Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘TRS’

கர்நாடக இசையின் அங்கங்களில் ஸ்தூலமானதைப் பற்றி நிறைய பேச முடியும். அவற்றைப் பற்றி பேசும் போது சாற்றை நீக்கி சக்கையைப் பேசினது போலத் தோன்றும். ஆனால் சூட்சுமமாய் பல அங்கங்கள் உண்டு. அவற்றை திரும்பத் திரும்ப கேட்பதன்/பாடுவதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். உணர்ந்து கொண்டால்கூட அவற்றைப் பற்றி பேசுவது கடினம். நல்ல குருவால் கோடி காட்டமுடியும். கேட்பவருக்குக் கொடுப்பினை இருந்தால் அந்த வழிகாட்டல் அர்த்தமுள்ள பயணமாய் மாறும்.

ஒருமுறை பல்லவிகளைப் பற்றி பேசும் போது, வித்வான் டி.ஆர்.எஸ் சபையினரை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார்.

“கண்டிகி சுந்தர” என்கிற பிரபல வரியை ஒரு பல்லவியாக எப்படி மாற்றுவது?

இதுதான் கேள்வி.

உடன் இருந்த மாணவி பாடிக் காண்பித்தார். பூர்வாங்கம் – அருதிக் கார்வை – உத்தராங்கம் என்று மூன்று பகுதிகள் கொண்ட பல்லவியாய் அந்த வரி மலர்ந்தது.

உடனே டி.ஆர்.எஸ், “பாடிக் காட்டிவிட்டீர்கள். சரிதான். இப்போது சொல்லுங்கள் கீர்த்தனையில் இருந்த வரிக்கும் இப்போது பாடிய பல்லவிக்கும் என்ன வித்தியாசம்?”

பாடிய மாணவி சொல்ல முயன்றார். வார்த்தைகள் வெளிவராமல் திக்கித் தவித்தார்.

டி.ஆர்.எஸ் அந்த வரியை இனொருமுறை பாடினார்.

“நன்றாக கவனியுங்கள். சுந்தர என்று அருதியை நெருங்கும் இடத்தை கவனியுங்கள். ஒருவித ஃப்ரிக்‌ஷனை உணரமுடிகிறதா? இந்த ஃப்ரிக்‌ஷன் கர்நாடக சங்கீதத்தின் சூட்சமங்களில் முக்கியமான ஒன்று”, என்றார்.

பின்னர் ஒருமுறை அவரை அண்ணா நகர் வீட்டில் சந்திக்கும் போது, “சார், நீங்கள் சொன்ன ஃப்ரிக்ஷன் பல்லவிக்கு மட்டுமில்லை என்று தோன்றுகிறது. செம்மங்குடி பாடும் ‘இந்த பராகா’-வில் ரகரத்தைக் கொஞ்சம் வல்லினமாக்கி ஒலிக்க வைப்பது கூட இந்த ஃப்ரிக்‌ஷன்தானோ என்று தோன்றுகிறது”, என்றேன்.

“சந்தேகமென்ன? ஒரு சீரான போக்கில் சிறு சலனம் ஒன்றை எழுப்பினால்தான் ரக்தி வரும். ராகத்தில் பிரயோகங்கள் எல்லாம் சக்கரம் மாதிரி. அவை சுழன்று கொண்டெ இருக்கும். இந்த ஃப்ரி்க்‌ஷனை வைத்துதான் அந்தச் சக்கரங்களை ஒன்றோடு ஒன்று உராயச் செய்யமுடியும். அப்போது வெளிப்படும் தீப்பொறிதான் ராகப் பிரயோகங்களுக்கு உள்ளே பொதிந்திருக்கும் விசையை கேட்பவர்களும் உணர்ந்து கொள்ள வைக்கும். நிரவலில் ஒதுக்கல்கள், கோர்வைகளில் மௌனமாய் ஒலிக்கும் கார்வைகள் எல்லாம் இந்த ஃப்ரி்க்ஷன்தான்”, என்றார்.”

இந்த ஃப்ரி்க்ஷன் தேவைப்படாதவர்கள் இரண்டே பேர்தன் நம் சங்கீதத்தில்”, என்று அவரே தொடர்ந்தார்.“ஒன்று ராஜரத்தினம் பிள்ளை. அவர் வாசிப்பு காட்டாற்று வெள்ளம். கண்ணை மூடிக் கொண்டு அந்த சுழலுக்குள் சென்றுவிட வேண்டியதுதான். அரை மணியோ, ஆறு மணியோ – அதன்போக்கில் சுழன்றுவிட்டு வெளியில் தள்ளும் போது கண்ணைத் திறந்தால் போதும். இன்னொருவர் மதுரை மணி. பனிச்சறுக்கு செல்லும் போது ஃப்ரிக்ஷன் வேண்டுமென்றா கேட்போம்? ஒலிம்பிக்கில் ஐஸ் ஸ்கேட்டிங் பார்க்கும் போதெல்லாம் மதுரை மணி ஐயரைத்தான் நினைத்துக் கொள்வேன்”. என்றார்.

இன்று டி.ஆர்.எஸ் இருந்திருந்தால், காருகுறிச்சியாரின் சங்கீதத்தில் நீங்கள் சொன்ன ஃப்ரிக்ஷனைக் கண்டுகொண்டேன் என்று சொல்லியிருப்பேன்.

அவரிடம் ஒரு கருத்தைச் சொன்னால், ‘உனக்கென்னடா தெரியும்? உளராதே!’, என்று ஒருநாளும் சொன்னதில்லை. நம் கருத்தை அமோதிப்பது போல் தொடங்கி இன்னும் துலக்கிக் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.

காருகுறிச்சியாரின் ராக ஆலாபனைகளில் ஆங்காங்கே பொறி பறக்க அவரது நையாண்டி மேளப் பின்புலத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என்று தோன்றுகிறது.

கர்நாடக இசை கச்சேரி வடிவத்தின் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளைப் பார்த்தால் பல ராகங்களிலும், பாடல் வடிவங்களிலும் உள்ள ‘கர்நாடக’ தன்மை அதிகரித்து வருவதை உணர முடியும். தேசீய ராகத்தையோ, காவிடிச் சிந்தையோ எடுத்துக் கொண்டு நூறு வருடத்துக்கு முன்னால் இருந்த வடிவத்தோடு இன்றைய வடிவத்தை நோக்கினால் இதை உணர்ந்து கொள்ள முடியும்.

செவ்வியல் இசையாக இருந்தாலும் கிராமிய இசை என்றாலும் இருக்கின்ற ஸ்வரஸ்தானங்கள் ஒன்றுதான். அந்த ஸ்வரங்களின் சஞ்சாரங்களில் உள்ள அசைவுகளும் வளைவுகளுமே இவ்விரு இசை வடிவத்துக்கான வேறுபாட்டைக் காட்டுகின்றன. காருகுறிச்சியாரின் வாசிப்பில் எதிர்பாரா சமயங்களில் வெளிப்படும் கர்நாடக இசையில் அதிகம் காணக்கிடைக்காத கிராமிய வளைவுகள் ஆங்காங்கே மின்னி கேட்பவரின் மனக்கண் முன் டி.ஆர்.எஸ் சொன்ன தீப்பொறிகளைக் காட்டுகின்றன.

இந்த அணுகுமுறையை உசைனி, யதுகுலகாம்போதி போன்ற கிராமிய பின்புலம் கொண்ட ராகங்களில் மட்டுமல்ல – உங்களுக்கு பேறிருப்பின் வாசஸ்பதியிலும், நடபைரவியிலும் கூட கண்டுகொள்ளலாம்.

Read Full Post »

இன்று வித்வான் டி.ஆர்.எஸ்-ன் பிறந்த நாள்.அவர் அண்ணா நகர் இல்லத்தில் பல முறை சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு வாய்த்ததுண்டு.

சங்கீதச் சூழலில் கேடுகளைச் சுட்ட கிஞ்சித்தும் தயங்கியவரல்லரவர். சம்பாஷணை அது போன்ற விஷயங்களில் இருக்கும் போது, பேசிக் கொண்டே இருப்பவர் நடுவில் ஒரு கணம் நிறுத்தித் தொடர்வார். அந்த ஒரு வினாடியில் மலையைப் பிளக்கும் கூர்முனையுடன் ஒரு புதிய வார்த்தைப் பிரயோகம் அவர் மனத்தில் உதித்திருக்கும்.

அவருடைய ஸ்வரப் பொருத்தங்கள் அதிசயமானவை. அவை உலகறியும். அதற்கிணையானவை அவருடைய அவருடைய ‘திட்டுப் பொருத்தங்கள்’. எந்த ஒரு ரசக்குறைவான சொல்லையும் உபயோகிக்காமல் இப்படித் திட்டமுடியுமா என்று நான் பலமுறை வியந்ததுண்டு.

ஒருமுறை ஒரு வித்வானின் கீழ்தரமான செயலைப் பற்றிச் சொல்லும் போது, கண நேரம் நிறுத்திவிட்டு் “தீட்சிதர் ஹீனமானவாஸ்ரயம்-னு சொல்லி இருக்காரே. அது இவனை மாதிரி ஒருத்தனைப் பார்த்துதான் அவருக்குத் தோணியிருக்கும். ”, என்றார். “ஆஹா!” என்றால் அசந்தர்ப்பமாக இருக்குமோ என்று அடக்கிக்கொண்டேன்.

இந்த அம்சத்தை அவர் பாட்டில் கூட நான் காண்பதுண்டு. அது என் கற்பனையாகவும் இருக்கலாம்.

உதாரணமாக அவர் அபிராமி அந்தாதியிலிருந்து பாடியிருக்கும் விருத்தத்தை எடுத்துக் கொள்வோம்.

”விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்னவழிக்கே வழிபட நெஞ்சுண்டு எனக்கு”

என்பது வரை உருக்கமாய் கொண்டு கூட்டிப் பாடும் காபி படிப்படியாய் வளர்ந்து தார ஸ்தாயியில் ரிஷபத்தை அடையும் போது அடுத்த வரி தொடங்கும்.

அவ் வழிகிடக்கப்பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே

வெம்பாவங்களை பெரும்பாவங்கள் என்றாக்கி பஞ்சமத்தை தொடும் போது முன் சொன்ன அந்த ஒரு கண மௌனம். அதன்பின் வரும் சுழல்கள் எல்லாம் வேறொரு காபி.

அவரோகணத்தில் சுழன்று கீழ் பாயும் ஒவ்வொரு பிரயோகமும் அடித்துக் குழிக்குள் தள்ளும் வெம்பாவ வகை! அத்தனை சுழல்களும் கடந்து காந்தாரத்தில் நின்றபடி ”என்ன கூட்டினியே” என்று கேட்கும் போது மனம் பளிங்காய் துலங்கினது போல் மாயச் சுழல்.

ஏன் மாயச் சுழல்?

புண்யாத்மனாய் இருந்தால் அந்தச் சூழல் கச்சேரி கேட்டு முடித்த பின்னும் மனத்தில் நிலைத்திருக்கும். எனக்குள் நிலைத்திருப்பதென்னவோ அந்தக் குழிக்குள் பாயும் கூர் ஈட்டிப் பிரயோகங்கள்தானே.

என் அமைப்பு அப்படி. ஆனால் வருத்தமில்லை. இன்னமட்டும் இந்த ஜென்மத்துக்கு வாய்த்ததே என்று மகிழ்ச்சிதான்

Read Full Post »

 

இன்று காலை ஃபேஸ்புக், அந்து வருடங்களுக்கு முன்னால் இதே நாளில் டி.ஆர்.எஸ் மறைந்த போது எழுதிய சிறு குறிப்பைக் காட்டியது.

I’ve never had a chance to say this to you in person on how much I admired your music despite meeting you so many times. Your concerts, lec dems and speeches were really useful for not just music students but for rasikas like me too. I cherish listening to each one of your speeches on GNB. They did help me a great deal when I wrote my book.

I couldn’t stop laughing when you read my book and asked me if I was interested in doing a PhD. Quite unfortunate that people remember you more for the PhD that you guided than for all the musical achievements you scaled over several decades.

To me you are ‘the’ master of kalpana swarams. I’m sure that even decades later your poruthams will continue to create waves among listeners. Your pallavis are deceptive. One day i will grow to appreciate enough of what you had done with them.

In the limited opportunities I got to interact one on one with you, you flooded me with anecdotes and insights – some controversial, some hilarious and some stunningly profound. Despite not agreeing with you on many things that you said, I knew each and every word you uttered were straight from your heart.

We will miss your presence when a young and upcoming talent takes stage. They will have to sing without your knowing nodding of the head and short and sweet speech at the end of the concert.

RIP Prof. TRS sir.

இதைப் படித்ததிலிருந்து அவர் அலை மனத்தில் அடித்தபடி இருக்கிறது.

அவ்வப்போது சில பதிவுகள் ஃபேஸ்புக்கில் எழுதினேன். அவற்றை இங்கு தொகுத்துக் கொள்கிறேன்

******

TR_Subramaniam-250

ஒரு பாடகர் என்கிட்ட “விவகாரம் வெச்சுப் பல்லவி பாடினா சௌக்யம் போயிடும்”-னார். நானும், “ரொம்ப சரி. நீங்க பாடினா போயிடும்.” னு சொன்னேன்..

TRS.

******

அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று பல பல்லவன் பேருந்துகளில் பார்த்ததுண்டு. வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இருந்தால் பார்க்கக் கிடைக்கும். இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்து நான் பார்த்தவர் டி.ஆர்.எஸ்.

சென்னையில் எங்கு பாடினாலும் மேடையைவிட்டு நீக்கச் செய்து,கச்சேரியே செய்யமுடியாதபடி செய்த இடத்தில் பிடிவாதமாய் தன் கடைசி மூச்சுவரை இளைஞர்களுக்கும், அதிகம் மேடை கிடைக்காதவர்களுக்கும் கச்சேரி செய்ய வழி செய்த மேதை அவர். நாமாய் சென்று வாயை வலியப் பிடுங்கினால் அன்றி அவர் ஆற்றலில் ஒருதுளியைக் கூடி வெளியில் காட்டாது, தான் என்னவோ நேற்றுதான் கற்றுக் கொள்ள ஆரம்பித்த மாணவன் என்ற பாவத்தையே காட்டியபடி கச்சேரியில் அமர்ந்திருந்த டி.ஆர்.எஸ்…..

அவரைப் போன்ற மேதைகளை எல்லாம் தகுந்தவகையில் ஆவணப்படுத்தாமல் விட்டதுதான் நம் பெருமை….

 

******

கல்யாணி வரதராஜன் குறித்து சமீபத்தில் எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் இருக்கும் அபர்ணா பார்வதியைத் தவிர இணையத்தில் கிடைக்கும் டி.ஆர்.எஸ் பாடிய மற்றுமோர் அற்புதம் இங்கே.

 

******

2013-ல் பரிவாதினி ஏற்பாடு செய்திருந்த விளக்கவுரைகளில் பாலக்காடு ஸ்ரீராம் லயத்தைப் பற்றி பேசினார். அப்போது டி.ஆர்.எஸ் 90-களில் டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டிற்காக சேர்ந்திசையாய் அமைத்திருந்த பாட்டைப் பாடிக் காண்பித்தார். அன்றிலிருந்து எப்போது ஸ்ரீராமைப் பார்த்தாலும் அந்தப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்பேன். இன்று அதை ஃபேஸ்புக்கில் இட்டிருக்கிறார்.

டி.ஆர்.எஸ்-தான் இப்படி அமைக்க முடியும். இன்றளவில் ஸ்ரீராம்தான் அதைப் பாட முடியும்.

******

செண்ட்ரல் காலேஜ் சென்னையில் தொடங்கப்பட்ட போது அதன் முதல்வராக முசிறி சுப்ரமண்ய ஐயர் இருந்தார். அதில் சேர்ந்த மாணவர்களுள் டி.ஆர்.எஸ்-ம் ஒருவர். வருடாந்திர பரிட்சைகளுக்கு சில நாட்களுக்கு முன் மாணவர்களை காரிடாரில் சந்தித்த முசிறி, “பரிட்சைக்கு எல்லாம் தயார்தானே”, என்று விசாரிக்க ஒரு மாணவன் (டி.ஆர்.எஸ்) மட்டும் இல்லை என்றிருக்கிறார்.

மேலும் விசாரித்த முசிறியிடம், “சிலபஸில் ஆறு பல்லவிகள் என்று இருக்கிறது. ஆனால் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதோ ஒரே பல்லவிதான்”, என்றிருக்கிறார் டி.ஆர்.எஸ்.

அதிர்ச்சியுற்ற முசிறி உடனே விசாரிக்க, ஆறு பல்லவிகள் சொல்லிவைக்கப்பட்டுள்ளதாய் அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

சுப்ரமணியத்தை தனியே அழைத்து விசாரித்த முசிறியிடம்,

“அது ஆறு பல்லவிகள் அல்ல. ஒரே பல்லவிதான். நீங்க வேணா பாருங்க

கா ன லோ ல கரு ணா- -ஆ ல வா ல

மா ம து ர மீனா ட்சி- -அம் பா தே வி

இந்த ரெண்டு பல்லவியும் பாருங்க. ஒரே தாளம். ஒரே அமைப்பு. அதே எடுப்பு. அதே அருதிக் கார்வை. வார்த்தையையும் ராகமும் மாத்திட்டா வேற பல்லவியாயிடுமா? ஆறு பல்லவியும் ஒண்ணுதான் ஸார். நான் பாடிக் காட்டவா?”

கேட்ட முசிறிக்கு கோபம் வரவில்லை, “போய்த் தொலைடா ராஸ்கல்!”, என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

டி.ஆர்.எஸ்-இன் பல்லவிகள் என்று யாராவது பி.எஹ்.டி செய்திருக்கிறார்களா தெரியவில்லை. நிச்சயம் செய்யலாம். வளமான தலைப்பு.

ஒரு நேர்காணலில், “பல்லவி-னா அடிச்சு உதைச்சு – கேட்க சுகமில்லாமதான் இருக்கும்-னு நினைக்கறாங்க. அப்படி ஒரு அவசியமும் இல்லை, உதாரணமா

“பாகாய் உருகு நெஞ்சே – பங்கஜ கண்ணனை நினைந்து” – என்று பீம்ப்ளாஸில் பாடிய பல்லவியை ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.

பாகாய் என்பதில் அந்தப் பாகு ஸ்வராக்ஷரமாய் கொதிநிலைக்கு வந்து “உருகு நெஞ்சேவில்” உருகி ஓடி நெஞ்சை உருக்கித் தள்ளும் அந்தப் பல்லவியை அவர் இரண்டு மூன்று முறை பாடியிருந்தால் அதிகம். ஆழ்மனதில் பதிந்துவிட்டது.

ஒரு ரேடியோ ஒலிபரப்பில்

“ர கு கு ல தில குடை வெலசின ரா ம ச ந்த்ரு டை – மாபாலி தேவுடு ஸ்ரீ”

என்றொரு பிலஹரி ராகப் பல்லவி.

ரகுகுல கீழ்காலத்தில்

திலகுடை – மத்யம காலத்தில்

வெலசின – துரித காலத்தில்.

பல்லவியாய் ஒருமுறை பாடிவிடலாம்?

இதில் த்ரிகாலம் செய்யமுடியுமா? நிரவ முடியுமா?

முடியும்.

முடிந்தது.

அதுதான் டி.ஆர்.எஸ்!

Read Full Post »