, தனது பிரதான சிஷ்யரான பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு, முகாரி ராக மகிமையுடன் முக்குப் பொடியின் மகோன்னதத்தைப் பற்றியும் போதித்தார்.

கர்நாடக இசையை, விறுவிறுப்பாகவும் விவகாரத்துடனும் கச்சேரியில் கொடுக்க ஒரு அற்புதமான முறையை வகுத்து முன்னோடியாய் விளங்கிய அரியக்குடி இராமனுஜ ஐயங்கார், மூக்குப் பொடி விஷயத்திலும் முன்னோடியாகவே விளங்கினார். “இன்றைய கச்சேரியில் எத்தனை புது கீர்த்தனங்கள் அரியக்குடி பாடினார்” என்று கணக்கு வைத்திருக்கும் பல இரசிகர்களைப் போலவே, “இன்றைய கச்சேரியில் எத்தனை முறை ஐயங்கார்வாள் பொடி போட்டார்” என்று கணக்கு வைக்கவும் ஏராளமான இரசிகர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு இரசிக சிரோண்மணி, முதல் வரிசையில் உட்கார்ந்த படி, தாளத்தில் வரும் எண்ணிக்கைகளை எல்லாம் சட்டை செய்யாமல், அரியக்குடியின் ‘பொடிக் கணக்கை’ மட்டும் இம்மிபிசகாமல் கவனித்து, பக்கத்திலிருந்தவரிடம் அவ்வப்பொழுது வரும் எஸ்.எம்.எஸ் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட்டைப் போல சொல்லிக் கொண்டிருந்தார். இதை கவனித்துக் கொண்டிருந்த அரியக்குடி, வழக்கம் போல பாடல் முடிந்ததும் பொடியை உறிஞ்சிவிட்டு, “இப்போ எட்டாவது தடவை. கணக்கு சரியா?, இனிமேலானும் பாட்டை கேளுங்காணும்” என்றாராம். என்னதான் முன்னோடி என்றாலும், சட்டியில் இல்லாமலா அகப்பையில் வரும்? அரியக்குடி வேறு யாருமில்லை; பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் சிஷ்யர்தான்.

அரியக்குடியின் சிஷ்யையான திருகோகர்ணம் கனகாம்புஜம் ஒரு கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த பொழுது, அவரது மூக்குத்தியின் திருகு சற்றே கழன்றுவிட, அவசர அவசரமாய் பாடிக்கொண்டிருந்த பாட்டை முடித்துவிட்டு, இடது கையால் மூக்கைப் பிடித்துக் கொண்டு, சற்றே கழுத்தைத் திருப்பியபடி வலது கையால் மூக்குத்தியை சரி செய்தாராம். இதனைப் பார்த்த இரசிகர்கள், அரியக்குடியின் அரிய கச்சேரி பாணியை பின்பற்றவதற்காக மூக்குப்பொடி போடுவதாக நினைத்து ஆரவாரம் செய்தார்களாம். “அரியக்குடியின் தாக்கத்தை, அவரது மானசீக சிஷ்யரான ஜி.என்.பி-யின் இசையில் எத்தனைத் தெளிவாகப் பார்க்க முடியுமோ, அதே அளவிற்கு, அவரது மூக்குப்பொடி போடும் இலாவகத்திலும் காண முடியும்”, என்று அவர் கச்சேரியை நேரில் கேட்ட பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

நாகஸ்வரச் சக்கரவர்த்தி ராஜரத்னம் பிள்ளையின் ராக வின்யாசம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது அவருடைய பொடிமட்டையின் அளவும். கர்நாடக சங்கீத உலகின் பீஷ்மராக விளங்கிய செம்மங்குடி சீனிவாச ஐயரின் சரீரத்தை விரும்பி அடிக்கடிப் பிடித்துக் கொண்ட சளியால் அவரது சாரீரம் பாதிக்கப்படாமல் காப்பற்றப்பட்டது ‘மூக்குப் பொடி’ என்னும் அருமருந்தால்தான். செம்மங்குடியின் பிரதான சிஷ்யரான ‘சங்கீத கலாநிதி’ டி.எம்.தியாகராஜன் குருவின் சங்கீதத்தை கிரஹித்ததைப் போலவே பொடியையும் கிரஹித்துப் பெரும் புகழ் பெற்றார். அபஸ்வரத்தைத் தொடாமல் இலாவகமாய் வில்லைப் போடுவதைப் போலவே, மீசை மேல் படாமல் இலாவகமாய் பொடி போடும் திறமை படைத்த ‘பாப்பா வெங்கடராமையாவின்’ திறைமை உலகப் பிரசித்தி பெற்றது.

கர்நாடக உலகின் பொற்காலம் போய்விட்டது என்று பிலாக்கணம் படிப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அந்தப் பொற்காலம் திரும்பி வர ஒரே வழி எம்பருமான் அருளிய தூம பத்ர தூளியின் திருமகிமையை கலைஞர்களும் ரசிகர்களும் உணர்ந்துப் போற்றி அனுபவிக்கவேண்டும்.

Read Full Post »

2011-ல் சங்கீத சீஸனுக்கு முன் எழுதியது. இன்றும் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை.

கர்நாடக சங்கீத உலகின் பிரபலங்களின் பெயரை எடுத்துப் பார்த்தால், அவற்றுக்கு முன்னால் ஏதேனும் ஓர் ஊர் பெயரை நிச்சயம் பார்க்க முடியும். இன்னும் சொல்லப் போனால், அரியக்குடி, ஆலத்தூர், செம்மங்குடி, செம்பை, லால்குடி, காருக்குறிச்சி என்று பல கிராமங்களின் பெயர் உலகெங்கும் பரவ இசைக் கலைஞர்களே காரணம். இன்றும் இளம் கலைஞர்களின் பெயரில் ஊர்கள் இடம் பெற்றுள்ளன. ஒரே வித்தியாசம் – “பெயரளவில்”தான் இடம் பெற்றுள்ளன. இவர்களுள் பெரும்பாலானவர்களின் விலாசங்கள் மயிலாப்பூரிலும், மந்தைவெளியிலும் மட்டுமே அடங்கிவிடக் கூடும். இந்த மாற்றம் இன்று நேற்று நிகழ்ந்ததன்று. கடந்த 70-80 ஆண்டுகளில் மெதுவாய் நிகழ்ந்த ஒன்று.

வரலாறைப் பார்த்தால், தென்னாட்டு மரபிசை கோவில் கலைகளுள் ஒன்றாகவே தழைத்தது. சோழர்களின் தலைநகரமான தஞ்சாவூர், அவர்களுக்குப் பின்னால் வந்த நாயக்கர், மராட்டியர் காலத்திலும் செழிப்பான நகரமாகவே விளங்கியது. உழவுத் தொழில் முதன்மைத் தொழிலாக விலங்கிய காலகட்டத்தில், காவிரி வளம் சேர்த்த இடங்கள் செழிப்புடன் விளங்கின. இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் ஒரு கோயிலுடன் தொடர்புடையவர்களாகவோ, அரசவைக் கலைஞர்களாகவோ விளங்கினர். ஆன்மீக விஷயங்களைத் தவிரவும், பொது மக்களின் வாழ்க்கையில் கோவில் இன்றியமையாத பங்கை வகித்தது. இதனால் கோயில் வளர்த்த கலைகளான இசையும் நாட்டியமும் பொது மக்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தன. தொலைக்காட்சியும், இணையமும், செல்ஃபோன்களும் இல்லாத காலமென்பதால், பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்காகவும் கோவில் கலைகள் விளங்கின. இதனால், ஒரு சாதாரணனுக்குக் கூட மரபிசையும் ஆழ்ந்த தேர்ச்சியில்லை என்றாலும் குறைந்தபட்ச பரிச்சயமாவது இருந்தது.

ஆங்கிலேயர் வருகைக்குப் பின், கல்வி முறையிலும் ஆட்சி முரையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து, விவசாயம் தவிர மற்ற தொழில்களின் பாலும் மக்கள் ஈர்க்கப்பட்டனர். சென்னை பட்டிணமாகி கிராமங்களில் இருந்து பலரை ஈர்த்தது. குருகுல கல்விமுறை வழக்கொழியத் தொடங்கியது. ஒரு குறுநில மன்னன், ஒரு செல்வந்தர் என்று தனிப்பட்டவர்கள் அளித்த கலை ஆதரவுக்கு பதிலாக, சமூகத்தில் உயர்நிலையில் இருந்தோர் ஒன்று கூடி சபை அமைத்து கலை வளர்க்க வழி செய்தனர்.

1880-களில் தொண்டைமண்டல சபா சென்னை, மிண்ட் ஸ்ட்ரீடில் இயங்கி வந்தது. ராம நவமியையும், கோகுலாஷ்டமியையும் ஒட்டி கச்சேரிகள் நடந்தன.

முதலில் செல்வந்தர்கள் அளித்த ஆதரவைப் போலவே இந்தச் சபைகளும் இயங்கின என்றாலும், காலப்போக்கில் பொது மக்களிடையே கட்டணம் வசூலித்து கச்சேரிகள் நிகழ்த்தப்பட்டன. தஞ்சாவூர் ஜில்லாவில்லிருந்து வந்து இசைத்த கலைஞர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததைப் பார்த்து இன்னும் சில சபைகள் தோன்றின. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூர் சங்கீத சபா, ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சபா போன்ற சபைகள் தோன்றின. தனவந்தர்களின் நேரடியாகக் கலைஞர்களை ஆதரித்த நிலை மாறி, இது போன்ற சபைகளை ஆதரிக்கத் தொடங்கினர்.

1927-ல் காங்கிரஸ் ‘அகில இந்திய இசை மாநாடு’ ஒன்றை சென்னையில் நடத்தியது. அந்த மாநாட்டின் முடிவில் கர்நாடக இசையின் வளர்ச்சிக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டு, 1928-ல் மெட்ராஸ் ம்யூசிக் அகாடமி தொடங்கப்பட்டது. இன்று பிரபலமாய் விளங்கும் டிசம்பர் இசை விழாவை முதன் முதலில் தொடங்கி வைத்ததும் அகாடமிதான்.

சபைகளும் கச்சேரி வாய்ப்புகளும் சென்னையில் பெருகப் பெருக இசைக் கலைஞர்களும் சென்னைக்குப் பெயர்வது சுதந்திரத்துக்கு முன்னிருந்தே தொடங்கிவிட்டது.

தஞ்சாவூர் ஜில்லா கலைஞர்களின் புலம் பெயர்தல் காலப்போக்கில் மற்ற மாநிலக் கலைஞர்களிடையேயும் வழக்கத்துக்கு வந்தது. துவாரம் வெங்கடசாமி நாயுடுவை சென்னைக்கு வரவழைக்க ரசிகர்கள் நிதி திரட்டி திருவல்லிக்கேணியில் ‘துவாரம் இல்லம்’ என்று ஒரு வீட்டையும் கட்டிக் கொடுத்தனர். இசையுலகின் சிகரங்களைத் தொட்டுள்ள பாலமுரளிகிருஷ்ணா, “நீங்கள் சென்னைக்கு வாருங்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் அங்குதான் உள்ளன என்று பழனி சுப்ரமணிய பிள்ளை அறிவுரைத்தார். அதன் பெயரில் சென்னைக்குக் குடி பெயர்ந்தேன்.” என்று கூறியுள்ளார்.

குன்னக்குடியானாலும், லால்குடியானாலும் இன்று சென்னையில் வசித்தாலன்றி ஜீவனம் நடத்த முடியாது. இன்று சென்னையில் எழுபது சபைகளுக்கு மேல் இயங்கி டிசம்பரில் மட்டும் இரண்டாயிரம் கச்சேரிகளுக்கு மேல் நடத்தப்படுகின்றன.

கடந்த 10-15 ஆண்டுகளில் சங்கீதத் துறையில் முன்னணிக்கு வந்துள்ள கலைஞர்களை மட்டும் கணக்கில் கொண்டால், கிராமபுறங்களில் பிறந்து வளர்ந்த கலைஞர்கள் சிலராவது தேருவார்களா என்பதே சந்தேகம்தான். பெரும்பாலான கலைஞர்கள் சென்னை அல்லது குறைந்தபட்சம் திருச்சி, மதுரை போன்ற சிறு நகரங்களில் இருந்து வந்தவர்களாகவே இருக்கின்றனர்.

கோவில்கள் சார்ந்த சமூகம் என்ற நிலை மாறி கோவில்கள் ஆன்மிகத் தலங்களாகவும், சுற்றுலாத் தலங்களாகவும் ஆகிவிட்ட நிலையில், கிராமங்களில் கோவில் சார்ந்தே தழைத்த கலையான கர்நாடக இசை நீர்க்கத் தொடங்கியது. இன்று கிராமப்புறங்களில் உள்ள நாகஸ்வர கலைஞர்கள் ஒரு மகத்தான வரலாற்றின் எச்சங்களாகவே இருக்கின்றனர். சின்னச் சின்ன ஊர்களிலும் கூட அந்தந்த ஊர் கோவில்கள் ஆதரித்து வந்த நாகஸ்வர குழுவினரை இன்று நாராசமாய் ஒலிக்கும் தானியங்கி முழக்கு இயந்திரங்கள் வெளியேற்றிவிட்டன.

கோவில்களில் அடிக்கும் இந்த எலக்டிரானிக் மணிகள் ஆண்டவனை ஆராதிக்கும் ஆன்மிக மணிகளல்ல. மரபிசை தந்த மாணிக்கங்களை குப்பையில் கிடத்திவிடாமல் இருக்க வேண்டி சங்கீதத் துறைக்கு ஒலிக்கும் எச்சரிக்கை மணிகள் அவை. எவ்வளவோ சிறந்த நாகஸ்வர கலைஞர்கள் இருப்பினும், மிகச் சில கலைஞர்களுக்கு மட்டுமே சென்னைக் கச்சேரிகளில் வாசிக்கும் (சொர்ப்ப) வாய்ப்புகள் கிட்டுகின்றன. இவர்கள் நிலை இப்படியே தொடர்ந்தால், அடுத்த தலைமுறையினர் கிராமப்புறங்களில் திருமணம் செய்து கொண்டால் ‘கெட்டி மேளம்’ கொட்டக் கூட சி.டி-யை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

”இனி ஒரு மாகலைஞன் செம்மங்குடியில் இருந்தோ காருக்குறிச்சியில் இருந்தோ வர சாத்தியமே இல்லையா?” என்ற கேள்வி நம் முன் பிரம்மாண்டமாய் நிற்கிறது.

இந்தக் கேள்விக்கான பதிலும், “இனி ஒரு பெரிய விஞ்ஞானி தமிழகத்தின் கிராமப்புறங்களில் இருந்து வருவதற்கு சாத்தியமே இல்லையா?”, என்ற கேள்விக்கான பதிலும் ஒன்றுதான்.

ஐ.ஐ.டி-களும், என்.ஐ.டி-களும் கிராமங்களில் இல்லாத போதும், ஐ.ஐ.டி-யில் சேர வேண்டிய அடிப்படை அறிவையாவது பெறுவதற்கான வசதிகள் பல கிராமங்களில் உள்ளன. சங்கீதத் துறையிலும் இது சாத்தியமானால், கிராமப்புறங்களில் இருந்து இசைக் கலைஞர்கள் வெளி வர முடியும்.

குக்கிராமத்திலும் திரைப்படங்கள் பார்க்கவும், திரையிசையைக் கேட்கவும் வாய்ப்புகள் இருப்பது போல, மரபிசையைக் கேட்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தினாலன்றி கிராமங்களில் கர்நாடக இசை தழைக்காது. “கிராமங்களில் கச்சேரி வைத்தால் கூட்டம் வருமா?” என்று கேள்வி எழலாம். ஒரு மாத காலத்தில் இரண்டாயிரம் கச்சேரிகளை ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் நடத்தும் போது வரும் கூட்டத்தில் பாதியாவது இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடக்கும் ஒரே கச்சேரிக்கு வராமலா போய்விடும்?

சில பத்தாண்டுகள் முன் வரை, இந்திய இசை என்றால் என்னவென்றே அறிந்திருக்காத க்ளீவ்லேண்டுக்குச் சென்று இன்று கச்சேரி செய்யாத பெரிய வித்வானே இல்லை. “அமெரிக்கா பணக்கார நாடு. அவர்கள் கொடுக்கும் சன்மானம் கலைஞர்களை இழுப்பதில் என்ன ஆச்சர்யம்”, என்பதும் உண்மைதான்.

அந்தக் கால இசைக் கலைஞர்களுள் பெரும்பாலோர் முறையான பள்ளிப் படிப்பை பெறாதவர்கள். குருகுலவாசம் மூலம் கலையைப் பயின்று, கச்சேரி வாய்புகள் அமைந்தாலும் அமையாவிட்டாலும் கலைஞர்களாகவே கடைசிவரை வாழ்ந்தவர்கள். இன்று சங்கீதத் துறைக்கு வரும் இளைஞர்கள் வெறொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர். தம்மை சங்கீதத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலும் பொருளாதாரத்துக்கு எந்த பங்கமும் வராது என்று உணர்ந்த பின்னரே துறையில் முழு நேரக் கலைஞராக மாறுகின்றனர். இதில் தவறொன்றுமில்லை.

நல்ல சன்மானம்தான் கலைஞர்களை ஈர்க்கக் கூடுமெனில், அதைச் செய்யும் வழிகளைக் கண்டு அடைய வெண்டும். மந்தைவெளியில் பத்தடிக்குப் பத்தடி மொட்டைமாடியில் ஷாமியானா போட்டு கச்சேரி வைத்தால் கூட ஸ்பான்ஸர் செய்ய ஆட்கள் உண்டு. இந்த ஸ்பான்சர்களுக்காகவே டிசம்பரில் மட்டும் முளைக்கும் சபாகள் இருக்கும் போது, நல்ல சன்மானம் கொடுத்து கிராமங்களில் கச்சேரிகள் நடத்துவதா கடினம்? மனமிருந்தால் மார்க்கமுண்டு.

மனமிருக்கிறதா நம்மிடம்?

Read Full Post »

இன்று மிருதங்க மேதை முருகபூபதியின் பிறந்த நாள். பல வருடங்களுக்கு முன் சொல்வனத்தில் அவரைப் பற்றி எழுதியதை இங்கு பதிவிடுகிறேன்.

1930-களில் இருந்து 1960-கள் வரையில் உள்ள காலத்தை கர்நாடக இசை உலகின் பொற்காலம் என்று அழைப்பதுண்டு. பல்வேறு மேதைகள் ஒரே சமயத்தில் கோலோச்சிய காலமது. அந்த காலகட்டத்தில் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும் மிருதங்க உலகை தமதாக்கிக் கொண்டிருந்தனர். மூவரில், முருகபூபதிதான் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற போதும், இவர் வாழ்க்கையே மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. “மிக அரிய பொக்கிஷங்கள், பெரும்பாலும் பொது மக்களின் கண்களின் இருந்து விலக்கப்பட்டே இருக்கும்”, என்ற கூற்று முருகபூபதியாரைப் பொருத்த மட்டில் முற்றிலும் உண்மையானது.

முருகபூபதியின் முன்னோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டவர்களாகத் தெரிய வருகிறது. இந்தக் குடும்பத்துக்கும், இராமநாதபுரம் அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இராமநாதபுரம் மன்னர்கள் வரலாற்றைப் பார்க்கும் போது, அவர்கள் சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டுடன் விளங்கியதை அறிய முடிகிறது. காசி நாத துரை பொன்ற மன்னர் வம்சாவளியினரே கச்சேரி செய்யும் அளவிற்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சங்கீதத்தை போஷிக்க சபைகள் உருவாவதற்கு முன்னர், இது போன்ற சமஸ்தானங்களே அந்த வேலையை திறம்படச் செய்து வந்தன. அவ்வகையில், முருகபூபதியின் தந்தையார் சித்சபை சேர்வை அவர்கள், இராமநாதபுரம் மன்னர் ஆதரவில், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து லயத்தில் தேர்ச்சியைப் பெற்றார்.
“பூச்சி ஸ்ரீனிவாஸ ஐயங்கார் போன்ற மேதைகளுக்கு அவர் வாசித்திருந்த போதும் அவர் கச்சேரி வித்வானாக விளங்கவில்லை. ஆத்மார்த்தமாகவே மிருதங்கக் கலையை வாசித்து வந்தார். எப்போதும் அவர் வாய் ஜதிகளை உதிர்த்துக் கொண்டே இருக்கும்”, என்று ஒரு நேர்காணலில் சங்கரசிவ பாகவதர் கூறியுள்ளார். இராமநாதபுரம் அரணமனைக்கு இசைக் கலைஞர்கள் வரும் போதெல்லாம் சித்சபை சேர்வையின் வீட்டிலேயே தங்கினர். “அரண்மனைக்கு வராத வித்வான்களே இல்லை. அவர்கள் பாடாத பாட்டை இது வரை யாரும் பாடவில்லை”, என்று முருகபூபதியே கூறியுள்ளார்.

சித்சபை சேர்வைக்கு நான்கு மகன்கள். அவர்களுள் இருவர் சங்கீதத் துறையில் சிறந்து விளங்கினர். இரண்டாவது மகனான சங்கரசிவத்தை இராமநாதபுரம் மன்னர் ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்ய அனுப்பி வைத்தார். அவரிடம் கற்ற பின், கச்சேரிகள் செய்தாலும், சங்கீத ஆசிரியராகத்தான் சங்கரசிவ பாகவதர் பெரும் புகழை அடைந்தார். குருகுலவாசத்தில் கற்ற வாய்ப்பாட்டை தவிர, வயலின், மிருதங்கம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலையும் இயற்கையாகவே வரப்பெற்றிருந்தார் சங்கரசிவம்.

சித்சபை சேர்வையின் நான்காவது மகனான முருகபூபதி, தான் வளர்ந்த சூழலினால் சங்கீதத்தின் பால் ஈர்க்கப்பட்டார். தன் தந்தை வாசிப்பதைப் பார்த்து தானும் மிருதங்கத்தை இசைக்க ஆரம்பித்தார். சிறு வயதில் முருகபூபதி வாசிப்பதைப் பார்த்த அழகநம்பியா பிள்ளை, அவரை மடியில் அமர்த்திக் கொண்டு, மிருதங்கத்தில் தொப்பியை கையாள வேண்டிய முறையை எடுத்துச் சொன்னதை முருகபூபதியே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இள வயதில், கேட்டதை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட்டாய் வாசித்துக் கொண்டிருந்த முருகபூபதியை நெறிப்படுத்தியவர் சங்கரசிவ பாகவதர்தான். முருகபூபதியின் சிறு வயது அனுபவங்களை அறிந்த அவரது சீடர் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி “என் குருநாதர் கற்கும் போது ராமநாதபுரம் ஈஸ்வரன் போன்ற சிலரும் சங்கரசிவ பாகவதரிடம் மிருதங்கம் கற்று வந்தனர். அப்போதெல்லாம் பூபதி அண்ணாவின் கவனம் வாசிப்பில் இருக்கவில்லை. ராமநாதபுரம் ராஜாவின் பிள்ளைகளுடன் சேர்ந்து கால்பத்து ஆடுவது, குஸ்தி போடுவது போன்றவற்றில்தான் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அண்ணாவுக்குத் தெரியாமல் விளையாடச் சென்றுவிடுவார். சாயங்காலம் வாசல் திண்ணையில் சங்கர சிவ பாகவதர் அமர்ந்திருப்பார் என்பதால், சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து, மற்ற சீடர்களிடம், “அண்ணா, இன்னிக்கு என்ன பாடம் போட்டார்”, என்று கேட்டுக் கொள்வார். ஒரு முறை சொன்னதைக் கேட்டு வாசிக்கத் தொடங்கினால், அதை அவர் ஏற்கெனவே பல முறை வாசித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுமாம். அவர் வாசிக்கத் தொடங்கியதும், “முருகன் வந்துட்டான் போல இருக்கு”, என்று புன்னகையுடன் கூறுவாராம் சங்கரசிவம்.”, என்கிறார்.

முருகபூபதியின் வாழ்வில் திருப்புமுனையாய் இரண்டு கச்சேரிகள் அமைந்தன. முதல் கச்சேரி சென்னை ஆர்.ஆர்.சபாவில் நடை பெற்றது. அப்போது சங்கரசிவ பாகவதர் சென்னையில் தங்கி பலருக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். முருகபூபதியும் அவருடன் தங்கி இருந்தார். ஆர்.ஆர்.சபாவில் நடக்கவிருந்த செம்மங்குடியின் கச்சேரிக்கு சௌடையாவும், பாலக்காடு மணி ஐயரும் பக்கவாத்யம் வாசிக்க எற்பாடாகி இருந்தது. பம்பாய் சென்றிருந்த மணி ஐயர், கச்சேரி தினத்தன்றுதான் சென்னை அடைவதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட ரயில் தாமதங்களால் மணி ஐயரால் சரியான நேரத்துக்கு வந்து சேர முடியாது என்று தெரிந்ததும், ஒரு ரயில் நிலையத்திலிருந்து தன் நிலை பற்றி தந்தி கொடுத்தார். மணி ஐயர் பிரபலத்தை அடைந்திருந்த காலமது. மணி ஐயரின் வாசிப்பை கேட்க வந்தவர்கள் ஏமாற்றமடையா வண்ணம் வாசிக்க யாரை கூப்பிடலாம் என்று தவித்துக் கொண்டிருந்த சபா நிர்வாகிகள், இராமநாதபுரம் ஈஸ்வரனை அணுகினர். அப்போது தற்செயலாக் முருகபூபதி ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்திருந்தார். விஷயம் அறிந்ததும், இராமாதபுரம் ஈஸ்வரன் முருகபூபதியை பரிந்துரை செய்தார். “எனக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ரேட்டை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் கேட்டால் நம்மை வாசிக்க சொல்ல மாட்டார்கள் என்றெண்ணி அதிகம் கேட்டேன். அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தனர்.”, என்று ஓர் நேர்காணலில் முருகபூபதியே கூறியுள்ளார். அன்றைய கச்சேரியில் முருகபூபதியின் வாசிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கச்சேரியின் நடுவில் அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து கூட்டம், “முருகபூபதிக்கு இன்னொரு தனி”, என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. ”அன்றைக்கு செம்மங்குடி எனக்கு மூன்று தனி கொடுத்தார். ரசிகர்களும் வெகுவாக என்னை உற்சாகப்படுத்தினர்.”, என்றும் முருகபூபதி கூறியுள்ளார்.

பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை வாழ்வில் நடந்தது போலவே முருகபூபதியின் இசை வாழ்வு முன்னேற்றப் பாதைக்கு வர செம்பை வைத்தியநாத பாகவதரின் பங்கு முக்கியமானது. சம்பிரதாயாவில் உள்ள முருகபூபதியின் நேர்காணலில், “திருச்செந்தூரில் முதன் முறையாக செம்பைக்கு வாசித்தேன். அப்போது நான் ஃபுட்பால் ப்ளேயர். பெரிய மீசையெல்லாம் வைத்திருப்பேன். என்னைப் பார்த்ததும், “இந்தப் பையனா மிருதங்கம் வாசிக்கப் போகிறான்?”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த?”, என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்”, என்று கூறியுள்ளார். ஓரிடத்தில் சிறு நல்ல விஷயத்தைக் கண்டால் கூட அதை எல்லொருக்கும் தெரியும் படி பெரியதாகக் காட்டுவது செம்பையின் சுபாவம். முருகபூபதியை வாசிக்கக் கேட்டதும், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்தார். அந்த வருடம் அகாடமி கச்சேரிகளில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு முருகபூபதி வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் செம்பை.
இவ்விரு நிகழ்வுகளுக்குப் பின், முருகபூபதி முன்னணி வித்வான்கள் அனைவருக்கும் வாசிக்கத் தொடங்கினார். “சுமார் 30 ஆண்டு காலத்துக்கு, எந்த ஒரு பெரிய கச்சேரியிலும், மணி ஐயர், பழனி, முருகபூபதி ஆகிய மூவரில் ஒருவரே மிருதங்கம் வாசித்தனர்”, என்கிறது ஒரு ஸ்ருதி இதழ். “சங்கீத மும்மூர்த்திகள் போல, மிருதங்க மும்மூர்த்திகள் என்று இந்த மூவரையும் குறிப்பிடலாம்”, என்று வயலின் மேதை லால்குடி ஜெயராமன் கூறியுள்ளார். பழனி, முருகபூபதி இருவரும் புதுக்கோட்டை பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான். அதனால், இருவரின் வாசிப்பு அணுகுமுறையிலும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரே வழியில் வந்தாலும், ஒருவரைப் போல மற்றவர் வாசிக்கிறார் என்று சொல்ல முடியாத வண்ணம் பிரத்யேகமாய் தங்கள் வாசிப்பை அமைத்துக் கொண்டனர். மணி ஐயரோ, முருகபூபதியோ மிருதங்கம் வாசித்த கச்சேரிகளில்தான் பழனி கஞ்சிரா வாசிக்க சம்மதித்தார் என்பதிலிருந்து பழனியின் மனதில் மணி ஐயருக்கு நிகரான இடத்தை முருகபூபதி பெற்றிருந்தார் என்பதை உணர்திடலாம்.
முருகபூபதியின் வாசிப்பின் சிறப்பம்சங்கள் பல உண்டு எனினும், முதலில் கேட்பவரைக் கவர்வது அவர் மிருதங்க நாதம்தான். “அவர் மிருதங்கம் எப்போதுமே 100% ஸ்ருதியுடன் இணைந்து இருக்கும். எவ்வளவுதான் விவகாரமாக வாசித்த போதும், அவர் வாசிப்பில் ஒவ்வொரு சொல்லும் தேனைக் குழைத்து வாசிப்பது போல இனிமையாக இருக்கும். வறட்டு சொற்களை அவர் வாசிப்பில் கிஞ்சித்தும் காண முடியாது. குறிப்பாக, சர்வலகு கோவைகளை அவர் வாசிக்கும் போது, வலந்தலையில் உள்ள சாதத்தை தடவிக் கொடுத்தபடியே பல்வேறு நடைச் சொற்களை வாசிப்பது அவர் சிறப்பம்சமாகும்.”, என்கிறார் முருகபூபதியின் சீடர் சென்னை தியாகராஜன். ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.

cs_m

பழனியைப் போலவே மிருதங்கத்தின் தொப்பியை கையாள்வதில் முருகபூபதி தனக்கென்று ஓர் சிறந்த வழியை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் தொப்பியில் வாசித்த முறையை, “his greatest contribution to mridangam playing”, என்கிறார் திருச்சி சங்கரன். சாதாரணமாக, மிக வேகமான சொற்கட்டுகளை வாசிக்கும் போது கும்காரங்கள் இடம் பெருவது அரிது. ஆனால், முருகபூபதியின் வாசிப்பிலே, வலந்தலையில் மின்னல்; வேக ஃபரன்கள் ஒலிக்கும் போதே, தொப்பியில் அவரது இடது கை கும்காரங்களை தன்னிச்சையாய் உதிர்ப்பதை, அவர் கச்சேரி பதிவுகளைக் கேட்கும் பொது அறிந்து கொள்ளல்லாம். பொதுவாக வலந்தலையில்தான் விரல்களை பிரித்து வாசிப்பர். தொப்பியில் வாசிக்கும் போது, பெரும்பாலான சொற்களில் விரல்கள் அனைத்தும் இணைந்தே இருக்கும். “வலந்தலையைப் போலவே தொப்பியிலும் வாசிப்பதை நான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். என் சிறு வயதில் அழகநம்பி பிள்ளை தொப்பியில் வாசித்துக் கேட்டதே என்னை இவ்வாறு வாசிக்க தூண்டியது”, என்று முருகபூபதியே வானொலி நேர்காணலில் கூறியுள்ளார். “ஒரு வழைமையான சொல்லில், வலந்தலையில் இடம் பெறுவதை தொப்பியிலும், தொப்பியில் இடம் பெருவதை வலந்தலையிலும் மாற்றி வாசிப்பதும் அவர் தனிச் சிறப்பாகும்”, என்கிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். “அவர் வாசிக்கும் சொற்கட்டுகளை கேட்ட மாத்திரத்தில் புரிந்து கொண்டு விட முடியாது. அவர் விளக்கினால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்”, என்கிறார் சென்னை தியாகராஜன். “நான் கச்சேரியில் மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை வாசிப்பதைக் கேட்டு என் அண்ணாவிடம் சொல்வேன், அதை இவர் “இதைத்தான் செஞ்சு இருக்காங்க”, என்று விவரமாக விளக்குவார். அதை கிரகித்துக் கொண்டு, அப்படியே வாசிக்காமல், என் பாணியில் வாசிப்பேன். அது கேட்க புதிதாக ஒலிக்கும்”, என்று முருகபூபதியே விளக்குகிறார்.

அரியக்குடி, ஜி.என்.பி, மதுரை மணி, செம்மங்குடி போன்ற பல முன்னணி வித்வான்களுக்கு பரவலாக வாசித்து வந்த முருகபூபதி, பின்னாளில் பல திறமையான இளம் வித்வான்களை தூக்கி விடுவதிலும் முக்கிய பங்கு ஆற்றினார். “சோமு என் தம்பி மாதிரி” என்று அடிக்கடி கூறிய முருகபூபதி, பல்வேறு கச்சேரிகளில் அவருக்கு வாசித்து அவர் கச்சேரிகளை சிறப்பித்துள்ளார். பின் நாளில் மதுரை டி.என்.சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு நிறைய வாசித்து வலு சேர்த்துள்ளார். புல்லாங்குழல் மேதை மாலி மிகவும் விரும்பிய மிருதங்க வித்வான்களுள் முருகபூபதி முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமது நீண்ட இசை பயணத்தில் எண்ணற்ற விருதுகளையும் கௌரவங்களையும் கண்டவர் முருகபூபதி. சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம் (1949), பத்மஸ்ரீ (1973), சங்கீத் நாடக் அகாடமி விருது (1975), இசைப் பேரறிஞர் (1979), அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மாநிலக் கலைஞர் (State Artiste, 1979) ஆகியவை அவருக்கு கிடைத்த ஒரு சில கௌரவங்களே. சங்கீத விருதுகளில் தலையாயதாக கருதப்படும் சங்கீத கலாநிதி விருது அவருக்குக் கிடைக்காமல் போனதை, ‘a conspicuous omission’, என்று ஸ்ருதி இதழ் குறிப்பிடுகிறது.
1940-களிலும் 50-களிலும் கோலோச்சிய பாடகர்கள் பலரது மறைவு 1960-களிலும் 70-களிலும் ஏற்பட்டது. தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களில் மறைவினாலும், அடுத்த தலைமுறை வித்வான்கள் தலையெடுக்கத் துவங்கியதாலும் கச்சேரி வாசிப்பை கணிசமாகக் குறைத்துக் கொண்டு தான் கற்ற கலையை அடுத்தவருக்கு அளிப்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். சுய மரியாதையை எந்தக் காலத்திலும் இழந்து விடாதவர் என்று பெயர் பெற்றிருந்த இவர்., சம்பிரதாயாவுக்கு அளித்துள்ள நேர்காணலில், “என்னை கௌரவமாக நடத்துபவர்கள் கச்சேரியில் மட்டுமே நான் வாசிக்கிறேன். இப்போதெல்லாம் தனியை விட்டதும் இரண்டு விரலைக் காட்டி, இரண்டு நிமஷத்துக்குள் முடித்துவிடு என்று சமிக்ஞை செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் வாசிக்க விரும்புவதில்லை.”, என்று தன் உள்ளத்தை ஒளிவு மறைவின்றி கூறியுள்ளார்.
1980-களில் தமிழ் இசைச் சங்கம் நடத்திய இசைப் பள்ளியில் விசிடிங் பிரின்சிபாலாக பணியாற்றியுள்ளார். அரசு இசைக் கல்லூரியின் அலோசகர் குழுவிலும், அண்ணாமலை பல்கலைகழகத்தின் நுண்கலை பிரிவிலும் (faculty of fine arts) பணியாற்றினார். “எப்போது போனாலும் தடையின்றி சொல்லிக் கொடுப்பார். தான் ஒரு மிருதங்கத்தை வைத்துக் கொண்டு, மாணவனுக்கு ஒரு மிருதங்கத்தை அளித்து தான் சொல்லிக் கொடுப்பதை எல்லாம் மாணவன் சரிவர வாசிக்கும் வரை விடாமல் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார்”, என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். முருகபூபதியிடன் பயின்ற வித்வான்களுள் முக்கியமானவர் மறைந்த கஞ்சிரா மேதை ஹரிசங்கர். இவர் தவிர, மாவேலிக்கரை சங்கரன் குட்டி நாயர், காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, மதுரை செல்லப்பா, கும்பகோணம் ப்ரேம்குமார், சென்னை தியாகராஜன் போன்ற கலைஞர்கள் இவரிடம் பயின்றவர்களே.

1998-ல் தனது 84-வது வயதில் முருகபூபதி காலமானார். அதை ஒட்டி கே.எஸ்.காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரையில், “The last of titans”, என்று இவரை குறிப்பிடுகிறார். முருகபூபதி இருக்கும் போதே சங்கரசிவ பாகவதரின் வருடாந்தர அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முருகபூபதியின் மறைவுக்குப் பின் ‘சங்கர பூபதி ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பின் முயற்சியால் ஆண்டுதோறும் சங்கரசிவம், முருகபூபதி இருவருக்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாள் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் மூலம் அஞ்சலி செலுத்துவதோடல்லாமல் இசைத் துறையில் சாதித்தவர்களையும் கௌரவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவதசலத்தின் முயற்சியும், முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜின் உழைப்புமே முக்கிய காரணங்களாகும்.

முருகபூபதியின் மறைவை சில இணையதளங்கள் தவிர எந்த ஒரு மாநில பத்திரிகையோ, தேசிய பத்திரிகையோ குறிப்பிடக் கூட இல்லை என்று ஸ்ருதியில் காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரை அங்கலாய்த்தாலும், அவர் வாசிப்பை கேட்ட எண்ணற்ற ரசிகர்கள் மனதில் அவர் மிருதங்க நாதம் என்றென்றும் ரீங்காரித்துக் கொண்டே இருக்கும்.

Read Full Post »

I had the pleasure of meeting Rajam sir almost every weekend for about five years. Sometimes, I would find a painting based on our previous conversation. There were some extempore sketches too.

Once I asked him, if the similies in the song “antha rama saundharyam” made sense? As an artist, was he able to visualise them?

He responded extempore with a line drawing. It is a prized possession for me. I’m happy to share that drawing along with the song rendered by him today.

article 3

Rajam100 – Song 4 of 365

Today I present a song from Arunachala Kavi’s Rama Natakam. This is a private recording, rendered at home, without any accompaniments.

He had actually rendered over fifty kritis covering the entire stoty in this recording.

I asked him on whatoccasion he sang this.

He said, “My son had brought a new recorder. I wanted to check if it worked fine!”.

We are glad that the recorder worked fine and the recording survived.

Read Full Post »

On the third day, I would like to share Rajam’s depiction of Arunachala Kavi.

It is said that Kamban made his Ramayana public in the Srirangam temple. Arunachala Kavi wished that his Rama Nataka Kirthanais were released in Srirangam as well. There were some resistance to it. The famous song “En Palli Kondeer ayya” is actually a plea to Ranganatha from Arunachala Kavi. The “never sung” third charanam explicitly says that.

I particularly like the Pavala malli decoration on the Perumal.

#Rajam100

 

Arunachala Kavi.jpg

***************************************************************************

The third song that I present is from a private recording. I received a set of recordings from Rajam sir, where his student Smt. Gomathi had digitised his renditons during the classes. There were over 400 songs, including all 72 melakartha songs of Koteeswara Iyer.

Rajam’s most famous musical contribution was popularizing Kotishwara Iyer’s compositions. Here I present the composition in Todi. ‘Kali Theera’ – in true Ariyakudi style. The cascading sangatis and that deep and ringing mandra panchamam in the chitta swarams makes it a cherished recording for me.

In the Kanda Ganamutham album, that is commercially available, he has sung a crisp alapana and lovely swaras as well.

 

Read Full Post »

Starting Today, I plan to publish a painting and a song of S.Rajam, as a tribute to the great man on his centenary. Keep following this space daily.

The first painting we share on the legend’s birthday is the painting of Swaminatha. The choice is inspired from the pallavi of the song that I would share later today, Muruganukkoru Seedan.

It is well known that S.Rajam’s work were published in many Tamil magazines and art magazines such Sruti and journals such as Bhavan’s journal. Not many know that his works adorned the cover of Kannada magazine Sudha on several occasions.

select 46

Here is a rare work that beautifully depicts Pranava mantra tatvopadesa by Murugan to Shiva. This picture, of course a print, and hence lacks the depth of the original painting. However, one can still appreciate the famous multi-layered coloring, the attention to details and those intricate lines.

I scanned this from the personal collection of Rajam sir when I made the documentary on Rajam sir. Do not forget to notice the background design on the page of the album. Every page in his album would have a unique design , augmenting the pasted picture that he meticulously maintained in his archive.

*******************************************************************************

The first song that we share is “Muruganukkoru Seedan”.

A composition of Harikesanallur Muthiah Bhagavathar in Kalyani. S.Rajam had the fortune of learning from many greats. The list also includes the great Muthiah Bhagavathar. Apart from learning carnatic compositions, Rajam considered it a blessing that HMB was the music director to the movie “Radha Kalyanam”, in which Rajam played the lead role.

This recording is from an AIR concert. Interestingly a concert that was telecast on the day of the Kumbabishekam of Myplaore Kapaliswarar Temple. On this occasion he rendered songs on every deity in that temple complex.

 

The sure footing on Shudhdha Swarams, cascading sangatis and that ‘Bigu” sangatis in the pallavi, the smallest of pauses between words that immensely enhance the enunciation and brisk/crisp nereval swarams makes one to keep getting back to this rendition.

Read Full Post »

ஓவியர், பாடகர், நடிகர், ‘சங்கீத கலா ஆசார்யர்’ எஸ்.ராஜம் அவர்களின் நூற்றாண்டு இந்த வருடம்.

அதன் தொடக்கமாய். வரும் வெள்ளிக்கிழமை, ஃபெப்ரவரி 8-ம் தேதி, சென்னை மியூசிக் அகாடமியில் ஒரு நிகழ்வு நடக்கிறது.

அதன் விவரங்கள்

PHOTO-2019-02-05-19-13-05.jpg

PHOTO-2019-02-05-19-13-05 (1)

அவர் நூற்றாண்டை முன்னிட்டு நிகழ்ந்த பாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். அவரைப் பற்றிய ஆவணப்படத்திலிருந்தும் பல சுவாரஸ்ய காட்சிகளைக் காணும் வாய்ப்பும் உள்ளது. அவருடன் பழகிய பலரின் அனுபவப் பகிர்வும் நிகழ்ச்சிக்கு செறிவு சேர்க்கும்.

இவைத் தவிர, அவர் ஓவியத்தை முன் வைத்து ஒரு நாட்டிய நிகழ்ச்சியும் (நவ்யா நடராஜன்), அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இசைக் கச்சேரியும் (ரஞ்சனி காயத்ரி) இடம் பெறவுள்ளது.

இந்த அரிய நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். கலை ரசிகர்கள் வந்து ரசிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

இது தொடங்கி, இன்னும் ஓராண்டுக்கு மாதம் ஒரு கச்சேரி ராஜம் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் பரிவாதினியின் மூலம் நடக்கவுள்ளது.

முதல் கச்சேரியாய். ஃபெப் 22-ம் தேதி எஸ்.ராஜத்திடம் கற்ற பாடகர் அக்ஷய் பத்மநாபன் பாடுகிறார்.

இந்த முயற்சிக்கு பொருள் உதவி செய்ய விழைவோர்.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

என்ற வங்கிக் கணக்கில் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.

 

 

Read Full Post »

2004-ல் எழுதியது. இன்றைக்கும் பொருந்தும் என்றுதான் நினைக்கிறேன். (அப்போது ஒரு தோசை 20 ரூபாய்க்கு கிடைத்திருக்கிறது)

‘இந்த தடவை முத்ரா-ல ஃப்ரீ கச்சேரி இல்லையாமே ? ஆஸ்தீக சமாஜத்துல கூட 15-ரூபாய்க்கு டிக்கெட்டாம் ? ’.

மாமா talk-இல் பிரதானமாய் அடிபடும் டாபிக் இதுதான். (மாமி talk-இல் இந்த வருடம் ‘மாம்பலம் சிஸ்டர்ஸ்-ஐப் பத்திதான் நிறைய பேச்சு. கர்நாடிகா ப்ரதர்ஸ், ராகம் சிஸ்டர்ஸ், பத்மா சேஷாத்ரி சிஸ்டர்ஸ் என்றெல்லாம் vocal-duet பாடும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இதே நிலையில் போனால், kilpakkam kins, kanchipuram cousins என்றெல்லாம் அடுத்த சீஸனில் யாரேனும் கிளம்பினால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.)

இந்த முறை நிறைய சபாக்கள் டிக்கெட் விலையைக் கணிசமாக ஏற்றியிருக்கின்றன. ஃப்ரைம் டைம் ஸ்லாட்டில் ஓசியில் கச்சேரி நடக்கக் கூடிய சபைகளும் குறைந்திருக்கின்றன. கிருஷ்ண கான சபையில், மினிமம் டிக்கெட் விலை ரூ.100-ஆக உயர்ந்துள்ளது என்றொரு நண்பர் சொன்னார். பாரத் கலாச்சார், வாணி மகால் போன்ற இடங்களில் மினிமம் 50 ரூபாய். பல காலமாய் சும்மா கிடைத்த சங்கீதத்தைக் கேட்டவர்களுக்கு இந்நிலை அத்தனை செளகரியமாக இல்லை. ‘சங்கீதத்தை வெச்சு வியாபாரம் பண்றான். தியாகராஜர் பாட்டை பாடறானே, அவருக்கு என்ன ராயல்டி குடுக்கறான் ? ஷாமியானா பந்தல்-ல 50 சேரைப் போட்டு, ஐம்பது, நூறு-னு டிக்கெட்டுக்கு வாங்கறான். ஆத்மார்த்த சங்கீதம் எல்லாம் போயாச்சு ‘ என்றெல்லாம் இவர்கள் புலம்புவதைக் கேட்க முடியும். இப்படிப் புலம்புவதால் இவர்களெல்லாம் காசில்லா ஓட்டாண்டிகள் என்றெண்ண வேண்டாம். இவர்கள் நினைத்தால் ஆளுக்கொரு சபை ஆரம்பித்து, சென்னையே ஓசியில் கச்சேரி கேட்கச் செய்ய முடியும்.

சங்கீதம் முதலில் கோயில்களில் ஆராதனைக்குரியதாக இருந்தது. பின்பு ராஜாக்கள், மிராசுதார்கள், பிரபுக்களின் ஆதரவில் இருந்தது. அப்பொழுதுதெல்லாம் எவனோ ஒரு புண்ணியவான் எல்லா செலவையும் ஏற்றுக் கொண்டுவிட ஊரே கச்சேரி கேட்டது. அது என்றைக்கு சபைக்கு வந்ததோ அன்றே டாக்டர், சார்டட் அக்கெளண்டெண்ட் என்றெல்லாம் profession இருப்பதுபோல், இசைக் கலைஞராக இருப்பது, சங்கீத சபை நடத்துவது போன்றவைகளும் தொழில்களாகிவிட்டன. ஒரு வேலையை நல்ல வேலை என்று நாம் சொல்வாமாயின், நம் ஊர் அகராதிப்படி, அந்த வேலைக்கு நல்ல சம்பளம் என்று அர்த்தம். சபா வாசலில் அறுசுவையரசு காண்டீனில் ஒரு தோசைக்கு இருபது ரூபாய் கொடுக்க யாரும் தயங்குவதில்லை. குளிர்பதன வசதியுடன் கூடிய ஹாலில் 3 மணி நேரம் உட்கார்ந்து பாட்டு கேட்பதற்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் மாத்திரம் மனது வரமாட்டேன் என்கிறது. (அதுவும் சாயங்கால வேளையில் நடக்கும் கச்சேரியைத் தவிர மற்ற கச்சேரிகளுக்கெல்லாம் அனுமதி இலவசம்.)

இந்த இலவசம் என்ற சொல் ஏன் நம்மை இப்படி ஆட்டிப் படைக்கிறது என்று தெரியவில்லை. ‘இந்த இதழ் குங்குமத்துடன் சந்திரமண்டலத்தில் 2050-இல் திறக்கப் போகும் சரவண பவனில் ஒரு மசால் வடை இலவசமாகப் பெறுவதற்கான கூப்பன் இலவசம்’  என்று அறிவித்தால் கூட, அதற்காக குங்குமத்தை வாங்க சில பேர் நிச்சயம் இருப்பார்கள். இந்த விஷயத்தில் படித்தவர் பாமரர் பேதமெல்லாம் இல்லை. இந்த e-mail-ஐ நூறு பேருக்கு அனுப்பினால் 10 நிமிடம் long distance பேசலாம் என்றொரு stray email நமக்கு வந்தால், அதை forward செய்ய வேலை மெனெக்கெட்டு புதிய மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்கும் பிரகஸ்பதிகளை நான் பார்த்திருக்கிறேன். நாம் அனுபவிக்கும் ஒரு செளகரியத்திற்காக காசு கொடுக்க ஏன் மனசு வரமாட்டேன் என்கிறது ?

நம் மக்களின் கலாச்சாரத்தில் ஊறிய விஷயம் என்று இதை முழுமையாக ஒதுக்கிவிட முடியவில்லை. sony, nike போன்ற brand name-களுக்காகவே premium கொடுக்க தயங்காத நாம், சங்கீதம் பாடுபவனும் சபை நடத்துபவனும் மாத்திரம் லாபமே பார்க்காமல் பரோபகாரியாக வெறும் ஆத்ம திருப்திக்காக மாத்திரம் உழைப்பவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் என் சிற்றறிவுக்கெட்டாத ஒன்றாக இருக்கிறது.

கச்சேரி பிரபலமான, தேர்ந்த வித்வானால் இருக்க வேண்டும். அதுவும் நல்ல செளகரியமான சபையில் இருக்க வேண்டும். அதுவும் ஆபீஸ் முடிந்து கச்சேரிக்குத் தோதாய், 6.00 மணிக்கு மேல் இருக்க வேண்டும். சுதா ரகுநாதன் பாடும் பொழுது பாட்டு சங்கதிகள் மட்டும் கேட்ட்டால் பத்தாது. அவருடைய ஜிமிக்கி அசையும் அழகும் தெரிய வேண்டும். இது எல்லாம் காலணா காசு செலவழியாமலும் கிடைக்க வேண்டும். எனக்கு மட்டும் அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தை இரண்டு மடங்காக்கினால் தேவலாம். என் ஆபீஸ் மாத்திரம் கஞ்சப் பிசிநாரி.

சரி…எது எப்படியோ, இன்றைக்கு வளையப்பட்டியின் நாதலயா ட்ரஸ்ட், ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் இசை விழாவைத் தொடங்கியிருக்கிறது. உன்னிகிருஷ்ணன் கச்சேரியை இன்று பலர் (ஓசியில்) இரசித்திருப்பார்கள். All are welcome வாசகத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேடுபவர்கள் ஹேமமாலினிக்குப் போகட்டும். எனது கவலையெல்லாம், சென்னைக்கு வந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு டி.என்.கிருஷ்ணன் கச்சேரி கூட கண்ணில் படவில்லையே என்றும். திருச்சி சங்கரனின் தனியாவர்தனத்தை எப்பொழுது கேட்போம் என்றும்தான்.

Read Full Post »

டிசம்பர் சீஸனில் பல்லாயிரக்காண கச்சேரிகள் நடக்கின்றன. இருப்பினும் நாகஸ்வர கச்சேரிகள் பெரும்பாலும் தொடக்க விழா என்ற கேலிக்கூத்துக்கே ஒதுக்கப்படுகின்றன. மங்கல இசை என்ற பெயரில் பெரும் கலைஞர்களை அவமதிப்பதைப் பற்றி தனி பதிவு எழுதவேண்டும்.

நாகஸ்வர கச்சேரிகள் வைக்காததற்கு, சிறிய ஹாலில் அதிக சத்தம், கூட்டம் வராது என்று தொடங்கி பக்கத்துவீட்டுப் பாட்டிக்கு பல் விழுந்துவிட்டது வரை ஆயிரம் காரணங்கள்.

”அதுதான் பொங்கலில் நாகஸ்வர விழா இருக்கிறதே”, என்று எதிர் குரல் வேறு. “சீஸனின் போது நாகஸ்வரக் கலைஞர்கள் தீண்டத்தகாதவர்களா”, என்று சிலரைக் கேட்டு பகைத்துக் கொண்டதுதான் மிச்சம்.

80057-gxebrxxkzz-1516819858

இந்த வருத்தங்கள் பல வருடங்களாய் இருந்தாலும் பெரியதாய் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு முன் வித்வான் டி.எம்.கிருஷ்ணாவின் தலைமையில் சுமனஸா அறக்கட்டளை ஓர் அரிய, மிகவும் தேவையான முயற்சியை முன்னெடுத்தது.

டிசம்பரில் கச்சேரி நடத்தும் சபைகளுடன் பேசி நாகஸ்வரத்துக்கென்று சில கச்சேரிகளை ஒதுக்கி வைத்திருக்கிறது. கச்சேரி தேதியையும் நேரத்தையும் மட்டும் சபை அளித்தால் போதும். மற்ற அனைத்தையும் சுமனஸா அறக்கட்டளையே பார்த்துக் கொள்கிறது. கச்சேரிகளுக்கு கலைஞர்களை முடிவு செய்வதிலிருந்து, கச்சேரி செலவுகளை ஏற்றுக்கொள்வது வரை அனைத்தையும் சுமனஸா அறக்கட்டளை பார்த்துக்கொள்கிறது.

இந்தப் பணியில் துறை சாதனையாளர் வியாசர்பாடி கோதண்டராமனும் இருப்பதால் பெரும்பாலும் அதிகம் அறியப்படாத கலைஞர்களுக்கு இந்த மேடை கிடைக்கிறது. இன்று நல்ல பெயருடன் விளங்கும் மயிலை கார்த்திகேயன் என்ற அற்புத இளம் கலைஞரை நான் முதன் முதலில் கேட்டது இந்த அறக்கட்டளை நாத இன்பத்தில் ஏற்பாடு செய்திருந்த டிசம்பர் கச்சேரியில்தான்.

இந்த சீஸனில் மட்டும் ஐந்து சபைகளில் பதினோரு கச்சேரிகள் ஏற்பாடாகி சிறப்பாக நடந்துள்ளன.

சென்ற வருடம், டிசம்பர் தவிர மற்ற மாதங்களிலும் நாகஸ்வர கச்சேரிகள் இந்த அறக்கட்டளையால் நடத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும், நாகஸ்வரக் கலைஞர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அதிக விளம்பரம் இன்று சத்தமில்லாமல் இது ஒரு புரட்சி என்றுதான் சொல்லவேண்டும்.

மிக அவசியமான முயற்சியை முன்னோடியாய் முன்னெடுத்திருக்கும் சுமனஸா அறக்கட்டளைக்கும், வித்வான் டி.எம்.கிருஷ்ணாவுக்கும் சங்கீத உலகம் என்றென்றும் கடன்பட்டிருக்கும்.

வரும்காலங்களில் பதினொன்று பல நூறாகப் பெருகும் என்று நம்புவோம்.

Read Full Post »

“ஹிந்துஸ்தானி இசையில் உள்ளது போல ஒவ்வொரு ஸ்வரத்திலும் ஸர்வ நிச்சயமாய், நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வையில் கேட்பவரை மூழ்க வைக்கும் கம்பீரக் குரல்கள் தென்னகத்தில் உண்டா?”,   என்று கேட்பவர்களுக்கு பதிலளிக்க வித்வான் வோலேடி வெஙக்டேஸ்வருலுவின் குரலைத் தாண்டிச் செல்லத் தேவையில்லை.

Voleti

நினைத்தது பேசும் சாரீரம் அமையப் பெற்றவர்களின் கச்சேரிகளில், குரலின் வசீகரத்தையும், அது செய்யக் கூடிய ஜாலத்தைக் காட்டும் களங்களாகவும் மாறி, சங்கீதம் இரண்டாம் பட்சத்துக்குத் தள்ளப்பட்டுவிடுவதுண்டு. வோலேடியின் கச்சேரிகளில் தன் திறனை காட்ட கச்சேரி ஒரு கருவி என்றல்லாமல் இசையின் அழகை வெளிப்படுத்த தன் குரல் ஒரு கருவி என்கிற அர்ப்பணிப்பு மனோபாவத்தை உணர முடியும். கச்சேரியின் தொடக்கத்தில் கண்ணை மூடி ஸ்ருதியுடன் வோலேடி கலந்து விட்டால் அனைத்தையும் மறந்த மோன நிலை கச்சேரி முடியும் வரை தொடர்ந்து (அவருக்கு மட்டுமல்ல; கேட்வருக்கும்) நிலைக்கும்.

சங்கீத உலகில் ஸ்வரஞானி என்றால் அது வோலேடிதான் என்று பலர் குறிப்பிடுவதுண்டு. முனுகண்டி வெங்கடராவ் பந்துலுவிடம் அடிப்படைகளைக் கற்று கச்சேரி செய்யும் நிலைக்கு வந்துதும், சங்கீத கலாநிதி ஸ்ரீபாத பினாகபாணியிடமும் பயிற்சியைத் தொடர்ந்தார்.

பினாகபாணி வோலேடியைப் பற்றி கூறுகையில், “அவரால் எப்போதாவது வர முடியுமென்பதால் அதிகம் உட்கார வைத்து சொல்லிக் கொடுத்ததில்லை. என்னுடைய பாட்டுப் புத்தகங்களைப் பார்த்து ஒரு முறை எழுதிக் கொண்டாரென்றால் அதை அப்படியே பாடிவிடக் கூடிய திறமை அவருக்கு இயற்கையிலேயே இருந்தது.”, என்றுள்ளார்.

அகில இந்திய வானொலியில் அவர் தொடங்கிய சங்கித சிக்ஷணா என்ற நிகழ்ச்சி ம்ஜூலம் 300-க்கும் மேற்பட்ட அற்புதமான பாடல்களை இந்தியா முழுவதும் இசை மாணாக்கர்கள் கற்க முடிந்தது. நாளடைவில் தமிழகத்திலும் அவருடைய பெயர் பரவி பல கச்சேரிகள் நடந்தன. கச்சேரி செய்வதில் அதிகம் ஆர்வமில்லாதிருந்த வோலேடியை சக கலைஞர்கள் வற்புறுத்தி வரவழைத்தனர். வோலேடி பாட வேண்டுமென்பதற்காகவே லால்குடி ஜெயராமன் பஹாடி ராகத்தில் தில்லானா ஒன்றை உருவாக்கினார்.

ஹிந்துஸ்தானி இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த வோலேடி, வடக்கத்திய ராகங்களை எந்த ஒரு உஸ்தாதுக்கும் இணையாக இசைக்கக் கூடிய திறன் பெற்றிருந்தார். ஒரு முறை படேகுலாம் அலிகானிடமே தும்ரி ஒன்றைப் பாடி பாராட்டைப் பெற்றதை ஒரு நேர்காணலில் வோலேடி கூறியுள்ளார். பந்துவராளி, ஹிந்தோளம் போன்ற ராகங்களை அவர் விஸ்தரிக்கும் போது அவரிடம் இருந்த ஹிந்துஸ்தானி இசையின் தாக்கத்தை உணர முடியும். கர்நாடக இசைக்கென்றே பிரத்யேகமான ராகங்களான கேதாரகௌளை, சுரட்டி போன்ற ராகங்களின் வடகத்திய வாடை சற்றும் கலக்காமல் இசைப்பதிலும் வோலேடி வல்லவர்.

ஓர் அரிய புகைப்படத்தில், பின்னணியில் அரியக்குடியும் படே குலாம் அலிகானும் இருக்க, வோலேட்டி தன் தம்புராவை ஸ்ருதி சேர்த்துக் கொண்டிருப்பார். இந்தப் படமே அவருடைய சங்கீதத்தின் முழுமையான வர்ணனை எனலாம்.

Read Full Post »

Older Posts »