பாரதி ராமசுப்பன் பாடி தீட்சதர் அகண்டத்தில் கேட்ட போது அவரது அழுத்தம் என்னை மிகவும் கவர்ந்தது. கணீர் குரலில் வாயைத் திறந்து பாடுகிறார். சொற்கள் புரிகிறது. தீட்சதர் கிருதிகளை அதன் கம்பீரம் குறையாமல் அவர் பாடிய போதே சீஸனில் ‘must listen’ லிஸ்டில் போட்டு வைத்துவிட்டேன். அன்று வயலின் வாசித்தவர் ராஹுல். மிருதங்கம் வாசித்தவர் பரத்வாஜ்.
கச்சேரியை ‘சங்கரம் அபிராமி மனோஹரம்’ என்று திருக்கடையூர் பற்றி தீட்சிதர் புனைந்துள்ள மனோஹரி ராக கிருதியுடன் தொடங்கினார் பாரது. பாடலில் வரும் மத்யம கால வரிகளும், பாரதியின் கல்பனை ஸ்வரங்களும் நல்ல விறுவிறுப்பான தொடக்கத்தைக் கொடுத்தன. ஸ்வரத்தை நிறைவு செய்யும் போது எதிர்பாரா தருணத்தில் பல்லவிக்கு வந்தது நன்றாகவே இருந்தது.
ரீதிகௌளை ராகத்தை கீற்றாய் காட்டிவிட்டு, ’சேரராவதேமிரா’ கிருதியை தொடங்கினார். அதற்கு பரத்வாஜ் பல்லவியிலேயே நிறைய ஃபரன்களை அள்ளி வீசிய போது காலையில் கேட்ட லெக்-டெம் நினைவுக்கு வந்தது. இளைஞர்தானே, போகப் போக கற்றுக் கொண்டு விடுவார். பரத்வாஜுக்கு நல்ல காலப்ரமாண சுத்தம். மிருதங்கத்தில் தொப்பி நன்றாக அமைந்துள்ளது. நினைத்த படி, கும்காரங்கள் பேசுகின்றன. அதே அளவு நாதம் வலந்தலையிலும் கிட்ட அவர் உழைக்க வேண்டும். இன்னொரு விஷயம், பாலக்காடு மணி ஐயர் சொன்னது. பாடகரும், உடன் வாசிப்போரும் eye-contact-ல் இருக்க வேண்டும். ”நிரவல் இன்னும் நாலு ஆவர்த்தம் உண்டா? தீர்மானம் வரப் போகிறதா? ஸ்வரம் இன்னும் பாடலாமா? ”, என்றெல்லாம் கண்ணாலேயே பேசிக் கொள்ள வேண்டும், என்று அடிக்கடி கூறுவாராம் மணி ஐயர். அந்த யோசனை இந்தக் கூட்டணிக்கு நிச்சயம் பயன்படும். பாதி நேரத்துக்கு மேல், மிருதங்க கலைஞரும் வயலின் கலைஞரும் தலையைக் குனிந்து கொண்டே இருக்கின்றனர். அதிலும் சில இடங்களில், வயலின் இட்டு நிரப்புவார் என்று பாரதி வயலினைப் பார்க்க, அவரோ தரையைப் பார்த்தபடி ஒரே நோட்டில் வில்லைப் போட்டார். இவையெல்லாம் பெரிய காரியங்கள் அல்ல, சிறு சிறு நெளிவு சுளிவுகள்தான். காலப்போக்கில் இவ்விளைஞர்களுக்கு அவை கை வந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
கிருதிகளில் அழகான சங்கதிகள் பல பாடி, நிரவல் ஸ்வரங்களுடன் ரீதிகௌளையை நிறைவு செய்தார். அதன் பின், கச்சேரியின் சப்-மெயினாக பிலஹரியை எடுத்துக் கொண்டு ராகம் பாடினார். பாரதிக்கு அற்புதமான சாரீரம். ஓபன் த்ரோட்டில், மேல் ஸ்தாயியில் அவர் பாடும் போது வெகு அழ்காக உள்ளது. தார ஸ்தாயி சஞ்சாரங்கள் எல்லாம் ஸ்ருதியில் ஒன்றரக் கலந்து அற்புதமாய் ஒலிக்கிறது. குரலிலே ரவை ஜாதி சங்கதிகள் சுலபமாய் வந்து விழுகின்றன. இவை எல்லாம் சேர்ந்தால் ஆலாபனை ரொம்ப ஒழத்தியாய்தானே அமைய வேண்டும்? துரதிர்ஷ்டவசமாக அப்படி அமையவில்லை. நன்றாக இருந்த போதும், இதை விட இன்னும் நன்றாக அமைந்திருக்கலாமே என்றே தோன்றிக் கொண்டிருந்தது.
அதற்கு முக்கிய காரணம், பாரதியின் மந்த்ர ஸ்தாயி. மத்யம ஷ்ட்ஜத்துக்கு கீழே செல்ல வேண்டும் என்றாலே பாரதியிடம் ஒரு தயக்கம் தென்படுகிறது. மேல் ஸ்தாயியில் கம்பீரமாய் ஒலிக்கும் குரல், வேறு யாருடையதோ என்பது போல ஒலிக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் ஸ்ருதி சுத்தம். குறிப்பாக ஆலாபனையின் மையத்தை ஓரிடத்தில் நிறுத்தி, அதற்கு எட்டியுள்ள ஸ்வரங்களை எட்டிப் பிடித்து தொட்டுக் காண்பிக்கும் போதெல்லாம் ஸ்ருதியுடன் கலந்திருத்தல் மிக மிக அவசியமாயிற்றே. ஸ்ருதி விலகல் என்பது நல்ல பாலில் ஒரு சொட்டு விஷமாயிற்றே. ஸ்ருதியை அன்னை என்கிறோம். அம்மாவுடன் செல்லப் பிணக்கெல்லாம் வாழ்க்கைக்குச் சரி. கச்சேரிக்கு?
ஆலாபனைக்குப் பின் நாராயண தீர்த்தரின் ‘பூரய மம காமம்’ என்ற தரங்கத்தைப் பாடினார். “கோபாலா” என்ற இடத்தில் ஒரு மின்னல் வேக பிருகா வெகு அற்புதமாய் அமைந்தது.
பிலஹரியைத் தொடர்ந்து, லலிதா ராகத்தில் ‘ஹிரண்மயீம்’ பாடினார். பாடலின் பாவம் சரியாக வெளிப்படும் வகையில் இழைத்து, உழைத்துப் பாடினார். அதன் பின், மெயின் ராகத்துக்கு முன் குரலை warm-up செய்ய துரித காலத்தில் ‘பண்டுரீதி’ பாடினார்.
முதல் சஞ்சாரத்திலேயே இது சந்தேகமில்லாமல் கீரவாணிதான் என்று புரியும் வகையில் ஆலாபனையைத் தொடங்கினார். பாவபூர்வமாய் பாடுபவர்களுக்கு உகந்த ராகங்களுள் ஒன்று கீரவாணி. பஞ்சமத்தை மையமாக்கி பாடிய இடங்களும், தார ஷட்ஜத்தை சுற்றிச் சுற்றிப் பாடிய இடங்களும் அழகாக அமைந்தன. முன் சொன்ன குறைகளும் நிகழாமல் இல்லை. ஆலாபனை நிறைவு செய்யும் வேளையில் ஒரு பிடி சரியாக கைவராமல் படுத்தியது.
வயலின் இளைஞரின் ஆலாபனை பாரதியுடைய ஆலாபனையை ஒட்டி அமையவில்லை என்ற போதும், மிக நன்றாகவே அமைந்தது. விரலில் நல்ல வேகம் பேசிய போதும், அளவறிந்து வாசிக்கும் பக்குவமும் வாய்த்துள்ளது. சோலோ-வில் பிரமாதமாக வாசிப்பது போலவே, ஃபாலோ செய்வதிலும் பாடகருக்கு பக்க பலமாய் இருந்து, இன்னும் கொஞ்சம் போஷித்து வாசித்தால் இந்த இளைஞருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
‘கலிகியுண்டே’ பாடுவார் என்று நான் எண்ணியிருக்கையில், ‘வாணனை மதி சூடிய’ என்ற தேவாரப் பாடலை எடுத்துப் பாடினார். டி.எம்.தியாகராஜன் அமைத்த மெட்டு என்று முன்பு படித்த ஞாபகம். அடுத்தடுத்து விழும் எதுகைகளின் அழகு மிளிரும் படி பாரதி பாடினார். அவ்வப்போது தெளித்த ரவை சங்கதிகளும் ரசிக்கும் படி இருந்தன. நிரவலுக்கு, “வீரனை விடமுண்ட” என்ற இடத்தை எடுத்துக் கொண்டு விஸ்தாரமாகப் பாடினார். ஸ்வரம் பாடும் போது வைத்த சில பொறுத்தங்கள் அழகாக அமைந்தன.
அதனைத் தொடர்ந்து, பரத்வாஜ் மிஸ்ர சாபுவில் தனி வாசித்தார். வைத்த கோர்வைகள் எல்லாம் பளிச் ரகம். நாதத்தில் கவனம் செலுத்தி, வேகத்தின் பால் நாட்டத்தை கொஞ்சம் மட்டுப் படுத்திக் கொண்டால் இன்னும் அழகாக இவர் வாசிப்பு மிளிரும்.
தனிக்குப் பின், யமன் கல்யாண், நாதநாமக்ரியா, புன்னாகவராளி ராகங்களில் ஸ்லோகம் பாடி, தீட்சதரின் ஷியாமா சாஸ்திரியின் ‘கனக ஷைல’ கிருதியை விளம்ப காலத்தில் பாடினார். இது போன்ற கிருதிகளை முறையாகப் பாடுவது பாரதியின் பெரிய பலம். மெயின் பீஸ் ஆனதும், கொலுவுக்கு பாடுவது போல துக்கடாவை இரைக்காமல், கூட்டம் அதிகமில்லை என்ற போதும், இது போன்ற கிருதிகளை எடுத்துக் கொண்டு உழைத்துப் பாடியதற்கே பாரதியைப் பாராட்ட வேண்டும்.
சாஸ்திரி அரங்கத்தில் மதிய வேளையில் கழிப்பறையை பூட்டி வைத்துவிடுகிறார்கள். அப்படி என்னத்தை அங்கிருந்து கொள்ளையடித்துக் கொண்டு போய்விடப் போகிறோம். அரங்கில் யாராவது மெல்லிய குரலில் பேசினால் கூட நன்றாக எதிரொலிக்கிறது. இதை உணர்ந்தும் கச்சேரிக்கு வந்த சிலர் ஓயாமல் பேசிக் கொண்டு கழுத்தறுத்தனர். மேடையில் இருந்த ஒருவருக்கு உறவு போலத் தோன்றிய ஒருவர் அவ்வப்போது செல் ஃபோனில் பேசிக் கொண்டே இருந்தார். குறைந்த பட்சம், அரங்குக்கு வெளியில் பேசிவிட்டு திரும்பலாம் என்ற அறிவு கூடவா இவர்களுக்கு இருக்காது?
கச்சேரிகளுக்கு இடையில் வயிற்றுக்கு சோறிட நேரம் இருக்காது என்று முன் கூட்டியே உணர்ந்து காலையிலேயே ஃபுல் மீல்ஸ் அடித்துவிட்ட என் புத்திசாலித்தனத்தை நானே சிலாகித்த படி, சாஸ்திரி ஹாலில் இருந்து நாரத கான சபாவுக்கு நடையைக் கட்டினேன்.
PS: Thanks you Bharathi for pointing out the error on composer for ‘Kanakashaila’
Read Full Post »