Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘personality’

வித்வான் மதுரை சீனிவாஸன் மறைந்த போது எழுதிய பதிவு. அவருடைய 87-வது பிறந்த நாளில் இங்கு இட்டுக் கொள்கிறேன்.

போன வருடம் அக்டோபர் 29-ம் தேதி மற்றுமொரு நாளாகத்தான் கடந்து கொண்டிருந்தது. இலக்கில்லாமல் ஃபேஸ்புக்கை மேய்ந்து கொண்டிருந்த போதுதான் ’சீனா குட்டி’ என்று அறியப்பட்ட வித்வான் மதுரை சீனிவாசன் மறைந்த செய்தி கண்ணில்பட்டது.

“இரண்டு வருடங்களுக்கு முன் நான் அவரைச் சந்தித்த போது தொலைபேசி அவரை அழைத்திராதிருந்தால்…”, என்று அத்தைக்கு மீசை வளர்த்தபடி அவருடன் கழித்த அந்த ஞாயிறு காலையை மனத்துக்குள் ஓட்டிப் பார்த்தேன்.

வளசரவாக்கம் பெத்தானியா நகரில் அவர் வீட்டை அடைந்த போது, அவர் வீட்டின் உள் அறையில் ஒரு மாணவிக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு அப்போது கிட்டத்தட்ட 77 வயது. தன் வயதை விட 15 வயது குறைந்தவராய் எனக்குத் தோன்றினார். வித்வான்கள் வழக்கமாய் வெளிப்படுத்தும் போலி சுயதாழ்த்தலோ, அபரிமிதமான உதட்டளவு உபசரிப்போ கிஞ்சித்தும் இல்லாமல் உரத்த குரலில் என்னிடம் அன்பொழுகப் பேசினார். அவர் பெரிய சிரிப்பை உதிர்த்த போதெல்லாம் அவர் கண்களும் சிரித்து என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவர் கையில் இருந்த நீளமான 192 பக்க நோட்டுப் புத்தகம், பல முறை உபயோகத்தினால் ஓரங்களில் நைந்திருந்தது. அவர் புனைந்திருந்த பாடல்களின் தொகுப்பே அந்த நோட்டுப் புத்தகம் என்பது பேச்சு வாக்கில் தெரிய வந்தது.

‘கருணை தெய்வமே கற்பகமே’ என்ற சிந்து பைரவி ராகப் பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தப் பாடலைத் தவிர அவர் பாடல் வேறு ஒன்றையும் நான் கேட்டிராதபடியால், அந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்ததும் அவற்றைக் கேட்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. தயங்கித் தயங்கி அவரிடம் அதைச் சொன்னேன்.

மீண்டுமொரு அந்தக் கண்கள் சிரித்தன. “இவளுக்கே நிறைய பாடமுண்டு”, என்று அவர் மாணவியை நோக்கி “ஒரு அரை மணி பாடலாமா? உனக்கு டைம் இருக்கா?”, என்றார்.

அந்தப் பெண் ஸ்ருதியுடன் கலந்து பாட ஆரம்பித்தாள்.

அவரிடம் திரையுலக அனுபவங்கள். கச்சேரியில் வாசிப்பதற்கும் சினிமாவுக்கு வாசிப்பதற்கும் உள்ள வேறுபாடு, சினிமாவில் வாசித்ததால் அவர் கச்சேரி வாய்ப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியெல்லாம் கேட்க நினைத்திருந்தேன். அவர் பாடல்களை அந்த மாணவி பாட ஆரம்பித்ததும் அவர் வாக்கேயக்கார முகத்தை கடந்து செல்ல மனம் ஒப்பவில்லை.

31THSRINIVASAN

சுத்த தன்யாஸி வர்ணம் அறை நிரம்பி ஓய்ந்த போது, “இது மிருதங்க கலைஞர் அமைத்த பாட்டா”, என்று ஆச்சர்யப்பட்டேன். ஒரு வாய்ப்பாட்டுக்காரரோ, வயலின் கலைஞரோ கடினமான கணக்குகளை உபயோகித்து பாடல்களை புனைந்தால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு மிருதங்க கலைஞர் கணக்கு வழக்குகளை பின்னுக்குத் தள்ளி ராக பாவம் சொட்டச் சொட்ட பாடல்களைப் புனைந்திருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

சீனிவாசனின் பாடல்களில் ராகத்தின் புதிய பரிமாணங்களையோ, அதிசய லய கோவைகளையோ, கவித்துவம் வாய்ந்த வரிகளையோ நான் கண்டுகொள்ளவில்லை (நான் கண்டு கொள்ளாததால் அவை இல்லை என்று அர்த்தமாகாது). அந்தப் பாடல்களை ஒரு முறை கேட்டாலும் மனதில் ஒட்டிக் கொள்ளும்படியாய் அவை புனையப்பட்டிருக்கின்றன. ராகத்தின் சாரம் இதுதான் என்பதை எளிமையாக எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளன. எட்டு ராகங்களில் அமைந்த அவரது அஷ்ட ராகமாலிகையில் ஒரு வரிதான் ஒரு ராகத்தில் அமைந்துள்ளது என்ற போதும், அந்த ஒரு வரியிலேயே ராகத்தின் ஜீவகளை அழகாக வெளிக் கொணரப்பட்டிருக்கிறது. அழகிய லய வேலைபாடுகள் பொதிந்துள்ள அவரது சுத்த தன்யாஸி வர்ணத்தின் சிட்டை ஸ்வரத்தை, வெறும் ராக பாவத்துக்காக மட்டுமே ரசிக்க முடியும். மூச்சிரைக்க விரட்டிப் பிடிக்கும் ‘பண்டுரீதி’ பாடலைக் (தியாகராஜர் என்ன காலப்ரமாணத்தில் அமைத்தாரென்று தெரியவில்லை. எலியைப் பார்த்த பூனை போல எட்டித் தாவும் காலப்ரமாணமே இன்று கேட்கக் கிடைக்கிறது) கேட்பதை விட இதமாய் வருடம் ‘மந்த்ர பலம்’ என்ற சீனிவாஸனின் கிருதியைக் கேட்டால் ஹம்ஸநாத ராக அமைப்பை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ராகங்களை அடையாளம் காண ஸ்வர ஞானம் தேவையில்லை. இது போன்ற பாடல்களின் போக்குகளை மனதில் நிறுத்திக் கொண்டாலே போதுமானது. அச்சுறுத்தாத வகையில் மாணவர்களுக்கு ராகப் பிரயோகங்கள் பரிச்சயமாக இந்தக் கீர்த்தனங்கள் உதவியாய் இருக்கும்.

கன ராகம், ரக்தி ராகம், சின்ன ராகம், பெரிய ராகம், பிரபல ராகம், அபூர்வ ராகம், ஹிந்துஸ்தானி, கர்நாடகம் என்று அனைத்து வகைகளிலும் சீனிவாஸனின் கிருதிகள் மிளிர்கின்றன. ஆறு அட்சரத்தில் தொடங்கி பதினான்கு அட்சரம் வரையில், ஒன்பது தாளங்களில் சீனிவாசனின் வர்ணங்கள் அமைந்துள்ளன. வாசந்தி, ஜோதிஸ்வரூபிணி, நீதிமதி போன்ற ராகங்களுக்கு இந்த வர்ணங்கள் வரப்ரசாதம். இருபத்திமூன்று தில்லானாக்கள் செய்துள்ள சீனிவாசன் அவற்றைப் பற்றி, “தில்லானாவின் கடைசியில் ஸ்வரமும் ஜதியும் கலந்து வரும். இந்தப் பகுதியில் ஸ்வரமும் ஜதியும் சமமான அளவில் வரவேண்டும் என்று அவசியம் இல்லை. பெரும்பாலான தில்லானாகளில் இப்படி சமமாக இல்லாமல்தான் இருக்கின்றன. என்னுடைய அத்தனை தில்லானாகளும், ‘சம எடை’ தில்லாகளாகத்தான் அமைந்துள்ளன.”, என்கிறார்.

‘விளையாட்டாய் ஏதோ செய்ய ஆரம்பித்தேன்’, என்று தன் பாடல்களைப் பற்றி கூறும் சீனிவாசன் நூறு உருப்படிகளுக்கு மேல் கவனம் செய்துள்ளார். திருமால், ஐயப்பன், முருகன், அம்பிகை என்று பல்வேறு தெய்வங்களையும், மதுரை, ஸ்ரீரங்கம், அழகர்கோயில் போன்ற பல்வேறு க்ஷேத்ரங்களையும் பாடு பொருளாய் கொண்டிருக்கிறார். ராகவேந்த்ரர் பெயரில் ‘தஸாங்க’ கிருதிகள் இயற்றியுள்ளார்.

இவை தவிர, நாட்டிய கச்சேரிகளுக்கு பயன் தரும் வகையில், சூலாதிசப்த தாளங்கள் எனப்படும் 35 தாளங்களிலும் அலாரிப்புகளும், ஜதிஸ்வரங்களும் செய்துள்ளார். வழமையில்லாத தாளங்களில் மாணவர்களால் ஆட முடியுமா என்று சில நாட்டிய கலைஞர்கள் தயங்கிய போது, “இன்றைய மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களுக்கு இவை ஒரு பொருட்டல்ல என்று உற்சாகப்படுத்தினேன்”, என்றார்.

“சென்டரல் கவர்மெண்டுக்கு எழுதிப் போட்டு இருக்கேன். இந்தப் பாட்டையெல்லாம் நல்ல ஸ்டுடியோ-ல பதிவு பண்ணி archive செய்ய உதவி கேட்டு இருக்கேன்”, என்றார்.

அந்த ஆவணப்படுத்தல் இது நாள் வரை நடைபெறாத ஒன்றாக இருக்கிறது. என் சாதாரண வாய்ஸ் ரிக்கார்டரில், ஃபேன் இரைச்சலுக்கும், பேச்சுக் குரல்களுக்கும் இடையே பதிவாகி இருக்கும் அவருடைய 5-6 பாடல்களைத் தவிர வேறு சிலரும் பதிவு செய்திருந்தால் நாம் புண்ணியம் செய்தவர்கள்.

அரை மணி ஆனதும் அலாரம் அடித்தது போல, “கிளம்பம்மா! உனக்கு நேரமாச்சு”, என்று சிஷ்யையை அனுப்பி வைத்தார்.

அப்போது மணி பத்தாகியிருக்கும். இன்னும் ஒரு மணி நேரமாவது அவரைப் பேச வைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சூடாக வந்த காப்பியை குடித்த படி நேர்காணலைத் துவங்க, அவர் பேச ஆரம்பித்தார்.

“நான் பிறந்தது 26 ஏப்ரல் 1933-ல். எங்கள் ஊர் மதுரை. என் அப்பா திருவேங்கட ஐயங்கார் ஒரு ஜோதிடர். அம்மா பெயர் அலமேலு. என்னுடைய அண்ணா மதுரை டி.வெங்கடேசன் நன்றாகப் பாடுவார். அடுத்த அண்ணாதான் நாட்டியத்துக்கு பாடுவதில் கொடிகட்டிப் பறந்த மதுரை டி.சேதுராமன்.”

“அவர்கள் வாய்ப்பாட்டுக்கு போன போது, நீங்கள் எப்படி மிருதங்கம் பக்கம் வந்தீர்கள்?”, என்றேன்.

”மதுரை பாலகிருஷ்ண ஐயங்கார் என்று எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் இருந்தார். அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது, அவர் தலையில் மிருதங்கம் வாசிப்பது போலத் தட்டினேன். அவர் என் அப்பாவை அழைத்து, ‘இவனுக்கு மிருதங்கம் வரும் போல இருக்கு. விஜயதசமியில் இருந்து சொல்லிக் கொடுக்கிறேன்’, என்றார். சில மாதங்கள் சொல்லிக் கொடுத்தபின் என்னை சோழவந்தான் சேஷ ஐயங்காரிடம் குருகுலவாசம் செய்து வைக்க என் அப்பாவிடம் பரிந்துரைத்தார். என்னுடைய ஆறாவது வயதில் சேஷ ஐயங்காரிடம் சென்றேன்.”

“அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.”

“சினிமா உலகில் பிரபலமாக இருந்த டி.ஆர்.மகாலிங்கம் சேஷ ஐயங்காரிடம் பயின்றவர்தான். சேஷ ஐயங்கார் பாடுவார், ஆர்மோனியம், வயலின், மிருதங்கம் எல்லாம் வாசிப்பார். இதெல்லாம் ஆச்சர்யம் இல்லை. இவற்றோடு கூட நாகஸ்வரமும் வாசிப்பார். அநேகமாய் நாகஸ்வரம் வாசிக்கத் தெரிந்த ஒரே பிராமணர் இவராகத்தான் இருக்க வேண்டும். எனக்கு ஐந்து வயதான போது அவரிடம் சென்றேன். என்னைப் பாடச் சொன்னார். அந்தக் காலத்தில், ‘குரல் இல்லாவிட்டால்தான் விரல்’. முதல் ஆறு மாதங்களுக்கு வாய்ப்பாட்டுதான் கற்றுக் கொண்டேன். அதன்பின், வாய்ப்பாட்டு மிருதங்கம், இரண்டையும் சேர்த்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.”

”குருகுல முறை பற்றி சொல்லுங்களேன்”

“மாடியும் கீழுமாய் ஒரு பெரிய வீட்டை சிஷ்யர்களுக்காகவே வாடகைக்கு எடுத்திருந்தார் எங்கள் குருநாதர். அந்த வீட்டு வராண்டாவில் 30 பேர் படுத்துத் தூங்கலாம். இவரிடம் படித்த அந்த ஊர் பிள்ளைகள் கூட, இரவுச் சாப்பாடு முடிந்ததும் இந்த வீட்டுக்கு வந்துவிடுவார்கள். காலையில் ஐந்து மணிக்கு எழுப்பிவிடுவார். ஏழு மணி வரை சாதகம் செய்த பின் ஆத்தங்கரைக்குச் சென்று வருவோம். அப்போதெல்லாம் காலை டிஃபன் என்றால் என்னவென்றே தெரியாது. இட்லி தொசையை கண்ணால் கூட பார்க்க முடியாது. அங்கிருந்த ஆறு வருடங்களும் தினமும் காலையில் பழைய சோறுதான் டிஃபன். ஒன்பது மணிக்கு திண்ணைப் பள்ளிக்கூடத்துக்குப் போவோம். சாயங்காலம் மூன்று மணிக்கு நாங்கள் வரும் போது குருநாதர் தயாராக இருப்பார்.”

“அவர் கச்சேரி செய்யவில்லையா?”

“இல்லை. முழு நேர வாத்தியாராகத்தான் இருந்தார். மூன்று மணிக்குத் தொடங்கினால் எட்டு மணி வரை எல்லொருக்கும் பாடம் எடுப்பார். இப்படி ஆறு வருடங்கள் கற்ற பின், என் பெரிய அண்ணா மதுரை டி.வெங்கடேசனின் கச்சேரியில் என் அரங்கேற்றுப்படி நடந்தது. எனக்கு 11 வயதாகும் போது, ‘மெட்ராஸுக்குப் போய் வாசித்து முன்னுக்கு வா’, என்று ஆசிர்வதித்து என்னை என் குருநாதர் அனுப்பி வைத்தார்.”

“அப்போது உங்கள் குடும்பம் மெட்ராஸில் இருந்ததா?”

“இல்லை. எல்லொரும் மதுரையில்தன் இருந்தனர். நானும் என் அப்பாவும் மட்டும் மெட்ராஸுக்கு வந்தோம். திருவல்லிக்கேணி வானமாமலை ஜீயர் மடத்தில் தங்கிக் கொண்டோம். பார்த்தசாரதி கோயிலில் தினமும் மதியம் ஒரு பெரிய மந்தாரை நிறைய எதோ ஒரு வகை அன்னம் பிரசாதமாகக் கிடைக்கும். அந்தக் காலத்தில் அதுதான் எங்களைக் காப்பாற்றியது. என் அப்பாவின் நண்பர் ‘கானம் வைத்தியநாத ஐயர்’ என்றொருவர் இருந்தார். அவர் ஒருநாள் வந்து, “என்ன இப்படி பையனை உண்டக்கட்டி வாங்க வெச்சுண்டு இருக்க? எனக்கு அஞ்சு குழந்தைங்க. இவன் ஆறாவது இருக்கட்டும்.”, என்று கூறி என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் மூத்த பெண் அலமேலு நன்றாகப் பாடுவாள். அந்த அம்முலு அக்காதான் என்னை, ‘இதை வாசி, அதை வாசி’, என்று வாசிக்க வைத்தவர்.”

“மெட்ராஸில் முதலில் யாருக்கு வாசித்தீர்கள்?”

“முதன் முதலில் வாசித்தது ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியாரின் ஹரிகதைக்கு. ஹரிகதைக்கு வாசிப்பது சாமான்யமான விஷயமல்ல. ‘திமிகிட திமிகிட’ என்று ஆரம்பித்தால் நாலுகால் பாய்ச்சலில் ஓட்டம் பிடிக்கும். அப்படி ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் கச்சேரி வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.”

“உங்கள் அப்பா திரும்பிச் சென்றதும் நீங்களே உங்கள் கச்சேரி வாழ்க்கையை மெட்ராஸ்-இல் அமைத்துக் கொண்டீர்களா?”

“இல்லை. சீக்கிரமே என் குடும்பம் முழுவதும் மெட்ராஸுக்கு வந்துவிட்டது. என் சின்ன அண்ணா சேதுராமனுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘சிவகவி’ படத்தில் எம்.கே.டி ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்’ பாடுவாரே, அந்தப் பாடலில் பால முருகனாகத் தோன்றியது என் அண்ணாதான். அதன் பின் பி.யூ.சின்னப்பா நடித்த ஹரிசந்த்ராவில் லோஹிதாசனாய் நடித்தார். இதனால் என் குடும்பம் இங்கேயே இராமகிருஷ்ணா மடம் தெருவுக்கு குடிபெயர்ந்தது. எனக்கும் கச்சேரி வாய்ப்புகள் வர அரம்பித்தன. சாவித்ரி கணேசன், பி.லீலா, டி.வி.ரத்னம், டி.எம்.தியாகராஜன் பொன்ற பலருக்கு வாசிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக டி.வி.ரத்னத்துக்கு நிறைய வாசித்தேன். சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கெல்லாம் அவருடன் சென்று வாசிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. 1976-ல் ஆல் இந்தியா ரேடியோவில் சேர்ந்தேன்.”

“கச்சேரி வாசித்துக் கொண்டிருந்த நீங்கள் எப்படி சினிமாவில் நுழைந்தீர்கள்?”

“அதற்கு பி.லீலாவின் அப்பா ஈ.கே.கே.மேனன்தான் காரணம். ’நீ ஏன் சினிமாவில் வாசிப்பதில்லை?’, என்று கேட்டார். ‘வாய்ப்பு வந்தால் வாசிப்பேன்’, என்றேன். 1953-ல், ’எதிர்பாராதது’ என்ற சிவாஜி கணேசன், பத்மினி நடித்த படத்தில் பி.லீலா பாடும்படியாய் அமைந்தது. கல்யாணி ராகத்தில் அமைந்த பாடலுக்கு சி.என்.பாண்டுரங்கன் இசையமைத்தார். அப்போது என் பெயர் பரிந்துரைக்கப்பட்டதால், எதிர்பாராத விதமாய் ‘எதிர்பாராதது’-வில் வாசித்தேன். ”, என்று சிரித்தார்.

“இன்றைக்கு உங்கள் பெயரைத் தெரியாதவர்கள் கூட உங்கள் வாசிப்பை கேட்காமல் இருந்திருக்க முடியாது”, என்றேன்.

“கே.வி.மகாதேவன் என்னை ஆஸ்தான மிருதங்க வித்வானாகவே வைத்திருந்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ‘மறைந்திருந்தே பார்க்கும்’, ‘திருவிளையாடல்’ படத்தில் ‘பாட்டும் நானே’ போன்ற பல பிரபல பாடல்களில் என் வாசிப்பு இடம் பெற்றிருக்கிறது.”

“ஜி.ராமநாதனுக்கு வாசித்திருக்கிறீர்களா?”

“அருணகிரிநாதர் படத்தில் வாசித்திருக்கிறேன். ‘ஆடவேண்டும் மயிலே’ பாடலில் என் மிருதங்கமும் உண்டு.”

“கச்சேரி வாசிப்பதற்கும் சினிமாவில் வாசிப்பதற்கும் என்ன வித்யாசம்?”

”ஒரே ஒரு வித்யாசம்தான். கச்சேரியில் காலப்ரமாணம் மனிதர்களால் நிச்சயிக்கப்படுவது. அதில் ஒரு இழை ஓட்டமோ தொய்வோ ஏற்பட்டாலும் பாதகமில்லை. பாடுபவருக்கேற்ப வாசிப்பவரே, வாசிப்பவருக்கு ஏற்ப பாடுபவரோ அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். சினிமாவில் காலப்ரமாணம் மெஷினால் நிர்ணயிக்கப்படுவது. ஒரு ஆவர்த்தம் இத்தனை வினாடி என்றால் இம்மி பிசகாமல் அத்தனை வினாடியில் வாசிக்க வேண்டும்.”

அவர் சொல்லிய விஷயம் சாதரணமான ஒன்றாகத் தோன்றினாலும், அனைவருக்கும் கைவரக் கூடும் ஒன்றல்ல. காலப்ரமாண சுத்தம் என்பது ஸ்ருதி சுத்தம் போல், இயற்கை வரமும், நிறைய உழைப்பும் இருந்தால் அன்று சாத்தியப்படுவதில்லை என்று நினைத்தடி, “மிருதங்க சக்கரவர்த்தியிலும் நீங்கள் வாசித்தீர்கள் அல்லவா?’

“ஆமாம். சிவாஜிக்கு உமையாள்புரம் சிவராமன் வாசித்தார். பிரபு ’தோற்கும் கட்சி’ என்பதால் யாரும் வாசிக்க முன் வரவில்லை. சினிமாவில் ஜெயிப்பாவது தோற்பாவது? என்னைக் கேட்ட போது ஒப்புக் கொண்டேன். ரிக்கார்டிங்கில் வாசிக்க ஆரம்பித்தோம். சிவராமன் வாசிப்பைக் கேட்க வேண்டுமா? அமிர்த்மாய் பொழிந்தார். நானும் எனக்குத் தெரிந்ததை வாசித்தேன். பார்த்துக் கொண்டே இருந்த எம்.எஸ்.வி , “நீங்களும் இவ்வளவு நன்றாக வாசித்தால் காட்சிக்குப் பொருந்தாது. ரொம்ப சாதாரணமாய் வாசிக்க வெண்டும்”, என்றார். “என்னை கூப்பிட்டு வாசிக்கச் சொன்னால் என்னால் முடிந்த வரை நன்றாகத்தான் வாசிப்பேன். இதுவரை சாதாரணமாக வாசிக்க முயற்சி செய்ததில்லை. அப்படி மாற்றி வாசிக்க வெண்டும் என்றால் ’டபிள் பேமண்ட்’ கொடுக்க வெண்டும் என்றேன். அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டதும் வாசித்தேன்.”

“சுமாராக வாசிக்க டபிள் பேமண்ட் வாங்கியவர் நீங்கள் ஒருவராகத்தான் இருப்பீர்கள்.”

“அப்போதெல்லாம் பரத நாட்டிய பாட்டுக்கு மட்டும்தான் மிருதங்கத்தை போட்டுக் கொள்வார்கள். இது இளையராஜா வந்தவுடன் மாறியது. நாம் நினைத்தே பார்க்க முடியாத பாடல்களில் எல்லாம் மிருதங்கத்தை உபயோகித்து இருப்பார்.”

“இதை இன்னும் கொஞ்சம் விளக்கி….”
அவர் செல்ஃபோன் அழைத்தது.

“இதோ வந்துட்டேன்.” என்று ஃபோனை அணைத்தபடி. “காமாட்சி கோயிலில் மீட்டிங் என்று மறந்தேவிட்டேன். நீங்க சாயங்காலமா வர முடியுமா?”

சென்றிருக்கலாம் – விதி.
“அடுத்த முறை சென்னை வரும் போது சந்திக்கிறேன்”, என்றேன்.

அடுத்து 50 முறை சென்னை சென்ற போதும் வளசரவாக்கம் செல்ல மட்டும் ஒழியவில்லை.

அவரைச் சந்தித்த பின் ஓடிவிட்ட இரண்டு வருடங்களில், இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் சீனிவாஸனின் மிருதங்கம் ஒலிக்கிறதா என்று காதைத் தீட்டிக் கொள்வேன். அவர் வாசிப்பைக் கண்டு கொள்வது அப்படி ஒன்றும் கடினமான விஷயமல்ல. ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மிருதங்கத்தின் திஸ்ர கதி அந்த முன்னிசையே தொடக்கம், வளர்ச்சி, முடிவு (climax) கொண்ட முழு இசையாய் ஒலிப்பதை தமிழ்நாடே நினைவுகூறும். ‘அந்தி மழை பொழிகிறது’ பாடல் முழுவதையும் சீனிவாசனின் மிருதங்க இசை அரவணைத்துக் கொஞ்சுவதைக் கேட்காதவர் இருந்தால்தான் அதிசயம்.

கிளாசிகல் வகை சினிமா பாடல்களில் ஒரு பாடலிலேயே ஒரு கச்சேரியைக் கேட்ட உணர்வு ஏற்பட வேண்டும். கச்சேரியில் களை கட்டுதல் என்று ஒன்று உண்டு. ஒரு வர்ணத்தையே, விறுவிறுப்பான கிருதியையோ சில நிமிடங்களில் பாடி இதைக் கச்சேரியில் பாடகர்கள் களை கட்ட வைப்பார்கள். சில நிமிடமே ஒலிக்கும் பாடலில் இதைச் செய்ய மிருதங்கமே பெரும்பாலும் பயன்படும். பாடகர் பல்லவியை ஒரு முறை பாடி முடித்ததும் ஃபரன்கள் நிறைந்த ஒரு தீர்மானத்தை வாசிப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும். உதாரணமாக ‘இவன்’ படத்தில் ‘எனை என்ன செய்தாய்’ பாடலில் இதைக் காணலாம். சீனிவாசன் இப்படிக் களை கட்ட வைத்த பாடல்கள் கணக்கில் அடங்காதவை.

சமீபத்தில், மதுரை சீனிவாஸனுக்காக ஃபேஸ்புக் பக்கம் ஒன்று இருப்பதைக் கண்டு இணைந்து கொண்டேன். அதிலிருந்து ‘ஸ்ரீ ராகவேந்திரா’ படத்தில் வரும் ‘ராம நாமம் ஒரு வேதமே பாடலில் ஒலிக்கும் குருவின் குரல் சீனிவாஸனுடையது என்பதைத் தெரிந்துகொண்டேன். பாடலின் தொடக்கத்தில் அவர் பாடும் மாயாமாளவகௌளை ஸ்வரங்களில் மத்யமத்தை ஒரு சுழற்றலோடு இசைக்கும் அழகைக் கடந்து போகவே பல நிமிடங்கள் ஆயின. வாணி ஜெயராமின் குரல் தார ஸ்தாயி ஷட்ஜத்தில் துல்லியமாய் தரித்து நிற்கும் போது சீனிவாஸன் ‘ஆஹா’ என்றிருப்பார். ஒரு தேர்ந்த ரசிகராய் எனக்குத் தெரிந்த சீனிவாஸன், இந்த ஆஹாவை அவர் தன்னிச்சையாய் சொல்லி இருப்பார் என்றே எனக்குத் தோன்றியது.

அவர் வாசிப்பில் பரிமளித்த பாடல்களுள் என்னை மிகவும் கவர்ந்த பாடல் ‘நீங்கள் கேட்டவை’ படத்தில் வரும் ‘ஓ வஸந்த ராஜா’. பாடலின் தாள அமைப்பில் ஒவ்வொரு நான்காவது அட்சரத்திலும் பளிச்சென்று மிருதங்கத்தின் சாப்பு ஒலிக்கும். அநேகமாய் அந்தப் பாடலில் மிருதங்கத்திலிருந்து அந்தச் சொல் மட்டும்தான் ஒலிக்கும். அந்தச் சாப்பு இல்லாமல் பாடலை கற்பனை செய்து பார்த்தால் சீனிவாஸனின் பங்களிப்பையும் உணர்ந்து கொள்ள முடியும். இதைப் போலவே காளிதாஸன் கண்ணதாசன்’ பாடலும் அதிசயிக்கத்தக்கது. பாடலின் நடையை வானாகக் கொண்டால் ஆங்காங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்களாய் சீனிவாசனின் மிருதங்கச் சொற்கள் மின்னுவதை உணர முடியும். இந்தப் பாடல்களில் எல்லாம் இன்னன்ன இடத்தில் மிருதங்கம் ஒலிக்க வேண்டும் என்ற இளையராஜாவின் கற்பனைகள், அவரது மேதமையை எடுத்துக் காட்டும் விஸ்வரூப தரிசனங்கள்.

2011 டிசம்பரில் பழனி சுப்ரமணிய பிள்ளையைப் பற்றிய என் நூல் வெளியான போது, அதைக் கொடுக்க சீனிவாஸன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மிகவும் தளர்ந்திருந்தார். ஓராண்டு காலத்தில் அவர் முகம் 20 ஆண்டுகால மாறுதலைக் காட்டியது. அவர் பழனியைப் பற்றி கூறிய கருத்துகள் எனக்கு உதவியாய் இருந்தன என்று கூறிய போது, “நான் பழனியைப் பற்றி சொன்னேனா? எனக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாதே. நானா சொன்னேன்?”, என்று என்னை வியப்பாகப் பார்த்தார்.

இவர் நினைவு இன்னும் தப்புவதற்கு முன் நீண்ட நேர்காணல் ஒன்றை எடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். சீனிவாஸனின் மகன் சேஷாத்ரியும், அவர் உடல்நிலை சற்று தேறியதும் அழைப்பதாகச் சொல்லி என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். ஒராண்டு காலமாய் அவர் உடல்நிலை நலிந்து கொண்டே வந்தது என்று இரண்டு நாட்கள் முன்னால் பேசிய போது சேஷாத்ரி தெரிவித்தார்.

“இரண்டு வருடங்களுக்கு முன் நான் அவரைச் சந்தித்த போது தொலைபேசி அவரை அழைத்திராதிருந்தால்…”.

Read Full Post »

அன்புள்ள ஜானித் தாத்தா,

உங்களைப் பற்றி கடந்த சில நாட்களில் நிறைய கட்டுரைகள், இணையப் பதிவுகள், நினைவலைகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொன்றும் நீங்கள் இல்லாததன் வெறுமையை ஒருபக்கம் அதிகரித்தாலும் இன்னொரு பக்கம் இத்தகைய மனிதரிடம் நெருங்கிப் பழக முடிந்ததே என்ற உவகையும் பெருகியது.

iravatham 1

உங்களை முதன் முதலில் உங்கள் வீட்டில் 2005-ல் நண்பர்கள் சிலருடன் சந்தித்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. உண்மையை அறிதலின் பேரில் இருந்த காதலும், அயராத உழைப்பும், சிரிக்கும் கண்களும், நமுட்டுச் சிரிப்பும் நன்றாய் நினைவில் இருக்கிறது. கூடத்திலிருந்த புத்தக அலமாரியில் இருந்த கிருதிமணிமாலையின் முதல்பதிப்பை நான் பார்க்க விரும்பினேன். அதனை எடுத்து முதல் பக்கத்தை நீவியபடி “கௌரி அம்மாவின் புத்தகம்”, என்று நீங்கள் சொன்னபோது வழிந்தோடிய காதலில் நானல்லவா கரைந்து போனேன்.

கௌரி அம்மாவை சந்திக்கும் பேறை நான் பெறவில்லை. ஆனால் உங்கள் வீட்டுக்கு வந்த போதெல்லாம் அவரைப் பற்றிய நினைவலைகளில் நீங்கள் மூழ்குவீர்கள். காலப்போக்கில் எனக்கென்னவோ அவர் நன்கு பரிச்சயமானவர் என்ற மாயத்தோற்றம் ஏற்பட்டுவிட்டது.

பின்னாளில் ஐராவதிக்காக உங்களை நேர்காணல் எடுத்தபோதும் கௌரியம்மாவைப் பற்றி எவ்வளவு உணர்ச்சிபூர்வமாய் பேசினீர்கள். நான் எழுதிய அந்தப் பகுதிகளை நீக்கச் சொன்னதில் எனக்கு இன்றுவரை உங்கள் மேல் கோபம்தான். உங்கள் காதல் ஊருக்குத் தெரிய வேண்டிய காதலில்லையா?  எனக்குத் தெரிந்த அத்தனையும் சொல்லாவிட்டாலும் சிலவற்றையாவது சொல்லத்தான் போகிறேன். உங்கள் பேரனாக எனக்கு அந்த உரிமையுண்டு – உங்களுக்கு சம்மதமில்லாத போதும்.

ஐ.ஏ.எஸ்-ஐ குறி வைத்துதான் சட்டம் பயின்றீர்களா என்று நான் கேட்டதற்கு, சிரித்தபடி இல்லையென்றீர்கள்.

“வாயிருந்தா வக்கீலா பொழச்சுக்கலாம்-னுதான் சட்டம் படிச்சேன். பார்-க்கு போனாதான் வக்கீலா முன்னுக்கு வர எவ்வளவு வருடங்கள் ஆகும்-னு புரிஞ்சுது. அப்போ எனக்கு 23 வயசு. என் உறவுக்காரப் பெண் – கௌரி – அவளோட காதல். எங்க வீட்டுல எங்க கல்யாணத்தை யாரும் ஒத்துக்கல. எதிர்த்துக் கல்யாணம் பண்ணிண்டோம். வீட்டை விட்டு வெளிய வந்தாச்சு. வக்கீல் தொழிலை நம்பி குடும்பம் நடத்தற நிலைமையில்லை.”

“அதனால ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதினீங்களா?”

“ஆமாம். அப்பல்லாம் 23 வயசு வரைக்கும்தான் ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுத முடியும். எனக்கு இருந்த கடைசி வாய்ப்பு அதுதான். அந்தப் பரிட்சையில முதல் ஆளா தேறினேன்.”, என்று சொன்ன போது கொஞ்சம் வெட்கத்தோடு வார்த்தைகளை நிறுத்திக்கொண்டீர்களே.

காமராஜர் ஆட்சியில் அமராவதி அணை திறப்பில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி வந்து உங்களை தில்லிக்கு அழைத்துச் சென்றதால் வரலாற்றின் பக்கம் சென்றேன் என்றீர்கள். உண்மையில் திருப்புமுனை அதுவல்ல. உங்கள் காதல்தான்!

கௌரி அம்மாவின் காதல் இல்லையென்றால் நீங்கள் ஐ.ஏ.எஸ் இல்லை! உங்கள் வாழ்க்கை இந்தப் பாதையில் போயிருக்காதுதானே?

உங்கள் வீட்டில் மட்டுமே கிடைக்கக்கூடிய, கௌரி அம்மா வைத்த அந்த ஆரஞ்சு மரத்தில் வந்த பழங்களிலிருந்து சாறை நீங்கள் ஒவ்வொரு முறை அளிக்கும் போது உங்கள் முகம் மலர்ந்து ஜொலிக்கும். உங்களை எதுவெதற்கெல்லாமோ அறிஞர்கள் நினைவில்வைத்துக் கொள்வார்கள் தாத்தா. எனக்கு உங்களைப்பற்றி முதலில் நினைவுக்கு வருவது உங்கள் காதல்தான்.

உங்கள் இருவரின் விளையாட்டில் நீங்கள் இருவருமாய் சேர்ந்து நாட்டுக்கு அள்ளிக் கொடுத்ததைச் சொன்னீர்களே. அந்த நிகழ்வு அலையடிக்கிறது.

1965-ல் பாகிஸ்தானுடன் போர் நடந்து கொண்டிருந்த போது லால் பகதூர் சாஸ்திரி கேட்டுக் கொண்டதன் பேரில் வீட்டிலிருந்த தங்கத்தையெல்லாம் நிதியாய் கொடுக்க நீங்கள் முடிவெடுத்தீர்கள். கௌரி அம்மா தன் நகையையெல்லாம் கொண்டுவந்து உங்களிடம் கொடுத்த போது, “எல்லாம் குடுத்தியே, உன் தாலியில் இருக்கும் தங்கத்தைக் கொடுப்பியா”, என்று சீண்டியதை என் முன் வாழ்ந்து காண்பித்தீர்கள்.

gowri amma

கௌரி அம்மாவும் லேசில்விடுவாரா என்ன?, “இத்தனை வருஷங்களா ஆயிரக்கணக்கில் நாணயங்கள் சேர்த்துவெச்சு இருக்கீங்களே. அதுல எவ்வளவோ தங்க நாணயங்கள் இருக்கும். அதையெல்லாம் நீங்க நாட்டுக்கு கொடுப்பீங்கன்னா நான் தாலியில் இருக்கும் தங்கத்தைக் கொடுப்பேன்”, என்றார்.

அடுத்த நாளே, தேசிய அருங்காட்சியகத்தில் தங்க நாணயங்களை ஒப்படைத்து அதன் மதிப்புக்கு தங்கக் கட்டிகளைப் பெற்று, மற்ற நகைகள் – தாலித் தங்கமும் சேர்த்துத்தான் – பிரதமரிடம் தம்பதியாய் சென்று ஒப்படைத்தீர்கள். நல்லகாலம் அன்று பிரதமருடன் கௌரி அம்மா இருக்கும் படத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள். ஐராவதியில் வெளியிட்டு நாங்கள் மகிழ்ந்தோம்.

நான் நீங்கள் சாதித்த துறைகளில் மாணவன் கூட இல்லை. உங்களைச் சந்தித்த காலங்களில் ஆர்வலனாக இருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இருந்தாலும் ஏன் என் மேல் உங்களுக்கு இத்தனை பிரியம்? ஒருவரை மதிக்க வேண்டுமானால் அதற்கு புலமைத் தேவைப்படலாம். அன்பிற்கு எதற்கு அளவுகோல்? என் பேறு நீங்கள் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் பேரன் என்று வாயார அழைத்துக் கட்டிக்கொண்டீர்கள்.

உங்களைச் சந்தித்த சில நாட்களில் உங்களுக்கு ஒரு கடிதமெழுதினேன். சிந்து சமவெளி முருகன் பேயுருவானவன் என்ற கருத்து அவ்வளவு ஏற்புடையதாக என் சிற்றறிவுக்குப்படாததைப் பற்றி பல சங்கப்பாடல்களைக் குறிப்பிட்டு உங்களுக்கு ஒரு நெடிய கடிதம் எழுதினேன். அதற்கு பொறுமையாய் பதிலளித்திருந்தீர்கள். பின்னாளில் உங்களைச் சந்தித்த போதும் என் ஆர்வத்தைப் பாராட்டினீர்களே தவிர நான் உங்கள் முடிவுகளைப் பற்றி கேள்வியெழுப்பியதைப் பொருட்படுத்தவேயில்லை.

2003-ல் இருந்து 2010- வரை வாராவாரம் ஒரு குழுவாக ஏதோவொரு இடத்துக்குச் சென்று வரலாறைக் கற்றுக் கொண்டிருந்தோம். அபப்டியொரு பயணத்தில்தான் டாக்டர் கலைக்கோவன் உங்களுக்குவொரு பணிப்பாராட்டு மலரைக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார். வேறு துறையில் நல்ல வேலையில் இருந்த எங்களால் ஆளுக்குக் கொஞ்சம் பணம் ஒதுக்க முடிந்தது. அந்தப் பணமே இந்தத் தொகுதிக்கு போதுமானதாய் இருந்தது.

பணம் கொடுத்துவிடலாம். நூலை யார் தொகுப்பது.

கலைக்கோவன் சொன்னார், ”எனக்கு அவருடன் நல்ல பழக்கம் உண்டே தவிர, இந்தத் துறையில் அவருடன் சேர்ந்து பணியாற்றவர்கள் என்று பார்த்தால் அது தொல்லியல் கழகத்தில் உள்ள அறிஞர்கள்தான். அவர்கள் டாக்டர் சுப்பராயுலுவுக்கு செய்தது போல ஐராவதம் மகாதேவனுக்கும் செய்வதுதான் சரியாக இருக்கும்”.

அந்த சமயத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் நீங்களும் பங்கேற்றீர்கல். அந்த சமயத்தில்தான் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பற்றிய செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஒரு பானையின் உட்பறத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதாகவும். அந்தப் பானையின் காலம் கி.மி 5-ம் நூற்றாண்டு என்றும் அப்போது தொல்லியல் அளவீட்டுத் துறையில் தலைமைப் பொறுப்பில் இருந்த திரு. சத்தியமூர்த்தியின் பேட்டிகள் சில வெளிவந்திருந்தன.

அந்தப் பானையை ‘தமிழ் பிராமியின் தந்தை’ என விளங்கிய உங்களைப் பார்க்கவே விடவில்லை என்கிற செய்தி என் போன்ற ஆர்வலர்களை கொதிப்புறச் செய்தது.

தஞ்சாவூர் கருத்தரங்கம் நடந்த போது திருமதி.சத்யபாமா தொல்லியல் அளவீட்டுத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். அவரும் அந்தக் கருததரங்கிற்கு சிறப்பு விருந்தினராய் வந்திருந்தார். உங்கள் கட்டுரையை வாசித்த பிறகு மதிய உணவு வேளையில் உங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தேன், எதிரில் வந்த திருமதி.சத்தியபாமாவிடம் இருகரம் கூப்பி வணங்கியபடி, “எனக்கு அந்த பானையோட்டைக் காட்டக்கூடாதா?”, என்றீர்கள்.

“எப்ப வேணும்னாலும் வந்து பாருங்க. ஆனால் அதில் எந்த எழுத்தும் இல்லை”, என்றார்.

அசத்யத்தின் வலியுடன் கன்னத்தில் கையை வைத்தபடி சுற்றி ஒரு பார்வை பார்த்தீர்கள். அப்போதே இந்தத் துறையின் முடைநாற்றத்தை உணர்ந்திருக்க வேண்டும். உணராமல் உங்கள் பணிப்பாராட்டு மலருக்காக அறிஞர்களை அணுகினோம்.

”பணம் நாங்கள் தருகிறோம். எங்கள் பெயரே வரவேண்டாம். உங்கள் விருப்பம்போல் தொகுத்து வெளியுடுங்கள்”, என்றோம்.

அவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பார்கள் என்றெண்ணினோம். அவர்களோ சாதாரணமாய், “அப்புறம் பார்க்கலாம்”, என்றனர். அவர்கள் பரவாயில்லை, உங்களைக் நேரில் கண்டபோது குழைந்த அறிஞர்களில் சிலர் நாங்கள் அணுகிய போது வெறுப்பைக் கக்கினர். சரி போகட்டும் பொறாமைபிடித்த ஜீவன்களையா உலகம் நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறது. உங்கள் பெயர் சொல்ல உங்கள் ஒரு புத்தகம் போதுமே. நாளாக நாளாகக் கிணற்றில் போட்ட கல்லாகவே அந்தப் பணிப்பாராட்டு மலர் இருந்து வந்தது.

2006-ல் இதை டாக்டர் கலைக்கோவனின் வழிகாட்டலிலேயே செய்துவிடுவது என்று முடிவெடுத்தோம். அதன்பின் சந்தித்த சிக்கல்களை எல்லாம் கமலக்கண்ணன் ஐராவதியின் வரலாறு என்று அப்போது விரிவாக பதிவு செய்துள்ளார்.

அந்த முடிவுதான், என்னை உங்களுக்கு நெருக்கமாக்கியது. ஐராவதி தயாரான போது பலமுறை உங்களை நறுமுகை அபார்ட்மெண்டில் சந்திக்க வைத்தது. அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில் அப்போது வெளியாகியிருந்த என் ஜி.என்.பி புத்தகத்தை உங்களுக்கு அளித்தேன்.

அடுத்த நாளே என்னையழைத்து வெகுநேரம் பேசினீர்கள். அது என் எழுத்தின் மேல் எழுந்த உவகையென்பதைவிட என் மேல் இருந்த பிரியத்தின் வெளிப்பாடு என்று நானறிவேன்.

அந்த நூலை உங்கள் நண்பரும் அப்போது ஸ்ருதி இதழின் ஆசிரியருமாக இருந்த கே.வி.ராமனாதனுக்கு பரிந்துரைந்ததாகவும், அவர் “வாட் நான்சென்ஸ்! ஜி.என்.பி-யைப் பார்க்காத ஒருத்தர் அவரைப் பற்றி எப்படி எழுதமுடியும்?”, என்று கேட்டதாகவும், அதற்கு நீங்கள், “உங்கப் பத்திரிக்கையில் தியாகராஜரைப் பற்றி எழுதறவங்க எல்லாம் அவரைப் பார்த்துப் பழகினவங்களா?”, என்று கேட்டதாகவும் கூறினீர்கள். உங்கள் பதிலை நினைத்தால் இப்போதுகூட அடக்கமுடியாமல் சிரிப்புவருகிறது.

உங்களை சந்தித்த நாட்களில் நீங்கள் சாதாரணமாய் சொல்வது என்னை புரண்டு புரண்டு சிரிக்க வைக்கும். உங்கள் வீட்டுக்கு மடல் கொண்டு வரும் தபால்காரர் ஆங்கிலத்தில் உள்ள பெயரை “ஈரவாதம்” என்று படிப்பதாகச் சொல்லிச் சிரித்தீர்கள். தினமணியில் வேலை நிறுத்தத்தில் அலுவலர்கள் ஈடுபட்ட போது ராம்நாத் கோயங்கா நான் வந்து சரிசெய்யவா என்று கேட்டதற்கு, ”You don’t need a watchdog if you are going to bark for it. Let me do my job”, என்று கூறியது பசுமையாய் நினைவிலிருக்கிறது.

உங்களுடன் கழித்த ஒவ்வொரு நாளும் தமிழில் ஏதோ ஒன்றை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். பழனி சுப்ரமண்ய பிள்ளை பற்றிய என் புத்தகத்தில் அவர் மாணாக்கர்களைப் பற்றி ஒரு பகுதி உண்டு. அதில் அவர்களின் மறைவை  – மறைந்தார், மறைந்தார் என்று ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் உபயோகிக்க அலுத்துக் கொண்டு ஓரிடத்தில், “இயற்கை எய்தினார்”, என்று எழுதியிருந்தேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் சித்தாந்ததுக்குப் பொருத்தமாய் “இயற்கை எய்துதல்” என்கிற பதத்தை வகுத்துக் கொண்டதை விளக்கினீர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் எப்படி யோசித்து யோசித்து உபயோகிக்க வேண்டியிருக்கிறது என்று மலைத்தேன். மாறினேன் என்று சொல்வதற்கில்லை.

உங்களை சந்தித்த நாட்களில் இருந்தே உங்கள் உடல்நிலை முன்னும் பின்னுமாய்தான் இருந்துவந்தது. வெய்யில் நாட்களில் வியர்க்காத உடம்பென்பதால் அதிகம் அயர்ந்து போய்விடுவீர்கள். அத்தனையும் மீறி நீங்கள் உழைப்பதை காணொளியில் பதிவு செய்து வைக்காமல் போனோமே என்று இப்போது தோன்றுகிறது.

உங்கள் துறையென்று இல்லை, எந்தக் காரியம் எடுத்தாலும் அதற்கான முழு உழைப்பை நீங்கள் அளிப்பதை, வருடாந்திர உதவித் தொகை அளிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைக் கண்டவர்கள் அறிவார்கள்.

ஏழை மாணவர்களுக்கு ஐ.டி.ஐ-ல் படித்து தொழில் கற்கும் வகையில் உங்கள் டிரஸ்ட் மூலம் விண்ணப்பங்கள் கோரி, அதை ஒவ்வொன்றாய் பரிசீலித்து, மீண்டும் மீண்டும் சரிபார்த்து, சரியான ஆளுக்குப் போய் சேருமாறு பார்த்துக் கொள்ள உங்களையே கரைத்துக்கொள்வீர்கள். அதெல்லாம் உங்கள் தலைமுறைக்குத்தான் சரிவரும். இப்படியும் மனிதருண்டு என்று நான் பார்த்ததே என் அதிர்ஷ்டம்தான்.

என் ஆய்வுகளுக்காக ரோஜா முத்தையா நூலகத்தில் சில நாட்கள் கழித்ததுண்டு. அப்படியொரு நாளில் அங்கு நீங்கள் அமைத்த ‘இண்டஸ் ரிஸர்ச் செண்டர்’-க்கு வந்திருந்தீர்கள். நான் பழைய இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது நீங்கள் அறிஞர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தீர்கள். நான் மதிய உணவை கையோடு எடுத்து வந்திருந்தேன். உங்களுக்கும் மற்ற அறிஞர்களுக்கும் மதிய உணவு வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. நீங்கள் அவர்களையெல்லாம் உணவருந்தப் போகச் சொல்லிவிட்டு, உங்களுக்கு ஒரு அறையில் உணவை வரவழைத்து என்னை அந்த அறைக்குள் அழைத்தீர்கள். “வா சாப்பிடலாம்!”, என்றீர்கள்.

“உங்களுக்காக வந்தவர்களோடு சாப்பிடாமல் ஏன் இங்கு சாப்பிடுகிறீர்கள்?, என்றேன்.

“அவர்களோடுதான் காலையிலிருந்து இருக்கேன். சாய்ங்காலம்வரை இருக்கப் போகிறேன். உன் வேலையைக் கெடுக்காமல் உன்னோடு இப்போதுதான் இருக்க முடியும்.”, என்றீர்கள்

நான் கலங்கிப்போனேன் தாத்தா. உள்ளூரில் உங்களைத் தெரியுமோ தெரியாது. உலகத்துக்கு உங்களைத் தெரியும். நீங்கள் என் வேலை கெடாமல் என்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்களா தாத்தா! இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

அன்றிலிருந்து நான் எப்போது அந்த நூலகத்துக்குச் சென்றாலும் தனி மரியாதைதான்.

உங்களை அடிக்கடிச் சந்தித்ததால் ‘சிந்து சமவெளி ஆய்வுகள்’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அப்போது நீங்கள் 1970 வெளியிட்ட Concordance எங்கும் கிடைக்கவில்லை. உங்களிடமும் ஒரே பிரதிதான் இருந்தது. நான் கேட்டேன் என்பதற்காக எப்படியோ ஒரு பிரதியை எனக்காக வரவழைத்துக் கொடுத்தீர்கள். அது அறிமுக நூலன்று. அறிஞர்கள் உபயோகிக்க வேண்டிய தொகுப்பு நூல். அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது, “இதை நான் உபயோகிக்க பல வருடங்கள் ஆகும். அதுவரைக்கும் இந்தத் தடி புத்தகத்தை கொலுப்படியின் உச்சத்தில் கலசப்படியா வேணா வெக்கலாம்”, என்று விளையாட்டாகச் சொன்னேன்.

என் பாதை மாறிவிட்டது. அந்தப் புத்தகம் நிச்சயம் ஒரு நல்ல ஆராய்ச்சி மாணவனிடம் சென்று சேர ஆசிர்வதியுங்கள்.

செம்மொழி நிறுவனம் உங்கள் Early Tamil Epigraphy புத்தகத்தை மிக நேர்த்தியாய், ஒவ்வொரு கல்வெட்டையும் மிகத் துல்லியமாய் வண்ணப் பதிப்பில் பிரசுரித்தது. அந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன் நீங்கள் சரிபார்க்கும் போது பார்த்திருக்கிறேன். அது வெளியானதும் எனக்கொரு பிரதி தருவதாகச் சொன்னீர்கள். அது வெளியாகி எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் நிச்சயம் எனக்கொரு படி எடுத்து வைத்திருப்பீர்கள். நான்தான் இன்னும் வாங்கிக் கொள்ளவில்லை.

என் குறைதான். நம் உறவு ஜென்மாதிஜென்மமாய்த் தொடர விட்ட குறை, தொட்ட குறையாய் ஏதேனும் இருக்க வேண்டுமல்லவா? அப்படி அந்தப் புத்தகம் இருந்துவிட்டுப் போகட்டும்.

போய் வாருங்கள் ஜானித் தாத்தா!

கௌரி அம்மாவைக் கேட்டதாகச் சொல்லுங்கள்.

உங்கள் அன்புப் பேரன்

லலிதாராம்

Read Full Post »

இன்று ஏனோ சுகுமார் பிரசாதின் பஹுதாரி மனத்தில் அலையடித்துக் கொண்டே இருக்கிறது.

பஹுதாரியை இங்கு கேட்கலாம்

2014-ல் தினமலரில் அவரைப் பற்றி எழுதிய பத்தி.

கர்நாடக சங்கீதத்தை, கிதாரில் முதன் முதலில் வாசித்தது யார் என்ற கேள்விக்கு, பெரும்பாலோர், ‘கிதார் பிரசன்னா’ என்று பதிலளிக்கக் கூடும். அந்த தவறான பதிலை திருத்தும் முதல் குரல் பிரசன்னாவுடையதாகத்தான் இருக்கும். ஸ்ரீனிவாஸ், எலெக்டிரிக் மாண்டலினை கர்நாடக சங்கீதத்துக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே, கிதாரில் பல கச்சேரிகள் செய்தவர், சுகுமார் பிரசாத்.

இணையம் தேடலுக்கும் பகிர்வுக்குமான களமானத்திலிருந்து, சில மாதங்களுக்கு ஒருமுறை, யாரேனும் ஒருவர், சுகுமார் பிரசாத் வாசித்த பஹுதாரி ராகத்தை, அந்த ராகத்தில் இசைத்துள்ள ‘ப்ரோவ பரமா’ பாடலை கேட்டுவிட்டு பதிவிடுவது வாடிக்கை.

“அவரைப் பற்றி மேலும் தேடினேன். குறிப்பிடும்படியாய் எதுவும் கிடைக்கவில்லை. இன்று அவர் எங்கு இருக்கிறார்? அவர் வாசித்துக் கொண்டிருக்கிறாரா? கச்சேரி பதிவுகள் கேட்கக் கிடைக்குமா?” என்ற ரீதியில் அந்தப் பதிவு இருக்கும்.

இணையத்தின் பல்லாயிர மாயக் கரங்களின் வழிகாட்டலில் அவரை ஒருமுறை நேரில் கேட்டு விடமாட்டோமா என்ற ஏக்கப்பதிவுகள் ஏராளமாய் இணையத்தில் உண்டு.

இசைச் சூழலில் வளர்ந்து, சங்கீத கலாநிதி எம்.சந்திரசேகரனிடம் பயின்ற சுகுமார் பிரசாத், மிருதங்கத்திலும் தேர்ச்சியுற்று, பல முன்னணி வித்வான்களுக்கு வாசித்துள்ளார். 1970-களில் கிதாரில் கர்நாடக இசையை வாசிக்க துவங்கினார்.

அவரைக் கேட்டவர்கள்,’துரதிர்ஷ்டவசமாய் அவர் வாசிக்க வந்த காலத்தில், அவருக்கு போதிய உற்சாகம் அளிக்கப்படவில்லை. கிதார் போன்ற கருவியில், கமகங்கள் நிறைந்த கர்நாடக இசையைக் கேட்கும் மனநிலையும் ரசிகர்களுக்கு இல்லை’ என்கின்றனர்.

கடந்த, 1980-களில், மாண்டலின் ஸ்ரீனிவாசின் வருகைக்குப் பிறகு அந்த நிலை மாறத் துவங்கியது. 1980-களில் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், சுகுமார் பிரசாத்தின் கச்சேரிகள் நடந்துள்ளன. அதன் பின், சுகுமார் பிரசாத் இசை உலகத்திலிருந்து மாயமாய் மறைந்தார். அவர் ஆதிபராசக்தி குழுமத்தில் இணைந்துவிட்டார் என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அவர் வாசிப்பைக் கேட்கும்போது அவருக்குள் ஊறி வெளிப்படும் இசை, அவர் வாழ்வு முழுவதும் அவர் ரத்தத்தோடு கலந்துதான் இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட கலைஞனின் கரங்கள், இசைக்காமல் இத்தனை ஆண்டுகள் சும்மா இருக்க முடியுமா? அவை இன்றும் இசைக்கின்றன என்றால் அதைக் கேட்க ஏதேனும் வழியுண்டா?

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில்,”நான் வாசிக்க வந்த புதிதில் கிருஷ்ண கான சபை போன்ற இடங்களில், அவர் இசையை பெரிதும் விரும்பிச் சென்று கேட்டுள்ளேன். அவர் திரும்பி வர வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை” என்று மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கூறியிருந்தார். சுகுமார் பிரசாத் திரும்பி வருவாரா? அவரைக் கேட்கும் பேறு நமக்குக் கிடைக்குமா?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Read Full Post »

2014-ல் தினமலரில் பதினைந்து கட்டுரைகள் டிசம்பரில் எழுதினேன். அவற்றை இங்கு வெளியிடவில்லை. இன்று கல்யாணராமனின் பிறந்த நினைவு நாளை சாக்காக வைத்து அவரைப் பற்றி எழுதியதை இங்கு வெளியிட்டுத் தொகுத்துக் கொள்கிறேன்.

தஞ்சாவூர் எஸ் கல்யாணராமன்

Thanjavur S Kalyanaraman

முன்னோடி கலைஞர்களில் சிலர் அவர்கள் பிறக்கவேண்டிய காலத்துக்கு முன்னால் பிறந்துவிடுவதுண்டு. அதனாலேயே அவர்கள் வாழும் காலத்தில் அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய பெயரும் புகழும் கிடைக்காமல் போய்விடுகிறது. இத்தகைய கலைஞர்களே, “அவர் மறைந்தாலும் அவர் இசை சிரஞ்சீவியாய் இருக்கும்”, என்ற சம்பிரதாய மொழிக்கு அர்த்தம் அளிப்பவர்கள். அப்படிப்பட்ட சிரஞ்சீவிகளுள் முதன்மையானவர் தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன்.

கல்யாணராமனைப் பார்த்தேயிராத இன்றைய இளைஞர்களுக்கு அவருடைய சங்கீதமே ஆதர்சமாக விளங்குகிறது. மனத்தின் கற்பனை ஓட்டங்களுக்கு மனிதனின் குரல் ஓரளவுக்குத்தான் ஈடு கொடுக்க முடியும். கல்யாணராமனின் ஆய்வு நோக்கும் தீரா முயற்சியும் மனிதக் குரலின் சாகஸங்களுக்கு எல்லையேயில்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றன.

புதுமைக்குப் பெயர் போன ஜி.என்.பி வழியில் வந்த கல்யாணராமன், தன் குருவின் பாணியை அப்பட்டமாய் பின்பற்றாமல் இள வயது முதலே தனக்கென வழியை வகுத்துக் கொண்டார். இசையை தன் வளர்ச்சிக்கான கருவியாய் கருதாமல் தன்னை இசையின் வளர்ச்சிக்கான கருவியாய் நினைத்துக் கொண்ட கல்யாணராமனின் விஸ்வரூபம் அவர் சமகாலத்தினவருக்குக் கண்கூச வைத்தது.

ஸுசரித்ரா, சந்திரஜோதி போன்று யாரும் தொட்டிராத விவாதி ராகங்களைக் கையாளுதல், நுட்பமான தாள அமைப்பில் நடை பல்லவிகளைப் பாடுதல், பிரமிக்க வைக்கும் கிரகபேதங்களை செய்தல், மேளகர்த்தா ராகங்களில் பஞ்சமத்தைத் தவிர்த்து இரு மத்யமங்களையும் வைத்துக் கொண்டு ”பஞ்சம வர்ஜ த்விமத்யம ராகங்கள்” என்று ஒரு புதிய ராக வகையயே உருவாக்கி அவற்றுக்கு உயிர் கொடுத்தல் என்று கல்யாணராமன் புகுத்திய புதுமைகள் இன்றுதான் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளப்படுகின்றன.

ஆழ்வார் பாசுரங்கள், ஜெயதேவர் அஷ்டபதிகள் போன்றவற்றை கல்யாணராமனின் அரிய ராகத்தில் அமைந்த அற்புத மெட்டுக்கள் அலங்கரிக்கின்றன. மாயையை பழித்தல் என்ற பாரதி பாடலுக்கு ஸுமனிஸரஞ்சனியின் கல்யாணராமன் அமைத்திருக்கும் மெட்டின் அழகை வெளிப்படுத்த வார்த்தைகளுக்கு வலுவில்லை. கேட்டுத்தான் உணர வேண்டும். இன்று பிரபலமாய் விளங்கும் “கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி” பாடலின் மெட்டும் கல்யாணராமனின் கைவண்ணம்தான்.

இசை கற்பிப்பதில் கல்யாணராமன் ஒரு துரோணர்தான். தன்னிடம் வந்தவர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கியதால் மட்டுமல்ல! தன் இசையால் தன்னைப் பார்த்தேயிராத சந்ததியனரையும் ஏகலைவர்களாய் மாற்றுவதால்!

Read Full Post »

MKT 100

ஏழிசை மன்னர் எம்.கே.டி-யின் நூற்றாண்டு நேற்று தொடங்கியுள்ளது.

எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மூன்றெழுத்து சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கிய எம்.கே.டி-யின் நூற்றாண்டு இவ்வளவு அமைதியாகத் தொடங்கியிருப்பது நம்ப முடியாமல் இருக்கிறது!

பாகவதர் நூல் எழுதிய ஜெ.ராம்கியுடன் சில முறை எம்.கே.டி பற்றி சக விசிறியாய்ப் பேசியுள்ளேன். அவர்தான் மின்னஞ்சல் அனுப்பி நினைவுபடுத்தினார்.

பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், அதிகம் நான் தாத்தாவிடம்தான் வளர்ந்தேன். என் அப்பாவின் அப்பா பெரிய எம்.கே.டி ரசிகர். நன்றாகப் பாடக் கூடியவர். காலை எழுந்தது முதல் எம்.கே.டி பாடல்களாய் பாடிக் கொண்டே இருப்பார். சிறு வயதில் எனக்கு சிவகவி பாடல்கள் எல்லாம் அத்துப்படி. யாரேனும் பாடச் சொன்னால் “அம்பா மனம் கனிந்து” என்று ஆரம்பித்துவிடுவேனாம்.

எனக்குப் பத்து வயதாகும் போது தாத்தா மறைந்தார். அவர் மறைவுக்குப் 10 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடக இசையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதுதான் மீண்டும் எம்.கே.டி பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன்.

ஹரிதாஸ், சிந்தாமணி, சிவகவி பாடல்களை நூற்றுக் கணக்கான முறை கேட்டிருப்பேன். “கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே” பாடலைல் சுழற்று சழற்றி சங்கதி அடிப்பார் பாருங்கள்! ஆஹா…எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.

இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டுதானே! நிச்சயம் அவரைப் பற்றி உருப்படியாய் எதாவது எழுத வேண்டும்!

தமிழ்ப் பத்திரிக்கை உலகும் விரைவில் விழித்துக் கொண்டு, ஒரு மாபெரும் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பான முறையில் கொண்டாடும் என்று நம்புவோமாக!

Read Full Post »

மிருதங்கக் கலைஞர் திருச்சி தாயுமானவனைப் பற்றி சங்கீத சீஸனிலேயே எழுத வேண்டும் என்றிருந்தேன். இப்போதுதான் முடிந்தது.

இந்த வருடம், அகாடமியின் டிடிகே விருதைப் பெறும் இவர் கொட்டையூரில் பிறந்தவர். இசை கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ராஜு வயலின் வித்வான். குடும்பத்த்ல் அனைவருமே ஒன்று வாய்ப்போட்டோ அல்லது வயலினையோ எடுத்துக் கொண்டு அதில் தேர்ச்சியைப் பெற்றனர். அந்தக் குடும்பத்தில் தாயுமானவன் எப்படி மிருதங்கத்தின் பக்கம் வந்தார் என்பது சுவாரஸ்யமான கதை.

“எனக்கு ஏழு வயதிருக்கும் போது எங்கள் விட்டுக்கு ஒரு மிருதங்கம் வந்தது. ஒரு நாடகக் கலைஞர் அடகு வைத்துப் போன மிருதங்கம் அது. அதை தினமும் வாசிப்பேன். அதிலிருந்து புறப்பட்ட நாதம் என்னை ஈர்த்தது. கற்றால் மிருதங்கம்தான் கற்பேன் என்று ஒரே பிடியாய் என் தந்தையிடம் கூறிவிட்டேன்.”,  என்கிறார் தாயுமானவன்.

தாயுமானவனின் முதல் குரு கும்பகோணம் ராஜப்ப ஐயர். 1945-ல் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி ஆசாரியார் (இவர் தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் சிஷ்யர்)  ஒரு கச்சேரிக்காக கும்பகோணம் வந்திருந்த போது தாயுமானவனின் வாசிப்பைக் கேட்க நேர்ந்தது. உடனே, ராஜப்ப ஐயரை அணுகி, தாயுமானவனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ராஜப்ப ஐயரும் இசைய, தாயுமானவனின் குருகுலவாசம் தொடங்கியது.

தட்சிணாமூர்த்தி ஆசாரியார் மிகவும் கண்டிப்பானவர். புதுக்கோட்டை பாணியில் ஊரியவர். மிருதங்கம், கஞ்சிரா இரண்டிலும் சிறந்த தேர்ச்சியைப் பெற்றிருந்தவர். அவரிடம் 12 வருட காலம் குருகுலவாசம் செய்த தாயுமானவன், காலப்போக்கில் அவருடன் சேர்ந்தே பல கச்சேரிகள் வாசிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அரியக்குடி, ஆலத்தூர், சித்தூர், தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர் என்று அன்று முன்னிலையில் இருந்த அனைத்து வித்வான்களுக்கும் குருவுடன் சேர்ந்து இசைத்துள்ளார்.

குருவின் மனதிற்குகந்த சீடர் காலப்போக்கில் குருவின் மருமகனாகவும் மாறி, கனகாம்புஜத்தைக் கைப்பிடித்தார். தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் மேல் அபார பக்தி கொண்டிருந்தவர் தட்சிணாமூர்த்தி ஆசாரியார். ”எங்க ஐயா, புதுக்கோட்டை ஐயாவைப் பத்தி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அவங்க சொல்றதைக் கேட்டே எனக்கும் அவர் பேர்ல ஈடுபாடு ஏற்பட்டுப் போச்சு.”, என்னும் தாயுமானவன், அவரது குருவையும் பரமகுருவையும் போலவே மிருதங்கம், கஞ்சிரா என்று இரு வாத்தியங்களிலும் தேர்ச்சியைப் பெற்றார்.

இவ்விரு வாத்தியங்களைத் தவிர கோன்னக்கோலிலும் நிபுணர். “எங்கள் வழிப்படி கற்றுக் கொள்ளும் போது சொல்லப்படும் ஜதிகளே, வல்லின மெல்லினங்களோடு, கொன்னக்கோல் இசைப்பது போலத்தான் இருக்கும். எந்த ஒரு பாடத்தையும் கையில் தாளம் போட்டு கொன்னுப்பிக்காமல் வாத்தியத்தில் வாசித்துப் பழக மாட்டோம். மதுரை சோமு கச்சேரியில் என் குருநாதருடன் வாசிக்கும் போது, மன்னார்குடி வைத்தியலிங்கம் பிள்ளை கொன்னக்கோல் இசைப்பார். அவரது கொன்னுப்பித்தல் முறை என்னை பெரிதும் கவர்ந்து, நானும் அதில் தேர்ச்சி பெறத் தூண்டியது.”, என்கிறார்.

தாயுமானவனிடம் பேசினால், 30 நொடிகளுக்கு ஒரு முறை தன் குருநாதரைப் பற்றியும் தட்சிணாமூர்த்திப் பிள்ளையைப் பற்றும் பேசாமல் இருக்க மாட்டார். தன் குருநாதரின் கனவுகளை மெய்யாக்கியதை தன் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறார்.

அது என்ன கனவுகள்? – புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் வாழ்க்கை வரலாறை நூலாக்குதல், அவருக்கு ஒரு சமாதி கோயில் கட்டுதல். இவ்விரு கனவுகளையும் பெரும்பாடு பட்டு நனவாக்கியிருக்கிறார் தாயுமானவன். வருடா வருடம் இவர் எழுப்பிய சமாதி கோயிலில் தட்சிணாமூர்த்திப் பிள்ளைக்கு குருபூஜை சிறப்பாக நடை பெறுகிறது.

65 வருடங்களுக்கு மேலாக வாசித்து வரும் இவர், பிரபல கலைஞர்கள் அனைவரின் பாட்டுக்கும் வாசித்துள்ளார். தியாகராஜ பாகவதருக்கும், கே.பி.சுந்தராம்பாளுக்கும் எண்ணற்ற கச்சேரிகள் வாசித்துள்ளார். மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்குப் ப்யணம் செய்துள்ளார். 1971-ல் திருச்சி வானொலியில் சேர்ந்து, பல லய சம்பந்தமான நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளார்.  “குருப்ரியா லய வித்யாலயா” என்ற இவரது பள்ளியின் மூலமாக எண்ணற்ற கலைஞர்களை தயாரித்துள்ளார்.

இவர் வாங்கியிருக்கும் விருதுகளின் பட்டியல் நீளமானது. கலைமாமணி, திருச்சி கலைக்காவிரி அளித்துள்ள வாழ்நாள் சாதனை விருது, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் ஸ்தானம் ஆகியவை அவர் வாங்கியிருக்கும் விருதுகளில் சில. இவரை கௌரவித்தவர்கள் பட்டியலில் இப்போது மியூசிக் அகாடமியும் இணைந்திருப்பது மிக நல்ல விஷயமாகும்.

(பதிவில் உள்ள படங்கள், சென்ற வருடம் தாயுமானவனை அவர் இல்லத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்டவை. முதல் படம், போட்டோவை போட்டோ பிடித்தது)

Read Full Post »