Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘bharathi ramasubban’

கேட்காத பாட்டெல்லாம் – 2
+++++++++++++++++++++++++

இந்தத் தொடரில் இரண்டாவது பாடலாக மாயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் தோடி ராகப் பாடல் – காமிதே காருணான்விதே.

இந்தப் பாடலுக்கு ஒரு சுவையான பின்னணி உண்டு.

1931-ல் சங்கீத வித்வத் சபை ஒரு போட்டியை அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில், நல்ல இசையோடும் பொருளோடும் பாடல்கள் வருவது சற்றே மங்கியிருந்ததால், அதை மாற்றும் நோக்கில் ஒரு போட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் போட்டியில் வாகேயக்காரர்கள் ஒரு பாடலை உருவாக்கி கலந்து கொள்ளலாம். பாடல் ‘பாரதத்தைப்’ பற்றி இருக்க வேண்டும். பாரத நாட்டை ஒரு தேவதையாக உருவகம் செய்து பாடலைப் புனைய வேண்டும். பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து பாஷைகளில் ஒன்றாக இருக்கலாம்.

1931-ம் ஆண்டு அக்டோபர் மாத அகாடமி ஜர்னலில் இதற்கான விவரங்கள் உள்ளன. முதலில் இந்தப் போட்டிக்கு போதுமான அளவு பங்களிப்பு வரவில்லை என்றும், போட்டியில் கலந்து கொள்வதற்கான கடைசி தேதியை நீட்டித்த போதும் அதிகம் பேர் கலந்து கொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

எவ்வளவு குறைவான போட்டியாளர்கள் இருந்தாலும் இந்தப் போட்டியை நடத்திவிட வேண்டும் என்று அகாடமி தீர்மானித்துள்ளது. கடைசியில் 20 பாடல்கள் போட்டிக்கு வந்துள்ளன. அவற்றை ஒன்பது போட்டியாளர்கள் சமர்ப்பித்து உள்ளார்கள். தமிழ், தெலுன்ப்க்கு, சமஸ்கிருதம் – ஆகிய மொழிகளில் பாடல்கள் வந்துள்ளன.

வந்த பாடல்களை, டைகர் வரதாசாரியார், டி.எல்.வெங்கட்ராம ஐயர், ஜலதரங்கம் ரமணய்ய செட்டியார், ஆகிய மூவரும் நடுவர்களாக இருந்து பரிசீலித்திருக்கிறார்கள்.

வந்த பாடல்களுள் இரன்ம்டு பாடல்கள் மட்டுமே அவர்கள் அளவுகோல்படித் தேரியதாய் அறிக்கைத் தெரிய வருகிறது, அந்த இரண்டு பாடல்களையுமே செய்தவர் மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிதான். அவ்விரண்டு பாடல்களுமே சமஸ்கிருதப் பாடல்கள்.

‘காம மந்திரத்தில்’ தம்புரா ஸ்ருதியுடன் நடுவர்கள் முன் அந்தப் பாடல்களைப் மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி பாடிக் காண்பித்துள்ளார். இரண்டுமே நல்ல பாடல்கள் என்றும், பரிசு தோடி ராகப் பாடலுக்கு என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவரங்களும் பாடலின் ஸ்வர சாஹித்யக் குறிப்பும் மேற்சோன்ன அகாடமி ஜர்னலில் இருந்து வந்தாலும், இந்தப் பாடல் கச்சேரிகளில் புழக்கத்தில் இல்லை.

இதைப் பதிவு செய்ய விதுஷி Bharathi Ramasubban-ஐ அணுகினேன். அவர் அரும்பாடு பட்டு பாடம் பண்ணி பாலைப் பதிவு செய்து அனுப்பினார்.

கேட்காத பாடல் – இன்று உங்களுக்காக என் யுடியூப் தளத்தில்.

அற்புதமான தோடியை நாம் ரசிக்கக் கொடுத்த பாரதிக்கும், பாடலை சாஹித்யத்துடன் கண்டு ரசிக்கும் படி காணொளியை அமைத்துக் கொடுத்த விதுஷி ஸ்ரீவித்யா ராமநாத்துக்கும் என் நன்றிகள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

Read Full Post »

பாரதி ராமசுப்பன் பாடி தீட்சதர் அகண்டத்தில் கேட்ட போது அவரது அழுத்தம் என்னை மிகவும் கவர்ந்தது. கணீர் குரலில் வாயைத் திறந்து பாடுகிறார். சொற்கள் புரிகிறது. தீட்சதர் கிருதிகளை அதன் கம்பீரம் குறையாமல் அவர் பாடிய போதே சீஸனில் ‘must listen’ லிஸ்டில் போட்டு வைத்துவிட்டேன்.  அன்று வயலின் வாசித்தவர் ராஹுல். மிருதங்கம் வாசித்தவர் பரத்வாஜ்.

கச்சேரியை ‘சங்கரம் அபிராமி மனோஹரம்’ என்று திருக்கடையூர் பற்றி தீட்சிதர் புனைந்துள்ள மனோஹரி ராக கிருதியுடன் தொடங்கினார் பாரது. பாடலில் வரும் மத்யம கால வரிகளும், பாரதியின் கல்பனை ஸ்வரங்களும் நல்ல விறுவிறுப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. ஸ்வரத்தை நிறைவு செய்யும் போது எதிர்பாரா தருணத்தில் பல்லவிக்கு வந்தது நன்றாகவே இருந்தது.

ரீதிகௌளை ராகத்தை கீற்றாய் காட்டிவிட்டு, ’சேரராவதேமிரா’ கிருதியை தொடங்கினார். அதற்கு பரத்வாஜ் பல்லவியிலேயே நிறைய ஃபரன்களை அள்ளி வீசிய போது காலையில் கேட்ட லெக்-டெம் நினைவுக்கு வந்தது. இளைஞர்தானே, போகப் போக கற்றுக் கொண்டு விடுவார். பரத்வாஜுக்கு நல்ல காலப்ரமாண சுத்தம். மிருதங்கத்தில் தொப்பி நன்றாக அமைந்துள்ளது. நினைத்த படி, கும்காரங்கள் பேசுகின்றன. அதே அளவு நாதம் வலந்தலையிலும் கிட்ட அவர் உழைக்க வேண்டும். இன்னொரு விஷயம், பாலக்காடு மணி ஐயர் சொன்னது. பாடகரும், உடன் வாசிப்போரும் eye-contact-ல் இருக்க வேண்டும். ”நிரவல் இன்னும் நாலு ஆவர்த்தம் உண்டா? தீர்மானம் வரப் போகிறதா? ஸ்வரம் இன்னும் பாடலாமா? ”, என்றெல்லாம் கண்ணாலேயே பேசிக் கொள்ள வேண்டும், என்று அடிக்கடி கூறுவாராம் மணி ஐயர். அந்த யோசனை இந்தக் கூட்டணிக்கு நிச்சயம் பயன்படும். பாதி நேரத்துக்கு மேல், மிருதங்க கலைஞரும் வயலின் கலைஞரும் தலையைக் குனிந்து கொண்டே இருக்கின்றனர். அதிலும் சில இடங்களில், வயலின் இட்டு நிரப்புவார் என்று பாரதி வயலினைப் பார்க்க, அவரோ தரையைப் பார்த்தபடி ஒரே நோட்டில் வில்லைப் போட்டார். இவையெல்லாம் பெரிய காரியங்கள் அல்ல, சிறு சிறு நெளிவு சுளிவுகள்தான். காலப்போக்கில் இவ்விளைஞர்களுக்கு அவை கை வந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

கிருதிகளில் அழகான சங்கதிகள் பல பாடி, நிரவல் ஸ்வரங்களுடன் ரீதிகௌளையை நிறைவு செய்தார். அதன் பின், கச்சேரியின் சப்-மெயினாக பிலஹரியை எடுத்துக் கொண்டு ராகம் பாடினார். பாரதிக்கு அற்புதமான சாரீரம். ஓபன் த்ரோட்டில், மேல் ஸ்தாயியில் அவர் பாடும் போது வெகு அழ்காக உள்ளது. தார ஸ்தாயி சஞ்சாரங்கள் எல்லாம் ஸ்ருதியில் ஒன்றரக் கலந்து அற்புதமாய் ஒலிக்கிறது. குரலிலே ரவை ஜாதி சங்கதிகள் சுலபமாய் வந்து விழுகின்றன. இவை எல்லாம் சேர்ந்தால் ஆலாபனை ரொம்ப ஒழத்தியாய்தானே அமைய வேண்டும்? துரதிர்ஷ்டவசமாக அப்படி அமையவில்லை. நன்றாக இருந்த போதும், இதை விட இன்னும் நன்றாக அமைந்திருக்கலாமே என்றே தோன்றிக் கொண்டிருந்தது.

அதற்கு முக்கிய காரணம், பாரதியின் மந்த்ர ஸ்தாயி. மத்யம ஷ்ட்ஜத்துக்கு கீழே செல்ல வேண்டும் என்றாலே பாரதியிடம் ஒரு தயக்கம் தென்படுகிறது. மேல் ஸ்தாயியில் கம்பீரமாய் ஒலிக்கும் குரல், வேறு யாருடையதோ என்பது போல ஒலிக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் ஸ்ருதி சுத்தம். குறிப்பாக ஆலாபனையின் மையத்தை ஓரிடத்தில் நிறுத்தி, அதற்கு எட்டியுள்ள ஸ்வரங்களை எட்டிப் பிடித்து தொட்டுக் காண்பிக்கும் போதெல்லாம் ஸ்ருதியுடன் கலந்திருத்தல் மிக மிக அவசியமாயிற்றே. ஸ்ருதி விலகல் என்பது நல்ல பாலில் ஒரு சொட்டு விஷமாயிற்றே. ஸ்ருதியை அன்னை என்கிறோம். அம்மாவுடன் செல்லப் பிணக்கெல்லாம் வாழ்க்கைக்குச் சரி. கச்சேரிக்கு?

ஆலாபனைக்குப் பின் நாராயண தீர்த்தரின் ‘பூரய மம காமம்’ என்ற தரங்கத்தைப் பாடினார். “கோபாலா” என்ற இடத்தில் ஒரு மின்னல் வேக பிருகா வெகு அற்புதமாய் அமைந்தது.

பிலஹரியைத் தொடர்ந்து, லலிதா ராகத்தில் ‘ஹிரண்மயீம்’ பாடினார். பாடலின் பாவம் சரியாக வெளிப்படும் வகையில் இழைத்து, உழைத்துப் பாடினார். அதன் பின், மெயின் ராகத்துக்கு முன் குரலை warm-up செய்ய துரித காலத்தில் ‘பண்டுரீதி’ பாடினார்.

முதல் சஞ்சாரத்திலேயே இது சந்தேகமில்லாமல் கீரவாணிதான் என்று புரியும் வகையில் ஆலாபனையைத் தொடங்கினார். பாவபூர்வமாய் பாடுபவர்களுக்கு உகந்த ராகங்களுள் ஒன்று கீரவாணி. பஞ்சமத்தை மையமாக்கி பாடிய இடங்களும், தார ஷட்ஜத்தை சுற்றிச் சுற்றிப் பாடிய இடங்களும் அழகாக அமைந்தன. முன் சொன்ன குறைகளும் நிகழாமல் இல்லை. ஆலாபனை நிறைவு செய்யும் வேளையில் ஒரு பிடி சரியாக கைவராமல் படுத்தியது.

வயலின் இளைஞரின் ஆலாபனை பாரதியுடைய ஆலாபனையை ஒட்டி அமையவில்லை என்ற போதும், மிக நன்றாகவே அமைந்தது. விரலில் நல்ல வேகம் பேசிய போதும், அளவறிந்து வாசிக்கும் பக்குவமும் வாய்த்துள்ளது. சோலோ-வில் பிரமாதமாக வாசிப்பது போலவே, ஃபாலோ செய்வதிலும் பாடகருக்கு பக்க பலமாய் இருந்து, இன்னும் கொஞ்சம் போஷித்து வாசித்தால் இந்த இளைஞருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

‘கலிகியுண்டே’ பாடுவார் என்று நான் எண்ணியிருக்கையில், ‘வாணனை மதி சூடிய’ என்ற தேவாரப் பாடலை எடுத்துப் பாடினார். டி.எம்.தியாகராஜன் அமைத்த மெட்டு என்று முன்பு படித்த ஞாபகம். அடுத்தடுத்து விழும் எதுகைகளின் அழகு மிளிரும் படி பாரதி பாடினார். அவ்வப்போது தெளித்த ரவை சங்கதிகளும் ரசிக்கும் படி இருந்தன. நிரவலுக்கு, “வீரனை விடமுண்ட” என்ற இடத்தை எடுத்துக் கொண்டு விஸ்தாரமாகப் பாடினார். ஸ்வரம் பாடும் போது வைத்த சில பொறுத்தங்கள் அழகாக அமைந்தன.

அதனைத் தொடர்ந்து, பரத்வாஜ் மிஸ்ர சாபுவில் தனி வாசித்தார். வைத்த கோர்வைகள் எல்லாம் பளிச் ரகம். நாதத்தில் கவனம் செலுத்தி, வேகத்தின் பால் நாட்டத்தை கொஞ்சம் மட்டுப் படுத்திக் கொண்டால் இன்னும் அழகாக இவர் வாசிப்பு மிளிரும்.

தனிக்குப் பின், யமன் கல்யாண், நாதநாமக்ரியா, புன்னாகவராளி ராகங்களில் ஸ்லோகம் பாடி, தீட்சதரின் ஷியாமா சாஸ்திரியின்  ‘கனக ஷைல’ கிருதியை விளம்ப காலத்தில் பாடினார். இது போன்ற கிருதிகளை முறையாகப் பாடுவது பாரதியின் பெரிய பலம். மெயின் பீஸ் ஆனதும், கொலுவுக்கு பாடுவது போல துக்கடாவை இரைக்காமல், கூட்டம் அதிகமில்லை என்ற போதும், இது போன்ற கிருதிகளை எடுத்துக் கொண்டு உழைத்துப் பாடியதற்கே பாரதியைப் பாராட்ட வேண்டும்.

சாஸ்திரி அரங்கத்தில் மதிய வேளையில் கழிப்பறையை பூட்டி வைத்துவிடுகிறார்கள். அப்படி என்னத்தை அங்கிருந்து கொள்ளையடித்துக் கொண்டு போய்விடப் போகிறோம். அரங்கில் யாராவது மெல்லிய குரலில் பேசினால் கூட நன்றாக எதிரொலிக்கிறது. இதை உணர்ந்தும் கச்சேரிக்கு வந்த சிலர் ஓயாமல் பேசிக் கொண்டு கழுத்தறுத்தனர். மேடையில் இருந்த ஒருவருக்கு உறவு போலத் தோன்றிய ஒருவர் அவ்வப்போது செல் ஃபோனில் பேசிக் கொண்டே இருந்தார். குறைந்த பட்சம், அரங்குக்கு வெளியில் பேசிவிட்டு திரும்பலாம் என்ற அறிவு கூடவா இவர்களுக்கு இருக்காது?

கச்சேரிகளுக்கு இடையில் வயிற்றுக்கு சோறிட நேரம் இருக்காது என்று முன் கூட்டியே உணர்ந்து காலையிலேயே ஃபுல் மீல்ஸ் அடித்துவிட்ட என் புத்திசாலித்தனத்தை நானே சிலாகித்த படி, சாஸ்திரி ஹாலில் இருந்து நாரத கான சபாவுக்கு நடையைக் கட்டினேன்.

PS: Thanks you Bharathi for pointing out the error on composer for ‘Kanakashaila’

Read Full Post »

பதிவிட முடியாமல் வேலை பளு. இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டுகொள்ளாமல் விடக் கூடாது என்பதற்காக, அவசர கதியில் ஒரு பதிவு.

பாரதிய சங்கீத வைபவம் என்ற அமைப்பு கடந்த 4 வருடங்களாக தீட்சிதர் கிருதிகளுக்காக அகண்டம் நடத்தி வருகிறது. அகண்டத்தில், காலையில் தொடங்கி தொடர்ந்து 12 மணி நேரம் தீட்சிதரின் பாடல்கள் பாடப்படுகின்றன. ”இது வரை நடந்த அகண்டங்களில் மட்டும், குறைந்த பட்சம் 280 தீட்சிதர்களாவது பாடப்பட்டு ஆவணப்படுத்தப்படூள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் , தீட்சிதர் கிருதிகள் முழுவதையும் ஆவணப்படடுத்தி விட முடியும்” என்கிறார் இந் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார்.

வருடா வருடம் நடக்கும் இந்த அகண்டம், தீட்சிதர் கிருதிகளை ஆவணப்படுத்துவதோடு அல்லாமல், வளர்ந்து வரும் கலைஞர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் களமாகவும் விளங்குகிறது. நேர்த்தியான முறையில் செயலாக்கப்பட்டு வரும் இந் நிகழ்ச்சிக்குப் பின் அசுர உழைப்பு பொதிந்துள்ளது. அகண்டத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பங்கு பெறுபவரைத் தொடர்பு கொண்டு, யார் யார் எந்தெந்த பாடல்களைப் பாடுவது என்ற திட்டம் தயாராக ஆரம்பித்துவிடுகிறது. நாள் முழுதும் பாடும் போதும், ஒருவர் பாடிய பாடலை மற்ற கலைஞர் பாடுவதில்லை. கடந்த வருடங்களில் இடம் பெற்ற பாடல்களை முடிந்த வரைத் தவிர்க்கவும் கலைஞர்கள் கூடுமானவரை முயல்கின்றனர்.

2010-ம் ஆண்டுக்கான அகண்டம் ஃபெப்ரவரி 28-ம் தேதி சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடை பெற்றது. கிருதிகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போகாமல், தீட்சிதர் கிருதிகளைக் கொண்டு கச்சேரியாகவே பெரும்பாலானோர் பாடினர்.

காலையில் சில வேலைகள் இருந்ததால் முதல் கச்சேரி முடியும் போதுதான் செல்ல முடிந்தது. நான் அரங்கில் நுழையும் போது லட்சுமி ரங்கராஜன் சவுக்க காலப்ரமாணத்தில் ‘ஏஹி அன்னபூர்ணே’ பாட ஆரம்பித்தார். அவர் பாடிய புன்னாகவராளி இன்னும் பல நாட்களுக்கு காதுகளில் ஒலிக்கும்.

அடுத்து பாடிய ஜி.ரவிகிரண் நிறைய அரிய கிருதிகளைப் பாடினார். ஆர்த்ர தேசி, மார்க தேசி போன்ற அபூர்வ ராகங்களில் பாடினார். கச்சேரியில் பிரதான ராகங்களாக தாமவதியையும், காம்போஜியையும் எடுத்துக் கொண்டார். இரண்டு ஆலாபனைகளுமே சற்று அதீதமாகப் பாடியதாகத் தோன்றியது. இரண்டு ஆலாபனைகளிலுமே போதிய அளவில் கார்வைகள் கொடுக்கப்படவில்லை என்றே தோன்றியது. குறிப்பாக காம்போதியில், தார ஸ்தாயி காந்தாரத்தில் நின்று நிதானமாய் ராகத்தை வளர்க்காதது அத்தனை நிறைவாக இல்லை. காம்போதியில் கண்ட ஜாதி அட தாளத்தில் அமைந்த ‘காசி விஷ்வேஸ்வர’ பாடலை முதல் முறையாய் கேட்டேன். காம்போதியின் கம்பீரம் நன்றாக வெளிப்படும் வண்ணம் உழைத்து இழைத்துப் பாடினார் ரவிகிரண்.

ரவிகிரண் கச்சேரி முடிந்ததும் அளிக்கப்பட்ட மதிய உணவுக்கு ஏகக் கூட்டம். ஒரு வழியாய் உண்டு வருவதற்குள் சீதா ராஜன் தன் மாணவியருடன் சில பாடல்கள் பாடிவிட்டிருந்தார். அடுத்த ஆண்டு அகண்டத்தில் 2-3 கவுண்டர்களில் உணவு பரிமாற ஏற்பாடு செய்யலாம். கனமும் கம்பீரமும் நிறைந்த கிருதிகளை ஒன்றன் பின் ஒன்றாக, ஆர்பாட்டமே இல்லாது, கிருதியின் முழு அழகும் பரிமளிக்கும் வண்ணம், ஒரே குரலில் சீதா ராஜனும் அவர் சிஷ்யைகளும் பாடியது மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. ஒவ்வொரு கிருதிக்கு முன்னும், அந்தப் பாடலைப் பற்றிய சிறு குறிப்பையும் சொன்னது, கேட்டவர்களின் ரசிகானுபவத்தை அதிகப்படுத்தியிருக்கும்.

மதிய வேளையில், சவிதா ஸ்ரீராம், சங்கரி சுப்ரமணியம், பாரதி ராமசுப்பன் என்று மூன்று இளம் கலைஞர்களின் கச்சேரி இடம் பெற்றது. மூவரையும் முதல் முறையாய் கேட்டேன். சவிதாவின் கச்சேரி விறுவிறுப்பாக அமைந்தது. குறிப்பாக ‘ரேணுகா தேவி’ என்ற கன்னட பங்காள கிருதியை வெகு சிறப்பாகப் பாடினார். வேகமான சங்கதிகளில் ஒரு சில ஸ்ருதி விலகல்களை மட்டும் அவசியம் சரிபடுத்திக் கொள்ள வேண்டும்.

சங்கரி சுப்ரமணியத்துக்கு நல்ல குரல் இருக்கிறது. நாஸாமணி போன்ற விவாதி ராகங்களைக் கூட நாசூக்காக கையாளும் திறனும் இருக்கிறது. ஆனாலும், இளைஞர்தானே, அதனால் கொஞ்சம் தயங்கிப் பாடினார் போல இருந்தது. பயிற்சியும், அனுபவம் தரும் முதிர்ச்சியும் இவரை ஒரு தேர்ந்த கலைஞராக ஆக்கும்.

பாரதி ராமசுப்பனுக்கு கணீர் குரல்! மூன்று ஸ்தாயிகளிலும் நன்றாகப் பேசுகிறது. தீட்சிதர் கிருதிகள் பாடத் தேவையான அழுத்தம் இவருக்கு நிறையவே இருக்கிறது. வாயைத் திறந்து, வார்த்தைகள் புரியும்படி பாடுகிறார். ‘மானஸ குருகுஹ’, ‘ஸ்ரீதும் துர்கே’ என்று அவர் பாடிய அத்தனை கிருதிகளும் மணி மணியாய் ஒளிர்ந்தன.

மாலையில் நெய்வேலி சந்தானகோபாலன், விஜயலட்சுமி சுப்ரமணியம், டி.எம்.கிருஷ்ணா ஆகிய மூன்று பிரபல வித்வான்களின் கச்சேரிகள் நடைபெற்றன. நெய்வேலி சின்னதும் பெரியதுமாய் நிறைந்த (சிஷ்யப்) படையோடு வந்திருந்தார். கர்நாடக ராகங்கள், ஹிந்துஸ்தானி ராகங்கள், வெவ்வேறு காலப்ரமாணத்தில் அமைந்த கிருதிகள் என்று தேர்வு செய்து, அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பாகப் பாடும் வகையில் உழைத்துச் சொல்லிக் கொடுத்திருப்பதற்குப் பெரிய சபாஷ்!

விஜயலட்சுமி சுப்ரமணியம், எஸ்.ராஜத்தின் சிஷ்யை. அதிகம் தெரியாத கிருதிகளைப் பாடுவதே பாணியாகக் கொண்ட வழியில் வந்தவர். சாமந்தா, கோகிலாரவம் போன்ற அரிய ராகங்களையும், ’மரகத லிங்கம்’ என்ற வசந்தா ராக அரிய கிருதியையும் அவர் பாடியது ஆச்சரியம் ஒன்றுமில்லை. ‘பஜரே ரே’ என்ற பிரபல கல்யாணி கிருதியை பிரதானமாகப் பாடினர். ‘தேவீம் ஷக்தி பீஜோத்பவ’ என்ற இடத்தில் செய்த நிரவல் அளவாகவும் அருமையாகவும் இருந்தது.

‘Grand Finale’ என்ற முன்னறிவிப்புடன் டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி தொடங்கியது. ரயிலைப் பிடிக்க நேரமாகிவிட்டதால் அவர் பாடிய தரங்கிணியை மட்டுமே கேட்க முடிந்தது. ”செஞ்சுருட்டி போல இந்த ராகத்தைக் கையாள்கிறார்கள். ஆனால் இதுதான் சரியான முறை.”, என்று தரங்கிணியை விளக்கி, கிருதிக்கு விறுவிறுப்பாக கல்பனை ஸ்வரங்களும் பாடினார். கச்சேரியை முழுமையாகக் கேட்டவர்கள், அன்று “ஸ்ரீநாதாதி குருகுஹோ” கிருதியை வைத்துக் கொண்டு எம்.ஃபில் தீஸிஸே படித்து விட்டார் கிருஷ்ணா என்றனர்.

காலையில் அரங்கை நிறைத்த கூட்டம், நாள் முழுவதும் தொடர்ந்து இருந்ததைக் காண நிறைவாக இருந்தது.

Read Full Post »