Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Story’ Category

நான் 2002-ல் சில கதைகள் எழுதினேன். அவை எனக்கே அவ்வளவு திருப்தியாக அமையவில்லை. கதைகளை விட கட்டுரைகள் கொஞ்சம் தேவலாம் என்று தோன்றியது.

சில நாட்களுக்கு முன் வழக்கறிஞர் சுமதி அவர் எழுதிய ‘மெய்ப்பட வேண்டும்’ என்ற கதையை எனக்கு அனுப்பி வைத்தார். இசை பின்புலத்தில் அமைந்த கதையை படித்த போது எனக்கு நான் 2002-ல் எழுதிய கதை நினைவுக்கு வந்தது.

என் வலைப்பூவில் எத்தனையோ குப்பைகள். அதில் ஒன்றாய் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று இதையும் இங்கு இட்டுக் கொள்கிறேன். படித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்தமில்லை. கேஸட், புரௌசிங் செண்டரில் சென்று ஈமெயில், அமெரிக்காவில் வேலை என்றெல்லாம் இன்று படித்தால் வேடிக்கையாக இருக்கின்றன

இதையும் மீறிப் படிப்பவர்களுக்கு என் நன்றிகள்/அனுதாபங்கள்.

நிதி சால சுகமா

“உலகத்துலயே உசந்த இசை மௌனம்தான் தெரியுமா?”

“நீ சொல்றது தப்பு. இன்னிக்கு கச்சேரியில சாருகேசிய அற்புதமா குழைச்சு கொடுத்ததக் கேட்டவுடனே ஒரு நிறைவு வந்து மனசுல உட்கார்ந்துடுத்து. வேற எதையுமே காதுல போட்டுக்காம இருந்தா அந்த பறக்கற மனநிலைலையே இன்னும் கொஞ்ச நேரம் திளைக்கலாம்னு மனசு ஏங்கறது.”

“நீ சொல்றதும் சரியாத்தான் தோணறது. நம்ப காவேரி தெருப்பக்கம் போனா அத்தர் கடைய நெருங்கினவுடனே வர வாசத்தை உணர்ந்துட்டு வேற எதையும் நுகராம எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் ‘தம்’ கட்டி நிக்கறோமே அந்த மாறி உணர்வுதானோ இந்த மௌனம்?

“ஆமாம்! சத்தம் இல்லைனா மௌனத்துக்கு மதிப்பு இல்லை. மௌனத்தை ரசிக்கலைனா சத்தமும் சத்ததுல வர இசையும் மனசு ரசிக்காது.”

“இதனாலதான் கிருஷ்ணர் பகவத்கீதையில நான் ஒலிகளில் மௌனமாகயிருக்கிறேன்னு சொல்றாரோ?”

இது மாதிரி உரையாடல்கள் எனக்குள்ள மட்டும்தானா? நான் மட்டும்தான் எனக்குள்ளயே ரெண்டா பிரிஞ்சு, நானே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக்கறேனா? ஒரு விஷயத்தை தீவிரமா ஆதரிச்சு எதையாவது சொன்னா எனக்குள்ள மட்டும்தான் இன்னொரு குரல் அதை எதிர்த்துப் பேசுமா?

இப்போ இந்தக் கேள்வியைக்கூட யார்கிட்டயோதானே கேட்கறேன்? கேட்டு முடிச்சவுடனே “இல்லை!! நீ ஒரு வேளை சத்தம் போட்டு யோசிக்கறாப்ல இருக்குனு” ஒரு குரல் வருதே!

இப்போவே நம்மை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில இருந்து தப்பிச்சு வந்தவன் போலதான் பாக்கறாங்க. இதையெல்லாம் வெளியில சொன்னா என்ன செய்வாங்களோ தெரியலை. சொன்னா சிரிக்காம இருக்கறது அம்மா மட்டும்தான்.

அம்மா வெளியில் காட்டிக்கொள்ளாவிடினும் மனதுக்குள் “நம்ம பையன் மத்தவங்களை மாதிரி இல்லையே”-னு வருத்தம்தான். எனக்கென்னமோ மத்தவங்க ஏன் என்னை மாதிரி இல்லைனு தோணும். காலாற நடந்து போனா சீர்காழி சுபந்துவராளில “எங்கெல்லாம் தேடுவதோ”-னு கதறரது தானா காதுல வந்து விழும். அதைக் கேட்டு உருகாம வாசல்ல விட்டு இருக்கற செருப்பைப் பத்திரமா பார்த்துக்கச் சொல்லி முருகன் கிட்ட வேண்டிக்கறவனைப் பார்த்தா ஒரு பக்கம் எரிச்சலா வருது. இன்னொரு பக்கம் அவன் அறியாமையை நினைச்சுப் பரிதாபமா இருக்கு.

எனக்கு மட்டும் ஏன் எதைப்பார்த்தாலும் யாரைப்பார்த்தாலும் ஒரு ராகம் மனசுல உதிக்குதுனு தெரியலை. அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் பூர்விகல்யாணி ராகம் தோணும். வெளிப்பூச்சுக்கு கல்யாணி மாறி கம்பீரத்தையும் சந்தோஷத்தையும் காட்டிண்டு உள்ளுக்குள்ள ஆயிரம் சோகத்தை புதைச்சு வெச்சுக்கறது அம்மாவோட குணம்.

ஈஸி சேர்ல எதிர்வீட்டு தாத்தாவைப் பார்க்கும் போதெல்லாம் லா.ச.ரா-வின் ‘நன்னு விடசி’ கிழவர் நெனப்பு வரும். புல்வெளி-யில சந்துருவுக்காக காத்துண்டு இருக்கற நேரமெல்லாம் மோகமுள்-ல பாபு ராஜத்துக்காக காத்துண்டு இருக்கும்போது அவனை கலக்கற பைரவி ராகம் நெனைப்பு வரும்.

இப்பக்கூட சந்துருவுக்காகதான் காத்துண்டு இருக்கேன். சந்துரு காலம் காலமா கோவில்-ல தேவாரம் திருவாசகம்னு ஓதுவார் பரம்பரைல வந்தவன். எந்நேரமும் எதாவது பாட்டு ஆராய்ச்சினு இருப்பான். திடீர்னு ஒருவாரம் காணாம போய்டுவான். என்னடா ஆச்சுன்னா “சரஸ்வதி மஹால்-ல பண்ணாராய்ச்சி புஸ்தகம் ஒண்ணு இருக்குனு நேத்திக்கு ஒருத்தர் சொன்னார், அதான் தஞ்சாவூர் போயிருந்தேன்” என்பான்.

நான் பண்ணின ஒரே தப்பு 12-ஆவதுல நிறைய மார்க் எடுத்ததுதான். நானும் இன்னிக்கு ஒரு இஞ்சினீயர்.

சீனு தாத்தா சொல்லுவார் “அந்த காலத்துல எல்லாம் வீட்டுக் கொல்லையில ரெண்டு மாடு நின்னாதான் ஒரு பெரிய ஸ்டேடஸ்க்கு அறிகுறி”. இன்னிக்கு மாட்டை வளர்த்து கொல்லையில கட்டறதுக்கு பதிலா புள்ளைய வளர்த்து அமெரிக்காக்கு அனுப்பி ஸ்டேடஸை காட்டிக்கறா.

முந்தானாள் புத்தகக் கண்காட்சிக்கு போய்ட்டு வரும்போது விளையாட்டா சொன்னான் கோபால், “என்னை மாறி பாங்க்-ல வேலை பார்க்கறவாளையெல்லாம் இன்னிக்கு எந்த பொண்ணும் கல்யாணம் பண்ணிக்க தயாராயில்லை, அமெரிக்காவுல இருந்தாலோ அல்லது கூடிய சீக்கிரம் அமெரிக்கா போக வாய்ப்பு இருந்தாலோதான் பண்ணிப்போம்னு வெளிப்படையாவே சொல்றா. அன்னிக்கு ஆம்பிளைங்க எல்லாம் ஜாவளி பாடத் தெரிஞ்ச பொண்ணா வேணும்னு கண்டிஷன் போட்டா, இன்னிக்கு ஜாவா படிச்சு இருக்கற பையன்தான் வேணும்னு இவா கண்டிஷன் போடறா”

போன வாரம் பல்லாவரத்து மாமா வந்து ஒரே புலம்பல். “உன்னை விட குறைச்சு மார்க் எடுத்து பாஸ் பண்ணினவனெல்லாம் இன்னிக்கு அமெரிக்கால வீடு வாங்கிட்டான். நீ என்னடான்னா இந்த ஓட்டை காலேஜ்-ல காலணா காசுக்கு காட்டுக்கத்து கத்திண்டு  இருக்க. கேட்டா எதோ பாட்டு கூத்து இலக்கியம்-னு கதையளக்கற. இந்தாடா…இது நம்ப வைத்தாவோட விசிடிங் கார்ட்.. ஒழுங்கு முறையா நாளைக்கே அது என்னமோ ஈ-மெயிலாமே அதைப் பண்ணித் தொலை. நான் சொல்லி இருக்கேன் கூடிய சீக்கிரம் நியூஜெர்சி பக்கம் வேலை வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கான்”. அவர் வந்து போனதிலிருந்து வீடே களேபரம்தான்.

சின்னவயசுல பாட்டு, ஸ்கூல்-னு கூடவே சுத்திண்டு இருந்தானே ரவி அவன் கதை தெரியுமா இவாளுக்கெல்லாம். காலைல எழுந்தவுடனே ஹிண்டு பேப்பர் ரெண்டாம் பக்கதுல எந்த சபால யார் கச்சேரினு நியூஸ் பார்த்துட்டு வந்து அவனோட கேப்டன் சைக்கிள்-ல எத்தனை தடவை கச்சேரிக்கு போயிருப்போம். அவனைப் போல ரசிகனை இனி பார்க்க முடியுமானு சந்தேகம்தான். இன்னிக்கு அமெரிக்காவுல ஏதோ software company-ல வேலை பார்க்கிறான்.

“எல்லாம் கிடைக்குதுடா இங்க. அங்க நடக்கற ஒவ்வொரு கச்சேரியோட பதிவும் உடனே இங்க வந்துடுது. ஆனாலும் காலங்கார்த்தால காதுவலிக்க கத்துமே அந்த அலாரத்துக்கு பதிலா நமக்கு புடிச்ச பாட்டோட எழுந்திருக்கற அலாரமாதான் இங்க பாட்டை கேட்க முடியறது. ஓய்ஞ்சு சலிச்சு வேலை முடிஞ்சு டிராபிக்-ல வண்டி ஓட்டும் போது கொஞசம் பாட்டு. இப்படி அக்கக்கா கேட்க முடியற்தே தவிர, நம்ப காலேஜ் தூங்குமூஞ்சி மரத்தடியில உட்கார்ந்துண்டு மணிக்கணக்கா பேசற சுகம் எல்லாம் தூரத்து ஏக்கமாப் போச்சு. ரெண்டு வருஷம் முன்னாடி வரைக்கும் இன்னிக்கு போகலாம், நாளைக்கு திரும்பிடலாம்னு என்னையே ஏமாத்திக்க முடிஞ்சுது. இப்ப எனக்கே அலுத்துப் போச்சு. முடிஞ்ச வரை இந்தப்பக்கம் வந்துடாத.” னு மெயில் அனுப்பியிருந்தான்.

இதையெல்லாம் யார்கிட்டயாவது சொன்னா வெறுப்புதான் மிஞ்சுறது. நம்ம மேல அக்கறை உள்ளவாளுக்கு நம்மை பார்த்தா எரிச்சல் வருது. அக்கறை இல்ல்லாதவாளுக்கு கிண்டலா இருக்கு. எல்லோரும் வெறுக்கும்படியாவும் பரிகாசம் பண்ணும்படியாவும் நான் இருந்துதான் என்ன செய்ய? சில சமயம் தற்கொலை பண்ணிக்கலாமானு கூட தோணுது.

ஊத்துக்காடு வெங்கட கவி, உலகமே வேண்டாம்னு நாதோபாசனை மாத்திரம் பண்ணினாராம். எங்க தன் பாட்டை அடுத்தவா கேட்டா, அந்தப் பாட்டுல மயங்கி தன்னைப் புகழ்ல முழுகடிச்சு, நாதோபாசனையை கெடுத்துடுவாளோனு, ராத்திரி ஊரே தூங்கினத்துக்கப்பறம் பாடுவாராம். அந்த மஹானுபாவர் கதையைப் பத்திரிகையில எழுதினா புகழ்ந்து மாஞ்சு போறவா எல்லாம், எனக்கு சங்கீதம் போறும்னு சொன்னா பாத்து சிரிக்கறா.

அதுக்காக நான் நாதபோசனை பண்றேன்னு சொல்லலை. ’அப்ப என்னதான் பண்ற?’-னு கேட்டா அதுக்கு பதில் என்கிட்டையே இல்லை. இது ஆத்ம அனுபவம் இல்லையா? இதை சொல்லியாப் புரிய வைக்க முடியும்? இதுதான் எனக்கு சரினு படறது. ஆனா சுத்தி இருக்கறவாள பார்க்கும் போது, சரிதானானும் சந்தேகம் வருது.

எவ்வளவு நாள்தான் இப்படியே இருக்கறது? என்னமோ என் சந்தோஷத்துக்காகதான் நான் போக மாட்டேங்கறேன்னு எனக்கு நானே சொல்லிண்டாலும், நான் என்ன சந்தோஷமாவா இருக்கேன்? என்ன பைத்தியக்காரத்தனமிது. வெறும் பாட்டு கேட்கறதுக்காகவவும், யாரும் படிக்காத பத்திரிகை-ல எப்பவோ ஒரு தடவை எழுதறத்துக்காகவும் அமெரிக்கா போகமாட்டேன்னு சொல்றது நியாயமில்லை.

என்னமோ நான் வளர்த்துதான் கலை வளரப்போறதா. இவ்வளவு நூற்றாண்டா எப்படி அழியாம இருந்துதோ அப்படியே இருக்காதா என்ன?

பாட்டுதான் உலகமா? ராகம் தெரியாத கோடி கணக்கான பேரெல்லாம் முட்டாளா? ஒழுங்கா மாமா சொன்ன வேலைய எடுத்துண்டா ஏதோ எல்லோருக்கும் சந்தோஷம் குடுத்தோம்ங்கற நிறைவாவது கிடைக்கும். இந்த இடத்தை விட்டு நகராமலேயிருந்து இன்னொரு இடம் நன்னா இருக்காது அப்படி சொல்றது என்ன நியாயம். ஒரு தடவை போய் பார்த்துட்டு பிடிக்கலைனா வந்துடறது. எப்படியும் இவா திட்றது என்னமோ நமக்கு உறைக்கப் போறதில்லை.

ஆமாம்!! அப்படிதான் செய்யணும். இப்படி பைத்தியமா அலைஞ்சது போறும்.

ராமு புதுசா browsing center ஆரம்பிச்சு இருக்கானாம். முதல் வேலையா அங்க போய் ஒரு ஈ-மெயிலை அனுப்பிட்டு வருவோம். சந்துரு வர்றதுக்குள்ள கிளம்பினாதான் உண்டு. அவன் வந்து பாட ஆரம்பிச்சுட்டா வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடும்.

அட! இப்போதான் பாலு தாத்தா வீடு வரை வந்து இருக்கேனா? மனசு சோர்வா இருந்தா வேகமா நடக்க முடியறதில்லை. கடையில ராமுவே இருக்கான் எவ்வளவு சொன்னாலும் பைசா வாங்கிக்க மாட்டான். ஐயோ!!! பைசானவுடனேதான் ஞாபகம் வருது. பர்ஸ் எங்க காணோம்? அதுலதானே வைத்தாவோட விசிடிங் கார்ட் இருக்கு. புல்வேளியிலேயே விட்டுட்டேனோ? பயத்துல மனசும் காலும் வேகமா பறக்கறது. அதோ இங்கதான் இன்னும் 10 அடி. சந்துரு வந்துட்டான் போல இருக்கே அவன் கூட யாரோ இருக்காளே! யாராயிருக்கும்?

எதோ தேவ சாரீரமா ஒலிக்கறதே. ஒலி காதை அடைஞ்ச அடுத்த கணமே கல்யாணி-னு மனசு கத்தறது. என்னையும் அறியாம கால் தானா உட்கார்ந்துடுச்சே. ஆஹா! என்ன ஒரு ஆலாபனை. “நிதிசால சுகமா”-னா பாட ஆரம்பிக்கறார். தியாகராஜரை மன்னன் அழைச்சு பொன்னும் பொருளும் குடுத்துப் பாட சொன்னதுக்கு “உன் பொன்னும் பொருளும் சுகமா?  என் ராமனின் சேவையே சுகம்”னு பாடியிருக்கார்.

என்னையும் அறியாம கண் கலங்கறது. பாட்டு முடியப்போறது. என்ன இது குழந்தை மாறி கேவி கேவி அழ ஆரம்பிக்கறேன்.

சந்துரு பாடினவர்கிட்ட “சார் பெரிய ரசிகர் திலகம். பாட்டுன்னா உசுரு.”-னு சொல்றான். அவனுக்கு தெரியுமா நான் கொஞ்ச நேரம் முன்னாடி அவனை  விட்டுட்டு போக நினைச்சேன்னு?

அங்க ஓரத்துல என் பர்ஸ் இருக்கே. கல்யாணில முழுகி அதை மறுபடியும் மறந்துட்டேன்.

இது என்ன ஆச்சர்யம்? அந்த பர்ஸ் சத்தம் போட்டு சிரிக்கறதே! என் அழுகையோட, வைத்தாவுக்கு எழுதணும்னு கற்பனை பண்ணி வெச்சு இருந்த வார்த்தைகளும் கரையறத பார்த்து சிரிக்கறதோ?

Read Full Post »