Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2021

பொடி சங்கதி தொடரின் முதல் காணொளி வெளியாகிவிட்டது.

பாடகர், ஹரிகதை வித்வான், மேடைநாடக நடிகர், சினிமா நட்சத்திரம், பரதநாட்டிய ஆசிரியர் என்று பன்முக ஆளுமையாக விளங்கியும் இன்று அதிகம் வெளியில் தெரியாமல் இருக்கும் ஆளுமை சிதம்பரம் பிள்ளை.

இவருடைய தந்தையார் சுப்ரமண்ய பிள்ளை நாகஸ்வர கலைஞர் என்றும் இவருடைய தமையனார் நடராஜசுந்தரம் பிள்ளை ஒரு வாக்கேயகாரர் என்றும் – இந்தக் காணொளிக்கான மறுமொழியாய் முனைவர் பி.எம்.சுந்தரம் சொல்லியிருப்பதிலிருந்து தெரிய வருகிறது.

Read Full Post »

நேற்று ஜி.என்.பி பாடியுள்ள ’தாழையூத்து’ கச்சேரியின் இணைப்பு கண்ணில்பட்டது. அதை பேஸ்புக்கில் பகிர்ந்துவிட்டு, அதைப் பற்றிய கதையை இன்று சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.

அனேகமாய் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆச்சர்யப்படும் விதமாய் நான்கு ஐந்து பேர் ‘எங்கே கதை?’ என்று சட்டையை உலுக்கினர். சந்தோஷமாகத்தான் இருந்தது.

கதைக்குச் செல்வோம்….

ஜி.என்.பி பாடியுள்ள கச்சேரிகளில் ‘நெல்லை மணி’ வயலினும், ‘நெல்லை தேவராஜன்’ மிருதங்கமும் வாசித்து நமக்குக் கிடைக்கும் ஒரே பதிவு இதுதான். ஜி.என்.பி-க்கு நெருக்கமானவர்கள் பலரை நான் விசாரித்துப் பார்த்தவரை இந்த பக்கவாத்தியங்களுடன் அவர் செய்துள்ள ஒரே கச்சேரி இதுதான். ஏன் வழக்கமான பக்கவாத்தியங்கள் இல்லாமல் இந்தப் பக்கவாத்தியங்களுடன் கச்சேரி செய்தார் என்ற கேள்வி உறுத்திக்கொண்டே இருந்தது.

அதற்கான பதிலில் ஒரு பகுதி தஞ்சாவூர் ஆனந்தா லாட்ஜ் திரு.கிட்டப்பாவை சந்தித்த போது கிடைத்தது. பழைய தஞ்சாவூர் சங்கீத கோஷ்டியில் கிட்டப்பா முக்கியமானவர். திருவையாறு தியாகராஜ ஆராதனை கமிட்டியில் காரியதரிசியாக இருந்தவர். பல சங்கீத வித்வான்களுக்கு நண்பர். குறிப்பாக ஜி.என்.பி-க்கும் பாலக்காடு மணி ஐயருக்கும் ஆப்த நண்பர். வாழ்வில் இளமைப் பருவத்தை பெரும்பாலும் இவ்விருவரின் கச்சேரிகளைக் கேட்பதிலேயே கழித்தவர்.

நெல்சன் மாணிக்கம் சாலை அருகில் உள்ள ஒரு வீட்டில் அவரை சிலமுறை சந்தித்து இருக்கிறேன். திருவையாற்று நினைவுகளைப் பற்றிச் சொல்லும் போது,

“ஒரு வருஷம் வானொலியில் நேரடி ஒலிபரப்புக்காக ஜி.என்.பி கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. ஜி.என்.பி திருவையாற்றுக்கு வரும்போதே கடும் ஜுரம். அவருக்கு ஜுரம் என்று எனக்குத் தெரியாது. ‘என்ன பாடப் போகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு அவர் ஏதோ நான்கு பாடல்கலைச் சொன்னார்.

அனேகமாய் அன்று சாரீரத்தை அதிகம் சோதிக்காத பாடல்களாய் அவர் தேர்வு செய்திருந்திருக்கக் கூடும். நான் அதைக் கேட்டுவிட்டு, “இப்படிப் பாடினால் கச்சேரி எப்படி உருப்படும்?”, என்று சொல்லிவிட்டு என் வேலைகளைப் பார்க்க கிளம்பிவிட்டேன். சில மணி நேரங்களுக்கு பிறகு ஒரு காகிதத்தைச் சுமந்தபடி ஜி.என்.பி-யின் சிஷ்யர் என்னைத் தேடி வந்தார். அந்தக் காகிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டு, “சார் இதை உங்களிடம் காட்டி. இதில் எதைப்பாடவேண்டும் என்று கேட்டு வரச் சொன்னார்.”, என்றார்.

அந்தக் காகிதத்தில் தியாகராஜரின் கிருதிகள் பட்டியல் இருந்தது. அழகிய கையெழுத்தில் 138 பாடல்கள் இருந்த பட்டியலைப் பார்த்ததும் எனக்கு என்னமோ போல ஆகிவிட்டது. உடனே அவரிடம் ஓடினேன். அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். உடம்பைத் தொட்டுபார்த்தால் நெருப்பாய்க் கொதிக்கும் ஜுரம். நான் என் தவறை உணர்ந்துகொண்டேன். ஆனாலும் விடாமல் நான் சொல்வதைத்தான் பாடுவேன் என்று பிடிவாதம் பிடித்தார். நான் எனக்குப் பிடித்த ஐந்து பாடல்களைச் சொன்னேன். அன்று மேடையெறியதும் ஜுரத்தின் சுவடே தெரியாமல் கச்சேரி ஓஹோவென்றாகவிட்டது.

மேடையை விட்டு இறங்கும் போது ஓடிச் சொன்று அவர் கைகளைப் பிடிக்கச் சென்றேன்.என்னை அருகில் இழுத்து, “எனக்குச் சுத்தமா முடியல. நான் மெட்ராஸுக்குப் போகல. தாழையூத்துக்குப் போய் ஒரு வாரம் இருந்துட்டு மெட்ராஸுக்கு போறேன்”, என்றார்.

ஜி.என்.பி-க்கு கல்லிடைகுறிச்சி, தாழையூத்து மாதிரி திருநெல்வேலி ஜில்லாவில் உயிரைக்கூட கொடுக்கத் தயாரியிருந்த ரசிகர்கள் உண்டு. அங்கு போய் கொஞ்ச நாள் இருந்தால் உடலும் மனமும்சரியாகிவிடும் என்று அவருக்கு ஒரு நம்பிக்கை”, என்றார் கிட்டப்பா.

அவர் தாழையூத்து என்றதுமெனக்குப் பொறிதட்டியது. அவர்டம் இந்தக் கச்சேரியைப் பற்றிக் கேட்டேன். கிட்டப்பாவுக்கு விவரங்கள் தெரியவில்லை. “அப்போது திருச்சூர் ராமசந்திரன்தான் கூட இருந்த சிஷ்யன். அவரிடம் கேளுங்கள்.”, என்றார்.

வித்வான் ராமசந்திரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது முதல் கேள்வியாய் இதைத்தான் கேட்டேன். அவர் முகத்தில் உணர்ச்சிப்பெருக்கைப் பார்க்க முடிந்தது. அவர் சொல்ல நினைப்பதை சொல்ல முடியாமலந்தப்பெருக்கு தடுத்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்கள் கழித்துச் சுதாதரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.“அந்தக் கச்சேரி ஒரு ஆச்சர்யமான கச்சேரி. திருவையாற்றில் இருந்து தாழையூத்துக்கு ஓய்வெடுக்கத்தான் சார் சென்றார். ஆனால் அங்கு ஜி.என்.பி வந்திருக்கிறார் என்கிற செய்தி பரவி கொஞ்ச கொஞ்சமாய் அவரைச் சந்திக்க ரசிகர்கள் வந்தபடி இருந்தனர். ஒரு கட்டத்தில் பக்கத்து ஊர்களில் இருந்து கூட ஆட்கள் வந்து, “இன்னிக்கு எங்க கச்சேரி”, என்று கேட்க ஆரம்பித்தனர்.

தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிப் பார்த்தாலும் அவர்கள் விடுவதாயில்லை. கடைசி ஆயுதமாய், “நான் தனியாகத்தான் வந்திருக்கிறேன். பக்கவாத்தியமெல்லாம் வரவில்லை. எப்படி கச்சேரி செய்வது?”, என்று தட்டிக் கழிக்கப் பார்த்தார். வந்திருந்தவர்கள் விடுவதாயில்லை. ”நாங்கள் பக்கவாத்தியம் ஏற்பாடு செய்கிறோம். அதிகம் வெண்டாம் ஒரு மணி நேரம் பாடினால் கூட போதும்”, என்று வற்புறுத்தவும் ஒப்புக் கொண்டார். அப்படித்தான் உள்ளூர் கலைஞர்களான நெல்லை மணியும், நெல்லை தேவராஜனும் சாருக்கு வாசித்தார்கள்.

கச்சேரியை சஹானாவில் ஆரம்பித்து குரலெல்லாம் பதமாயிருக்கிறதா என்று பார்க்கும்போதே கல்லிடைகுறிச்சி வேதாந்த பாகவதரின் சகோதரர் ராமலிங்க பாகவதர் வந்து முன் வரிசையில் உட்கார்ந்துவிட்டார். அதற்கு பிறகு எங்கிருந்துதான் அவருக்கு அப்படி ஒரு தெம்பு வந்ததோ தெரியவில்லை.

அன்று பாடிய கல்யாணியில் எத்தனை பாய்ச்சல்? ஸ்வரம் ஸ்வரம் தாவி எத்தனை வாதி ஸம்வாதி ப்ரயோகங்கள்? தார ஸ்தாயியில் தைவதம் நிஷாதமெல்லாம் கூட அநாயாசமாய் தொட்டுக் காட்டியிருப்பார். நல்ல காலம் அந்தக் கச்சேரியைப் பதிவு செய்தார்கள். இல்லையென்றால் இழந்த எவ்வளவோ பொக்கிஷங்களுள் ஒன்றாக இதுவும் தொலைந்திருக்கும்.”

”அடப்பாவி மனுஷா” என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன். முடியாமல் ஜுரத்தில் பாடிய கல்யாணியா இப்படி?

இப்போது இந்தக் கதையை நினைத்துக் கொண்டு இன்னொருமுறை அந்தக் கல்யாணியைக் கேட்டுப் பாருங்கள். ஒரு பக்கம் ஆனந்த கண்ணீர் சொரியும். கூடவே ஜி.என்.பி-யின் சீடர் எஸ்.கல்யாணராமன் ஸ்ருதி பத்திரிக்கையில் கேட்ட ‘Did his fans kill GNB?’ என்ற கேள்வியும் ஒலித்து மனத்தை அழுத்தும்.

Read Full Post »

கடந்த இருபது ஆண்டுகளில் கர்நாடக இசை தொடர்பான தேடல்களில் பல விஷயங்கள் கிடைத்துள்ளன. அதில் சில விஷயங்கள் ‘சுவாரஸ்யமான தகவல்கள்’ என்று வகைப்படுத்தலாம். இந்தச் சிறு தகவல்களை வைத்து ஆய்வு செய்யவோ அல்லது கட்டுரை ஒன்றை எழுதவோ முடியாது. பயனில்லாத துக்கடா செய்தி என்றும் ஒதுக்கக்கூடியவை அல்ல.

இவற்ரை வைத்துக் கொண்டு வாரமொரு செய்தியாய் யுடியூபில் பகிரலாம் என்ற எண்ணம் வந்தது. இதுதான் ‘பொடி சங்கதி’. எனக்குக் கிடைத்ததைப் பகிர்தல் ஒரு பக்கம் இருந்தாலும், இதைப் பகிர்வதன் மூலம் இந்த விஷயங்களைப் பற்றி இன்னுமறிந்தவர் கண்ணில்பட்டு, இது தொடர்பான பார்வை விசாலமாகக்கூடும் சாத்தியம் இருக்கிறதென்று தோன்றுகிறது.

பொடி சங்கதி – வாரம் ஒன்றாய் என்னுடைய புதிய யுடியூப் சானலில் வெளியாகும்.

தொடர்ந்து பேசலாம்.

Read Full Post »