Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘TNS Krishna’

வழக்கமான நவம்பர் பரிவாதினி இசை நிகழ்ச்சிகளோடு இந்த வருடம் நவராத்ரியிலும் மூன்று நாட்களுக்கு இசை விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விவரங்கள் இங்கே

Parivadini Navaratri Series (1)

ரசிகர்கள் ஆதரவினால்தான் இந்த நிகழ்ச்சிகள் நடத்த முடிகிறது. இதற்கு பங்களிக்க நினைப்போர் கீழுள்ள வங்கி விவரங்களைக் கண்டுகொள்ளலாம். பரிவாதினிக்கு அளிக்கும் நன்கொடை செக்‌ஷன் 80G-யின் கீழ் வருமான வரிச்சலுகைக்கு தகுதியுறும்.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »

கர்நாடக சங்கீதத்தில் இவர்கள் கச்சேரி எங்கு நடந்தாலும் நிச்சயம் சென்று கேட்பேன் என்று சொல்லும் வகையில், மூன்று பேர் என் பட்டியலில் உண்டு. ஒருவர் அபிஷேக் ரகுராம், மற்றவர் அம்ருதா வெங்கடேஷ், மூன்றாமவர் மதுரை டி.என்.எஸ்.கிருஷ்ணா.

பொதுவாக, ஒரு பாடகரைப் போலவே இன்னொருவர் பாடினால், originality இல்லை என்று குறை கூறுவது வழக்கம்.

அவர் பாடுவதை கண்ணை மூடிக் கேட்டால் இள வயது சேஷகோபாலன் பாடுவது போலவே இருக்கிறது. இருந்தாலும், கிருஷ்ணாவை வழக்கம் போல குறை கூற முடியாது. ஏனெனில், ஒரு கிரிக்கெட் வீரரை இவரது ஆட்டம் டெண்டுல்கரைப் போலவே உள்ளது என்று சொன்னால் அது குறையாக இருக்குமா? ஒரு டென்னிஸ் வீரரின் பேக்-ஹேண்ட் ரோஜர் ஃபெடரரைப் போலவே உள்ளது என்று சொன்னால் அது குறையாகுமா? அது போலத்தால் கிருஷ்ணா பாடுவது சேஷகோபாலன் பாடுவது போலவே உள்ளது என்று சொல்வதும் குறையாகாது. இன்னும் சொல்லப் போனால், சேஷகோபாலனுக்குப் பின்னும் அவர் பாணி சங்கீதத்தை அதே வீச்சோடு (இதுதான் முக்கியம்) கேட்க முடியும் என்பதே இசை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்திதான்.

இந்த வருடம் பல இளைஞர்களுக்கு அகாடமி ப்ரைம் ஸ்லாட் அளித்தபோது, இவரையும் அந்தப் பட்டியலில் சேர்க்காததில் வருத்தமே. அந்த வருத்தம், நேற்று காலை இவர் கிருஷ்ண கான சபையில் பாடிய போது அதிகரித்தது.

காலை வேளை கச்சேரிகளை, போன வருடம் போல டிக்கெட் கச்சேரியாக வைக்காமல், மினி ஹாலில் ஃப்ரீ கச்சேரியாக இந்த வருடம் வைத்திருப்பது நல்ல விஷயம். அரங்கம் சின்னதென்பதால் ஈயடித்தாற் போல் காட்சியளிக்கவில்லை. டிக்கெட் இல்லை என்பதால், ஓரளவு கூட்டமும் இருந்தது.

நேற்று உடன் வாசித்தவர்கள் டில்லி சுந்தர்ராஜன் (வயலின்), நெய்வேலி நாராயணன் (மிருதங்கம்), பேப்பரில் கடம் வாசிப்பதாக செய்தி வரவில்லை என்ற போதும் நேற்று கடம் வித்வானும் கச்சேரியில் வாசித்தார். அவர் பெயரை கேட்க மறந்துவிட்டது.

கச்சேரியை நவராகமாலிகை வர்ணத்தில் தொடங்கினார். சிட்டை ஸ்வரங்களுக்குப் பின், ஒன்பது ராகங்களிலும் கல்பனை ஸ்வரங்கள் பாடியது நல்ல விறுவிறுப்பான தொடக்கத்தை அளித்தது. ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்துக்குத் தாவும் அநாயாசம் பெரிதும் கவர்ந்தது.

’மேரு ஸமான’ பாடலில் அடுக்கடுக்காய் நிறைய சங்கதிகள் கிருஷ்ணா போட, அதை பெரும்பாலும் சரியாக ஊகித்து வாசித்தார் நெய்வேலி நாராயணன். பாடலின் பல்லவியில் பாடிய கல்பனை ஸ்வரங்களில் சௌக்யமும் இருந்தது விவகாரமும் இருந்தது. ஸ்வரத்தை முடிக்கும் போது வைத்த கோர்வை – fitting climax.

நேற்று கிருஷ்ணா பாடிய ஹம்ஸநாதம் அதிகம் கேட்கக் கிடைக்காதது. ஹம்ஸநாதத்தின் உண்மையான வடிவில் தைவதம் உண்டு. காலப்போக்கில் அந்த தைவதம் தொலைந்து விட்டது. இது எஸ்.ஆர்.ஜானகிராமன் போன்ற ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டது. தஞ்சாவூர் கல்யாணராமன் போன்றோர் இந்த தைவத்ததுடனேயே இந்த ராகத்தைப் பாடியுள்ளனர் என்ற போதும் கச்சேரியில் இதைக் கேட்பது அபூர்வம். நேற்று கிருஷ்ணா சிறு கோட்டோவியமாய் ராகத்தை தெளிவாக சில நிமிடங்களுள் ஆலாபனை செய்து, முத்தையா பாகவதரின் ‘கிருபாநிதே’ பாடினார். ஆலாபனையிலும், கிருதியிலும், சிட்டை ஸ்வரங்களிலும் கிருஷ்ணா அந்த தைவத்தை மிக நேர்த்தியாய் கையாண்டார்.

நேற்றைய பிரதான ராகம் மோகனம். கிருஷ்ணாவின் குரல் மந்திர பஞ்சமத்தில் இருந்து, தார பஞ்சமம் வரை சுலபமாக சஞ்சரிக்கிறது. டி.என்.எஸ் பாணி ஆலாபனையில், ராகத்தின் மையத்தை ஓரிடத்தில் நிறுத்தி, அந்த மைத்தை வெவ்வேறு இடத்தில் இருந்து தொடுவது சிறப்பம்சமாகும். உதாரணத்துக்கு மோகனத்தின் தைவதத்தில் ஆலாபனையின் மையத்தை நிறுத்தி, அந்த தைவதத்தை ‘க-த’, ‘ரி-த’, ‘ஸ-த’ என்று மத்ய ஸ்தாயி ஸ்வரங்களில் இருந்தும் தார ஸ்தாயி ஸ்வரங்களில் இருந்தும் தொடும் போது, எண்ணற்ற பரிமாணங்கள் பிறந்து கொண்டே இருக்கும். Linear exposition-க்குள் non-linear exposition-ம் பொதிந்திருப்பது இந்தப் பாணிக்கே உரிய தனிச் சிறப்பு. இப்படி பாடுவதை கேட்டுப் புரிந்து கொள்வதற்கே நிறைய கவனம் தேவை என்னும் போது, அதைப் பாட எத்தகைய நிர்ணயமும் துல்லியமும் தேவை என்பதை உணர்ந்து கொள்ளலாம். இது போன்ற கற்பனைகளை அள்ளிக் கொடுக்கும் அறிவு பலருக்கு உண்டு எனினும், அதை குரலில் சாத்தியமாக்குவது சிலருக்குத்தான் முடிகிறது. அந்த வகையில் கிருஷ்ணா புண்ணியம் செய்தவர். அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் குரல் செல்கிறது.

அடிக்கடி கேட்கக் கிடைக்கும் பாடல்களைப் பாடாமல், தஞ்சாவூர் ராமஸ்வாமி பிள்ளையின் ‘ஜெகதீஸ்வரி’ பாடினார். மோகனத்தின் தைவதத்தைக் கொஞ்சிய படியே ஒலிக்கும் சிட்டை ஸ்வரத்தையும், சரணம் முடிந்ததும் அந்த சிட்டை ஸ்வரங்களுக்கு உரிய சாஹித்யத்தையும் கிருஷ்ணா வெகு அற்புதமாகப் பாடினார். வேறெந்த மோகன கிருதிக்கும் குறைச்சல் இல்லை என்னும் படியாக மிளிரும் இந்தத் தமிழ்ப் பாடலை இன்னும் நிறைய பேர் பாடலாம்.

‘கதி என்று நம்பினோரை காப்பதே உன் வைராக்யம்’ என்ற வரியில் விஸ்தாரமாய் இரண்டு காலங்களில் நிரவல் பாடிய பின் கல்பனை ஸ்வரங்கள் பாடினார். அவற்றில் சில ஆவர்த்தங்கள் முழி பிதுங்கும் கணக்குகளும் அடக்கம்.

பாடல்களிலும் சரி, தனியிலும் சரி நெய்வேலி நாராயணனின் மிருதங்கம் சுநாதமாய் ஒலித்தது.

தனி முடியும் போது கச்சேரி முடிய 30 நிமிடங்களே எஞ்சி இருந்தன.

அப்போது ஹேமவதி ராகத்தை எடுத்து பத்து நிமிடங்கள் விஸ்தாரமாக ஆலாபனை செய்தார், நேரம் இருந்தால் இன்னும் ஒரு மணி நேரத்துக்குக் கூட ஆலாபனை செய்வார் என்றே தோன்றியது. நேரம் இல்லாதததால் வயலினில் பேருக்கு வாசித்து முடித்தார் டில்லி சுந்தரராஜன்.

சில நிமிட தானத்துக்குப்பின், மிஸ்ர திரிபுடையில் பல்லவி பாடினார்.

என்னுடைய யூகம் யாதெனில், இந்தப் பல்லவியை இரண்டு களையில் தயாரித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

நேரம் இல்லாததால் ஒரு களைக்குத் தாவினார்.

விரைவாகப் பாட வேண்டி இருந்ததால் சாஹித்யம் செம உதை வாங்கியது. சாஹித்யம் தமிழில் என்பதால், அது சிதைகிறது என்பதை ரசிகர்களால் உணர முடிந்தது.

“இட்ட மருந்தென்னவோ அறியேன் – கண்ணே பெண்ணே நீ” என்ற சாஹித்யத்தில் கண்ணே, பெண்ணே தவிர ஒன்றுமே விளங்கவில்லை. கீழ் காலத்தில் பல்லவியை பாடிய போதுதான் கொஞ்சம் புரிந்தது. கடிகாரத்தைப் பார்த்த படியே பல்லவியையும், ஸ்வரங்களையும் பாடி முடித்தார்.

இவ்வளவு நன்றாகப் பாடிவிட்டு, கிருஷ்ணா சாஹித்யத்தை சிதைப்பவர் என்ற அவப் பெயரை வாங்கியிருந்திருக்க வேண்டாம். அதற்கு முன் பாடிய பாடல்கள் அனைத்திலும் சாஹித்யம் நன்றாகத்தான் புரிந்தது. இரண்டு மணி நேரத்துக்குள் விஸ்தாரமாக ஒரு ராகத்தை நிரவல் ஸ்வரங்களுடனும் பாடிவிட்டு, ராகம் தானம் பல்லவியும் பாடுவது முடியாத காரியம். அதை தவிர்த்திருந்தால், இந்த அவசர ப்சமையலை தவிர்த்திருக்கலாம்.

அரங்கில் சிலருக்கு இதனால் அதிருப்தி என்ற போதும் எனக்கு அது குறையாகத் தோன்றவில்லை.

பல்லவிக்குப் பின், ‘வந்து கேட்பார் இல்லையோ’ என்று பாடியபோது என் மனத்திலும் அந்த வரிகளே தோன்றின. இந்த சங்கீதத்தைக் கேட்க இவ்வளவு பேர்தானா? கூட்டம் கூட்டமாக ‘வந்து கேட்பாரில்லையே’ என்ற வருத்தமும் மேலிட்டது.

அடுத்த வருடமாவது இந்த இளைஞருக்கு ப்ரைம் ஸ்லாட் கிடைக்க வேண்டும். ப்ரைம் ஸ்லாட் கிருஷ்ணாவுக்கு பெயரையும் புகழையும் கொடுக்கும் என்பதை விட, நினைத்ததைப் பாடும் அளவிற்கு நிச்சயம் அவகாசத்தை அளிக்கும்.

ஓர் அற்புதமான கச்சேரியுடன் என் டிசம்பர் நிறைவுக்கு வந்தது.

இந்த சீஸன் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து, ஊக்கம் அளித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Read Full Post »

பால ‘சேஷு’

21 Dec 2009 @ Krishna Gana Sabha, T.N.S Krishna, M.Chandrasekaran, Umayalpuram Sivaraman, E.M.Subramaniam

எனக்கு சேஷகோபாலன் பாட்டென்றால் உயிர். 2004 வரை சென்னையிலும், பெங்களூரிலும் பல இடங்களில் அவர் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். தஞ்சாவூரில் படித்த போது, திருச்சிக்கு, இவர் கச்சேரி கேட்பதற்காகவே சென்றிருக்கிறேன்.

சில வருடங்களாய் இவரைக் கேட்க வேண்டுமென்றால், ஒலிப்பதிவுகளை நாடுவேன். நேரில் கேட்கும் அனுபவத்துக்கு ஏங்கும் போது டி.என்.எஸ் கிருஷ்ணாவின் கச்சேரிகளுக்குச் செல்கிறேன்.

பல சமயங்களில் பாத்திரம் பொன்னால் ஆனதாக இருக்கும், பண்டம் பழையதாய் இருக்கும். அல்லது, பண்டம் பாயசமாக இருக்கும், பாத்திரம் ஓட்டை விழுந்த தகரமாக இருக்கும். எப்போதாவது ஒரு முறைதான் பொற் பாத்திரத்தில் நற் பாண்டம் அமையும். கிருஷ்ணாவின் விஷயத்தில் அது நடந்துள்ளது.

கிருஷ்ண கான சபையில்  காலை வேளை கச்சேரி. எம்.சந்திரசேகரன், உமையாள்புரம் சிவராமன், ஈ.எம்.சுப்ரமணியம் என்று பக்க வாத்தியங்கள் பட்டியலே கச்சேரிக்கு என்னை இழுத்தது. அண்ணான் சாலையிலிருந்து, பனகல் பார்க் வரை, காலை ஒன்பது மணிக்கு மேல், ஒரு முறை கூட நிற்காமல் பாண்டி பஜாரைக் அடைந்த போதே, இந்த நாள் இனிய நாள் என்று உள்ளுக்குள் பட்சி கூவியது.

விடுமுறை நாட்கள் நீக்கி, மற்ற நாட்களில் காலை வேளை கச்சேரிகளை அனைத்து சபையினரும் இலவச கச்சேரிகளாக்கி விடலாம். ரிடையர் ஆன மாமிகளும், மாமாகளும் காசு கொடுத்து கச்சேரி கேட்பார்கள் என்று சபாகள் நினைப்பதுதான் ஆச்சர்ய்மாக இருக்கிறது. கிருஷ்ண கான சபை மாதிரி பெரிய அரங்குகளில் 50-60 இருந்தாலே கூட்டம் குறைச்சலாய்த்தான் தோன்றும். இன்று 20 பேர் கூட தேறி இருக்கமாட்டார்கள். சில வருடங்கள் முன், நாரத கான சபையில், இதே போன்ற நிலையில் பாடிய கிருஷ்ணா, “வந்து கேட்பார் இல்லையோ” என்று ஊர்த்துக்காடு பாடலை பாடிய போது  it became an unintentional situation song.

கூட்டம் இருக்கோ இல்லையோ, மேடை ஏறிவிட்டால் 100% உழைத்துப் பாடுகிறார் கிருஷ்ணா. இன்று பக்கவாத்தியங்களின் உற்சாகமும் சேர்ந்து கொண்டிருக்கும். தர்பார் ராகத்தை இழை ஓட விட்டு, வர்ணத்தை ஆரம்பித்த போது, சாகேதராமனுக்கு செய்தது போல இவருக்கும் குரல் மக்கர் செய்யுமோ என்று பயந்தேன். வர்ணத்தைப் பாடி, சில கல்பனை ஸ்வரங்களையும் அள்ளி வீசிய போது குரல் ஓரளவு பதத்தை அடைந்தது. பாதி கச்சேரி வரை தார ஸ்தாயியில் பாடிய போது ஒரு வித strain தென்பட்டது. பிரதான ராகம் பாடும் போது, குரல் நல்ல பதத்தை அடைந்திருந்தது.

ஸ்ரீ ரகுகுல ஹம்சத்வனியில் பாடி, துரித கதியில் நிரவலும் ஸ்வரமும் பாடினார். ‘பகரி நிபக கநிரி ரிநிப’ என்று மும்மூன்று ஸ்வரங்களாய் பற்பல கோவைகள் அமைத்துப் பாடிய ஸ்வரங்கள் அற்புதமாய் இருந்தன.

ஹம்சத்வனியைத் தொடர்ந்து, பூர்வி கல்யாணியை விஸ்தாரமாக ஆலாபனை செய்தார். அவசர அவசரமாய் பஞ்சமத்துக்குச் சென்று கார்வை கொடுக்காமல், மந்த்ர ஸ்தாயியிலே விஸ்தாரமாகப் பாடியது சிறப்பு. ஸ்வரம் ஸ்வரமாய் ஆலாபனையை நகர்த்தி வளர்க்கும் போதே, ஆலாபனையின் மையத்திலிருந்து தள்ளி இருக்கும் ஸ்வரங்களுக்கும் அவ்வப்போது தாவி, கேட்பவரை வியப்பில் மாழ்த்துவது TNS பாணி.

இதனை நால், macroscopically linear and microscopically non-linear என்பேன். கிருஷ்ணாவின் ஆலாபனையும் இவ்வகையில்தான் அமைந்திருந்தது. ரப்பராய் இழுத்து,நிறுத்திப் பாடிய சஞ்சாரங்களோடு, துரித கால சஞ்சாரங்களைக் கோத்து அமைந்த ஆலாபனை பூர்வி கல்யாணையை உருக்கமாகவும், அதே சமயத்தில் அழுது வடியாமல் இருக்கும் படியும் மிளிரச் செய்தது. காந்தாரத்தில் மையம் கொண்டு, சுழற்றி சுழற்றி பல அலைகளை எழுப்பி, இறுதியில் அடுத்த ஸ்த்தைத் தொட்ட போது என்னை அறியாமல் கைகளைத் தட்டினேன். இப்போது தொட்டுவிடுவார் என்று எதிர்பார்த்திருக்கும் போது தொடாமல், தவிப்பை அதிகமாக்கி, இறுதியில் தொடும் போது, ஒரு வித relief ஏற்படுகிறது. அதுவே என்னை கைதட்ட வைத்தது என்று நினைக்கிறேன்.

கச்சேரி முழுவதும் சந்திரசேகரன், அழகாய் அளவாய் வாசித்தார். கிருஷ்ணாவின் சாகசங்களில் கலந்து கொள்ளாவிடுனும், தன் வாசிப்பால் அந்த சாகசங்களுக்கு சங்கடம் வராமல் பார்த்துக் கொண்டார்.

ஆலாபனையைத் தொடர்ந்து நினுவினாகமரி தொடங்கிய போது, காலப்ரமாணத்தை ஒரு இழை குறைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. ஸ்வரத்தில் கொஞ்சம் விவகாரங்கள் ரொம்பவும் தலை  காட்டாமலும் அரவும் நீக்காமலும் பாடியது நன்றாக இருந்தது.

அடுத்ததாக, நல்ல சவுக்கமன காலப்ரமாணத்தில் நீலாம்பரியை இழைத்து இழைத்து ‘அம்ப நீலாயதாக்ஷி’ பாடினார். அவ்வப்போது விழுந்த ஜாரு பிரயோகங்கள் சொக்க வைத்தன. பிரதான ராகத்துக்கு முன் விறுவிறுப்பான பாடல் ஒன்றைப் பாடியிருக்கலாம். கிருஷ்ணா தோடியை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டார்.  டி.என்.எஸ் தன் முப்பதாவது வயதில் எப்படிப் பாடியிருப்பார் என்று இன்று கிருஷ்ணா பாடிய தோடியைக் கேட்டிருந்தால் உணரக் கூடும். இதை நான் சொல்லவில்லை, ஆலாபனை முடிந்ததும் உமையாள்புரம் சிவராமன் கூறினார். ஆலாபனையில் அசைந்தாடும் கமகங்களையும், அசையாத சுத்த

ஸ்வரங்களையும் அழகாக கோத்து அளித்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக தோடியின் தைவதத்தைச் சுற்றிச் சுற்றிப் பாடியது என்னை வெகுவாகக் கவர்ந்தது. தோடியின் போது கிருஷ்ணாவின் குரல் அற்புதமான நிலையில் இருந்ததால், ரவை சங்கதிகள் எல்லாம் அநாயாசமாய் விழுந்தன. கிருஹ பேதம் செய்து, மோஹன கல்யாணியை கோடி காட்டிவிட்டு மீண்டும் தோடிக்கு வந்தார். ஷட்ஜ பஞ்சம வர்ஜமாய் பிருகா மழை பொழிந்த போது, நிஜமாகவே மனதாரக் கைதட்டினேன்.

பட்டம்மாள் ஸ்பெஷல் ‘தாசுகோவ’ பாடி, ‘சௌமித்ரி தியாகராஜு’-வில் நிரவலும் ஸ்வரங்களும் பாடினார். மிஸ்ர ஜம்பை தாள அமைப்பைக்குள் பல்வேறு சிக்கலான அமைப்புகளை நிர்வகித்த போதும் தோடியின் ராக பாவம் கெடாமல் பாடியது அற்புதம். கிருஷ்னாவின் அப்பா ஜூனியராய் இசைத் துறையில் இருந்த காலத்துக்கு பல காலம் முன்னரே பிரபல வித்வானாகிவிட்ட சிவராமன், இன்றும் உற்சாகமாய் வாசித்ததைக் காண நன்றாக இருந்தது. இன்று அவருக்கே அவரது மிருதங்கத்தின் மேல் திருப்தி இல்லை. பாதி கச்சேரிக்கு மேல் இரண்டாவது மிருதங்தங்கதில் வாசித்தார். தனியில், சிவராமன் வாசித்த மோராவை சுப்ரமணியன் வாசிக்க முடியாமல் தவித்த போது, “இன்னும் கொஞ்சம்தான் வந்துடும். மறுபடியும் வாசி”, என்று சொல்லி, தானும் பாதி வழியில் உதவி கடம் வித்வானுக்குப் பாடம் நடத்தினார். ராகமாலிகை விருத்தமும், ஹரிகேசநல்லூரின் ஹம்சானந்தி தில்லானாவும், சிந்து பைரவியில், ஐயப்பன் மேல் ஒரு தமிழ்ப் பாடலும் பாடி, கச்சேரியை நிறைவு செய்தார் கிருஷ்ணா.

9.30 மணிக்கு ஆரம்பித்த கச்சேரி, 11.30-க்கே முடிந்துவிட்டது. சபையின் அடுத்த கச்சேரி 2.00 மணிக்குத்தான் என்ற போதும், கச்சேரியை இவ்வளவு சீக்கிரம் முடித்திருக்க வேண்டாம். இன்னும் அரை மணி நிச்சயம் பாடியிருக்கலாம். குரல் நன்றாக பதம் அடைந்த சற்றைக்கெல்லாம் கச்சேரி முடிந்துவிட்டதுதான் கொஞ்சம் வருத்தம். பாடுவதற்கு சிரமமான சேஷகோபாலன் பாணி சங்கீதம் அவரோடு முடிந்துவிடாது. நிச்சயம் வாழையடி வாழையாய்த் தொடரும் என்பதை இன்றைய கச்சேர்யினைக் கேட்ட அனைவரும் ஒப்புக் கொள்வர்.

Verdict: Great concert. Brilliant thodi. Could have sung for at least another 30 mins.

Read Full Post »