Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Sruti’

2006-ல் என் இசையுலக இளவரசர் ஜி.என்.பி நூல் விகடன் பதிப்பாக வெளியானது.

2010-ல் ஜி.என்.பி-யின் நூற்றாண்டின் போது கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஸ்ருதி மாத இதழில் அதன் மொழியாக்கத்தை திரு.ராம்நாராயண் வெளியிட்டார். அந்த சமயத்தில்தான் ஜி.என்.பி-யின் நூற்றாண்டு மலரை (கந்தர்வ கானம்) வெளியிட்டோம். மலரின் உள்ளடக்கம் பெரும்பாலும் ஆங்கிலட்டில் என்படாலும், தமிழ் நூல் எழுடி முடித்த நான்கு ஆண்டுகளில் கிடைத்த தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்ததாலும், ஸ்ருதியில் வெளியான மொழியாக்கத்தை வெளியிட முனைப்பிருக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் ராம்நாராயண் அழைத்தார். சமீபத்தில் அந்த மொழியாக்கத்தைப் படித்துப் பார்த்த போது அது ஜி.என்.பி-யைப் பற்றிய எளிய அறிமுக நூலாக இருக்கக்கூடும் என்றும், அதை வெளியிட விரும்புவதாகவும் கூறினார்.

நூல் வெளியாவதில் மகிழ்ச்சிதான் என்றாலும், அந்தப் பதிப்பு அவர் கையைக் கடிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எனக்கு. மூன்று நான்கு முறை வெவ்வேறு வகையில் கூறியும் ராம்நாராயண் விடுவதாய் இல்லை. அவர் ஜாதக பலன் அவரைக் காக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன்.

நூல் சில வாரங்களுக்கு முன் வெளியாகியுள்ளது.

புத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.

மே 1 ஜி.என்.பி-யின் நினைவு தினம். சென்னை ராக சுதா அரங்கில் ஒரு நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. அன்று ஜி.என்.பி-யின் இசையின் பரிமாணங்கள் பற்றி அவர் கச்சேரி பதிவுகளின் உதவியுடன் ஓர் விளக்கவுரையை அளிக்க உள்ளேன்.

IMG_4157

அரங்கிலும் புத்தகத்தை வாங்கிக் கொள்ள முடியும்.

 

 

Read Full Post »

2006-ல் விகடன் பிரசுரத்தில் வெளியான ஜி.என்.பி பற்றிய எனது புத்தகம், இசையுலக இளவரசர் ஜி.என்.பி-யின் ஆங்கில மொழிபெயர்ப்பு மின் புத்தகமாக வெளியாகியுள்ளது.

வெளியிட்டுள்ல ஸ்ருதி பத்திரிகையினருக்கும், மொழிபெயர்த்துள்ள ராம்நாராயணுக்கும் நன்றிகள்.

புத்தகத்தை வாங்க: http://sruti.com/index.php?main_page=product_info&cPath=2&products_id=331

Read Full Post »

பூனைக்கு மணி

சென்னை சீஸனுக்கு இணையாக உலகத்தில் வேறெந்த இடத்திலும் இசைத் திருவிழா நடக்கிறதா என்று சந்தேகமே. சென்ற ஞாயிற்று கிழமை ஹிண்டுவின் நான்காம் பக்கம் முழுவதுமே கச்சேரி விவரங்களுக்காக ஒதுக்கும் அளவிற்கு கச்சேரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சந்தோஷம்தான், ஆனால்….

கச்சேரி நடந்தால் போதுமா? Does quantity matter more than quality?

இப்படிச் சொன்னதற்காக கச்சேரிகளின் தரமெல்லாம் மோசம் என்று சொல்கிறேன் என்று நினைக்கக் கூடாது.

இளம் வித்வான்களுக்கு முன்னொரு காலத்தில் இருந்தது போல, திறமையைக் காட்ட மேடைகள் இல்லை என்று இன்று சொல்ல முடியாது. 10 வர்ணம், 30 கிருதி பாடம் ஆன வாண்டுக்குக் கூட எங்கோ ஒரு மூலையில் கச்சேரி நடக்கிறது. அது நல்ல விஷயம்தானே!

நல்ல விஷயம்தான். ஆனால் யாருக்கு நல்லது?

“இந்தக் கல்லை கையில போட்டா நல்லது நடக்கும்”, என்பவர் யாருக்கு நல்லது என்றே சொல்ல மாட்டார். அவருக்கு நல்லது என்பதுதான் அவ்வாக்கின் தாத்பர்யம் என்று கூட ஒரு பாஷ்யம் உண்டு. அதைப் போலத்தான் இந்தக் கச்சேரிகளில் குழந்தைகளைப் பாட வைப்பதும். பழைய படங்களில் கதாநாயகன் தறுதலையாய் இருந்தால் “ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டா எல்லாம் சரியாகிவிடும்”, என்றொரு வசனம் வரும். அது மாதிரி இன்று சங்கீதம் சரியாக வரவில்லை என்றால், “டிசம்பர்-ல கச்சேரில பாட வெச்சுட்டா எல்லாம் சரியாகிவிடும்”, என்று இசை வட்டாரங்களில் வசனங்கள் உண்டு போலும். இன்று Child Prodigy பட்டம் கலைமாமணியை விட சீப்பாகக் கிடைக்கிறது.

இந்த டிராஜிடிகள் செய்யும் கச்சேரியை யார் கேட்கிறார்கள். இசைக் கலைஞர்களின் உறவினர், மைக் ஸெட்காரர், வீட்டில் மருமகள் வாய்க்கு பயந்து சபாவுக்குள் தஞ்சம் புகும் மாமிகள் சிலர். சபா செகரட்டரி நிச்சயம் தனி ஆவர்த்தனம் முடியும் போது வந்துவிடுவார். கச்சேரி ஆனதும், “உம்ம பிள்ளைதான் சார் அடுத்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ்”, ரேஞ்சிற்கு ஏத்திவிடுவார்.

குழந்தைக்கு நல்லதும் அல்லதும் தெரிகின்ற வயதா என்ன? பெற்றோருக்கோ அது ‘தம் மக்கள்’ (வள்ளுவர் பின்னிட்டார்) பாடிய கச்சேரி. குழலையும் யாழையும் விட இனிமையாகத்தான் இருந்திருக்கும். சந்தோஷமாய் தேங்காய் மூடியுடன் வீட்டிற்குச் சென்று, அடுத்த நாள் அரைத்து விட்ட சாம்பார் சாப்பிடலாம்.

அப்படி என்றால் காலை வேளை கச்சேரிகளே கூடாதா? இளைஞர்கள் பாடவே கூடாதா?

அப்படிச் சொல்லவில்லை. இன்று முன்னிலையில் விளங்கும் பாடகர்கள் பாடுவதை விட இளைஞர்கள் பாட்டை கேட்பதையே அதிகம் விரும்புபவன் நான். அப்படி நிறைய இளைஞர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். காவேரி தண்ணி குடித்தால்தான் சங்கீதம் வரும் என்ற காலம் எல்லாம் போய், தேம்ஸ், ஹட்ஸன் கரையோரம் வளர்ந்தும் கூட அற்புதமாய் இசைக்கும் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாய்ப்பளிக்கலாம்.

ஆனால், இந்தக் கலைஞர்கள் ஒரே நாளில் எவ்வளவு இடங்களில்தான் பாட முடியும்? 55 சபாகளில் கூப்பிட்டால் அவர்கள் எவ்வளவு சபைக்குத்தான் மறுப்பு தெரிவிக்க முடியும்? வளர்ந்து வரும் சமயத்தில் வரும் கச்சேரியை வேண்டாம் என்றால், மாமா கோவித்துக் கொண்டு அடுத்த வருடம் ‘தன்னால் இயன்றதை’ செய்துவிடுவாரோ என்ற பயம் இவர்களுக்கு வருவது நியாயம்தானே?

தன் சபாவில் நடக்கும் ஒவ்வொரு கச்சேரியும் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சபா காரியதரிசிகளுக்கு உண்டா? அகாடமியில் நாள் முழுவதும் ஐந்து வேளையும் கச்சேரிகள் நடப்பது போல், தன் சபாவிலும் நடக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதுமா? என் பாட்டி சொல்வார், ‘கழுதை விட்டை கை நிறைய’, என்று. அப்படி கச்சேரிகள் வைப்பதற்கு வைக்காமல் போனால்தான் என்ன குடி முழுகிப் போய்விடும்?

இன்றைய நிலையில் திறமையானவர்கள் கச்சேரி ஒவ்வொன்றுக்கும் இணையாக தகுதியே இல்லாது மேடையேறும் கச்சேரிகளையும் நிச்சயம் அடையாளம் காண முடியும்.

தகுதி என்றால்? சிம்மநந்தனத்தில் பல்லவி பாட வேண்டும் என்றா சொல்கிறோம்? இல்லை. ஸ்ருதியுடன் பாட வேண்டும்.

கர்நாடக இசையில் ஸ்ருதியுடன் பாடுபவர்கள் குறைச்சல் என்று சொன்னால் நிறைய பேருக்கு கோபம் வருகிறது. அப்படிச் சொல்ல, தீவிர கர்நாடக சங்கீத ரசிகனான எனக்கும்தான் வலிக்கிறது. ஆனாலும், எவ்வளவு நாள்தான் denial-ல் வாழ்வது? பூனைக்கு என்றேனும் மணி கட்டித்தானே ஆக வேண்டும்?

இன்று பாடுபவர்கள் பலருக்கு மந்திர ஸ்தாயியில் காற்றுதான் வருகிறது. பஞ்சமம் வேண்டாமையா, நிஷாதம் தைவதமாவது கேட்க வேண்டாமா? தார ஸ்தாயியில் கண்ணை மூடி, கையைத் தூக்கி, கழுத்தைச் சாய்த்துக் கத்துவதுதான் சங்கீதமா? ’கூரை ஏறி கோழி பிடிக்காதவன் கோபுரம் ஏறி வைகுண்டம் போனானாம்’ என்பது போல, ஆதார ஷட்ஜத்தில் தஸ வித கமகமும் பாடி விட்டு, காம்போதியில் தார காந்தாரத்தில் கால் மணி நேரம் கார்வை (அதுவும் கள்ளக் குரலில்) கொடுக்கிறேன் என்று மல்லு கட்டுவது தேவைதானா?

இன்றைய சஞ்சயானாலும் சரி, அன்றைய ஜி.என்.பி ஆனாலும் சரி, இளம் வயதில் நிறைய கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் எழுத்தே சாட்சி. ஒவ்வொரு வருடமும் தன் கச்சேரியே டஜன் கணக்கில் இருக்கும் போது, குழந்தைகள் எங்கிருந்து கச்சேரிகள் கேட்கும்? கச்சேரி என்பது உடல் அளவிலும் சரி, மனதளவிலும் சரி, பெரும் உழைப்புதான். மதியம் 2.00 மணிக்கு உழைத்து வாசித்த குழந்தையை சாயங்காலம் கச்சேரியில் திருச்சி சங்கரன் வாசிக்கும் கோர்வைகளை எல்லாம் பதிய வைத்துக் கொள் என்றால் நடக்கிற காரியமா?

பெற்றோர்களே! உங்கள் ஆசை புரியாமல் இல்லை. சேஷகோபாலன் மாலையில் பாடும் மேடையில் என் மகன் காலையில் பாடினான் என்றால் பெருமைதான். ஆனால் அவன் காலையில் நாலு சீஸன் பாடிவிட்டு காணாமல் போவதையா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவனும் சேஷகோபாலனாக வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள்.

அப்படி நினைப்பது உண்மையெனில், குழந்தையை நல்ல சங்கீதத்தை கேட்க விடுங்கள். 9 அயதில் கச்சேரி செய்ய எல்லோரும் ஸ்ரீநிவாஸ் அல்ல. எப்போது கச்சேரி செய்ய ஆரம்பிக்கிறார்கள் என்பதை விட, எங்கே சென்று முடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் . 20 வயதுக்கு மேல் கச்சேரி செய்ய ஆரம்பித்து, எல்லோரும் மதிக்க தக்க வகையில் வாழ்ந்தவர்கள்/வாழ்பவர்கள் பலர் உண்டு.

சபா நிர்வாகிகளே! நீங்கள் கலையை வளர்ப்பதாக நினைத்து உங்கள் அட்டவணையை இட்டு நிரப்புவதால் செய்யும் பாதகம்தான் அதிகம். மாலை கச்சேரிகளுக்கு மட்டும்தான் நல்ல கலைஞர்கள் கிட்டினர் என்றால், அது மட்டும் போதும். நாள் முழுவதும் நடந்தால்தான் உங்கள் சபையை மதிப்போம் என்று யாரும் சொல்லப் போவதில்லை. எப்படியும் காலை வேளை கச்சேரிக்கு நீங்களே வருவதில்லை.

புராதன கோயில்களை நாசம் செய்து விட்டு, ஒவ்வொரு தெருவிலும் புதிதாய் கோயிலெழுப்புவதற்கும், புதிது புதிதாய் சபா ஆரம்பிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உங்களிடம் பணமிருந்தால், ராணி சீதை அரங்கில் எழுந்திருக்கும் போதெல்லாம் ஸீட்டிலிருந்து கிரீச்சிடும் ஒலி எழாமல் இருக்க வழி செய்யுங்கள். சாஸ்திரி ஹாலில் போஸ் ஸ்பீக்கர் வாங்கித் தாருங்கள். மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸின் அரதப் பழைய பேனரில் ’வருடத்தை’ வருடா வருடம் ஒட்டு வேலை செய்து மாற்றுகிறார்களே, அவர்களுக்கு ஒரு புது பேனர் வாங்கிக் கொடுங்கள்.

சபா நடத்துவது பணத்தை செலவழிக்க அல்ல, பணம் சம்பாதிக்க என்று நீங்கள் கூறுவீர்களாயின், உமக்கு வாழ்த்துகள். காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளுங்கள். ஈஸ்வரோ ரக்ஷது.

ஒரே ஒரு விஷயம்.

அபஸ்வரம் கேட்டால் ஆயுசு குறையுமாம்.

கச்சேரிக்கு வரும் எங்களை இன்னும் சில வருடங்கள் வாழ விடுங்கள்!

 

Read Full Post »

இந்த மாத ஸ்ருதி இதழ், ஓவியர்/பாடகர் சிறப்பதிழாக மலர்ந்துள்ளது.

ஸ்ருதி பத்திரிக்கையின் contributing editor-ஆக 20 வருடங்களுக்கு மேல் இருந்தவர் ராஜம். ராம்நாராயண், ஜானகி, ஸுதா என்று ஸ்ருதி குடும்பத்தினர்கள் எழுதியுள்ள கட்டுரைகள் நெஞ்சைத் தொடுகின்றன. 80-களில் ஸ்ருதி பட்டாபிராமன் ராஜத்தைப் பற்றிய எழுதிய கட்டுரையும் மீள் பிரசுரம் ஆகியிருக்கிறது.

இவை தவிர, என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை ஓவியர் (ஹிந்து புகழ்) கேஷவுடையது.

collector’s item-ஆக மலர்ந்துள்ள இவ்விதழைப் இங்கு பெறலாம்

இச் சிறப்பிதழில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை கீழே.

I can neither sing nor paint. Yet I regard myself as S.Rajam’s disciple, as I sincerely hope to follow his bani of living life (Raja Margam). I met Rajam sir on a Vijayadasami day in 2006, when I interviewed him for my GNB book. Despite poor health, he gave me a detailed interview.

He was painting a Saptamata series then. When I pointed out that his depiction was significantly different from the early Chola sculptures, his eyes lit up. An ardent admirer of Chola and Pallava art, he couldn’t wait to see the photographs of those sculptures. From then on, my visits to Chennai were never complete without a session with Rajam sir.

Rajam sir had the rare ability of objectively analysing music. He did not let the person behind the music influence his analysis. His accounts of the likes of Ambi Dikshitar, Papanasam Sivan, and Madurai Mani were a real treat. It was as if he was living those moments again. Every time I asked him about his experience of learning from Mylapore Gowri Amma, he sang “Tiruvotriyur Tyagarajan” and “Ettanai sonnalum”. The way he mimicked Gowri Ammal’s abhinayam is unforgettable.

I have watched him teach from close quarters. Each session was a peek into his creativity, as he would spontaneously unfold sangati after sangati even in the rarest of the kritis.

I had the good fortune of seeing the Saptaswara paintings bloom from the details mentioned in the ‘Sangita Kalpadrumam’ of Muthiah Bhagavatar. To watch the way Rajam sir went about his research and the layers he created literally and figuratively to depict all the details was a once-in-a-lifetime experience.

We would discuss something in a very casual way and the next time I visited him, Rajam sir would have painted something based on our conversation. Once I asked him if the similes mentioned in kritis were realistic. Rajam sir responded with an extempore line drawing of the kriti “Anta Rama soundaryam” (See Illustration), depicting the various similes and their correlation to an attribute of Rama.

For the past six months, I have been involved in making a documentary on Rajam sir. Despite his difficulty in moving about, Rajam sir gave me the utmost cooperation and often suggested frames and lighting during the shoot. He also created some paintings exclusively for the documentary. Our crew and I were shattered when we realized that Rajam sir wouldn’t be around when we screen the documentary.

A few months ago, at 91, Rajam sir wanted to paint all the 108 karanas. He also said, “I  painted the trinity long ago and the painting has become famous. Only a few days ago, I realised that I hadn’t painted the Tamil Isai trinity”. He wanted me to look out for details on Marimutha Pillai. He also wanted to depict the entire Soundarya Lahari through his paintings. I’m sure he had much more in his ‘to-do’ list.

The last wish he expressed to me when I recently met him at Isabel Hospital was to celebrate ‘Kotiswara Iyer day’ annually. I hope his disciples will fulfil this wish. While I cherish the many wonderful moments I had with Rajam sir, the very thought that he won’t be around when I visit Chennai next is difficult to deal with.

அந்த ராம் சௌந்தர்யம் கிருதியில் வரும் உவமைகள்

அரவிந்த மலர் – காலுக்கு

அட்சயத் துணி – முழங்காலுக்கு

துதிக்கை – தொடைக்கு

பூமி – விரிந்த மார்புக்கு

கமுகு மரம் – கழுத்து

மலை – புஜங்கள்

பவளம் – வாய்

மன்மதன் – அழகு

Read Full Post »

International Foundation for Fine art, Music Forum சார்பில் வழங்கும் Media Award, இந்த ஆண்டு ஸ்ருதி பத்திருக்கையின் ஆசிரியர் வி.ராம்நாராயணுக்குக் கிடைத்துள்ளது. இவரை சில மாதங்கள் முன்தான் நேரில் முதன்முதலில் சந்தித்தேன் என்ற போதும், ஜி.என்.பி நூற்றாண்டு மலரை இருவரும் சேர்ந்து தொகுத்ததால், சில மாதங்களிலேயே மிக நெருக்கமாகிவிட்டதாய் உணர்கிறேன்.

ராம் இந்தத் துறையில் மிகவும் சீனியர் என்ற போதும் மிக மிக அடக்கமானவர். பேசுகின்ற பத்தாவது வார்த்தையில் தன்னைப் பற்றிப் பேசிக் கொள்பவர் மலிந்திருக்கும் நேரத்தில், அவரைப் பற்றி பேச ஆரம்பித்தால், பேச்சை ஸ்ருதியைப் பற்றித் திருப்பிவிடுவார். இன்றைய நிலையில், சங்கீதத்துக்காகவும், நாட்டியத்துக்காகவும் நடத்தப்படும் ஒரே தரமான இந்திய இதழ் ஸ்ருதிதான். அந்த இதழுக்கு ஆசிரியர் என்ற கர்வம் ஒரு துளி கூட தென்படாத மனிதர். பல விழாக்களில் கடைசி வரிசையில் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார். கூச்ச சுபாவம் நிறைந்தவர்.

முதலில் ஒரு நல்ல இசை ரசிகர். எந்த ஒரு கலைஞரின் பாட்டையும் திறந்த மனதோடு அணுகுபவர். இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதை ஸ்ருதியின் முக்கிய கொள்கைகளுள் ஒன்றாக கருதுபவர். தன் கருத்துகளையும், ஸ்ருதி ஆசிரியர் பொறுப்பையும் அவர் அழகாக வேறுபடுத்தி வைத்திருப்பதைக் காண ஆச்சரியமாய் இருக்கிறது.

ஸ்ருதியில் profile செய்ய விட்டுப் போன இசை மேதைகளை எப்படியும் செய்துவிட வேண்டும் என்று நினைப்பவர். இவரது முயற்சியால்தான் மதுரை மணி, பாலக்காடு மணி பொன்றவர்களைப் பற்றிய இதழ்கள் (இவ்வளவு ஆண்டுகள் கழித்து) வெளியாயின. இதையெல்லம அவரிடம் சொன்னால், இன்னும் என்னென்ன செய்திருக்க வேண்டும், எங்கெல்லாம் தவறுகள் நுழைந்துவிட்டன என்று மட்டுமே பேசுவார்.

சம கால கலைஞர்களைப் பற்றி இவர் ஸ்ருதியில் செய்யும் பதிவுகள் மிகவும் முக்கியமானவை. விஜய் சிவாவும், ஜெயஸ்ரீ-யும் மறைந்த பின், அவர்களைப் பற்றி கிளருவதை விட, அவர்கள் உச்சியில் இருக்கும் போதே அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிடுவது மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன்.

இசைத் துறைக்கு வருவதற்கு முன், கிரிக்கெட்டில் ஆட்டக்காரராகவும், எழுத்தாளராகவும் நிறைய சாதித்தவர் ராம். தமிழ்நாடு கிரிக்கெட் வரலாற்றைப் பற்றி இவர் எழுதியுள்ல நூல் மிக அரிய பதிவு. இந்தத் துறையிலும் இவர் தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.

ஸ்ருதியைப் பொறுத்த மட்டில், ராம்நாராயணுக்கு இன்னும் நிறைய கனவுகள் இருக்கின்றன. இசை உலகுக்கு பேறிருந்தால் அவை மெய்ப்படும்! தன்னை முன் நிறுத்திக் கொள்ளாமல் பத்திரிக்கையை முன் நிறுத்தும் இவர் பணியை உணர்ந்து, இவருக்கு இந்த வருடம் விருது வழங்கிய அமைப்புக்கு பாராட்டுகள்.

Read Full Post »

இம்மாதம் அம்ருதாவிலே வெளியான கட்டுரை (வெளியாகியிருக்கும் என்று நம்புகிறேன்)

வாருங்கள் செல்வோம் 1992-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதிக்கு. நேற்றும், அதன் முன் தினமும், ஸ்ருதி ·பௌண்டேஷன், ஜி.என்.பி-யின் இசையைப் பற்றிய ஆய்வின் முடிவுகளை நாரத கான சபையில் நடந்த கருத்தரங்கில் வெளியிட்டது. அதைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். குறுக்கிடாமல் கேளுங்கள்.

ஸ்ருதி பத்திரிகையின் நிறுவனர் என்.பட்டபிராமன் தலைமையில், எஸ்.ராஜம், கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி, என்.ராமநாதன், ரிதா ராஜன், சுலோசனா பட்டாபிராமன் போன்ற கலைஞர்களும், இசை ஆய்வில் பல சாதனைகளைப் புரிந்தவர்களும் இருந்த குழு, ஆய்வின் முடிவுகளை ஜி.என்.பி இசைப் பதிவுகளின் வழியாக நிறுவியது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், சுமார் 150 மணி நேரம் செலவு செய்து, ஸ்ருதியின் ஆய்வுக் குழு ஜி,என்.பி-யின் இசையின் பல்வேறு கூறுகளைப் பற்றி ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளது.

முதலில், ஜி,என்.பி பாட வந்த காலகட்டம், அப்போது வெகு பிரபலமாக இருந்த அரியக்குடியின் கச்சேரி முறை, ஜி.என்.பி-யின் கச்சேரி முறை அவருக்கு முன் இருந்தவர்களின் முறையைத் தொடராமல், அறிவுப் பூர்வமாய் அணுகி, பல புதுமைகளைப் புகுத்தியது என்று பல விஷயங்களைத் தொட்ட பின், ஜி.என்.பி-யின் கச்சேரியின் பல்வேறு அம்சங்கள் ஆழமாக அலசப்பட்டன.

ஆரம்ப காலத்தில் ஜி,.என்.பி-யின் குரல், காலப்போக்கில் அது அடைந்த மாற்றங்கள் ஜி.என்.பி-யின் கச்சேரி தொடக்கம், ஒரு கச்சேரியை எப்படித் தொடங்கினாலும் அது கச்சேரியை எப்படி களை கட்ட வைத்தது போன்ற பல விஷயங்கள் அழகான ஆங்கிலத்தில் தெளிவாக விளக்கப்பட்டன.

ஜி.என்.பி-யின் ஆலாபனைகள், ராகத்தின் சிறு சித்திரம் (sketch), பிரதான கிருதிகளுக்கு முன் பாடும் ராகம், ராகம் தானம் பல்லவியின் பாடப்படும் ராகம், விருத்தங்களில் பாடும் ராகம் என பகுப்பட்டு, இவை ஒவ்வொன்றிலும் அவரின் அணுகு முறை எப்படி இருந்தது என்று தெளிவாக, உரிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

முதல் பிடியிலேயே ராக சாயலைக் காட்டுதல், மாளவி, செஞ்சு காம்போதி போன்ற அபூர்வ ராகங்களைப் பாடும் போதும் கேட்பவருக்கு ராக லட்சணம் பதியும் படியாகப் பாடுதல், பாடுகின்ற கிருதிக்கு ஏற்ப ஆலாபனையை அமைத்துக் கொள்ளுதல், பல்லவிக்கு ராகம் பாடுவதில் தனக்கென்று ஒரு வழியை வகுத்து, நாதஸ்வரத்தில் மட்டும்தான் விஸ்தாரமான ராக ஆலாபனைகள் கொடுக்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றி, ராகத்தில் வெவ்வேறு இடங்களில் ஆலாபனையின் மையத்தை இருத்தி, அந்த மையத்தைச் சுற்றி சுற்றி பல நகாசு வேலைகள் செய்து, படிப் படியாய் வெவ்வேறு ஸ்தாயிகளில் ராகத்தின் ஸ்வரூபத்தை ஜி.என்.பி வெளிப்படுத்தியதை வெகு அழகாக விளக்கினர் ஸ்ருதி ஆய்வுக் குழுவினர்.

ஜி.என்.பி-யின் தானம், அவர் எடுத்துக் கொண்ட பல்லவிகள், பல்லவிக்கு எடுத்துக் கொண்ட ராகங்கள், ராகமாலிகை ஸ்வரங்கள் போன்றவற்றை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய விதம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. ஜி.என்.பி கிருதிகளை அணுகிய விதம், பெரும்பாலும் பதச் சேதம் இன்றிப் பாடும் அவர் முறை (மறுகேலரா பாடலில் தவறாக பதம் பிரித்து இருப்பதையும் இந்தக் குழு சுட்டிக் காட்டத் தவறவில்லை), ஒரே அடியை பல முறை பாடும் போது வேறாக ஒலிக்கும் சங்கதிகளை அவருக்கு உரிய வகையில் அமைத்துக் கொண்ட விதம், அவர் அமைத்த சிட்டை ஸ்வரங்கள் ஆகிவற்றை அவர் பாடியிருக்கும் கிருதிகளின் ஒலிபரப்பின் மூலம் அழகாக விளக்கினர்.

நிரவலுக்கு அவர் எடுத்துக் கொண்ட அலாதியான இடங்கள், ஸ்வரப் ப்ரஸ்தாரத்தில் அவர் உபயோகித்த ஸர்வலகு முறை, பொருத்தங்கள் அமைப்பதில் முன்னோடியாக விளங்கிய விதம், ஸ்வராக்ஷரங்களின் மேல் அவருக்கு இருந்த காதல் என்பதையெல்லாம் விளக்கிய பின் ஜி.என்.பி இசையின் கூறுகள் என்று தவறாக நம்பப்பட்டு வந்த பல பரவலான கருத்துகளை உடைத்தெரிந்தன அந்தக் குழுவின் முடிவுகள்.

ஜி.என்.பி கிருதிகள் பாடிய விதம் அதீத வேகம் என்ற கருத்தை மறுத்து பாலகோபால, மாமவ பட்டாபிராமா, ஸ்ரீ சுப்ரமண்யாய போன்ற கிருதிகளை அவர் கே.வி.என், டி.கே.பி போன்ற விளம்ப காலத்துக்கு பெயர் போன வித்வான்களை விட குறைந்த வேகத்தில் பாடியிருப்பதை அறிவியல்பூர்வமாய் நிறுவினார்கள். Speed என்பது வேறு tempo என்பது வேறு. Speed என்பது நிஜம். Tempo என்பது போலி (Perception). ஜி.என்.பி-யின் இசையின் விறுவிறுப்பே வேகமென தவறாக் கருதப்பட்டது, என்கிறது ஆய்வுக் குழு.

ஜி.என்.பி-யின் ஸ்ருதி சுத்தத்தை அலசி, அவரது கடைசி காலத்தில் தள்ளாமையால் ஸ்ருதி விலகல்கள் ஏற்பட்டிருப்பது உண்மையெனினும், அவருக்கு ஸ்ருதி ஞானம் கிடையாது என்ற கூற்றில் உண்மை ஏதுமில்லை என்பது குழுவின் ஒருமித்த கருத்தாக இருந்தது. பிருகா என்றால் அது ஜி.என்.பி பாடுவதுதான் என்பது உண்மைதான் என்ற போதும், பிருகா மட்டுமே அவர் சங்கீதம் ஆகாது என்பதை விளக்கி, அவர் ஆலாபனையில் இருந்த சுத்த ஸ்வரங்களையும் கமகங்களையும் விளக்கி, குறிப்பாக ஜாருவை அவர் பயன்படுத்திய விதத்தை சாவேரி ராகத்தின் மூலம் வெளிப்படுத்திய விதம் வெகு ஜோர்.

சிறந்த பாடகராய் விளங்கியதைத் தவிர சிறந்த வாக்கேயக்காரராகவும் விளங்கிய ஜி.என்.பி-யின் கற்பனையில் உருவான கிருதிகளின் விரிவான அலசல் இடம் பெற்றது. அரிய ராகங்கள், தெரிந்த ராகங்களில் புதிய பிரயோகங்கள், அரிய ஸ்வராக்ஷரங்கள், கிருதிகளின் சங்கதி அமைப்பு, சிட்ட ஸ்வரங்கள், அவர் வழியைப் பின்பற்றுவோர் மட்டும் என்று இல்லாமல், மற்ற பாணியைப் பின்பற்றுவோரும் விரும்பிப் பாடும் பாடல்களாய் ஜி.என்.பி-யின் கிருதிகள் விளங்குவது என்று பல கருத்துகளை சுவை படக் கூறி, மாணவர்களைக் கொண்டு அவர் கிருதிகளை இசைக்கவும் வைத்ததைக் கேட்க கர்ணாம்ருதமாய் இருந்தது.

அவர் வழி நிலைக்கும் படி மாணவர்களை உருவாக்கியவர் ஜி.என்.பி. அவரின் பிரதான சிஷ்யர்களான எம்.எல்.வி மற்றும் தஞ்சாவூர் கல்யாணராமனின் இசையில் உள்ள ஜி.என்.பி பாணியின் கூறுகளையும், ஜி.என்.பி-யின் பாணியிலிருந்து வேறுபடும் கூறுகளையும் விளக்கி, ஒரு நல்ல சீடன், குருவின் பாணியை முழுவதுமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாததை படம் பிடித்துக் காட்டினர்.

கடைசியாக, ஜி.என்.பி இசைத் துறையில் ஆற்றிய பங்கையும், அவர் இசை இன்றும் ஏற்பொஅடுத்தும் தாக்கத்தைப் பற்றியும் அவருடன் பல முறை மேடையைப் பகிர்ந்து கொண்ட லால்குடி ஜெயராமன் விரிவாகப் பேசி, “சங்கீதத்துக்கு அழகும் புதுமையும் புத்துணர்ச்சியும் கொண்டு வந்து சங்கீதத்தின் எல்லைகளை விஸ்தரித்தவர் ஜி.என்.பி” என்று உரையை முடித்த போது அரங்கம் அதிர்ந்தது.

ஜீலியஸ் சீஸரின் ‘வினி விடி விஸி’ ஜி.என்.பி-க்கும் பொருந்தும் என்ற உமையாள்புரம் சிவராமன், பக்கவாத்தியங்களை ஊக்கப்படுத்துவதில் ஜி.என்.பி-க்கு நிகர் ஜி.என்.பி-தான் என்றார். இளம் பாடகரான சஞ்சய் சுப்ரமணியம், ஜி.என்.பி-யின் இசை எப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவும், புதியதை நோக்கி பயனிக்கவும் உதவுகிறது என்பதை உணர்ச்சி பொங்கப் பேசியும் பாடியும் காண்பித்தார்.

“He had his faults but they fall into insignificance before his achievements. He himself knew to seperate the sand from gold. We must also do so”, என்று முடிவுரையுடன் கருத்தரங்கம் இனிதே முடிந்தது. கருத்தரங்கில், நான் கேட்டு மனதில் பதித்துக் கொண்டவற்றை விட தவறவிட்டவை அதிகம். நான் மனதில் ஏற்றிக் கொண்டவற்றுள் சொன்னதை விட சொல்லாமல் விட்டவை அதிகம். அப்படியென்றால் எப்பேர்ப்பட்ட தகவல் சுரங்கமாய் அந்தக் கருத்தரங்கம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்களேன்.

வயிற்றெரிச்சலாய் இருக்கிறதா?

“இந்தப் படுபாவி, பின்னோக்கி கூட்டிப் போனதுதான் போனான், இன்னும் இரண்டு நாள் பின்னாடி சென்றிருக்கக் கூடாது. நானும் கருத்தரங்கை நேரில் கண்டு களித்திருப்பேனே. ஜாங்கிரி நன்றாக இருந்தது என்று எழுதியதைப் படித்தால் ஜாங்கிரியின் சுவை தெரிந்துவிடுமா என்ன? நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்தானே மிஞ்சும்”, என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.

காரணமாகத்தான் உங்களைக் கூட்டிச் செல்லவில்லை. 2009-ல் அமர்ந்து கொண்டே, நினைத்த மாத்திரத்தில் அந்தக் கருத்தரங்கைக் கண்டு களிக்கும் வசதி இருக்கும் போது, பின்னோக்கிப் போவானேன்?

1992-ல் நிகழ்ந்த கருத்தரங்கின் விடியோ பல வருடங்களாய் ஒரு சிலரிடம் மட்டுமே இருந்து வந்தது. ஜி.என்.பி-யின் நூற்றாண்டை உலகமே கொண்டாடும் இவ்வேளையில், ஸ்ருதி பத்திரிகையே அந்தக் கருத்தரங்கின் பதிவை, “The Music of GNB”, என்ற பெயரில் டிவிடி-களாக வெளியிட்டுள்ளது. அதை வாங்கினால் (விலை ரூ. 2000), வேண்டிய போதெல்லாம் பார்த்து மகிழலாமே. 

டிவிடி வாங்க விழைவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தி ஸ்ருதி ·பௌண்டேஷன் 9, கதீட்ரல் சாலை, சென்னை – 600 086 தொ: 044 28128070 மி: sruti.magazine@gmail.com

Read Full Post »