Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Palani’ Category

சென்ற வாரம் தொடங்கி இன்மதியில் ஒரு தொடர் எழுதுகிறேன்.

இந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது

இசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்களையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட அரிய மிருதங்க வினைஞர்தான் பர்லாந்து.

கடந்த சில நூற்றாண்டு கால வரலாற்றை பார்க்கும் போது, மிருதங்க வித்வானாய் நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் தஞ்சாவூர் நாராயணசாமியப்பா. மிருதங்க வினைஞர்களை பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் செவுத்தியான் என்றறியப்பட்ட செபஸ்டியன். செபஸ்டியன் நாராயணசாமியப்பாவுக்கு வேலை செய்தாரா என்று தெரியவில்லை. அவர் சமகாலத்தில் இருந்த மான்பூண்டியாபிள்ளை, அதற்கு அடுத்த தலைமுறையினரான தட்சிணாமூர்த்தி பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் போன்றோருக்கு வேலை செய்தவர் என்று தெரிய வருகிறது.

செபஸ்டியனின் மகன்கள் செங்கோல், பர்லாந்து, செட்டி ஆகிய மூவரும் தஞ்சாவூரில் இருந்தபடி வாத்தியங்களுக்கு வேலை செய்து வந்தனர். தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டிலேயே பெரும்பாலும் இந்த வேலைகள் நடை பெறும்.

சாதி/மத பாகுபாடுகள் மலிந்திருந்த காலகட்டத்திலும்,  இந்த சகோதரர்களின் கைவண்ணம் சமூக அடுக்குகளை தளர்த்தியது.  தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டில் தலித் கிருஸ்துவ பின்னணியில் இருந்து வந்த இவர்கள் நினைத்த வண்ணம் புழங்க முடிந்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும் தான் காரணம்”, என்று ஒருமுறை உருக்கமாய் கூறியது அன்று அந்த அரங்கில் இருந்தவர்களை சற்றே அசைத்தது.

miruthangam

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு வெகு நாட்களாய் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதங்கத்தை ஒரே நாளில் சரிபடுத்திக் கொடுத்த இளவயது பர்லாந்தின் கைகளில் தெய்வீகத்தன்மை நிறைந்திருப்பதாக தட்சிணாமூர்த்தி பிள்ளை கூறியுள்ளார் என்று ஒரு நேர்காணலில் சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன் கூறியுள்ளார்.

இந்தச் சகோதரர்களுள் பர்லாந்து என்கிற ஃபெர்னாண்டிஸுக்குத் தனி இடமுண்டு.

தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் இசை பயின்ற போதும், மணி ஐயரின் வீடு பாலக்காட்டில் தான் இருந்தது. மணி ஐயருக்கு கச்சேரிகளில் வாசிப்பதை விட, மிருதங்கம் என்கிற வாத்தியத்தை மேம்படுத்துவதில் ஈடுபாடு அதிகம். அவர் அந்த வாத்தியத்தில் செய்த பரிசோதனை முயற்சிகள் ஏராளம். இதனால் இயற்கையாகவே அவருக்கும் பர்லாந்துக்கும் ஒரு நெருங்கிய உறவு ஏற்பட்டது. நாளடைவில் தான் பாலக்காட்டிலும், மிருதங்க வேலை தஞ்சாவூரிலும் நடைபெறுவதை பொறுக்க முடியாமல் தன் இருப்பிடத்தையே தஞ்சைக்கு மாற்றிக் கொண்டார் அந்த மேதை.

தன் வீட்டிலேயே இடம் ஒதுக்கி எந்த நேரமும் மிருதங்க வேலை நடக்கும்படி பார்த்துக் கொண்டார். பல ஊர்களுக்கு கச்சேரி சென்றுவிட்டு வரும் போது சற்று ஓய்வெடுக்க மதியம் ஓய்வெடுக்கும் போதும், பர்லாந்து வேலை செய்து முடித்த பின் அந்த வாத்தியத்தை சரிபார்க்க சில நாத திவலைகளை எழுப்பினால் களைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு புத்துணர்ச்சியுடன் கிளம்பிவிடுவார் மணி ஐயர். எப்படித் தோல் பார்ப்பது, எந்த அளவில் வலந்தலை வைத்துக் கொள்வது, சாதம் எப்படி போடுவது, எப்படி மூட்டடிப்பது என்றெல்லாம் பர்லாந்துடன் கலந்து பேசி எண்ணற்ற மிருதங்க பரிசோதனைகளை மணி ஐயர் மேற்கொண்டுள்ளார்.

மணி ஐயரின் சமகால மேதையான பழனி சுப்ரமண்ய பிள்ளைக்கும் பர்லாந்துதான் மிருதங்க வேலை செய்து வந்தார். இந்த மூவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராம் கூறுகையில்:

ஒரு முறை, சில நாட்களுக்கு பர்லாந்து எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.

அவர் திரும்ப வந்த போது, பழனி ஐயாவுக்கு வேலை பார்க்கப் போயிருந்ததாகக் கூறினார்.  உடனே அப்பாவும் பழனியின் வாத்யத்தைப் பற்றி ஆர்வமாகக் விசாரித்த பின், “பழனியின் தொப்பி இவ்வளவு சுகமா இருக்கே. அது மாதிரி எனக்கு வேலை செஞ்சு தர மாட்டேங்கறியே”, என்றார்.

“அதுக்கென்ன ஐயா! அடுத்த மிருதங்கத்துல செஞ்சுட்டா போச்சு.”, என்றார் பர்லாந்து.

சில நாட்களுக்கெல்லாம், சொன்னது போலவே பழனி தொப்பி போல செய்திருப்பதாகச் சொல்லி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து எடுத்து வந்தார்.

அப்பா வாசித்துப் பார்த்து விட்டு, “இல்லைடா! பழனி தொப்பி மாதிரி இது இல்லையே.”, என்றார்.

“பழனி ஐயாவுக்கு செய்யறா மாதிரித்தான் செஞ்சேன். ஆனால், உங்களுக்காக கொஞ்சம் மாத்தினேன். அடுத்த தடவை அப்படியே செஞ்சு கொண்டு வரேன்.”

சொன்னாரே தவிர அதன் பின் அப்படி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து கொண்டு வரவே இல்லை. அப்பா பர்லாந்தைப் பார்க்கும் போதெல்லாம் பழனி தொப்பியைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்.

சில மாதங்களில் பொறுமை இழந்தவராய், “நீ எப்போ பண்ணி தரப் போறாய்? இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே!”, என்றார்.

அப்போது அப்பா பாம்பே கச்சேரிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.

“புதுத் தோல் வந்திருக்குங்க. நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. வரும் போது பழனி தொப்பியோட மிருதங்கம் தயாரா இருக்கும்.”, என்றார் பர்லாந்து.

அப்பா பாம்பே டூர் போய்விட்டு திரும்பியதும் வீட்டுக்குள் நுழையவில்லை. தோட்டம் தாண்டியதும், வீட்டுக்கு வலப்புறத்தில் ஒரு கொட்டகை உண்டு. அங்கு 20-25 மிருதங்கங்கள் இருக்கும். வேலையெல்லாம் அங்குதான் நடக்கும். பர்லாந்து அங்கு இருந்ததைப் பார்த்ததும், அப்பா நேராக கொட்டகைக்குள் சென்றுவிட்டார். பெஞ்சின் மேல் ஒரு மிருதங்கத்தை தயாராக வைத்திருந்தார் பர்லாந்து.

“இது பழனி தொப்பி மாதிரி பண்ணி இருக்கியா?”

“நீங்க வாசிச்சு பாருங்க ஐயா! அப்படியே பண்ணி இருக்கேன்”

அப்பா எடுத்து வாசித்துப் பார்த்தார். அவருக்குத் திருப்தியில்லை.

“ஏய்! இதுல அந்த சுகம் கிடைக்கலையேடா!”, என்றார்.

பர்லாந்து மெதுவாக சிரித்த படி, “அது அவர் கை வாகுங்க”, என்றான்.

“அப்ப எனக்கு வராதா!”, என்று குழந்தையைப் போல அப்பா கேட்டார்.

இந்த சம்பவம், மிருதங்க கலையில் உச்சத்தில் இருந்த மணி ஐயர் தன் சக கலைஞரிடமும் தனக்கு வேலை செய்த வினைஞரிடமும் வைத்திருந்த பெருமதிப்பை அழகாகப் படம்பிடிக்கிறது.

பலமுறை கச்சேரிக்குப் பின் தனக்கு அளிக்கப்பட்ட சால்வை போன்ற மரியாதைகளை பர்லாந்துவுக்கு அளித்து மகிழ்ந்துள்ளார் மணி ஐயர்.

“சொர்க்கம் என்றால் அது நல்ல சந்தன மரத்தில் சோமு ஆசாரி கடைந்து, பர்லாந்து வாத்தியத்தை மூட்டடித்து தயார் செய்து, அதில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு வாசிக்க நேர்வதுதான்”, என்றும் மணி ஐயர் கூறியுள்ளார்.

பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தைப் பற்றி கூறும் பல கலைஞர்கள், “அவரிடம் எந்தப் பாடகருக்கு கச்சேரி என்று சொல்லிவிட்டால் போதும். எந்த ஸ்ருதி என்று கூடச் சொல்ல வேண்டாம். மிருதங்கம் தேவையான ஸ்ருதியில் தயாராக இருக்கும். இத்தனைக்கும் அவரிடம் தம்புராவோ ஸ்ருதி பெட்டியோ இருந்ததில்லை. அத்தனை ஸ்ருதியும் அவர் மனத்தில் அத்துப்படியாய் இருந்தது”, என்கின்றனர்.

”ஒருமுறை முசிறி சுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்க வந்தபோது, என்னை செண்ட்ரல் காலேஜில் அன்று சாயங்காலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வாசிக்கச் சொன்னார். நான் முசிறிக்கு வாசிக்க எடுத்து வந்த இரண்டு வாத்யங்களை சில மணி நேரங்களில் பர்லாந்துவும் செட்டியும் எம்.எஸ்-க்கு வாசிக்கத் தோதாய் தயார்படுத்திவிட்டனர்.”, என்கிறார் டி.கே.மூர்த்தி.

பொதுவாக புது மிருதங்கத்தை நேரடியாக கச்சேரிகளில் வாசிக்க முடியாது. அதில் சிஷ்யர்கள் வாசித்து பழகுவர். முதல் சாதம், இரண்டாம் சாதம் உதிர்ந்து மூன்றாம் சாதம் போட்டவுடனேயே கச்சேரி மிருதங்கமாக அந்த வாத்யம் தகுதியுறும். பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தால் புது மிருதங்கமே பக்குவமான மிருதங்கம் போல இருக்கும். அப்படிப்பட்ட புது மிருதங்கத்தை வைத்துக் கொண்டு பாலமுரளி கிருஷ்ணாவுக்கு நேஷனல் புரோகிராம் வாசித்ததாகவும், அந்த வாசிப்பைக் கேட்டவர்கள் வாத்தியத்தின் நாதத்தை வெகுவும் புகழ்ந்ததையும் திருச்சி சங்கரன் நினைவுகூர்ந்துள்ளார்.

இன்றும் பர்லாந்தின் சந்ததியினர் சென்னையில் இருந்தபடி அனைத்து முன்னணி வித்வான்களுக்கும் மிருதங்கம் தயார் செய்து கொடுக்கின்றனர். 2013-ல் பர்லாந்தின் பெயரில் விருது ஒன்று நிறுவப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு சங்கீத வாத்யம் தயாரிக்கும் வினைஞருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. முதல் பர்லாந்து விருதை அவரது மகன் செல்வம் பெற்றார்.

Read Full Post »

ஒளிரும் துருவ நட்சத்திரம்
லலிதா ராம் பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்கும் புத்தகம் தனக்குத் தெரியும் விஷயங்களை எந்த வித அகம்பாவமும் இல்லாமல் மிகவும் பவ்யமாக ஆனால் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும், சுவாரசியமாகவும் கூறுகிறது. பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாசிப்பு பாணியிலேயே அமைந்திருப்பது போல் ஒரு நடையுடன் எழுதப்பட்டிருக்கிறது. தீவிர ஆராய்ச்சி, பேட்டிகள், அவரது வாசிப்பை புரிந்து கொள்ளும் முயற்சி இவை அனைத்தும் கூடி இருப்பதால் லலிதா ராமுடன் நாமும்  மிருதங்க வாசிப்பில் பலர் எட்ட முடியாத ஞானம், அத்துடன் பாடவும் கூடிய குரல் வளம், அர்ப்பணிப்பு  இவை அனைத்தும்  அமையப் பெற்ற ஒரு கலைஞருடன் பயணிக்க ஆரம்பிக்கிறோம் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதுமே.

மிருதங்கம் என்ற வாத்தியத்தைப் பற்றிய ஆதார பூர்வமான விவரங்கள், அதன் பல வித ஒலிகளின் விளக்கங்கள், அவற்றை விளக்கும் உவமைகள், தாளங்களைப் பற்றிய தகவல்கள், வாசிப்பு முறைகள், கச்சேரி நிகழ்வுகள், பல உன்னதக் கலைஞர்களின் மனோபாவங்கள், உணர்ச்சிகள், நட்புகள், நேசிப்புகள், அகம்பாவம், கர்வம், அடக்கம், மென்மை, கோபம் இவை எல்லாம் அலைஅலையாய் எழும்பி வருகின்றன புத்தகத்தில். மிருதங்கம், கஞ்சிரா இவை ஒலிப்பது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது.

மிருதங்கத்தைத் தவிர அவர் வாழ்க்கையில் வேறு ஏதாவது உண்டா? உண்டு. ஒரு பெண் கலைஞரின் அன்பும், காதலும், ஆதரவும். கோலார் ராஜம்மா என்ற இசைக் கலைஞர் தன் இசை வாழ்க்கையைத் துறந்து பழனி சுப்பிரமணிய பிள்ளையின் மிருதங்கத்துக்கு உயிரூட்டினார். இவரைப் பற்றிய சிறு குறிப்புகள் வருகின்றன புத்தகத்தில். ஆனால் எழுதாமல் விட்ட சில விவரங்களை அறிய வேண்டிய ஆவல் ஏற்படுகிறது. ராஜம்மா எத்தகைய கலைஞர்? அவர்கள் உறவில் எத்தகைய அன்பு இருந்தது? தாஜ்மகால் பின்னணியில் அவர்கள் புகைப்படம் ஒன்று இருப்பதால் அவர்கள் கட்டாயம் பயணங்கள் போயிருப்பார்கள் என்று தெரிகிறது. ராஜம்மா அவர் கச்சேரிக்குச் சென்றாரா? அவர்கள் இருவருக்கும் இடையே அமர்ந்திருக்கும் சிறு பெண் –ராஜம்மாவின்  பெண் — இசை பயின்றாளா? பாடகியான அம்மாவையும், அம்மாவின் உறவின் மூலம் வந்த ஒரு தேர்ந்த கலைஞரான அப்பாவையும் கொண்ட அந்தப் பெண் ஏன் இசை உலகில் பிரவேசிக்கவில்லை?  இவைகளுக்குப் பதில் கிடைப்பது எளிதில்லை. ஆனால் இவை அத்தனையும் மனத்தில் நிறைகிறது கேள்விகளாக பழனி சுப்பிரமணிய பிள்ளையின் வாழ்க்கையிலும் அவர் மிருதங்கத்திலும் நாம் ஒன்றிப் போகும்போது.

நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த நாடகமாய்ப் போகிறது புத்தகம். மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஒரு சின்னப் பையனுக்குக் கச்சேரியில் ஐந்து முறை தனி ஆவர்த்தனம் விடும் செம்பை, பாடகரும் தாள வாத்தியக் கலைஞர்களும் விட்டுக்கொள்ளும் சவால்கள், புறா குமுறுவது போல் என்று பலர் உவமிக்கும் கும்கிகள், ஃபரன்கள், தாள கதிகள் இவற்றை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியும் என்று தோன்றவில்லை.

இறக்கும்போது கூட விரல்களை மிருதங்கம் வாசிப்பது போல் அசைத்தபடி இறக்கும் கலைஞர்கள் நிஜமாகவே இறப்பதில்லை என்று தோன்றுகிறது. லலிதாராம் போன்ற ரசிகர்கள் அவர்களை உயிர்ப்பித்தபடி இருப்பார்கள்.

(லலிதா ராமின்) பி.கு: துருவ நட்சத்திரத்தின் இரண்டாவது பதிப்பு வெளி வந்துவிட்டது. முதல் பதிப்பில் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தாலும் நேரமில்லை. ஆதலால் இரண்டு தகவல் பிழைகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.

சென்னை புத்தகச் சந்தையில் இன்று முதல் கிடைக்க வாய்ப்புள்ளது. டிஸ்கவரி புக் பாலஸின் ஸ்டாலில் கிடைக்கும்.

Read Full Post »

தி ஹிந்து நாளிதழின் இணையத்தளத்தில் ‘துருவ நட்சத்திரம்’ நூலுக்கான மதிப்புரை இன்று வெளியாகியுள்ளது.

மதிப்புரை: http://www.thehindu.com/arts/books/article2923778.ece

Read Full Post »

கர்நாடக சங்கீத உலகின் மிருதங்க மேதை பழனி சுப்பிரமணியப் பிள்ளைஎன்கிற பழனி சுப்புடுவின் வாழ்க்கை வரலாற்றை ‘துருவ நட்சத்திரம்’ நூலாக எழுதியிருக்கிறார் இசை வரலாற்று ஆய்வாளர் லலிதாராம். இசைக் கலைஞர்கள் வரலாற்றை எழுதுவதில் முன்னோடி உ.வே.சா.அவர் படைத்த ‘மகா வைத்தியநாத சிவன்’, ‘கனம் கிருஷ்ணய்யர்’, ‘கோபாலகிருஷ்ண பாரதியார்’ போன்றவற்றை வாசகர்கள் படித்திருக்கக்கூடும். இசை வரலாற்று எழுத்தாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இத்தகைய எழுத்தாளர் வரிசையில் சமீபத்தில் தடம் பதித்துள்ள இளைஞர் லலிதாராம்.

மிருதங்கத்தில் தமது நாதமயமான வாசிப்பு மூலம் லய விவகாரங்களை அறிந்தோர், அறியாதோர் என இருசாரார் மனத்தையும் கொள்ளை கொண்ட மகா கலைஞன் பழனி சுப்புடு. இந்த நாத மயமான லயமயமான குண ரூப (abstract) உலகை எழுத்தில் எழுதிக் காட்டுவது எளிதல்ல. இத்தகைய சவாலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார் லலிதாராம். இசைக் கலைஞனது வரலாற்றினூடே அவனது பாட்டினை அல்லது வாசிப்பை, தனியாக அவற்றுக்கே உரிய சங்கீத நுட்பங்களுடன் விளக்கி அவற்றை ஆவணப்படுத்துவதை லலிதாராம் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இது தமிழில் இசை வரலாற்று நூல்களுக்கு அவர் சேர்த்துள்ள புதுப் பரிமாணம்.

16 அத்தியாயங்கள், 224 பக்கங்களில் புதுக்கோட்டைப் பள்ளியின் மூலக் கலைஞர்கள் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்திப் பிள்ளைஆகியவர்களின் குணச்சித்திரங்களைப் புனைகதை உத்திகளுடன் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக மிருதங்க மேதைமுருகபூபதி பற்றிய தனி அத்தியாயமும், பழனி சுப்புடுவின் நாம் அறியாத முகங்களும் நம்மை வியக்க வைக்கின்றன. போதும்… இனி வளர்த்தப் போவதில்லை. வாங்கிப் படித்துப் பாருங்கள்! சுப்புடுவினது மிருதங்க கும்காரமும் ரீங்காரமும் உங்கள் காதுகளில் நிச்சயம் கேட்கும்!

– துருவ நட்சத்திரம், லலிதா ராம், சொல்வனம் பதிப்பகம்,விலை: ரூ 150/

Read Full Post »

டிசம்பர் 11 அன்று சென்னை ராக சுதா அரங்கில் துருவ நட்சத்திரம் வெளியானது.

ஞாயிறு காலை 9.00 மணிக்கு அவ்வளவு பேர் கூடி அரங்கை நிறைத்தது ஆச்சர்யமாக இருந்தது.  இந்த விழாவுக்காகவே பெங்களூர், ஓசூர் போன்ற ஊர்களில் இருந்து நண்பர்கள் வந்து நெகிழ வைத்தனர்.

விழாவைப் பற்றி கிரியும், சுகாவும் விவரமாகவே எழுதியுள்ளனர்.

அன்றைய கச்சேரியில் பழனி வழியில் வந்திருக்கும் இரு இளம் வித்வான்களின் தனியை இங்கு காணலாம்.

நூல் வெளியான அன்று ஹிந்துவில், கோலப்பன் புத்தகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதியிருந்தார். சில நாட்களில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் ஒரு கட்டுரை வெளி வர, “என்ன செய்யற-னு தெரியல. ஆனா என்னமோ செய்யர போல இருக்கு”, என்கிற ரீதியில் பல நண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன.

இந்த இரு கட்டுரைகளின் உபயத்தில், ம்யூசிக் அகாடமியில் கர்நாடிக் ம்யூசிக் புக் ஸ்டோரின் ஸ்டாலில் புத்தகம் எதிர்பார்த்ததை விட நன்றாகவே விற்றது என்றால், இணையத்தில் நண்பர் சொக்கன் எழுதிய அறிமுகத்தினால் இந்தப் புத்தகத்தை வாங்கினோம் என்று பலர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினர்.  “இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு ஆர்டரா?” என்று உடுமலை.காம் சிதம்பரம் அதிர்ச்சியில் பல நாட்கள் இருந்தார். சில நாட்களாய் ஆர்டர் இல்லை என்று நேற்று பேசும் போது சொன்னார். அப்போதுதான் அவர் குரலில் கொஞ்சம் ஆசுவாசம் தெரிந்தது.

புத்தகம் எழுதும் போது, கதை போல எழுதிய அத்தியாயங்கள் எல்லாம் அதிகப் பிரசங்கம் ஆகி விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. இத்தனைக்கும் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற அத்தியாயங்கள் சொல்வனத்திலும், இந்த வலைப்பூவிலும் வெளியானவைதான். புத்தகத்தைப் படித்தவர்கள் அனைவருக்கும் அந்தப் பகுதிகளே பெரிதும் பிடித்திருக்கின்றன. பிரபல எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், இரா.முருகன் போன்றோரும் லா.ச.ரா-வின் மகன் சப்தரிஷி போன்ற தேர்ந்த ரசிகர்களும் இதனை உறுதி செய்தனர்.  இதுவரை இணையத்தில் வெளியாகாத ஓர் அத்தியாயம் சில நாட்களுக்கு முன் (சேதுபதியின் பதிப்புரையோடு) தமிழ் பேப்பரில் வெளியானது.

இ.பா-வும் அ.மி-யும் புத்தகத்தைப் பற்றிச் சொன்னவை இந்த வார சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் தினமணியிலும் புத்தகத்தில் இருந்து ஒரு சிறிய பகுதி வெளியாகியிருந்தது.

இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு விளம்பரம் நான் எதிர்பார்க்காத ஒன்று.

எல்லாவற்றையும் விட,  “இணையத்தில் ஓர் ஓரத்தில் எழுதவதன் மூலம் இவ்வளவு நண்பர்களா”, என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

அந்த நண்பர்களுள் பலரை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், பணி நிமித்தமாக இந்த வாரக் கடைசியில் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. திரும்ப ஒன்றரை மாதங்கள் ஆகும்.

புத்தகங்களுடனும், நண்பர்களுடனும் உறவாடும் அரிய வாய்ப்பை இழக்கத்தான் வேண்டி உள்ளது 😦

புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டாலில் (ஸ்டால் எண் 334)  ‘துருவ நட்சத்திரம்’ புத்தகம் கிடைக்கும்.

இணையத்தில் பெற: http://udumalai.com/?prd=thuruva+natchatram&page=products&id=10381

Read Full Post »