விஜய தசமி அன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி.
இலக்கிய உலகத்துக்கும், இசை உலகத்துக்கும் தினமணி சிவகுமார் நன்கு தெரிந்த பெயர்தான்.
தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பில் அவர் சாதித்தவை ஏராளம் என்றாலும் அவர் வருடா வருடம் மார்கழி மாதத்தின் போது இசை மலராய்த் தொகுத்த தினமணி கதிர் இதழ்கள் மட்டுமே கூடத் தனிப்பெரும் சாதனையாகக் கருதத்தக்கவை.
அவருடைய தினமணி நாட்களுக்குப் பிறகு அத்தகு மலர் தயாரிப்புகள் நின்று போயின என்பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் பெருத்த வருத்தமுண்டு.
இதைப் பற்றி எத்தனையோ முறை நாங்கள் பேசியிருந்தாலும், இந்த வருடம்தான் அத்தகைய வருடாந்திர இசை மலரை பரிவாதினி வெளியீடாகவே தயாரித்தாலென்ன என்கிற எண்ணம் எழுந்தது.
இந்த மார்கழிக்கு மீண்டுமொருமுறை சிவகுமாரின் தயாரிப்பில் இசை மலர் வெளியாகவுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.சிவகுமார் – பழைய விஷயங்களின் காதலர். கதிர் போன்ற பத்திரிக்கைக்கு உள நிர்பந்தங்களுக்கு இடையிலும் கணிசமான அளவு பழைய செய்திகளைத் தொகுத்து ஆவணப்படுத்திவிடுவார். இந்தமுறை அத்தகு நிர்பந்தம் ஏதும் இல்லாத சூழலில் மலரப் போகும் மலரை நினைத்தாலே எனக்குப்பரவசமாக இருக்கிறது.


இரண்டாவது அறிவிப்பு உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தராது என்று நினைக்கிறேன். கடந்த வருடங்களில் இரண்டு நாட்காட்டிகளை – கலைஞர்களை கௌரவிக்கும் வ்சகையில் பரிவாதினி வெளியிட்டதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இந்த முறை காருகுறிச்சியாரின் நூற்றாண்டை முன்னிட்டு காருகுறிச்சி சிறப்பு வெளியீடாகைந்த நாட்காட்டி வெளிவரும்.
இசை மலரையும், நாட்காட்டியையும் சேர்ந்தே வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். வரும் நாட்களில் மற்ற விவரங்களை வெளியிடுகிறேன்.