Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘காருகுறிச்சி அருணாசலம்’

இன்று நாகஸ்வர கலாநிதி காருகுறிச்சி அருணாசலத்தின் நூற்றாண்டு தொடங்குகிறது. இந்தத் தருணத்தில், சென்ற மாதம் சொல்வனத்தில் வெளியான இந்தக் கதையை இங்கு பகிர்கிறேன். காருகுறிச்சியாரின் வாழ்வில் நடந்த நிகழ்வை கதையாக எழுதியுள்ளேன்.

வேம்பு மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் தன் வழக்கமான இடத்துக்குச் சென்று கூடையை இறக்கி வைத்தார்.

ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்துக்குச் சென்று சிறிய மேஜை ஒன்றைத் தூக்கி வந்து கூடைக்கு அருகில் வைத்தார். மேஜையின் மேல் வெள்ளைத் துணியை விரித்து, அதன்மேல் மந்தாரை இலைகளைப் பரப்பினார். அதன்பின் கூடையில் கொண்டு வந்திருந்த கடம்பூர் போளிகளை ஒவ்வொன்றாக எடுத்து இலைகளின் மேல் அடுக்கி வைத்தார்.

அவர் வாய் முனக அன்று மோகன ராகத்தை எடுத்துக்கொண்டது. அத்தனை போளிகளையும் எடுத்து வைத்தவுடன், வெறும் கூடையை எடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இன்னும் ரயில் வர அரைமணி இருந்தது. மோகனத்தின் தைவதத்தின் சௌந்தர்யத்தை வியந்தபடி அவர் நடக்கும் போது எதிரில் யாரோ வருவது போலத் தோன்றியது. வருபவர் வேம்புவை நோக்கி கையை ஆட்டிக்கொண்டிருந்தார்.

ஆள் நெருங்கியதும் வருபவர் பெரிய அருணாசலம் என்று தெரிந்தது. காருகுறிச்சி அருணாசலத்தின் உடன் பிறவா சகோதரர். இருவர் ஊரும் பெயரும் ஒன்று என்பதால் இவர் பெரிய அருணாசலம். இரண்டு அருணாசலங்களுக்கும் கடம்பூர் போளி என்றால் உயிர். அதிலும் வேம்பு கொண்டு வந்து விற்கும் போளி துணைக்கு வரும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ரயிலில் செல்லத் தயாராக இருப்பார்கள். இவ்விருவரும் பழக்கிவிட்டதில் மொத்த நாகஸ்வரக் குழுவுமே இந்தப் போளிகளுக்கு அடிமை.

அருணாசலம் கச்சேரிக்காக ரயிலில் மணியாச்சி வழியாகச் செல்லும்போதெல்லாம் அவசர அவசரமாக ஒரு பையன் முதல் கிளாஸிலிருந்து ஓடி வருவான். அவனைப் பார்த்ததுமே இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கத் தொடங்குவார் வேம்பு. ஒவ்வொரு இலைகளிலும் பத்து போளிகள் இருக்கக்கூடும். அவன் வந்ததும் அவர் கைகளில் உள்ள இலைகளை அவன் கைக்கு மாற்றிவிட்டு. “ஓடுடே! ஓடுடே!”, என்று பையனை விரட்டுவார்.

ஒவ்வொரு முறை அவர் இப்படிச் செய்யும் போதும் போளி விற்றதில் வரும் அவருடைய அந்த வாரப் பங்கைத் தாரை வார்க்க நேரிடும். அவர் மனைவி சுந்தரி எப்படியும் இழுத்துப் பிடித்துச் சமாளித்துவிடுவாள் என்று அவருக்குத் தெரியும். சமாளிக்க முடியாவில்லை என்றாலும் அருணாசலத்திடம் பணம் கேட்கமாட்டார் வேம்பு. அவரைப் பொருத்தமட்டில் அந்த மண்ணின் பெருமையே அருணாசலம்தான். சங்கீதம் என்றாலே தஞ்சாவூர் ஜில்லா என்ற நிலையை மாற்ற திருநெல்வேலி ஜில்லாவில் அவதாரம் செய்த கந்தர்வன் அருணாசலம் என்பது அவர் துணிபு.

திருச்செந்தூர் பச்சைசாற்றி, திருக்குறுங்குடி உற்சவம், சுசீந்தரத்தில் ஆறாம் திருநாள் என்று அருணாசலம் வாசிக்கும் இடங்களில் எல்லாம் வேம்புவை நிச்சயம் பார்க்கலாம். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இவர் வந்தால் அருணாசலத்துக்குத் தெரிந்துவிடும். வேம்புவை அழைத்து முதல் வரிசையில் உட்காரச் சொல்லுவார். ’அந்த மரியாதைக்கு உயிரையே எழுதி வைக்கலாம். போளி எல்லாம் எம்மாத்திரம்?’ என்று நினைத்துப் புளகாங்கிதம் அடைவார் வேம்பு.

என்றுமில்லாத அதிசயமாய் இன்று ஏனோ ரயில் வராத வேளையில் பெரிய அருணாசலம் வந்திருக்கிறார்.

“இன்னிக்கு ராத்திரி ஒட்டபிடாரத்துல கச்சேரி. போற வழியில மணியாச்சி போர்டைப் பார்த்ததும் அவாளுக்கு உங்க ஞாபகம் வந்துச்சு. அதான் இங்க வந்தோம். கார் வெளியில நிக்கி.”

வேம்பு அவசர அவசரமாக ஐந்தாறு இலைகளில் போளியை எடுத்துக்கொண்டு சாலைக்கு ஓடினார்.

அவர் வருவதைப் பார்த்ததும் தன் ப்ளைமவுத் காரிலிருந்து இறங்கினார் அருணாசலம்.

“ஒட்டபிடாரத்துல கச்சேரினு தெரியாமப் போச்சே! ராத்திரி வந்துடுவேன்” என்றபடி கைகளில் இருந்த போளிகளை நீட்டினார் வேம்பு.

“ஐயர்வாள்! நானும் மாசக்கணக்கா உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பேசிடணும்னுதான் வந்திருக்கேன்” என்றார் அருணாசலம்.

வேம்புவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கைகள் இன்னும் இலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. அதை வாங்காமல் அருணாசலம் தொடர்ந்தார்.

“ஒவ்வொரு தடவை நம்ம பய வரும்போதும் நீங்க பாட்டுக்கு போளியைக் குடுத்துட்டு துரத்திவிட்டுறதீய, அவம் பணத்தை நீட்டக்கூட விடமாட்டீங்கீய-ங்கான். எப்பவோ ஒரு தடவைன்னா சரிங்கலாம். இதையே வழக்கமா வெச்சுகிட்டா ?”

வேம்பு லேசாகப் புன்னகைத்தார்.

“நீங்க காசு வாங்கலைன்னா இனிமேல் உங்க கிட்ட போளி வாங்கப் போறதில்லை.”

வேம்பு புன்னகை மறையாமல் பேச ஆரம்பித்தார்.

“ஏ! நீ வாசிக்கற பைரவிக்கும், உசைனிக்கும் உலகத்தையே எழுதி வைக்கலாம். எனக்கு வக்கிருக்கிறது இந்தப் போளிக்குத்தான். மாசாமாசம் எங்கையாவது வாசிச்சுக் காதைக் குளிர வைக்கியே! அது போதாதா? பணம் வேற குடுக்கணுமாங்கேன்?”

“ என்ன சொன்னாலும் இன்னிக்கு எடுபடாது. பைசா வாங்கிகிட்டாத்தான் இனி உங்க கிட்ட போளி வாங்குவேன்” என்று பிடிவாதம் பிடித்தார் அருணாசலம்.

”இப்ப நான் உன்கிட்ட எதாவது வாங்கிக்கணும். அவ்வளவுதானே?”

“ஆமா”

“அப்ப எனக்கு பணம் வேண்டாம். வேற ஒண்ணு கேக்கேன்.”

“என்ன வேணும்னாலும் கேளுங்க” என்று அவசரப்பட்டார் அருணாசலம்.

“யோசிச்சுட்டு சொல்லு. அப்புறம் முடியாதுனு சொல்லக் கூடாது” என்று குழந்தையுடன் பேரம் பேசுவது போலக் கேட்டார் வேம்பு.

“அதெல்லாம் யோசிச்சாச்சி! உங்களுக்கு வேணுங்கறதைச் சொல்லுங்க.”

“திருனேலி ஜில்லால ஓங் கச்சேரி நடக்காத ஊரே இல்லைங்காவோ. ஆனால் நீ வாசிக்க ஆரம்பிச்ச இந்த இருபத்தஞ்சு வருஷத்துல இந்த மணியாச்சியில மட்டும் உன் கச்சேரி நடக்கவே இல்லை. நான் பொறந்து வளர்ந்த ஊருல உன் நாகஸ்வரத்துல இருந்து ராகம் ஆறா ஓடணும். அது நடந்தாப் போதும். எனக்கு ஜென்ம சாபல்யம்தான்.”

இப்படி ஒரு வேண்டுகோளை அருணாசலம் எதிர்பார்க்கவில்லை.

“வாசிச்சுட்டாப் போச்சு. உங்க வீட்டுக்கே வந்து வாசிக்கறேன்.”

”இல்லை! இல்லை!”, தலையைத் தீர்மானமாய் ஆட்டினார் வேம்பு.

அவர் மனக்கண் முன் பெரிய மேடையில் அருணாசலம் அமர்ந்து வாசிக்க ஆயிரக்கணக்கான ரசிகர் கூட்டம் பந்தலில் உட்கார்ந்து கேட்கும் காட்சி விரிந்து விட்டது.

“சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு இந்த ஸ்டேஷன் பிள்ளையார் கோயில்ல நீ வாசிக்கணும்” என்று சொல்லிவிட்டு கையில் இருந்த போளிகளை அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு திரும்ப நடைமேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வேம்பு.

உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது வேம்புவுக்கு. “முட்டாப்பயலுவோ! மாணிக்கத்தைக் கையில வெச்சுக்கிட்டு அனுபவிக்கத் தெரியலையே இந்த மூதிகளுக்கு. எவ்வளவு கட்டியாண்டா என்ன? ஆபோகியில் மத்யமத்தைத் கம்மலா தொடும்போது வாய்விட்டு ‘ஆமாம்பா’-னு ரசிக்கத் தெரியாதவன் மனுஷனா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு நடந்தார்.

அடுத்த நாள் விழித்ததும்தான் தான் எடுத்துக் கொண்டுள்ள காரியத்தின் முழுப் பரிமாணம் அவருக்குப் புலப்படத் துவங்கியது.

அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபிமானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான். ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப்பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும். அருணாசலம் கச்சேரி என்றால் எத்தனையோ ஊரிலிருந்து பெரிய பிரமுகர்கள் வருவார்கள் – அவர்கள் உட்கார நாற்காலிகள் வாடகைக்கு எடுக்க வேண்டும். ஊரைக் கூட்டி சாப்பாடு போடாவிடினும், ஆளுக்கு ஒரு கை சுண்டலாவது பிரசாதமாகக் கொடுக்க வேண்டாமா?

இந்தச் செலவுகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போதே அவருக்குத் தலை சுற்றியது. இந்த வார போளிக் கணக்கை கடம்பூருக்குச் சென்று பைசல் செய்தால் கையில் முப்பதைந்து ரூபாய் மிஞ்சும். அதை வைத்து என்ன கச்சேரி நடத்துவது?

வேம்பு தனக்குத் தெரிந்த ஊர்காரர்களை சென்று சந்தித்து விஷயத்தைச் சொன்னார். இவர் கேட்பதற்கு உதவக் கூடிய ஊரென்றால் இது நாள் வரை அருணாசலம் கச்சேரி அங்கு நடக்காமலா இருந்திருக்கும்? பல இடங்களில் தம்படி கூடப் பெயரவில்லை. அருணாசலம் பெயருக்காக சிலர் அஞ்சும் பத்தும் கொடுத்தனர். மூன்று நாட்கள் அலைந்ததில் மொத்தம் நூற்றி ஐம்பது ரூபாய் தேறியது.

சதுர்த்திக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வேம்பு போளி விற்க ரயிலடிக்குப் போன நேரம் போக வசூல் விஷயமாக யாரையாவது சந்தித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு ஒன்றும் பெரியதாகத் தேறவில்லை.

’அருணாசலம் வேண்டாம் என்பதற்காக வெறும் தேங்காய் மூடியோடா அனுப்ப முடியும்? இன்னும் ஐந்நூறு ரூபாயாவது இருந்தால்தான் ஓஹோவென்று இல்லாவிடினும் ஓரளவவாவது ஒப்பேற்ற முடியும்,’ என்று வெதும்பியபடி வீட்டுக்குள் நுழைந்தார் வேம்பு.

இரவுச் சாப்பாடு முடிந்ததும் வேம்புவின் மனைவி ஒரு கவரை எடுத்து வந்தாள். அதில் நானூறு ரூபாய் பணமிருந்தது.

“ஏதிந்தப் பணம்?” என்று வேம்பு கேட்டு முடிக்கும் முன்பே கழுத்தில் கட்டியிருந்த மஞ்சள் கயிரை எடுத்துக் காட்டினாள் சுந்தரி.

“என்ன சுந்தரி இப்படிப் பண்ணிட்ட? உன் கிட்ட இருந்த ஸ்வர்ணமே அதுதானே? அதைப் போய் வெக்கலாமா?” என்று தழுதழுத்தார் வேம்பு.

“உதவிக்கு இல்லாத ஸ்வர்ணம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? ஒரு வாரமா நீங்க படற வேதனையை என்னால பார்க்க முடியல.” என்று சலனமேயில்லாமல் கூறினாள் சுந்தரி.

வேம்பு அவள் கைகளை இழுத்து விரல்களைக் கோர்த்துக்கொண்டார்.

சதுர்த்தியன்று மாலை ஆறு மணிக்கு அருணாசலம் காரில் வந்திறங்கினார். சற்றைக்கெல்லாம் பெரிய அருணாசலம், பெரும்பள்ளம் வெங்கடேசன், அம்பாசமுத்திரம் குழந்தைவேலு முதலான அவர் குழுவினர் பெரிய வண்டியில் வந்து இறங்கினர். வேம்பு அருணாசலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு பிள்ளையார் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். குருக்கள் அர்ச்சனை செய்த பின் மாலை முதலான மரியாதைகளை குழுவினருக்குச் செய்தார்.

பந்தலில் கூட்டம் அம்மியது. சங்கரன்கோயில், கழுகுமலை, களக்காடு, கடையநல்லூர், சுரண்டை, எட்டையபுரம், புளியங்குளம் என்று பல ஊர்களில் இருந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அருணாசலம் மேடையேறி உட்கார்ந்த போதே கரகோஷம் ஊரை நிறைத்தது. வேம்பு முதல் வரிசையில் அருணாசலத்துக்கு நேராக அமர்ந்து கொண்டார்.

அருணாசலம் கௌளையை கொஞ்சம் கோடிகாட்டிவிட்டு, ‘ப்ரணமாம்யஹம்’ வாசிக்கத் துவங்கினார். எடுத்துக் கொண்ட காலாப்ரமாணம் மின்னல்! புரவிப்பாய்ச்சலில் ஒலித்த தவில்சொற்கள் உந்தித்தள்ள கல்பனை ஸ்வரங்கள் மட்டும் பதினைந்து நிமிடங்களுக்கு பொறி பறந்தன. வேம்பு தன்னை மறந்து தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தார்.

பாடல் முடிந்ததும் வேம்பு ஒரு நிமிடம் தலையைச் சுழற்றி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால்கூட சுந்தரியின் தாலிக்கொடி தப்பியிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.

அருணாசலம் கர்நாடக பெஹாகை வாசிக்க ஆரம்பித்தார்.

“நேனெந்து வெதுகுதுரா”

”வெதுகுதுரா”-வில் அந்தக் குழைவு அவரை என்னமோ செய்தது. ‘உன்னை நான் எங்கப் போய் தேடுவேன்’ என்கிற வரியில் அலைந்து திரிந்து களைத்த அத்தனை சோர்வையும் குழைத்துச் சமைத்தது போல அந்த ‘வெதுகுதுரா’ ஒலிப்பது போல வேம்புவுக்குப் பட்டது.

“உண்மைதானே! என் குரலுக்கு அகப்படறவனா இருந்தா இப்படித் தாலிக் கொடியை வெச்சு இந்தக் கச்சேரி வெக்கற நிலைமைலையா என்ன வெச்சுருப்பான்?”

வேம்புவுக்கு கண்கள் கலங்கின. தலையைக் கவிழ்த்துக் கொண்டு துண்டை முகத்தில் ஒற்றிக் கொண்டார். அருணாசலம் வாசிக்க வாசிக்க அவருக்குக் கண்ணீர் பெருகியது. சில நிமிடங்கள் பொலபொலவென கண்ணீர் உதிர்த்தவுடன் அவர் மனத்திலிருந்து பெரும் பாரம் நீங்குவது போலத் தோன்றியது. அவர் கச்சேரியை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தார்.

அன்றைய பிரதான ராகம் கரஹரப்ரியா. தார ஸ்தாயியில் சஞ்சாரங்கள் ஆரம்பித்ததும் காலக் கடிகாரம் ஸ்தம்பித்துப் போனது. பெரிய பெரிய ஸ்வரச் சுழல்களை தன் அமானுஷ்ய மூச்சுக் காற்றின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாய் ஏவிக் கொண்டிருந்தார் அருணாசலம். ஒவ்வொரு சுழலும் ஒவ்வொரு புஷ்பம் போல விரிய, அந்தப் புஷ்பங்களை இணைக்கும் சிறு நூலாய் ஒலித்தது அவர் மூச்சை அவசரமாய் உள்ளுக்குள் இழுக்கும் ஒலி. ஆலாபனை நிறைவடைந்த போது பெருமாளின் விஸ்வரூபத்துக்குத் தொடுத்த மாலை அந்த காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருந்தது.

‘சக்கனி ராஜமார்கமு’

அருணாசலம் கீர்த்தனை வாசிக்க ஆரம்பித்த போது வேம்புவுக்கு மனம் துலக்கிவிட்டது போல ஆகிவிட்டது. ஒவ்வொரு சங்கதிக்கும் ‘ஆமாம்பா! ஆமாம்பா!’ என்று வாயாரச் சொல்லிச் சொல்லி ரசித்தார் வேம்பு.

கச்சேரி இன்னும் இரண்டு மணி நேரம் தொடர்ந்தபின் வேம்புவை அருகில் அழைத்தார் அருணாசலம்.

“நாளைக்கு ஈரோட்டிலே முகூர்த்தம். இப்ப கிளம்பினாத்தான் ரயிலைப் பிடிக்க முடியும். உத்தரவு கொடுக்கணும்” என்று கையைக் கூப்பி வேண்டிக் கொண்டார்.

“ஆஹா! ஆஹா!” என்றபடி அருணாசலத்தின் விரல்களைப் பற்றிக் கொண்டார் வேம்பு. அவருக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் எழவில்லை.

பிள்ளையாருக்கு தீபாராதனை ஆனதும் மங்களம் வாசித்து கச்சேரியை முடித்தார் அருணாசலம்.

வாத்தியங்களை சிஷ்யர்கள் கட்டிக் கொண்டிருந்த போது மேடையில் பிரமுகர்களும் ரசிகர்களும் அருணாசலத்தை மொய்த்துக் கொண்டனர். வேம்பு ஐயர் மேடைக்கு கீழே காத்துக் கொண்டிருந்தார்.

ஒருவழியாய் மேடையிலிருந்து இறங்கிய கலைஞர்கள் அவசர அவசரமாக ரயிலடிக்குள் புகுந்தனர். முதல் கிளாஸ் பெட்டி வருமிடத்தில் சந்திர விலாஸிலிருந்து சாப்பாட்டுடன் ஓட்டல் பையனொருவன் தயாராக நின்றிருந்தான்.

அருணாசலம் வருவதற்கு காத்திருந்தது போல் வண்டி நடைமேடைக்கு வந்தது.

ரயிலில் ஏறி ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டார் அருணாசலம். ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்தார் வேம்பு.

“ஐயர்வாள்! திருப்திதானே?” என்று கேட்டார் அருணாசலம்.

“இப்பவே எமன் வந்தா சந்தோஷமா செத்துப் போவேன்!” என்றபடி ஒரு பையை நீட்டினார் வேம்பு.

துணிப்பைக்குள் பழங்கள், பூ முதலான பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றுக்கடியில் ஒரு சிறிய கவரில் நூறு ரூபாய் பணத்தை வைத்திருந்தார் வேம்பு. வண்டி ஏறியதும் கொடுத்தால் அதை அருணாசலம் பார்த்து மறுக்க வாய்ப்பு ஏற்படாது என்பது அவர் எண்ணம்.

அருணாசலம் அந்தப் பையை வாங்கி இருக்கையில் வைத்துக் கொண்டார்.

வண்டி கிளம்ப ஆயத்தமானது.

”ஐயர்வாள்! நான் நேற்றைக்கு திருச்செந்தூர் போயிருந்தேன். உங்களுக்குப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்” என்று சிறு பையை எடுத்து வேம்புவிடம் கொடுத்தார்.

வேம்பு வாங்கிக் கொண்டதும் வண்டி நகர ஆரம்பித்தது. கைகளை அந்தப் பையுடன் சேர்த்துக் கூப்பி அருணாசலத்துக்கு விடை கொடுத்தார்.

வண்டி கண்ணை விட்டு நீங்கியதும் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நடந்தபடி கையிலுள்ள பையைப் பிரித்துப் பார்த்தார். திருச்செந்தூர் இலை விபூதி கண்ணில் பட்டது. அதைப் பிரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள நினைத்து கையைப் பைக்குள் விட்டார் வேம்பு.

அவர் விரல்கள் சில்லென்று எதையோ ஸ்பரிசித்தன.

அந்தப் பொருளை வெளியில் எடுத்துப் பார்த்தார் வேம்பு.

சுந்தரியின் தாலிக்கொடி அவர் கண்முன் ஆடியது.

Read Full Post »

காருக்குறிச்சியில் நாகஸ்வர மேதை அருணாசலத்துக்கு ஒரு சிலை இருக்கிறது.

சட்டிப்பானையைக் கவிழ்த்தது போன்ற தலை. குன்னக்குடி வைத்தியநாதனுக்கு சவால்விடும் குங்குமப் பொட்டு. சிறிய சிப்ளா கட்டைகள் போன்ற காதுகள். அளவுக்கு அதிகமாய் நீண்ட கிரேக்க மூக்கு. அதீதமாய் அடர்ந்த புருவங்கள். ஐந்து விரலும் ஒன்றாய் தோன்றும் அதிசய கரங்கள். நகங்களில் நெயில்பாலிஷ். அவசரத்துக்கு ஏதோ வீட்டு குளியலறையிலிருந்து பிடுங்கிய குழாயைப் போன்ற நாகஸ்வரம். நாகஸ்வரம் என்று சொல்லக் கூட தயங்க வைக்கும் அணைசுக்கு அருகில் இருக்கும் வளைவு.

மொத்தத்தில் உள்ளூர்காரர்கள் பார்த்தால் வருந்தும்படியாகவும், வெளியூர்காரர்கள் பார்த்தால் சிரிக்கும்படியான சிலை.

நானும் அந்தச் சிலையைப் பார்த்து சிரித்ததுண்டு. காருக்குறிச்சிக்கு செல்லாதிருந்தவரை.

நான் அங்கு சென்றபோது, சந்தித்த அத்தனை பேரும் இந்தச் சிலையைப் பற்றி தவறாமல் பேசினர்.

“எங்க ஊருக்கே பெருமை அவருதான். நாங்கதான் இப்படி ஒரு சிலையை வெச்சுட்டோம்.”, என்று சொல்லாத ஆளில்லை.

போகும்போதும் வரும்போதும் கண்ணில் பட்டு உறுத்தும் சிலைதான் அவர் நினைவை பசுமையாக வைத்துக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

அந்த ஊரில் ஒரு வயதான பெண்மணி இந்தச் சிலை வந்த கதையைச் சொன்னார்.

காருக்குறிச்சியார் மறைந்த போது அவர் பிறந்த ஊரில் அவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிதி திரட்டப்பட்டதாம். ஊருக்குள் நுழையுமிடத்தில் பிரதான இடமொன்றும் குறிக்கப்பட்டு, நல்லதொரு நாள் பார்த்துச் சிலை திறப்புக்கான விழா ஏற்பாடுகளும் ஆகிவிட்டனவாம்.

சிலையை நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பை ஊரில் ஒருவர் ஏற்றுக் கொண்டதும் அவரிடம் கணிசமான தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காசை வாங்கிக் கொண்ட புண்ணியவானும், ”இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும்”, என்று போக்கு காட்டி சிலைத் திறப்புக்கு இரண்டு நாட்களே இருக்கும் போது சந்தடியில்லாமல் ஊரைவிட்டு ஓடிவிட்டாராம்.

சிலையைத் திறக்க விழாவெல்லாம் ஏற்பாடு செய்து, வெளியூரிலிருந்து முக்கியஸ்தர்களை எல்லாம் அழைத்துவிட்ட நிலையில் சிலை இல்லாவிட்டால் என்ன செய்ய?

காருக்குறிச்சியார் சிலை இருக்கும் தெருவுக்கு அடுத்தார்ப்போல் மன்பாண்டம் செய்யும் குயவர்கள் இன்றும் இருந்து வருகிறார்கள். அவர்கள்தான் ஆபத்பாந்தவர்களாய் உதவியிருக்கின்றனர்.

குறித்த நாளில் மண்ணின் மைந்தனுக்கு சிலை திறப்பு தடையில்லாமல் நிகழ தங்களால் ஆனவற்றை செய்துள்ளார்கள்.

இந்தக் கதையைக் கேட்டதும் அந்தச் சிலையைப் பார்த்தேன்.

பிள்ளையார் சதுர்த்திக்கு அச்சில் வார்த்த அழகான பிள்ளையார்களை கடைகளில் வாங்கி வந்தாலும், வீட்டு வாண்டு ஒன்று நாலைந்து களிமண் உருண்டைகளை உருட்டி “இதுதான் பிள்ளையார்” என்று சொல்லும்போது உலகின் அழகான பிள்ளையார் அதுதான் என்று தோன்றுவது நினைவுக்கு வந்தது.

சங்கீத உலகின் மிக அழகான சிலையாக காருக்குறிச்சியாரின் சிலை என் கண்களுக்குப்பட்டது.

Read Full Post »

காருகுறிச்சியாரின் உசைனியைப் போன்ற கற்பனையைத் தூண்டக் கூடிய பதிவுகளைக் கேட்பதரிது.

ஒருநாள் சென்னையில் ராஜரத்தினம் பிள்ளை ஒரு பூங்கா வழியாய் செல்கிறார். அங்கிருக்கும் வானொலியில் ஒலிபரப்பாகும் உசைனி அவரை கட்டி இழுக்கிறது. காலை எடுத்து வைக்கப் பார்க்கிறார். அவர் உடல் ஒத்துழைக்க மறக்கிறது. நல்ல தஞ்சாவூர் திட்டு வார்த்தையில் இரண்டைச் சொல்லி, ‘வேலையைக் கெடுக்கறானே பாவி’ என்று சமைந்து நிற்கிறார். ராஜரத்தினம் பிள்ளை நிற்கிறார் என்கிறதும் மெதுமெதுவாய் அவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடிவிடுகிறது. உச்சங்களைத் தொட்ட அந்த உசைனி முடியும்போது மெல்ல நகர ஆரம்பிக்கிறார் பிள்ளை. சுற்றி இருந்தக் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. ‘என்னைக் குழி தோண்டிப் புதைக்க இவன் ஒருத்தன் போதும்’ என்று முகத்தில் பெருமை பொங்க நடந்து செல்கிறார் ராஜரத்தினம் பிள்ளை.

இது வரலாற்று உண்மையா? செவி வழிச் செய்தியின் நம்பகத்தன்மை என்ன என்றெல்லாம் சிலர் கேட்கக் கூடும்.

முழுக்க முழுக்க கற்பனையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. அந்த உசைனிக்குப் பொருத்தமான கற்பனைதானே என்று கதைக்கு வக்காலத்து வாங்கத் தோன்றுகிறது.

இது போன்ற அவர் உசைனியை ஒட்டிக் கிடைக்கும் கதைகளையெல்லாம் திரட்டி நெடுங்கதையாய் எழுதக்கூடத் தோன்றுகிறது.

#karukurichi

Read Full Post »

கர்நாடக இசையின் அங்கங்களில் ஸ்தூலமானதைப் பற்றி நிறைய பேச முடியும். அவற்றைப் பற்றி பேசும் போது சாற்றை நீக்கி சக்கையைப் பேசினது போலத் தோன்றும். ஆனால் சூட்சுமமாய் பல அங்கங்கள் உண்டு. அவற்றை திரும்பத் திரும்ப கேட்பதன்/பாடுவதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். உணர்ந்து கொண்டால்கூட அவற்றைப் பற்றி பேசுவது கடினம். நல்ல குருவால் கோடி காட்டமுடியும். கேட்பவருக்குக் கொடுப்பினை இருந்தால் அந்த வழிகாட்டல் அர்த்தமுள்ள பயணமாய் மாறும்.

ஒருமுறை பல்லவிகளைப் பற்றி பேசும் போது, வித்வான் டி.ஆர்.எஸ் சபையினரை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார்.

“கண்டிகி சுந்தர” என்கிற பிரபல வரியை ஒரு பல்லவியாக எப்படி மாற்றுவது?

இதுதான் கேள்வி.

உடன் இருந்த மாணவி பாடிக் காண்பித்தார். பூர்வாங்கம் – அருதிக் கார்வை – உத்தராங்கம் என்று மூன்று பகுதிகள் கொண்ட பல்லவியாய் அந்த வரி மலர்ந்தது.

உடனே டி.ஆர்.எஸ், “பாடிக் காட்டிவிட்டீர்கள். சரிதான். இப்போது சொல்லுங்கள் கீர்த்தனையில் இருந்த வரிக்கும் இப்போது பாடிய பல்லவிக்கும் என்ன வித்தியாசம்?”

பாடிய மாணவி சொல்ல முயன்றார். வார்த்தைகள் வெளிவராமல் திக்கித் தவித்தார்.

டி.ஆர்.எஸ் அந்த வரியை இனொருமுறை பாடினார்.

“நன்றாக கவனியுங்கள். சுந்தர என்று அருதியை நெருங்கும் இடத்தை கவனியுங்கள். ஒருவித ஃப்ரிக்‌ஷனை உணரமுடிகிறதா? இந்த ஃப்ரிக்‌ஷன் கர்நாடக சங்கீதத்தின் சூட்சமங்களில் முக்கியமான ஒன்று”, என்றார்.

பின்னர் ஒருமுறை அவரை அண்ணா நகர் வீட்டில் சந்திக்கும் போது, “சார், நீங்கள் சொன்ன ஃப்ரிக்ஷன் பல்லவிக்கு மட்டுமில்லை என்று தோன்றுகிறது. செம்மங்குடி பாடும் ‘இந்த பராகா’-வில் ரகரத்தைக் கொஞ்சம் வல்லினமாக்கி ஒலிக்க வைப்பது கூட இந்த ஃப்ரிக்‌ஷன்தானோ என்று தோன்றுகிறது”, என்றேன்.

“சந்தேகமென்ன? ஒரு சீரான போக்கில் சிறு சலனம் ஒன்றை எழுப்பினால்தான் ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. அவை சுழன்று கொண்டெ இருக்கும். இந்த ஃப்ரி்க்‌ஷனை வைத்துதான் அந்தச் சக்கரங்களை ஒன்றோடு ஒன்று உராயச் செய்யமுடியும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களும் உணர்ந்து கொள்ள வைக்கும். நிரவலில் ஒதுக்கல்கள், கோர்வைகளில் மௌனமாய் ஒலிக்கும் கார்வைகள் எல்லாம் இந்த ஃப்ரி்க்ஷன்தான்”, என்றார்.”

இந்த ஃப்ரி்க்ஷன் தேவைப்படாதவர்கள் இரண்டே பேர்தன் நம் சங்கீதத்தில்”, என்று அவரே தொடர்ந்தார்.“ஒன்று ராஜரத்தினம் பிள்ளை. அவர் வாசிப்பு காட்டாற்று வெள்ளம். கண்ணை மூடிக் கொண்டு அந்த சுழலுக்குள் சென்றுவிட வேண்டியதுதான். அரை மணியோ, ஆறு மணியோ – அதன்போக்கில் சுழன்றுவிட்டு வெளியில் தள்ளும் போது கண்ணைத் திறந்தால் போதும். இன்னொருவர் மதுரை மணி. பனிச்சறுக்கு செல்லும் போது ஃப்ரிக்ஷன் வேண்டுமென்றா கேட்போம்? ஒலிம்பிக்கில் ஐஸ் ஸ்கேட்டிங் பார்க்கும் போதெல்லாம் மதுரை மணி ஐயரைத்தான் நினைத்துக் கொள்வேன்”. என்றார்.

இன்று டி.ஆர்.எஸ் இருந்திருந்தால், காருகுறிச்சியாரின் சங்கீதத்தில் நீங்கள் சொன்ன ஃப்ரிக்ஷனைக் கண்டுகொண்டேன் என்று சொல்லியிருப்பேன்.

அவரிடம் ஒரு கருத்தைச் சொன்னால், ‘உனக்கென்னடா தெரியும்? உளராதே!’, என்று ஒருநாளும் சொன்னதில்லை. நம் கருத்தை அமோதிப்பது போல் தொடங்கி இன்னும் துலக்கிக் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.

காருகுறிச்சியாரின் ராக ஆலாபனைகளில் ஆங்காங்கே பொறி பறக்க அவரது நையாண்டி மேளப் பின்புலத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என்று தோன்றுகிறது.

கர்நாடக இசை கச்சேரி வடிவத்தின் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளைப் பார்த்தால் பல ராகங்களிலும், பாடல் வடிவங்களிலும் உள்ள ‘கர்நாடக’ தன்மை அதிகரித்து வருவதை உணர முடியும். தேசீய ராகத்தையோ, காவிடிச் சிந்தையோ எடுத்துக் கொண்டு நூறு வருடத்துக்கு முன்னால் இருந்த வடிவத்தோடு இன்றைய வடிவத்தை நோக்கினால் இதை உணர்ந்து கொள்ள முடியும்.

செவ்வியல் இசையாக இருந்தாலும் கிராமிய இசை என்றாலும் இருக்கின்ற ஸ்வரஸ்தானங்கள் ஒன்றுதான். அந்த ஸ்வரங்களின் சஞ்சாரங்களில் உள்ள அசைவுகளும் வளைவுகளுமே இவ்விரு இசை வடிவத்துக்கான வேறுபாட்டைக் காட்டுகின்றன. காருகுறிச்சியாரின் வாசிப்பில் எதிர்பாரா சமயங்களில் வெளிப்படும் கர்நாடக இசையில் அதிகம் காணக்கிடைக்காத கிராமிய வளைவுகள் ஆங்காங்கே மின்னி கேட்பவரின் மனக்கண் முன் டி.ஆர்.எஸ் சொன்ன தீப்பொறிகளைக் காட்டுகின்றன.

இந்த அணுகுமுறையை உசைனி, யதுகுலகாம்போதி போன்ற கிராமிய பின்புலம் கொண்ட ராகங்களில் மட்டுமல்ல – உங்களுக்கு பேறிருப்பின் வாசஸ்பதியிலும், நடபைரவியிலும் கூட கண்டுகொள்ளலாம்.

Read Full Post »