Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Musings’ Category

நான் எழுத ஆரம்பித்து தொடர முடியாமல் பதிவை அழிப்பது என்பது  இரு ஆளுமைகளைப் பற்றி எழுதும் போது நிறைய நடந்ததுண்டு. ஒருவர் சங்கீத வாணி எம்.எல்.வசந்தகுமாரி. இரண்டாமவர் நான் அருகிலிருந்து தரிசித்த மேதமைக்குச் சொந்தக்காரர் எச்.எம்.வி.ரகு சார்.

இருவரைப் பற்றி எழுதும் போதும் என்ன எழுதினாலும் சொல்ல நினைப்பதை சொல்ல முடியாத பாரம் அழுத்தி எழுதவிடாமல் செய்துவிடும்.

ஓராண்டுக்கு முன் நான் ரசித்த இசைப்பதிவுகள் என்கிற வரிசையில் பத்து இசைப்பதிவுகளைப் பற்றி நாளுக்கொன்றாய்  எழுதத் தொடங்கினேன். அந்தத் தொடரில் பத்து பதிவுகளைப் பற்றி எழுத எண்ணியிருந்தேன். அதில் நிச்சயம் எழுத வேண்டும் என்று நான் முதலில் நினைத்த பதிவு ரகு சார் இசையமைப்பில் எம்.எல்.வி அம்மா பாடிய பதிவைத்தான். ஒவ்வொரு நாளும் முயன்று, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டு, ஒன்பது நாட்கள் வேறு இசைப்பதிவுகளைப் பற்றித்தான் எழுத முடிந்தது.

கார்வையில் முடியாத ராக சஞ்சாரமாய் அந்த எழுதாத பத்தாவது பதிவு பல மாதங்களாய் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கிறது.

கடந்த சில மாதங்களில், மேதை பாலமுரளிகிருஷ்ணாவின் பிறந்த நாள், ரகு சாரின் பிறந்த நாள் என்று சாக்கிட்டு எச்.எம்.வி.ரகு அவர்களைப் பற்றி சில பதிவுகள் எழுதிய (அசட்டு?) தைரியத்தில், எம்.எல்.வி அம்மாவின் நினைவு நாளில் அந்தப் பத்தாவது  பதிவை எழுதத் துணிகிறேன்.

ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் வெளியீட்டில் ‘பம்பை பாலகனே’ என்கிற பெயரில் 1970-களின் தொடக்கத்தில் ஒரு கிராமஃபோன் ரிக்கார்ட் வெளியானது. அதில் குன்னக்குடி வைத்தியநாதன், ’பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’ புகழ் வீரமணி போன்றவர்கள் இசையமைத்துள்ளனர். போட்டி நிறுவனம் எச்.எம்.வி-யில் வேலைபார்த்து இசைப்பதிவாளராக ரகு சார் பெரும் பெயர் ஈட்டியிருந்தாலும், அவர் இசையறிவை அறிந்து இசையமைப்பாளராக வாய்ப்பளித்தது ஸரஸ்வதி ஸ்டோர்ஸ்தான். ரகு ஸார் இசையமைத்து பி.சுசீலா பாடிய முருகன் பக்தி பாடல்கள் (தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி முதலியவை) நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இந்தப் பதிவிலும் ரகு சாரின் பாடல்கள் இருக்க வேண்டும் என்பது ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் கண்ணன் நினைத்ததில் ஆச்சர்யமில்லை.

”நல்ல ராகங்களில், எல்லோருக்கும் போய் சேரும்படியாய் இந்த மெட்டுகள் இருகக்ட்டும்”, என்று கண்ணன் ரகு சாரிடம் சொன்னாராம்.

எல்லோருக்கும் போய் சேரும்படியான ராகங்கள் என்றால் – கல்யாணி,மோகனம், சிந்துபைரவி, ரேவதி, சிவரஞ்சனி – என்று தேர்வு செய்திருப்பார் என்று நினைத்தால் உங்களுக்கு ரகு சாரைத் தெரியவில்லை என்று அர்த்தம்.

அவர் தேர்வு செய்த ராகங்கள் காவதி, கோசலம், காங்கேயபூஷணி! (கதையல்ல – நிஜம்!)

அந்த மூன்றில் முதலிரண்டைப் பாடியவர் எம்.எல்.வி அம்மா.

இசையமைத்தவரும் பாடியவரும் சங்கீத கலாநிதி ஜி.என்.பாலசுப்ரமண்யத்தின் சீடர்கள். அவர்கள் இணையும் போது, அவர்கள் குருநாதர் கர்நாடக இசையுலகுக்கு அறிமுகப்படுத்திய காவதியில் பாடலமைந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

(மலையேறி வருவோர்க்கு – என்ற வார்த்தைகளுக்கு மான்குட்டித் துள்ளலில் மலையேறிக் காட்டும் சங்கதிகள் மனத்தில் தோன்றினாலும் அவற்றை அழிச்சாட்டியமாய் விலக்கி பதிவைத் தொடர்கிறேன்)

காவதி சரி; கோசலம்?

ரகு சாரை தூக்கத்தில் எழுப்பி, ;ஒரு ராகம் பாடுங்களேன்’, என்றால் திய்வமணியையோ, காந்தாமணியையோ பாடுபவர். அவர் கோசலத்தில் அமைத்ததில் எந்த வியப்புமில்லை.  ஆனால், எம்.எல்.வி அம்மா விவாதி ராகங்களும் கச்சேரிகளில் பாடியிருக்கிறார் என்றாலும் அவற்றை அவருடைய முதல் தேர்வுகள் என்று சொல்வதற்கில்லை. பக்திப் பாடல் கோசலத்தில் என்பதை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?

இந்தக் கேள்வியை ஒருநாள் அவர் ரமண கேந்திரத்தில் அவர் அறையில் சமைத்துக் கொண்டிருந்த போது கேட்டேன்.

“பாடினது வசந்தி அக்கா இல்லையா? கோசலமா இருந்தா என்ன? கல்யாணியா இருந்தா என்ன? அவர் பாடறதுக்குக் கேட்கணுமா?’, என்று எதையோ சொல்ல முயன்று உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார் ரகு சார்.

உணர்ச்சிப்பெருக்கு அடங்கியதும், “நான் அப்போது கிராமஃபோன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், கச்சேரிகளும் செய்துகொண்டிருந்தேன். ஒருநாள் மாலை கச்சேரியில் கோசலம் பாடி, கோடீஸ்வர ஐயரின் ‘கா குஹா’ பாடினேன். அன்று இரவே கண்ணன் வீட்டுக்கு வந்து இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லிவிட்டு பூவை செங்குட்டுவனின் பாடல் வரிகளையும் கொடுத்துவிட்டுப் போனார். கச்சேரியின் தாக்கம் தொடர்ந்ததால் இந்தப் பாடலை கோசலத்தில் அமைத்தேன்.

என் குரலிலேயே அந்தப் பாடலை பதிவு செய்து வசந்தி அக்காவுக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் காலையிலேயே பதிவுக்கு ஏற்பாடாகியிருந்தது. அவர் வந்ததும் ‘பாட்டைக் கேட்டீர்களா?’, என்று ஆவலுடன் கேட்டேன். ‘கேட்டேன் ரகு’ என்று அவர் இழுத்த விதத்திலேயே அவருக்குக் கேட்க நேரமிருந்திருக்கவில்லை என்று புரிந்து கொண்டேன்.

‘இதற்கு பின்னணி இசையெல்லாம் உண்டல்லவா?’, என்று கேட்டார். நான் ஆமாமென்று தலையசைத்தேன்.

”நீ அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பாயல்லவா? அதை நானும் கேட்கிறேன்”, என்றார்.

அவர்களுக்கு நான் ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் இன்னொருமுறை எம்.எல்.வி அம்மாவின் முன் வாத்தியக் கலைஞர்களுக்குப் பாடிக் காண்பித்தேன்.

ஒரே ஒருமுறை அதைக் கேட்டவர், “டேக் போயிடலாம் ரகு”, என்றுவிட்டார். ஒரே தவணையில் பாடல் பதிவை முடித்துவிட்டோம். சங்கதிகள் எல்லாம் நான் போட்டிருந்தேன் என்றாலும், அவர் சாரீரத்துக்கே உரிய ஜொலிஜொலிப்பில்தான் அவை மிளிர்ந்தன என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அவர் மேதை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றாலும் அத்தனை வேகமாய் கற்பூரம் போல அவர் கிரகித்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் புளகாங்கிதம் ஏற்படுகிறது”, என்று மீண்டும் தழுதழுக்க ஆரம்பித்துவிட்டார் ரகு சார்.

2015-ல் முதன் முறையாக நான் சபரிமலை யாத்திரைக்குச் சென்றேன். மிகவும் சஞ்சலமான காலகட்டத்தில் ஏனோ அங்கு சென்று வந்தால் ஆறுதலாய் இருக்கும் என்று தோன்றியது. எதைத் தேடிச் சென்றேன் என்று தெரியாமல் ஆனால் எனக்கு வேண்டியது கிடைக்கும் என்கிற உள்ளுணர்வில் சென்ற பயணமது.

பதினெட்டு படிகள் ஏறி, குழுமியிருந்த பக்தர்களுக்கு இடையில் முண்டியடித்துக் கொண்டு முதல் முறை, இரண்டாம் முறை, மூன்றாம் முறை என்று ஐயப்பனைப் பார்த்தது மனதுக்கு இதமாக இருந்தாலும் நான் தேடி வந்த பொருள் சிக்காததைப் போலவே எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது.

கொடிக்கம்பத்துக்கு அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த போது ஒலிப்பெருக்கியில் நாகஸ்வரத்தில் கல்யாணி ராகம் ஒலித்துக் கொண்டிருந்தது.

பதநீதப

மபதநீதப

கமபதநீதப

என்று பஞ்சமத்தை  மையமாக்கி காந்தாரத்திலிருந்து நிஷாதம் வரை சுற்றிச் சுற்றி ஒலித்த அந்த சஞ்சாரங்கள் மனத்தில் ஒட்டிக் கொண்டன.

கோயிலைவிட்டுக் கிளம்பி அறைக்குச் சென்ற பின்னும் கூட அந்த சஞ்சாரங்கள் மனத்துக்குள் அலையடித்துக் கொண்டே இருந்தன. ஏதோ ஒருகணப்பொழுதில் ஒலித்துக் கொண்டிருந்த ஸ்வரக் கோவைகளில் ஷட்ஸ்ருதி ரிஷபம் சேர்ந்து கொண்டு பளீரென்று மின்னல் வெட்டியது.

கல்யாணி கோசலமாய் மாறியது.

செலுத்தப்பட்டவன் போல நான் என் கைப்பேசியை இயக்கினேன். யுடியூபைத் திறந்து ‘கண்கண்ட தெய்வம்’ பாடலை ஒலிக்கவிட்டேன்.

என் மனம் கல்யாணியிலிருந்து கோசலத்துக்கு தாவியது என்பதால் கோசலம் என்னமோ கல்யாணிக்கு உடன்பிறந்த ராகம் என்று நினைத்துவிட வேண்டாம். மருந்துக்கும் கல்யாணி சாயல் தெரியாமல் ஒவ்வொரு துளியிலும் கோசலம் தனித்துவமாகவே ஒலிக்கக்கூடுமென்பதற்கு இந்தப் பாடலைத் தாண்டி எங்கும் செல்ல வேண்டியதில்லை.

முன்னோட்ட இசையைத் தாண்டி பல்லவியைக் கேட்கும் போது என் மனத்தில் அமைதி ஏற்படுவது போன்றத் தோன்றினாலும் இன்னொரு பக்கம் மனம் பாடலை ஆராயத் தொடங்கியது.

இந்தப்பாடலைப் போன்ற பக்திப் பாடல்கள் கர்நாடக ராகங்கள் அமைந்திருந்தாலும் அவற்றை கீர்த்தனைகளை அணுகுவது போல அணுகமுடியாது. அதனாலேயே அவற்றை (அதிகபட்சம்) semi classical என்று வகைப்படுத்துகிறோம். ஒரு தேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர் இது போன்ற பாடல்களைப் பாடும் போது அளவுக்கு அதிகமாய் ‘கர்நாடகத்தன்மை’-யுடன் பாடுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்தப் பாடலில் எந்தவொரு இடத்திலும் அத்தகு மிகுதிகளைக் காணவியலாது. (நிறைய திரைப்பாடல்களும் பாடியுள்ள எம்.எல்.வி மிகாமல் பாடியது ஆச்சர்யமில்லை என்பது வேறு விஷயம்.)

சரணத்தில்,

“பாவங்களைத் தீர்த்து வைக்கும் பம்பா நதி;

பயபக்தியோடு தீர்த்தமாட பெரும் நதி”

இந்த வரிகளில் நதியென்ற என்ற வார்த்தையில் நறுக்குக் கத்தரித்தது போல கூர்மையான நிறுத்தங்களை நினைக்கும் போதே தார ஸ்தாயிக்கு தூக்கிச் சென்றது ‘அச்சன்கோயில்’ சஞ்சாரம். அடுத்த வரியில் இறங்கும் வழியில் விசேஷ விவாதி ஸ்வரங்களை தரிசனம் செய்வித்து தட்டாமலைச் சுற்றிக் காட்டித் தரையைத் தொடும் அந்த இரண்டாவது ‘ஐயன்கோயில்’.

‘அடியவர்க்கு துணிவு தரும் ஐயன்கோயில்’

நான் தேடி வந்த மருந்து எனக்குக் கிடைத்துவிட்டது. நான் தேடி வந்த ஐயப்பன் இருக்கும் ‘ஐயன்கோயிலை’ நான் உணர்ந்து கொண்டேன்.

அத்தனை வேகத்திலும், துல்லியமாகவும், கம்பீரமாகவும், நறுவிசாகவும் அந்த ‘ஐயன்கோயில்’ சங்கதி.

இன்னும் எவ்வளவு சொன்னாலும் அந்தக் கோசல சங்கதியின் சௌந்தர்யத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியப்போவதில்லை. அதனால் என்ன கெட்டுவிட்டது இப்போது? காற்று மண்டலத்தில் கரைந்துவிட்ட கச்சேரி சங்கதியாய் இருந்தால் வருத்தப்படலாம். இதுதான் சாஸ்வதமாகிவிட்ட கிராமஃபோன் பதிவுதானே?

மகாவிதுஷியின் நினைவு நாளின் நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்.

Read Full Post »

காருக்குறிச்சியில் நாகஸ்வர மேதை அருணாசலத்துக்கு ஒரு சிலை இருக்கிறது.

சட்டிப்பானையைக் கவிழ்த்தது போன்ற தலை. குன்னக்குடி வைத்தியநாதனுக்கு சவால்விடும் குங்குமப் பொட்டு. சிறிய சிப்ளா கட்டைகள் போன்ற காதுகள். அளவுக்கு அதிகமாய் நீண்ட கிரேக்க மூக்கு. அதீதமாய் அடர்ந்த புருவங்கள். ஐந்து விரலும் ஒன்றாய் தோன்றும் அதிசய கரங்கள். நகங்களில் நெயில்பாலிஷ். அவசரத்துக்கு ஏதோ வீட்டு குளியலறையிலிருந்து பிடுங்கிய குழாயைப் போன்ற நாகஸ்வரம். நாகஸ்வரம் என்று சொல்லக் கூட தயங்க வைக்கும் அணைசுக்கு அருகில் இருக்கும் வளைவு.

மொத்தத்தில் உள்ளூர்காரர்கள் பார்த்தால் வருந்தும்படியாகவும், வெளியூர்காரர்கள் பார்த்தால் சிரிக்கும்படியான சிலை.

நானும் அந்தச் சிலையைப் பார்த்து சிரித்ததுண்டு. காருக்குறிச்சிக்கு செல்லாதிருந்தவரை.

நான் அங்கு சென்றபோது, சந்தித்த அத்தனை பேரும் இந்தச் சிலையைப் பற்றி தவறாமல் பேசினர்.

“எங்க ஊருக்கே பெருமை அவருதான். நாங்கதான் இப்படி ஒரு சிலையை வெச்சுட்டோம்.”, என்று சொல்லாத ஆளில்லை.

போகும்போதும் வரும்போதும் கண்ணில் பட்டு உறுத்தும் சிலைதான் அவர் நினைவை பசுமையாக வைத்துக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

அந்த ஊரில் ஒரு வயதான பெண்மணி இந்தச் சிலை வந்த கதையைச் சொன்னார்.

காருக்குறிச்சியார் மறைந்த போது அவர் பிறந்த ஊரில் அவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிதி திரட்டப்பட்டதாம். ஊருக்குள் நுழையுமிடத்தில் பிரதான இடமொன்றும் குறிக்கப்பட்டு, நல்லதொரு நாள் பார்த்துச் சிலை திறப்புக்கான விழா ஏற்பாடுகளும் ஆகிவிட்டனவாம்.

சிலையை நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பை ஊரில் ஒருவர் ஏற்றுக் கொண்டதும் அவரிடம் கணிசமான தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காசை வாங்கிக் கொண்ட புண்ணியவானும், ”இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும்”, என்று போக்கு காட்டி சிலைத் திறப்புக்கு இரண்டு நாட்களே இருக்கும் போது சந்தடியில்லாமல் ஊரைவிட்டு ஓடிவிட்டாராம்.

சிலையைத் திறக்க விழாவெல்லாம் ஏற்பாடு செய்து, வெளியூரிலிருந்து முக்கியஸ்தர்களை எல்லாம் அழைத்துவிட்ட நிலையில் சிலை இல்லாவிட்டால் என்ன செய்ய?

காருக்குறிச்சியார் சிலை இருக்கும் தெருவுக்கு அடுத்தார்ப்போல் மன்பாண்டம் செய்யும் குயவர்கள் இன்றும் இருந்து வருகிறார்கள். அவர்கள்தான் ஆபத்பாந்தவர்களாய் உதவியிருக்கின்றனர்.

குறித்த நாளில் மண்ணின் மைந்தனுக்கு சிலை திறப்பு தடையில்லாமல் நிகழ தங்களால் ஆனவற்றை செய்துள்ளார்கள்.

இந்தக் கதையைக் கேட்டதும் அந்தச் சிலையைப் பார்த்தேன்.

பிள்ளையார் சதுர்த்திக்கு அச்சில் வார்த்த அழகான பிள்ளையார்களை கடைகளில் வாங்கி வந்தாலும், வீட்டு வாண்டு ஒன்று நாலைந்து களிமண் உருண்டைகளை உருட்டி “இதுதான் பிள்ளையார்” என்று சொல்லும்போது உலகின் அழகான பிள்ளையார் அதுதான் என்று தோன்றுவது நினைவுக்கு வந்தது.

சங்கீத உலகின் மிக அழகான சிலையாக காருக்குறிச்சியாரின் சிலை என் கண்களுக்குப்பட்டது.

Read Full Post »

காருகுறிச்சியாரின் உசைனியைப் போன்ற கற்பனையைத் தூண்டக் கூடிய பதிவுகளைக் கேட்பதரிது.

ஒருநாள் சென்னையில் ராஜரத்தினம் பிள்ளை ஒரு பூங்கா வழியாய் செல்கிறார். அங்கிருக்கும் வானொலியில் ஒலிபரப்பாகும் உசைனி அவரை கட்டி இழுக்கிறது. காலை எடுத்து வைக்கப் பார்க்கிறார். அவர் உடல் ஒத்துழைக்க மறக்கிறது. நல்ல தஞ்சாவூர் திட்டு வார்த்தையில் இரண்டைச் சொல்லி, ‘வேலையைக் கெடுக்கறானே பாவி’ என்று சமைந்து நிற்கிறார். ராஜரத்தினம் பிள்ளை நிற்கிறார் என்கிறதும் மெதுமெதுவாய் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிடுகிறது. உச்சங்களைத் தொட்ட அந்த உசைனி முடியும்போது மெல்ல நகர ஆரம்பிக்கிறார் பிள்ளை. சுற்றி இருந்தக் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ‘என்னைக் குழி தோண்டிப் புதைக்க இவன் ஒருத்தன் போதும்’ என்று முகத்தில் பெருமை பொங்க நடந்து செல்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.

இது வரலாற்று உண்மையா? செவி வழிச் செய்தியின் நம்பகத்தன்மை என்ன என்றெல்லாம் சிலர் கேட்கக் கூடும்.

முழுக்க முழுக்க கற்பனையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. அந்த உசைனிக்குப் பொருத்தமான கற்பனைதானே என்று கதைக்கு வக்காலத்து வாங்கத் தோன்றுகிறது.

இது போன்ற அவர் உசைனியை ஒட்டிக் கிடைக்கும் கதைகளையெல்லாம் திரட்டி நெடுங்கதையாய் எழுதக்கூடத் தோன்றுகிறது.

#karukurichi

Read Full Post »

நேற்று மாலை என் பெண்ணுக்கொரு வகுப்பு இருந்தது.

அவளை அழைத்துச் சென்று வகுப்பு முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

ஒரு மணி நேரம் மோட்டுவளையைப் பார்ப்பதைவிட, காதில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு அவள் வகுப்பிருக்கும் தெருவைச் சுற்றியபடி பாட்டு கேட்பது வழக்கம்.

நேற்றைய நடைக்கு காருகுறிச்சியாரின் வாசஸ்பதி.

28 நிமிடங்கள் வாசித்துள்ள ஆலாபனையை ஒருமுறை கேட்டுவிட்டு, அதில் ஸ்தாயி விட்டு ஸ்தாயி தாவும் வாதி-சம்வாதி பிரயோகங்கள் வரும் ஆறு நிமிடங்களை மட்டும் இன்னொருமுறை கேட்க ஆரம்பித்தேன்.

ஒன்றரை நிமிடங்கL ஆனதும் தார ஸ்தாயி காந்தாரத்தில் ஒரு கூவல். சத்தியமாய் கூவலேதான். மனித வாசிப்பில் அந்தக் காந்தார வளைவு சாத்தியமேயில்லை. குயிலாக மாறினால்தான் அந்தக் குழைவும் வளைவும் சாத்தியமாகும்.

கைபேசியை நிறுத்திவிட்டு மனத்துள் அந்தக் கூவலை மட்டும் மந்திர ஜெபம் போல ஒலிக்க வைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

திடீரென்று யாரோ தோளைத் தொட்டது போன்ற உணர்வு.

திரும்பிப் பார்த்தேன் – நிஜமாகவே யாரோ என்னைத் தொட்டுக் கூப்பிட்டிருக்கிறார்.

சதுரமான முகம். சென்னையில் ரிச்சி ஸ்டிரீட்டில் இந்த ஜாடையில் நிறைய பேரைக் காணக் கூடும். பழுப்பேறிய சட்டை, அதைவிட பழுப்பான பற்கள். நீண்ட தலை முடி மட்டும் வழித்துப் படிய வாரி இருந்தது.

காதிலிருந்து ஹெட்ஃபோன்ஸைக் கழட்டினேன்.

என்னை நிறுத்தியவர் ஏதோ கேட்டார். மனத்தில் ஒன்றும் ஏறவில்லை.

“கியா?”, என்று வினவினேன்.

“இதர் வைன் ஷாப் கிதர் ஹை?”

அடப்பாவி! அந்தக் காந்தாரத்தின் போதையில் தள்ளாடியா நடந்தேன்?

நான் கேட்கும் வைன் ஷாப்பை 1964-லேயே மூடியாகிவிட்டதே என்று சொல்ல நினைத்தேன்.

சிரிப்பை அடக்க முடியாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

Read Full Post »

கர்நாடக இசையின் அங்கங்களில் ஸ்தூலமானதைப் பற்றி நிறைய பேச முடியும். அவற்றைப் பற்றி பேசும் போது சாற்றை நீக்கி சக்கையைப் பேசினது போலத் தோன்றும். ஆனால் சூட்சுமமாய் பல அங்கங்கள் உண்டு. அவற்றை திரும்பத் திரும்ப கேட்பதன்/பாடுவதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். உணர்ந்து கொண்டால்கூட அவற்றைப் பற்றி பேசுவது கடினம். நல்ல குருவால் கோடி காட்டமுடியும். கேட்பவருக்குக் கொடுப்பினை இருந்தால் அந்த வழிகாட்டல் அர்த்தமுள்ள பயணமாய் மாறும்.

ஒருமுறை பல்லவிகளைப் பற்றி பேசும் போது, வித்வான் டி.ஆர்.எஸ் சபையினரை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார்.

“கண்டிகி சுந்தர” என்கிற பிரபல வரியை ஒரு பல்லவியாக எப்படி மாற்றுவது?

இதுதான் கேள்வி.

உடன் இருந்த மாணவி பாடிக் காண்பித்தார். பூர்வாங்கம் – அருதிக் கார்வை – உத்தராங்கம் என்று மூன்று பகுதிகள் கொண்ட பல்லவியாய் அந்த வரி மலர்ந்தது.

உடனே டி.ஆர்.எஸ், “பாடிக் காட்டிவிட்டீர்கள். சரிதான். இப்போது சொல்லுங்கள் கீர்த்தனையில் இருந்த வரிக்கும் இப்போது பாடிய பல்லவிக்கும் என்ன வித்தியாசம்?”

பாடிய மாணவி சொல்ல முயன்றார். வார்த்தைகள் வெளிவராமல் திக்கித் தவித்தார்.

டி.ஆர்.எஸ் அந்த வரியை இனொருமுறை பாடினார்.

“நன்றாக கவனியுங்கள். சுந்தர என்று அருதியை நெருங்கும் இடத்தை கவனியுங்கள். ஒருவித ஃப்ரிக்‌ஷனை உணரமுடிகிறதா? இந்த ஃப்ரிக்‌ஷன் கர்நாடக சங்கீதத்தின் சூட்சமங்களில் முக்கியமான ஒன்று”, என்றார்.

பின்னர் ஒருமுறை அவரை அண்ணா நகர் வீட்டில் சந்திக்கும் போது, “சார், நீங்கள் சொன்ன ஃப்ரிக்ஷன் பல்லவிக்கு மட்டுமில்லை என்று தோன்றுகிறது. செம்மங்குடி பாடும் ‘இந்த பராகா’-வில் ரகரத்தைக் கொஞ்சம் வல்லினமாக்கி ஒலிக்க வைப்பது கூட இந்த ஃப்ரிக்‌ஷன்தானோ என்று தோன்றுகிறது”, என்றேன்.

“சந்தேகமென்ன? ஒரு சீரான போக்கில் சிறு சலனம் ஒன்றை எழுப்பினால்தான் ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. அவை சுழன்று கொண்டெ இருக்கும். இந்த ஃப்ரி்க்‌ஷனை வைத்துதான் அந்தச் சக்கரங்களை ஒன்றோடு ஒன்று உராயச் செய்யமுடியும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களும் உணர்ந்து கொள்ள வைக்கும். நிரவலில் ஒதுக்கல்கள், கோர்வைகளில் மௌனமாய் ஒலிக்கும் கார்வைகள் எல்லாம் இந்த ஃப்ரி்க்ஷன்தான்”, என்றார்.”

இந்த ஃப்ரி்க்ஷன் தேவைப்படாதவர்கள் இரண்டே பேர்தன் நம் சங்கீதத்தில்”, என்று அவரே தொடர்ந்தார்.“ஒன்று ராஜரத்தினம் பிள்ளை. அவர் வாசிப்பு காட்டாற்று வெள்ளம். கண்ணை மூடிக் கொண்டு அந்த சுழலுக்குள் சென்றுவிட வேண்டியதுதான். அரை மணியோ, ஆறு மணியோ – அதன்போக்கில் சுழன்றுவிட்டு வெளியில் தள்ளும் போது கண்ணைத் திறந்தால் போதும். இன்னொருவர் மதுரை மணி. பனிச்சறுக்கு செல்லும் போது ஃப்ரிக்ஷன் வேண்டுமென்றா கேட்போம்? ஒலிம்பிக்கில் ஐஸ் ஸ்கேட்டிங் பார்க்கும் போதெல்லாம் மதுரை மணி ஐயரைத்தான் நினைத்துக் கொள்வேன்”. என்றார்.

இன்று டி.ஆர்.எஸ் இருந்திருந்தால், காருகுறிச்சியாரின் சங்கீதத்தில் நீங்கள் சொன்ன ஃப்ரிக்ஷனைக் கண்டுகொண்டேன் என்று சொல்லியிருப்பேன்.

அவரிடம் ஒரு கருத்தைச் சொன்னால், ‘உனக்கென்னடா தெரியும்? உளராதே!’, என்று ஒருநாளும் சொன்னதில்லை. நம் கருத்தை அமோதிப்பது போல் தொடங்கி இன்னும் துலக்கிக் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.

காருகுறிச்சியாரின் ராக ஆலாபனைகளில் ஆங்காங்கே பொறி பறக்க அவரது நையாண்டி மேளப் பின்புலத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என்று தோன்றுகிறது.

கர்நாடக இசை கச்சேரி வடிவத்தின் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளைப் பார்த்தால் பல ராகங்களிலும், பாடல் வடிவங்களிலும் உள்ள ‘கர்நாடக’ தன்மை அதிகரித்து வருவதை உணர முடியும். தேசீய ராகத்தையோ, காவிடிச் சிந்தையோ எடுத்துக் கொண்டு நூறு வருடத்துக்கு முன்னால் இருந்த வடிவத்தோடு இன்றைய வடிவத்தை நோக்கினால் இதை உணர்ந்து கொள்ள முடியும்.

செவ்வியல் இசையாக இருந்தாலும் கிராமிய இசை என்றாலும் இருக்கின்ற ஸ்வரஸ்தானங்கள் ஒன்றுதான். அந்த ஸ்வரங்களின் சஞ்சாரங்களில் உள்ள அசைவுகளும் வளைவுகளுமே இவ்விரு இசை வடிவத்துக்கான வேறுபாட்டைக் காட்டுகின்றன. காருகுறிச்சியாரின் வாசிப்பில் எதிர்பாரா சமயங்களில் வெளிப்படும் கர்நாடக இசையில் அதிகம் காணக்கிடைக்காத கிராமிய வளைவுகள் ஆங்காங்கே மின்னி கேட்பவரின் மனக்கண் முன் டி.ஆர்.எஸ் சொன்ன தீப்பொறிகளைக் காட்டுகின்றன.

இந்த அணுகுமுறையை உசைனி, யதுகுலகாம்போதி போன்ற கிராமிய பின்புலம் கொண்ட ராகங்களில் மட்டுமல்ல – உங்களுக்கு பேறிருப்பின் வாசஸ்பதியிலும், நடபைரவியிலும் கூட கண்டுகொள்ளலாம்.

Read Full Post »

மனிதருள் பார்த்ததும் காதல் என்பதை நான் படங்களில் பார்த்ததுண்டு. ஆனால் பாடல்களில் அதை அனுபவித்ததுண்டு. காதலுக்கு கண்ணில்லை என்பது போலத்தான் பாடல்களுக்கும். சில பாடல்கள் ஏன் நம்மை உலுக்குகின்றன என்று குறிப்பிட்டுக் கூற முடியாது.

அப்படியொரு பாடல் பாபநாசம் சிவனின் ‘கடைக்கண் பார்வை’. கமாஸ் ராகத்தில் எத்தனையோ பாடல்கள் உள்ளன. தனிச்சிறப்பாய் இந்தப் பாடலில் ஏதேனும் உண்டா என்று எனக்குக் குறிப்பிட்டுக் கூறத் தெரியவில்லை.

2007-ல் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில் வித்வான். சஞ்சய் சுப்ரமண்யன் பாடி இதை முதன் முதலில் கேட்டேன். எனக்குப் பாடல்களை கேட்பதில்தான் ஆர்வம். பாடுவதில் அல்ல. பாடும் திறனும் இல்லை என்பது வேறு விஷயம். இருந்தும் சில பாடல்களை எனக்கே எனக்காய் ஏகாந்தமாய் பாடிக் கொள்ளத் தோன்றும். இந்தப் பாடல் ஏனோ அப்படித் தோன்றியது.

அவர் கச்சேரியில் அன்று பாடப்பாட வரிகளை டயரியின் கடைசி பக்கத்தில் கிறுக்கல்களுக்கிடையில் எழுதிக் கொண்டேன். அதன் மெட்டு மறக்காது என்று தோன்றியது.

அன்று எழுதிக் கொண்டதற்குப் பின் அந்தப் பாடலை நான் மீண்டும் கேட்கவுமில்லை. மீண்டுமொரு முறை எழுதியதைப் பார்க்கவுமில்லை.

சில நாட்களுக்கு முன்னால் அந்தப் பாடலின் காணொளியை தன் தளத்தில் சஞ்சய் வலையேற்றியுள்ளார்.

கேட்டதும் அன்று கேட்ட கச்சேரியும் எழுதி வைத்த டைரியும் நினைவுக்கு வந்தன.

என்றாவது பாட வேண்டும்.

Read Full Post »