Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘history’ Category

2014-ல் தினமலரில் எழுதியது. பதிவுக்காக இங்கும் போட்டு வைக்கிறேன்

அபர்ணா பார்வதி’ என்று டி.ஆர்.சுப்ரமணியத்தின் கணீர் குரலில் நளினகாந்தி அலையடித்துக் கொண்டுஇருந்தது. நிறைய கேட்கக் கிடைக்கும் ராகம் என்றாலும், இந்தப் பாடலில் விவரிக்க முடியாத, ஒரு புத்துணர்வு நிரம்பி வழிந்தது.

யார் புனைந்த பாடலிது? கற்பனைக்குப் பெயர்போன டி.ஆர்.சுப்ரமணியத்தின் மற்றுமொரு அற்புத வெளிப்பாடோ என்று எண்ணிக் குழம்புகையில், ”இந்தப் பாடல், கல்யாணி வரதராஜனுடையது,” என்று அறிவித்தார். அப்போதுதான் அந்தப் பெயர் முதன் முதலில் என் காதில் ஒலித்தது.

42540278_263247444531011_5988844179260702720_n

பின்னர் ஒருமுறை அவரிடம், இதுகுறித்து கேட்கையில், ”ஆந்திரத்தில் வளர்ந்த தமிழ்ப் பெண்மணி. அவர் பம்பாயில் புனைந்த சமஸ்கிருதப் பாடலைத் தான் அன்று பாடினேன். தானுண்டு தன் இசை உண்டு என்று வெளியில் தெரியாத எத்தனையோ ரத்தினங்களில் இவரும் ஒருவர்,” என்றார். பம்பாயில் வானொலி நிலையத்தில் பணிபுரிந்து வந்த, கல்யாணி வரதராஜன் வாய்ப்பாட்டு, வயலின், வீணை மூன்றிலும் தேர்ந்து விளங்கினார்.

42532359_256637188526922_354650469131354112_n

பம்பாய்க்கு கச்சேரி செய்ய சென்ற, எஸ்.கல்யாணராமன், எஸ்.ராஜம், டி.ஆர்.சுப்ரமணியம் போன்ற மேதைகள், இவரைத் தேடிச் சென்று, இவர் பாடல்களைக் கற்று கச்சேரிகளில் பரப்பிஉள்ளனர். தேர்ந்த சமஸ்கிருதத்தைத் தவிர, தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் புனைந்திருக்கும் இவர் ஐந்தாம் வகுப்பு வரையே படித்தவர் என்றொரு குறிப்பு தெரிவிக்கிறது. எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களிலும் மற்ற ராகங்களிலும், பல்வேறு தெய்வங்களின் பெயரில், இவரது பாடல்கள் அமைந்துள்ளன.

அழகான ஸ்வராக்ஷரங்களும், கச்சிதமான சிட்டை ஸ்வரங்களும், இசையைக் குலைக்காத சாகித்யங்களும் இவர் பாட்டில் நிறைந்திருக்கின்றன, வர்ணங்கள், கீர்த்தனங்கள், தில்லானாக்கள், ராகமாலிகைகள் என்று ஒரு முழுக் கச்சேரியே, இவர் பாடல்களைக் கொண்டு மட்டும் செய்யக்கூடிய வகையில், 700க்கு மேலான பாடல்களைப் புனைந்து உள்ளார். துந்துபி, பானு கீரவாணி போன்ற கேட்கக் கிடைக்காத ராகங்களிலும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர், வடநாட்டு ராகங்களான த்விஜாவந்தி, மதுகவுன்ஸ், சந்திரகவுன்ஸ், குர்ஜரி தோடி போன்ற வற்றிலும் கீர்த்தனைகள் புனைந்து உள்ளார். இவர் கீர்த்தனைகளைத் தொகுக்கவும் பிரபலப்படுத்தவும் இவரது மருமகள் சரோஜா ராமன், டில்லி யில் இருந்தபடி பெருமுயற்சி எடுத்து வருகிறார். கல்யாணி வரதராஜனின் பேரன், டில்லி ஆர். ஸ்ரீனிவாசன் ஒரு சிறந்த மிருதங்க கலைஞர்.

துந்துபி, பானு கீரவாணி போன்ற கேட்கக் கிடைக்காத ராகங்களிலும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்று இருந்த இவர், வடநாட்டு ராகங்களான த்விஜாவந்தி, மதுகவுன்ஸ், சந்திரகவுன்ஸ், குர்ஜரி தோடி போன்றவற்றிலும் கீர்த்தனைகள் புனைந்துள்ளார்.

படங்கள்: கிருஷ்ணன் ராஜேந்திரம் (கல்யாணி வரதராஜனின் பேரன்)
கல்யாணி வரதராஜனே  பாடிய சில பாடல்கள் இங்கு உள்ளன:

Read Full Post »

கடந்த வாரம், ஜி.என்.பி-யின் 53-வது நினைவு நாளன்று, சென்னை ராகஸுதா அரங்கில், என் ”இசையுலக இளவரசர்” புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது.

அதையொட்டி, அன்று ஜி.என்.பி-யின் இசையைப் பற்றி ஓர் உரையை பவர்பாயிண்ட் உதவியுடன் வழங்கினேன்.

அந்த உரையை மேலுள்ள சுட்டியில் காணலாம்.

புத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.

Read Full Post »

2006-ல் என் இசையுலக இளவரசர் ஜி.என்.பி நூல் விகடன் பதிப்பாக வெளியானது.

2010-ல் ஜி.என்.பி-யின் நூற்றாண்டின் போது கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஸ்ருதி மாத இதழில் அதன் மொழியாக்கத்தை திரு.ராம்நாராயண் வெளியிட்டார். அந்த சமயத்தில்தான் ஜி.என்.பி-யின் நூற்றாண்டு மலரை (கந்தர்வ கானம்) வெளியிட்டோம். மலரின் உள்ளடக்கம் பெரும்பாலும் ஆங்கிலட்டில் என்படாலும், தமிழ் நூல் எழுடி முடித்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்ததாலும், ஸ்ருதியில் வெளியான மொழியாக்கத்தை வெளியிட முனைப்பிருக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் ராம்நாராயண் அழைத்தார். சமீபத்தில் அந்த மொழியாக்கத்தைப் படித்துப் பார்த்த போது அது ஜி.என்.பி-யைப் பற்றிய எளிய அறிமுக நூலாக இருக்கக்கூடும் என்றும், அதை வெளியிட விரும்புவதாகவும் கூறினார்.

நூல் வெளியாவதில் மகிழ்ச்சிதான் என்றாலும், அந்தப் பதிப்பு அவர் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்கு. மூன்று நான்கு முறை வெவ்வேறு வகையில் கூறியும் ராம்நாராயண் விடுவதாய் இல்லை. அவர் ஜாதக பலன் அவரைக் காக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன்.

நூல் சில வாரங்களுக்கு முன் வெளியாகியுள்ளது.

புத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.

மே 1 ஜி.என்.பி-யின் நினைவு தினம். சென்னை ராக சுதா அரங்கில் ஒரு நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. அன்று ஜி.என்.பி-யின் இசையின் பரிமாணங்கள் பற்றி அவர் கச்சேரி பதிவுகளின் உதவியுடன் ஓர் விளக்கவுரையை அளிக்க உள்ளேன்.

IMG_4157

அரங்கிலும் புத்தகத்தை வாங்கிக் கொள்ள முடியும்.

 

 

Read Full Post »

இலக்கியங்களும், கல்வெட்டுகளும் முழவு, தண்ணுமை, மத்தளம், இடக்கை, முரசு, பறை, குடமுழா முதலிய பல்வேறு தோலிசைக் கருவிகளைச் சுட்டுகின்றன. இவற்றுள், இசைக்கும் ஆடலுக்கும் பயன்படுத்தப்பட்ட கருவிகளுள், முழவு, தண்ணுமை, மத்தளம் ஆகிய கருவிகளைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாய் கிடைக்கின்றன.இம் மூன்றில், முழவும் தண்ணுமையும் சங்க இலக்கியங்களிலேயே இடம் பெருகின்றன. ‘முழவு’ என்ற சொல் தாளக் கருவிகளைச் சுட்டும் பொதுச் சொல்லாகவும், ஒரு குறிப்பிட்ட கருவியைச் சுட்டும் சொல்லாகவும் இடம் பெருகிறது. சிலப்பதிகார காலத்தில், தாளக் கருவிகளுள் ‘தண்ணுமை’ தலைமைக் கருவியாய் விளங்கியது.

“ஈர்ந்தண் முழவு”, “மண்ணார் முழவு”, “முழவு மண் புலர” போன்ற குறிப்புகள் முலம் தண்ணீரால் தோலைப் பதப்படுத்தி இனிய ஓசையை எழுப்பியதையும், தோலில் ஒருவகை பசை மண்ணை இட்டு முழக்கியதையும், இம் மண் காலப்போக்கில் வரண்டு உதிர்ந்ததையும், உணரமுடிகிறது என்று ‘மத்தளவியல்’ என்ற நூலில் முனைவர் வி.ப.க.சுந்தரம் கூறுகிறார். பதிற்றுப்பத்து கூறும் “பண்ணமை முழவு”, சீவக சிந்தாமணி நச்சினார்க்கினியர் உரை கூறும் “இடக்கண் இளியாய் வலக்கண் குரலாய்”, ஆகிய தொடர்கள் மூலம் பண்டைய காலத்திலேயே முழவிசைக் கருவிகளில் ஸ்ருதி சேர்க்கப்பட்டன என்றும் முனைவர் சுந்தரம் கூறுகிறார்.

இலக்கியங்களில் மத்தளம் என்ற சொல்லை முதன் முதலில் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகத்தில்தான் காண முடிகிறது. சிலபெருமானின் ஆடலுக்கு ஏற்ற தாளக் கருவிகளுள் ஒன்றாக மத்தளம் இடம் பெருகிறது. சீனிவாசநல்லூர், திருவையாறு, கோனேரிராஜபுரம் முதலிய பல ஊர்களில் கிடைக்கும் சோழர் காலக் கல்வெட்டுகள் மத்தளம் முதன்மை இசைக் கருவியாய் விளங்கியதைக் குறிக்கின்றன. சோழர் காலச் சிற்பங்களிலும் ஏராளமான அளவில் மத்தளங்கள் என்று அறிஞர்களால் சுட்டப்படும் கருவிகள் காணக் கிடைக்கின்றன.

கோயில் சிற்பங்களை ஆழ்ந்து நோக்கின் ஆடலுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகளிள் குடமுழவும், இடக்கையுமே அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக் நடராஜர் சிற்பங்கள் உள்ள தொகுதிகளில், சிவபெருமானின் ஆட்டத்துக்கு ஏற்ப இசைக்கப்படும் கருவியாக குடமுழா இடம் பெருகிறது. மற்ற ஆடல் சிற்பங்களில் பக்கவாத்தியமாய் அதிகளவில் காணப்படும் இடக்கையே. “நடுவில் குறுகியும், பக்கங்களில் பெருத்தும் காணப்படும் இக் கருவியின் வார்களை இழுத்தும் தளர்த்தியும், அதிலிருந்து எழுந்த ஒலியை கட்டுப்படுத்தியுள்ளனர்”,என்று இடக்கையைப் பற்றி குறிப்புகள் கிடைக்கின்றன. குடந்தை நாகேஸ்வரன் கொயில் முதலான இடங்களில் உள்ள சிற்பங்களும் இந்த வடிவில் கிடைக்கின்றன. இவை தவிர, நடுவில் அதிக குறுக்கம் இல்லாத கருவிகளும் நிறையவே காணக் கிடைக்கின்றன. உதாரணமாக, தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள இந்தச் சிற்பத்தைச் சொல்லலாம். இந்த வாத்யத்தையும் இடக்கை என்றே அறிஞர்கள் சுட்டுகின்றனர்.


கையால் முழக்கியதோடன்றி, குணில் என்ற வளைந்த குச்சியாலும் இவ்வாத்தியத்தை முழக்கியிருப்பதை சிற்பங்கள் உணர்த்துகின்றன. ஒரு முகப் பறைகளுள் ஒன்றாக அறியப்படும் இக் கருவி பல்லவர் காலம் தொட்டு, பல்வேறு சிற்பத் தொகுதிகளில் காணக் கிடைக்கின்றது. வாத்தியங்கள் குறித்து விரிவாகப் பேசும் கல்வெட்டுகளில் இடக்கை என்ற கருவியின் (நான் கண்ட வரை) இடம் பெறவில்லை. இடக்கையின் மற்றொரு பெயர் என்று ஆளவந்தார் சுட்டும் ஆவஞ்சியும் கல்வெட்டுகளில் இடம் பெறவில்லை.

ஆலயச் சிற்பங்களைப் பார்க்கும் போது இந் நாளில் மிருதங்கம் என்று நாம் குறிக்கும் கருவியின் வடிவிலேயே பல நூற்றாண்டுகளுக்கு முன் கருவிகள் இருந்திருப்பதும் தெரிய வருகிறது. குடந்தை சாரங்கபாணி கோயிலின் கோபுர வாயிலில் காணப்படும் இந்தச் சிற்பத்தில் உள்ள வாத்தியத்தின் அமைப்பின் மூலம் இதை உணரலாம்.

வரலாற்றாய்வாளர்கள் இரு பக்கம் முழக்கும் கருவிகள் அனைத்தையுமே மத்தளம் என்ற பொதுச் சொல்லில் அடக்கிவிடுகின்றனர். அளவிலும், அமைப்பிலும் வேறு படும் கருவிகளைப் பலவற்றை நம் கோயில் சிற்பங்கள் சித்தரிக்கின்றன. உதாரணமாக லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலில் உள்ள அம்மன் கோயில் வெளிப் புறச் சுவரில் உள்ள பூத வரியில் உள்ள இந்தச் சிற்பத்தில் உள்ள இந்தக் கருவி, நடுவில் பெருத்தும், முனைகளில் சிறுத்தும், இரு புறங்களை வார் கொண்டு இணைத்தும் காணப் படுகிறது. இன்று கச்சேரிகளில் வாசிக்கப்படும் மிருதங்கத்தும் இந்தச் சிற்பத்தில் உள்ள கருவிக்கும் வித்தியாசம் காண்பது கடினம்.

திருச்சி அருகில் உள்ள அல்லூரில் காணப்படும் இந்தத் தொகுதியில் வெவ்வேறு அமைப்புகள் கொண்ட தாள வாத்தியக் கருவிகள் உள்ளன. ஆடலுக்குத் துணையாக இசைக்கப் படும் இம் மூன்று கருவிகளையுமே அறிஞர்கள் மத்தளம் என்றே குறிக்கின்றன. இந்தச் சிற்பத் தொகுதி போன்று எண்ணற்ற தொகுதிகள் தமிழகெமெங்கும் காணக் கிடைக்கின்றன.

இன்று தவில், பக்வாஜ், டோலக், மிருதங்கம் என்றெல்லாம் நாம் வகைப் படுத்திக் கூறுவது போல, அந் நாளில் வாத்தியங்களை எப்படி வகைப்படுத்தினர் என்பதை குழப்பமின்றி உணர ஆய்வுகள் மேற்கொள்ளுதல் அவசியம்.

இன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தமிழகத்தில் தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன. மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தன.

கருவிகள் பற்றிய இந்த அறிமுகத்தோடு இன்றைய மிருதங்கத்துக்கு வருவோம்.

‘மிருத்+அங்கம்’ என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு ’மண்ணை அங்கமாகக் கொண்டது’ என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர்.

வலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும். கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் ஸ்ருதி வாத்யம் ஆகிறது. அதாவது பாடகரின் ஸ்ருதியிலேயே மிருதங்கத்தின் ஸ்ருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு. தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் ஸ்ருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது.

கடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் ‘மிருதங்கம்’ தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின.

கடந்த 250 ஆண்டுகளுக்குள் மிருதங்க வாசிப்பில் இரு வழிகள் துவங்கி, பெரிதும் வளர்ந்துள்ளன. இவற்றை ‘தஞ்சாவூர் வழி’ என்றும் ‘புதுக்கோட்டை வழி’ என்றும் குறிப்பர். இந்த வழிகள் தோன்றிய விதம், இரண்டுக்கும் உள்ள வேற்பாடு, இவ்விரு வழியிலும் தலை சிறந்து விளங்கியவர்கள் பற்றி கிடைக்கும் தகவல்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

Read Full Post »

1 Pazani Subramaniam Pillaiஒரு வயதான இசை ரசிகரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் பழைய கிராம·போன் தட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தார். என் கண்ணில் முதலில் பட்ட தட்டு “கந்தன் கருணை புரியும் வடிவேல்”. எனக்கு மதுரை மணியின் பாட்டின் மேல் அலாதி பிரியம் என்பதால் அந்தத் தட்டை எடுத்தேன்.

“அட! கந்தன் கருணையா! மதுரை மணியும் பழநி சுப்புடுவும் என்னமாய்ப் பாடியிருக்கிறார்கள்.”, என்றார் பெரியவர்.

“பழநியா பாடியிருக்கார்? மதுரை மணியோட வேம்பு ஐயர்தானே பாடுவார். பழநி மிருதங்க வித்வான் இல்லையா?”, என்றேன் குழப்பத்துடன்.

“மிருதங்கமானா என்ன? அதில் பாட முடியாதா”, என்று சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ரிக்கார்டைப் பாடவிட்டார்.

பாடலைக் கேட்டவுடன்தான் உண்மை புரிந்தது. “கோல மயில் நடம் கொஞ்சிடும் செவ்வேல்”, என்ற வரியில் பாடல் கூறும் கொஞ்சல்கள் அனைத்தையும் மிருதங்கத்தின் தொப்பியில் வெளிப்படுத்துவதென்பது மனிதனால் ஆகக் கூடியதா? “அண்டம் ஆண்டிடும் ஆதி மகள்” என்ற அடியில்தான் எத்தனை சங்கதிகள். ஒவ்வொரு சங்கதிக்கும் , அந்த சுநாதத் தருவின் வலந்தலையில் இடது கையும், தொப்பியில் வலது கையும் – ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல தன்னிச்சையாய்ச் சிதறவிடும் நாதத் திவலைகள்தான் எத்தனை. உச்சஸ்தாயியில் “அன்னை பராசக்தி அருள் சுடர்வேல்” என்று பாடல் ஒலிக்க, நீண்டு ஒலிக்கும் ரீங்கார ஒலியான தீம்காரம், ஓம்காரமாய் ஒலிக்கும் போது கேட்ட ஒருவரும் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது. எப்பேர்ப்பட்ட வாசிப்பு! இல்லை இல்லை. எப்பேர்ப்பட்ட பாட்டு பழநியின் மிருதங்கத்திலிருந்து!

2 manpoondiya Pillai and Muthiah Pillai“இப்படிப்பட்ட வாசிப்பு வெளிச்சத்துக்கு வர எவ்வளவோ தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது என்று நினைத்தால்தான் வியப்பாக இருக்கிறது.”, என்று பெருமூச்சு விட்டார் பெரியவர்.

எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே பழநி மறைந்து விட்டார் என்ற போதிலும், “ஸொகஸ¤கா மிருதங்க தாளமு” என்ற பதத்தைக் கேட்கும் போதெல்லாம் பழநியின் ஞாபகம்தான் வரும். மரபிசை வாத்தியமான தவிலை அடிப்படையாகக் கொண்டு, புதுக்கோட்டை பாணியை நிறுவியவர் மான்பூண்டியா பிள்ளை. அவரின் பிரதம சிஷ்யர்களுள் ஒருவர் பழநி முத்தையாப் பிள்ளை. தவில், மிருதங்கம், கஞ்சிரா என்று லயக் கருவிகள் பலவற்றில் சிறந்த ஆளுமை கொண்டிருந்த முத்தையாப் பிள்ளையின் மகனாகப் பிறந்த பழநிக்கா தடைகள் எழுந்திருக்க முடியும்? என் சந்தேகத்தை பெரியவரிடம் கேட்டேன்.

3 Dakshinamurthy Pillai“முத்தையாப் பிள்ளைக்கு இரு மனைவியர். பழநி பிறந்த சில வருடங்களிலேயே தாயாரை இழந்தார். அதன் பின் மாற்றாந்தாயின் பராமரிப்பு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவா வேணும். பழநி கதையைத் தொடருவதற்கு முன், உன்னை ஒரு கேள்வி கேட்கறேன். கிரிக்கெட்டின் தலை சிறந்த ஆட்டக்காரர்களின் பட்டியலில் சோபர்ஸ், கில்கிரிஸ்ட், லாரா, அக்ரம் போன்ற இடக்கையர்களுக்கு இடம் இல்லை என்றால் ஒப்புக் கொள்ள முடியுமா?”

“இவர்கள் இல்லாமல் கிரிக்கெட்டா? என்ன அபத்தம் இது.”

“நீ சொன்ன அபத்தம்தான் பழநியின் வாழ்க்கையில் விளையாடியது. அவருக்கு இடது கைப்பழக்கம். அதை அமங்கலமாக நினைத்து பழநிக்கு சொல்லித் தர மறுத்துட்டார் முத்தையாப் பிள்ளை. அவருடைய இன்னொரு மகனான சௌந்தரபாண்டியனையே இசை வாரிசாகக் கருதினார். சௌந்தரபாண்டியனுக்கு அப்பா சொல்வதைக் கேட்டு, அப்பா வீட்டில் இல்லாத சமயம் சாதகம் செய்வாராம் சுப்ரமணிய பிள்ளை. அப்படி ஒரு முறை வாசித்ததை தட்சிணாமூர்த்தி பிள்ளை கேட்க நேர்ந்தது.”

“புதுக்கோட்டை மஹாவித்வான் தட்சிணாமூர்த்தி பிள்ளையா!”

“அவரேதான். பழநியின் வாசிப்பைக் கேட்டவர் நேராக முத்தையாப் பிள்ளையிடம் சென்று, “முத்தையா, இந்தப் பிள்ளையை சாதாரணமாக நினைக்காதே. உன் குலம் விளங்கப் போவதும் உன் பெயர் நிலைக்கப் போவதும் இவனால்தான். இந்தப் பையனுக்குச் சொல்லிக் கொடு. நீ சொல்லிக் கொடுக்க முடியாதென்றால் என்னிடம் அவனை விட்டு விடு”, என்று கறாராக உரைத்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற மஹா வித்வானே பரிந்துரை செய்த போது முத்தையாப் பிள்ளையால் சொல்லித் தராமல் இருக்க முடியவில்லை. ஒன்றுமே சொல்லிக் கொடுக்காத காலம் போய், பழநியை அதீதமான பயிற்சியில் ஈடுபட வைத்தார் முத்தையாப் பிள்ளை. விடியற் காலை நாலு மணிக்கு எழுந்தாரெனில் இரவு பத்து மணிக்கு தூங்கச் செல்லும் வரை பயிற்சிதான். வேறு சிந்தனைக்கே வழியில்லை. பயிற்சியின் போது சிறு தவறு செய்தாலும் பிரம்புப் பிரயோகம் தயாராயிருக்கும். இந்தப் பயிற்சியே, மனதில் எழுந்த அனைத்தையும் கையில் பேச வைக்கும் ஆற்றலை பழநிக்குக் கொடுத்து.”

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பழநி புயல் போல புறப்பட்டிருக்க வேண்டுமே. 1908-ல் பிறந்த பழநி , 1930-களில்தானே அவர் முன்னணி வித்வானாக அறியப்படுகிறார்.” என்று சந்தேகங்களைத் தொடர்ந்தேன்.

4 young pazani“நல்ல பயிற்சி இருந்தால் மட்டும் முன்னுக்கு வந்துவிட முடியுமா? பழநிக்கு முந்தைய தலைமுறை முதன்மைப் பாடகர்கள் எல்லாம் லய நிர்ணயத்துக்கு பெயர் போனவர்கள். காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளையின் ‘full bench’ கச்சேரிகளில் லய யுத்தமே நடக்கும். பழநி பதினைந்து பதினாறு வயதிருக்கும் போதே நாயினா பிள்ளைக்கு வாசிக்கத் தொடங்கிவிட்டார். பழநி அரங்குக்கு வந்த நேரத்தில் லய விவகாரங்களில் ஈடுபட்டு பாடுபவர்கள் குறைவாகத்தான் இருந்தனர். சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளைக்கோ, ஆலத்தூர் சகோதரர்களுக்கோ, செம்பைக்கும் அரியக்குடிக்கும் இருந்த அளவுக்கு கச்சேரிகள் இல்லாத காலம் அது. போதாக் குறைக்கு பழநியின் இடது கைப் பழக்கம் வேறு அவருக்கு பெரிய தடையாய் அமைந்தது.”

“அந்தக் காலத்திலேயே அம்மாப்பேட்டை பக்கிரி போன்ற மேதைகள் இடது கைப்பழக்கமுடையவர்கள் என்ற போதும் தவில் உலகில் முடிசூடா மன்னர்களாக இருந்திருக்கிறார்களே! தவிலுக்கு ஒரு சட்டம் மிருதங்கத்துக்கு ஒரு சட்டமா இருந்தது.”, என்று மடக்கினேன் பெரியவரை.

“தவிலைப் பொறுத்த மட்டில் எத்தனையோ இடது கைப்பழக்கமுடைய வித்வான்கள் பெரும் புகழோடு இருந்திருக்கிறார்கள். மேடைக் கச்சேரிகளில் பாடகருக்கு வலப் புறத்தில் மிருதங்கக்காரரும், இடப் புறத்தும் வயலின் வித்வானும் அமர்வது மரபு. இது மிருதங்கம் வாசிப்பவர் வலக்கையர் எனில் சரியாக இருக்கும். மிருதங்கம் வாசிப்பவர் இடக்கையர் எனில் இந்த அமைப்பின் படி உட்கார்ந்தால் மிருதங்கத்தின் தொப்பி சபையை நோக்கி இருக்கும். ஸ்ருதியுடன் ஒலிக்கக் கூடிய வலந்தலை சபையை நோக்கி இல்லாவிடில் நாதம் கேட்க நன்றாயிருக்காது. பழநி வாசிக்க வந்த காலத்தில் வயலின் கலைஞர்கள் பலர், மரபுப்படிதான் உட்காருவோம் என்று முரண்டு பிடித்தனர். எவ்வளவுதான் உயர்ந்த வாசிப்பாக இருந்த போதும், எதற்கு வம்பு என்று கச்சேரி அமைப்பாளர்களும் பழநியை ஒதுக்கினர்.”

“என்ன அநியாயம். பழநியின் வாசிப்புக்கா இத்தனை தடைகள்”, என்று வியந்து போனேன்.

“பழநியின் வாசிப்பைக் கேட்கக் கூட பேறினை பெற்றதற்கு, செம்பைக்கும் பாலக்காடு மணி ஐயருக்கும் ஏற்பட்ட சிறு மனத்தாங்கலுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். துணைவியார் கோலார் ராஜம்மாளின் உந்துதலில் செம்பையைச் சந்தித்த பழநியிடம், இரண்டு நிபந்தனைகள் விதித்தார் செம்பை. ஒன்று, “சில நாட்களுக்கு கச்சேரிக்கு இந்த rate-தான் வேண்டும் என்று கேட்கக் கூடாது.” மற்றொன்று, “கணக்கு வழக்குகளை அளவுக்கு மீறி வாசிக்காமல், சௌக்கியமாக வாசிக்க வேண்டும்.” இந்த இரண்டுக்கும் பழநி இசைந்ததால், செம்பையுடன் சேர்ந்து ஏராளமான கச்சேரிகள் ஏற்பாடாயின. செம்பையைப் போன்ற மூத்த வித்வான் சொல்லை மீற முடியாததால், வயலின் வித்வான்களுக்கு விருப்பம் இல்லை என்ற போதும், இடம் மாறி அமர்ந்து பழநியுடன் வாசித்தனர். செம்பை பாகவதர், பழநியின் திறமையை எப்படி எல்லாம் வெளிக் கொணரலாம் என்று யோசித்து உரியன செய்தார். ஒரு கச்சேரியில் ஐந்து முறை பழநியை தனி ஆவர்த்தனம் வாசிக்க வைத்து மகிழ்ந்தார் அந்தப் பெருந்தகை. இரண்டே வருடத்தில் அத்தனை முன்னணி பாடகர்களும் விரும்பிச் சேர்த்துக் கொள்ளும் பக்கவாத்தியக்காரராக வளர்ந்தார் பழநி.”

“1930-களில் செம்பைக்கு வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து பழநிக்கு ஏறு முகம்தான் என்று கூறுங்கள். பழநியின் வாசிப்பில் உள்ள பிரத்யேக அம்சங்கள் எவை?.”
5 Chembai Sundaresa Iyer and Pazani
“பழநியின் வாசிப்பில் வலது கையும் இடது கையும் சேர்ந்து ஒலிக்கும் சொற்கள் நிறைந்து இருக்கும். அவர் சிஷ்யர்களுக்கு பாடம் எடுக்கும் போதெல்லாம், “ஒத்தக் கை வாசிப்பு வாசிக்காதே ஐயா”, என்று சொல்லிக் கொண்டே இருப்பாராம். சுலபமான சொற்கட்டுகளைக் கூட அவர் வாசிக்கும் போது கர்ணாம்ருதமாய் ஒலிக்கும். பாட்டுக்கு வாசிப்பது என்ற விஷயத்தில் பழநிக்கு நிகர் பழநிதான். பாட்டை அப்படியே சங்கதிக்கு சங்கதி வாசிக்காமல், அழகாக இட்டு நிரப்பி, வித விதமாய் நடைகளால் நகாசு செய்வது அவர் தனிச் சிறப்பு. காண்டாமணி போன்ற நாதத்தை உதிர்க்கும் அவர் வலந்தலையில் அரைச் சாப்பும், முழுச் சாப்பும் முழுமையாய் வந்து விழும் அழகே தனி. அவருடைய டேக்கா சொற்களில் ஒலிக்கும் தெளிவுக்கு ஈடாக இன்னொன்றை சொல்ல முடியாது.”

“பழநியின் இத்தனைச் சிறப்பைச் சொன்னீர்கள், ஆனால் உலகமே வியக்கும் அவரது கும்காரங்களைப் பற்றி சொல்லவே இல்லையே”.
“காரணமாய்த்தான் சொல்லவில்லை. சொல்ல முயன்றாலும் சொல்லிவிட முடியுமா என்ன? வார்த்தைகளில் வர்ணிக்கக் கூடிய விஷயமா அது? மிருதங்கத்தின் நாத விசேஷமே தொப்பியின் ஒலியில்தான் இருக்கிறது. தொப்பியை ரொம்ப இறக்கி வைத்துக் கொண்டால் முடக்கு விழுந்துவிடும். பழநி தன் மிருதங்கத்தில், வலந்தலையின் சேர்ப்பது போல, தொப்பியிலும் அனைத்து கண்களிலும் ஒரே விதமான ஒலி எழுமாறு ஸ்ருதி சேர்ப்பார். இதனால் அவரது தொப்பியின் நாதமே அலாதி. அதிலும், தேய்ப்புச் சொல்லான கும்கியை அவர் வாசிக்கும் போது மயங்காதவரே இல்லை எனலாம். மிருதங்க மேதையான பாலக்காடு மணி ஐயரே பழநியின் கும்கிக்கு ரசிகர் என்றால் பார்த்துக் கொள்ளேன்.”

“பாலக்காடு மணி ஐயரும் பழநி சுப்ரமணிய பிள்ளையும் சேர்ந்து கூட பல கச்சேரிகளுக்கு வாசித்திருக்கிறார்களாமே.”

“முத்தையாப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை போலவே, பழநியும் மிருதங்கத்தைத் தவிர கஞ்சிராவிலும் சிறந்த ஆளுமையைப் பெற்றிருந்தார். மணி ஐயருடன் சேர்ந்து அவர் வாசிக்கும் போதெல்லாம் பொறி பறக்கும். பழநியின் தனி ஆவர்த்தனங்களில் அவரின் ஆழ்ந்த தேர்ச்சியும், அபரிமிதமான கற்பனைகளும் அழகாக பவனி வரும். எத்தனையோ தீர்மானங்களையும் கோர்வைகளையும் புனைந்தவர் பழநி. குறிப்பாக திருப்புகழ் அமைந்திருக்கும் சந்த தாளங்களுக்கு பழநி வாசிக்கும் அழகைச் சொல்லி மாளாது. அவர் கதி பேதம் செய்யும் போது, எந்த நடையை வாசிக்கிறாரோ, அந்த நடையில் அட்சரத்துக்கு எத்தனை மாத்திரை உண்டோ அதை வெளிப்படையாகக் காட்டாமல், திஸ்ர நடையில் சதுஸ்ரம் அமைத்தல், கண்ட நடையில் சதுஸ்ரம் அமைத்தல், என்று நடையை அமைப்பதில் பல புரட்சிகளைச் செய்தவர் பழநி” என்று நிறுத்தாமல் பொழிந்தார் பெரியவர்.

“அவரின் மற்றொரு பங்களிப்பு என்று அவர் உருவாக்கியுள்ள சிஷ்யர்களைச் சொல்லலாம். எம்.என்.கந்தசாமி பிள்ளை, டி.ரங்கநாதன், பள்லத்தூர் லட்சுமணன், பூவாளூர் வெங்கடராமன், திருச்சி சங்கரன், உடுமலை மயில்சாமி, கே.எஸ்.காளிதாஸ் போன்ற எண்ணற்ற சிஷ்யர்களை உருவாக்கி இன்று நிலைத்து நிற்கக் கூடிய பாணியாக புதுக்கோட்டை பாணியை நிறுவிய பெருமை பழநியையே சேரும்.”

“சங்கீத கலாநிதி, ஜனாதிபதி விருது போன்ற பட்டங்களுக்கு பழநியை அலங்கரிக்கக் கொடுத்து வைப்பதற்கு முன், இள வயதிலேயே அவர் மறைந்தது சங்கீத உலகுக்கு பெரும் இழப்பு. இந்தப் பட்டங்களை விட மேலான கௌரவம் பழநியின் சிஷ்யர்கள் வருடம் தவறாமல் செய்து வரும் குரு பூஜையாகும். பிறந்து நூறாண்டுகள் ஆன பின்னும், மறைந்து 47 ஆண்டுகள் ஆன பின்னும், வருடா வருடம் பழநியின் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. இதை விட வேறென்ன பெருமையை ஒருவர் அடைந்துவிட முடியும்”, என்றார் பெரியவர் தன்னை மறந்து.

பழநியின் நினைவில் மூழ்கிவிட்ட அவரை எழுப்ப மனமில்லாமல் மௌனமாகக் கிளம்பினேன் என் வீட்டுக்கு.

Read Full Post »

சங்கீத கலாநிதி ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் சங்கீதத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு, ஐம்பது வயதைத் தாண்டிய எவரைக் கண்டாலும், “ஜி.என்.பி-யை நேரில் பார்த்ததுண்டா?”, என்று கேட்பேன். அவர் இசையின் மேல் காதல் கொண்டிருந்த எனக்கு, 2003-ல் ஜி.என்.பி-யின் கடைக் குட்டியான திரு.ஜி.பி.இராஜசேகரின் அறிமுகம் கிடைத்தது. எண்ணற்ற வார இறுதிகளை அவர் இல்லத்தில் ஜி.என்.பி-யைப் பற்றி பேசியும், இசையைக் கேட்டும், ஜி.என்.பி தொடர்பாக அவர் குடும்பத்தாரிடம் இருந்த தொகுப்புகளைப் புரட்டியபடியும் கழித்திருக்கிறேன்.

அப்போதுதான், ஸ்ருதி ·பௌண்டேஷன் ஜி.என்.பி-யைப் பற்றி நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கின் விடியோ பதிவுகளைப் பார்க்க நேரிட்டது. பல மணி நேரம் செல்லக் கூடிய அந்த விடியோவில் எங்கோ ஒரு மூலையில், 1964-ல் கிருஷ்ண கான சபா வெளியிட்ட மலரைப் பற்றிய குறிப்பினை திரு. சஞ்சய் சுப்ரமணியத்தின் பேச்சு பதிவு செய்திருந்தது. அன்று தொடங்கி எங்காவது இந்தப் பாராட்டு மலர் கிடைக்குமா என்று சல்லடை போட்டுத் தேடத் தொடங்கினேன்.

வெளியிட்ட கிருஷ்ண கான சபையை அணுகியதும், அவர்களிடமும் ஒரு பிரதி கூட இல்லாததை அறிந்தேன். பல நாட்கள் தேடிய பின், ஜி.என்.பி-யின் குடும்பத்தினரின் சேகரிப்பிலேயே பிரதியின் xerox copy இருந்ததை அறிந்து நானும் ஒரு பிரதி பெற்றுக் கொண்டேன். திரு. ராஜமாணிக்கம் பிள்ளை, திரு. லால்குடி ஜெயராமன் போன்ற அரிய கலைஞர்களும், ஜி.என்.பி-யுடன் நெருங்கிப் பழகியர்கள் பலரும் எழுதியிருக்கும் கட்டுரைகளை படித்து மகிழ அந்த பிரதியே போதுமானதாக இருந்தது. இருப்பினும், பொக்கிஷமாய்ப் போற்றத் தக்க பல அரிய புகைப்படங்களை ரசிக்க என் பிரதி போதுமானதாக இல்லை. எங்கேனும் நல்ல பிரதி கிடைக்குமா என்ற தேடல் தொடர்கதையாகவே மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

2006-ல் விகடன் பிரசுரத்தார் அளித்த வாய்ப்பால் ஜி.என்.பி-யைப் பற்றி புத்தகம் எழுதத் தொடங்கினேன். பழைய இதழ் படிகளிலிருந்தும், நேர்காணல்கள் மூலமாகவும், ஜி.என்.பி-யின் பதிவு செய்யப்பட்ட இசைக் கச்சேரிகளில் இருந்தும், எழுத ஏராளமாய் விஷயங்கள் கிடைத்தன. இருப்பினும், புகைப்படங்கள் இல்லா புத்தகம், நெய்யில்லா சர்க்கரைப் பொங்கல் போன்றல்லவா மணமற்று இருக்கும்? 1965-ல் மறைந்துவிட்ட மாமேதையின் புகைப்படங்களோ அதிகம் கிடைக்காத நிலையில், கிருஷ்ண கான சபை வெளியிட்ட பாராட்டு மலரில் உள்ள படங்களையே நம்ப வேண்டிய நிலைக்கு ஆளானோம்.

சென்னை, பெங்களூர், ஐரோப்பா, அமெரிக்கா என்று உலகம் முழுவதும், இசையில் இருந்த ஈடுபாட்டால் உருவான எனது நண்பர் கூட்டமே இந்த மலரின் பிரதியைத் தேடத் தொடங்கியது. பல நாட்களுக்குப் பின், ஜி.என்.பி பக்தர் என்று கொள்ளக் கூடிய திரு.சிவராமகிருஷ்ணனை புத்தகத்துக்காக பேட்டி காணச் சென்றேன். பேட்டி முடிந்து கிளம்பும் தருவாயில், தன்னிடம் 1964-ல் வெளியான மலரின் பிரதி இருப்பதை திரு.சிவராமகிருஷ்ணன் தெரிவித்த போது என் கால்கள் தரையில் இல்லை.

ஒரு வழியாய் பிரதி கிடைத்த போதும், பல கை மாறி இருந்த புத்தகத்தின் பக்கங்கள் வெகுவாய் கசங்கியிருந்தன. நூல் அச்சாக சில வாரங்களே எஞ்சியிருந்த தருணத்தில், திரு.அதியமான் தொலை பேசினார். அவருடைய உறவினர் வாடகைக்கு தங்கி இருக்கும் வீட்டின் ஒரு பகுதியில், வீட்டுக்கு சொந்தக்காரர் பல புத்தகங்கள் வைத்திருப்பதாகவும், அவற்றுள் இந்த மலரின் படியும் இருப்பதாகவும் கூறினார். வீட்டுக்காரர் இந்தியாவிலேயே இல்லாததால், வீட்டை நிர்வகித்து வந்தவர்களிடம் மன்றாடிப் படிகளைப் பெற்றுத் தந்தார். அப்படிக் கிடைத்த பிரதியிலிருந்தே என் புத்தகத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் எடுக்கப்பட்டன. மலரில் இருந்த படங்களை அச்சில் ஏற்றுவதற்கு முன் நகாசு வேலை செய்து பரிமளிக்க வைத்த விகடன் பிரசுர்த்தாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். நூல் வெளியான பின், பல முதிய ஜி.என்.பி ரசிகர்கள் நூலில் இடம் பெற்ற படங்களை சிலாகித்துப் பேசினர். அவர்களின் பாராட்டுகள் அனைத்தும் கிருஷ்ண கான சபைக்கும், 1964-ல் மலர் வெளியிடக் காரணமாயிருந்த திரு.யக்ஜராமன் அவர்களையுமே சேரும்.

புத்தகம் நல்ல முறையில் வெளி வந்துவிட்ட போதும், எனக்கே எனக்கென்று மலரின் ஒரு பிரதி கூட இல்லையே என்ற ஏக்கம் என்னை மீண்டும் தேட வைத்தது.

நூல் வெளியாகி ஓராண்டு கழித்து, 2007-ம் ஆண்டு மே மாதம், சென்னை மூர் மார்கெட்டில் ஒரு பழைய புத்தகக் கடையில், அட்டைகள் இல்லாத நிலையில், மலர் எனக்குக் காட்சியளித்தது. அன்று அந்தக் கடைக்காரர் எவ்வளவு விலை கேட்டிருப்பினும் கொடுத்திருப்பேனெனினும், விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை, அதன் மதிப்பு உணராது சொற்ப விலைக்குச் சொன்ன கடைக்காரரிடம், பிடுங்காத குறையாய் மலரைப் பெற்ற பொது ஏற்பட்ட மன நிறைவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. முனைந்து செய்யும் முயற்சி, எத்தனை வருடங்களானாலும், மெய் வருத்தக் கூலி தரும் என்ற வாக்கின் உண்மைத் தன்மை எனக்குத் தெள்ளெனப் புரிந்தது.

உலகமே ஜி.என்.பி என்ற மாமனிதரின் நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், நூற்றாண்டு மலரினைத் தொகுக்கும் பேறு எனக்குக் வாய்த்துள்ளது. அந்த மலரை அலங்கரிக்க திரு. லால்குடி ஜெயராமனிடமிருந்த கட்டுரை பெற அவர் வீட்டுக்குச் சென்ற போது, என்னுடைய ஜி.என்.பி புத்தகத்தின் பிரதி ஒன்றைக் கொடுத்தேன். அடுத்த நாள், திரு.பிரபு தொலைபேசியில் அழைத்து, லால்குடி அவர்கள் கிருஷ்ண கான சபை வெளியிட்ட மலரைப் பற்றி என் புத்தகத்தில் இருப்பதாகக் கூறியதாகவும், அதனை மறுபதிப்பு செய்ய விழைவதாகவும் தெரிவித்து, என்னுடைய பிரத்யைக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.

அரிய பொக்கிஷங்கள் அனைவரின் பார்வைக்கும் கிடைத்தல் அரிது. அப்படிப் பட்ட ஒரு புதையலாக இருந்து வந்த இந்த மலரை குன்றின் மேலிட்ட விளக்கு போல, அனைவரையும் சென்றடையும் எண்ணத்தை திரு.பிரபு வெளியிட்ட போது பெரிதும் மகிழ்ந்தேன். ஜி.என்.பி நூற்றாண்டில், அவரை நினைவு கூறும் வகையில் நடக்கும் எண்ணற்ற நிகழ்வுகளுள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முயற்சியாக இந்த மலரின் மறுபதிப்பு அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

அக்டோபர் 24-ம் தேதி, கிருஷ்ண கான சபை அரங்கில், மலரின் மறுபதிப்பு வெளியிடப்படுகிரது. இசை ரசிகர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு மலரைப் பெற்றுக் கொள்ளும் அரிய வாய்ப்பை தவற விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்

Read Full Post »

அழகி

என் புது மனைக்கு அழகு சேர்க்க அங்காடிக்குச் சென்றேன் மனைவியுடன். 

நவீனமான ஷாப்பிங் மால் அல்ல அவ்விடம். 

குறுகலான பாதைகளும், அரையிருள் காட்சிகளும், ‘என்ன புக் சார் வேணும்?’, ‘இராஜராஜன் காசு பாக்றியா சார்?’, ‘கிட்டப்பா கிராமஃபோன் கிடைக்குமா?’ போன்ற பல ஒலிகள் ஒரே சமயத்தில் நம் காதில் விழுந்தும் விழாமல் போகும் இடமது. 

உங்களுக்கும் பரிச்சியமான இடமாகத்தான் இருக்கும். சென்னையில் அதிகம் திரியாதவராயினும், குறைந்த பட்சம் கேள்வியேனும் பட்டிருப்பீர்கள் 

பழமையில் வேர்களைத் தேடுபவர்களுக்கு பிடித்த இடமாகத்தான் இருக்க முடியும் அவ்விடம். 

சரி சரி..போதும் பீடிகை. சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் இருக்கும் ‘மூர் மார்க்கெட்டைத்தான் சொல்கிறேன். 

வரவேற்பறையில் வழக்கமான பொம்மைகளையும், உபயோகப்படாத பீங்கான் கோப்பைகளையும் வைக்காமல், சற்றே வித்தியாசமான வகையில் ஏதேனும் வைக்கலாம் என்று மூர் மார்க்கெட்டில் உள்ள பழம் பொருள் அங்காடிச்சுச் சென்றோம். உடைந்தும், கீறல் விழுந்தும், வண்ணம் உதிர்ந்தும் இருக்கும் பொருட்களுள் பல எங்கள் நெஞ்சை அள்ளின. ஆங்கிலேய ஆட்சியில் கோலோச்சிய தொலைபேசியும், இசையில் தன்னையே தொலைத்து, விரல்களை இறகாக்கி இசை வானில் பறப்பதை அற்புதமாய் படம் பிடித்த உலோக படிமம் ஒன்றையும், பழைய கிராமஃபோன் ப்ளேயரின் நகல் ஒன்றையும், கால்களை மடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் அழகிய வேலைபாடுகள் நிறைந்த மர ஒட்டகமும் வாங்கினோம். அப்போதுதான் அவள் என் கண்ணில் பட்டாள். 

கரியவள். தனை குனிந்தவள். அவளே கைப்பிடி. அவள் கைப்பிடித்திருந்ததது ஓர் அன்றலர்ந்த தாமரையை. 7-த் திருப்பிப் போட்டது போன்ற கூரான நாசியும், தெளிவான முத்து மாலையும், எழிலான சரப்பளியும் என்னைச் சுண்டியிழுத்தன. 

மாமல்லபுரத்தில் அர்ஜுன ரதத்தில் ஒழிந்து நிற்பவளும், ஸ்ரீநிவாசநல்லூரில் கோட்டச் சுவரில் உறுப்பிழந்தும் செழுப்பழியாது நிற்பாவளும் இவலுக்கு தூரத்து உறவாக இருப்பார்களோ என்றெண்ணி அருகில் சென்று விசாரித்தேன். 

அவர்கள் இவளுக்கு பல தலைமுறைகள் முன்னால் பிறந்த (இளமை மாறா) பாட்டிகளாம். 

அந்த விரல்கள்…அற்புதக் கடக முத்திரையைக் கண்ட போதெல்லாம் காஞ்சி கைலாசநாதர் கோயில் உமையவளின் கடகக் கைகள் நினைவுக்கு வரும். இனி இவள் விரல்களும் நினைவில் வரும். மெத்து மெத்துத் தண்டினை மென்மலரால் பிடித்திருந்த பாங்கைப் பார்த்து பல கணங்கள் ஆன பின், என் கண்கள் தோள்களை நோக்கின. இடது தோளை சற்றி துக்கிக் காட்டி, அத் தூக்கலுக்கேற்ப மர்பகங்களும் இடுப்பும் சுழன்றிருக்கும் விதம் அதி அற்புதம். கூர்ந்து நோக்கின் கண்ணுக்குத் தெரியாத வலது தோளும் மனக் கண்ணில் தெரியும். 

அவள் சருமம் கருமையடைந்ததால் white metal என்றெண்ணி அடி மாட்டு விலைக்குக் கொடுத்து, காசை வாங்கிப் பையில் போட்ட கடைக்காரருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. கையில் கிடைத்த கம்பியால் அவள் முதுகைக் கீறினார். கீறிய இடமெல்லாம் மங்கல மஞ்சள். இவ்வளவு கம்மியான விலைக்கு இந்த அழகியை எப்போதும் வாங்க முடியாது என்று அவர் அங்கலாய்த்தவுடன், பிடுங்கிக் கொள்வாரோ என்ற பயத்தில், அவரசர அவசரமாக இடத்தை விட்டு அகன்றோம். 

வீட்டில் வந்து கடை பரப்பி வாங்கியவற்றை அனைவரிடமும் காட்டிய போது, அனைவரின் கவனத்தையும் அவளே கவர்ந்தாள். கந்தசாமி கோயில் அருகில் எடுத்துச் சென்று மெருகேற்றலாம், ஆசிட் வைத்து துடைக்கலாம், விபூதி போட்டுத் துலக்கலாம் என்று எத்தனையோ யோசனைகள். கடைசியில் புளியைப் போட்டு தேய்ப்பது என்று முடிவெடுத்தவுடன் அம்மா உடனேயே வேலையில் இறங்கிவிட்டால். சில நிமிடத்துக்கெல்லாம் அவள் கன்னங்களில் சில பொன் நிறக் கிரணங்கள். அவற்றைக் கண்டவுடனேயே எனக்குக் கைகள் பரபரப்பாகிவிட்டன. தேங்காய் நார், விரல் நகம், ஸ்காட்ச் ப்ரைட், பழைய டூத் ப்ரஷ், அரிசி மாவு, உப்பு, புளி எல்லாம் கொண்டு சில மனி நேரம் கை நோகத் தேய்த்தும், பல இடங்களில் அவள் உண்மை நிறம் தென்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் என்ன தேய்த்தும் கருமை நீங்குவதாக இல்லை. 

எத்தனை ஆண்டு உறவோ? அந்தப் பந்தத்தை அறுக்க எலுமிச்சைதான் உதவியது. இரண்டு நாட்கள் நான்கு பேர் நாற்பது விதமாய் மாறி மாறி தெய்த்துவுடன் தென்பட்ட அழகில் மாய்ந்துதான் போனோம். வித விதமாய் மாட்டி, வித்தியாசமான கோணங்களில் கண்டு ரசித்தோம். அவள் நாசியும், உதடுகளும் என்னைக் கட்டிப் போட்டன. அவள் சிரிப்பு சிலர் கண்ணுக்குத் தெரியவில்லை. அவள் சோகம் சிலருக்குப் புரியவில்லை. 

கதவைப் பிடித்து இழுக்கப் பயன்படும் ஒரு சாதரண கைப்பிடிக்கா இத்தனை அழகு? எப்பேர் பட்ட ரசிகனின் கருத்தில் விளைந்த கவிதை அந்தக் கைப்பிடி! கைப்பிடியே இப்படியெனில் கதவு எப்படி இருந்திருக்கும்? கதவு இப்படி எனில், அக் கதவு இருந்த வீடோ கோயிலோ எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் எண்ணிக் களித்தோம். 

அவளை வெளியில் எடுத்துச் சென்று சூரியனுடன் உறவாட விட்டவுடன் அவள் பொன்னைப் பழிக்கும் விதமாய் பளபளக்க ஆரம்பித்தாள். அவளை கதவில், சுவரில், மரத்தில், பைப்பில் என்று கண்ட இடத்தில் எல்லாம் மாட்டி, வித விதமாய் படம்பிடிக்கவே வார இறுதி சரியாய்ப் போயிற்று. 

அவளைத் தாங்கவும், தடவவும், கொஞ்சவும்தான் எத்தனை போட்டி? அவள், அது, சிற்பம், bronze என்றெல்லாம் ஆளுக்கொரு வகையாய் அழைக்க, ‘ஒரு அழகான் பேராகப் பார்த்து வைக்க வேண்டும்’ என்றாள் அம்மா. அம்மா சொன்ன வாக்கியமே எனக்கு அவள் பெயரைக் காட்டிக் கொடுத்தௌ. ‘அழகி’ என்று பேரிட்டு மகிழ்ந்தோம். 

‘சங்க கால கல்வெட்டு’, ‘தமிழ் பிராமி நடு கல்’, ‘ஆயிரக் கணக்கில் கல்வெட்டுகள்’, ‘அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கப் பட்ட அழகுப் பெட்டகங்கள்’, என்றெல்லாம் கண்டுபிடித்தும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பவரிடையில், ஒரு கைப்பிடி, அதுவும் தொன்மை வாய்ந்ததென்று சொல்லிவிட முடியாது. ‘இதைக் கண்டு பிடித்தற்கா இப்படிக் குதிக்கிறாய்?’, என்றுதானே கேட்கிறீர்கள். 

அவளை நேற்று வார்ப்பில் இட்டு எடுத்தாய்த்தான் இருக்கட்டுமே? அவளிடம் அழகில்லையா என்ன? உங்களுக்கெபப்டித் தெரியும்? பாவம், நீங்கள்தான் அவளைப் பார்த்ததில்லையே. 

நான் கண்டெடுத்த அவள் இதோ உங்களுக்காக நிழல் வடிவில்.

 பார்த்து மகிழுங்கள்.

Read Full Post »