Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2009

gnb-retrospective-2cd1900-களில் வாழ்ந்த ஜாம்பவான்கள் பலரைப் பற்றி கேள்விப் பட முடிந்தாலும், அவர்களுடைய இசையைக் கேட்பதென்பது அரிதான விஷயம். ஜி.என்.பி-யின் விஷயத்தில், அவர் கொடுத்த ரிக்கார்டுகள் இருபதுக்கு மேல் கிடைக்கின்றன. அவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதல் வகை 1930-களின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டவை. தோடியில் ‘அம்ப நாது’, காம்போதியில் ‘சுப்ரமண்யாய நமஸ்தே’, சுத்த சாவேரியில் ‘தாரிநி தெலுஸு கொண்டி’, சாவேரியில் ‘பராசக்தி’, ஆனந்த பைரவியில் ‘ஓ ஜெகதம்பா’, போன்ற ரிக்கார்டுகள் இந்த கால கட்டத்தில் வெளி வந்தவை. அனைத்துப் பாடல்களும் அன்றைய நிலையில் பிரபலமான பாடல்கள். இந்த ரிக்கார்டுகளில் ஜி.என்.பி-யின் ஸ்ருதி கிட்டத்தட்ட நாலரைக் கட்டையில் இருக்கிறது. அதி துரிதமான சங்கதிகள், கேட்பவருக்கே மூச்சு முட்டும் வகையிலான பிருகாக்கள், என்று பல விஷயங்கள் இந்த ரிக்கார்டுகளில் தெரிந்தாலும், ஜி.என்.பி-யின் சங்கீதம் எப்படி சில வருடங்களுக்குள் வளர்ந்து உயர்ந்த நிலையை அடைந்தது என்பதை பறை சாற்றும் வகையில்தான் இந்த ரிக்கார்டுகள் இருக்கின்றன.

இரண்டாம் வகை ரிக்கார்டுகள் 1940-களில் வெளி வந்தவை. இந்தப் பாடல்களுள் பல பாடல்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது ஜி.என்.பி-தான் என்று கூறலாம். இந்த சமயத்தில், சுமார் இரண்டரை கட்டைக்கு இவரது ஸ்ருதி குறைந்திருந்தாலும், 1930-களில் பேசிய அதே பிருகாக்கள் இந்த காலாகட்டத்திலும் கேட்க முடிகிறது. முன்பு இருந்ததைவிட அதிக கனமும், பல அழகிய சங்கதிகளைல் நகாசு வேலை புரியும் சங்கீத அறிவும் இவருக்கு வாய்த்திருப்பதையும் இந்த ரிக்கார்டுகள் சுட்டுகின்றன. சண்முகப்ரியா, பூர்வி கல்யாணி, கல்யாணி, ஹிந்தோளம் போன்று பல பிரபலமான, விஸ்தாரமாகப் பாடக்கூடிய ராகங்களில், பல எளிய பாடல்கள் இந்த கால கட்டத்தில் வெளி வந்தன. ‘சொன்னதைச் செய்திட’ (ராகமாலிகை), ‘கண்ணனை காண்பதெப்போ’ (ராகமாலிகை), ‘காரணம் கேட்டு வாடி’ (பூர்வி கல்யாணி), ‘கண்ணனே என் கணவன்’ (கல்யாணி), ‘நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி’ (சண்முகப்ரியா), போன்ற பல அழகிய தமிழ்ப் பாடல்கள் வெளி வந்து மக்கிளிடையே பிரபலமாயின. 1947-க்கு முன் தேச பக்தியைத் தூண்டும் வகையில் ‘ஜெயதி ஜெயதி பாரத மாதா’ (கமாஸ்), ‘சமரஸ பாவன’ (பீம்ப்ளாஸ்) போன்ற பாடல்களும் இக்காலகட்டத்தில் வந்தவையே. இந்தப் பாடல்கள் ஜி.என்.பி பாடியதற்கு முன் எப்படிப் பாடினரென்று தெரியாவிடினும், ஜி.என்.பி அமைத்த மெட்டுக்களும், சங்கதிகளுமே நிலைத்து, இன்றும் பாடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜி.என்.பி புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில் வந்த அனைத்து ரிக்கார்டுகளுமே பிரபமடைந்தன என்றாலும் ‘வாஸ¤தேவயனி’ ரிக்கார்டும், ‘திக்கு தெரியாத காட்டில்’ ரிக்கார்டும், ‘ராதா சமேத கிருஷ்ணா’ ரிக்கார்டும், ‘ஹிமகிரி தனையே’ ரிக்கார்டும் ஜி.என்.பி-யின் பெயரை என்றும் நிலைக்கும் நிலைக்கு இட்டுச் சென்றன என்று கூறினால் அது மிகையாகாது.

ஜி.என்.பி-யால் மெருகேற்றப் பட்டு, கச்சேரி மேடைக்கு வந்த ‘வாஸ¤தேவயனி’ கிருதி, 1940-ஆம் வருடம் 78 rpm இசைத் தட்டாக வெளியானது. கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை வயலின், பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம். மொத்தமே எட்டு நிமிட நேரத்திற்குத்தான் பதிவு செய்யக் கூடிய இசைத் தட்டில், ஒரு ராகம் பாடி, அதை கிரஹித்து வயலின் ராகம் வாசித்து, கீர்த்தனைகளை சங்கதிகளுடன் பாடி, கல்பனை ஸ்வரம் பாடி, தனி ஆவர்த்தனமும் கொடுத்து, கேட்பவருக்கு நிறைவையும் கொடுப்பதென்பது, ‘next to impossible’, என்பார்களே, அந்த வகையில் சேரும். அதை இந்தக் கூட்டணி செய்து காட்டியது என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன?

இந்த ரிக்கார்டு, 1940-ம் வருடத்தில் மட்டும் பத்தாயிரம் ரூபாய் ராயல்டியை ஜி.என்.பி-க்குக் கொடுத்தது.

அதி வேகமாய்ப் பாடுவதற்கும் விறுவிறுப்பாகப் பாடுவதற்கும் உள்ள நுட்பமான வித்தியாசத்தை, அவரின் 1930களில் வந்த ரிக்கார்டுகளையும் 1940களில் வந்த ரிக்கார்டுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உணர்ந்துவிட முடியும்.

மூன்றாம் வகை ரிக்கார்டுகள் 1950-களில் வந்தவை. பழுத்த பழமான பின் கொடுத்திருக்கும் ‘சாதிஞ்சனே’ (ஆரபி), ‘சாமஜ வரகமனா’ (ஹிந்தோளம்), ‘ஆனந்த நடேச’ (தோடி) போன்ற ரிக்கார்டுகள் இந்த காலகட்டத்தில் வந்தவையாகும். இந்த இசைத்தட்டுகளும் அற்புதமாகவே இருப்பினும், 1940-களில் இருந்தது குரலுக்கு ஒப்பிட்டால், இவை ஒரு மாற்று குறைவுதான் என்று சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட ஒரு கட்டை ஸ்ருதியிலேயே இந்த ரிக்கார்டுகள் இருக்கின்றன. குரல் 1940-களில் இருந்ததைப் போல இல்லாவிடினும், அவருக்கேவுரிய பிருகாக்களை அக் குரல் பொழியத் தவறவில்லை. இன்னம் சொல்லப் போனால் 1950-களில் வெளி வந்த ஹிந்தோளம் 40-களில் வந்த ஹிந்தோளத்தைக் காட்டிலும் பாவபூர்வமாகவும் அழகிய ஸ்வராக்ஷரங்களுடன் (பல்லவியில் ‘ஸா-ம’, அனுபல்லவியில் ‘ச-ம-நி-க-ம-க’) இன்னும் நேர்த்தியாகவும் அமைந்திருக்கிறது என்று கூடத் தோன்றுகிறது.

இது நாள் வரை, மேற் சொன்ன ரிக்கார்டுகள் ஒரு சில ரசிகர்களிடம் மட்டுமே இருந்து வந்தன. 1930-களில் வந்த ரிக்கார்டை ஒவ்வொன்றையும் ஆயிரக் கணக்கான ரூபாய்க்கு விற்றவர்கள் இன்னும் நம்மிடையில் இருக்கிறார்கள். இந்த வருடம், ஜி.என்.பி-யின் நூற்றாண்டை ஒட்டி கர்நாடிகா நிறுவனம், 1930-களிலும் 1940-களிலும் வெளியான ஜி.என்.பி ரிக்கார்டுகள் பலவற்றை குருந்தகடாகத் தொகுத்து வெளியுட்டுள்ளது. கிடைப்பதற்கரியனவாய் இருந்தவை இன்று சுலபமாக எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. (ஜி.என்.பி-யின் புகழ் பெற்ற ரிக்கார்டுகள் என்று முன்பு குறிப்புட்டுள்ள நான்கு ரிக்கார்டுகளுமே தொகுப்பில் இடம் பெறாததுதான் ஒரே குறை).

கர்நாடக இசைப் பாடல்கள் அடங்கிய 78 rpm ரிக்கார்டுகளைத் தவிர, சகுந்தலை படத்தில் எம்.எஸ் உடன் சேர்ந்து பாடியிருக்கும் இரண்டு டூயட் பாடல்களும் (இவையும் 78 rpm ரிக்கார்டுகள்தான்), 1950-களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஜி.என்.பி-யின் கச்சேரிகளில் இருந்து சில பாடல்களும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்காரின் ‘ராமா நின்னே’, ஷ்யாமா சாஸ்திரியின் ‘ப்ரோவவம்மா’, தியாகராஜரின் ‘ஏதாவுனேர்ச்சிதிவோ’ கிருதியும் ‘பராமுகமேலரா’ கிருதியும் இடம்பெற்றுள்ளன. மேற் சொன்ன எதுவுமே இடம் பெறாமல், இந்தத் தொகுப்பில் எஞ்சியிருக்கும் உருப்படியான தேவமனோகரி ராகம் தானம் பல்லவி மட்டுமே இடம் பெற்றிருந்தால் கூட, இந்தத் தொகுப்பை கர்நாடிகா நிர்ணயித்திருக்கும் விலைக்கு இரண்டு மடங்கு அதிகமான விலை கொடுத்துக் கூட வாங்கலாம்.

G.N.Balasubramaniam – A Centennial Retrospective என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இசைத் தொகுப்பின் விலை 249 ரூபாய்.

இணையத்தில் வாங்க:

Read Full Post »

1 Pazani Subramaniam Pillaiஒரு வயதான இசை ரசிகரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் பழைய கிராம·போன் தட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தார். என் கண்ணில் முதலில் பட்ட தட்டு “கந்தன் கருணை புரியும் வடிவேல்”. எனக்கு மதுரை மணியின் பாட்டின் மேல் அலாதி பிரியம் என்பதால் அந்தத் தட்டை எடுத்தேன்.

“அட! கந்தன் கருணையா! மதுரை மணியும் பழநி சுப்புடுவும் என்னமாய்ப் பாடியிருக்கிறார்கள்.”, என்றார் பெரியவர்.

“பழநியா பாடியிருக்கார்? மதுரை மணியோட வேம்பு ஐயர்தானே பாடுவார். பழநி மிருதங்க வித்வான் இல்லையா?”, என்றேன் குழப்பத்துடன்.

“மிருதங்கமானா என்ன? அதில் பாட முடியாதா”, என்று சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ரிக்கார்டைப் பாடவிட்டார்.

பாடலைக் கேட்டவுடன்தான் உண்மை புரிந்தது. “கோல மயில் நடம் கொஞ்சிடும் செவ்வேல்”, என்ற வரியில் பாடல் கூறும் கொஞ்சல்கள் அனைத்தையும் மிருதங்கத்தின் தொப்பியில் வெளிப்படுத்துவதென்பது மனிதனால் ஆகக் கூடியதா? “அண்டம் ஆண்டிடும் ஆதி மகள்” என்ற அடியில்தான் எத்தனை சங்கதிகள். ஒவ்வொரு சங்கதிக்கும் , அந்த சுநாதத் தருவின் வலந்தலையில் இடது கையும், தொப்பியில் வலது கையும் – ஒன்றுக்கொன்று தொடர்பற்றது போல தன்னிச்சையாய்ச் சிதறவிடும் நாதத் திவலைகள்தான் எத்தனை. உச்சஸ்தாயியில் “அன்னை பராசக்தி அருள் சுடர்வேல்” என்று பாடல் ஒலிக்க, நீண்டு ஒலிக்கும் ரீங்கார ஒலியான தீம்காரம், ஓம்காரமாய் ஒலிக்கும் போது கேட்ட ஒருவரும் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது. எப்பேர்ப்பட்ட வாசிப்பு! இல்லை இல்லை. எப்பேர்ப்பட்ட பாட்டு பழநியின் மிருதங்கத்திலிருந்து!

2 manpoondiya Pillai and Muthiah Pillai“இப்படிப்பட்ட வாசிப்பு வெளிச்சத்துக்கு வர எவ்வளவோ தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது என்று நினைத்தால்தான் வியப்பாக இருக்கிறது.”, என்று பெருமூச்சு விட்டார் பெரியவர்.

எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. நான் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே பழநி மறைந்து விட்டார் என்ற போதிலும், “ஸொகஸ¤கா மிருதங்க தாளமு” என்ற பதத்தைக் கேட்கும் போதெல்லாம் பழநியின் ஞாபகம்தான் வரும். மரபிசை வாத்தியமான தவிலை அடிப்படையாகக் கொண்டு, புதுக்கோட்டை பாணியை நிறுவியவர் மான்பூண்டியா பிள்ளை. அவரின் பிரதம சிஷ்யர்களுள் ஒருவர் பழநி முத்தையாப் பிள்ளை. தவில், மிருதங்கம், கஞ்சிரா என்று லயக் கருவிகள் பலவற்றில் சிறந்த ஆளுமை கொண்டிருந்த முத்தையாப் பிள்ளையின் மகனாகப் பிறந்த பழநிக்கா தடைகள் எழுந்திருக்க முடியும்? என் சந்தேகத்தை பெரியவரிடம் கேட்டேன்.

3 Dakshinamurthy Pillai“முத்தையாப் பிள்ளைக்கு இரு மனைவியர். பழநி பிறந்த சில வருடங்களிலேயே தாயாரை இழந்தார். அதன் பின் மாற்றாந்தாயின் பராமரிப்பு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவா வேணும். பழநி கதையைத் தொடருவதற்கு முன், உன்னை ஒரு கேள்வி கேட்கறேன். கிரிக்கெட்டின் தலை சிறந்த ஆட்டக்காரர்களின் பட்டியலில் சோபர்ஸ், கில்கிரிஸ்ட், லாரா, அக்ரம் போன்ற இடக்கையர்களுக்கு இடம் இல்லை என்றால் ஒப்புக் கொள்ள முடியுமா?”

“இவர்கள் இல்லாமல் கிரிக்கெட்டா? என்ன அபத்தம் இது.”

“நீ சொன்ன அபத்தம்தான் பழநியின் வாழ்க்கையில் விளையாடியது. அவருக்கு இடது கைப்பழக்கம். அதை அமங்கலமாக நினைத்து பழநிக்கு சொல்லித் தர மறுத்துட்டார் முத்தையாப் பிள்ளை. அவருடைய இன்னொரு மகனான சௌந்தரபாண்டியனையே இசை வாரிசாகக் கருதினார். சௌந்தரபாண்டியனுக்கு அப்பா சொல்வதைக் கேட்டு, அப்பா வீட்டில் இல்லாத சமயம் சாதகம் செய்வாராம் சுப்ரமணிய பிள்ளை. அப்படி ஒரு முறை வாசித்ததை தட்சிணாமூர்த்தி பிள்ளை கேட்க நேர்ந்தது.”

“புதுக்கோட்டை மஹாவித்வான் தட்சிணாமூர்த்தி பிள்ளையா!”

“அவரேதான். பழநியின் வாசிப்பைக் கேட்டவர் நேராக முத்தையாப் பிள்ளையிடம் சென்று, “முத்தையா, இந்தப் பிள்ளையை சாதாரணமாக நினைக்காதே. உன் குலம் விளங்கப் போவதும் உன் பெயர் நிலைக்கப் போவதும் இவனால்தான். இந்தப் பையனுக்குச் சொல்லிக் கொடு. நீ சொல்லிக் கொடுக்க முடியாதென்றால் என்னிடம் அவனை விட்டு விடு”, என்று கறாராக உரைத்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற மஹா வித்வானே பரிந்துரை செய்த போது முத்தையாப் பிள்ளையால் சொல்லித் தராமல் இருக்க முடியவில்லை. ஒன்றுமே சொல்லிக் கொடுக்காத காலம் போய், பழநியை அதீதமான பயிற்சியில் ஈடுபட வைத்தார் முத்தையாப் பிள்ளை. விடியற் காலை நாலு மணிக்கு எழுந்தாரெனில் இரவு பத்து மணிக்கு தூங்கச் செல்லும் வரை பயிற்சிதான். வேறு சிந்தனைக்கே வழியில்லை. பயிற்சியின் போது சிறு தவறு செய்தாலும் பிரம்புப் பிரயோகம் தயாராயிருக்கும். இந்தப் பயிற்சியே, மனதில் எழுந்த அனைத்தையும் கையில் பேச வைக்கும் ஆற்றலை பழநிக்குக் கொடுத்து.”

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பழநி புயல் போல புறப்பட்டிருக்க வேண்டுமே. 1908-ல் பிறந்த பழநி , 1930-களில்தானே அவர் முன்னணி வித்வானாக அறியப்படுகிறார்.” என்று சந்தேகங்களைத் தொடர்ந்தேன்.

4 young pazani“நல்ல பயிற்சி இருந்தால் மட்டும் முன்னுக்கு வந்துவிட முடியுமா? பழநிக்கு முந்தைய தலைமுறை முதன்மைப் பாடகர்கள் எல்லாம் லய நிர்ணயத்துக்கு பெயர் போனவர்கள். காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளையின் ‘full bench’ கச்சேரிகளில் லய யுத்தமே நடக்கும். பழநி பதினைந்து பதினாறு வயதிருக்கும் போதே நாயினா பிள்ளைக்கு வாசிக்கத் தொடங்கிவிட்டார். பழநி அரங்குக்கு வந்த நேரத்தில் லய விவகாரங்களில் ஈடுபட்டு பாடுபவர்கள் குறைவாகத்தான் இருந்தனர். சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளைக்கோ, ஆலத்தூர் சகோதரர்களுக்கோ, செம்பைக்கும் அரியக்குடிக்கும் இருந்த அளவுக்கு கச்சேரிகள் இல்லாத காலம் அது. போதாக் குறைக்கு பழநியின் இடது கைப் பழக்கம் வேறு அவருக்கு பெரிய தடையாய் அமைந்தது.”

“அந்தக் காலத்திலேயே அம்மாப்பேட்டை பக்கிரி போன்ற மேதைகள் இடது கைப்பழக்கமுடையவர்கள் என்ற போதும் தவில் உலகில் முடிசூடா மன்னர்களாக இருந்திருக்கிறார்களே! தவிலுக்கு ஒரு சட்டம் மிருதங்கத்துக்கு ஒரு சட்டமா இருந்தது.”, என்று மடக்கினேன் பெரியவரை.

“தவிலைப் பொறுத்த மட்டில் எத்தனையோ இடது கைப்பழக்கமுடைய வித்வான்கள் பெரும் புகழோடு இருந்திருக்கிறார்கள். மேடைக் கச்சேரிகளில் பாடகருக்கு வலப் புறத்தில் மிருதங்கக்காரரும், இடப் புறத்தும் வயலின் வித்வானும் அமர்வது மரபு. இது மிருதங்கம் வாசிப்பவர் வலக்கையர் எனில் சரியாக இருக்கும். மிருதங்கம் வாசிப்பவர் இடக்கையர் எனில் இந்த அமைப்பின் படி உட்கார்ந்தால் மிருதங்கத்தின் தொப்பி சபையை நோக்கி இருக்கும். ஸ்ருதியுடன் ஒலிக்கக் கூடிய வலந்தலை சபையை நோக்கி இல்லாவிடில் நாதம் கேட்க நன்றாயிருக்காது. பழநி வாசிக்க வந்த காலத்தில் வயலின் கலைஞர்கள் பலர், மரபுப்படிதான் உட்காருவோம் என்று முரண்டு பிடித்தனர். எவ்வளவுதான் உயர்ந்த வாசிப்பாக இருந்த போதும், எதற்கு வம்பு என்று கச்சேரி அமைப்பாளர்களும் பழநியை ஒதுக்கினர்.”

“என்ன அநியாயம். பழநியின் வாசிப்புக்கா இத்தனை தடைகள்”, என்று வியந்து போனேன்.

“பழநியின் வாசிப்பைக் கேட்கக் கூட பேறினை பெற்றதற்கு, செம்பைக்கும் பாலக்காடு மணி ஐயருக்கும் ஏற்பட்ட சிறு மனத்தாங்கலுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். துணைவியார் கோலார் ராஜம்மாளின் உந்துதலில் செம்பையைச் சந்தித்த பழநியிடம், இரண்டு நிபந்தனைகள் விதித்தார் செம்பை. ஒன்று, “சில நாட்களுக்கு கச்சேரிக்கு இந்த rate-தான் வேண்டும் என்று கேட்கக் கூடாது.” மற்றொன்று, “கணக்கு வழக்குகளை அளவுக்கு மீறி வாசிக்காமல், சௌக்கியமாக வாசிக்க வேண்டும்.” இந்த இரண்டுக்கும் பழநி இசைந்ததால், செம்பையுடன் சேர்ந்து ஏராளமான கச்சேரிகள் ஏற்பாடாயின. செம்பையைப் போன்ற மூத்த வித்வான் சொல்லை மீற முடியாததால், வயலின் வித்வான்களுக்கு விருப்பம் இல்லை என்ற போதும், இடம் மாறி அமர்ந்து பழநியுடன் வாசித்தனர். செம்பை பாகவதர், பழநியின் திறமையை எப்படி எல்லாம் வெளிக் கொணரலாம் என்று யோசித்து உரியன செய்தார். ஒரு கச்சேரியில் ஐந்து முறை பழநியை தனி ஆவர்த்தனம் வாசிக்க வைத்து மகிழ்ந்தார் அந்தப் பெருந்தகை. இரண்டே வருடத்தில் அத்தனை முன்னணி பாடகர்களும் விரும்பிச் சேர்த்துக் கொள்ளும் பக்கவாத்தியக்காரராக வளர்ந்தார் பழநி.”

“1930-களில் செம்பைக்கு வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து பழநிக்கு ஏறு முகம்தான் என்று கூறுங்கள். பழநியின் வாசிப்பில் உள்ள பிரத்யேக அம்சங்கள் எவை?.”
5 Chembai Sundaresa Iyer and Pazani
“பழநியின் வாசிப்பில் வலது கையும் இடது கையும் சேர்ந்து ஒலிக்கும் சொற்கள் நிறைந்து இருக்கும். அவர் சிஷ்யர்களுக்கு பாடம் எடுக்கும் போதெல்லாம், “ஒத்தக் கை வாசிப்பு வாசிக்காதே ஐயா”, என்று சொல்லிக் கொண்டே இருப்பாராம். சுலபமான சொற்கட்டுகளைக் கூட அவர் வாசிக்கும் போது கர்ணாம்ருதமாய் ஒலிக்கும். பாட்டுக்கு வாசிப்பது என்ற விஷயத்தில் பழநிக்கு நிகர் பழநிதான். பாட்டை அப்படியே சங்கதிக்கு சங்கதி வாசிக்காமல், அழகாக இட்டு நிரப்பி, வித விதமாய் நடைகளால் நகாசு செய்வது அவர் தனிச் சிறப்பு. காண்டாமணி போன்ற நாதத்தை உதிர்க்கும் அவர் வலந்தலையில் அரைச் சாப்பும், முழுச் சாப்பும் முழுமையாய் வந்து விழும் அழகே தனி. அவருடைய டேக்கா சொற்களில் ஒலிக்கும் தெளிவுக்கு ஈடாக இன்னொன்றை சொல்ல முடியாது.”

“பழநியின் இத்தனைச் சிறப்பைச் சொன்னீர்கள், ஆனால் உலகமே வியக்கும் அவரது கும்காரங்களைப் பற்றி சொல்லவே இல்லையே”.
“காரணமாய்த்தான் சொல்லவில்லை. சொல்ல முயன்றாலும் சொல்லிவிட முடியுமா என்ன? வார்த்தைகளில் வர்ணிக்கக் கூடிய விஷயமா அது? மிருதங்கத்தின் நாத விசேஷமே தொப்பியின் ஒலியில்தான் இருக்கிறது. தொப்பியை ரொம்ப இறக்கி வைத்துக் கொண்டால் முடக்கு விழுந்துவிடும். பழநி தன் மிருதங்கத்தில், வலந்தலையின் சேர்ப்பது போல, தொப்பியிலும் அனைத்து கண்களிலும் ஒரே விதமான ஒலி எழுமாறு ஸ்ருதி சேர்ப்பார். இதனால் அவரது தொப்பியின் நாதமே அலாதி. அதிலும், தேய்ப்புச் சொல்லான கும்கியை அவர் வாசிக்கும் போது மயங்காதவரே இல்லை எனலாம். மிருதங்க மேதையான பாலக்காடு மணி ஐயரே பழநியின் கும்கிக்கு ரசிகர் என்றால் பார்த்துக் கொள்ளேன்.”

“பாலக்காடு மணி ஐயரும் பழநி சுப்ரமணிய பிள்ளையும் சேர்ந்து கூட பல கச்சேரிகளுக்கு வாசித்திருக்கிறார்களாமே.”

“முத்தையாப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை போலவே, பழநியும் மிருதங்கத்தைத் தவிர கஞ்சிராவிலும் சிறந்த ஆளுமையைப் பெற்றிருந்தார். மணி ஐயருடன் சேர்ந்து அவர் வாசிக்கும் போதெல்லாம் பொறி பறக்கும். பழநியின் தனி ஆவர்த்தனங்களில் அவரின் ஆழ்ந்த தேர்ச்சியும், அபரிமிதமான கற்பனைகளும் அழகாக பவனி வரும். எத்தனையோ தீர்மானங்களையும் கோர்வைகளையும் புனைந்தவர் பழநி. குறிப்பாக திருப்புகழ் அமைந்திருக்கும் சந்த தாளங்களுக்கு பழநி வாசிக்கும் அழகைச் சொல்லி மாளாது. அவர் கதி பேதம் செய்யும் போது, எந்த நடையை வாசிக்கிறாரோ, அந்த நடையில் அட்சரத்துக்கு எத்தனை மாத்திரை உண்டோ அதை வெளிப்படையாகக் காட்டாமல், திஸ்ர நடையில் சதுஸ்ரம் அமைத்தல், கண்ட நடையில் சதுஸ்ரம் அமைத்தல், என்று நடையை அமைப்பதில் பல புரட்சிகளைச் செய்தவர் பழநி” என்று நிறுத்தாமல் பொழிந்தார் பெரியவர்.

“அவரின் மற்றொரு பங்களிப்பு என்று அவர் உருவாக்கியுள்ள சிஷ்யர்களைச் சொல்லலாம். எம்.என்.கந்தசாமி பிள்ளை, டி.ரங்கநாதன், பள்லத்தூர் லட்சுமணன், பூவாளூர் வெங்கடராமன், திருச்சி சங்கரன், உடுமலை மயில்சாமி, கே.எஸ்.காளிதாஸ் போன்ற எண்ணற்ற சிஷ்யர்களை உருவாக்கி இன்று நிலைத்து நிற்கக் கூடிய பாணியாக புதுக்கோட்டை பாணியை நிறுவிய பெருமை பழநியையே சேரும்.”

“சங்கீத கலாநிதி, ஜனாதிபதி விருது போன்ற பட்டங்களுக்கு பழநியை அலங்கரிக்கக் கொடுத்து வைப்பதற்கு முன், இள வயதிலேயே அவர் மறைந்தது சங்கீத உலகுக்கு பெரும் இழப்பு. இந்தப் பட்டங்களை விட மேலான கௌரவம் பழநியின் சிஷ்யர்கள் வருடம் தவறாமல் செய்து வரும் குரு பூஜையாகும். பிறந்து நூறாண்டுகள் ஆன பின்னும், மறைந்து 47 ஆண்டுகள் ஆன பின்னும், வருடா வருடம் பழநியின் ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. இதை விட வேறென்ன பெருமையை ஒருவர் அடைந்துவிட முடியும்”, என்றார் பெரியவர் தன்னை மறந்து.

பழநியின் நினைவில் மூழ்கிவிட்ட அவரை எழுப்ப மனமில்லாமல் மௌனமாகக் கிளம்பினேன் என் வீட்டுக்கு.

Read Full Post »

சங்கீத கலாநிதி ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் சங்கீதத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு, ஐம்பது வயதைத் தாண்டிய எவரைக் கண்டாலும், “ஜி.என்.பி-யை நேரில் பார்த்ததுண்டா?”, என்று கேட்பேன். அவர் இசையின் மேல் காதல் கொண்டிருந்த எனக்கு, 2003-ல் ஜி.என்.பி-யின் கடைக் குட்டியான திரு.ஜி.பி.இராஜசேகரின் அறிமுகம் கிடைத்தது. எண்ணற்ற வார இறுதிகளை அவர் இல்லத்தில் ஜி.என்.பி-யைப் பற்றி பேசியும், இசையைக் கேட்டும், ஜி.என்.பி தொடர்பாக அவர் குடும்பத்தாரிடம் இருந்த தொகுப்புகளைப் புரட்டியபடியும் கழித்திருக்கிறேன்.

அப்போதுதான், ஸ்ருதி ·பௌண்டேஷன் ஜி.என்.பி-யைப் பற்றி நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கின் விடியோ பதிவுகளைப் பார்க்க நேரிட்டது. பல மணி நேரம் செல்லக் கூடிய அந்த விடியோவில் எங்கோ ஒரு மூலையில், 1964-ல் கிருஷ்ண கான சபா வெளியிட்ட மலரைப் பற்றிய குறிப்பினை திரு. சஞ்சய் சுப்ரமணியத்தின் பேச்சு பதிவு செய்திருந்தது. அன்று தொடங்கி எங்காவது இந்தப் பாராட்டு மலர் கிடைக்குமா என்று சல்லடை போட்டுத் தேடத் தொடங்கினேன்.

வெளியிட்ட கிருஷ்ண கான சபையை அணுகியதும், அவர்களிடமும் ஒரு பிரதி கூட இல்லாததை அறிந்தேன். பல நாட்கள் தேடிய பின், ஜி.என்.பி-யின் குடும்பத்தினரின் சேகரிப்பிலேயே பிரதியின் xerox copy இருந்ததை அறிந்து நானும் ஒரு பிரதி பெற்றுக் கொண்டேன். திரு. ராஜமாணிக்கம் பிள்ளை, திரு. லால்குடி ஜெயராமன் போன்ற அரிய கலைஞர்களும், ஜி.என்.பி-யுடன் நெருங்கிப் பழகியர்கள் பலரும் எழுதியிருக்கும் கட்டுரைகளை படித்து மகிழ அந்த பிரதியே போதுமானதாக இருந்தது. இருப்பினும், பொக்கிஷமாய்ப் போற்றத் தக்க பல அரிய புகைப்படங்களை ரசிக்க என் பிரதி போதுமானதாக இல்லை. எங்கேனும் நல்ல பிரதி கிடைக்குமா என்ற தேடல் தொடர்கதையாகவே மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

2006-ல் விகடன் பிரசுரத்தார் அளித்த வாய்ப்பால் ஜி.என்.பி-யைப் பற்றி புத்தகம் எழுதத் தொடங்கினேன். பழைய இதழ் படிகளிலிருந்தும், நேர்காணல்கள் மூலமாகவும், ஜி.என்.பி-யின் பதிவு செய்யப்பட்ட இசைக் கச்சேரிகளில் இருந்தும், எழுத ஏராளமாய் விஷயங்கள் கிடைத்தன. இருப்பினும், புகைப்படங்கள் இல்லா புத்தகம், நெய்யில்லா சர்க்கரைப் பொங்கல் போன்றல்லவா மணமற்று இருக்கும்? 1965-ல் மறைந்துவிட்ட மாமேதையின் புகைப்படங்களோ அதிகம் கிடைக்காத நிலையில், கிருஷ்ண கான சபை வெளியிட்ட பாராட்டு மலரில் உள்ள படங்களையே நம்ப வேண்டிய நிலைக்கு ஆளானோம்.

சென்னை, பெங்களூர், ஐரோப்பா, அமெரிக்கா என்று உலகம் முழுவதும், இசையில் இருந்த ஈடுபாட்டால் உருவான எனது நண்பர் கூட்டமே இந்த மலரின் பிரதியைத் தேடத் தொடங்கியது. பல நாட்களுக்குப் பின், ஜி.என்.பி பக்தர் என்று கொள்ளக் கூடிய திரு.சிவராமகிருஷ்ணனை புத்தகத்துக்காக பேட்டி காணச் சென்றேன். பேட்டி முடிந்து கிளம்பும் தருவாயில், தன்னிடம் 1964-ல் வெளியான மலரின் பிரதி இருப்பதை திரு.சிவராமகிருஷ்ணன் தெரிவித்த போது என் கால்கள் தரையில் இல்லை.

ஒரு வழியாய் பிரதி கிடைத்த போதும், பல கை மாறி இருந்த புத்தகத்தின் பக்கங்கள் வெகுவாய் கசங்கியிருந்தன. நூல் அச்சாக சில வாரங்களே எஞ்சியிருந்த தருணத்தில், திரு.அதியமான் தொலை பேசினார். அவருடைய உறவினர் வாடகைக்கு தங்கி இருக்கும் வீட்டின் ஒரு பகுதியில், வீட்டுக்கு சொந்தக்காரர் பல புத்தகங்கள் வைத்திருப்பதாகவும், அவற்றுள் இந்த மலரின் படியும் இருப்பதாகவும் கூறினார். வீட்டுக்காரர் இந்தியாவிலேயே இல்லாததால், வீட்டை நிர்வகித்து வந்தவர்களிடம் மன்றாடிப் படிகளைப் பெற்றுத் தந்தார். அப்படிக் கிடைத்த பிரதியிலிருந்தே என் புத்தகத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் எடுக்கப்பட்டன. மலரில் இருந்த படங்களை அச்சில் ஏற்றுவதற்கு முன் நகாசு வேலை செய்து பரிமளிக்க வைத்த விகடன் பிரசுர்த்தாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். நூல் வெளியான பின், பல முதிய ஜி.என்.பி ரசிகர்கள் நூலில் இடம் பெற்ற படங்களை சிலாகித்துப் பேசினர். அவர்களின் பாராட்டுகள் அனைத்தும் கிருஷ்ண கான சபைக்கும், 1964-ல் மலர் வெளியிடக் காரணமாயிருந்த திரு.யக்ஜராமன் அவர்களையுமே சேரும்.

புத்தகம் நல்ல முறையில் வெளி வந்துவிட்ட போதும், எனக்கே எனக்கென்று மலரின் ஒரு பிரதி கூட இல்லையே என்ற ஏக்கம் என்னை மீண்டும் தேட வைத்தது.

நூல் வெளியாகி ஓராண்டு கழித்து, 2007-ம் ஆண்டு மே மாதம், சென்னை மூர் மார்கெட்டில் ஒரு பழைய புத்தகக் கடையில், அட்டைகள் இல்லாத நிலையில், மலர் எனக்குக் காட்சியளித்தது. அன்று அந்தக் கடைக்காரர் எவ்வளவு விலை கேட்டிருப்பினும் கொடுத்திருப்பேனெனினும், விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை, அதன் மதிப்பு உணராது சொற்ப விலைக்குச் சொன்ன கடைக்காரரிடம், பிடுங்காத குறையாய் மலரைப் பெற்ற பொது ஏற்பட்ட மன நிறைவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. முனைந்து செய்யும் முயற்சி, எத்தனை வருடங்களானாலும், மெய் வருத்தக் கூலி தரும் என்ற வாக்கின் உண்மைத் தன்மை எனக்குத் தெள்ளெனப் புரிந்தது.

உலகமே ஜி.என்.பி என்ற மாமனிதரின் நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், நூற்றாண்டு மலரினைத் தொகுக்கும் பேறு எனக்குக் வாய்த்துள்ளது. அந்த மலரை அலங்கரிக்க திரு. லால்குடி ஜெயராமனிடமிருந்த கட்டுரை பெற அவர் வீட்டுக்குச் சென்ற போது, என்னுடைய ஜி.என்.பி புத்தகத்தின் பிரதி ஒன்றைக் கொடுத்தேன். அடுத்த நாள், திரு.பிரபு தொலைபேசியில் அழைத்து, லால்குடி அவர்கள் கிருஷ்ண கான சபை வெளியிட்ட மலரைப் பற்றி என் புத்தகத்தில் இருப்பதாகக் கூறியதாகவும், அதனை மறுபதிப்பு செய்ய விழைவதாகவும் தெரிவித்து, என்னுடைய பிரத்யைக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.

அரிய பொக்கிஷங்கள் அனைவரின் பார்வைக்கும் கிடைத்தல் அரிது. அப்படிப் பட்ட ஒரு புதையலாக இருந்து வந்த இந்த மலரை குன்றின் மேலிட்ட விளக்கு போல, அனைவரையும் சென்றடையும் எண்ணத்தை திரு.பிரபு வெளியிட்ட போது பெரிதும் மகிழ்ந்தேன். ஜி.என்.பி நூற்றாண்டில், அவரை நினைவு கூறும் வகையில் நடக்கும் எண்ணற்ற நிகழ்வுகளுள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முயற்சியாக இந்த மலரின் மறுபதிப்பு அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

அக்டோபர் 24-ம் தேதி, கிருஷ்ண கான சபை அரங்கில், மலரின் மறுபதிப்பு வெளியிடப்படுகிரது. இசை ரசிகர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு மலரைப் பெற்றுக் கொள்ளும் அரிய வாய்ப்பை தவற விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்

Read Full Post »