Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சிற்பம்’ Category

இலக்கியங்களும், கல்வெட்டுகளும் முழவு, தண்ணுமை, மத்தளம், இடக்கை, முரசு, பறை, குடமுழா முதலிய பல்வேறு தோலிசைக் கருவிகளைச் சுட்டுகின்றன. இவற்றுள், இசைக்கும் ஆடலுக்கும் பயன்படுத்தப்பட்ட கருவிகளுள், முழவு, தண்ணுமை, மத்தளம் ஆகிய கருவிகளைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாய் கிடைக்கின்றன.இம் மூன்றில், முழவும் தண்ணுமையும் சங்க இலக்கியங்களிலேயே இடம் பெருகின்றன. ‘முழவு’ என்ற சொல் தாளக் கருவிகளைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும், ஒரு குறிப்பிட்ட கருவியைச் சுட்டும் சொல்லாகவும் இடம் பெருகிறது. சிலப்பதிகார காலத்தில், தாளக் கருவிகளுள் ‘தண்ணுமை’ தலைமைக் கருவியாய் விளங்கியது.

“ஈர்ந்தண் முழவு”, “மண்ணார் முழவு”, “முழவு மண் புலர” போன்ற குறிப்புகள் முலம் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும், இம் மண் காலப்போக்கில் வரண்டு உதிர்ந்ததையும், உணரமுடிகிறது என்று ‘மத்தளவியல்’ என்ற நூலில் முனைவர் வி.ப.க.சுந்தரம் கூறுகிறார். பதிற்றுப்பத்து கூறும் “பண்ணமை முழவு”, சீவக சிந்தாமணி நச்சினார்க்கினியர் உரை கூறும் “இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய்”, ஆகிய தொடர்கள் மூலம் பண்டைய காலத்திலேயே முழவிசைக் கருவிகளில் ஸ்ருதி சேர்க்கப்பட்டன என்றும் முனைவர் சுந்தரம் கூறுகிறார்.

இலக்கியங்களில் மத்தளம் என்ற சொல்லை முதன் முதலில் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகத்தில்தான் காண முடிகிறது. சிலபெருமானின் ஆடலுக்கு ஏற்ற தாளக் கருவிகளுள் ஒன்றாக மத்தளம் இடம் பெருகிறது. சீனிவாசநல்லூர், திருவையாறு, கோனேரிராஜபுரம் முதலிய பல ஊர்களில் கிடைக்கும் சோழர் காலக் கல்வெட்டுகள் மத்தளம் முதன்மை இசைக் கருவியாய் விளங்கியதைக் குறிக்கின்றன. சோழர் காலச் சிற்பங்களிலும் ஏராளமான அளவில் மத்தளங்கள் என்று அறிஞர்களால் சுட்டப்படும் கருவிகள் காணக் கிடைக்கின்றன.

கோயில் சிற்பங்களை ஆழ்ந்து நோக்கின் ஆடலுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளிள் குடமுழவும், இடக்கையுமே அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக் நடராஜர் சிற்பங்கள் உள்ள தொகுதிகளில், சிவபெருமானின் ஆட்டத்துக்கு ஏற்ப இசைக்கப்படும் கருவியாக குடமுழா இடம் பெருகிறது. மற்ற ஆடல் சிற்பங்களில் பக்கவாத்தியமாய் அதிகளவில் காணப்படும் இடக்கையே. “நடுவில் குறுகியும், பக்கங்களில் பெருத்தும் காணப்படும் இக் கருவியின் வார்களை இழுத்தும் தளர்த்தியும், அதிலிருந்து எழுந்த ஒலியை கட்டுப்படுத்தியுள்ளனர்”,என்று இடக்கையைப் பற்றி குறிப்புகள் கிடைக்கின்றன. குடந்தை நாகேஸ்வரன் கொயில் முதலான இடங்களில் உள்ள சிற்பங்களும் இந்த வடிவில் கிடைக்கின்றன. இவை தவிர, நடுவில் அதிக குறுக்கம் இல்லாத கருவிகளும் நிறையவே காணக் கிடைக்கின்றன. உதாரணமாக, தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள இந்தச் சிற்பத்தைச் சொல்லலாம். இந்த வாத்யத்தையும் இடக்கை என்றே அறிஞர்கள் சுட்டுகின்றனர்.


கையால் முழக்கியதோடன்றி, குணில் என்ற வளைந்த குச்சியாலும் இவ்வாத்தியத்தை முழக்கியிருப்பதை சிற்பங்கள் உணர்த்துகின்றன. ஒரு முகப் பறைகளுள் ஒன்றாக அறியப்படும் இக் கருவி பல்லவர் காலம் தொட்டு, பல்வேறு சிற்பத் தொகுதிகளில் காணக் கிடைக்கின்றது. வாத்தியங்கள் குறித்து விரிவாகப் பேசும் கல்வெட்டுகளில் இடக்கை என்ற கருவியின் (நான் கண்ட வரை) இடம் பெறவில்லை. இடக்கையின் மற்றொரு பெயர் என்று ஆளவந்தார் சுட்டும் ஆவஞ்சியும் கல்வெட்டுகளில் இடம் பெறவில்லை.

ஆலயச் சிற்பங்களைப் பார்க்கும் போது இந் நாளில் மிருதங்கம் என்று நாம் குறிக்கும் கருவியின் வடிவிலேயே பல நூற்றாண்டுகளுக்கு முன் கருவிகள் இருந்திருப்பதும் தெரிய வருகிறது. குடந்தை சாரங்கபாணி கோயிலின் கோபுர வாயிலில் காணப்படும் இந்தச் சிற்பத்தில் உள்ள வாத்தியத்தின் அமைப்பின் மூலம் இதை உணரலாம்.

வரலாற்றாய்வாளர்கள் இரு பக்கம் முழக்கும் கருவிகள் அனைத்தையுமே மத்தளம் என்ற பொதுச் சொல்லில் அடக்கிவிடுகின்றனர். அளவிலும், அமைப்பிலும் வேறு படும் கருவிகளைப் பலவற்றை நம் கோயில் சிற்பங்கள் சித்தரிக்கின்றன. உதாரணமாக லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் உள்ள அம்மன் கோயில் வெளிப் புறச் சுவரில் உள்ள பூத வரியில் உள்ள இந்தச் சிற்பத்தில் உள்ள இந்தக் கருவி, நடுவில் பெருத்தும், முனைகளில் சிறுத்தும், இரு புறங்களை வார் கொண்டு இணைத்தும் காணப் படுகிறது. இன்று கச்சேரிகளில் வாசிக்கப்படும் மிருதங்கத்தும் இந்தச் சிற்பத்தில் உள்ள கருவிக்கும் வித்தியாசம் காண்பது கடினம்.

திருச்சி அருகில் உள்ள அல்லூரில் காணப்படும் இந்தத் தொகுதியில் வெவ்வேறு அமைப்புகள் கொண்ட தாள வாத்தியக் கருவிகள் உள்ளன. ஆடலுக்குத் துணையாக இசைக்கப் படும் இம் மூன்று கருவிகளையுமே அறிஞர்கள் மத்தளம் என்றே குறிக்கின்றன. இந்தச் சிற்பத் தொகுதி போன்று எண்ணற்ற தொகுதிகள் தமிழகெமெங்கும் காணக் கிடைக்கின்றன.

இன்று தவில், பக்வாஜ், டோலக், மிருதங்கம் என்றெல்லாம் நாம் வகைப் படுத்திக் கூறுவது போல, அந் நாளில் வாத்தியங்களை எப்படி வகைப்படுத்தினர் என்பதை குழப்பமின்றி உணர ஆய்வுகள் மேற்கொள்ளுதல் அவசியம்.

இன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தமிழகத்தில் தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன. மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தன.

கருவிகள் பற்றிய இந்த அறிமுகத்தோடு இன்றைய மிருதங்கத்துக்கு வருவோம்.

‘மிருத்+அங்கம்’ என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு ’மண்ணை அங்கமாகக் கொண்டது’ என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர்.

வலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும். கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் ஸ்ருதி வாத்யம் ஆகிறது. அதாவது பாடகரின் ஸ்ருதியிலேயே மிருதங்கத்தின் ஸ்ருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு. தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் ஸ்ருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது.

கடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் ‘மிருதங்கம்’ தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின.

கடந்த 250 ஆண்டுகளுக்குள் மிருதங்க வாசிப்பில் இரு வழிகள் துவங்கி, பெரிதும் வளர்ந்துள்ளன. இவற்றை ‘தஞ்சாவூர் வழி’ என்றும் ‘புதுக்கோட்டை வழி’ என்றும் குறிப்பர். இந்த வழிகள் தோன்றிய விதம், இரண்டுக்கும் உள்ள வேற்பாடு, இவ்விரு வழியிலும் தலை சிறந்து விளங்கியவர்கள் பற்றி கிடைக்கும் தகவல்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

Read Full Post »

அழகி

என் புது மனைக்கு அழகு சேர்க்க அங்காடிக்குச் சென்றேன் மனைவியுடன். 

நவீனமான ஷாப்பிங் மால் அல்ல அவ்விடம். 

குறுகலான பாதைகளும், அரையிருள் காட்சிகளும், ‘என்ன புக் சார் வேணும்?’, ‘இராஜராஜன் காசு பாக்றியா சார்?’, ‘கிட்டப்பா கிராமஃபோன் கிடைக்குமா?’ போன்ற பல ஒலிகள் ஒரே சமயத்தில் நம் காதில் விழுந்தும் விழாமல் போகும் இடமது. 

உங்களுக்கும் பரிச்சியமான இடமாகத்தான் இருக்கும். சென்னையில் அதிகம் திரியாதவராயினும், குறைந்த பட்சம் கேள்வியேனும் பட்டிருப்பீர்கள் 

பழமையில் வேர்களைத் தேடுபவர்களுக்கு பிடித்த இடமாகத்தான் இருக்க முடியும் அவ்விடம். 

சரி சரி..போதும் பீடிகை. சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் இருக்கும் ‘மூர் மார்க்கெட்டைத்தான் சொல்கிறேன். 

வரவேற்பறையில் வழக்கமான பொம்மைகளையும், உபயோகப்படாத பீங்கான் கோப்பைகளையும் வைக்காமல், சற்றே வித்தியாசமான வகையில் ஏதேனும் வைக்கலாம் என்று மூர் மார்க்கெட்டில் உள்ள பழம் பொருள் அங்காடிச்சுச் சென்றோம். உடைந்தும், கீறல் விழுந்தும், வண்ணம் உதிர்ந்தும் இருக்கும் பொருட்களுள் பல எங்கள் நெஞ்சை அள்ளின. ஆங்கிலேய ஆட்சியில் கோலோச்சிய தொலைபேசியும், இசையில் தன்னையே தொலைத்து, விரல்களை இறகாக்கி இசை வானில் பறப்பதை அற்புதமாய் படம் பிடித்த உலோக படிமம் ஒன்றையும், பழைய கிராமஃபோன் ப்ளேயரின் நகல் ஒன்றையும், கால்களை மடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் அழகிய வேலைபாடுகள் நிறைந்த மர ஒட்டகமும் வாங்கினோம். அப்போதுதான் அவள் என் கண்ணில் பட்டாள். 

கரியவள். தனை குனிந்தவள். அவளே கைப்பிடி. அவள் கைப்பிடித்திருந்ததது ஓர் அன்றலர்ந்த தாமரையை. 7-த் திருப்பிப் போட்டது போன்ற கூரான நாசியும், தெளிவான முத்து மாலையும், எழிலான சரப்பளியும் என்னைச் சுண்டியிழுத்தன. 

மாமல்லபுரத்தில் அர்ஜுன ரதத்தில் ஒழிந்து நிற்பவளும், ஸ்ரீநிவாசநல்லூரில் கோட்டச் சுவரில் உறுப்பிழந்தும் செழுப்பழியாது நிற்பாவளும் இவலுக்கு தூரத்து உறவாக இருப்பார்களோ என்றெண்ணி அருகில் சென்று விசாரித்தேன். 

அவர்கள் இவளுக்கு பல தலைமுறைகள் முன்னால் பிறந்த (இளமை மாறா) பாட்டிகளாம். 

அந்த விரல்கள்…அற்புதக் கடக முத்திரையைக் கண்ட போதெல்லாம் காஞ்சி கைலாசநாதர் கோயில் உமையவளின் கடகக் கைகள் நினைவுக்கு வரும். இனி இவள் விரல்களும் நினைவில் வரும். மெத்து மெத்துத் தண்டினை மென்மலரால் பிடித்திருந்த பாங்கைப் பார்த்து பல கணங்கள் ஆன பின், என் கண்கள் தோள்களை நோக்கின. இடது தோளை சற்றி துக்கிக் காட்டி, அத் தூக்கலுக்கேற்ப மர்பகங்களும் இடுப்பும் சுழன்றிருக்கும் விதம் அதி அற்புதம். கூர்ந்து நோக்கின் கண்ணுக்குத் தெரியாத வலது தோளும் மனக் கண்ணில் தெரியும். 

அவள் சருமம் கருமையடைந்ததால் white metal என்றெண்ணி அடி மாட்டு விலைக்குக் கொடுத்து, காசை வாங்கிப் பையில் போட்ட கடைக்காரருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. கையில் கிடைத்த கம்பியால் அவள் முதுகைக் கீறினார். கீறிய இடமெல்லாம் மங்கல மஞ்சள். இவ்வளவு கம்மியான விலைக்கு இந்த அழகியை எப்போதும் வாங்க முடியாது என்று அவர் அங்கலாய்த்தவுடன், பிடுங்கிக் கொள்வாரோ என்ற பயத்தில், அவரசர அவசரமாக இடத்தை விட்டு அகன்றோம். 

வீட்டில் வந்து கடை பரப்பி வாங்கியவற்றை அனைவரிடமும் காட்டிய போது, அனைவரின் கவனத்தையும் அவளே கவர்ந்தாள். கந்தசாமி கோயில் அருகில் எடுத்துச் சென்று மெருகேற்றலாம், ஆசிட் வைத்து துடைக்கலாம், விபூதி போட்டுத் துலக்கலாம் என்று எத்தனையோ யோசனைகள். கடைசியில் புளியைப் போட்டு தேய்ப்பது என்று முடிவெடுத்தவுடன் அம்மா உடனேயே வேலையில் இறங்கிவிட்டால். சில நிமிடத்துக்கெல்லாம் அவள் கன்னங்களில் சில பொன் நிறக் கிரணங்கள். அவற்றைக் கண்டவுடனேயே எனக்குக் கைகள் பரபரப்பாகிவிட்டன. தேங்காய் நார், விரல் நகம், ஸ்காட்ச் ப்ரைட், பழைய டூத் ப்ரஷ், அரிசி மாவு, உப்பு, புளி எல்லாம் கொண்டு சில மனி நேரம் கை நோகத் தேய்த்தும், பல இடங்களில் அவள் உண்மை நிறம் தென்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் என்ன தேய்த்தும் கருமை நீங்குவதாக இல்லை. 

எத்தனை ஆண்டு உறவோ? அந்தப் பந்தத்தை அறுக்க எலுமிச்சைதான் உதவியது. இரண்டு நாட்கள் நான்கு பேர் நாற்பது விதமாய் மாறி மாறி தெய்த்துவுடன் தென்பட்ட அழகில் மாய்ந்துதான் போனோம். வித விதமாய் மாட்டி, வித்தியாசமான கோணங்களில் கண்டு ரசித்தோம். அவள் நாசியும், உதடுகளும் என்னைக் கட்டிப் போட்டன. அவள் சிரிப்பு சிலர் கண்ணுக்குத் தெரியவில்லை. அவள் சோகம் சிலருக்குப் புரியவில்லை. 

கதவைப் பிடித்து இழுக்கப் பயன்படும் ஒரு சாதரண கைப்பிடிக்கா இத்தனை அழகு? எப்பேர் பட்ட ரசிகனின் கருத்தில் விளைந்த கவிதை அந்தக் கைப்பிடி! கைப்பிடியே இப்படியெனில் கதவு எப்படி இருந்திருக்கும்? கதவு இப்படி எனில், அக் கதவு இருந்த வீடோ கோயிலோ எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் எண்ணிக் களித்தோம். 

அவளை வெளியில் எடுத்துச் சென்று சூரியனுடன் உறவாட விட்டவுடன் அவள் பொன்னைப் பழிக்கும் விதமாய் பளபளக்க ஆரம்பித்தாள். அவளை கதவில், சுவரில், மரத்தில், பைப்பில் என்று கண்ட இடத்தில் எல்லாம் மாட்டி, வித விதமாய் படம்பிடிக்கவே வார இறுதி சரியாய்ப் போயிற்று. 

அவளைத் தாங்கவும், தடவவும், கொஞ்சவும்தான் எத்தனை போட்டி? அவள், அது, சிற்பம், bronze என்றெல்லாம் ஆளுக்கொரு வகையாய் அழைக்க, ‘ஒரு அழகான் பேராகப் பார்த்து வைக்க வேண்டும்’ என்றாள் அம்மா. அம்மா சொன்ன வாக்கியமே எனக்கு அவள் பெயரைக் காட்டிக் கொடுத்தௌ. ‘அழகி’ என்று பேரிட்டு மகிழ்ந்தோம். 

‘சங்க கால கல்வெட்டு’, ‘தமிழ் பிராமி நடு கல்’, ‘ஆயிரக் கணக்கில் கல்வெட்டுகள்’, ‘அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கப் பட்ட அழகுப் பெட்டகங்கள்’, என்றெல்லாம் கண்டுபிடித்தும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பவரிடையில், ஒரு கைப்பிடி, அதுவும் தொன்மை வாய்ந்ததென்று சொல்லிவிட முடியாது. ‘இதைக் கண்டு பிடித்தற்கா இப்படிக் குதிக்கிறாய்?’, என்றுதானே கேட்கிறீர்கள். 

அவளை நேற்று வார்ப்பில் இட்டு எடுத்தாய்த்தான் இருக்கட்டுமே? அவளிடம் அழகில்லையா என்ன? உங்களுக்கெபப்டித் தெரியும்? பாவம், நீங்கள்தான் அவளைப் பார்த்ததில்லையே. 

நான் கண்டெடுத்த அவள் இதோ உங்களுக்காக நிழல் வடிவில்.

 பார்த்து மகிழுங்கள்.

Read Full Post »