Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘musicfest09’

டிசம்பர் 26-ம் தேதி காலையில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் வீணை ஜெயந்தியின் கச்சேரி.

நல்லதோர் வீணை (கலைஞரைச்) செய்தே – அவரை
நலங்கெட கூட்டமில்லா ஸ்லாட்டுகளில் இடுவதுண்டோ

நான்கு வருடங்களாய் நானும் பார்க்கிறேன், இந்த அற்புதமான வாசிப்பு, நல்ல கூட்டமுள்ள இடத்தில் அரங்கேறும் என்று!

ம்ஹும்! சரஸ்வதியே இன்று சீஸனுக்கு வந்தால் கூட, “வீணையெல்லாம் வாசிச்சா ப்ரைம் ஸ்லாட் கிடைதும்மா! வேணும்-னா, வாய்ப்பாட்டு பாடு. பாடினாப் போறாது, நல்ல ஷோக்கா அலங்காரம் பண்ணிக்கணும். கண்ணை எப்ப மூடணும், கையை எப்பத் தூக்கணும், எப்ப மந்தகாஸம் புரியணும்-னு எல்லாம் coaching class-ல சேர்ந்து கத்துக்கணும். கர்நாகடம் எல்லாம் தூக்கி கிடப்புல போட்டுட்டு, அடித் தொண்டையில் கத்தற அபங்கம், rap song மாதிரி வர தில்லானா எல்லாம் பாடம் பண்ணனும். அப்புறம்தான் ப்ரைம் ஸ்லாட்!”, என்று சபை காரியதரிசிகள் சொல்லக் கூடும்.

அவர்களும் என்ன செய்வார்கள் பாவம். காலை வேளை கச்சேரிகளில் கூட, வாய்ப்பாட்டு என்றால் 40-50 பேராவது வருகின்றனர். வாத்தியம் என்றால், விரல் விட்டு எண்ணிவிடலாம். வீணையின் குழைவையும், கம்பீரத்தையும், அந்த வாத்தியத்தில் வெளிப்படும் கமகங்களின் யௌவனத்தையும் எந்த வாய்ப்பாட்டுக்காரனும் வெளிப்படுத்த முடியாது. கல்யாணங்களில் கூட சாக்ஸஃபோன் ஒலிக்கும் கால்மய்யா இது.  வீணை வீணாய் போவதில் ஆச்சர்யம் என்ன?

எது எப்படியோ. கேட்ட சொர்ப்பமானவரகளுக்குக் கொடுத்து வைத்திருந்தது.

கூட்டமின்மை. போதிய நேரமின்மை. அரங்கின் ஒலியமைப்பு. பக்கவாத்தியங்களின் இடைஞல்கள். இது அத்தனையும் மீறி நெஞ்சைத் தொட்ட வாசிப்பை அளித்தார் ஜெயந்தி.

மாளவிகா ஒரு ஸ்லோகம் பாட, காலை ராகமான கர்நாடக சுத்தஸாவேரியில் ’ஏகாம்ரேஸ’ கிருதியில் கச்சேரியைத் தொடங்கினார் ஜெயந்தி. ஸ்வரப்ரஸ்தாரத்தில் மான் கூட்டத் துள்ளல்! அதைத் தொடர்ந்த விஜ நாகரி — த்ஸொ த்ஸொ — கேட்டே எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. தியாகராஜ பாகவதர், “சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்” என்று பாடி பட்டிதொட்டியெல்லாம் பரப்பிய ராகம். சம்பிரதாயமாய் பூர்வி கல்யாணி, பந்துவராளி என்று கச்சேரியின் முதல் பிரதான ராகமாய் ஒரு பிரதி மத்யம ராகத்தைப் பாடுபவர்கள், இது போன்ற ராகங்களை எடுத்துக் கொள்ளலாம். பாரதி சொல்வதைப் போல, தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு எல்லாம் இருபுச் செவிகளாகத்தான் இருக்க முடியும். இல்லையெனில் கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்க முட்டி மோதும் கூட்டம், புதியதை இசைப்பவர்களுக்கு வராமல் இருக்குமா?

ஜெயந்தியின் வாசிப்பில் Discipline என்ற பெயரில் தளைகளைத் தானே மாட்டிக் கொள்ளும் இயல்பும் இல்லை. Adventure என்கிற பெயரில் கண்டதை வாசிக்கும் இயல்பும் இல்லை. லால்குடி (இவர் குரு பத்மாவதி லால்குடியின் சகோதரி) வழியும், பாலசந்தர் வழியும் அற்புதமாய் சங்கமிக்கும் பாணியை தனக்கென்று அமைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த வருடம் காம்போதி, கரஹரப்ரியா, சாவேரி, வராளி போன்ற ராகங்களை கேட்கவே முடியவில்லை (நான் போன இடங்களில்). ஆனால் எக்கெச்செக்க இடங்களில் வஸந்தா, லதாங்கி, பேகடா போன்ற ராகங்கள் துரத்தின. ஜெயந்தியும்  விஸ்தாரமாக வசந்தா வாசித்தார். விறுவிறுப்பான காலப்ரமாணத்தில் ‘ராமசந்த்ரம் பாவயாமி’ வாசித்து, அதற்கு contrast-ஆக ஷ்யாமா சாஸ்திரியின் யதுகுல காம்போதி ஸ்வரஜதி வாசித்தார்.

ஸ்வரஜதியின் அழகுக்கு எவ்வளவு தூரம் பங்கம் விளைவிக்க முடியுமோ, அப்படி இருந்தது கடம் வாசித்த கிரிதர் உடுப்பாவின் வாசிப்பு. யதுகுல காம்போதி, “ஐயோ, என்னை உடுப்பா”, என்று கெஞ்சிக் கதறிய போது, அவர் கடத்தில் உருட்டிப் பெருக்கி வாசித்த ஃபரன்களை அவர் விடுவதாக இல்லை. போதாக் குறைக்கு, மிருதங்கத்தை விட, கடத்தின் ஒலி அளவு அதிகமாகி, மாளவிகா பாடிய சாஹித்யங்களைக் கொஞ்சம் கூட கேட்க விடாமல் செய்தது.  தாளத்தை, 4-ம் 2-ம் ஆறு. அதோடு 2 கூட்டினா எட்டு, என்று கணக்கு பண்ணி வாசித்தால் மட்டும் போதாது. பாடலுக்கு ஒரு பாவம் உண்டு, சவுக்கமான ஸ்வார்ஜதியைத் தடியால் அடித்தால் தாளம் முருங்கை மர வாழ் இனமாகி விடும். நல்ல காலமாய், ஆலாபனை என்று ஒன்று இருக்கிறதோ, இந்த தடாலடியிலிருந்து தப்பித்தோமோ.

 
பிரதான ராகமாக தர்மவதியை எடுத்துக் கொண்டார் ஜெயந்தி. விஜயநாகரியின் தாய் ராகம்தானே தர்மவதி? இரண்டையும் ஒரே கச்சேரியில் வாசித்திருக்க வேண்டுமா, என்ற கேள்வி எழுந்தாலும், கேட்க நன்றாகத்தான் இருந்தது. தர்மவதியின் உருக்கம் முழுவதும் வெளிப்படும் வகையில் ஆலாபனை செய்து முடிக்கும் போதே, நேரம் நிறைய ஆகிவிட்டது. வீணையில் தானம் கேட்பதே தனி சுகம். அந்த சுகம் இன்னும் கொஞ்சம் நீடித்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. மூன்று மணி நேர கச்சேரியாய் இருந்தால் நிறைய வாசிக்கலாம், இரண்டு மணி நேரத்தில் இவ்வளவுதான் வாசிக்க முடியும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். ராகமாலிகையில் வாசித்த ஹம்சத்வனி, சுத்த தன்யாஸி, அம்ருதவர்ஷிணி, குமுதக்ரியா, மோகனம் போன்ற ராகங்கள் கேட்க ரொம்பவே நன்றாக இருந்தன. இருப்பினும், RTP ஒரு மணி நேரம் வாசித்தால், பத்து நிமிடம் ராகமாலிகை வாசிக்கலாம். பத்து நிமிட பல்லவிக்குப் பிறகு, பத்து நிமிடங்கள் ராகமாலிகை வாசிப்பது எனக்கு நிறைவளிக்கவில்லை. தர்மவதியிலேயே இன்னும் நிறைய வாசிக்க இருந்ததாய்த் தோன்றியது.

தனி ஆவர்த்தனத்தில், மிருதங்க வித்வான் அர்ஜுன் குமார், பளிச்சென்று வைத்த தீர்மானங்களுக்கு எல்லாம் அமைதியாக இருந்த கூட்டம் (கூட்டம்-னா இருந்த சொர்ப்பமானவர்கள்). கட வித்வான், கடமுட கடமுட என்று உருட்டிய போது, காணாததைக் கண்டது போல சிலாகித்து கைதட்டியது.

தேஷ் ராகத்தில், ‘துன்பம் நேர்கையில்’ வாசித்து கச்சேரியை நிறைவு செய்தார். இப்படிப் பட்ட கச்சேரிக்கு கூட்டமே இல்லாத்தைக் கண்டு எனக்குள் எழுந்த துன்பத்தைப் போக்க ஜெயந்தி, யாழின் இன்றைய உருவமான வீணையில் இன்பம் சேர்த்தது போல எனக்கு பிரம்மை ஏற்பட்டது.

அடுத்த நாள், காலை அகாடமியில் ஜெயந்தியின் lec-dem-க்கு ஓரளவு கூட்டம் இருந்ததைக் காண சந்தோஷமாக இருந்தது. மைசூர் பாணி, தஞ்சாவூர் பாணி, ஆந்திர பாணி, கேரள பாணி என்று வீணை வாசிப்பில் இருக்கும் பல வகைகளை, அற்புதமாக வாசித்தும், media-வில் காண்பித்தும் விளக்கினார்.

வீணையின் அமைப்பு, வாசிப்பவர்களின் technique (விரலை அதிகம் பிரித்து வாசிக்கும் முறை, ஒரே fret-ல் அநேக ஸ்வரங்கள் வாசிக்கும் முறை. மீட்டு தந்திகளை உபயோகிக்கும் முறை, sympathetic strings-ன் பங்கு), கிருதி வாசிப்பதில் இருக்கும் வேறுபாடுகள், வாய்ப்பாட்டைப் போலவே வாசிப்பது, அல்லது வேறு மாதிரியாக வாசிப்பது, என்று பல விஷயங்களை தடங்கலின்று விளக்கினார்.  இந்த நிகழ்ச்சிக்காக மெனக்கெட்டு சேகரித்திருக்கும் ஒலி/ஒளித் தரவுகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை. இந்த நிகழ்ச்சியின் பதிவை டிவிடி-யாக வெளியிட்டால், மாணவர்களுக்கும் ரசிகர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

காரைக்குடி சகோதரர்களுள் ஒருவர் வீணை நிமிர்த்தி வைத்து வாசிப்பாரே, அதைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நேரமிருக்கவில்லை.

இந்த சீஸனில் ஒவ்வொரு lec-dem போதும், நேரம் பற்றவில்லை என்றே கேட்ட அனைவரும் நினைத்தனர். அப்படியிருக்கையில், இரண்டு மணி நேரத்துக்கு இரண்டு டெமான்ஸ்ட்ரேஷன் என்பதற்கு பதிலாக, ஒரு நிகழ்ச்சியை வைத்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். lec-dem முடிந்ததும், experts committee member சம்பிரதாயமாக வாழ்த்திப் பேசுவது மட்டுமின்றி, கேள்விகளைக் கேட்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் சந்தேகங்கள் தீரும்.

இந்த வருடம் ஜெயந்திக்கு lec-dem-க்கு வாய்ப்பளித்த அகாடமி, அடுத்த வருடம் கச்சேரிகளில் ப்ரைம் ஸ்லாட் கொடுக்க பிரார்த்திப்போம்!

பி.கு:  சபா நடத்தும் பெருமான்களே! உங்கள் தரித்திர புத்தியை வருடம் தவறாமல் மேடையில் கட்டும் பேனரில் காட்டியே தீர் வேண்டும் என்று வேண்டுதலா? வருடா வருடம் அதே மஞ்சக் கலர் கண்றாவி பேனரில், ஆண்டு எண்ணை மட்டும் மாற்றி, மேடை மேல் வைப்பது பார்க்க சகிக்கவில்லையே, ஏன் மாற்றித் தொலைய மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறீர்?

Read Full Post »

அரிய பாடல்களை, நிதானமான சங்கீதத்தை, குரல் இருக்கிறது என்பதற்காக கச்சேரி மேடையை சர்கஸ் கூடாரமாக மாற்றாமல் இருக்கும் கலைஞரைக் கேட்க விழைவோர் நிச்சயம் விஜயலட்சுமி சுப்ரமணியத்தின் கச்சேரிகளைக் கேட்க வேண்டும். இந்த வருடம் அகாடமியில், “வாங்கும் எனக்கு இரு கை” (ஐயா தமிழிசை விரும்பிகளே! அகாடமியில் தமிழ்ப் பாடல் மெயின் ஐட்டமாக அரங்கேறியுள்ளது!), “அருள் செய்ய வேண்டுமையா”, “நாட்டைகுறிஞ்சி ராகம் தானம் பல்லவி”, ஆகியவை இடம் பெற்றனவாம். இந்தக் கச்சேரியைக் கேட்ட என் அம்மா, ரொம்பவே சிலாகித்துச் சொன்னதால், அடுத்த நாளே ரஸிகா ஃபைன் ஆர்ட்ஸில் இவரைக் கேட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தேன். டாக்டர் நர்மதா, தஞ்சாவூர் ராமதாஸ் போன்ற சீனியர் வித்வான்கள் உடன் வாசிக்கிறார்கள் என்பதும் என் முடிவுக்கு முக்கிய காரணம். கச்சேரிக்கு முன், விஜயலட்சுமியைத் தொடர்பு கொண்டு ‘காந்தாமணி’ ராகத்தில் ‘நாத சுகம்’ என்ற கிருதியைப் பாட வேண்டிக் கோரினேன்.

ஜி.என்.பி மலர் வேலைகளை முடித்துக் கொண்டு, மயிலாப்பூரிலிருந்து மாம்பலம் செல்வதற்குள் நவராகமாலிகை வர்ணம் முடிந்து, மோகன ராகத்தில், “ராமா நின்னு” பாடிக் கொண்டிருந்தார். அரங்கின் வாயிலில், கச்சேரி விவரமெல்லாம் கண்ணில் படும்படியாக இல்லை. காண்டீனில் இன்றைய ஸ்பெஷல் சமாசாரங்கள் நிச்சயம் கண்ணில் படும் வகையில் வைக்கப்பட்டிருந்தன. மணியம் செல்வனின் கைவண்ணத்தில், ஜி.என்.பி கம்பீரமாக மேடையில் மெகா சைஸ் பேனராக வீற்றிருந்தார்.

விறுவிறுப்பான காலப்ரமாணத்தில், மோகன ராகத்தில் அமைந்த கல்பனை ஸ்வரங்கள் கச்சேரியை களை கட்ட வைத்தன. ஜெகன் மோகினி ராகத்தில், அரக்க பரக்க “சோபில்லு” கேட்டுப் பழகியவர்களுக்கு, அன்று விஜயலட்சுமி பாடிய ஆலாபனை pleasant surprise ஆக இருந்திருக்கும். முதல் பிடியிலேயே ராகத்தைக் காட்டி, மற்ற ராகங்களின் சாயை வராமல், ஜகன்மோகினிக்கென்று பிரத்யேகமாய் ஓர் உருவளித்த விதம் வெகு அழகு. சோபில்லு கிருதியில், வழக்கமான சங்கதிகளைத் (வழக்கம் என்றால், ஜி.என்.பி பாடிய சங்கதிகள்) தவிர, புதிதாக மலர்ந்த ஒரு சங்கதி நன்றாக இருந்தது.

தோடியை கண நேரத்துக்குள் கோடி காட்டி, ‘தணிகை வளர் சரவண  பவா’ பாடினார். “துள்ளி விளையாடி வரும்” என்ற இடத்தில் செய்த நிரவல் பன்னிரு கையனின் வாகனத்தின் பல்வேறு அசைவுகளைச் சித்தரிக்கும் வகையில் செம்மையாக அமைந்தது. விஜயலட்சுமி ஸ்வரம் பாடும் போது, பெரும்பாலும் ஸர்வலுகுவாகவே பாடுகிறார். அனுமார் வால் போல் நீட்டிக் கொண்டு போகாமல், சின்னச் சின்ன கீற்றுகளாய் பாடப்படும் கல்பனை ஸ்வரங்கள் அற்புதமாய் அமைகின்றன. அவ்வப்போது, தெறிக்கும் கணக்குகள் அவரது லக்ஷண ஞானத்தைக் காட்டுகின்றன. அப்படி லக்ஷணமாய்ப் பாடும் போதும், ராக பாவம் கெடாமல் பாடுவது தனிச் சிறப்பு. மேடையில் அமைந்த கலைஞர்கள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொண்டதைப் பார்க்க நிறைவாக இருந்தது. நிரவல் ஸ்வரமெல்லாம், கடைசியில் பெரியதாகப் பாடி, வயலினுக்கு விடாமல் கிருதியை நிறைவு செய்யும் சின்னத் தனங்களில் எல்லாம் விஜயலட்சுமி ஈடுபடவில்லை. டாக்டர் நர்மதாவும், பாடகரை நிழல் போலத் தொடர்ந்து, தன் வித்தையைப் பறை சாற்றுவதைவிட, பாட்டை போஷிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.

தீட்சிதரின் ‘அர்தநாரீஸ்வரம்’ குமுதக்ரியா ராகத்தில் அமைந்த master piece. அதைப் பாடுவதற்கு முன் ஹிந்துஸ்தானி phrases நிறைய வரும் வகையில் அற்புதமாய்ப் பாடினார். கிருதியும் நல்ல பாவத்துடன் அமைந்தது. கடைசியில் பாடிய hindustani type taans-ஐ என்னால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. அதற்கு பதிலாய் நாலு ஆவர்த்தம் ஸ்வரம் பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. அன்று பாடிய taans, பாடகரின் குரலைக் கொஞ்சம் பாதித்து போலத் தோன்றியது. அடுத்து பாடிய ‘சாயா நாட்டை’ ராகத்தில் ‘இதி சமயமுரா’ கிருதியிலும் இந்த பாதிப்பு அவர் குரலில் தென்பட்டது.

அடுத்ததாகப் பாடிய சங்கராபரண ராகத்தின் போது, குரல் பழைய நிலைக்குத் திரும்பியது. இழைத்து இழைத்து, பஞ்சமம், தார ஷட்ஜம், தார காந்தாரம் என்று படிப்படியாய் ராகத்தை வளர்த்தார். ‘ஸரோஜ தள நேத்ரி’ என்ற ஷ்யாமா சாஸ்திரியின் கிருதியைப் பாடினார். ‘கோரிவச்சின வாரி’ என்ற வரியில் நிறைய சங்கதிகள் பாட ஆரம்பித்த போது, “ஸாம கான வினோதினி” என்ற அற்புதமான வரியில் நிரவல் செய்யாமல் இந்த வரியிலேயே நிரவல் செய்வாரோ என்று பயந்தேன். நல்ல காலம், அப்படி எதுவும் நடக்கவில்லை.  “ஸாம கான”-வின் நிதானமாய் நிரவல் ஸ்வரம் பாடி, தனி ஆவர்த்தனத்துக்கு விட்டார். தஞ்சாவூர் ராமதாஸ் போட்ட லய முடிச்சுகளை எல்லாம் இளைஞர் ஹரிஹர சர்மா அலட்டிக் கொள்ளாமல் அவிழ்த்தார். குறிப்பாக ராமதாஸ் வாசித்த திஸ்ர நடை வெகு அற்புதமாக இருந்தது. கடைசியில் வைத்த கோர்வை பிரபலமான ஒன்றுதான் என்ற போதும், வாசித்த விதம் ரசிக்கும் படி இருந்தது. இவ்வளவு நன்றாக வாசிப்பவர் ஏன் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார் என்று எண்ணினேன்.

தனியைத் தொடர்ந்து ஜி.என்.பி-யின் ரஞ்சனி நிரஞ்சனி பாடினார். அது வரை, கச்சேரியில், அதிகம் கேட்கக் கிடைக்காத பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த போதும், நான் பாடும் படு கேட்டுக் கொண்ட பாடல் வரவில்லையே என்ற ஏக்கமும் மேலெழுந்தது. ஸ்ருதியை மத்யம ஸ்ருதிக்கு மாற்றியதும், காந்தாமணிதான் அடுத்தது என்று ஊகித்தேன். லேசாக ராகத்தைப் பாடி, “நாத சுகம்” பாடினார். “பூந்தாழ் அணி குழல் காந்தாமணி” என்ற வரி என்னைச் சொக்க வைத்தது.

காபி, சிந்து பைரவி, யமன் கல்யாணில் நெக்குருக ஒரு ஸ்லோகம் பாடி, எம்.எஸ் பிரபல படுத்திய “பாயவாமி கோபாலபாலம்” பாடி, நிறைவாக மங்களம் பாடிய போது, ரசிகர்கள் மனமும் நிறைவாகியிருக்கும் என்பது உறுதி.

Read Full Post »

சில வாரங்கள் முன், டி.என்.கிருஷ்ணனின் அகாடமி கச்சேரிகள் பற்றி எழுதியிருந்தேன். ஜனவரி 1-ம் தேது அவர் அகாடமியில் (சில வருடங்களாக) வாசிக்காததால், அவர் கச்சேரிகள் கேட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

டி.என்.கிருஷ்ணனுக்கு மட்டும் என்ன வயது கொஞ்சமாகவா ஆகிறது? ரொம்ப அற்புதமாய் அவர் வாசித்தக் கச்சேரிகளைக் கேட்டுவிட்டு, இப்போது கேட்டு, அது சரியாக அமையவில்லை என்றால், மனதுக்கு கஷ்டமாக இருக்குமே என்ற எண்ணம் வேறு.

டிசம்பர் 25-ம் தேதி காலையில், அகாடமியில் லால்குடி ஜி.என்.பி-யைப் பற்றி பேசுவதாக இருந்ததால், காலையில் 8.00 மணிக்கே அகாடமியில் ஆஜர். நான் அரங்குக்குள் செல்வதற்குள், அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. லால்குடி பல வருடங்களுக்கு முன் பேசிய ஒலிப்பதிவிலிருந்து சில பகுதிகள், லால்குடியும் ஜி.என்.பி-யும் சேர்ந்து வாசித்த கச்சேரிகளில் இருந்து சில பகுதிகள் என்று ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் அற்புதமாய் தொகுத்து வழங்கினார். குறிப்பாக, ஜி.என்.பி-க்கு லால்குடி வாசித்த முதல் கச்சேரி, ஸ்வரம் பாடும் போது ஜி.என்.பி வைக்கும் பொருத்தங்கள், சிவசக்தி ராகம் உருவான கதை, பக்கவாத்தியங்களை உற்சாகப்படுத்திப் பாராட்டும் பாங்கு போன்ற விஷயங்களைப் பற்றி கூறிய விதம் ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது.

lec-dem முடிந்ததும் டி.என்.கிருஷ்ணன் கச்சேரிக்கு செல்லலாமா வேண்டாமா என்று குழப்பம். காலையில் எதுவும் சாப்பிடாததால் காண்டீனுக்குச் செல்லலாம், சாப்பிட்ட பின் முடிவு செய்து கொள்ளலாம் என்று காண்டீனுக்குச் சென்றேன். அங்கு போனால், அனுமார் வால் போல் கூட்டம். இது சரிப்படாது என்று அரங்கினுள் நுழைந்தேன். நான் நுழைந்த போது, கல்யாணி ராக வர்ணம் தொடங்கியது. வர்ணத்திலும், அதனைத் தொடர்ந்த ‘எந்தரோ’-விலும் கால்ப்ரமாணம் கொஞ்சம் முன்னும் பின்னுமாக இருந்தது போலத் தோன்றியது. ‘சீக்கிரம் கிளம்பவேண்டியதுதான்’, என்று நினைக்கும் போது, பூர்வி கல்யாணி ராகம் வாசிக்க ஆரம்பித்தார் கிருஷ்ணன். மேல் ஷட்ஜத்தை நோக்கி நகர்ந்து, கடைசியில் ஷட்ஜத்தில் நின்று கார்வை கொடுக்கும் போது, வயலினின் ஒலியை பாதியாக்கி, மெல்லினமாய் ஸ்ருதியோடு இழைய விட்டவுடன், பசி பறந்தோடிவிட்டது. கச்சேரியில், இந்த இடத்திலிருந்து Krishnan of the past கேட்கக் கிடைத்தார்.

ஞானமொஸகராதா வாசித்து, நிதானமாய் “பரமாத்முடு ஜீவாத்முடு”-வில் நிரவல் வாசித்தார். கண்ணை மூடினால், வாசிப்பது கிருஷ்ணனா, விஜி-யா என்று கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தது விஜி-யின் வாசிப்பு. எண்பதைத் தாண்டியும் கிருஷ்ணனின் கைகளில் பேசும் துரிதம் பிரமிக்க வைத்தது. பக்தவத்சலத்தின் வாசிப்பு அன்று sweetness personified. இவர் அடியாய் அடித்துத் தொப்பியைக் கிழித்த கச்சேரிகள் சிலவும் நான் கேட்டுள்ளேன். ஆனால், கிருஷ்ணனுக்கு வாசித்த கச்சேரிகள் அனைத்திலும் இவர் வாசிப்பு பரிமளிக்கும். சுநாதமாய்த் குமுக்கி, ஸ்ருதியோடு குழையும் மீட்டு, கம்பீரமாய் ஒலிக்கும் டேக்கா என்று கச்சேரியை வேறொரு தளத்துக்கு இட்டுச் சென்றது பக்தவத்சலத்தில் வாசிப்பு.

கச்சேரிக்கு நடுவில், வலையப்பட்டி வந்து முதல் வரிசையில் உட்கார்ந்த போது, தவில்காரரைப் பார்த்ததும், பக்தவத்சலம், (வாத்தியத்தின்) மிருதவுவான அங்கங்களைப் புண்ணாக்கி விடுவாரோ என்று பயந்தேன். நல்ல வேலையாக அப்படி ஒன்றும் ஆகவில்லை.

கச்சேரியை, எக்கெச்சக்க உருப்படிகள் கொண்டு அடைக்காமல், கச்சேரி தொடம்ங்கிய முக்கால் மணி நேரத்துக்குள், மெயின் உருப்படியை வாசிக்க ஆரம்பித்தார். பைரவியை, ஆர அமர மூன்று ஸ்தாயிகளிலும் வாசித்து ஒரு meditative mood-ஐ உருவாக்கி, அது கெடாத வண்னம் “காமாட்சி” (பைரவி ஸ்வரஜதி) வாசித்தார். இதைக் கேட்டே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

அடிக்கடிப் பாடிக் கொண்டிருந்த டி.எம்.கிருஷ்ணா கூட சமீபகாலமாய், இதைப் பாடுவதாகத் தெரியவில்லை. “ஷ்யாம கிருஷ்ண சகோதரி” என்ற வரியை நிரவலுக்கு எடுத்துக் கொண்டார். கல்பனை ஸ்வரங்களை, சர்கஸ் ஜாலங்கள் ஏதுமின்றி, பைரவியின் பாவங்கள் சொட்டச் சொட்ட வாசித்து, தனி ஆவர்த்தனத்துக்கு விட்டார்.

ஆதி தாள தனி ஆவர்த்தங்களையே கேட்டு கேட்டு அலுத்த நிலையில், மிஸ்ரத்தில் தனி கேட்க நன்றாக இருந்தது. (தனி முடிந்ததும், கிருஷ்ணனே இதைச் சொன்னார்). குறிப்பாக, மிஸ்ர சாபு-வுக்குள், ஒவ்வொரு தட்டையும் திஸ்ரமாக்கி, வாசித்த அமைப்புகள், கரணம் தப்பினால் மரணம் வகை என்றாலும், கேட்க சுகானுபவமாகவே அமைந்தன. பக்தவத்சலமமும், கோபாலகிருஷ்ணனும் எத்தனை துரிதமாக வாசித்தும் , வாத்தியத்தை அடிக்கமால் வாசித்தது தனிச் சிறப்பு. இறுதியில் வைத்த கோர்வையும் வெகு அழகாக இருந்தது (என்பதற்கு மேல், எனக்குச் சொல்லத் தெரியவில்லை.).

தனி முடிந்த போது மணி 11.00. கச்சேரி நிறைவாக இன்னும் 45 நிமிடங்கள் இருந்தது.  “இந்த பைரவிக்கு மேல் கேட்க என்ன இருக்கிறது?”, என்று நினைத்து, வயிற்றுக்குத் தீனி போட எண்ணிக் கிளம்பினேன். வாயிலை அடையும் போது, காபி ராகம் இழையோட ஆரம்பித்தது. அடுத்த நாலு நிமிடங்களுக்குள் எனக்கேற்பட்ட உணர்வுகளைச் சொல்ல தியாகராஜரிடம் இருந்து கடன் வாங்க வேண்டும். “இந்த சௌக்யமனினே ஜெப்ப ஜால எந்தோ ப்ரேமோ எவரிகி தெலுஸுனோ?” என்ற கிருதியில்  “ராமன் என்ற பிரம்மானந்தத்தை, அவனது அன்பின் அளவை, இவ்வளவு என்று யாரால் நிர்ணயித்துச் சொல்ல முடியும்?”, என்கிறார். இதைச் சொல்ல அவர் காபி ராகத்தைத்தான் உபயோகிக்கிறார். அன்று கிருஷ்ணன் வாசித்த காபி, தியாகராஜ அனுபத்தின் வேறொரு copy. ஆனால், என் அனுபவமோ copy அல்ல நிஜம்:-). எப்பேர்பட்ட வாசிப்பு என்றால் யாரால் சொல்ல முடியும்? கேட்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள்!

வழக்கமாய், பதினைந்து நிமிடங்களுக்குள் பாடும் சம்பிரதாய ராகம் தானம் பல்லவியை, நான் சிறிதும் விரும்ப மாட்டேன். அன்று கிருஷ்ணன் சரியாய் 15 நிமிடங்கள்தான் RTP வாசித்தார். அதுவே காபியின் மொத்த அழைகையும் குழைத்துக் கொடுக்கப் போதுமானதாய் இருந்தது.

காபி-யைக் கேட்ட பின், அகாடமி கேண்டீனில், மிளகு குழம்பு சாதத்தை ஒரு பிடி பிடித்தே, இரண்டு ப்ளேட் கபளீகரம் செய்துவிட்டு, அரங்கினுள் திரும்பி நுழைவத்ற்குள், சுருட்டி ராகத்தில் திருப்பாவை வாசித்து முடித்துவிட்டு, கிருஸ்துமஸ்-காக  ‘jingle bells’ வாசித்தார். எனக்கென்னவோ அது உறுத்தலாக இல்லை. ஆனால், பலர்  கச்சேரி முடிந்ததும், ‘சாஸ்த்ரோக்தமா வாசிக்கற ஆள், இப்படி ஜிங்கிள் பெல் எல்லாம் வாசிக்கணுமா?’, என்று அங்கலாய்த்தனர்.

சிந்து பைரவி ஒரு ‘TNK special’ ராகம். அவரது usual standard-ல் வாசித்து என்னைக் கண் கலங்கச் செய்தார். சிந்து பைரவி முடிந்தும், கொஞ்சம் நேரம் இருந்ததால், ஆர அமர சவுக்கமான கால்ப்ரமாணத்தில் மங்களம் வாசித்தார். “அட! இவ்வளவு அழகான பாடலையா, ராஜதானி வேகத்தில் எல்லோரும் பாடுகின்றனர்!”, என்று வியந்தேன்.

கச்சேரி முடிந்ததும், மூன்று நிமிடங்கள் விடாமல் கரகோஷம் எழுப்பி standing ovation கொடுத்தனர் அகாடமி ரசிகர்கள்.

என் பல வருட ஜனவரி-1 அனுபவம் தொலைந்து போகவில்லை! சற்றே இடம் மாறியிருக்கிறது.

Read Full Post »

தினமணி இசை விழா மலர் 2009-ல் வெளியான கட்டுரை

சங்கீத கலா ஆசார்யா எஸ்.ராஜம் ஒரு பல் துறை வல்லுனர். அற்புதமான பாடகர், சிறந்த ஓவியர், அட்டகாசமான ஃபோட்டோகிராபர். இன்று உயிரோடு இருக்கும் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுள் மூத்தவர். இதில் ஆச்சரியம் என்னவெனில், இவரை ஓவியராய் அறிந்தவர் பலருக்கு இவரின் சங்கீத ஆளுமை தெரியாது. சங்கீததில் பரிச்சயம் உள்ளவர்கள், பாடகரான எஸ்.ராஜம்தான் ஓவியமும் தீட்டுகிறார் என்று அறிந்திருப்பதில்லை.அறுபதைத் தாண்டினால் தன் பெயரே மறந்து போகும் நிலையில் பலர் இருக்க, 91-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் ராஜத்தின் நினைவாற்றல் அபாரமானது. தனது பத்தாவது வயதில் கேட்ட தனம்மாள் வீணையையும், நாயினாப் பிள்ளை பாட்டையும் நேற்று கேட்டது போல நினைவு கூர்ந்து பாடியும் காட்டக் கூடியவர். மயிலாப்பூர் நடுத் தெருவில் இருக்கும் அவருடைய வீடு ஒரு சங்கீதத் தலம். அம்பி தீட்சிதர், பாபநாசம் சிவன், மதுரை மணி போன்ற மேதைகளின் சங்கீதம் ஒலித்த இடம். அங்கு அவரைப் பல முறை சந்தித்துப் பெற்ற முத்துக்களின் சில சிதறல்கள் இங்கே:

எங்கள் பூர்வீகம் ஸ்ரீவாஞ்சியம். ஸ்ரீவாஞ்சியம் சுப்பராம ஐயர் என் கொள்ளுத் தாத்தா. அவர் நிறைய தமிழ்ப் பதங்கள் செய்துள்ளார். என் தந்தையார் வி.சுந்தரம் ஐயர் வக்கீலுக்குப் படித்தார். அவர் கோர்ட்டுக் கச்சேரிக்குச் சென்றதை விட, சங்கீதக் கச்சேரிக்குச் சென்றதுதான் அதிகம். பெரிய ஞானஸ்தரான அவரைத் தெடி அக் கால பிரபல வித்வான்கள் வந்த வண்ணம் இருப்பர். நான் இப்போது இருக்கும் வீட்டை எனது ஐந்தாவது வயதில் வாங்கினார். இந்தத் தெருவில்தான் (நடுத் தெரு) மயிலாப்பூர் சங்கீத சபா இருந்தது. அங்கு பிடாரம் கிருஷ்ணப்பா, பாலக்காடு ராம பாகவதர், நாயினாப் பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை போன்ற ஜாம்பவான்களின் கச்சேரிகளை என் சிறு வயது முதல் கேட்டிருக்கிறேன். சரஸ்வதி பாய் நந்தனார் சரித்தரம் சொன்னார் என்றால் கண்முன்னே வேதியரும் நந்தனும் வந்து நிற்பர். அப்பேர்ப்பட்ட சொல்லாற்றல். அற்புதமான பாட்டு!

கச்சேரிக்கு வரும் வித்வான்கள் எல்லாம் எங்கள் வீட்டில் தங்குவர். அப்படித் தங்கும் போது எனக்கு பல கீர்த்தனங்களைச் சொல்லிக் கொடுப்பர். என் தந்தைக்கு இருந்த செல்வாக்கால், நான் எங்கேயும் போகாமல் நல்ல சங்கீதம் என் வீட்டுக்கே வந்து என்னை ஆட்கொண்டது. குறிப்பாக அன்றைய ஹரிகதை விற்பனர்களிடமிருந்து எண்ணற்ற பாடல்களைக் பாடம் செய்தேன். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர். அவரிடமே 200 கீர்த்தனங்கள் கற்றுக் கொண்டேன். அவரது சிஷ்யை சௌந்திரம் எனது முதல் குரு. காயக சிகாமணி முத்தையா பாகவதருக்கு என் மேல் தனி பிரியம். ‘வல்லி நாயகனே’ போன்ற அவரது சொந்த சாஹித்யங்கள் பலவற்றை எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இசை திருவாலங்காடு சுந்தரேச ஐயரின் வயலின் இசை. அரை நிமிடம் வாசித்தாலும் ராகத்தின் ஜீவனை முழுமையாய் காட்டிவிடும் வாசிப்பு அது! விடியற்காலை என் மூக்கினுள் வயலின் வில்லை நுழைத்து எழுப்பி, பேகடையும் சங்கராபரணமும் சொல்லிக் கொடுத்ததை என்னால் எப்போதும் மறக்க முடியாது.

மதுரை மணி எங்களுக்கு உறவினரும் கூட. சங்கீத உலகில் ஞானி என்றால், அது அவர்தான். “ராஜு! ராகம் எல்லாம் குளிச்சிட்டு வரா மாதிரி சுத்தமா இருக்கணும். ஸ்வரம் பாடறது எப்படி இருக்கணும் தெரியுமா? தங்கச் சங்கிலி மாதிரி இருக்கணும். ஒவ்வொரு ஸ்வரமும் கோத்துக் கோத்து இருக்கணும். ஸ்ருதியில் இம்மி பிசகாம நிற்கணும்”, என்று அடிக்கடி கூறுவார். அவரின் ஸர்வலகு வழியே என்னைப் பெரிதும் கவர்ந்தது. நான் யாரிடம் கற்றேன் என்று சொல்வதைவிட யாரிடமெல்லாம் கற்கவில்லை என்று சுலபமாகச் சொல்லி விடலாம். இருப்பினும், மூவரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

முதலாமவர் அம்பி தீட்சிதர். முத்துஸ்வாமி தீட்சிதரின் வம்சத்தில் வந்தவர். அவரும் மயிலாப்பூரிலேயே தங்கி இருந்தார். என் தந்தையாரின் வேண்டுகோளுக்கு இணங்கி எனக்குச் சொல்லிக் கொடுத்தார். எங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாள் சுத்த தன்யாசி ராகத்தை லேசாக இழுத்தார். ‘சுப்ரமண்யேன’ அல்லது ‘ஸ்ரீ பார்த்தசாரதி’ போன்ற ஒரு தீட்சிதர் கிருதியைத்தான் சொல்லிக் கொடுப்பார் என்று என் அப்பா நினைத்தார். அவரோ, ‘எந்த நேர்ச்சினா’ என்று தியாகராஜ கிருதியை ஆரம்பிக்கவும் என் தந்தைக்கு ஆச்சரியம் தாளவில்லை. பத்து வயது கூட நிரம்பியிராத எனக்கு, தீட்சிதர் கிருதிகள் போன்ற கஷ்டமான உருப்படிகளில் பாடத்தை தொடங்கியிருந்தால் பாட சிரமப்பட்டிருப்பேன். தியாகைய்யர் எளிமையாவும், ராக ரசம் சொட்டும் படியாகவும் அற்புதமாய் அமைத்திருக்கும் பாடல்களை குழந்தை கூடப் பாடிவிட முடியும். இதனை உணர்ந்துதான் அவர் ‘எந்த நேர்ச்சினா’-வில் பாடத்தைத் தொடங்கினார். அதன் பின், எண்ணற்ற தீட்சிதர் கிருதிகள் கற்றேன். அவர் பைரவியில் பாடிய ‘பால கோபால’ இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு பலகை எடுத்து வரச் சொல்லி, அதில் வெவ்வேறு கோள்களின் நிலைகளை வரைந்து விளக்கி, எனக்கு தீட்சிதரின் நவகிரஹ கிருதிகளைச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில், நவகிரஹங்களை ஓவியமாய்த் தீட்ட அந்தக் கிருதிகள் என் மேல் ஏற்படுத்திய தாக்கமே காரணம். கமலாம்பா நவாவர்ணம், பஞ்சலிங்க கிருதிகள் போன்றவற்றை எல்லாம் சொல்லிக் கொடுத்ததோடு மட்டுமின்று ஸ்வரப்படுத்தி எழுதியும் கொடுத்துள்ளார். அன்று அம்பி தீட்சிதர் எழுதிக் கொடுத்த புத்தகத்தை இன்றும் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருகிறேன்.

இரண்டாமவர் பாபநாசம் சிவன். அவர் சென்னைக்கு வந்தவுடன் எங்கள் வீட்டுக்குத்தான் வந்தார். மிக மிக எளிமையானவர். கையில் பணமிருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி ஒரே விதமாய்த்தான் நடந்து கொள்வார். நாதோபாசனையைத் தவிர வேறொன்றின் மேலும் நாட்டமில்லாதவர். சென்னையில் அவரின் முதல் மாணவனாகும் பெறு எனக்குக் கிடைத்தது. அவரே நூற்றுக் கணக்கில் பாடல்கள் புனைந்திருப்பினும், பெரும்பாலும் தியாகராஜர், கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசல கவி போன்றோரின் பாடல்களைத்தான் சொல்லிக் கொடுப்பார். ‘நகுமோமு’ கிருதியை, இன்று பாடுவது போல் அல்லாமல் ‘சுத்த தைவதத்தில்’ எனக்குச் சொல்லிக் கொடுத்தது பசுமரத்தாணியாய்ப் பதிந்தது. அம்பி தீட்சிதர் ஸ்வரப்படுத்தி எழுதிக் கொடுப்பார் என்றால், சிவனோ பேனாவைக் கையால் கூடத் தொட மாட்டார். அவர் பாடப்பாட சங்கதிகள் மலர்ந்த வண்ணம் இருக்கும். அதைக் கவனமாகக் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அவரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என் தந்தையார்தான்.

மூன்றாமவர் மயிலாப்பூர் கௌரியம்மாள். கபாலீஸ்வரர் கோயில் சேவையில் ஈடுபட்டிருந்தவர். அபிநயத்தில் பெரும் பேரைப் பெற்ற பாலசரஸ்வதியே கௌரியம்மாளிடம் கற்றுக் கொண்டிருக்கிறார். தாயைப் போல வாஞ்சையுடன் என்னை நடுத்துவார். பதங்கள் பாடி அபிநயம் பிடிப்பதில் கௌரியம்மாளுக்கே நிகரேயில்லை. ‘எத்தனை சொன்னாலும்’ என்று சாவேரியில் பாடினார் என்றால், பாடல் வரிகளின் பாவம் இசையிலும் அபிநயத்திலும் அப்படிப் பரிமளிக்கும். அவரிடம் கேட்டுதான் பாவப்பூர்வமாய்ப் பாடும் முறையை அறிந்து கொண்டேன். அவருக்கு தெரிந்த பதங்கள் சங்கீத வித்வான்களுக்குக் கூடத் தெரியாது. நிறைய தமிழ்ப் பதங்களையும், §க்ஷத்ரக்ஞரின் பதங்களையும் அவரிடம்தான் கற்றேன்.

இவர்களைத் தவிர காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளையும், வீணை தனம்மாளும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். ஏகலைவ பாவத்தில், அவர்கள் கச்சேரிகளில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். நாயினாப் பிள்ளை ‘அம்ப பரதேவதே’ என்று ருத்ரப்ரியாவில் பாடக் கேட்டு, அந்த ராகத்தின் மேல் பைத்தியமானேன். வீணை தனம்மாள் ‘அக்ஷயலிங்க விபோ’ வாசித்துக் கேட்டவர்கள் சங்கீதத்தின் உச்சத்தைக் கேட்டு மகிழ்ந்தவர்கள் என்று கொள்ளலாம்.

எனது முதல் கச்சேரி சித்தூருக்கு அருகில், பரமாச்சாரியாரின் முன், எனது பதிமூன்றாவது வயதில் நடை பெற்றது. என் கச்சேரிக்கு முந்தைய நாள் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பாடினார். அவர் கச்சேரிக்கே முப்பது பேர் கூட இல்லை. அப்படியெனில் என் கச்சேரிக்கு எத்தனை பேர் இருந்திருக்கக் கூடும்? பத்து பேர் கூட இல்லாத நிலையில், எனக்குத் தம்புரா போடக் கூட ஆள் இல்லை. நிலைமையைக் கண்ட அரியக்குடி, “ராஜு! நான் தம்புரா போடறேன். நீ தைரியமாப் பாடு.”, என்று உற்சாகப்படுத்தினார். பொடிப்பயல் சிஷ்யன் பாடுகிறான், அவனுக்குப் போய் தம்புரா போடுவதா என்று எண்ணாமல், ஒரு மகானுக்கு முன் நடக்கும் கச்சேரி நன்றாக அமைய வேண்டும் என்று நினைத்த அரியக்குடியின் செயலை எண்ணும் போதெல்லாம் என் நெஞ்சம் நெகிழ்கிறது.

மியூசிக் அகாடமி தொடங்கப்பட்ட காலமது. அங்கு நடக்கும் இசைப் போட்டிகளில் பத்து வயது முதல் ஐம்பத்தைந்து வயது வரை யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். நான் 1928 முதல் அந்தப் போட்டிகளில் கலந்து கொண்டேன். 1931-ல் தொடங்கி மூன்று முறை முதல் பரிசைப் பெற்றேன். அதில் ஒரு வருடம் புரந்தரதாஸர் கிருதிகளிக்கான போட்டி நடந்தது. அதற்காக எம்.எல்.வசந்தகுமாரியின் தாயார்  லலிதாங்கியை அணுகி அவரிடம் பல கிருதிகளைக் கற்றேன். போட்டியில் நுழைந்து பார்த்தால் லலிதாங்கியும் போட்டிக்கு வந்திருந்தார்.  டைகர் வரதாச்சாரி, முத்தையா பாகவதர், சரஸ்வதி பாய் ஆகிய மூவரும் போட்டியின் நடுவர்களாக அமர்ந்திருந்தனர். போட்டியின் முடிவில் எனக்கு 72 மதிப்பெண்கள். என் குருவான லலிதாங்கிக்கும் 72 மதிப்பெண்கள் கிடைத்திருந்தது. முதல் பரிசி யாருக்கென்று முடிவுக்கு வர முடியாத நிலை. அதனால், அடுத்த நாள் எங்கள் இருவரையும் மீண்டும் ஒரு முறைப் பாடச் செய்தனர். என் அதிர்ஷ்டம், எனக்கு முதல் பரிசும் லலிதாங்கிக்கு இரண்டாம் பரிசும் என்று முடிவானது. எனக்கு முதல் பரிசு கிடைத்ததை எண்ணி என்னைவிட அதிகம் மகிழ்ந்தது லலிதாங்கிதான். எவ்வளவு பெரிய மனது!

நான் மியூசிக் அகாடமியில் பரிசு பெற்ற செய்தி ஹிந்து செய்தித்தாளில் என் படத்துடன் வந்தது. அதுவே எனக்குத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. வி.சாந்தாராம் தயாரித்த ‘சீதா கல்யாணம்’ என்ற படத்தை பாபுராவ் பெண்டார்கர் இயக்கினார். நான் ராமனாகவும், என் தங்கை ஜெயலட்சுமி சீதையாகவும், என் தந்தையார் ஜனகராகவும், என் தம்பி பாலசந்தர் ராவணன் தர்பாரில் கஞ்சிரா வாசிப்பவனாகவும் நடித்தோம். இதுதான் பாபநாசம் சிவன் இசை அமைத்த முதல் படமாகும். ‘அம்ம ராவம்மா’ மெட்டில் ‘நல்விடை தாரும்’ என்று சிவன் அமைத்து, நான் பாடிய பாடல் அன்று பெரும் வரவேற்பைப் பெற்றது. வெற்றிப் படமாக அமைந்த சீதா கல்யாணத்துக்குப் பின், எனக்கு பல கச்சேரி வாய்ப்புகள் அமைந்தன. படம் ஓடும் இடங்களில் எல்லாம், என்னையும் என் தம்பியையும் அழைத்து கௌரவப்படுத்தி, படத்தின் இடைவேளையின் போது எங்களின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தனர். அதன் பின், இந்தியா முழுவதும் நானும் என் தம்பியும் கச்சேரிகள் செய்தோம். நான் பாட, என் தம்பி பாலசந்தர் கஞ்சிரா, தபலா மற்றும் ஹார்மோனியம் வாசிப்பான். பின்னாளில்தான் வீணையில் நல்ல தேர்ச்சியைப் பெற்று பெரும் புகழை அடைந்தான். சீதா கல்யாணத்துக்குப் பின், ‘ராதா கல்யாணம்’, ‘ருக்மிணி கல்யாணம்’ என்று இரு படங்களில் நடித்தேன். அதன் பின் நிஜ கல்யாணம் நடந்ததால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். 1942-ல் ‘சிவகவி’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஜோடியாக என் தங்கை ஜெயலட்சுமி நடித்தாள். அவளுக்குத் துணையாக நானும் என் தந்தையும் படப்பிடிப்புக்குச் சென்றோம். சென்ற இடத்தில் முருகனின் மூன்று வடிவங்களில் நானும், ஆசிரியராக என் தந்தையும் நடித்தோம்.

இசையில் இருந்தது போலவே எனக்கு ஓவியத்திலும் நாட்டம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என் தாயார். அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நகாசு தெரியும். கோலமிட்டாரெனில் நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். வரலட்சுமி விரதத்தின் போது முகமெழுதிக் கொடுக்க பலர் என் அன்னையை அழைப்பார்கள். எனக்கு லிங்கையா என்றொரு நண்பன் இருந்தார். அவர் பிரபல ஓவியர் (கல்கி புகழ்) மணியத்தின் சித்தப்பா. படம் வரைவதில் அவருக்கு இருந்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது. என் குடும்பத்தினரும் என்னைப் படம் வரைய உற்சாகப்படுத்தினர். பள்ளிப் படிப்பை முடித்த பின், ஓவியக் கல்லூரியில் சேர முடிவெடுத்தேன். இந்தக் காலத்தைப் போல, பிள்ளைகள் எல்லோரும் டாக்டராகவும் இஞ்சினியராகவும் மட்டுமே ஆக வேண்டும் என்று நினைக்காத காலமது. இரண்டாம் வருடப் படிப்புக்குப் பின் எனக்கு டபுள் பிரமோஷனும் டாக்டர் ரங்காச்சாரி ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தன. கல்லூரியில் முதல் மாணவனாக தேறிய போதும், அங்கு சொல்லித் தரப்பட்ட மேற்கத்திய ஓவிய முறை என்னைப் பெரிதும் கவரவில்லை. இந்தியக் கலைப்பாணியே என்னைப் பெரிதும் ஈர்த்தது. பல்லவர்களின் சிற்பங்களும், சோழர்களின் செப்புப் படிமங்களும் என் ஓவியங்களைப் பெரிதும் பாதித்தன. அஜந்தா ஓவியங்களைக் கண்டதும் அரண்டு போனேன். அவற்றக் கண்ட பின், பல மாதங்களுக்கு பிரஷ்-ஐ கையால் கூடத் தொடவில்லை.

அஜந்தா, சிகிரியா, தஞ்சாவூர், காஞ்சிபுரம் என்று பல ஊர்களுக்குச் சுற்றி, நமது கலைப் பொக்கிஷங்களைக் கண்டு களித்தேன். அப்போதெல்லாம் மகாபலிபுரம் செல்வதென்றால் பகிங்காம் கால்வாயில் இரவு முழுதும் படகுச் சவாரி செய்ய வேண்டும். பால், ரொட்டி போன்றவற்றை எடுத்துக் கொண்டு மாமல்லபுரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூடத் தங்கி படம் வரைவேன். 1940-களின் ஆரம்பத்தில் மியூசிக் அகாடமிக்காக சங்கீத மும்மூர்த்திகளை ஓவியமாகத் தீட்டினேன். இன்று அந்த ஓவியம் இல்லாத இசை ரசிகர்கள் இல்லமே இல்லை எனலாம். கலைமகள் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த கி.வ.ஜகன்னாதன் என் ஓவியங்களை விரும்பித் தொடர்ந்து பிரசுரித்தார். இலக்கியங்கள், புராணங்கள் தொடர்பாக பல ஓவியங்கள் வரைய அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. சங்கீதத்தில் உள்ள தேர்ச்சியால், சங்கீத சம்பந்தமான ஓவியங்கள் பல வரைய முடிந்தது. வாக்கேயக்காரர்கள், கீர்த்தனங்கள், ஸப்தஸ்வரங்கள் என்று சங்கீத சம்பந்தமாய் எண்ணற்ற ஓவியங்களை பத்திரிக்கைகளுக்காகவும் என் தனிப்பட்ட நிறைவுக்காகவும் வரைந்துள்ளேன். சுமார் நூறு கீர்த்தனங்களை கோட்டோவியமாய் வரைந்து, தக்க விளக்கங்களுடன் நான் வடிவமைத்த லெட்டர் பேட்-கள் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

1943-ல் அகில இந்திய வானொலியில், ‘சிலம்பு’ என்ற பெயரில் ஒரு ஒபேரா நிகழ்ச்சி தயாரானது. சிலப்பதிகாரக் கதையை இசை வடிவில் கொடுக்கும் நிகழ்ச்சியான அதில், தண்டபாணி தேசிகர், மதுரை சோமசுந்தரம், பி.ஏ.பெரியநாயகி முதலானோர் பங்கு பெற்றனர். ஒபேராவுக்கான முதல் முயற்சி என்பதால் பலருக்கு அந்த வடிவம் பிடிபடவில்லை. ஒத்திகையின் போது நான் வாத்தியக்காரர்களுக்கும் பாடகர்களுக்கும் புரியும்படி விளக்கினேன். இதனைக் கண்ட நிலைய இயக்குனர், என்னை அகில இந்திய வானொலியில் சேரச் சொன்னார். அந்த நிகழ்வு என் வாழ்வில் பெரிய திருப்புமு¨னெயாக அமைந்தது.

அகில இந்திய வானொலியில் நிரந்தர வருவாய் தரும் வேலை ஒன்று கிட்டியதால் கச்சேரிகள் செய்து பிழைக்க வேண்டியிருக்கவில்லை. அதனால், பல புதுமைகளைப் புகுத்தவும், பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடவும் முடிந்தது. கச்சேரியில் பாடும் போது, கேட்க வருபவர்களுக்காகப் பாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நமக்குப் பிடித்ததைப் பாடினால், பலர் ஆட்சேபிக்கக் கூடும். ரேடியோவில் பாடும் போது அந்த இடைஞ்சல் இல்லை. அதிகபட்சம், நாம் பாடுவது பிடிக்கவில்லை என்றால் வானொலியை அணைத்துவிடக்கூடும். வானொலி வேலையில் வந்த வருவாய் போதுமானதாக இருந்ததால், ஓவியத்திலும், எனக்குப் பிடித்த வகை ஓவியங்களை மட்டும் வரைந்தால் போதும். காசுக்காக என் மனம் ஒவ்வாத ஓவியங்களை வரையத் தேவையிருக்கவில்லை. இதைத் தவிர, வானொலிக்கு வராத இசைக் கலைஞர்களே கிடையாது. அவ்வாறு வருபவரிடமிருந்து எண்ணற்ற சங்கீத விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு முறை மைசூரிலிருந்து ஒரு பெண், “ஸ்ரீகாந்த எனக்கிஷ்டு” என்ற புரந்தரதாசர் பாடலை வழக்கமாகப் பாடும் கானடா ராகத்தில் பாடாமல் கன்னட ராகத்தில் பாடினார். கேட்டதும் மெய் சிலிர்த்துப் போனேன். உடனே அவரை அணுகி பாடலைக் கேட்டறிந்து, அதைப் பல கச்சேரிகளில் பாடினேன். பெரிய பாடகர்கள், அதிகம் தெரியாத பாடகர்கள், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணற்ற பேர்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து எல்லாம் அரிய கிருதிகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ரேடியோவின் மூலம்தான் கிடைத்தது.

நவராத்திரியின் போது நவாவர்ண கிருதிகள், கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட கிருதிகள் என்று பல வகையான நிகழ்ச்சிகளை உருவாக்கவும், பாடவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறளுக்கு அழகான ராகங்களின் மெட்டமைத்துள்ளார். முன்கோபியும், கோபம் வந்தால் அடிக்கக் கூடியவருமான அவரிடம் பாடம் கேட்க எல்லோரும் தயங்கினர். நான் துணிந்து அவரிடம் கற்று, அவற்றை வானொலியில் பாடிப் பரப்பினேன். பல பாடல்களுக்கு மெட்டமைக்கவும், மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைக்கவும் அநேக வாய்ப்புகள் வானொலி மூலம் கிடைத்தன.

இத்தனை ஆண்டு கால கலை வாழ்க்கையில் எனக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் நான் மிகவும் உயர்வாகக் கருதும் விருது எனக்கு அமெரிக்காவில் கிடைத்தது. 1982-ல் அமெரிக்கா சென்று 30 கச்சேரிகள் செய்தேன். கடைசி கச்சேரி வாஷிங்டனில் நடந்தது. அன்று, சுத்த சீமந்தினி ராகம் பாடி ‘ஜானகி ரமண’ கிருதியை விஸ்தாரமாகப் பாடினேன். கச்சேரி முடிந்ததும்,  இரு வயதானப் பெண்கள் என்னை அணுகி, “சுத்த சீமந்தினி ரொம்ப நன்றாக இருந்தது. நீங்கள் பாடுவதைக் கேட்ட போது, அந்தக் காலத்தில் நாங்கள் கேட்ட நாயினாப் பிள்ளையின் ஞாபகம் வந்தது.”, என்றனர். நான் பாடுவதைக் கேட்டு, என் மானசீக குருவான நாயனாப் பிள்ளையின் ஞாபகம் வந்திருக்கிறதென்றால், இதைவிட எனக்கு என்ன பெருமை கிடைத்துவிட முடியும்?

ராகங்கள் அனைத்துமே அற்புதமானவை. ஆனால், சிலர் விவாதி ராகங்கள் என்று அழைக்கப்படும் ராகங்களை, தோஷ ராகங்கள் என்று ஒதுக்கி வந்தனர். காலப்போக்கில், இந்த ராகங்களை யாருமே தீண்டாத நிலை ஏற்பட்டுவிட்டது. உண்மையில் அந்த ராகங்களைப் பாடினால் தோஷம் வராது. சந்தோஷம்தான் வரும்! எனக்கு, வழக்கமான கல்யாணி, காம்போதி பாடுவதை விட விவாதி ராகங்களைப் பாடவே விருப்பம். கோடீஸ்வர ஐயரின் கீர்த்தங்கனளில் ஆழ்ந்து ஊரியது அதற்குக் காரணம். கோடீஸ்வர ஐயர், ‘கந்த கானாமுதம்’ என்ற பெயரில் 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல் புனைந்துள்ளார். அவற்றை துணை நிலைய இயக்குனராக இருந்த த.சங்கரன் எனக்களித்துப் பாடச் சொன்னார். நானும், வானொலி நிலையத்தில் இருந்த வைதேகி என்ற பாடகியும் வாரம் இரு பாடல்களாக தொடர்ந்து வானொலியில் பாடினோம். அன்று தொடங்கி கோடீஸ்வர ஐயரின் பாடல்களையும், விவாதி ராகங்களையும் பரப்புவது என் வாழ்வின் முக்கிய லட்சியங்களாகக் கொண்டேன். இந்த 72 கிருதிகளை, ராகம் நிரவல் கல்பனை ஸ்வரங்களுடன் பாடி குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளேன். எண்ணற்ற பேர்களுக்கு, “நிச்சயம் ஒவ்வொரு கச்சேரியிலும் பாடுவேன்”, என்று சத்தியம் வாங்கிக் கொண்டு, கோடீஸ்வர ஐயரின் கிருதிகளைச் சொல்லிக் கொடுத்துள்ளேன். இன்று முன்னணி வித்வான்களாய் விளங்கும் பலர் கோடீஸ்வர ஐயரின் கிருதிகளைப் பரவலாகப் பாடுவதைக் காண நிறைவாக இருக்கிறது.

விவாதி ராகங்களைப் பாடினால் ஆகாது என்பவர்களின் வாக்கில் உள்ள பொய்யை என் வாழ்வே எடுத்துக்காட்டும். எத்தனையோ ஆண்டுகளாய் விவாதி ராகங்களைப் பாடி வருகிறேன் என்ற போதும், 90 வயதைத் தாண்டிவிட்ட போதும் என் வாழ்வு நிறைவானதாகவே அமைந்துள்ளது.

Read Full Post »

இந்த சீசனில் 14 இடங்களில் கச்சேரி செய்யும் அம்ருதாவுக்கு வயது 21. பெங்களூர் வாழ் பாடகர். சொல்வனம் இசைச் சிறப்பிதழுக்காக  இவரிடம் தொலை பேசினேன்.

முதலில் கொஞ்சம் பேசத் தயங்கினாலும்,  போகப் போக சரளமாகப் பேசினார். நேர்காணல் செய்யத்தான் நினைத்திருந்தேன். கடைசியில், அது உரையாடலாக முடிந்தது. உரையாடல் (எனக்கு) சுவாரஸ்யமாக அமைந்ததால், அப்படியே இங்கு அளிக்கிறேன்.

உரையாடலைப் படிக்க இங்கு செல்லவும்.

Read Full Post »

மைக்கில்லாத காலத்திலும் கச்சேரிகள் கேட்டவர் நீங்கள். மைக் சங்கீதத்தை எப்படி பாதித்துள்ளது. மைக் இல்லாத காலத்தில் ஆண்கள் கூட 4-5 கட்டை ஸ்ருதியில் பாடுவார்களாமே?

மைக்கின் வருகை சங்கீதத்துக்கு சாதகமாய்த்தான் அமைந்திருக்கிறது. அரியக்குடி, நாயினாப் பிள்ளை போன்றவர்கள், மைக் இல்லாத காலத்தில் 2-2.5 கட்டை ஸ்ருதியில்தான் பாடினார்கள். கச்சேரிகளுக்கு வரும் கூட்டம், மைக் வந்தவுடன்தான் அதிகரித்திருக்கிறது. பாடகர் உயிரைக் கொடுத்துப் பாடினால்தான் கேட்கும்.

அப்படியெனில், ராகம் பாடும் போது கையாளப்படும் நெளிவுசுளிவுகளான ‘சின்னது பெரியது’ சமாச்சாரங்கள், மைக் வரும் முன் அதிகம் இல்லையா?

ஆமாம். ‘சின்னது பெரியது’ பேதங்களை குரலில் காட்ட ஒலிப்பெருக்கி இருந்தால்தான் முடியும். ஒலிப்பெருக்கியால்தான் கச்சேரிகளுக்கு அதிக கூட்டம் கூட ஆரம்பித்தது. அதற்கு முன், சபா கச்சேரிகளுக்குக் கூட ஐம்பது பேருக்கு மேல் வர மாட்டார்காள். அதற்கு மேல் வந்தால், பின்னால் இருப்பவர்களுக்கு கச்சேரி சரியாகக் கேட்காது

மைக்கால் சங்கீதம் பாழாகிவிட்டது என்ற கருத்து பற்றி?

நிச்சயம் சங்கீதம் மைக்கால் நன்மைதான் அடைந்திருக்கிறது. சிலர், தங்களுடைய இயலாமைக்கு மைக்கின் மேல் பழியைப் போட்டிருக்கலாம். வாத்தியங்களின் உண்மையான நாதம் மைக்கால் பாதிக்கப்பட்டது என்ற வாதத்தில் வேண்டுமானால் உண்மை இருக்கலாம். இன்று இருக்கும் தொழில்நுட்பத்தில், இவை பெரிய பிரச்னைகள் அல்ல என்றுதான் நினைக்கிறேன்.

சில கச்சேரிகளில், மேடையில் இருப்பவர்கள், தங்களுடைய ego-வை மைக்கை வைத்தும் திருப்திப் படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். சில மிருதங்க வித்வான்களுக்கு, ஒலியின் அளவை எவ்வளவு அதிகப்படுத்தினாலும் போதவில்லை. சில பாடகர்கள் வயலினே கேட்காமல் இருக்க வழி செய்கின்றனர். இவை எல்லாம் மைக்கின் குற்றம் அல்ல, மனிதர்களின் குற்றம்தான்.

மைக் இல்லாத காலத்தில் கேட்டதில் நினைவில் இருக்கும் பாட்டு?

நாயினாப் பிள்ளை ‘ஜானகி ரமண’ பாடுவார். அவர் பாடினால், மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்தில் இருந்து தார பஞ்சமம் வரை நன்றாகக் கேட்கும்.

அந்த நாளுக்கும், இந்த நாளுக்கும் வித்தியாசம்?

அப்போது இவ்வளவு சபாக்கள் இல்லை. இன்று இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல சபாக்கள் செயல்படுகின்றன. என் இள வயதில் எனக்கு 22 வர்ணங்கள் தெரிந்திருந்தது என்பது மிகப் பெரிய விஷயம். இன்று, நூற்றுக் கணக்கில் வர்ணங்கள் மட்டுமே கற்கக் முடியும். புதிது புதிதாய் நிறைய கிருதிகள், ராகங்கள் என்று சங்கீதம் விருத்தி அடைந்திருக்கிறது. சங்கீதத் துறை அகலமானாலும், இப்போது பாடப்படும் சங்கீதத்தில் ஆழம் கொஞ்சம் குறைந்துள்ளதாகப் படுகிறது.

இன்னொரு முக்கியமான வித்தியாசம், அந்த நாளில் ஹரிகதை காலட்சேபங்கள் மிகப் பிரபலமாய் இருந்தன. முத்தையா பாகவதர் போன்ற சங்கீத மேதைகள் எல்லாம் ஹரிகதை விற்பன்னர்களாக இருந்தனர். கல்யாணங்களில் கூட, பாட்டுக் கச்சேரி இருக்கிறதோ இல்லையோ, ஹரிகதை கச்சேரி நிறைய உண்டு.  அந்தக் காலத்தில், ஹரிகதை பாகவதர்களுக்கு தெரிந்த அளவு கீர்த்தனங்கள், விட்வான்களுக்குக் கூடத் தெரியாது. நானே எக்கெச்செக்க அரிய கீர்த்தங்களை ஹரிகதை பாகவதர்களிடன் இருந்துதான் கற்றுக் கொண்டேன். அவர்களுக்கு சங்கீதம், பல பாஷைகளில் தேர்ச்சி, பாடல் புனையும் தகுதி, சரித்திரம், சாஸ்திரம் எல்லாம் தெரிந்திருந்தது. சரஸ்வதி பாய் கதை சொன்னார் என்றால் கண் முன்னே ஒவ்வொரு பாத்திரத்தையும் நிறுத்திவிடுவார். அவர் கதைக்கு தட்சிணாமூர்த்திப் பிள்ளை முதற் கொண்டு பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்கள். இன்று ஹரிகதை கிட்டத்தட்ட வழக்கொழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

நிறைய கீர்த்தனங்கள் வந்திருந்தாலும், இன்னும் கல்யாணி, காம்போதி, பைரவி, தோடி, சங்கராபரணம், கரஹரப்ரியா, மோகனம் தாண்டி அதிக ராகங்கள் விஸ்தாரமாய் பாடப்படுவதில்லையே?

இந்த ராகங்கள் time-tested என்பதால், இவற்றையே நிறைய பாடுகின்றனர். இதையே பாடினால் அலுப்புதான் வரும். இன்னும் எத்தனையோ அற்புதமான ராகங்களும் இருக்கின்றன.

பாட்டு கேட்பவர்களும், தவளாம்பரியையோ, சித்ராம்பரியையோ அதிகம் விரும்புவதில்லையே? தெரிந்த ராகமாய்ப் பாடுபவர்கள் கச்சேரிகளுக்குத்தானே கூட்டம் கூடுகிறது? “ராஜமா? அவர் தெரியாததைப் பாடுவாரே?”, என்ற பெயர் வந்த அளவுக்கு, உங்கள் கச்சேரிகளுக்குக் கூட்டம் வரவில்லையே?

அதுவும் உண்மைதான். பாடகர் தெரிந்ததைப் பாட வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது. புதியதாய்த் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகம் பேரிடம் இல்லை. இப்போது நிலை மாறி வருகிறது. இப்போது,  “விவாதி பாடுங்கள். அதுக்காகவே உங்கள் கச்சேரிக்கு வந்திருக்கிறோம்”, என்று என் மாணவர்களைக் கேட்கும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம்.

Read Full Post »

பால ‘சேஷு’

21 Dec 2009 @ Krishna Gana Sabha, T.N.S Krishna, M.Chandrasekaran, Umayalpuram Sivaraman, E.M.Subramaniam

எனக்கு சேஷகோபாலன் பாட்டென்றால் உயிர். 2004 வரை சென்னையிலும், பெங்களூரிலும் பல இடங்களில் அவர் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். தஞ்சாவூரில் படித்த போது, திருச்சிக்கு, இவர் கச்சேரி கேட்பதற்காகவே சென்றிருக்கிறேன்.

சில வருடங்களாய் இவரைக் கேட்க வேண்டுமென்றால், ஒலிப்பதிவுகளை நாடுவேன். நேரில் கேட்கும் அனுபவத்துக்கு ஏங்கும் போது டி.என்.எஸ் கிருஷ்ணாவின் கச்சேரிகளுக்குச் செல்கிறேன்.

பல சமயங்களில் பாத்திரம் பொன்னால் ஆனதாக இருக்கும், பண்டம் பழையதாய் இருக்கும். அல்லது, பண்டம் பாயசமாக இருக்கும், பாத்திரம் ஓட்டை விழுந்த தகரமாக இருக்கும். எப்போதாவது ஒரு முறைதான் பொற் பாத்திரத்தில் நற் பாண்டம் அமையும். கிருஷ்ணாவின் விஷயத்தில் அது நடந்துள்ளது.

கிருஷ்ண கான சபையில்  காலை வேளை கச்சேரி. எம்.சந்திரசேகரன், உமையாள்புரம் சிவராமன், ஈ.எம்.சுப்ரமணியம் என்று பக்க வாத்தியங்கள் பட்டியலே கச்சேரிக்கு என்னை இழுத்தது. அண்ணான் சாலையிலிருந்து, பனகல் பார்க் வரை, காலை ஒன்பது மணிக்கு மேல், ஒரு முறை கூட நிற்காமல் பாண்டி பஜாரைக் அடைந்த போதே, இந்த நாள் இனிய நாள் என்று உள்ளுக்குள் பட்சி கூவியது.

விடுமுறை நாட்கள் நீக்கி, மற்ற நாட்களில் காலை வேளை கச்சேரிகளை அனைத்து சபையினரும் இலவச கச்சேரிகளாக்கி விடலாம். ரிடையர் ஆன மாமிகளும், மாமாகளும் காசு கொடுத்து கச்சேரி கேட்பார்கள் என்று சபாகள் நினைப்பதுதான் ஆச்சர்ய்மாக இருக்கிறது. கிருஷ்ண கான சபை மாதிரி பெரிய அரங்குகளில் 50-60 இருந்தாலே கூட்டம் குறைச்சலாய்த்தான் தோன்றும். இன்று 20 பேர் கூட தேறி இருக்கமாட்டார்கள். சில வருடங்கள் முன், நாரத கான சபையில், இதே போன்ற நிலையில் பாடிய கிருஷ்ணா, “வந்து கேட்பார் இல்லையோ” என்று ஊர்த்துக்காடு பாடலை பாடிய போது  it became an unintentional situation song.

கூட்டம் இருக்கோ இல்லையோ, மேடை ஏறிவிட்டால் 100% உழைத்துப் பாடுகிறார் கிருஷ்ணா. இன்று பக்கவாத்தியங்களின் உற்சாகமும் சேர்ந்து கொண்டிருக்கும். தர்பார் ராகத்தை இழை ஓட விட்டு, வர்ணத்தை ஆரம்பித்த போது, சாகேதராமனுக்கு செய்தது போல இவருக்கும் குரல் மக்கர் செய்யுமோ என்று பயந்தேன். வர்ணத்தைப் பாடி, சில கல்பனை ஸ்வரங்களையும் அள்ளி வீசிய போது குரல் ஓரளவு பதத்தை அடைந்தது. பாதி கச்சேரி வரை தார ஸ்தாயியில் பாடிய போது ஒரு வித strain தென்பட்டது. பிரதான ராகம் பாடும் போது, குரல் நல்ல பதத்தை அடைந்திருந்தது.

ஸ்ரீ ரகுகுல ஹம்சத்வனியில் பாடி, துரித கதியில் நிரவலும் ஸ்வரமும் பாடினார். ‘பகரி நிபக கநிரி ரிநிப’ என்று மும்மூன்று ஸ்வரங்களாய் பற்பல கோவைகள் அமைத்துப் பாடிய ஸ்வரங்கள் அற்புதமாய் இருந்தன.

ஹம்சத்வனியைத் தொடர்ந்து, பூர்வி கல்யாணியை விஸ்தாரமாக ஆலாபனை செய்தார். அவசர அவசரமாய் பஞ்சமத்துக்குச் சென்று கார்வை கொடுக்காமல், மந்த்ர ஸ்தாயியிலே விஸ்தாரமாகப் பாடியது சிறப்பு. ஸ்வரம் ஸ்வரமாய் ஆலாபனையை நகர்த்தி வளர்க்கும் போதே, ஆலாபனையின் மையத்திலிருந்து தள்ளி இருக்கும் ஸ்வரங்களுக்கும் அவ்வப்போது தாவி, கேட்பவரை வியப்பில் மாழ்த்துவது TNS பாணி.

இதனை நால், macroscopically linear and microscopically non-linear என்பேன். கிருஷ்ணாவின் ஆலாபனையும் இவ்வகையில்தான் அமைந்திருந்தது. ரப்பராய் இழுத்து,நிறுத்திப் பாடிய சஞ்சாரங்களோடு, துரித கால சஞ்சாரங்களைக் கோத்து அமைந்த ஆலாபனை பூர்வி கல்யாணையை உருக்கமாகவும், அதே சமயத்தில் அழுது வடியாமல் இருக்கும் படியும் மிளிரச் செய்தது. காந்தாரத்தில் மையம் கொண்டு, சுழற்றி சுழற்றி பல அலைகளை எழுப்பி, இறுதியில் அடுத்த ஸ்த்தைத் தொட்ட போது என்னை அறியாமல் கைகளைத் தட்டினேன். இப்போது தொட்டுவிடுவார் என்று எதிர்பார்த்திருக்கும் போது தொடாமல், தவிப்பை அதிகமாக்கி, இறுதியில் தொடும் போது, ஒரு வித relief ஏற்படுகிறது. அதுவே என்னை கைதட்ட வைத்தது என்று நினைக்கிறேன்.

கச்சேரி முழுவதும் சந்திரசேகரன், அழகாய் அளவாய் வாசித்தார். கிருஷ்ணாவின் சாகசங்களில் கலந்து கொள்ளாவிடுனும், தன் வாசிப்பால் அந்த சாகசங்களுக்கு சங்கடம் வராமல் பார்த்துக் கொண்டார்.

ஆலாபனையைத் தொடர்ந்து நினுவினாகமரி தொடங்கிய போது, காலப்ரமாணத்தை ஒரு இழை குறைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. ஸ்வரத்தில் கொஞ்சம் விவகாரங்கள் ரொம்பவும் தலை  காட்டாமலும் அரவும் நீக்காமலும் பாடியது நன்றாக இருந்தது.

அடுத்ததாக, நல்ல சவுக்கமன காலப்ரமாணத்தில் நீலாம்பரியை இழைத்து இழைத்து ‘அம்ப நீலாயதாக்ஷி’ பாடினார். அவ்வப்போது விழுந்த ஜாரு பிரயோகங்கள் சொக்க வைத்தன. பிரதான ராகத்துக்கு முன் விறுவிறுப்பான பாடல் ஒன்றைப் பாடியிருக்கலாம். கிருஷ்ணா தோடியை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டார்.  டி.என்.எஸ் தன் முப்பதாவது வயதில் எப்படிப் பாடியிருப்பார் என்று இன்று கிருஷ்ணா பாடிய தோடியைக் கேட்டிருந்தால் உணரக் கூடும். இதை நான் சொல்லவில்லை, ஆலாபனை முடிந்ததும் உமையாள்புரம் சிவராமன் கூறினார். ஆலாபனையில் அசைந்தாடும் கமகங்களையும், அசையாத சுத்த

ஸ்வரங்களையும் அழகாக கோத்து அளித்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக தோடியின் தைவதத்தைச் சுற்றிச் சுற்றிப் பாடியது என்னை வெகுவாகக் கவர்ந்தது. தோடியின் போது கிருஷ்ணாவின் குரல் அற்புதமான நிலையில் இருந்ததால், ரவை சங்கதிகள் எல்லாம் அநாயாசமாய் விழுந்தன. கிருஹ பேதம் செய்து, மோஹன கல்யாணியை கோடி காட்டிவிட்டு மீண்டும் தோடிக்கு வந்தார். ஷட்ஜ பஞ்சம வர்ஜமாய் பிருகா மழை பொழிந்த போது, நிஜமாகவே மனதாரக் கைதட்டினேன்.

பட்டம்மாள் ஸ்பெஷல் ‘தாசுகோவ’ பாடி, ‘சௌமித்ரி தியாகராஜு’-வில் நிரவலும் ஸ்வரங்களும் பாடினார். மிஸ்ர ஜம்பை தாள அமைப்பைக்குள் பல்வேறு சிக்கலான அமைப்புகளை நிர்வகித்த போதும் தோடியின் ராக பாவம் கெடாமல் பாடியது அற்புதம். கிருஷ்னாவின் அப்பா ஜூனியராய் இசைத் துறையில் இருந்த காலத்துக்கு பல காலம் முன்னரே பிரபல வித்வானாகிவிட்ட சிவராமன், இன்றும் உற்சாகமாய் வாசித்ததைக் காண நன்றாக இருந்தது. இன்று அவருக்கே அவரது மிருதங்கத்தின் மேல் திருப்தி இல்லை. பாதி கச்சேரிக்கு மேல் இரண்டாவது மிருதங்தங்கதில் வாசித்தார். தனியில், சிவராமன் வாசித்த மோராவை சுப்ரமணியன் வாசிக்க முடியாமல் தவித்த போது, “இன்னும் கொஞ்சம்தான் வந்துடும். மறுபடியும் வாசி”, என்று சொல்லி, தானும் பாதி வழியில் உதவி கடம் வித்வானுக்குப் பாடம் நடத்தினார். ராகமாலிகை விருத்தமும், ஹரிகேசநல்லூரின் ஹம்சானந்தி தில்லானாவும், சிந்து பைரவியில், ஐயப்பன் மேல் ஒரு தமிழ்ப் பாடலும் பாடி, கச்சேரியை நிறைவு செய்தார் கிருஷ்ணா.

9.30 மணிக்கு ஆரம்பித்த கச்சேரி, 11.30-க்கே முடிந்துவிட்டது. சபையின் அடுத்த கச்சேரி 2.00 மணிக்குத்தான் என்ற போதும், கச்சேரியை இவ்வளவு சீக்கிரம் முடித்திருக்க வேண்டாம். இன்னும் அரை மணி நிச்சயம் பாடியிருக்கலாம். குரல் நன்றாக பதம் அடைந்த சற்றைக்கெல்லாம் கச்சேரி முடிந்துவிட்டதுதான் கொஞ்சம் வருத்தம். பாடுவதற்கு சிரமமான சேஷகோபாலன் பாணி சங்கீதம் அவரோடு முடிந்துவிடாது. நிச்சயம் வாழையடி வாழையாய்த் தொடரும் என்பதை இன்றைய கச்சேர்யினைக் கேட்ட அனைவரும் ஒப்புக் கொள்வர்.

Verdict: Great concert. Brilliant thodi. Could have sung for at least another 30 mins.

Read Full Post »

Trichur Brothers (Srikrishna Mohan, Ramkumar Mohan), Trchur Mohan, D.V.Venkatasubramanian @ Brahma Gana Sabha

சீஸனில் நடக்கும் கச்சேரிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், ப்ரைம் ஸ்லாட் இல்லாத கச்சேரிகள் நடக்கும் சமயத்தில், பாட்டு கேட்பவர்களை விட பாடுபவர்கள் அதிகம் இருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இள பாடகர்களுக்கு இவை பெரும் வாய்ப்புகளாய் அமைகின்றன. என்னைப் போன்ற கர்ம சிரத்தையாய் கேட்பவர்கள் பாடுதான் திண்டாட்டம். எங்கே போவது என்று குழப்பம் தீராத ஒன்று.

நான் இதுவரை கேட்காதவர்கள் பலர் இருப்பதால், இளம் பாடகர்களின் கச்சேரிகளை யாரேனும் பரிந்துரைக்காமல் செல்வதில்லை. எப்படியும், நன்றாகப் பாடுவார் என்று நான் நினைப்பவரின் கச்சேரி, எங்கேயாவது இருக்கும் போது, பாடகரைப் பற்றி ஒன்றும் தெரியாமல் ஏன் செல்ல வேண்டும் என்ற எண்ணம்.

அந்த வகையில், இத்தனை நாள் திருச்சூர் சகோதரர்களின் கச்சேரியை கேட்காமல் இருந்தேன். சில நாட்கள் முன் சிமுலேஷன் ஒரு பின்னூட்டத்தில் இவர்களைப் பற்றி சொல்லியிருந்ததாலும், இவர்கள் கச்சேரி செய்த அரங்கில் இவர்களுக்குப் பிறகு காயத்ரி வீணை வாசித்ததாலும் இன்று பிரம்ம கான சபா சென்றேன்.

காயத்ரியின் வாசிப்பைப் பற்றி சொல்ல எனக்குக் கொஞ்சம் கூட அருகதை கிடையாது. வீணைக்கு வாணி எல்லாம் உல்லாலகாட்டிக்கு. வீணை என்றால் அது காயத்ரிதான் என்பது என் துணிபு. பந்துவராளி, ஆரபி, பிருந்தாவன சாரங்கா, தோடி, கோசலம் ஆகிய ராக தேவதைகள் புண்ணியம் செய்தவை. அதனால்தான், இன்று காய்த்ரியால் விஸ்தாரமாய் வாசிக்கப் பெற்றன. இத்துடன் அந்தக் கச்சேரியைப் பற்றி நிறுத்திக் கொள்கிறேன்.

இன்று திருச்சூர் சகோதரர்களுக்கு நாகை ஸ்ரீராம் வயலின் வாசிப்பதாய் இருந்ததாம். ஏதோ காரணத்தினால் அவர் வாசிக்க முடியாததால், கடைசி நிமிஷத்தில் கண்டதேவி விஜயராகவன் வாசிக்க ஒப்புக் கொண்டாராம். கச்சேரி தொடங்கும் முன், சகோதரர்களில் மூத்தவராய் தெரிந்தவர் இந்த விஷயத்தைக் கூறி, விஜயராகவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இருவருக்கும் நல்ல சாரீரம். மூத்தவரின் குரலில் நல்ல கனம். இளையவர் குரல் comparitively சன்னமாய் ஒலிக்கிறது. இருவரின் குரலும், மந்திர ஸ்தாயி மத்ய்மத்தை சுலபமாகத் தொடும் போதும் கூட, நல்ல கனத்துடன் ஒலிக்கிறது.

வர்ணங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை கமாஸில் “மாதே”, பைரவியில் “விரிபோனி”. இன்று கச்சேரி கமாஸ் வர்ணத்துடன் தொடங்கியது. முக்தாயி ஸ்வரத்தில், ஸ்வரத்தை முதல் காலத்திலும், சொற்கட்டுகளை திஸ்ரத்திலும், சாஹித்யத்தை இரண்டாம் காலத்திலும் பாடியது அற்புதமாய் அமைந்தது.

வர்ணத்தைத் தொடர்ந்து நடநாராயணியில் “மஹா கணபதே” பாடினர். இந்தக் கிருதியை வாத்யத்தில்தான் கேட்டுள்ளேன். நான் கேட்ட வரையில், இந்தக் கிருதியின் காலப்ரமாணம் துரிதமாகவே இருந்தது. இன்று, துரிதமும் இல்லாமல், ஒரேடியாய் சவுக்கமுமாய் இல்லாமல், இவர்கள் பாடிய கால்ப்ரமாணம்,  “இந்த அழகையா இவ்வளவு நாள் ரசிக்காமல் இருந்தோம்”, என்று எண்ண வைத்தது.

அடுத்து பாடிய பந்துவராளி sketch-ஐ தொடர்ந்து, “பரிபாலய” என்ற சுவாதி திருநாள் கிருதி பாடி, சரனத்தில் நிரவல் செய்தனர். நிரவல் விறு விறுப்பாக அமைந்து கச்சேரியை களை கட்ட வைத்தது. வயலினில் விஜயராகவன், பக்க பலமாய் விளங்கினார். அவரது மந்திர ஸ்தாயியும் கேட்க இனிமையாய் இருந்தது.

கச்சேரியின் முதல் பிரதான ராகமாக வசந்தாவை எடுத்து ஆலாபனை செய்தனர். ஆலாபனை வெகு நன்றாக அமைந்தது. இருவரின் குரலும் சர்க்கரை கரைச்சலாக இருக்கிறது. அகாரத்தில் கேட்க வெகு அற்புதமாய் இருக்கிறது. தார பஞ்சமத்தை அநாயாசமாக தொட்டுவிடும் சாரீரத்தை வைத்துக் கொண்டு, தார ஷட்ஜத்தில் நின்றபடி ‘ம்-காரத்தில்’ சஞ்சாரங்கள் தேவையா? வாயைத் திறந்து பாடினால் இன்னும் கூட நன்றாக இருந்திருக்குமே. இது ஒரு குறை அல்ல. அவர்கள் பாடியது அற்புதமாகத்தான் இருந்தது. இன்னும் கூட நன்றாக இருக்க வாய்ப்புகள் இருந்தனவோ என்று தோன்றியது. இன்னும் சில விஷயங்கள் கூட நெருடின. அவை, இன்று பாடப்பட்ட எல்லா ராகங்களுக்கும் பொருந்தும் என்பதால் கடைசியில் சொல்கிறேன்.

“ஹரிஹர புத்ரம்” என்ற தீட்சிதரின் கிருதி வசந்தாவின் இமயம். சவுக்க காலத்தில், கண்ட ஏகத்தில், கம்பீரமாய் மிளிரும் கிருதியை அற்புதமாய் பாடினர். இது போன்ற கிருதிகளுக்கு, நிட்ரவல் ஸ்வரம் எல்லாம் தேவையே இல்லை. கிருதியை ஒழுங்காகப் பாடினாலே ராக பாவம் முழுமையாய் வந்துவிடும். இதனை உணர்ந்து, அளவோடு நிறுத்திக் கொண்ட சகோதரர்களுக்கு சபாஷ்!

ஜி.என்.பி பல கிருதிகளை கச்சேரி மேடையில் புழங்கச் செய்துள்ளார். அவற்றை, அவர் பாடிய விதத்தில் கேட்கத்தான் எனக்கு விருப்பம். ஒரு கிருதியை மட்டும் அவர் பாடிய விதத்தில் பாடாமல் இருந்தால் நன்றாயிருக்குமே என்று எனக்குத் தோன்றும். பூர்ணசந்திரிகாவில் “தெலிஸி ராம”-தான் அந்த கிருதி.  “ராமா என்றால் பரப்பிரம்மம் என்றும் பொருள், ஆனால் சிலர், பெண் என்றொரு அர்த்தமும் அதற்கு இருப்பதாகக் கூறுவர். அவர் காமாந்தகராய் இருந்தாலன்றி அவருக்கு இந்த அர்த்தம் தோன்றாது”, என்று கடுமையான சாடல் நிறைந்த பாடல். அதை அதி துரிதத்தில் சிட்டை ஸ்வரம் எல்லாம் போட்டுப் பாடும் போது, ஏதோ சந்தோஷமான பாடல் போன்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்தக் காரணத்தால், இன்று திருச்சூர் சகோதரர்கள், இந்தப் பாடலை துரித காலத்தில் பாடியதை என்னால் அதிகம் ரசிக்க முடியவில்லை. (அது அவர்கள் குற்றமல்ல.)

பொதுவாக, கச்சேரிகளில் சுத்த மத்யம ராகங்கள் ஒலிக்கும் அளவுக்கு பிரதி மத்யம ராகங்கள் ஒலிப்பதில்லை. இன்று விரிவாகப் பாடப்பட்ட ராகங்கள் முன்றுள், இரண்டு பிரதி மத்யம ராகங்களாக அமைந்ததைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. 

கரணம் தப்பினால் மரணம் என்ற வகை ராகம் சுசரித்ரா. சுத்த ஸ்வரங்களை நன்றாக சாதகம் செய்திருந்தால்தான், இது போன்ற ராகங்களை கையாள முடியும். சிலர், இது போன்ற ராகங்களை கஷ்டப் பட்டு பாடுவார்கள். அதைக் கேட்பதும் கஷ்டமாகவே இருக்கும். இன்று இவர்கள், தோடி, கல்யாணி, பைரவி பாடுவது போல, பிரதான ராகமாக சுசரித்ராவை  அநாயசமாக ஆலாபனை செய்தனர்.  அரைத்த மாவையே அரைக்காமல், புதியதாய் பாட முயன்றதற்கே இவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இருவரும் சேர்ந்து 16 நிமிடங்கள் ஆலாபனை செய்தனர்.அவர்கள் பாடியதை எல்லாம் பத்து நிமிடத்துக்குள் அடக்கி, அற்புதமாய் வாசித்தார் விஜயராகவன். சுசரித்ராவை ஆரம்பித்ததும், “வேலும் மயிலுமே” பாடப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆலாபனையைத் தொடர்ந்து, தானம் பாட ஆரம்பித்ததும், சற்றே வியந்தேன்.  தானத்தை, பெயருக்குப் பாடாமல், மத்யம காலத்தில், ராகம் முழுமையாய் வெளிப்படும் படி பாடியது நிறைவாய் இருந்தது. ஆனால் தானம் பாடி முடிக்கும் போதே, நேரம் நிறைய ஆகிவிட்டது.

“ராமா ராகவா பாஹிமாம். சுசரித்ர பட்டாபி”, என்ற ஆதி தாள பல்லவி. (2 களை, சமத்தில் எடுப்பு). நேரக் குறைச்சலால் நிரவல் செய்யாமல் நேரே ஸ்வரத்துக்குத் தாவிவிட்டனர். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், புரிந்து கொள்ள முடிந்தது. நிரவல் செய்யவே நேரம் இல்லாத போது, ஸ்வரப்ரஸ்தாரத்தை சுசரித்ராவிலேயே நிறைய பாடி இருக்கலாம். ஒரு ராகத்தை வெகு நேரம் பாடினால் அலுப்பு ஏற்படும் என்பதனால், ராகமாலிகை ஸ்வரங்கள் பாடும் பழக்கம் ஏற்பட்டது. சுசரித்ராவே முழுமையாகப் பாட நேரமில்லாத போதும், ஆனந்த பைரவி, வலஜி, ரேவதி போன்ற ராகங்களில் ராகமாலிகை தேவைதானா, என்ற கேள்வி எழுந்தது. அதுவும் ஆனந்த பைரவியின் mood-ம் சுசரித்ராவின் mood-ம் முற்றிலும் வேறுபட்டு இருந்தன. இதனால், நல்ல கனவு, திடீர் என்று கலைந்த உணர்வு ஏற்பட்டது.

கடைசியில் வைத்த கோர்வையில் ராக ஆரோகண, அவரோகணம் வரும்படியாக வைத்தது, நன்றாக இருந்தது. இது போன்ற அரிய ராகங்கள், ரசிகர் மனதில் புரிய ஏதுவாயிருக்கும். எனக்குப் பக்கத்தில் இருந்தவருக்கும், இந்த கோர்வையை கேட்டவுடன்தான், இது மேளகர்த்தா ராகம் என்று விளங்கியது.

ஸ்வரங்களுக்குப் பின், பல்லவியை திரிகாலம் செய்து, திஸ்ரமும் செய்தனர். கச்சேரியின் கடைசிக்குத் தனி தள்ளப்பட்டதால், crisp-ஆக அமைந்தது. மிருதங்கம் வாசித்தவர் சகோதரர்களின் தந்தை திருச்சூர் மோகன் என்பதால், வருத்தப்பட்டிருக்க மாட்டார். கடம் வாசித்தவர் டி.வி.வெங்கடசுப்ரமணியம். இருவரும் திஸ்ர நடையில் கொஞ்சம் கோடி காட்டிவிட்டு, சௌக்யமாக வாசித்தனர். தனியில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை என்றாலும், பாடல்களுக்கு நல்ல போஷாக்கு அளிக்கும் வகையில் வாசித்தனர்.

சரி, முன்னால் சொன்ன நெருடல்களுக்கு வருவோம்.

இரட்டையர்கள் கச்சேரிகளில், பொதுவாய், ஒருவர் ஒரு ராகத்தையும், மற்றவர் இன்னொரு ராகத்தையும் ஆலாபனை செய்வர். அன்றைய ஆலத்தூரிலிருந்து, இன்றைய லால்குடி siblings வரை இதுதான் நடைமுறை. இல்லாவிடில், பாதி ராகத்தை ஒருவர் நிர்வகிக்க, மீதியை மற்றவர் நிர்வாகம் செய்வார். திருச்சூர் சகோதரர்கள், நிமடத்துக்கு ஒரு தரம் மாறி மாறிப் பாடுகின்றனர். பெரியவரின் குரலில் அழகாக உருவாகும் வடிவம், முழுமை பெறும் முன்னரே அடுத்தவரின் குரல் கேட்கும் போது, கொஞ்சம் தொடர்ச்சி அடி வாங்குகிறது. உதாரணமாக, ஆலாபனையின் ஒரு இடத்தில் ஒரு வர்ஜ பிரயோகத்தை ஒருவர் ஆரம்பிக்க,அது முழுமையாய்ப் பாடு முன்னரே மற்றவர் வேறொரு பிரயோகத்தை ஆரம்பித்துவிட்டார். சில இடங்களில், இருவருமே ராகத்தின் ஒரே மாதிரியான பிடிகளை, அவரவர் பாணியில் அடுத்தடுத்து பாடுகின்றனர். இது போன்ற ஆலாபனை ஜுகல்பந்திகளுக்குப் பொருத்தமாக இருக்கும். அங்கு ‘sawal jawab’ வகையிலான விரிவாக்கங்களை எதிர்பார்த்துப் போவோம். ஆதலால், ஒருவர் பாடிய இடத்தை, அடுத்தவரும் பாடினாலும் அலுப்பு ஏற்படுவதில்லை. ஒருவர் பாடினால் 10 நிமிடத்தில் முடியும் ஆலாபனை, இருவரும் பாடுவதால் 15 நிமிடங்களுக்கு  நீட்டிக்கப் படுகிறது.

இன்னொரு விஷயம். ஆலாபனையின் ஆரம்பத்தில் நிதானமாகப் பாடினாலும், சில இடங்களில் கற்பனையில் உதிப்பதை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்கிற வேகம் தென்பட்டது. மைசூர் பாகு செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? பாகாக்கி ஊற்றினால் மாடும் சாப்பிட முடியாது. உலரும் முன், அதை துண்டங்களாக்க வேண்டும். ஒரே பாகு என்றாலும், துண்டங்களுக்கு இடையில் கொஞ்சம் இடைவெளி வேண்டும். அளவும் சீராக இருக்க வேண்டும். அப்போதுதான் பார்க்கவும், சுவைக்கவும் ஏற்றதாய் இருக்கும். இது ராகங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, இருவரில் மூத்தவர் இதை நன்குணர வேண்டும். ஆலாபனையில் பல அழகிய கோவைகளுக்கு இடையே கொஞ்சம் நிறுத்தங்கள் (pause) கொடுத்துப் பாடினால், ராகத்தின் விரிவாக்கத்தை ரசிகர்கள் உள்வாங்கிக் கொள்ள ஏதுவாய் இருக்கும். இல்லையெனில்,  ஒரு சங்கதியை ரசிப்பதற்குள், மூன்று சங்கதிகள் கடந்து சென்றுவிடும்.

இவை எல்லாம் கொஞ்சம் நெருடினாலும், கச்சேரி ரொம்பவே ரசிக்கும் படி இருந்தது. சீஸனில் நிச்சயம் கேட்க வேண்டும் என்று நான் வைத்திருக்கும் பட்டியலில், இவர்களுக்கும் நிச்சயம் ஒரு இடமுண்டு.

Read Full Post »

ஒவ்வொரு சீசனிலும் 35-40 கச்சேரிகள் கேட்டுவிடுவேன். அவற்றில் சரி பாதியாவது வளரும் கலைஞர்களின் கச்சேரிகளாக இருக்கும். அதிக எதிர்பார்ப்பும், கூட்டத்துக்குப் பாட வேண்டிய கட்டாயம் இல்லாத நிலையில், நிதானமாக, அழுத்தமாகப் பாடுவதில் இவர்களால் கவனம் செலுத்த முடிகிறது. 2 மணி நேர கச்சேரியில் 4 பாடல்கள் பாடினாலும் யாரும் இவர்களை குற்றம் சொல்லப் போவதில்லை.

இந்த வகையில், நான் இந்த சீஸனில் கேட்கப் போகும் இளைய தலைமுறையைப் பற்றி தொடர்ந்து எழுத விரும்புகிறேன். அபிஷேக் ரகுராம், டி.என்.எஸ்.கிருஷ்ணா, சிக்கல் குருசரண் போன்ற, இளைஞர்களாக இருந்தாலும், பிரபலம் ஆகிவிட்டவர்களை நீக்கி, மற்றவர்களை  இங்கு ப்ரோஃபைல் செய்வதாக எண்ணம்.

முதலாமவர்: ராமகிருஷ்ணன் மூர்த்தி

இவரை நான் ஒரு முறைதான் கேட்டுள்ளேன். அந்த அனுபவத்துக்கு முன்னும், பின்னும், பலர் இவரது இசையை சிலாகித்துக் கூறக் கேட்டிருக்கிறேன்.

நன்னு என்கிற சுப்ரமணியனின் மிருதங்க அரங்கேற்ற கச்சேரியில் பாடிய போது கேட்டேன். குருவாயூர் துரை, செங்கல்பட்டு ரங்கநாதன், பி.எஸ்.நாராயணசாமி, விஜய் சிவா, சஷாங்க், மதராஸ் கண்ணன் என்று எண்ணற்ற வித்வான்கள் கூடியிருந்த சபையில், அரங்கேற்ற கச்சேரி என்று அரை நிமிஷம் கூட தோன்றா வண்ணம் அமைந்த கச்சேரி அது.

அன்று ராமகிருஷ்ணன் பாடிய காம்போதி வெகு அற்புதம். இனிமையான குரல். ராகம் பாடும் போது அசாத்தியமான அழுத்தம். காலப்ரமாணத்தில் நல்ல பிடிப்பு. நான் கேட்ட அன்று, ‘ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே’ கிருதியை பிரதானமாகப் பாடினார். ‘மனஸிஜ கோடி கோடி’ என்ற வரியை இரண்டு காலங்களில் பாடி, திஸ்ரமும் செய்தார். வாஸவாதியில் நிரவல். காம்போதியின் காந்தாரத்தை மையமாக வைத்து, அவர் பின்னிய அழகிய கோவைகள் இன்னும் காதுகளுள். ஸ்வரம் பாடும் போது, அவ்வப்போது ‘சகல தேவ’, ‘பூஸுராதி’ போன்ற இடங்களுக்கும் பாடியது, லா.ச.ரா பாஷையில் சொன்னால் “பஹு ருசி”.

இன்னும் சில நாட்களில் இருபது வயதுக்குள் நுழையப் போகும் இவ்விளைஞர், காலிஃபோர்னியாவில் (இர்வைன்) பொறியியல் படிப்பு படிக்கிறார். பிறந்தது இந்தியாவில் என்றாலும், தந்தையின் பணி காரணமாக 3 வயதிலிருந்து அமெரிக்க வாசம்.

டெலிஃபோனில் அவரைப் பிடித்தேன். நல்ல தமிழில் தெளிவாகப் பேசுகிறார். “எனக்கு ஆறரை வயதாகும் போது, திருமதி. பத்மா குட்டியிடம் இசை பயில ஆரம்பித்தேன். பாட்டு விஷயத்தில் அவர் ரொம்பவும் கறாராக இருப்பார். அதனால், முதலில் நான் கொஞ்சம் பயந்தேன். என் அம்மாதான், ஒவ்வொரு நாளும் என்னுடன் உட்கார்ந்து, என்னை சாதகம் செய்ய வைத்து, அடுத்த கிளாசில் போய் திட்டு வாங்கிக் கொள்ளாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார். நாட்பட நாட்பட, என்னை இசை இழுத்துக் கொண்டது. திருமது பத்மா குட்டியிடம் பல உருப்படிகள் பாடம் செய்தேன். எனக்கு பதினொரு வயதாகும் போது டில்லி சுந்தரராஜனிடம் கற்க ஆரம்பித்தேன். அப்போது அவர் LA-வில் சில காலம் தங்கி இருந்தார். அவரது வயலின் வித்வத் எல்லோரும் அறிந்ததே. ஆனால், அவர் அற்புதமாகப் பாடக்கூடியவர் என்று பலர் அறிந்திருக்க மாட்டார்கள். முதல் முறை அவர் பாடிக் கேட்டதும் I was bowled over. தொடர்ந்து அவரிடம் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கற்க ஆரம்பித்தேன்.”, என்றார்.

தனது ஒன்பதாவது வயதிலிருந்து வருடம் தவறாமல் மூன்று மாதம் இந்தியாவில் சங்கீத சிட்சை. பதிமூன்று வயதிலிருந்து கச்சேரிகள் செய்கிறாராம். 3-4 வருடங்களாக டிசம்பர் ஜூனியர் ஸ்லாட்டில் நிறைய கச்சேரிகள் செய்துள்ளார். இந்த வருடம் அகாடமியில் செய்த கச்சேரியில் பைரவி அமர்க்களமாய் இருந்தது என்ற கேட்டவர்கள் கூறுகின்றனர். ஆலத்தூர், செம்மங்குடி, டி.எம்.டி, பிருந்தா-முக்தா, ஜி.என்.பி என்று பலரின் பாடலை விரும்பிக் கேட்டாலும்,  “ராமநாதபுரம் கிருஷ்ணனின் இசையில் மேல் தனி பிரியம். அவர் பாட்டில் சங்கீதத்தின் எல்லா அம்சங்களும் சரியான கலவையில் இருப்பதாக எனக்குத் தோன்றும்.”, என்கிறார்.

கிளீவ்லேண்ட் போட்டியில் 2003-ல் முதல் இடம். அதற்குப் பரிசாய் 2005-ல் முழு நீளக் கச்சேரி செய்து, நற்பெயரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 2007-ல் மியூசிக் அகாடமி போட்டிகளில், ஐந்து பரிசுகளை அள்ளியுள்ளார். 2008-ல் அகாடமியின் Spirit of Youth festival-ல் சிறந்த பாடகராகத் தேர்வு பெற்றிருக்கிறார். முசிறி அறக்கட்டளை விருதும், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை விருதும் இவரை அலங்கரிக்கின்றன.

பாட்டையும் படிப்பையும் தவிர, Basketball, Tennis பார்க்க ஆர்வமாம்.

இன்னும் இரண்டு வருடம் படிப்பு முடிந்தால் அமெரிக்கா ஓடிவிடுவேன் என்று பலர் கூறும் வேளையில்,  “படிப்பு முடிந்ததும், இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்துவிடுவேன்” என்கிறார் ராமகிருஷ்ணன் மூர்த்தி. இசைத் துறையில் நன்றாகக் காலூன்றியதும், முழு நேரப் பாடகனாவதுதான் நெடுங் காலத் திட்டமாம். (long term plan என்பதை நெடுங்காலத் திட்டம் என்று தமிழ்ப் படுத்தலாமா?)

சிறு வயதில் தவறாமல் சாதகம் செய்ய வைப்பது, வருடம் தவறாமல் இந்தியாவுக்கு அழைத்து வருவது, பாடுவதைத் தொழிலாகக் கொள்ளும் எண்ணத்தைக் கண்டிக்காமல் ஊக்குவிப்பது, என்று ராமகிருஷ்ணன் மூர்த்தியின் பெற்றோர்கள் ஆற்றியிருக்கும் பணி அளப்பெரியது. “I must have been really blessed to have such wonderful parents”, என்கிறார் ராம் (இதுவும் நானில்லை – அவன்;-)). அவரிடம் பேசி முடிக்கும் போது,  “சீஸனில் meet பண்ணலாம் ”, என்றேன்.  “நிச்சயம் சந்திக்கலாம்.”, என்று தெள்ளு தமிழில் பதிலுரைத்தார்.

அஸ்திவாரம் பலமாக அமைந்திருக்கிறது. எல்லாம் சரியாகச் சென்றால், நல்லதொரு நெடும் கட்டிடம் உருவாவது உறுதி.

Read Full Post »

கந்தர்வ கானம்

கந்தர்வ கானம்
 
ஜி.என்.பி நூற்றாண்டு மலரைப் பற்றி ஒரு பதிவு எழுதுவதாகப் போன பதிவில் எழுதியிருந்தேன். அதற்கு அவசியம் வைக்காமல் இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா, சென்னை பதிப்பின் நான்காம் பக்கத்தில்  ஒரு கட்டுரை வந்துள்ளது.
 
கட்டுரையை இங்கு இடுகிறேன். நன்றி ஷாலினி.
 
 
 
GNB: THE MAN & HIS MUSIC
Shalini Umachandran | TNN
 
He only wore khadi. He was the brand ambassador for Philips radios in the 1960s. He collected watches and cars from across the world. But to materials scientist and music lover Lalitha Ram, legendary Carnatic musician GN Balasubramaniam is a ‘gandharva’. 
 
 “Gandharvas are mythical beings known for their beautiful music. I believe GNB was a ‘gandharva’ who lost his way and landed on earth,” says Ram, co-editor of a commemorative volume on GNB, ‘Gandharva Ganam’, that will be released on January 5. “That’s why I chose the title. I know I sound fanatical when I talk about GNB,” he says, laughing. “But he has had a profound influence on my life,” says the 30-year-old. “He kept experimenting with music and that inspires you to reinvent yourself, no matter what your field is.” 
 As 2009 is GNB’s centenary year, his family wanted to bring out a souvenir paying tribute to him and his music. “We’ve focused more on his music,” says V Ramnarayan, editor of ‘Sruti’ magazine, who worked with Ram on the volume. 
“We listed various facets of GNB’s music — his compositions, handling of ragas, preparation for concerts, layas, voice, kritis… and got experts to write about them,” says Ram, who has also written a Tamil biography of GNB, ‘Isai Ulaga Ilavarasar GNB’. “He is the best example of lakshya (creativity in music) blending with lakshana (grammar). GNB was known for his technical genius and that’s what this book focuses on,” he explains.
 
 ‘Gandharva Ganam’ is divided into three sections: the first has analyses of GNB’s music by experts, the second comprises writings by GNB and his father; and the final section contains personal reminiscences by friends and admirers. “People know that GNB wrote many articles on music but they’ve never been compiled. We’re hoping this volume will change that,” says Ramnarayan. 
The book also contains three unpublished articles and a CD with a rare recording that GNB made for a foreigner just before his death in May 1965. “It was hard to read his handwriting in the unpublished articles,” says Ram. “It’s been satisfying to do research and discover new facets of the man and his music,” he says.
Ramnarayan adds that the articles were all in English and impeccably written. “He held a BA Honours in English Literature and his writings show his familiarity with poet s like Milton, the Greek tragedies, Western philosophy and music,” he says.
The volume is peppered with a number of rare photographs. Ram spent days in the Roja Muthiah library. “I found original film posters (GNB acted in five Tamil films) and even a Philips ad in which he was endorsing a radiogramme,” says Ram.
Ram has been an ardent admirer of GNB since his school days. “I listen to his music every day,” says Ram, whose fascination with GNB began after he watched a documentary on the musician on Doordarshan as a boy. Ramnarayan, though, is a relatively new convert. “I had heard GNB live when I was about 10, but didn’t think much of his music. In fact, I even believed he sang off-key. But that was until the beginning of this year when I watched a series of DVDs of a workshop analysing GNB’s music that Sruti had conducted in 1992,” he says. “That’s when I realised how profound yet accessible his music is. He is easily one of the most intellectual Carnatic musicians.”
RARE GLIMPSES:  GNB during a recording for AIR; GNB with Ragini, ML Vasanthakumari & Padmini at a party hosted by MLV’s father Aiyyasami Iyer after GNB received the Sangeetha Kalanidhi in 1958, and GNB inspecting a Philips radio, for which he was brand ambassador

Read Full Post »

Older Posts »