அது 1940-ஆம் வருடம். தன் அறையில் கையில் தியாகராஜர் கீர்த்தனையொன்றை வைத்துக் கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார் ஜி.என்.பி. அவரைத் தொந்தரவு செய்யாமல், அவரது மன ஓட்டத்தைக் கவனிப்போம்.
“வாஸ¤தேவா! என்று கூவியபடி வரும் இந்த துவார பாலகரைப் பாரீர்! இதுதான் பல்லவி. அந்த துவார பாலகன் கூவுகிறான் என்றால் அவன் உச்ச ஸ்தாயிலதானே பேசி இருக்க முடியும்? அப்படிப் பார்த்தா, தியாகராஜ ஸ்வாமியும் பாட்டை தார ஸ்தாயியில்தானே தொடங்கி இருப்பார்? இன்னிக்கு நமக்குக் கிடைக்கும் கீர்த்தனை வடிவம் தியாகராஜ ஸ்வாமி அமைத்தது போலதான் இருக்கணும்-னு இல்லையே. நிறைய பேர் இந்தப் பாட்டை மத்ய ஸ்தாயி பஞ்சமத்தில் தொடங்கி, மத்ய ஸ்தாயிக்கே பிரதானம் அளித்துப் பாடறா. கல்யாணியை எந்த ஸ்தாயியில் பாடினாலும், எந்த காலப்பிரமாணத்தில் பாடினாலும், எந்த ஸ்வரத்தில் நின்று பாடினாலும் அழகு சொட்டும்தான். ஆனாலும் பாட்டுக்கென்று ஒரு போக்கிருக்கில்லையா? தார ஸ்தாயி ஷட்ஜத்தில் தொடங்கி ‘வாஸ¤தேவா!” என்றால்தானே துவார பாலகனின் உற்சாகத்தைக் காட்ட முடியும். “வாஸ¤தேவா என்று கூவினான்” என்னும் வாக்கியத்தைப் பார்த்தால், ‘வாஸ¤தேவா’ என்னும் சொல் தார ஸ்தாயில தொடங்கி, ‘என்று’ என்ற சொல்லில் narator-இன் பேசுவது போல ஒரு இறக்கத்தை மத்ய ஸ்தாயில காட்டி, ‘கூவினான்’ என்ற சொல்லில் கூவுதலைக் காட்ட திரும்ப மத்ய ஸ்தாயியிலிருந்து தார ஷட்ஜத்துக்குக் கொண்டு போய் நிறுத்தினால்தானே பாட்டின் பாவம் முழுமையா வருது. பல்லவியை இப்படிப் பாடிதான் பார்ப்போமே”
‘ஏதாவுனரா’, ‘கமலாம்பா பஜரே’, ‘தல்லி நின்னு’, ‘நிதி சால’ என்று எத்தனையோ கல்யாணிகள் கோலோச்சும் வேளையில், எங்கேயோ உறங்கிக் கிடக்கும் பாடல் எப்படி மெருகேறி கச்சேரிக்குத் தயாராகிறது பாருங்கள்!
https://gaana.com/song/vasudevayani-raga-kalyani-g-n-balasubramaniam
“ஸாஸ ஸநிநிதபாப” என்று தொடங்கி பல்லவி கொஞ்சம் கொஞ்சமாக புது உரு பெறுகிறது. ‘வெடலின’ என்ற இடத்தில் ‘கநிதப’ என்றொரு சுழற்றலில் கல்யாணியின் அழகைச் சொட்ட விடுகிறார் ஜி.என்.பி. அனுபல்லவியோ இந்திரன் முதலான வானவர்கள் வாஸ¤தேவனைப் பூஜித்ததைக் குறிக்கிறது. பலர் பூஜிக்க வேண்டுமல்லவா? அதனால், ‘பூஜிதுடை’ என்ற இடத்தில் ‘‘மேல் ஷட்ஜத்தில்’ நின்று ஒருவரும், ‘மத்யம ஸ்தாயி நிஷாதத்தில்’ நின்று ஒருவரும், ‘தார ஸ்தாயி ரிஷபத்தில்’ நின்று ஒருவரும் பூஜிப்பது போல சங்கதிகள் மலர்கின்றன. ‘மிகவும் அழகாக நர்த்தனம் செய்து, எளியோரைக் காக்கும் ஹரியை போற்றுவதாகக்’ கூறும் சரணத்தில் ‘நிதா வேடுசுனு’ என்ற இடத்தில் ‘நிதா’-வை ஸ்வராக்ஷரமாக்கி, நிஷாதத்தை கொஞ்சமாக அசைத்து, கமகத்துடன் அந்த வரியை முடிக்கிறார். ‘ராக தாளத்துடன் பாடுவதைக் குறிக்கும்’ வரிகளுக்கு அனுபல்லவியில் போட்ட சங்கதிகளே கச்சிதமாய் பொருந்துகின்றன. துரிதமாகவும் இல்லாமல், சவுக்க காலப்ரமாணத்திலும் இல்லாமல், துவார பாலகனின் அழகிய நடனத்தைக் காட்டும் வகையில் மத்யம காலத்தில் பாடுகிறார் ஜி.என்.பி. கல்யாணி ராகத்தின் உத்திராங்கத்தின் அழகு முழுவதையும் வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு புதிய கீர்த்தனை தயாராகிவிட்டது.

வாஸுதேவயனி கீர்த்தனை எஸ்.ராஜம் கைவண்ணத்தில். ஜி.என்.பி நூற்றாண்டு மலருக்காக 2009-ல் வரைந்து கொடுத்த ஓவியம்.
மேற்கூறியது போலத்தான் கீர்த்தனையை ஆராய்ச்சி செய்து ஜி.என்.பி பிரயோகங்களையும், சங்கதிகளையும் அமைத்தாரா என்று கூறுவதற்கில்லை. எனினும், மேற்கூறிய வகையில்தான் அந்த கீர்த்தனையைப் பாடியிருக்கிறார் என்று உறுதியாகக் கூறலாம். அவர் கச்சேரி மேடைக்கு அறிமுகப் படுத்திய கீர்த்தனைகளை எடுத்து, கீர்த்தனையின் பாவத்தையும், அந்த கீர்த்தனையை அவர் கையாண்ட முறையையும் ஒப்பிட்டு நோக்கினோமெனில், அவர் பாடலை மெருகேற்றிய விதம் பாடலில் பொதிந்திருக்கும் பாவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஜி.என்.பி-யால் மெருகேற்றப் பட்டு, கச்சேரி மேடைக்கு வந்த பாடலை, 1940-ஆம் வருடம் 78 rpm இசைத் தட்டாக வெளியிட்டார். திரு. கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், திரு. பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம். மொத்தமே எட்டு நிமிட நேரத்திற்குதான் பதிவு செய்யக் கூடிய இசைத் தட்டில், ஒரு ராகம் பாடி, அதை கிரஹித்து வயலின் ராகம் வாசித்து, கீர்த்தனைகளை சங்கதிகளுடன் பாடி, கல்பனை ஸ்வரம் பாடி, தனி ஆவர்த்தனமும் கொடுத்து, கேட்பவருக்கு நிறைவையும் கொடுப்பதென்பது, ‘next to impossible’, என்பார்களே, அந்த வகையில் சேரும். அதை இந்தக் கூட்டணி செய்து காட்டியது என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன?
தார ஸ்தாயி ஷட்ஜமத்தில் தொடங்கி,கீர்த்தனையின் போக்கைப் போலவே ஆலாபனையிலும் கல்யாணியின் உத்தராங்கத்தையே பிரதானப்படுத்தி ஒன்றரை நிமிடத்துக்குள் ஜி.என்.பி-யின் அதிசயக் குரல் அழகான குழைவுகளுடனும், அளவான பிருகாக்களுடனும் படம்பிடித்துக் காட்ட, அந்த அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் முப்பது நொடிகளுக்குள் தன் வில் வித்தையை ராஜமாணிக்கம் பிள்ளை காட்டியவுடன் பாலக்காடு மணியையர் தனது மிருதங்கத்தின் தொப்பியை இரு முறை தட்டுகிறார். அதன் பின், தியாகராஜரின் பிரகலாத பக்தி விஜயத்தில் வரும் ‘வாஸ¤தேவயனி’ கீர்த்தனை புதுப் பொலிவுடன் பவனி வருகிறது. ‘சநிபதநி வாஸ¤தேவயனி’ என்று தொடங்கி கல்பனை ஸ்வரம் விறுவிறுப்பாக சில நிமிடங்களுக்குத் தொடர்கிறது. அதன் பின், சதுஸ்ர நடையை மூன்றாலும் ஐந்தாலும் இணைத்து சில ஆவர்த்தனங்களும், மின்னல் வேகத்தில் பரவும் வலக்கைக்குச் சம்பந்தமே இல்லாதது போல இடது கை ரஞ்சகமாய் சில குமுக்கிகளை உதிர்த்தபடி சில ஆவர்த்தனங்கள் என்று வாசித்து, இறுதியில் மோரா கோர்வை வைத்து, பாலக்காடு மணி ஐயர் ஒன்றரை நிமிடதுக்குள் ஒரு தனி ஆவர்த்தனம் வாசித்த பின், ஜி.என்.பி பல்லவியைப் பாடி பாடலை முடிக்கிறார்.
எத்தனை தலைமுறையினர், எத்தனை முறை இந்த ரிக்கார்டை கேட்டிருப்பார்கள்? “மாமா! உங்க காரில் வாஸ¤தேவயனி பாட்டு வருமா? இல்லைன்னா நான் உங்களோட வர மாட்டேன்”, என்று சொன்ன மூன்று வயது பாலகனை எனக்குத் தெரியும். பத்து நிமிடத்தில் ஒரு முழு கச்சேரி கேட்ட நிறைவை எப்படி இவர்களால் ஏற்படுத்த முடிந்தது என்று எண்ணி எண்ணி தூக்கம் வராமல் தவித்தவர்களுள் என் நண்பர்களும் சிலருண்டு. அப்படியிருக்கையில், 1940-ஆம் வருடத்தில் பத்தியாரம் ரூபாய் (இன்றைய கணக்குப் படி மாற்ற வேண்டுமானால், அந்த ஐந்து பூஜ்ஜியங்களுக்குப் பக்கத்தில் எத்தனை பூஜ்ஜியங்களைச் சேர்க்க வேண்டியிருக்குமோ?) ‘ராயல்டி-யாக’ மட்டும் ஜி.என்.பி-க்குக் கிடைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. “அவருடைய கடைசி காலம் வரையில் இந்த ரிக்கார்டின் மூலம் ராயல்டி பணம் வந்தபடியே இருந்தது”, என்கிறார் ஜி.என்.பி-யின் இளவல் பாலகிருஷ்ணன்.
“அவர் கொண்டு வந்த பாட்டுகளெல்லாம், அதுக்கு முன்னாடி எப்படியிருந்தது-னு கேள்வியே இல்லை! அதெல்லாம் நிக்கலை, ஜி.என்.பி கொண்டு வந்தது எல்லாம் காலத்தைக் கடந்து நின்னு இருக்கு!”, என்று பல தலைமுறை பாடகர்களை கேட்டிருக்கும் எஸ்.ராஜம் கூறிய போது, “உண்மைதான்! இல்லையெனில், ஜி.என்.பி மறைந்து பதினைந்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவனைப் அந்த 8 நிமிட கல்யாணி எப்படி பைத்தியமாய் அடித்திருக்க முடியும்?”, என்றெண்ணிக் கொண்டேன்!
இசையுலக இளவரசர் ஜி.என்.பி நூலில் இருந்து.
Read Full Post »