Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘parlandu award’

இந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது

மிருதங்க வினைஞர் பர்லாந்தைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். அவர் பெயரில் விருது ஒன்று 2013-ல் தொடங்கப்பட்டது. அதனை முதலில் பெற்றவர் பர்லாந்தின் மகன் செல்வம். இவரும் தன் தந்தையாரைப் போலவே மிருதங்கம் தயார் செய்வதில் தேர்ச்சியும் தனித்தன்மையும் பெற்றிருந்தார்.

தன் இளமைக்காலங்களை ஒருமுறை நினைவுகூர்ந்த செல்வம்,

“என் தந்தையார் மிருதங்க வேலையில் பேர் பெற்றவர் என்றாலும் நான் அவரிடம் தொழில் கற்கவில்லை. பள்ளிக்குச் சென்று ஈ.எஸ்.எல்.சி வரை படித்தேன். 1950-களின் கடைசியில் அப்பாவுக்கு சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது. வேலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அதனால் படிப்பைத் தொடராமல் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். மாஜிஸ்டிரேட் அலுவலகத்தில் “பங்கா” (மின்விசிறிக்கு முந்தைய காலத்தில் இருந்த கையால் இழுத்து இயக்கப்பட்ட விசிறி) இழுக்கும் வேலை கிடைத்தது.

எங்கள் குடும்பத்துக்கு மணி ஐயரும், அவர் குருநாதரும் நிறைய ஆதரவு அளித்துள்ளனர். என் தாத்தா செபாஸ்டியனுக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது வைத்தியநாத ஐயர்தான். குடிசைவீட்டை கட்டிடமாக்க மணி ஐயர் உதவியுள்ளார். அப்படி அவர்கள் ஆதரவு இருந்தும் நான் ஏன் இந்த வேலையில் இருக்கவேண்டும் என்று பலர் கேட்ட போதும் எனக்கு அவர்களிடம் செல்லத் தோன்றவில்லை. ஒருநாள் மணி ஐயரே அழைத்தார்.

“உன் அப்பாவுக்கு முடியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. உன்னால் செய்ய முடியுமா?”, என்று கேட்டார்.

நான் சற்றும் தயங்காமல், “செய்ய முடியும்”, என்றேன்.

”இதுவரை என்ன வேலை செய்திருக்கிறாய்?”

“அப்பாவும் சித்தப்பாவும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். நான் வேலை செய்ததில்லை”, என்றேன்.

அப்போது அப்பாவும் மணி ஐயர் வீட்டுக்குள் நுழைந்தார்.

”என்ன பர்லாந்து! உன் பையன் வேலை செஞ்சது இல்லை. பார்த்ததை வெச்சே செய்வேன்கறானே!”, என்று கேட்டார்.

அதற்கு என் அப்பா, “அவன் செய்வேன்னு சொன்னா நிச்சயம் செய்வான்.”, என்று அடித்துக் கூறினார்.

மகிழ்ந்த மாஸ்டரும், “மாடிக்குப் போ! உனக்குத் தெரிஞ்ச வேலையை செய்!”, என்றார்.

அன்று வேளாங்கன்னி மாதாவிடம், “என்னை மாஸ்டருக்கு கெட்ட பெயர் வரவழைக்காத படியும், என் தந்தையைவிட அதிக பேர் வாங்காதபடியும் வைக்க வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டு வேலையில் இறங்கினேன்.

அந்த அறைக்குள் 60 மிருதங்கங்கள் இருப்பது கண்டு மிரண்டு போனேன். பெரும்பாலான மிருதங்கங்களில் ஒரு துண்டு பேப்பர் சொருகியிருந்தது. அதில் இருந்த குறிப்புகள்தான் என் குரு. அவற்றில் எந்த மிருதங்கத்தில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று மாஸ்டர் எழுதியிருந்ததை வைத்து என் வேலையைத் தொடங்கினேன்.

என் அப்பா மாஸ்டரைப் பார்த்தாலே எழுந்துவிடுவார். என்னிடம் மாஸ்டர் இன்னும் நெருக்கமாக பழகினார் என்றே தோன்றுகிறது. நான் அவர் அருகில் தைரியமாக அமர்ந்து பேசுவேன். என்னிடம் என் அப்பாவின் வேலையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.

“காசுக்காக என்றைக்கும் உன் அப்பா வேலை செய்ததில்லை. கச்சேரிக்கு நிறைய ஊர் ஊராகப் போகும் போது வீட்டுக்கு வரக் கூட நேரமிருக்காது. அந்த மாதிரி சமயங்களில் இடையில் எதோ ஒரு ஊரின் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட வேலை செய்திருக்கிறார். நேரமில்லாவிட்டால் அடுத்த ஸ்டேஷன் வரை டிக்கெட் வாங்கி ஓடும் வண்டியில் கூட வேலை செய்திருக்கிறார். அந்த ஸ்ரத்தை உனக்கு வர வேண்டும்”, என்று அவர் சொன்னதுதான் எனக்கு வேத வாக்கு.

அந்த அறையிலேதான் இருப்பேன். தூக்கம் வந்தால் மிருதங்கங்களுக்கிடையிலேயே தூங்குவேன். சாப்பாடு மாஸ்டர் வீட்டிலிருந்தே வந்துவிடும். என் அப்பாவைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.  ஒரு வாத்யத்தை தொட்டதும் அதில் என்ன வேலைகள் செய்ய வேண்டும், எந்த ஸ்ருதிக்கு சரியாக இருக்கும், எப்படி வார் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளணர்வில் தெரிய வேண்டும். அந்த உள்ளுணர்வு கிட்டிவிட்டால் வேலை சிறப்பாக இருக்கும். மாஸ்டரின் குறிப்புகள் என் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தன.

நாளடைவில் எனக்கு சரியாகப்பட்டதையே செய்ய ஆரம்பித்தேன். இது மாஸ்டருக்குத் தெரியும். ஒருமுறை, என் அப்பாவிடம் பேசும் போது, “இப்போது பாரு, நான் இந்த மிருதங்கத்தில் சில வேலைகள் சொல்கிறேன். செல்வம் பேசாமல் கேட்டுவிட்டு தனக்கு சரியென்று தோன்றும் வகையில் செய்து முடிப்பான்”, என்று கூறி என்னை அழைத்து அந்த வேலையைக் கொடுத்தார்.  நானும் அவர் எதிர்பார்த்தபடியே என் பாணியில் வாத்தியத்தை தயார் செய்து கொடுத்தேன். இருவரும் அதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியுற்றது ஒருவகையில் என் வேலைக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.

பெங்களூரில் ஆலத்தூர் பிரதர்ஸ் கச்சேரிக்கு மாஸ்டர் வாசிக்க இருந்தார். ஏதோ காரணத்தினால் அவர்கள் வரமுடியாததால் மாலியின் கச்சேரி மாற்றாக ஏற்பாடாகியது. ஆலத்தூரின் ஸ்ருதி ஒரு கட்டை. மாலியின் ஸ்ருதியோ ஐந்து கட்டை. அரை நாளில் வாத்தியங்களை மாற்றி தயார் செய்தேன். கச்சேரி முடிந்ததும் மாஸ்டர் என்னை அழைத்து மாலி என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். மாலியைச் சென்று பார்த்த போது என்னை மிகவும் பாராட்டி, மிருதங்கத்தின் நாதம் தன்னை வாசிக்கத் தூண்டியதாகக் கூறினார்.

செல்வத்தை குடும்பத்தில் ஒருவராக பார்த்த மணி ஐயரின் மகன் ராஜாராம்,

“என் அண்ணாவின் காம்பஸ் போன்ற உபகரணங்களை மிருதங்க வேலையில் உபயோகிப்பதில் அப்பா, செல்வம் இருவருக்கும் பெரிய ஆவல் உண்டு. ஒருமுறை வெட்டுத்தட்டு எடுக்க காம்பஸில் வட்டம் போட செல்வம் அண்ணாவை அணுகிய போது அண்ணா ஏதோ வேலையாய் இருந்தார். இரண்டு மூன்று அழைத்தும் அண்ணா செவி சாய்க்காதலால் செல்வம் கோபத்தில் வெறும் கையால் எடுத்த வெட்டுத்தட்டு கச்சிதமாய் காம்பஸில் போட்ட வட்டம் போல் வந்ததைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம்.”

வேலையில் அசகாயசூரந்தான் என்றாலும், செல்வத்திடம் குறும்பும் உண்டு.

ஒருமுறை அப்பா தன் விருப்பத்திற்கு ஏற்றார் போன்ற நாதம் மிருதங்கத்தில் வரவில்லை என்று மீண்டும் மீண்டும் மாற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். செல்வமும் செய்து செய்து அலுத்துப் போய், “நாளைக்கு செஞ்சுத் தரேன் பாருங்க, உங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும்”, என்று கிளம்பிவிட்டார். அடுத்த நாள் கொண்டு வந்த வாத்யம் அப்பா எதிர்பார்த்த ஒலியை ஏற்படுத்தியது ஆனால் அதை வாசித்ததுமே, “என்னமோ சரியில்லையே, எதோ பெரிய சில்மிஷம் பண்ணி இருக்க!, என்ன பண்ணினாய்?”, என்று கேட்டார்.

செல்வமும் சிரித்துக் கொண்டே, பன்றியின் தோலை உபயோகித்ததாகவும், நீங்கள் கேட்ட ஒலி அதில்தான் வரும் என்றும் கூறிச் சிரித்தார். பர்லாந்திடம் இல்லாத இது போன்ற தைரியம் செல்வத்திடம் நிறைய உண்டு.

மணி ஐயர் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த போது செல்வமும் சென்னைக்கு வந்து தொழிலைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக 1995-ல் நடந்த சாலைவிபத்தில் செல்வம் தன் வலது கரத்தை இழந்தார்.

2017 ஃபெப்ரவரியில் செல்வம் மறைந்தார். அவர் மகன்கள் இன்றும் மிருதங்க வினைஞர்களாகத் தொழில்புரிந்து வருகின்றனர்.

Read Full Post »

சென்ற வருடம் நவம்பரில் வலை மேய்ந்து கொண்டிருந்தேன். டிசம்பரில் நடக்கவிருக்கும் கச்சேரிகளின் பட்டியல்கள் வெளியிட்ட நிலையில், எனக்குப் பிடித்த பல கலைஞர்கள் பலருக்கு மிக சொற்பமான அல்லது கச்சேரி வாய்ப்புக அல்லது வாய்ப்பே இல்லாமல் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனேன். அவர்களுள் ஒரு சிலரை மட்டுமாவது மேடையேற்றி ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாதான் பரிவாதினியின் 2013 இசை விழா. மொட்டை மாடி கூட காலியாய் இல்லத நிலையில், ஏழு நாள் விழாவை மூன்று இடங்களில் வைத்துச் சமாளித்தோம். எங்களது அனுபவமின்மை, சுமாரான ஒலி அமைப்பு, ஆள் பற்றாக்குறை என்று பல தடங்கல்களை மீறி மனதுக்கு நிறைவாக பல கச்சேரிகள் அமைந்தன. இஞ்சிக்குடி வாசித்த பஹுதாரியும், வீணை பார்த்தசாரதி வாசித்த பெஹாகும், எம்.எஸ்.வித்யா பாடிய யாகப்ரியாவும், மல்லாடி சூரிபாபு பாடிய ஜோகும் என்றும் அகலா நாதத் திவலைகள்.

இந்த வருடம் டிசம்பர் களேபரத்தைத் தவிர்த்து, நவம்பரில் வருகிறது பரிவாதினி இசை விழா.

ஏழு நாட்கள் நடை பெரும் விழாவில் 14 கச்சேரிகள் இடம் பெறவுள்ளன. தினமும் ஒரு வாத்தியக் கச்சேரியும் ஒரு வாய்ப்பாட்டு கச்சேரியும் இடம் பெரும். வருங்காலத்தில் உச்சம் தொடப் போகும் இளைஞர்கள் எழுவரும், இன்னும் கொஞ்சம் இவர்களை கேட்க மாட்டோமா என்று நல்ல ரசிகர்களை ஏங்க வைக்கும் முதிர்ந்தவர்கள் எழுவரும் இசைக்க உள்ளனர்.

high resolution banner

இந்தக் கச்சேரி தொடரில் இடம் பெரும் ஒவ்வொரு கலைஞரைப் பற்றியும் தனித் தனியாய் பதிவிடுகிறேன்.

இசை விழாவுடன் கூட, சென்ற ஆண்டு தொடங்கியுள்ள வருடாந்திர விருதான பர்லாந்து விருது (Fernandes Award of Excellence) இந்த வருடம் தேர்ந்த மிருதங்க வினைஞர் வரதன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மிருதங்க மேதை முருகபூபதி அவர்களின் மிருதங்க நாதத்தைப் போஷித்த கைகளுக்குச் சொந்தக்காரர் வரதன்.

அது என்ன பர்லாந்து விருது?

இசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்ரைச் செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்கலையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப் பட்ட அரிய மிருதங்க வலைஞர்தான் பர்லாந்து. மிருதங்க உலகின் அரசர்கள் என்று கருதப்படும் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை – இருவருக்கும் மிருதங்கம் செய்து கொடுத்தவர் பர்லாந்து என்கிற Fernandes-தான். அவரைப் பற்றிய பல சுவாரஸ்ய கதைகள் உண்டு. அவற்றுள் சிலவற்றை நானே முன்பு இந்த வலைப்பூவிலேயே எழுதியுள்ளேன். அவர் பெயரால் விருதை சென்ற வருடம் தொடங்கி, பர்லாந்து அவர்களின் மகன் திரு. செல்வத்துக்கு அளித்தோம்.

சென்ற வருட விழாவில் சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும்தான் காரணம்”, என்று உருக்கமாய் கூறிய உண்மை அங்கிருந்தவர்களை சற்றே அசைத்தது.

இந்த விருதையும், வருடாந்திர கச்சேரிகளையும் எல்லா வருடமும் தொடர்ந்து செய்ய வேண்டி பல வழியில் முயன்று வருகிறோம். அதில் ஒரு வழி crowd funding. சென்ற வருடமே பல நண்பர்கள் பங்களிக்க விரும்பியதாய் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறினர். அந்த எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த்ச் சுட்டியில் சென்று தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.

https://www.indiegogo.com/projects/parlandu-award-parivadini-concert-series-2014/x/8248462

கச்சேரிகளும், விருது வழங்கும் விழாவும் நடக்கும் இடம் சென்னை ராக சுதா ஹால், மயிலாப்பூர். தேதி – நவம்பர் 12 முதல் 18 வரை.

Read Full Post »

என் பழனி சுப்ரமண்ய பிள்ளை நூலைப் படித்திருப்பவர்களுக்கு பர்லாந்தின் அறிமுகம் தேவைப்படாது. ஒற்றை வரியில் சொன்னால் மணி ஐயருக்கும், பழனி சுப்ரமணிய பிள்ளைக்கும் மிருதங்கம் செய்துகொடுத்த மேதாவி. அவர் பெயரில் ஒரு விருதைத் தொடங்கி சென்ற வருடம் அவர் மகன் செல்வம் அவர்களுக்கு வழங்கினோம். அந்தச் சமயத்தில் பர்லாந்தைப் பற்றிய ஆவணப் படம் ஒன்ரையும் எடுக்கத் தொடங்கினோம். அதிலிருந்து ஒரு துளி இங்கே உங்களுக்காக.

முழுமையான ஆவணப்படத்தின் வெளியீட்டைப் பற்றியும், இந்த வருடத்துக்கான பர்லாந்து விருதினைப் பற்றிய விவரங்கலையும் விரைவில் தெரியப் படுத்துகிறேன்.

Read Full Post »