Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Interview’ Category

இன்று விதுஷி சுகுணா புருஷோத்தமனின் எண்பதாவது பிறந்த நாள்.

நான் அவரைப் பற்றி 2007-ல்தான் தெரிந்து கொண்டேன்.

அந்த வருட டிசம்பர் இசை விழாவில் அகாடமியில் அவர் சிம்மனந்தன தாளத்தில் அமைந்த பல்லவியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார் என்ற செய்தியில்தான் நான் அவரைப் பற்றி முதன் முதலில் தெரிந்து கொண்டேன்.

நான் லக்ஷுமீஸம், சிம்மனந்தனம் போன்ற தாளங்களின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனேயன்றி அவற்றை யாரும் பாடிக் கேட்டிருக்கவில்லை. அதனால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல ஆவல் எழுந்தது.

பல்லவியை விதுஷி சுகுணா பாடுவதற்கு முன் சிறியதாக தோடி ராகத்தில் ஆலாபனையும், தானமும் பாடினார். பத்து நிமிடங்களுக்குக் குறைவாகவே அவற்றைப் பாடியிருப்பார். ஆனால் அவற்றில் சொட்டிய தோடி ராகம் அன்று அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது பல்லவிக்காகத்தான் என்கிற எண்ணத்தை மறக்கடிக்கச் செய்தது.

தாளங்களில் அதிக அளவு அட்சரங்கள் கொண்ட தாளம் சிம்மனந்தனம் (128 அட்சரங்கள்). அதிகம் காணக் கிடைக்காத குரு, புளுதம், காகபாதம் போன்ற அங்கங்களைக் கொண்ட தாளத்தை அன்று அவர் பிரமிக்கத்தக்க வகையில் கையாண்டார். திரிகாலம், திஸ்ரம் போன்ற பல சாகஸங்களை அனாயாசமாகச் செய்தார். அவற்றைக் காணத்தான் நான் அங்கு சென்றிருந்தேன் என்றாலும் என் மனம் அவர் பாடிய தோடியிலேயே சொக்கிக் கிடந்தது. வெறும் சதுஸ்ர நடையை மனத்தில் ஓட்டியபடி அவர் பாடிய தோடியின் சௌந்தரியத்தில் மட்டும் திளைக்கவே மனம் விரும்பியது.

அன்று தொடங்கி எனக்கு வாய்ப்பு அமைந்த போதெல்லாம் அவருடைய கச்சேரிகளையும், பதிவுகளையும் கேட்டு வந்தேன். அவருடைய சங்கீதத்துக்கு இணையாக அவருடைய மேடை ஆகர்ஷணமும் (stage presence) அவர் பேசிய போதெல்லாம் பளீரிட்ட நகைச்சுவையுணர்வும் என்னை அவர் நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் நாட வைத்தன.

அடுத்த 5/6 வருடங்களில் கிட்டத்தட்ட பத்து கச்சேரிகளை நேரில் கேட்டிருப்பேன். 2010-வாக்கில் இசைக் கலைஞர்களைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில் விதுஷி சுகுணாவையும் ஒரு நாள் சந்திக்க வேண்டுமென்ற நினைத்திருந்தேனே தவிர அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. 2013-ல் பரிவாதினி தொடங்கிய போது, அதில் நிறைய நேர்காணல்கள் செய்ய வேண்டுமென்றும் திட்டமிருந்தது. அப்போதுதான் விதுஷி சுகுணாவை எனக்குத் தெரிந்தவர் மூலமாக தொடர்பு கொள்ள முயன்றேன்.

அப்போது அவர் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தார். சில வாரங்களுக்கு ஒருமுறை விசாரித்து வந்தேன். நிலைமையில் முன்னேற்றமில்லை என்ற செய்திதான் வந்துகொண்டிருந்தது. ஒருநாள், “ராம்! அந்த நேர்காணல் நடக்காதுனு நினைக்கறேன்”, என்று என் நண்பர் சொல்லவும் நான் வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டேன். பல மாதங்கள் கழித்து 2014 செப்டம்பரில் ஒருநாள் அதே நண்பர் அழைத்தார். “நீ அதிர்ஷ்டசாலி! சுகுணா மாமி நன்றாகத் தேறி வந்துவிட்டார். நீ அவர்களைச் சந்திக்கலாம்”, என்றார்.

நேர்காணலுக்கு அனுமதி வாங்கித் தருவதாகவும் சொன்னார். சொன்னவரை அடுத்த பல நாட்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இறுதியில் ‘நாத இன்பம்’ சபையை நடத்தும் திருமதி.ஜெயலட்சுமியின் முயற்சியில் நேர்காணலுக்கான வாய்ப்பு கிடைத்தது.

2014-ல் செப்டம்பர் மாதக் கடைசியில் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். நான் முன்பு பார்த்திருந்ததற்குப் பாதியாய் இளைத்திருந்தார். முகத்தில் இருந்த பிரகாசமும், அவ்வப்போது பளீரிடும் குறும்பு கலந்த புன்னகையும் வழக்கம் போல இருந்தன. சந்தோஷமாகப் பேசவும், பாடவும் செய்தார் என்றாலும் பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை இளைப்பாற வேண்டியிருந்தது.

இரண்டு மணி நேரத்துக்கு அவரைப் பதிவு செய்த பின்னும் கூட எனக்குக் கேட்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் அவரை அதற்கு மேல் துன்பப்படுத்தலாகாது என்று சம்பிரதாயமாய் கேட்கும் கடைசி கேள்விக்குள் தாவினேன்.

உள்ளுக்குள் இன்னொரு முறை சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக அந்த இன்னொரு சந்திப்புக்கான வாய்ப்பே அமையவில்லை. சில மாதங்களுக்குள் அவர் உடல்நிலை மீண்டும் மோசமாகி 2015-ன் தொடக்கத்தில் அவர் மறைந்தும் போனார்.

அவரை இன்னொருமுறை சந்திக்கலாம் என்று எழுதாமல் வைத்திருந்த நேர்காணலை அவர் மறைவுக்குப் பின் எழுதக் கைவரவேயில்லை. சில நாட்களுக்கு முன்னால் அவருடைய 80-வது பிறந்த நாள் ஏப்ரல் 4-ம் தேதி வருகிறது என்று ஒரு பதிவைப் பார்த்தேன். அந்தப் பதிவு என்னை மீண்டும் அந்த நேர்காணலை நோக்கிச் செலுத்தியது.

மீண்டும் ஒருமுறை கேட்டுப் பார்த்த போது நான் பதிவு செய்து வைத்திருந்தது முழுமையான பார்வையைக் கொடுக்காது என்றாலும், இருக்கும் வரையிலும் கூட அது ஒரு பொக்கிஷம் என்றுபட்டது. பிறந்த நாளுக்குள் எழுதிவிட வேண்டும் என்று கையோடு எழுதி முடித்துவிட்டேன்.

அவர் என்னிடம் சொன்னதை ஒன்று விடாமல் இந்த நேர்காணலில் கொடுத்துள்ளேன். சொல்லாமல் போனதை நினைத்துக் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் அவையும் காற்றுமண்டலத்தில் எங்கோ மிதந்து கொண்டுதான் இருக்குமென்று தோன்றுகிறது.

ஏனெனில் உன்னதக் கலைஞர்கள் சாஸ்வதர்கள். அவர்கள் எழுப்பிய கலையலைகள் காலச்சுழலில் சில காலம் வெளியில் தெரியாமல் இருக்கலாம். கீழ் செல்லும் அலை ஒருநாள் மேல் வந்துதானே ஆக வேண்டும்?

ஆர்ப்பரிக்காத ஆனால் அழுத்தமான இந்த இசையலையின் சிறு ஸ்பரிசத்தை அவரது எண்பதாவது பிறந்த நாளையொட்டிப் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி என்று சொல்வதைவிட ஆசுவாசமாய் இருக்கிறது.

நேர்காணல் வரவிருக்கும் கனலி இதழில் வெளியாகும்.

Read Full Post »

பெரம்பூரில் வளர்ந்த எனக்கு விதுஷி சீதா நாராயணனைக் கேட்க இளமையில் நிறைய வாய்ப்புகள் இருந்திருந்தாலும் அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அப்போது எனக்கு கர்நாடக இசையில் பெரிய ஈடுபாடு இல்லை. எனக்கு ஈடுபாடு வந்ததும் நான் துரத்தித் துரத்திக் கேட்டவர்களில் அவர் இல்லை. 2014-ல்தான் அவரை நான் கேட்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு கச்சேரியில் அவர் வெளிப்படுத்திய புதுமைகளும் அளவு மீறாத கற்பனைகளும் ஆர்பாட்டமில்லாத அலங்காரங்களும் என்னைப் பெரிதும் ஈர்த்தன.

2016-ல் இவருடைய அகாடமி கச்சேரியைக் கேட்ட அனுபவத்தை இங்கு எழுதியிருந்தேன்.

அதில், ”இவரைப் பற்றி இன்னும் விவரங்கள் திரட்டி 2017-ல் நிச்சயம் எழுதுகிறேன்,” என்று எழுதியிருந்தேன்.

2017-ல் எழுதுகிறேன் என்று சவடால்விட்டாலும் அவரைச் சாவகாசமாகச் சந்திக்க முடிந்தது 2018-ல்தான். சந்திப்புக்குப்பின் பலமுறை எழுத நினைத்து, ஒவ்வொரு முறையும் பேச்சுக்கு நடுவில் அவர் பாடுவதைக் கேட்டபோதெல்லாம், ‘என்ன எழுதினாலும் இந்தக் குழைவையும் இனிமையையும் எழுத்தில் கொண்டுவராமல் – எழுதி என்ன பயன்?’ என்கிற கேள்வி மனத்தில் உதித்து என்னைத் தொடர முடியாமல் செய்துவிடும். அவர் சொன்ன விஷயங்கள் நிச்சயம் பதியப்பட வேண்டியவை என்பதும் என்னை உறுத்திக் கொண்டே இருந்தன. சற்றே நீளமான நேர்காணல் என்றபோதும் அவர் சொன்ன விஷயங்கள் செறிவானவை என்பதால் எதையும் குறைக்காமல் அப்படியே தந்துள்ளேன்.

படம்: எஸ்.ஹேமமாலினி

முழு நேர்காணலை படிக்க இங்கு சொடுக்கவும்.

Read Full Post »

சங்கீத கலாநிதி எம்.எல்.வி-யின் நேர்காணல் பதிவு ஒன்று சம்பிரதாயாவில் இருப்பது எனக்கு 2009-ல் தெரிய வந்தது. அப்போது நான் ஜி.என்.பி-யின் நூற்றாண்டு மலரைத் தொகுத்துக் கொண்டிருந்தேன். நூற்றாண்டுக்கு சில நாட்களே இருந்த நேரத்தில் சம்பிரதாயாவுக்குச் சென்றேன். அந்த நேர்காணலின் அச்சுப் பிரதியை நகலெடுத்து மலரில் உபயோகித்துக் கொள்ள அனுமதி கிடைத்தது.

பிரச்னை என்னவென்றால், அந்தப் அச்சு வடிவத்தில் சாதாரண சம்பாஷணையில் வரும் திக்கல் திணறல்கள், மடைமாற்றங்கள் எல்லாம் அப்படியே பதிவாகியிருந்தது. அதனை மாற்றி எழுத அப்போது நேரமில்லை என்பதால் கிடப்பில் போடவேண்டியதாகிவிட்டது.

எத்தனையோ முறை அது என்னை உறுத்தினாலும், எழுதக் கைவரவில்லை. பத்தாண்டுகளுக்குப் பின் இப்போதுதான் அதற்கான தருணம் வாய்த்துள்ளது.

எம்.எல்.வி-யின் 92-வது பிறந்த நாளில் இதை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நேர்காணலைப் பற்றி சில விஷயங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

1. இன்று சம்பிரதாயா ஆவணங்களைப் பாதுகாக்கும் கலாசேத்ராவின் முதல்வர் டாக்டர் ரேவதியை ராமசந்திரனை அணுகி, அவருடைய அனுமதியுடனேயே இந்த நேர்காணல் வெளியாகிறது. கலாசேத்ராவுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2. நேர்காணலின் பேச்சுத் தமிழை, எழுத்துத் தமிழாக நான் மாற்றியுள்ளேன். அது அதிகபிரசங்கம் என்று நினைத்தால் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

3. பேசும் போது அலை பாய்ந்து ஒன்றிலிருந்து வெறொன்றுக்குத் தாவுவது சகஜம். அப்படிப்பட்ட சில தாவல்களை நான் படிப்பதற்கு ஏதுவாக கொஞ்சம் மாற்றித் தொகுத்துள்ளேன். அவர் சொன்ன கருத்துகளில் நான் அந்த மாற்றமும் செய்யவில்லை.

எழுத்தில், சொல்லும் முறையில் ஏதேனும் குறையிருந்தால் அது என்னுடையவையே. அதையும் மீறி அந்த மஹாவிதுஷியின் இசை ஜ்வாலை உங்களை ஆகர்ஷிக்கும் என்று நம்புகிறேன்.

28 Aug 1989

Venue – 22 North Street, Sriram Nagar. Madras -18 (Srividya’s House)

நேர்காணல் எடுத்தவர்: விதுஷி பத்மாசினி

முதலில் உங்களுடைய இளமைக்காலம், குடும்பம் முதலான விவரங்களைப் பதிவு செய்துகொண்டு பின்னர் இசையைப் பற்றி, இசை சொல்லிக் கொடுக்கும் முறையைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

நான் பிறந்தது மெட்ராஸில்தான். எங்களுக்கு ஜார்ஜ்டவுனில் வீடு இருந்தது. அந்த வீட்டில்தான் 3 ஜூலை 1928-ல் பிறந்தேன். அந்த நாளில் ஜார்ஜ் டவுனில் நிறைய பெண் இசைக் கலைஞர்கள் இருந்தார்கள்.

யாரெல்லாம் இருந்தார்கள் என்று உங்களுக்கு நினைவு இருக்கிறதா?

கோயம்பத்தூர் தாயி, வீணை தனம்மாள் மாதிரி நிறைய பேர்.

உங்கள் அப்பா/அம்மா பற்றி.

அப்பா பெயர் ஐயாசாமி ஐயர். அம்மா லலிதாங்கி. இரண்டு பேரும் இசைக் கலைஞர்கள்தான். அப்பா மேடைக் கலைஞர் அல்ல. நிறைய சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். சேவா சதனில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தனியாகவும் பாட்டு சொல்லிக் கொடுப்பார். அவர் கொத்தவாசல் வெங்கடராம ஐயரின் (ஏராநாபை போன்ற பிரபல வர்ணங்கள் செய்தவர்) சிஷ்யர். அவருக்கு வடக்கிந்திய இசையில் மேல் பிரமை. அதனால் கல்கத்தா, பம்பாய், ஹைதராபாத் என்று பல ஊர்களில் தங்கி வடக்கிந்திய சங்கீதத்தைக் கற்றுக்கொண்டார்.

திருவாரூர் ராஜாயி என்று அந்நாளில் பிரபலமாகப் பாடிக்கொண்டிருந்த கலைஞருக்கு சொல்லிக் கொடுப்பதற்காக பின்னாளில் மெட்றாஸுக்கு வந்தார்.

scan0005

பந்தநல்லூர் ஜெயலட்சுமியின் தாயாரா?

இல்லை. இவர் வேறு. அந்த நாளில் முதன் முதலில் ராகம் தானம் பல்லவி பாடிய பெண் கலைஞர் அவர்தான். ’தினமணி வம்ச’. ‘தனயுனி ப்ரோவ’ போன்ற கீர்த்தனங்களெல்லாம் புதிய கீர்த்தனைகள் என்று நினைத்த காலமது. அவை எங்கப்பாவுக்கு பாடம் என்பதால் அவரிடம் கற்றுக் கொள்ள நினைத்தார் ராஜாயி. முசிறி, அரியக்குடி, மகாராஜபுரம் போன்றவர்கள் எல்லாம் கூட அப்பாவிடம் சில கீர்த்தனைகள் கற்றுக்கொண்டதுண்டு. அப்படி வந்த இடத்தில்தான் என் அம்மாவை சந்தித்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

அம்மா மேடைக் கலைஞர் (performing musician).  ஆரம்ப நாளில் கோயம்பத்தூர் தாயியின் சிஷ்யை. அதன் பிறகு ஃப்ளூட் சுப்பராமனிடம் கற்றுக் கொண்டார். அப்புறம் அப்பாவிடம் கற்றுக் கொண்டார். அம்மா ஆஸ்த்துமாவால் மிகவும் அவதிப்பட்டார். நாளடைவில் மூச்சுவிடக் கூட சிரமப்பட்டார். அதனால் தனது நாற்பதாவது வயதை எட்டும் போதே பாடமுடியாதபடி ஆகிவிட்டது.

அம்மா அப்பாவின் இரண்டாவது மனைவி. அதனால் இருவருக்கும் 20 வயதுக்கு மேல் இடைவெளி. அம்மா தனது 49 வயதில் 1955-ல் மறைந்துவிட்டார். அப்பா எண்பது வயதில் 1963-ல் மறைந்தார்.

நான் பிறந்ததிலிருந்து வீட்டிலேயே சங்கீத சூழல். நிறைய சங்கீத வித்வான்கள் வீட்டுக்கு வருவார்கள். அதனால் சிறு வயசில் இருந்தே ஈடுபாடு. ‘சைல்ட் பிராடிஜி’ என்றுகூட சொல்லலாம். அப்படிப் பார்க்கப் போனால் இன்று பிரபலமாக இருக்கும், பிருந்தாம்மா, சுப்புலட்சுமி, பட்டம்மாள் போன்ற கலைஞர்கள் எல்லோருமே ப்ராடிஜிதான். 12-13 வயதுக்குள் கச்சேரி பாட வந்தவர்கள்தான்.

எட்டு வயதிலிருந்து மேடையில் என் அம்மாவுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தேன். அப்போது வானொலியில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியில் பாடியிருக்கிறேன். பதினைந்து நிமிடம் பாட பதினைந்து ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தம்.

நான் பிரசண்டேஷன் கான்வெண்டில் படித்தேன். எனக்கு நன்றாகப்படித்து மருத்துவர் ஆகவேண்டும் என்று இலட்சியம் இருந்தது.

கார்பரேஷன் ரேடியோ போய் அகில இந்திய வானொலி வந்த புதிதில், 1938-ல் ‘கீத கோவிந்தம் ஓபரா’ என்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு ஆகியிருந்தது. ஜெயதேவ அஷ்டபதியை பழைய பஜனை பத்ததியில் கர்நாடக ராகங்கள் கொண்டு பாட ஏற்பாடாகியிருந்தது. அதில் ஜி.என்.பி, டி.கே.பட்டம்மாள், என்னுடைய அம்மா மூவரும் பங்கேற்றனர். நானும் என் தாயாருடன் சென்றிருந்தேன். டி.கே.ஜெயராமனும் நானும் ஒத்த வயதினர் என்பதால் வானொலி நிலையத்தில் பாடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் நேரத்தைக் கழித்தோம்.

அப்படி நான் பாடியதை ஜி.என்.பி கேட்டுவிட்டு, “இந்தக் குழந்தைக்கு நல்ல ஞானம் இருக்கிறது. என்னிடம் அனுப்புங்கள். நான் சொல்லித் தருகிறேன்.”, என்று என் அப்பாவிடம் சொன்னார். அப்பாவும், “பார்க்கலாம்”, என்று கூறினாரே தவிர அதைப் பொருட்படுத்தவில்லை.

பிறகு 1940-ல், ‘புரந்தரதாஸர் கிருதிகள்’ புத்தகம் அச்சிட என் பெற்றோர்கள் முயற்சி எடுத்தனர். அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் புரந்தரதாசர் கீர்த்தனைகள் அவ்வளவு புழக்கத்திலில்லை.

பிறகு எப்படி உங்கள் பெற்றோருக்கு இதில் ஆர்வம்?

என் அப்பா அப்போது யூ.ராமா ராவ் (மியூசிக் அகாடமியின் முதல் ப்ரெசிடெண்ட்) வீட்டில் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டில் தாஸர் பரம்பரையைச் சேர்ந்த நரசிம்ம தாஸர் தங்கியிருந்தார். அவர் ஒரு வைதீக பிராமணன். அவருக்கு ஆயுர்வேதமும் தெரியும். அவருக்கு புரந்தரதாசர் கிருதிகளின் பழைய மெட்டுகள் தெரிந்திருந்தது. அவருடன் அதைப் பற்றி பேசி என் அப்பாவுக்கும் அவற்றில் ஈடுபாடு வந்துவிட்டது.

அவர் ஊருக்குத் திரும்பிப் போகிறார் என்று கேள்விப்பட்டதும், என் அப்பா அவரை எங்கள் வீட்டில் வந்து தங்கி என் அம்மாவுக்கு புரந்தரதாசர் கீர்த்தனைகள் சொல்லிக்கொடுக்க வெண்டும் என்று வேண்டிக் கொண்டார். அவரும் இணங்கி, கிட்டத்தட்ட ஒரு வருடம் எங்கள் வீட்டிலேயே தங்கினார்.

ஒரு சிறிய அறையில் தங்கிக் கொண்டு தானே சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது சுமார் 150/200 தாஸர் பதங்களை என் அம்மா அவரிடம் கற்றார். அப்படித்தான் எங்கள் குடும்பத்துக்கு இந்த ஈடுபாடு உண்டானது.

இவ்வளவு நல்ல விஷயம் வெளியில் தெரியாமல் இருக்கிறதே என்று புத்தகம் போட நினைத்தார்கள் என் பெற்றோர்கள். என் அம்மா சங்கீதம் குருமுகமாய் பாடக் கற்றுக் கொண்டிருந்தாரே தவிர, அச்சுக்கு ஏற்றார்போல ஸ்வரப்படுத்த அறிந்திருக்கவில்லை. ரங்கராமானுஜ ஐயங்கார் ஸ்வரப்படுத்த உதவி செய்தார். பிரிசிடென்சி காலேஜில் நாகராஜ சர்மா என்று ஒரு ப்ரொபசர் இருந்தார். அவருக்கு கன்னடம் தாய் மொழி. அவர் சாஹித்ய அர்த்தங்களுக்கு உதவி செய்தார். அதையும் மீறி சில தவறுகள் வந்துவிட்டன. இத்தனைக்கு என் அம்மாவுக்கு கன்னடம் எழுதப்படிக்கத் தெரியும்.

அம்மாவின் கச்சேரிகள் நின்றுவிட்ட நிலையில், அப்பாவின் சொற்ப வருவாயில் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தோம். அதனால் புத்தகத்தை அச்சடிக்க எங்களிடம் போதுமான பணமிருக்கவில்லை. அதனால் அப்பா இதற்காக நன்கொடை வசூலித்தார். அப்போது யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயம். காகித விலை அதிகமாயிருந்த சமயம். இருந்தும், ஹிந்து கஸ்தூரி ஸ்ரீனிவாஸன் இலவசமாக காகிதம் கொடுத்தார். அச்சுச் செலவுக்காக அப்பா சில வித்வான்களிடம் நன்கொடைக்கு அணுகினார்.

அப்படி ஜி.என்.பி-யையும் அணுகிய போது, “உங்கள் பெண்ணை பாடம் கேட்க அனுப்புங்கள் என்று நான் சொல்லி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. ஏன் இன்னும் அனுப்பவில்லை?, என்று கேட்டிருக்கிறார்.

என் அப்பாவும், “அவளுக்குப் பாட்டைவிட படிப்பில்தான் நாட்டமுள்ளது”, என்று கூறியுள்ளார்.

”நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். அவள் பாடகியாகத்தான் வரப்போகிறாள்”, என்று அடித்துக்கூறியிருக்கிறார் ஜி.என்பி.

(அப்போதிலிருந்தே ஜி.என்.பியிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கிட்டார் என்று ஊகிக்க முடிகிறது)

1942-ல் போர் முற்றிய போது பலர் சென்னையைவிட்டு சென்றனர். ஜி.என்.பி கும்பகோணத்துக்குச் சென்றுவிட்டார். நாங்கள் திருவள்ளூருக்கு மாறினோம். அப்போது நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தேன். இந்த மாற்றத்தினால் படிப்புக்கு தடை ஏற்பட்டது. அப்போது சிலமுறை கும்பகோணத்துக்குச் சென்று ஜி.என்.பி-யிடம் கற்றுக்கொண்டேன்.

மீண்டும் சென்னைக்கு வந்ததும், “படிப்பெல்லாம் வேண்டாம். அவளை சங்கீதத்தில் விட்டுவிடுங்கள்”, என்று ஜி.என்.பி மீண்டும் சொன்னதும் என் அப்பா சம்மதித்துவிட்டார். 1940-ல் இருந்து 1951- வரை தொடர்ந்து ஜி.என்.பி-யிடம் கற்றுக் கொண்டேன். அதனால் என் வழிக்கு அடித்தளம் ஜி.என்.பி பாணிதான். எனக்கு நன்றாகப் பேசுகிற குரல் என்பதால் அந்தப் பாணி நன்றாகப் பொருந்தியது.

பெங்களூரில் வி.ஆர்.எஸ் முதலியார் என்றொருவர் சபா நடத்திவந்தார். 1941-ல் அங்கு என் அம்மா பாடுவதாக இருந்தது. அபிராமசுந்தரி வயலினும் ஹம்ஸதமயந்தி மிருதங்கமும் ஏற்பாடாகியிருந்தது. அம்மாவுக்கு முடியாததால் கச்சேரியை ரத்து செய்ய வேண்டியிருந்தது. ஜி.என்.பி  “இவள் பாடட்டுமே. She can manage.” என்று சொன்னார். பதிமூன்று வயதுதான் என்றாலும் அப்போதே கொஞ்சம் ராகம் ஸ்வரம் எல்லாம் பாடுவேன். ஜி.என்.பி-யே சபாவிடமும் பேசி என் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தார். அதுதான் நான் முதன் முதலாய் பாடிய தனி கச்சேரி.

அந்தக்காலத்தில் அரங்கேற்றம் என்று தனியாகச் செய்யும் வழக்கமெல்லாம் இல்லை. ‘சைல்ட் பிராடிஜி’ என்று விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் யாருக்கும் தோன்றாத காலம். அப்பா சங்கீதத்தில் மிகவும் கண்டிப்பானவர். முகத்துக்கு முன்னால் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டால் கர்வம் வந்துவிடும் என்று அவர் நம்பினார். ”இன்னும் கொஞ்சம் பணம் கேட்டுப் பார்க்கலாமா?”, என்று நான் கேட்டதற்கு, “உனக்கு அதற்குள் அவ்வளவு தெரிந்துவிட்டதா?”, என்று கோபப்பட்டார். அதானாலோ என்னமோ இன்றுவரை எனக்கு பணம் கேட்க வருவதில்லை. நான் கச்சேரிக்கு அளவுக்கு மீறிய தொகை என்று இதுநாள் வரை வாங்கியதில்லை.

இப்படித்தான் என் இசை வாழ்க்கை தொடங்கியது. ஓரளவு என் குடும்பத்தைப் பற்றியும் இளமைக் காலத்தைப் பற்றியும் கூறியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

உங்களுடன் பிறந்தவர்கள் யாரும் உண்டா?

நான் ஒரே பெண்தான். என் அப்பாவின் முதல் மனைவிக்கு ஒரு பெண் உண்டு. அவள் என்னைவிட மிகவும் மூத்தவள். அவள் இப்போது இல்லை.

உங்கள் திருமணம் எப்போது நடைபெற்றது?

என் கல்யாணம் 1951-ல் நடந்தது. என் கணவர் மதுரையைச் சேர்ந்தவர். விகடக் கச்சேரி செய்வார். அந்த நாளில் 3-4 படங்களில் கூட நடித்துள்ளார். அவரை சிறு வயது முதலாகவே பரிச்சயம் உண்டு. எங்கள் திருமணம் காதல் திருமணமல்ல. பெரியவர்கள் செய்து வைத்த திருமணம்தான். அவருக்கு சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு என்பதாலும், அவரே ஒரு கலைஞர் என்பதாலும் அவரை என் அப்பா தேர்வு செய்தார். அந்த விஷயத்தில் சங்கீத சம்பந்தமாக எனக்கு திருமண வாழ்க்கையில் எந்த இடைஞ்சலும் கிடையாது. என் கணவர் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். 1952-ல் என் மகன் சங்கர் பிறந்தான். 1953-ல் வித்யா பிறந்தாள்.

வித்யா நாட்டியமாடிக் கொண்டிருந்தாள். திருமணத்துக்குப் பின் விட்டுவிட்டாள். சினிமாவிலும் நடித்து வருகிறாள்.

நீங்கள் எப்படியொரு பிரபலமோ, நடிகையாக இருப்பதால் அவரும் ஒரு பிரபலமல்லவா!

அவள் பாட்டும் பாடுவாள். பத்து வருடங்கள் பி.கிருஷ்ணமூர்த்தி சொல்லிக்கொடுத்தார். 300-400 கீர்த்தனங்கள் அவளுக்குப் பாடமுண்டு. கச்சேரியில் ராகம் ஸ்வரம் பாடும் அளவுக்கு அவள் தேர்ச்சி பெறவில்லை. மெல்லிசை மிகவும் நன்றாகப் பாடுவாள். உருது கஜல்களெல்லாம்கூடப் பாடுவாள்.

அப்பா வழியில் அவருக்கு முன்னால் யாரும் சங்கீதத்தில் ஈடுபட்டிருந்தார்களா? அதே போல உங்கள் அம்மா வழியில் யாரும் இருந்தார்களா?

 என் அப்பா வழியில் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. இவர்தான் சிமிழி சுந்தரம் ஐயர், கொத்தவாசல் வெங்கடராம ஐயர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், புஷ்பவனம் ஐயர் போன்ற கலைஞர்களோடு பழகி சங்கீதத்தில் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

அம்மா வழியில் உண்டு. அம்மாவின் அம்மா – நாராயணியம்மாள் – ஒரு நாட்டியக் கலைஞர். அவரெல்லாம் பெரியதாக வெளிச்சத்துக்கு வரவில்லை. என் அம்மாவின் சித்தி – ருக்மணி – பாடிக் கொண்டிருந்தார்.  மேடையில் பாடுவதை என் அம்மா வழியிலிருந்து நான் கொண்டுள்ளேன் என்று சொல்லலாம்.

நீங்கள் முதலில் உங்கள் பெற்றோரிடம் கற்றீர்கள். அதன்பின் ஜி.என்.பியிடம் பயின்றீர்கள். உங்களுடைய சங்கீதம் முழுமையாக ஜி.என்.பியின் வழியைப் பின்பற்றியதா? அல்லது உங்கள் பெற்றோர்களின் வழியும் அதில் உண்டா?

 என் பெற்றோர் வழியும் கொஞ்சம் உண்டு என்றாலும், பெரும்பாலும் என் வழி ஜி.என்.பி வழிதான். எனக்கு அவர் பாணியில் பிரமை (admiration) உண்டு. அவர் பாடுவது, சொல்லிக் கொடுப்பது, சங்கீத நுணுக்கங்களை விளக்குவது, சங்கீதத்தைப் பற்றி கட்டுரைகள் எழுதுவது, ஷார்ட் ஹேண்ட் போல ரேடியோவைக் கேட்டபடி ஸ்வரப்படுத்து எழுதிக் கொள்வது என்று அவருடைய ஒவ்வொரு செய்கையின் மேலும் எனக்கு பிரமையுண்டு.

தீவிர ஸ்வரஞானி அவர். சங்கீதத்தை பௌதீகம் போல விளக்குவார். இந்த கமகத்துக்கு இந்த அளவு என்று அவரால் சொல்ல முடிந்தது. நான் கூட அந்த வழியில் சங்கீத விஷயங்களை வெறும் கோட்பாடுகளாய் (dry theory) அடுக்காமல் இன்னும் சுவாரஸ்யமாகக் குழந்தைகளுக்குச் சொல்லலாம் என்று சொல்லி வருகிறேன். உதாரணமாக குரலமைப்பு, ஸ்வரங்களின் அளவு (frequency) போன்றவற்றை பௌதீக அடிப்படையிலும், லய சம்பந்தப்பட்ட விஷயங்களை கணிதம் மூலமாகவும், சங்கீத முன்னோடிகளை வரலாற்றுபூர்வமாகவும், வெவ்வெறு இடங்களில் உள்ள சங்கீதத்தை பூகோள அடிப்படையிலும் சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

(ஜி.என்.பியின் இசையை நோக்கி அவர் பேச்சின் மையம் செல்கிறது. அதைப் பற்றி சொல்வதற்கு முன்னால், அந்தக் காலத்து இசையைப் பற்றிய பின்புலத்தை விளக்குகிறார்).

48

நான் கேட்டதிலிருந்து சொல்கிறேன், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் காலத்தில் இசையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவருக்கு முந்தைய தலைமுறையினரைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் நாயினாப் பிள்ளையை கேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது எனக்கு சிறு வயது. ஒன்றும் நினைவில் இல்லை.  அப்போது பாடிக் கொண்டிருந்த பெண்கள் ராகம், ஸ்வரம், பல்லவி போன்றவற்றில் ஈடுபடவில்லை. என் அம்மாவே கொஞ்சம் கொஞ்சம்தான் ராகம் பாடுவார். திருவாரூர் ராஜாயி, என் அம்மா போன்ற சிலர் மட்டும் பல்லவிகள் பாடுவார்கள். இன்றிருப்பது போல விஸ்தாரமாக இருக்காது.

பெண்கள் கச்சேரிகளில் பெரும்பாலும் வெறும் கீர்த்தனைகள்தான். ராகம் வெண்டுமென்றால் வயலின் கலைஞரை கொஞ்சம் ராகம் வாசிக்கச் சொல்லிவிட்டு, இவர்கள் கீர்த்தனையை பாடுவார்கள். ”கொஞ்சம் சங்கராபரணம் வாசிங்கோ. நாங்க ஸ்வர ராக ஸுதா பாடறோம்”, என்று சொல்வார்கள். பெங்களூர் நாகரத்தினம்மாள் கீர்த்தனையைப் பாடி முடித்ததும் அந்த ராகத்தை உம்காரத்தில் கொஞ்சம் பாடி நிறைவு செய்வார்.

என் காலத்தில், நான் கொஞ்சம் படித்திருந்ததாலோ என்னமோ என்னிடம் ஜி.என்.பி நிறைய சங்கீத நுணுக்கங்களைப் பற்றி பேசுவார். அதுவும் கச்சேரி நன்றாக அமைந்த நாட்களில் உற்சாகமாய் பலமணி நேரம் விளக்கிப் பேசுவார்.

அவர் கொஞ்சம் ‘மூடி டைப்’.  அதனாலேயே அவரை தவறாக நினைத்தவர்கள் பலர். தனக்காக ஒருவரிடம் போய் நிற்கமாட்டார். தனக்குக் கிடைத்தது போதும் என்று இருந்துவிடுவார்.

(பேச்சில் ஒரு சிறு நிறுத்தம். அந்த நாள் அலையொன்று மோதுகிறது போலும். மீண்டும் பேச ஆரம்பிக்கும் போது ஒரு சிறு மடைமாற்றம்)

எனக்கு ஒரு குறை உண்டு. குடும்ப சூழல் காரணமாக நான் சம்பாதித்து ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் சீக்கிரமே நிறைய கச்சேரிகள் செய்ய வேண்டி வந்துவிட்டதால், நான் போதிய சாதகம் செய்யவில்லை என்று தோன்றுகிறது (’ப்ராக்டீஸ் போதாமல் போய்விட்டது என்று இப்பகூட நினைக்கிறேன்’).  அனால் எனக்கு தொடக்கத்திலிருந்தே நல்ல கச்சேரி வாய்ப்புகள் அமைந்தன. (I had a flying start). சாதகம் இல்லாது போனாலும் கச்சேரிகள் மூலமாக காலூன்றிக் கொண்டேன்.

வீட்டில் உட்கார்ந்து பாடுவது..

(தான் மடைமாறிவிட்டதை உணர்ந்திருப்பார் போலும். உடனே சுதாதரித்துக் கொண்டு)

குருமுகமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஜி.என்.பி-யிடம் சென்றேன். அவரும் ”இவளுக்கு நல்ல ஞானம் இருக்கிறது. இப்போது குரல் சன்னமாக இருக்கிறது. அது கனத்ததும் அவள் நன்றாக வருவாள். அவளுக்கு படிப்பெல்லாம் வேண்டாம், உங்கள் குடும்ப சூழலுக்கும் அவள் கச்சேரி செய்தால் நல்லது”, என்று சொல்லி என்னை சங்கீதத்துக்குள் இழுத்துவிட்டார்.

அப்போது பெண்களில் சுப்புலட்சுமி, பட்டம்மாள், வசந்தகோகிலம், சுந்தராம்பாள் என்று பலர் உச்சியில் இருந்தார்கள். ஆண்களிலும் அரியக்குடி, செம்மங்குடி என்று பலர். சொல்லப்போனால் 1940-லிருந்து 1967 வரை சங்கீதத்தின் பொற்காலம்தான். நாகஸ்வரத்தில் திருவீழிமிழலை சகோதரர்கள், ராஜரத்தினம் பிள்ளை, வீருசாமி பிள்ளை, திருவெண்காடு சுப்ரமண்ய பிள்ளை. பாட்டில் அரியக்குடி, செம்மங்குடி, செம்பை, முசிறி, ஆலத்தூர், மதுரை மணி, ஜி.எ.ன்.பி என்று அத்தனை ஜாம்பவான்கள். பக்கவாத்தியத்தில் ராஜமாணிக்கம் பிள்ளை, சௌடையா. மிருதங்கத்தில் பழனி சுப்ரமணிய பிள்ளை, மணி ஐயர், முருகபூபதி என்று அவ்வளவு மேதைகள்.

அப்படி ஒரு சமயத்தில் நானும் முன்னுக்கு வந்தேன். பட்டம்மாள், சுப்புலட்சுமி எல்லாம் எனக்கு பத்து வருடம் சீனியர்கள். நான் 1940-களில் மேலே வந்தேன். என்னுடம் கிளம்பினவர்கள் நிறைய பேர். சூடாமணி, எம்.ஏ.சுந்தரம், வக்கீல் சரஸ்வதி என்று பலர் எங்கேயோ காலப்போக்கில் காணாமல் போய்விட்டனர். சாவித்ரி கணேசன், வசந்தகோகிலம் போன்றவர்கள் மறைந்தே போய்விட்டனர். கடவுள் அருளால் நான் 48 வருடங்களுக்கு மேலாக பாடிவருகிறேன். (1991) ஜனவரி வந்தால் ஐம்பது வருடங்கள் ஆகிவிடும்.

(I’ll complete fifty years of service in 1991 என்றுள்ளார். விதி அவரை அந்த நாளைக் காணவிடாமல் 1990 அக்டோபரிலேயே  அவரை மாய்த்துவிட்டது).

நான் தொடங்கிய நாட்களில் ஜி.என்.பி கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தார். அதனால் அவர் எனக்கு நிறைய கச்சேரி வாய்ப்புகளும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

அப்போது சொல்ல ஆரம்பித்த விஷயம் விட்டுப் போய்விட்டது…

அன்றைய காலத்தில் அரியக்குடி முதலானோர் பாடிய வழிக்கு சற்றே வேறாக மகாராஜபுரம் வழி இருந்தது. அவருடைய பாணியில் வடக்கத்திய சங்கீதத்தின் தாக்கம் உண்டு. அதனால் அதைக் கேட்கும் போது புதிய அனுபவமாக (fresh) இருந்தது. அந்த வழியை ஜி.என்.பி இன்னும் விஸ்தாரப்படுத்தினார்.

ஜி.என்.பி-க்கு அவருடைய குரல் பெரிய வரம். அவர் குரலில் பிருகா பளீரென்று விழுந்தது என்பதற்காக அவருக்கு நிதானத்தில் இஷ்டமில்லை என்றில்லை.

(அவர் பாணியைப் பற்றிய புரிதல் பிழைகளை நோக்கி எண்ண ஓட்டம் பாய்கிறது)

இன்று நிறைய பேர் எங்கள் இசைப் பரம்பரையைப் (school of music) பிழையாகப் புரிந்துகொள்கிறார்கள்.

இந்தப் புரிதல் பிழைகளுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஜி.என்.பி-யின் வழி தன்னிச்சையாய் ஈர்க்கக்கூடியவொன்று. அதனால் அவருக்குப் பின்னால் வந்த தலைமுறையினர் பெரும்பாலும் பின்பற்ற முயல்கிறார்கள்.  அந்த வழியைத் தொடர வேண்டுமானால் அதற்கு ஒரு வழிமுறை உண்டு. அந்த வழிமுறையைப் பற்றி ஆலோசிக்காமல் பின்பற்றும் போது சிக்கல் எழுகிறது.

ஜி.என்.பி அவருடைய குரலுக்கும், அறிவுக்கும் ஏற்றபடி தன் பாணியை அமைத்துக்கொண்டார். அந்தப் பாணியை நம் குரலுக்கும் மற்ற வசதிகளுக்கும் ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரே சங்கதி ஆண் குரலில் வெளிப்படுவதற்கும் பெண் குரலில் வெளிப்படுவதற்கும் வித்தியாசம் உண்டு. அவ்வளவு ஏன், ஒரே ஸ்வரங்கள் கொண்ட ஒரு சங்கதியை எடுத்துப் பார்த்தால் அது ஒவ்வொரு குரலில் ஒவ்வொரு மாதிரிதான் ஒலிக்கும். குரலின் அமைப்பு, அனுஸ்வரங்கள், சங்கதியின் காலப்ரமாணம் என்று சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருந்தே தீரும். அச்சில் வார்த்தது போல் இருவர் பாடுவது மிகவும் கடினம். சகோதரர்கள்/சகோதரிகள் என்று இரண்டு பேராய் சேர்ந்து பாடும் போது, ஒரே மாதிரியாய் ஒலிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து செய்து அவர்கள் பாடுவதில் பல சமயம் ஒரு செயற்கைத்தன்மை (mechanical rendition) வெளிப்படும்.

(மீண்டும் ஜி.என்.பி பாணியின் அம்சங்களுக்கு சம்பாஷணை செல்கிறது)

ஜி.என்.பி அரியக்குடியின் கச்சேரி பத்ததியை எடுத்துக் கொண்டார். அரியக்குடியை நான் ஒரு பலசரக்குக் கடை என்று சொல்வதுண்டு. அரிசி, உப்பு, புளி, சர்க்கரை என்று எல்லாமே அங்கு கிடைப்பது போல வர்ணம், தியாகராஜர் கீர்த்தனைகள், மற்ற வாக்கேயக்காரர்களின் கீர்த்தனைகள், தமிழ்ப்பாட்டுகள், பல்லவி, தேசிய உணர்வை பிரதிபலிக்கும் பாடல்கள் என்று எல்லாமே இருக்கும். அவர் நாளில்தான் இந்தக் கச்சேரி பத்ததி நிலைபெற்றது. நிறைய ராகம் பாடினாலும் அளவாக இருக்கும். கச்சேரியில் எங்குமே தொய்விருக்காது. அதிகக் கற்பனைகளை அவர் வெளிப்படுத்தினார் என்று சொல்ல முடியாமல் போனாலும், அவர் பாடியதில் பூர்ணத்துவம் (perfection) உண்டு. அவருக்கே உரிய காலப்ரமாணம். நாலு களை சவுக்கத்தில் பல்லவி என்றால் அதை ராமானுஜ ஐயங்கார்தான் பாடவேண்டும் என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள்.

எல்லாவற்றுக்கும் மேல் மத்யம காலத்துக்கு முதன்மை. ரொம்ப நேரம் வேகமாகப் பாடுவதென்பது இயலாது. ரொம்பவும் இழுத்து மெதுவாகப் பாடினால் கொஞ்ச நேரத்தில் அலுப்புதட்டிவிடும். மத்யம ஸ்தாயிக்கும், மத்யம காலத்துக்கும்தான் நம் சங்கீதத்தில் முதன்மை. அதை நிலைநாட்டியவர் அரியக்குடிதான். கடினமான கணக்குகளுக்குள் செல்லாமல் ஸர்வலகுவாய் ஸ்வரம் பாடினாலும் ஸ்வாரஸ்யமாய் பல வகைகளில், அரை ஆவர்த்தம், ஒரு ஆவர்த்தம் என்று சின்னச் சின்னதாய் சுவாரஸ்யமாய் ஸ்வரம் பாடுவார்.

(பாமா மணிஎன்கிற இடத்துக்கு பொருத்தங்கள் வைத்து மத்யமாவதியில் பாடிக் காண்பிக்கிறார்).

இதெல்லாம் அவருடைய பெரிய பலங்கள். பாலக்காடு மணி ஐயர், பாப்பா வெங்கடராம ஐயர் போன்ற பக்கவாத்யங்களோடு சேர்ந்துவிட்டால் ஒரு நிமிஷம் கூட ரசிகர்களின் கவனம் வெறு எங்கும் செல்லாத வகையில் கச்சேரி அமைந்துவிடும்.

(பக்கவாத்தியங்கள் பற்றி பேச ஆரம்பித்ததும் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு பேச்சு தாவுகிறது)

 

ராஜமாணிக்கம் பிள்ளை, அந்த வகையில் எல்லோருக்கும் பொருத்தமாக வாசிப்பார். ஷட்ஜத்திலேயே இது அரியக்குடி ஷட்ஜம், இது ஜி.என்.பி ஷட்ஜம் என்று வாசித்துக் காண்பிப்பார். ‘குழந்தைக்கு சளிபிடித்தால் தாயார் மோர் விட்டுக் கொள்ளாமல் இருப்பது மாதிரி பாடுபவருக்கு ஏற்றார் போல பக்கவாத்தியம் என்று கூறுவார். எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். ஊரிலிருந்து வந்தால் எங்கள் வீட்டுல்தான் இறங்குவார். ”மருமகளே பாடு!” என்று என்னைப் பாடச் சொல்லி உடன் வாசிப்பார். அதே மாதிரிதான் மணி ஐயர்வாளும்.

(மீண்டும் அரியக்குடிக்கு வருகிறார்)

கச்சேரிக்கு இப்படி ஒரு வழி என்று காண்பித்தது ராமானுஜ ஐயங்கார்.

18

கர்நாடக இசை வரலாற்றில் அரியக்குடி நிறுவிய இந்தக் கச்சேரி பத்ததி ஒரு முக்கியமான மைல்கல். அதை உருவாக்க அவரை உந்தியது எதுவாக இருக்கும்? அவருக்கு முந்தைய காலத்தில் இப்படி ஒரு அமைப்பு இருந்ததாகத் தெரியவில்லை இல்லையா?

 

மத்தியம காலத்துக்கு முதன்மை அரியக்குடியின் குருவான பூச்சி ஐயங்கார் காலத்திலேயே வந்துவிட்டது என்று என் அப்பா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் அரியக்குடி அதை ஒரு தெளிவான வழியாக நிர்மாணித்தார் என்று தோன்றுகிறது.

வரலாற்றுப்பூர்வமாகவும் சமஸ்தானங்களின் ஆதரவில் நடந்த பண்டிதர்கள் மட்டும் கலந்து கொண்ட சபைகளில் இருந்து, கச்சேரிகள் பாமர மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளாக மாற ஆரம்பித்ததும் இந்த மாற்றத்துக்கு காரணமாக இருந்திருக்குமா?

நீங்கள் சொல்வது போல, அன்றைய சூழலுக்கு ஏற்ப, பாமரரையும் பண்டிதரையும் ரஞ்சகம் செய்யும் வகையில் அரியக்குடி தன் வழியை அமைத்துக் கொண்டார் என்று சொல்லலாம். சுதந்திர போராட்ட காலத்தில் ‘ராட்டினமே’, ‘என்று தணியும்’ போன்ற பாடல்கள். தமிழிசைக்கு இயக்கம் எல்லாம் வருவதற்கு முன்னாலேயே பல தமிழ்ப்பாடல்கள் என்று அவருடைய வழி.

நான் முன் சொன்னது போல எல்லாம் கிடைக்கும் ஒரு பலசரக்குக் கடை அவர்.

ஜி.என்.பி-க்கு அவர்மேல் அசாத்திய பக்தி. அவர் பேரைச் சொன்னால் கூட எழுந்து நின்றுவிடுவார். நாங்கள் கூட “அப்படி என்ன அந்தப் பாட்டில் இருக்கிறது?” என்று கேட்டதுண்டு. “உங்களுக்கு எல்லாம் இப்போது புரியாது. நாற்பது ஐம்பது வயதுக்கு மேல் புரியும். அவரைப் பற்றி பேச உங்களுக்கு எல்லாம் தகுதி கிடையாது”, என்று கோபப்படுவார். ஒருமுறை அகாடமியில் தீட்சிதர் தினம் கச்சேரியில் அரியக்குடிக்கு பின்னால் அமர்ந்து தம்புரா போட்டபடி உடன்பாடினார். ”அவருடன் சேர்ந்து பாடினால்தான் அவர் பாணியில் உள்ள கஷ்டம் புரிகிறது.”, என்றார்.

அந்த வழியை அடித்தளமாகக் கொண்டு அதில் மகாராஜபுரம் அறிமுகப்படுத்திய புதுமையையும் சேர்த்துக்கொண்டார் ஜி.என்.பி.

விஸ்வநாத ஐயர் நல்ல குரல்வளத்தோடு கச்சேரிகளை நான் கேட்டிருக்கிறேன். அசாத்தியமான சாரீரம்! வேகமான சங்கதிகள் அந்தக் குரலில் அவ்வளவு அழகாக வெளிப்படும். ஷட்ஜத்தை அடிக்கடி தொட்டுக் கொண்டே சுற்றிச் சுற்றிப் பாடுவார். ஒவ்வொரு முறையும் ஷட்ஜம் துல்லியமாய் சேரும். கம்மல் சாரீரம் என்றாலும் அவ்வளவு ரஞ்சகம். நல்ல லட்சிய ஞானம். இந்த சங்கதியை போட வேண்டும் என்று நினைத்துப் பாடமாட்டார். கற்பனையின் போக்கில் போய் பாடிவிடுவார். அது பிரமாதமாக வந்து விழும்.

ஜி.என்.பி வானொலி நிலையத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் விஸ்வநாத ஐயரின் கச்சேரி. எனக்கு ஜி.என்.பி-யிடமிருந்து ஃபோன் வந்தது. என் வீடு பக்கத்தில்தான் எட்வர்ட்ஸ் எலியட்ஸ் ரோடில் இருந்தது. “உடனே கிளம்பி வா! இப்படி ஒரு முகாரி கேட்கக் கிடைக்கவே கிடைக்காது”, என்றார். நான் ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்ததால் என்னால் செல்ல முடியவில்லை. “உனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்”, என்று வைத்துவிட்டார்.

ஜி.என்.பி-யின் இசையில் இன்னொரு முக்கியமான அம்சம் ராஜரத்தினம் பிள்ளையின் கற்பனை. இந்த மூன்றையும் சேர்த்து தனக்கென்று ஒரு வழியை அமைத்துக்கொண்டார் என்பதுதான் என் கணிப்பு.

ராஜரத்தினம் பிள்ளையின் கற்பனையைப் பற்றி சொல்ல முடியுமா?

ராகம் வாசிப்பதில் அவரைப் போல ஒருவர் வாசித்துக் கேட்டதில்லை. இனிமேலும் கேட்க முடியுமா என்பதும் சந்தேகம்தான்.  தோடி, ஷண்முகப்ரியா போன்ற ராகமெல்லாம் அவருக்கே உரியவை. அவருக்கு அதிகம் கீர்த்தனைகள் பாடமிருக்கவில்லை. அதைப் பற்றி ஒரு சின்ன நிகழ்ச்சி சொல்கிறேன்.

அவரும் ஜி.என்.பி-யும் நெருங்கிப் பழகியவர்கள். ஒருமுறை ராஜரத்தினம் பிள்ளை, “நான் ஏதோ ராகம் மட்டும் ஊதறேன். அதிகக் கீர்த்தனங்கள் தெரியாது. லயத்திலும் எனக்கு பெரிய ஈடுபாடு கிடையாது. இப்பல்லாம் சில்லறைப் பாட்டு வாசிக்க வேண்டிக் கேட்கிறார்கள். நீங்கள் எனக்கு சிலவற்றைச் சொல்லி வைக்க வேண்டும்”, என்று கேட்டார்.

“சில்லறைக்கு எல்லாம் எங்களைப் போன்ற சில்லறை மனிதர்கள் இருக்கிறோம். நீங்க அந்த ராகம் வாசிக்கும் உயர்ந்த ஸ்தானத்திலேயே இருங்கள். உங்கள் வாசிப்பு கல்வெட்டில் பொறித்த எழுத்துகள் மாதிரி”, என்றார் ஜி.என்.பி. அப்போது நான் உடன் இருந்தேன்.

இந்த மூவரின் பாதிப்பில் அமைத்த வழிதான் ஜி.என்.பி. அதைத்தான் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

“எனக்கு சில குறைபாடுகள் உண்டு. அதை வளர்த்துக் கொண்டுவிடாதீர்கள்.”, என்று அவர் சொல்லுவார்.

(அவர் என்ன மனநிலையில் அதைச் சொல்லியொருப்பார் என்பதை நோக்கி நகர்கிறது உரையாடல்).

 அவருக்கு ஷட்ஜம் சேராது என்று இப்போது கூட சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவருடைய சிறப்பு என்ன என்று யாரும் சொல்வதாகத் தெரியவில்லை. அவருக்கு நிதானமே பிடிக்காது என்கிறார்கள். அவருக்கு நிதானம் ரொம்ப பிடிக்கும். நாம் கமகம் என்கிற பெயரில் அளவுக்கு மீறி அசைக்கக் கூடாது என்று அவர் சொல்லுவார். அவர் ஸ்ருதிபேதம் செய்தவுடன் எல்லோரும் விமர்சித்தார்கள். ஆனால் சிலபஸில் Modal Shift பாடமாக இருக்கிறது. முத்தையா பாகவதர் அதை உபயோகப்படுத்திதான் ஆபோகியில் மத்யமத்தை ஷட்ஜமாக்கி வலஜி என்கிற ராகத்தைக் கொண்டுவந்தார்.

காலை வேளையில் பம்பாயிலிருந்து ஒலிபரப்பாகும் இசையை வானொலியில் ஜி.என்.பி கேட்பார். ஒருநாள் ரோஷனாரா பேகம் ஹிந்தோள் என்று ஒரு ராகம் பாடினார். அதைக் கேட்டுவிட்டு, “இந்த ராகம் ரொம்ப அழகாகயிருக்கிறது”, என்று என் அப்பாவிடம் சொன்னார். என் அப்பா கைப்பட 2500 மேலான ராகங்களுக்கு ஆரோகணம் அவரோகணம் எழுதி வைத்திருந்தார். அந்த குறிப்புகள் எங்கோ தொலைந்துவிட்டன. அதில் பார்த்துவிட்டு இந்த ராகத்துக்கு பெயர் ஸுநாதவினோதினி என்று சொன்னார். அந்தக் குறிப்புகளில் பார்த்துதான் பஞ்சமம் இல்லாது வடக்கத்தியர்கள் பாடும் சுபபந்துவராளிக்கு சேகரசந்திரிகா என்று பெயர் என்று தெரிந்து கொண்டோம்.

அதுதான் ஜி.என்.பி மூலம் கர்நாடக இசையில் சுனாதவினோதினியாக வெளியில் வந்தது. ஒரு பாடலை அந்த ராகத்தை மெட்டமைத்து ஜி.என்.பி பாடினார். அதை பெங்களூரில் ஒரு கச்சேரியில் வாசுதேவாச்சார் கேட்டுவிட்டுதான் ‘தேவாதி தேவா’ பாடலைப் புனைந்தார்.

புதுப்புது ராகம் கண்டுபிடித்ததை ஏதோ குறையாகச் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் தியாகபிரம்மம் எவ்வளவு புது ராகங்களில் பாடல் புனைந்துள்ளார்? புரந்தரதாசர் காலத்தில், பழைய புத்தகத்தைப் பார்த்தால், தேசிய தோடி, தோடி, பைரவி மாதிரி சில ராகங்கள்தான் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. தியாகப்பிரம்மம் நாளில்தான் பல ராகங்கள் வெளியில் வந்தன.

புரந்தரதாசரை நீங்கள் குறிப்பிட்டதால் கேட்கிறேன். அவருடைய சாகித்யங்கள் கிடைக்கின்றனவே தவிர, இன்று கிடைக்கும் மெட்டுகளின் நம்பகத்தன்மை என்ன?

சில பழைய மெட்டுகள் காலம் காலமாக வருபவை. ’பாக்யாத லட்சுமி’ போன்ற பாடல்களை உடுப்பி மாதிரி ஊர்களில் இன்றும் வீட்டில் பெண்கள் பாடுவதைக் கேட்க முடியும். கல்யாணி என்று எடுத்துக் கொண்டால் மெட்டுகளின் பெரிய வேறுபாடு இருக்காது. ஒரே மெட்டுதான் திரும்பத் திரும்ப வரும். இருந்தாலும் சரளி, ஜண்டை, அலங்காரம், கீதம் ஆகியவற்றை ஏற்படுத்தியவர். அவர் காலத்தில்தான் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்கிற அமைப்பு ஏற்பட்டது என்கிற வகையில் அவர் ஒரு மார்கதரிசி.

மற்ற மெட்டுகளை எடுத்துக் கொண்டால், ஒரே பாடலுக்கு ஐம்பது மெட்டுகள் தேவையில்லை என்று தோன்றுகிறது. நான் சமீபத்தில் பெங்களூரில் ஒரு கோரிக்கை வைத்தேன். அரசாங்கமோ அல்லது வேறொரு அமைப்போ முன்னின்று இந்த மெட்டுகளை சீரமைக்க வேண்டும். இந்தப் பாட்டுக்கு இதுதான் மெட்டு என்று நிர்ணயிக்க வேண்டும். அதை யாரும் கேட்டதாகத் தெரியவில்லை.

(மீண்டும் ஜி.என்.பிக்கு வருகிறார்….)

ஜி.என்.பி பிருகாவைப் பற்றி சொல்லும்போது, “ஒரு பிருகா நாலு அட்சரத்துக்கு பேசினால். அடுத்த காலம் எட்டு அட்சரம், அதற்கடுத்த காலம் பதினாறு அட்சரம் என்று துல்லியமாகப் பேச வேண்டும். குரல் வசதியில்லை என்பதற்காக 12 அட்சரம், 13 அட்சரம் என்று குறைத்துப் பேசினால் அதைப் பாடாமல் இருப்பதே உசிதம்”, என்பார்.

கமகத்தை நாம் அளவுக்கு மீறி உபயோகித்துவிடுகிறோம் என்பார். ஒரு ஸ்வரத்தை அசைத்தால் அடுத்த ஸ்வரத்தை அசைக்கக் கூடாது. (தோடியில் காகரிரி என்று பாடிக் காண்பிக்கிறார்). காந்தாரத்துக்கு அசைவு கொடுத்தால் ரிஷபத்துக்கு அசைவில்லாமல் பாட வேண்டும். எதைச் செய்தாலும் அதில் அழகுணர்ச்சி கெடாமல், ஸ்வானுபாவத்தோடு பாடவேண்டும். நான் புதுமையாக செய்கிறேன் என்று கிளம்பி மூக்கைக் கொண்டு முகத்துக்குப் பின்னால் வைக்கக்குடாது. இன்றைக்கு எல்லோரும் நன்றாகத்தான் பாடுகிறார்கள். இதற்கும் அடுத்த நிலையில் ஸ்வானுபவமாகப் பாட வேண்டும்.

இன்றைய நிலையில் சீக்கிரம் கச்சேரி செய்தாக வேண்டும் என்கிற நிர்பந்தம் இருக்கிறதோ? எல்லோரையும் சைல்ட் பிராடிஜியாகக் காட்ட வேண்டியது அவசியம் என்று நினைக்கிறார்களோ?

நம்மிடையில் நிஜமான பிராடிஜிஸ் இருவர் இருக்கிறார்கள். ரவிகிரணும், மேண்டலின் ஸ்ரீனிவாஸும். இவர்கள் பிறவி மேதைகள். ராஜரத்தினம் பிள்ளை, ஜி.என்.பி, மதுரை மணி மாதிரி யாரோ ஒரு மேதையின் மறுஅவதாரம் என்றுகூடச் சொல்லுவேன். அவர்களைப் பார்த்து மற்ற குழந்தைகளை மேடையேற்றி தவறு செய்துகொண்டிருக்கிறார்கள்.

இன்று பொதுவாகவே வாய்ப்பாட்டு குறைந்துவிட்டது. வாத்தியக்கலைஞர்கள்தான் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். பத்து வயதில் ஒரு குழந்தையை மேடையேற்றிப் பாடச் சொல்லிவிட்டு, பதினான்கு வயதில் குரல் உடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

இந்த நிலை ஹிந்துஸ்தானியில் சற்று பரவாயில்லை. நான் சமீபத்தில் கல்கத்தாவுக்குச் சென்றிருந்தேன். அங்கு ரஷீத் கான் என்று ஒரு பையனின் பதிவைக் கேட்டேன். ரொம்பவே நன்றாக இருந்தது. இருந்தாலும் அவன் குரு சொல்கிறார், “இன்னும் அவன் வெளியில் வந்து பாட கொஞ்சம் காத்திருக்க வேண்டும்”, என்று.

அங்கு ஐ.டி.சி-யில் ஒவ்வொரு கரானாவையும் கட்டிக் காக்க நிறைய வழி செய்துள்ளார்கள். நல்ல சம்பளம் கொடுத்து ஆசிரியர்களை நியமித்து, மாணவர்கள் அங்கேயே தங்கிப் படிக்க வழி செய்துள்ளார்கள்.

நம் ஊரில்தான் ஒருவர் வழியின் மேல் இன்னொருவருக்கு துவேஷம் வளர்த்துக் கொண்டுவிட்டோம். தனம்மாள் பாணி சங்கீதத்தின் மேல் எங்களுக்கெல்லாம் பெரிய மரியாதை உண்டு. என் அம்மாவே தனம்மாளிடம் நிறைய பதங்கள் ஜாவளிகள் கற்றுக்கொண்டுள்ளார். நான் பிருந்தாம்மாவைப் பார்த்தால் மரியாதையாய் நமஸ்கரிப்பேன். ஆனால் பேப்பரில் எழுதுபவர்கள், கலைஞர்களுக்கு இடையில் இருப்பவர்கள் அப்படி நினைப்பதில்லை. ”இது தள்ளுபடி. இது சரியில்லை. அதில் குறையுள்ளது. இது சாஸ்திர விரோதம்”, என்று சொல்லிச் சொல்லி துவேஷத்தை வளர்க்கின்றனர்.

இது அடிப்படையில் கலை. அதை ஒரு சட்டகத்துக்குள் அடைக்க முடியுமா? ரவிவர்மா வரைந்த அதே பாணியில்தான் எல்லோரும் இன்று வரைந்து கொண்டிருக்கிறார்களா? இதைச் சொல்லும் வேளையில், அடிப்படையே இல்லாமல் “பழையதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? யார் வரையறுப்பது. எப்படி வேண்டுமானாலும் பாடுவேன்.”, என்று சொல்வதையும் நான் ஆதரிக்கவில்லை.  அந்த அடிப்படையை சரியாகப் பெறுவதற்காகத்தான் குருமுகமாகக் கற்பது.

ஜி.என்.பி உட்கார வைத்து சொல்லிக் கொடுப்பாரா?

முன்பே சொன்னது போல அவர் அன்றைய மனநிலையைப் பொருத்ததுதான். சில நாட்கள் காலையிலிருந்து மாலை வரை பேசாமலே இருந்துவிடுவார். சில சமயம் கீர்த்தனையை அழகாக ஸ்வரப்படுத்தி எழுதிக் கொடுத்துவிட்டு, ஒருமுறை பாடிக்காட்டிவிடுவார். மற்றபடி அவர் கச்சேரியில் பாடுவதைக் கேட்டு நாம் சரிபடுத்திக் கொள்ள வேண்டியதுதான். அது போன்ற சில கிருதிகளை, அவர் காலையில் எழுதிக் கொடுத்துப் பாடிக் காண்பித்ததை நான் மாலையில் கச்சேரியில் பாடியிருக்கிறேன். “ரெடிமேட் டிரஸ்ஸை எடுத்து மாட்டிக்கிறா மாதிரி இப்படி கீர்த்தனையைப் பாடலாமா? ஒரு கீர்த்தனையைப் பாடறதுக்கு முன்னாடி எவ்வளவு போஷணை பண்ணனும்”, என்று கோபித்துக் கொள்வார்.

ஜி.என்.பி-யின் நெருங்கிய நண்பரும் பள்ளித் தோழருமான சி.கே.வெங்கடநரசிம்மனும் இந்த விஷயத்தில் நிறைய உதவி செய்திருக்கிறார். ஜி.என்.பி-யின் மனநிலை சரியில்லாவிட்டால் சொல்லிக் கொடுக்கமாட்டார் என்பதை உணர்ந்து, எங்களை அவர் வீட்டுக்கு வரச் சொல்லிவிடுவார். அவர் வீட்டில் பாலக்காடு மணி ஐயர் முதலானோர் வந்திருப்பார்கள். அவர் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு நாள் முழுவதும் சாதகம் செய்வோம். அங்கு வந்துவிட்டால் ஜி.என்.பி-யும் உற்சாகமாக சங்கீதத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். அவரும் மணி ஐயரும் சேர்ந்து கீர்த்தனைகளை மெருகெற்றுவதைப் பார்த்திருக்கிறேன். மணி ஐயர் தன்னை விட சங்கீதத்துறையில் சீனியர் என்று ஜி.என்.பி-க்கு பெரிய மதிப்பு. “அடியேன் இந்த சங்கதி வைத்துக் கொள்ளலாமா”, என்று அவரிடம் அபிப்ராயம் கேட்பார்.

நிறைய நேரம் உட்கார வைத்து சொல்லிக் கொடுக்கமாட்டர் என்றாலும், அவர் பாடிக் காட்டி கூறும் விளக்கங்கள், நுணுக்கங்கள் ஆழமாய் பதியும்படி இருக்கும்.

(மறுகேலராவில் ராகவாவில் வறும் சிறு சிறு நகாசுகளைப் பாடிக் காட்டுகிறார்).

இதயெல்லாம் ஒலிப்பதிவில் கேட்டு கற்றுக் கொள்ளமுடியாது.

(மாரமணன் கிருதியில்மாற ஜனகன்என்கிற இடத்தைப் பாடிக் காண்பிக்கிறார்)

வல்லினம் மெல்லினம் சேர்த்து எப்படிப் பாடுவது.?எங்கு வாயைத் திறந்து பாடுவது? எப்படி குரலைக் குறுக்கி ஆனால் ஒரேடியாய் அழுத்தாமல் பாடுவது என்பதெல்லாம் நேரில்தான் தெரிந்துகொள்ள முடியும்.

மைக்கின் முன்னால் பாடுகிறோம். அதில் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு. கீழ் ஸ்தாயியில் குறிப்பாக பெண்களுக்கு, மைக்குக்கு அருகாமையில் வந்த பாட வேண்டியிருக்கலாம். சில சங்கதிகளுக்கு மைக்கிலிருந்து கொஞ்சம் விலகி இருந்து பாட வேண்டியிருக்கும். அதற்காக ரொம்பவும் விலகிப் போய்விடவும் கூடாது. மைக் வைப்பவர்களுக்கு முதலில் சங்கீத ஞானம் வேண்டும். டீக்கடை மாதிரி இஷ்டத்துக்கு திருப்பிவிட்டுவிடும் போது பாடுபவர்களுக்கும் பக்கவாத்தியகாரர்களும் இடையிலேயே சண்டை வந்துவிடுகிறது. கேட்பவர்களுக்கு தலைவலிதான் மிஞ்சுகிறது.

(உரையாடல் எங்கோ சென்றுவிட்டதை உணர்ந்து மீண்டும் இடத்துக்கு வருகிறார்)

எதற்கு இதை சொல்ல வந்தேன் என்றால், நமக்கு ஒரு குருவின் மூலம் நல்ல அடிப்படை வேண்டும். அதற்கு மேல் நம்முடைய குரல், சக்தி, அறிவு எல்லாம். இதில் இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும்.

நாம் என்ன ஆகாசத்திலிருந்தா குதித்தோம்? தாத்தா-பாட்டி, அப்பா-அம்மா வழித்தோன்றலாகத்தானே வந்தோம்? அவர்களின் சாயல் நமக்கு இருக்கத்தானே செய்யும்? அப்படித்தான் சங்கீதத்திலும்.

சில விமர்சகர்கள், சில பாணியை அப்படியே பாடினால் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், எங்கள் பாணியில் அப்படிப் பாடினால் நகலெடுக்கிறார்கள், தனித்தன்மை (originality) இல்லை என்று குறை கூறுகின்றனர். ராகம் மார்டர்னாக இருக்கிறது. ராகத்துக்கு சூட்டு கோட்டு போட்டது போல இருக்கிறது, என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

ராகத்தில் என்ன மார்டர்ன் ராகம்? ஜி.என்.பி சிவசக்தி என்று ஒரு ராகம் உருவாக்கினார். அவர் ஸ்ரீவித்யா உபாசகர். அதிலும் கடைசி பத்து வருடங்கள் அவர் கவனம் முழுவதும் பூஜையில்தான். ஸ்ரீசக்கரத்துக்கு ஒன்பது முகங்கள். (சிவனுக்கு 4, சக்திக்கு 5. இந்த ராகத்தில் ஆரோகணத்தில் நான்கு ஸ்வரங்கள். அவரோகணத்தில் ஐந்து ஸ்வரங்கள்). அதனால் இப்படிப் பெயர் வைத்தேன் என்றார். இது கரஹரப்ரியா ஜன்யம்.

இந்த ராகத்தை என் சிஷ்யை சுதா அகாடமியில் பாடியிருக்கிறாள். அதற்கு ஹிந்து பேப்பரில் ஒரு விமர்சனம் வந்தது. “திடீரென்று ஒரு மார்டர்ன் ராகம் வந்தது”, என்று வந்திருந்தது. இதில் என்ன மார்டர்ன் இருக்கிறது?

அப்படியெனில் தியாகையர் நாளில் அதற்கு முன்னாலில்லாத ராகங்களில் எல்லாம் அவர் பாடல் புனைந்தாரே அவரை இவர்கள் மார்டர்ன் என்று ஏன் சொல்லவில்லை? ஆக இது மார்டர்னா இல்லையா என்பது ஆளைப் பொருத்து, எந்த வழியில் வந்தவர் என்பதைப் பொருத்து இருக்கிறது. ஜி.என்.பி என்கிற பெயரைப் பார்த்தாலே ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்று ஆகிவிட்டது இவர்களுக்கு.

கதனகுதூகலத்தில் ‘ரகுவம்ச சுதா’ இருக்கிறது. வேறொரு  பரிமாணத்தைக் காட்டினால் ஒரு படிப்பினையாகவும் இருக்குமே என்று அவர் சில கிருதிகள் அமைத்திருக்கிறார்.

அவர் காலமாவதற்கு சிறிது காலம் முன்பு அவரை செங்கல்பட்டு ஸ்டேஷனில் ஏற்றிவிடப் போயிருந்தேன். அப்போது அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. “நான் நிறைய பரிசோதனைகள் செய்துவிட்டேன். நிறைய அபூர்வ ராகங்களைப் பாடிப் பார்த்துவிட்டேன். இந்த கன ராகங்களில்தான் விசேஷம் இருக்கிறது. ஆயிரக் கணக்கான வருடங்களாய் பாடப்பட்டு வந்தாலும் இன்னும் அதில் புதிய பரிமாணங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தனை பேர் பாடிய அந்த ராகங்களை நாம் பாடி கேட்பவரைத் திருப்தியுரச் செய்ய வேண்டுமானால் எவ்வளவு உழைக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள். நீங்களெல்லாம் ஞானமுள்ளவர்கள். சிந்தித்துப் பாருங்கள். கற்பனையைக் கட்டற்று ஓடவிடாமல், உசிதமான கற்பனையாக – ராக ஸ்வரூபம் கெடாமல் செய்யுங்கள். கன ராகங்களில்தான் நம் சங்கீதத்தின் சாரம் இருக்கிறது என்று பெரியவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்பதுதான் நான் என் அனுபவத்தில் உணர்ந்ததுகொண்டது”, என்றார்.

இதெல்லாம் இந்த விமர்சகர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு என்னமோ ஜி.என்.பி வழியில் அவர்கள் புதியதாக எதையோ செய்து சங்கீதத்தை நாசம் செய்துவிட்டனர் என்று எண்ணம். இந்த விஷயம் பதிவாக வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன். மிகவும் வருதத்தோடு இதைப் பதிவு செய்கிறேன்.

“இவர்களுக்கு எல்லாம் சம்பிரதாயம் என்றால் என்னவென்றே தெரியாது. ஏதோ ஸ்வரத்தை வைத்து ராகம், கீர்த்தனை எல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.”, என்று தப்பான அபிப்ராயம் பரவியுள்ளது.

இன்னொரு வகையில், இந்த வழியை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பாட முயன்றவர்களும் இப்படி ஒரு அபிப்ராயம் பரவ முக்கிய காரணம் என்றும் சொல்ல வேண்டும். உதாரணமாக ஒரு பிருகா பாடினால், ‘ஸ ரி க ம ப த நி ஸ’ என்றால் எட்டு ஸ்வரமும் தெளிவாகக் கேட்க வேண்டும். தேசலாக விழக்கூடாது. அப்படி முழுமையாக விழுவதுதான் ஜி.என்.பி பாணி. அவர் கடைசி காலத்தில் பாடிய தோடி ராகப் பதிவு ஒன்று இருக்கிறது. அதைக் கேட்டுப் பார்த்தால் நான் சொல்வது புரியும். அவருடைய கன சாரீரத்தில் அந்தப் பிருகா அப்படி வந்து விழும்.

பாடுவதற்கு இரண்டு தினுசுகள் உள்ளன. ஒன்று ‘perfection; இன்னொன்று ‘adventure’. சாகஸ வழிக்குச் சென்றால் சில சமயங்களில் தோல்விகள் ஏற்படும்.

அதிலும் வாத்தியத்தை விட குரலில் தோல்விகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அது மனித சாரீரம்தானே? அன்றைய உடல்நிலை, குரல்நிலை, மனநிலை, வந்து குழுமும் ரசிகர்கள் என்று எத்தனையோ விஷயங்கள் சரியாகக் கூடினால்தான் சங்கீதம் சரியாக வெளிப்படும்.

சில நாட்களில் மனம் நினைப்பது வெளிப்படாமல் போய்விடும். நினைப்பது வந்துவிடும் நாட்களில் அதைவிடச் சிறந்தது வேறில்லை என்று தோன்றும்.  துல்லியத்தை நாடும் வழியில் அந்தப் பிரச்னை இல்லை. அதுவும் ஒன்றும் குறைச்சலானதல்ல. அதைப் பின்பற்றுவர்களுக்கு நாங்கள் எதிரியல்ல. இரண்டு வழிகளும் சேர்ந்து பயணிக்க முடியும்.

சிலபேர் தவறு கண்டுபிடிப்பதற்கென்றே கச்சேரிக்கு வருகின்றனர். மனிதரில் தவறில்லாத மனிதர் எவர்? தியாகராஜர் சொல்கிறார், “வசிஷ்டர் குறித்துக் கொடுத்த உனது பட்டாபிஷேகமே தவறிவிட்டதே, நீ மனிதன்தான்.”, என்கிறார். மனிதனாக அவதாரம் எடுத்தால் தெய்வத்துக்கே தவறு ஏற்படுகிறதில்லையா?

ரசிகர்களிலேயே பல வகையான ரசிகர்கள் இருக்கின்றனர். என்னதான் பக்தி என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், நாங்கள் பணத்திற்காகப் பாடுகின்றோம் என்பதை மறுக்கமுடியாது.  காசு கொடுத்து டிக்கெட் வாங்கி ரசிகர்கள் வரும் போது அவர்கள் விருப்பப்படி நாம் பாட வேண்டியது கடைமையாகிறது. அப்படியெல்லாம் பாடமாட்டேன் என்றால் வீட்டிலேயே பக்திப் பரவசமாய் பாடிக் கொண்டிருக்கலாம்.

காரைக்குடி சாம்பசிவ ஐயர் வீட்டில்தான் வாசிப்பார். அவரைக் கச்சேரிக்குக் கூப்பிட்டால், “நான் அதற்கெல்லாம் லாயக்கற்றவன். எனக்குத் தெரிந்ததை நான் வீட்டில் வாசித்துவிட்டுப்போகிறேன். நீங்கள் வேண்டுமானால் வீட்டில் வந்து கேளுங்கள்”, என்பார். அவரைப் போல எல்லோரும் இருக்க முடியுமா?

அதற்காக மேடையில் ஏமாற்ற வேண்டுமென்று சொல்லவில்லை. நம் கச்சேரிக்கு வடக்கே இருந்து யாரோ வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஏன் ஹிந்துஸ்தானி கலைஞர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று நான் பஜன் பாட முடியுமா? அவர்கள் நம் ஊருக்கு வந்து பாடினால் ‘ராமா நீ சமானமெவரு’ பாடுகிறார்களா என்ன? அப்படி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு ஹிந்துஸ்தானி கலைஞர்கள் நகைக்கின்றனர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி பஜன் பாடுகிறார் என்றால், அவர் அதை முறைப்படி கற்றுக்கொண்டுள்ளார். அவர் குரலுக்கு அது நன்றாகவும் இருக்கிறது. அதனால் அதை ஒப்புக்கொள்ளலாம். அதைப் பார்த்துவிட்டு நானும் பாடுகிறேன் என்று எல்லோரும் கிளம்பினால் அது அங்குமில்லாமல் இங்குமில்லாமல் குழப்பத்தில் முடிகிறது. இந்தக் குழப்பங்கள் போக வேண்டும்.

வடக்கில் இந்தக் குழப்பங்களில்லை. கஜல் பாடுபவர்கள், தும்ரி, கயால் பாடுபவர்கள், டிராமா பாடுபவர்கள், நாட்டுப்புறப் பாடல்கள் என்று பாடுபவர்கள் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளாமல் தனியாக இயங்குகின்றனர்.

ஐ.டி.சி-யில் ஒவ்வொரு கரானாவுக்கும் முக்கியத்வம் கொடுத்து அதற்கென்று ஆசிரியர்களை நியமித்து, உயர்வு தாழ்வெல்லாம் பார்க்காமல் வருங்காலத்துக்கு பாதுகாக்க வழி செய்து வருகின்றனர். இங்கும் அது வர வேண்டும். திறந்த மனத்துடன் அனைத்து பாணிகளையும் அணுக வேண்டும். எல்லாவற்றிலும் உள்ள நல்லதை நாம் கேட்டு ரசிக்க வேண்டும்.

அந்தப் பண்பு ஜி.என்.பி-க்கு நிறைய உண்டு. அதே போல ஒன்று வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் அவர் மனத்தை மாற்ற முடியாது. எனக்கே அவர் இருந்த வரை வானொலியில் டாப் கிரேட் கிடைக்கவில்லை. “இன்னும் கொஞ்சம் வளர வேண்டும்”, என்று தள்ளிப் போட்டுவிட்டார். அவர் மறைந்து இரண்டு வருடங்களுக்குப் பின்தான் டாப் கிரேட் கிடைத்தது. அதற்காக அவர் மேல் ஒன்றும் கோபமில்லை. அவருடைய சுபாவமது.

தொகுத்துச் சொன்னால், பிடிவாதமாய் சரி தவறென்று வகுத்துக் கொள்ளும் போது கொஞ்சம் சிக்கல்தான். அப்படிப்பட்ட மனநிலையினால் இன்று சில பாணிகள் தேய்ந்து அழிந்தே போய்விடுமோ என்று அச்சமாகயிருக்கிறது. ஒரு வழியில் வந்து பாடுபவர்களும் தங்கள் வழியின் அடிப்படைகளை நன்றாகப் புரிந்து கொண்டு பாட வேண்டும்.

ஒன்று பாரம்பர்யமாக கற்று, தங்கள் பரம்பரையின் தனித்துவத்தை விட்டுவிடாமல் பாடி வரவேண்டும். அல்லது இருப்பவற்றில் தனக்குகந்ததைத் தேடி, அழகுணர்ச்சியோடு தனதாக்கிக் கொள்ளும் திறன் வேண்டும். நானும் பாடிக் காண்பிக்கிறேன் என்று வீம்புக்கு பாட வருபவர்களால் பிரயோஜனமில்லை.

இன்னொரு விஷயம், சங்கீதத்தையே தொழிலாக வைத்துப் பிழைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இடையில், பணமிருப்பவர்கள் அவர்களுடைய செல்வாக்கை உபயோகித்து நுழையும் போது, இதையே நம்பியிருப்பவர்களின் பாடு திண்டாட்டமாகிறது.

எங்களைப் போன்ற முழுநேர கலைஞர்களும், காரியம் ஆகவேண்டுமென்பதற்காக, பணக்கார வீட்டுக் குழந்தை பாடினால் சுமாரான பாட்டைக் கூட அதீதமாய் புகழ்ந்துவிடுகின்றனர். இதனால் உண்மையான சங்கீதத்துக்கான மதிப்பு குறைந்துவிடுகிறது.

சங்கீதம் சொல்லிக் கொடுப்பதைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா?

எனக்குச் சொல்லிக் கொடுப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஏனெனில், சொல்லிக் கொடுக்கும்போது நான் செழுமையடைகிறேன். சொல்லிக் கொடுக்கும் போது நமக்கும நாமே அங்கு குருவாகிறோம். ஒரு சங்கதியை சொல்லிக்கொடுக்கும் போதுதான் அது சரியாக இருக்கிறதா, ராகத்துக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்றெல்லாம் சீர்தூக்கிப்பார்க்க முடிகிறது. நாமே குருவாகவும், சிஷ்யனாகவும் இருக்கும் நிலை ஏற்படுகிறது.

உண்மையாய் நாம் சொல்லிக் கொடுக்கும்போது, தவறைத்தான் முதலில் சுட்டிக்காட்ட வேண்டும். எதை விலக்கவேண்டும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். அதைச் செய்தோமெனில், நல்லவை தானாக வந்துவிடும்.

லட்சியம், லட்சணம் – இரண்டும் சேரும் போதுதான் பூர்ணத்துவத்தை நோக்கிப் போக முடியும். சங்கீதத்தில் பூர்ணத்துவம் என்பதை அடையவே முடியாது என்பது வேறு விஷயம். அது பெரிய கடல். எல்லையை நோக்கிப் போகிறோம். எல்லையை அடையாவிட்டாலும் நம் உழைப்புக்கும் திறமைக்கும் ஏற்ப நமக்கு சில சிப்பிகள் கிடைக்கின்றன. கிடைக்கும் முத்துகளில் சிலது சிறியதாக இருக்கலாம். சிலது பெரியதாக இருக்கலாம். சிலவற்றில் ஒன்றுமே இல்லாமல்கூடப் போகலாம். அது அவரவருக்கு விதித்தது. ’சீதாவர சங்கீத ஞானமு – தாத வ்ராயவலெரா’ என்று தியாகராஜர் சொன்னது போலத்தான்.

ஒரு கீர்த்தனையை குருமுகமாகப் பாடம் செய்தால், அதை முடிந்தவரை மாற்றாமல் பாட வேண்டும் என்று நினைக்கிறேன். நமக்குப் புதியதாகச் செய்ய எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன. கீர்த்தனையை மாற்றித்தான் என் சாமர்த்தியத்தைக் காட்ட வேண்டுமென்று இல்லை. அப்படி மாற்றாமல் இருப்பது ஒருவிதத்தில் குருவின் மேலுள்ள மதிப்பில் வெளிப்பாடு என்று நினைக்கிறேன்.

இந்த வித்தைக்கு நிச்சயம் குருவருள் தேவை. ஒவ்வொரு நாளும் கச்சேரியில் தவறு வர எத்தனையோ சாத்தியங்கள் உண்டு. நாம் ஒன்று நினைப்போம். பாட்டில் வெளிவருவது முற்றிலும் வெறொன்றாக இருந்துவிடக்கூடும்.

இன்று எவ்வளவோ வசதிகள் வந்திருக்கலாம். அன்றைய நாள் போல குருகுலவாசம் செய்வதென்பது முடியாமல் போகலாம். ஆனாலும் ஒரு குருமுகமாகக் கற்பது என்பது மிகவும் அவசியம். உதாரணமாக கர்நாடிக் காலேஜை எடுத்துக் கொள்வோம். அங்கும் டி.எம்.டி, கே.வி.என் போன்ற பெரிய கலைஞர்கள்தான் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். கல்லூரியில் போய் ஒரு பெரிய வித்வானின் மேற்பார்வையில் பட்டயம் வாங்கினாலும், ஒரு மருத்துவர் படிப்புக்குப் பின் ஹவுஸ் சர்ஜனாக வேலை பார்ப்பது போலவோ, வக்கீலுக்குப் படித்தவுடன் ஜூனியராக வேலை பார்ப்பது போலவோ, தங்கள் மனதுக்குப்படித்த, தங்கள் சங்கீதத்துக்கு ஒத்து வரும்படியான குருவைத் தேடி அவரிடமும் தனிப்பட்ட முறையில் கற்பது மிகவும் அவசியம்.

scan0001

மாணவர்கள் எப்படி குரலை வளப்படுத்துவது, எந்த ஸ்ருதியில் பாடுவது என்பது பற்றி சொல்ல முடியுமா?

குரல் என்பது அவரவர்க்கு அமைந்துதான். அனாலும் பாடும் போது விகாரமாக இல்லாமல் வாயைத் திறந்து பாட வேண்டும். தொண்டையிலிருந்து குரல் கொடுத்துப் பாடிப் பழக வேண்டும். அதற்காக சக்திக்கு மீறி கத்த வேண்டும் என்றுமில்லை. குரலை அழுத்திக் கொள்ளாமல், இயற்கையாகப் பாட வேண்டும்.

ஸ்ருதியும் அப்படித்தான். மற்றவர்கள் குறைவாக நினைப்பார்களே என்பதற்காக ஸ்ருதியை எட்டாத உயரத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம். அதற்காக ரொம்பவும் குறைத்துக் கொள்ளவும் வேண்டாம். பெண்களுக்கு நாலு/நாலரைக்கு குறைவாக ஸ்ருதி இருந்தால் நன்றாக இருக்காது. ஆறு கட்டைக்கு மேல் பாடினால் பக்கவாத்தியக்காரர்களுக்கு சிரமம்.

ஹிந்துஸ்தானி கலைஞர்கள் ஆறரை ஏழு என்று கூட வைத்துக் கொள்ளலாம். பொதுவாகவே அவர்களுக்கு கட்டுப்பாடுகள் குறைவு. “இந்துஸ்தானியில் இரண்டு தம்புராவை சேர்த்துக் கொண்டு ஸ்ருதியில் சேர்வது போல ஏன் நம்மால் சேர முடிவதில்லை?”, என்று  என் பாட்டைக் குறிப்பிட்டு சமீபத்தில் எழுதியிருந்தார்கள்.

நான் விரிபோணி வர்ணம் பாடுவதற்கு முன்னால் அரை மணி நேரம் மந்திர ஸ்தாயியில் பைரவி ராகம் பாடினால் இந்த விமர்சகர்கள் ஒப்புக்கொள்வார்களா? ஹிந்துஸ்தானியில் அப்படித்தானே பாடுகிறார்கள்?

ஸ்ருதி சுத்தம் வர மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

நம் இசையில் கமகங்களுக்கு முக்கிய இடமுண்டு என்றாலும் சுத்த ஸ்வர சாதகம் மிகவும் அவசியம். மூச்சை அடக்குவதற்கும், சாரீரத்தில் நடுக்கமில்லாமல் இருப்பதற்கும் சுத்த ஸ்வர சாதகம்தான் உதவும்.

அகார சாதகமும் மிகவும் அவசியம். ராகம் பாடும் போது பெரும்பாலும் அகாரத்தில்தான் பாட வேண்டும். இகாரம், உகாரம் எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாமே தவிர அதையே பிரதானமாகக் கொள்ளக்கூடாது. அதைத்தான் ராமானுஜ ஐயங்கார் செய்தார். அவர்பாட்டில் எந்தவிதமான அசிங்கமோ, அநாவசியமே இருக்காது. இதயெல்லாம்தான் நாம் மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.

நீங்கள் சரளமாகப் பேசக்கூடிய மொழிகள் எவை?

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு சரளமாகப் பேசுவேன். கன்னடம் ஓரளவு பேசுவேன். ஹிந்தி அதைவிட குறைவாகத்தான் பேச வரும்.

ஆனால் ஒரு விஷயம். பாடுகின்ற பாட்டை அர்த்தம் தெரிந்து கொண்டுதான் பாடுவேன். மாணவர்களுக்கு அது அவசியம் என்று நினைக்கிறேன். எல்லா பாஷைகளையும் கற்றுக்கொள்ள முடியாவிடினும், பாடுகின்ற பாட்டின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பாட வேண்டும்.

நீங்கள் சரளி வரிசை, ஜண்டை வரிசை என்று முறைப்படி கற்றுக் கொண்டீர்களா?

இல்லை. சங்கீத சூழலில் வளர்ந்ததால் அப்படியே பாடத் துவங்கிவிட்டேன்.

அப்படிக் கற்றுக் கொள்ளாததை ஒரு குறையென்று நினைக்கிறீர்களா?

என்னை யாராவது அவற்றைச் சொல்லிக் கொடுக்கச் சொன்னால் எனக்குத் தெரியாது என்கிற குறைதான். நல்ல காலம் நான் ஆரம்ப பாடமெல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை.

குழந்தைகளுக்கு இந்த வரிசைகளெல்லாம் கற்றுக் கொடுப்பது அவசியமா?

கற்றுக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் மாயாமாளவகௌளையில் மட்டும் பாடாமல் எல்லா சம்பூர்ண ராகத்திலும் பாடி சாதகம் செய்ய வேண்டும். அகாரத்திலும் இந்த வரிசைகளைப் பாடச் செய்ய வெண்டும். அப்படிச் செய்யும் போது ஸ்வர ஞானம் ராக வித்தியாசங்கள் எல்லாம் புரிபட வசதியாக இருக்கும். வர்ணங்களையும் அகார சாதகம் செய்யச் சொல்ல வேண்டும்.

உங்கள் பாட்டு நிறைய ஒலிப்பதிவுகளாக வந்திருக்கிறதல்லவா?

 பன்னிரெண்டு வயதில் ‘ஸரஸிஜநாப முராரே’ கிராமஃபோன் ரிக்கார்டு வெளியானது. “அதுக்குள்ள ரிக்கார்ட்டுக்கு என்ன அவசரம்?”, என்று ஜி.என்.பி கோபித்துக் கொண்டார். அதன்பின் நிறைய பதிவுகள். இடையில் சினிமாவிலும் நிறைய பாடியதால் அவையும் பதிவாகியுள்ளன.

அந்த நாளில் சினிமா பாடல்களும் சாஸ்திரிய சங்கீத அடிப்படையில் இருந்ததால் பாடமுடிந்தது. அந்த நிலை மாறியதும் நான் நிறுத்திவிட்டேன். நினைத்தாலும் என்னால் அப்படிப் பாடியிருக்க முடியுமென்று தோன்றவில்லை. அதற்காக மெல்லிசையை நான் குறைத்துச் சொல்லவில்லை. எனக்கு சுசீலா பாடல்கள் மிகவும் பிடிக்கும். இந்நாளில் கூட எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ள பாடல்கள் சில ரொம்பவே அழகாக உள்ளன.

நான் எந்த இசையையும் தள்ளுபடி செய்வதில்லை. இந்துஸ்தானி சங்கீதமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாய்ப்பாட்டு பாடுபவர்கள் வேறெதாவது வாத்தியமும் கற்றுக் கொண்டால் அது அவர்கள் பாட்டுக்கு உதவியாக இருக்குமென்று நினைக்கிறீர்களா?

எனக்கு சிறு வயதிலிருந்தே கச்சேரி செய்ய வேண்டிய சூழலிருந்ததால் அப்படி எந்த வாத்தியமும் கற்க முடியவில்லை. அப்படி கற்றால் உபயோகமாக இருக்குமென்றுதான் தோன்றுகிறது.

பாட்டு கற்றுக் கொள்ள வேண்டுமென்று யார் வந்தாலும் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா? அல்லது அவர்களை பரிட்சை செய்து பார்த்து, அவர்களுக்கு பாட வருமென்று தெரிந்தபின் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

வராது என்று தெரிந்த பின்னும், என்னிடமும் நிறைய சிஷ்யர்கள் இருக்கிறார்கள் என்று காண்பிப்பதற்காக நிறைய பேருக்குச் சொல்லிக் கொடுப்பதில் அர்த்தமில்லை. சமீபத்தில் எனக்கு ஒரு சங்கடம் வந்துவிட்டது. மலேஷிய அரசாங்க ஸ்காலர்ஷிப்பில் எனக்கு ஒரு தொகையைக் கொடுத்து ஒரு பெண்ணிற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அனுப்பியுள்ளார்கள். நான் சிங்கப்பூர் போயிருந்த போது அந்தப் பெண்ணை பாடச் சொன்னேன். அன்று ஒரு கீர்த்தனையை நன்றாகப்பாடிவிட்டாள். அதை நம்பி நானும் சொல்லித்தர ஒப்புக்கொண்டுவிட்டேன்.

இப்போது பார்த்தால் ‘ஸா-பா’ கூட அவளுக்குப் புரியவில்லை. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து அந்தப் பெண்ணை அனுப்பி வைக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் பொதுவாக சொல்லிக் கொடுப்பதற்கு பணம் வாங்கிக் கொள்வது கிடையாது. அவர்கள் புடவை மாதிரி ஏதாவது வாங்கிக் கொடுத்தாலும், நானும் அவர்களுக்கு பதிலுக்கு வாங்கிக் கொடுத்துவிடுவேன். கூடப் பாடுவதற்கு அவர்களை வெளியூருக்கு அழைத்துச் சென்றால் அவர்களுக்கு சேர்த்து சன்மானம் வாங்கிக் கொடுத்துவிடுவேன். அப்படிச் செய்தால் கூடப்பாட அவர்களுக்கும் ஆர்வமாகவும் இருக்கும். பொதுமக்களுக்கும் இப்படி ஒரு பாடகி தயாராகிறார் என்றும் தெரிய வருமில்லையா?

ஓரளவுக்கு கீர்த்தனைகளெல்லாம் புரிந்து பாடக்கூடிய அளவில் இருந்தால்தான் சொல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.

நீங்கள் சொல்வது ஆழ்ந்த தேர்ச்சிக்குப் பொருந்தும். ஆரம்ப பாடத்துக்கு வரும் குழந்தைகளுக்கு என்ன செய்வது?

அவர்களுக்கும் ஓரளவு பார்க்கலாம். பொதுவான பாட்டுகள் பல இருக்கின்றனவே. சினிமா பாடல்கள் கூட பாடச் சொல்லிக் கேட்டு, அதிலிருந்து அந்தக் குழந்தைக்கு வருமா என்று ஓரளவு நிர்ணயிக்கலாம். இயற்கையில் பாட்டு வராது என்கிற குழந்தையை வைத்துக் கட்டாயமாய் சொல்லித்தர வேண்டியதில்லை.

பணத்துக்காக செய்தால் அது மாதிரி சமரசங்கள் செய்ய நேர்ந்துவிடும். அதனால்தான் நான் சொல்லிக்கொடுக்க பணம் வாங்குவதில்லை. இந்தப் பெண் விஷயத்தில்தான் சறுக்கிவிட்டேன்.

உங்கள் வழியில் வருபவர்கள் நல்ல ஸ்வரஞானமுள்ளவர்கள் என்று அறியப்படுகிறார்கள். அதற்கென்று ஏதும் விசேஷப் பயிற்சி உண்டா?

ஸ்வரத்திலேயே கவனம் செலுத்திப்பாடக் கூடாது என்றொரு அபிப்ராயம் உண்டு. அது ஓரளவுக்கு உண்மையென்றாலும். ஓரளவுக்கு மேல் ஸ்வர ஞானம் இருந்தால்தான் முடியும். நான் கீர்த்தனை சொல்லிக் கொடுத்தால் ஸ்வரப்படுத்தாமல் சொல்லிக் கொடுப்பதில்லை. முன்னர் குறிப்பிட்ட பெண்ணுக்கு அந்தக் குறைதான். ஸ்வர ஞானம் இல்லாததால் கரஹரப்ரியா பாடும் போது ஹரிகாம்போதி ஸ்வரத்தைப் பிடித்துவிடுகிறாள்.

சில நுணுக்கமான சங்கதிகள், அனுஸ்வரங்கள் எல்லாம் கேள்வியினாலும், குருமுகமாகவும் கற்பது உசிதம். அவற்றையும் ஸ்வரப்படுத்தித் தெரிந்து கொள்ள முடியாது என்றில்லை. கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

பாவத்துக்காக ராக லட்சணத்திலிருந்து விலகுவதையும் நல்ல ஸ்வர ஞானம் இருந்தால் தவிர்க்கலாம். உதாரணமாக ‘சரவணபவ என்னும்’ பாட்டில் ஷண்முகப்ரியாவில் ‘நி த நி’ கரஹரப்ரியா போல ஒலிக்கப் பாடுகிறார்கள். அதை என்னால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை. வித்வான் என்றால் லட்சணம், லட்சியம் இரண்டும் சரியாக இருக்கவேண்டுமில்லையா?

பாடுவதை நாம் தெரிந்து செய்யவேண்டும். தெரியாமல் ஒரு சங்கதி வந்துவிட்டால், அதை அப்படியே விட்டுவிடாமல் அந்த சங்கதி சரியா தவறா என்று ஆலோசித்துப் பார்க்க வேண்டும்.

நான் ஒரு கச்சேரியில் சிம்மேந்திர மத்யமத்தில் கிரஹபேதம் செய்து நாதநாமக்ரியா காட்ட நினைத்தேன். அதை ஜி.என்.பி கேட்டுவிட்டு, “நாதநாமக்ரியாவை நினைத்துப்பாடியதில் அதில் ஒலித்த கமகம் முதன்மை ராகம் சிம்மேந்திரமத்யமத்தை கீரவாணி போல் ஒலித்தது. பார்த்து கவனமாகச் செய்”, என்று கூறினார்.

தோடியில் காந்தாரத்திலிருந்து கிருஹபேதம் செய்தால், தோடி காந்தாரத்துக்கு அசைவு இருக்கிறது என்பதற்காக கம்பிதம் கொடுத்தால் கிருஹபேதம் செய்த ராகத்தில் ஷட்ஜம் அசையுமல்லவா? இதெயெல்லாம் கவனித்துச் செய்ய வேண்டும்

லய சம்பந்தமான விஷயங்களை எப்படிச் சொல்லிக் கொடுப்பது?

சிலருக்கு இயற்கையாகவே அது அமைந்துவிடுகிறது. மேண்டலின் ஸ்ரீனிவாஸ் மாதிரி கலைஞர்களை அந்த வகையில் சேர்க்கலாம்.  எல்லாம் எவ்வளவு பெரிய லய விற்பன்னரை பக்கவாத்தியமாகப் போட்டாலும் அவனை அசைக்க முடியாது.

என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் அனுபவத்தினால் கற்றுக் கொண்டவர்கள். ஆரம்ப நாட்களில் தாளம் எனக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. நாளடையில் என் பலவீனத்தை உணர்ந்து அதை சரி செய்துவிட்டேன். இப்போது பரவாயில்லை. இத்தனை வருஷம் பாடி சரி செய்வதில் என்ன பிரமாதம்?

நமக்கு இது வரவில்லை என்கிற புரிதலாவது இருக்க வேண்டும்.

ஒலிநாடா முடிவுக்கு வருவதை கவனித்து, ‘ஆயிடுத்தோ?’ என்று அவர் கேட்பதோடு பதிவு நின்றுவிடுகிறது.

Read Full Post »

98-வது வயதில் அடியெடுத்து வைக்கும் டாக்டர் பினாகபாணிக்கு வாழ்த்துகள். சதம் அடிக்க பிரார்த்தனைகள். அதற்குள் இன்னும் சில முறையாவது அவரைச் சந்தித்து விட வேண்டும்.

ஐந்து வருடங்களுக்கு மேலாக படுக்கையில் கிடக்கிறார் என்ற போதும் கிட்டத்தட்ட 90 ஆண்டு விஷயங்களை மனதில் பசுமையாய்த் தேக்கி வைத்துள்ளார். முடிந்த வரை தெரிந்து கொள்ள இறையருள் வேண்டும்.

சென்றாண்டு அவரளித்த விரிவான நேர்காணலை இங்கும், இங்கும் படிக்கலாம்.

Read Full Post »

தினமணி இசை விழா மலர் 2009-ல் வெளியான கட்டுரை

சங்கீத கலா ஆசார்யா எஸ்.ராஜம் ஒரு பல் துறை வல்லுனர். அற்புதமான பாடகர், சிறந்த ஓவியர், அட்டகாசமான ஃபோட்டோகிராபர். இன்று உயிரோடு இருக்கும் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுள் மூத்தவர். இதில் ஆச்சரியம் என்னவெனில், இவரை ஓவியராய் அறிந்தவர் பலருக்கு இவரின் சங்கீத ஆளுமை தெரியாது. சங்கீததில் பரிச்சயம் உள்ளவர்கள், பாடகரான எஸ்.ராஜம்தான் ஓவியமும் தீட்டுகிறார் என்று அறிந்திருப்பதில்லை.அறுபதைத் தாண்டினால் தன் பெயரே மறந்து போகும் நிலையில் பலர் இருக்க, 91-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் ராஜத்தின் நினைவாற்றல் அபாரமானது. தனது பத்தாவது வயதில் கேட்ட தனம்மாள் வீணையையும், நாயினாப் பிள்ளை பாட்டையும் நேற்று கேட்டது போல நினைவு கூர்ந்து பாடியும் காட்டக் கூடியவர். மயிலாப்பூர் நடுத் தெருவில் இருக்கும் அவருடைய வீடு ஒரு சங்கீதத் தலம். அம்பி தீட்சிதர், பாபநாசம் சிவன், மதுரை மணி போன்ற மேதைகளின் சங்கீதம் ஒலித்த இடம். அங்கு அவரைப் பல முறை சந்தித்துப் பெற்ற முத்துக்களின் சில சிதறல்கள் இங்கே:

எங்கள் பூர்வீகம் ஸ்ரீவாஞ்சியம். ஸ்ரீவாஞ்சியம் சுப்பராம ஐயர் என் கொள்ளுத் தாத்தா. அவர் நிறைய தமிழ்ப் பதங்கள் செய்துள்ளார். என் தந்தையார் வி.சுந்தரம் ஐயர் வக்கீலுக்குப் படித்தார். அவர் கோர்ட்டுக் கச்சேரிக்குச் சென்றதை விட, சங்கீதக் கச்சேரிக்குச் சென்றதுதான் அதிகம். பெரிய ஞானஸ்தரான அவரைத் தெடி அக் கால பிரபல வித்வான்கள் வந்த வண்ணம் இருப்பர். நான் இப்போது இருக்கும் வீட்டை எனது ஐந்தாவது வயதில் வாங்கினார். இந்தத் தெருவில்தான் (நடுத் தெரு) மயிலாப்பூர் சங்கீத சபா இருந்தது. அங்கு பிடாரம் கிருஷ்ணப்பா, பாலக்காடு ராம பாகவதர், நாயினாப் பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை போன்ற ஜாம்பவான்களின் கச்சேரிகளை என் சிறு வயது முதல் கேட்டிருக்கிறேன். சரஸ்வதி பாய் நந்தனார் சரித்தரம் சொன்னார் என்றால் கண்முன்னே வேதியரும் நந்தனும் வந்து நிற்பர். அப்பேர்ப்பட்ட சொல்லாற்றல். அற்புதமான பாட்டு!

கச்சேரிக்கு வரும் வித்வான்கள் எல்லாம் எங்கள் வீட்டில் தங்குவர். அப்படித் தங்கும் போது எனக்கு பல கீர்த்தனங்களைச் சொல்லிக் கொடுப்பர். என் தந்தைக்கு இருந்த செல்வாக்கால், நான் எங்கேயும் போகாமல் நல்ல சங்கீதம் என் வீட்டுக்கே வந்து என்னை ஆட்கொண்டது. குறிப்பாக அன்றைய ஹரிகதை விற்பனர்களிடமிருந்து எண்ணற்ற பாடல்களைக் பாடம் செய்தேன். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர். அவரிடமே 200 கீர்த்தனங்கள் கற்றுக் கொண்டேன். அவரது சிஷ்யை சௌந்திரம் எனது முதல் குரு. காயக சிகாமணி முத்தையா பாகவதருக்கு என் மேல் தனி பிரியம். ‘வல்லி நாயகனே’ போன்ற அவரது சொந்த சாஹித்யங்கள் பலவற்றை எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இசை திருவாலங்காடு சுந்தரேச ஐயரின் வயலின் இசை. அரை நிமிடம் வாசித்தாலும் ராகத்தின் ஜீவனை முழுமையாய் காட்டிவிடும் வாசிப்பு அது! விடியற்காலை என் மூக்கினுள் வயலின் வில்லை நுழைத்து எழுப்பி, பேகடையும் சங்கராபரணமும் சொல்லிக் கொடுத்ததை என்னால் எப்போதும் மறக்க முடியாது.

மதுரை மணி எங்களுக்கு உறவினரும் கூட. சங்கீத உலகில் ஞானி என்றால், அது அவர்தான். “ராஜு! ராகம் எல்லாம் குளிச்சிட்டு வரா மாதிரி சுத்தமா இருக்கணும். ஸ்வரம் பாடறது எப்படி இருக்கணும் தெரியுமா? தங்கச் சங்கிலி மாதிரி இருக்கணும். ஒவ்வொரு ஸ்வரமும் கோத்துக் கோத்து இருக்கணும். ஸ்ருதியில் இம்மி பிசகாம நிற்கணும்”, என்று அடிக்கடி கூறுவார். அவரின் ஸர்வலகு வழியே என்னைப் பெரிதும் கவர்ந்தது. நான் யாரிடம் கற்றேன் என்று சொல்வதைவிட யாரிடமெல்லாம் கற்கவில்லை என்று சுலபமாகச் சொல்லி விடலாம். இருப்பினும், மூவரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

முதலாமவர் அம்பி தீட்சிதர். முத்துஸ்வாமி தீட்சிதரின் வம்சத்தில் வந்தவர். அவரும் மயிலாப்பூரிலேயே தங்கி இருந்தார். என் தந்தையாரின் வேண்டுகோளுக்கு இணங்கி எனக்குச் சொல்லிக் கொடுத்தார். எங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாள் சுத்த தன்யாசி ராகத்தை லேசாக இழுத்தார். ‘சுப்ரமண்யேன’ அல்லது ‘ஸ்ரீ பார்த்தசாரதி’ போன்ற ஒரு தீட்சிதர் கிருதியைத்தான் சொல்லிக் கொடுப்பார் என்று என் அப்பா நினைத்தார். அவரோ, ‘எந்த நேர்ச்சினா’ என்று தியாகராஜ கிருதியை ஆரம்பிக்கவும் என் தந்தைக்கு ஆச்சரியம் தாளவில்லை. பத்து வயது கூட நிரம்பியிராத எனக்கு, தீட்சிதர் கிருதிகள் போன்ற கஷ்டமான உருப்படிகளில் பாடத்தை தொடங்கியிருந்தால் பாட சிரமப்பட்டிருப்பேன். தியாகைய்யர் எளிமையாவும், ராக ரசம் சொட்டும் படியாகவும் அற்புதமாய் அமைத்திருக்கும் பாடல்களை குழந்தை கூடப் பாடிவிட முடியும். இதனை உணர்ந்துதான் அவர் ‘எந்த நேர்ச்சினா’-வில் பாடத்தைத் தொடங்கினார். அதன் பின், எண்ணற்ற தீட்சிதர் கிருதிகள் கற்றேன். அவர் பைரவியில் பாடிய ‘பால கோபால’ இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு பலகை எடுத்து வரச் சொல்லி, அதில் வெவ்வேறு கோள்களின் நிலைகளை வரைந்து விளக்கி, எனக்கு தீட்சிதரின் நவகிரஹ கிருதிகளைச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில், நவகிரஹங்களை ஓவியமாய்த் தீட்ட அந்தக் கிருதிகள் என் மேல் ஏற்படுத்திய தாக்கமே காரணம். கமலாம்பா நவாவர்ணம், பஞ்சலிங்க கிருதிகள் போன்றவற்றை எல்லாம் சொல்லிக் கொடுத்ததோடு மட்டுமின்று ஸ்வரப்படுத்தி எழுதியும் கொடுத்துள்ளார். அன்று அம்பி தீட்சிதர் எழுதிக் கொடுத்த புத்தகத்தை இன்றும் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருகிறேன்.

இரண்டாமவர் பாபநாசம் சிவன். அவர் சென்னைக்கு வந்தவுடன் எங்கள் வீட்டுக்குத்தான் வந்தார். மிக மிக எளிமையானவர். கையில் பணமிருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி ஒரே விதமாய்த்தான் நடந்து கொள்வார். நாதோபாசனையைத் தவிர வேறொன்றின் மேலும் நாட்டமில்லாதவர். சென்னையில் அவரின் முதல் மாணவனாகும் பெறு எனக்குக் கிடைத்தது. அவரே நூற்றுக் கணக்கில் பாடல்கள் புனைந்திருப்பினும், பெரும்பாலும் தியாகராஜர், கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசல கவி போன்றோரின் பாடல்களைத்தான் சொல்லிக் கொடுப்பார். ‘நகுமோமு’ கிருதியை, இன்று பாடுவது போல் அல்லாமல் ‘சுத்த தைவதத்தில்’ எனக்குச் சொல்லிக் கொடுத்தது பசுமரத்தாணியாய்ப் பதிந்தது. அம்பி தீட்சிதர் ஸ்வரப்படுத்தி எழுதிக் கொடுப்பார் என்றால், சிவனோ பேனாவைக் கையால் கூடத் தொட மாட்டார். அவர் பாடப்பாட சங்கதிகள் மலர்ந்த வண்ணம் இருக்கும். அதைக் கவனமாகக் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அவரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என் தந்தையார்தான்.

மூன்றாமவர் மயிலாப்பூர் கௌரியம்மாள். கபாலீஸ்வரர் கோயில் சேவையில் ஈடுபட்டிருந்தவர். அபிநயத்தில் பெரும் பேரைப் பெற்ற பாலசரஸ்வதியே கௌரியம்மாளிடம் கற்றுக் கொண்டிருக்கிறார். தாயைப் போல வாஞ்சையுடன் என்னை நடுத்துவார். பதங்கள் பாடி அபிநயம் பிடிப்பதில் கௌரியம்மாளுக்கே நிகரேயில்லை. ‘எத்தனை சொன்னாலும்’ என்று சாவேரியில் பாடினார் என்றால், பாடல் வரிகளின் பாவம் இசையிலும் அபிநயத்திலும் அப்படிப் பரிமளிக்கும். அவரிடம் கேட்டுதான் பாவப்பூர்வமாய்ப் பாடும் முறையை அறிந்து கொண்டேன். அவருக்கு தெரிந்த பதங்கள் சங்கீத வித்வான்களுக்குக் கூடத் தெரியாது. நிறைய தமிழ்ப் பதங்களையும், §க்ஷத்ரக்ஞரின் பதங்களையும் அவரிடம்தான் கற்றேன்.

இவர்களைத் தவிர காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளையும், வீணை தனம்மாளும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். ஏகலைவ பாவத்தில், அவர்கள் கச்சேரிகளில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். நாயினாப் பிள்ளை ‘அம்ப பரதேவதே’ என்று ருத்ரப்ரியாவில் பாடக் கேட்டு, அந்த ராகத்தின் மேல் பைத்தியமானேன். வீணை தனம்மாள் ‘அக்ஷயலிங்க விபோ’ வாசித்துக் கேட்டவர்கள் சங்கீதத்தின் உச்சத்தைக் கேட்டு மகிழ்ந்தவர்கள் என்று கொள்ளலாம்.

எனது முதல் கச்சேரி சித்தூருக்கு அருகில், பரமாச்சாரியாரின் முன், எனது பதிமூன்றாவது வயதில் நடை பெற்றது. என் கச்சேரிக்கு முந்தைய நாள் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பாடினார். அவர் கச்சேரிக்கே முப்பது பேர் கூட இல்லை. அப்படியெனில் என் கச்சேரிக்கு எத்தனை பேர் இருந்திருக்கக் கூடும்? பத்து பேர் கூட இல்லாத நிலையில், எனக்குத் தம்புரா போடக் கூட ஆள் இல்லை. நிலைமையைக் கண்ட அரியக்குடி, “ராஜு! நான் தம்புரா போடறேன். நீ தைரியமாப் பாடு.”, என்று உற்சாகப்படுத்தினார். பொடிப்பயல் சிஷ்யன் பாடுகிறான், அவனுக்குப் போய் தம்புரா போடுவதா என்று எண்ணாமல், ஒரு மகானுக்கு முன் நடக்கும் கச்சேரி நன்றாக அமைய வேண்டும் என்று நினைத்த அரியக்குடியின் செயலை எண்ணும் போதெல்லாம் என் நெஞ்சம் நெகிழ்கிறது.

மியூசிக் அகாடமி தொடங்கப்பட்ட காலமது. அங்கு நடக்கும் இசைப் போட்டிகளில் பத்து வயது முதல் ஐம்பத்தைந்து வயது வரை யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். நான் 1928 முதல் அந்தப் போட்டிகளில் கலந்து கொண்டேன். 1931-ல் தொடங்கி மூன்று முறை முதல் பரிசைப் பெற்றேன். அதில் ஒரு வருடம் புரந்தரதாஸர் கிருதிகளிக்கான போட்டி நடந்தது. அதற்காக எம்.எல்.வசந்தகுமாரியின் தாயார்  லலிதாங்கியை அணுகி அவரிடம் பல கிருதிகளைக் கற்றேன். போட்டியில் நுழைந்து பார்த்தால் லலிதாங்கியும் போட்டிக்கு வந்திருந்தார்.  டைகர் வரதாச்சாரி, முத்தையா பாகவதர், சரஸ்வதி பாய் ஆகிய மூவரும் போட்டியின் நடுவர்களாக அமர்ந்திருந்தனர். போட்டியின் முடிவில் எனக்கு 72 மதிப்பெண்கள். என் குருவான லலிதாங்கிக்கும் 72 மதிப்பெண்கள் கிடைத்திருந்தது. முதல் பரிசி யாருக்கென்று முடிவுக்கு வர முடியாத நிலை. அதனால், அடுத்த நாள் எங்கள் இருவரையும் மீண்டும் ஒரு முறைப் பாடச் செய்தனர். என் அதிர்ஷ்டம், எனக்கு முதல் பரிசும் லலிதாங்கிக்கு இரண்டாம் பரிசும் என்று முடிவானது. எனக்கு முதல் பரிசு கிடைத்ததை எண்ணி என்னைவிட அதிகம் மகிழ்ந்தது லலிதாங்கிதான். எவ்வளவு பெரிய மனது!

நான் மியூசிக் அகாடமியில் பரிசு பெற்ற செய்தி ஹிந்து செய்தித்தாளில் என் படத்துடன் வந்தது. அதுவே எனக்குத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. வி.சாந்தாராம் தயாரித்த ‘சீதா கல்யாணம்’ என்ற படத்தை பாபுராவ் பெண்டார்கர் இயக்கினார். நான் ராமனாகவும், என் தங்கை ஜெயலட்சுமி சீதையாகவும், என் தந்தையார் ஜனகராகவும், என் தம்பி பாலசந்தர் ராவணன் தர்பாரில் கஞ்சிரா வாசிப்பவனாகவும் நடித்தோம். இதுதான் பாபநாசம் சிவன் இசை அமைத்த முதல் படமாகும். ‘அம்ம ராவம்மா’ மெட்டில் ‘நல்விடை தாரும்’ என்று சிவன் அமைத்து, நான் பாடிய பாடல் அன்று பெரும் வரவேற்பைப் பெற்றது. வெற்றிப் படமாக அமைந்த சீதா கல்யாணத்துக்குப் பின், எனக்கு பல கச்சேரி வாய்ப்புகள் அமைந்தன. படம் ஓடும் இடங்களில் எல்லாம், என்னையும் என் தம்பியையும் அழைத்து கௌரவப்படுத்தி, படத்தின் இடைவேளையின் போது எங்களின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தனர். அதன் பின், இந்தியா முழுவதும் நானும் என் தம்பியும் கச்சேரிகள் செய்தோம். நான் பாட, என் தம்பி பாலசந்தர் கஞ்சிரா, தபலா மற்றும் ஹார்மோனியம் வாசிப்பான். பின்னாளில்தான் வீணையில் நல்ல தேர்ச்சியைப் பெற்று பெரும் புகழை அடைந்தான். சீதா கல்யாணத்துக்குப் பின், ‘ராதா கல்யாணம்’, ‘ருக்மிணி கல்யாணம்’ என்று இரு படங்களில் நடித்தேன். அதன் பின் நிஜ கல்யாணம் நடந்ததால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். 1942-ல் ‘சிவகவி’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஜோடியாக என் தங்கை ஜெயலட்சுமி நடித்தாள். அவளுக்குத் துணையாக நானும் என் தந்தையும் படப்பிடிப்புக்குச் சென்றோம். சென்ற இடத்தில் முருகனின் மூன்று வடிவங்களில் நானும், ஆசிரியராக என் தந்தையும் நடித்தோம்.

இசையில் இருந்தது போலவே எனக்கு ஓவியத்திலும் நாட்டம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என் தாயார். அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நகாசு தெரியும். கோலமிட்டாரெனில் நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். வரலட்சுமி விரதத்தின் போது முகமெழுதிக் கொடுக்க பலர் என் அன்னையை அழைப்பார்கள். எனக்கு லிங்கையா என்றொரு நண்பன் இருந்தார். அவர் பிரபல ஓவியர் (கல்கி புகழ்) மணியத்தின் சித்தப்பா. படம் வரைவதில் அவருக்கு இருந்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது. என் குடும்பத்தினரும் என்னைப் படம் வரைய உற்சாகப்படுத்தினர். பள்ளிப் படிப்பை முடித்த பின், ஓவியக் கல்லூரியில் சேர முடிவெடுத்தேன். இந்தக் காலத்தைப் போல, பிள்ளைகள் எல்லோரும் டாக்டராகவும் இஞ்சினியராகவும் மட்டுமே ஆக வேண்டும் என்று நினைக்காத காலமது. இரண்டாம் வருடப் படிப்புக்குப் பின் எனக்கு டபுள் பிரமோஷனும் டாக்டர் ரங்காச்சாரி ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தன. கல்லூரியில் முதல் மாணவனாக தேறிய போதும், அங்கு சொல்லித் தரப்பட்ட மேற்கத்திய ஓவிய முறை என்னைப் பெரிதும் கவரவில்லை. இந்தியக் கலைப்பாணியே என்னைப் பெரிதும் ஈர்த்தது. பல்லவர்களின் சிற்பங்களும், சோழர்களின் செப்புப் படிமங்களும் என் ஓவியங்களைப் பெரிதும் பாதித்தன. அஜந்தா ஓவியங்களைக் கண்டதும் அரண்டு போனேன். அவற்றக் கண்ட பின், பல மாதங்களுக்கு பிரஷ்-ஐ கையால் கூடத் தொடவில்லை.

அஜந்தா, சிகிரியா, தஞ்சாவூர், காஞ்சிபுரம் என்று பல ஊர்களுக்குச் சுற்றி, நமது கலைப் பொக்கிஷங்களைக் கண்டு களித்தேன். அப்போதெல்லாம் மகாபலிபுரம் செல்வதென்றால் பகிங்காம் கால்வாயில் இரவு முழுதும் படகுச் சவாரி செய்ய வேண்டும். பால், ரொட்டி போன்றவற்றை எடுத்துக் கொண்டு மாமல்லபுரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூடத் தங்கி படம் வரைவேன். 1940-களின் ஆரம்பத்தில் மியூசிக் அகாடமிக்காக சங்கீத மும்மூர்த்திகளை ஓவியமாகத் தீட்டினேன். இன்று அந்த ஓவியம் இல்லாத இசை ரசிகர்கள் இல்லமே இல்லை எனலாம். கலைமகள் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த கி.வ.ஜகன்னாதன் என் ஓவியங்களை விரும்பித் தொடர்ந்து பிரசுரித்தார். இலக்கியங்கள், புராணங்கள் தொடர்பாக பல ஓவியங்கள் வரைய அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. சங்கீதத்தில் உள்ள தேர்ச்சியால், சங்கீத சம்பந்தமான ஓவியங்கள் பல வரைய முடிந்தது. வாக்கேயக்காரர்கள், கீர்த்தனங்கள், ஸப்தஸ்வரங்கள் என்று சங்கீத சம்பந்தமாய் எண்ணற்ற ஓவியங்களை பத்திரிக்கைகளுக்காகவும் என் தனிப்பட்ட நிறைவுக்காகவும் வரைந்துள்ளேன். சுமார் நூறு கீர்த்தனங்களை கோட்டோவியமாய் வரைந்து, தக்க விளக்கங்களுடன் நான் வடிவமைத்த லெட்டர் பேட்-கள் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

1943-ல் அகில இந்திய வானொலியில், ‘சிலம்பு’ என்ற பெயரில் ஒரு ஒபேரா நிகழ்ச்சி தயாரானது. சிலப்பதிகாரக் கதையை இசை வடிவில் கொடுக்கும் நிகழ்ச்சியான அதில், தண்டபாணி தேசிகர், மதுரை சோமசுந்தரம், பி.ஏ.பெரியநாயகி முதலானோர் பங்கு பெற்றனர். ஒபேராவுக்கான முதல் முயற்சி என்பதால் பலருக்கு அந்த வடிவம் பிடிபடவில்லை. ஒத்திகையின் போது நான் வாத்தியக்காரர்களுக்கும் பாடகர்களுக்கும் புரியும்படி விளக்கினேன். இதனைக் கண்ட நிலைய இயக்குனர், என்னை அகில இந்திய வானொலியில் சேரச் சொன்னார். அந்த நிகழ்வு என் வாழ்வில் பெரிய திருப்புமு¨னெயாக அமைந்தது.

அகில இந்திய வானொலியில் நிரந்தர வருவாய் தரும் வேலை ஒன்று கிட்டியதால் கச்சேரிகள் செய்து பிழைக்க வேண்டியிருக்கவில்லை. அதனால், பல புதுமைகளைப் புகுத்தவும், பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடவும் முடிந்தது. கச்சேரியில் பாடும் போது, கேட்க வருபவர்களுக்காகப் பாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நமக்குப் பிடித்ததைப் பாடினால், பலர் ஆட்சேபிக்கக் கூடும். ரேடியோவில் பாடும் போது அந்த இடைஞ்சல் இல்லை. அதிகபட்சம், நாம் பாடுவது பிடிக்கவில்லை என்றால் வானொலியை அணைத்துவிடக்கூடும். வானொலி வேலையில் வந்த வருவாய் போதுமானதாக இருந்ததால், ஓவியத்திலும், எனக்குப் பிடித்த வகை ஓவியங்களை மட்டும் வரைந்தால் போதும். காசுக்காக என் மனம் ஒவ்வாத ஓவியங்களை வரையத் தேவையிருக்கவில்லை. இதைத் தவிர, வானொலிக்கு வராத இசைக் கலைஞர்களே கிடையாது. அவ்வாறு வருபவரிடமிருந்து எண்ணற்ற சங்கீத விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு முறை மைசூரிலிருந்து ஒரு பெண், “ஸ்ரீகாந்த எனக்கிஷ்டு” என்ற புரந்தரதாசர் பாடலை வழக்கமாகப் பாடும் கானடா ராகத்தில் பாடாமல் கன்னட ராகத்தில் பாடினார். கேட்டதும் மெய் சிலிர்த்துப் போனேன். உடனே அவரை அணுகி பாடலைக் கேட்டறிந்து, அதைப் பல கச்சேரிகளில் பாடினேன். பெரிய பாடகர்கள், அதிகம் தெரியாத பாடகர்கள், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணற்ற பேர்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து எல்லாம் அரிய கிருதிகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ரேடியோவின் மூலம்தான் கிடைத்தது.

நவராத்திரியின் போது நவாவர்ண கிருதிகள், கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட கிருதிகள் என்று பல வகையான நிகழ்ச்சிகளை உருவாக்கவும், பாடவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறளுக்கு அழகான ராகங்களின் மெட்டமைத்துள்ளார். முன்கோபியும், கோபம் வந்தால் அடிக்கக் கூடியவருமான அவரிடம் பாடம் கேட்க எல்லோரும் தயங்கினர். நான் துணிந்து அவரிடம் கற்று, அவற்றை வானொலியில் பாடிப் பரப்பினேன். பல பாடல்களுக்கு மெட்டமைக்கவும், மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைக்கவும் அநேக வாய்ப்புகள் வானொலி மூலம் கிடைத்தன.

இத்தனை ஆண்டு கால கலை வாழ்க்கையில் எனக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் நான் மிகவும் உயர்வாகக் கருதும் விருது எனக்கு அமெரிக்காவில் கிடைத்தது. 1982-ல் அமெரிக்கா சென்று 30 கச்சேரிகள் செய்தேன். கடைசி கச்சேரி வாஷிங்டனில் நடந்தது. அன்று, சுத்த சீமந்தினி ராகம் பாடி ‘ஜானகி ரமண’ கிருதியை விஸ்தாரமாகப் பாடினேன். கச்சேரி முடிந்ததும்,  இரு வயதானப் பெண்கள் என்னை அணுகி, “சுத்த சீமந்தினி ரொம்ப நன்றாக இருந்தது. நீங்கள் பாடுவதைக் கேட்ட போது, அந்தக் காலத்தில் நாங்கள் கேட்ட நாயினாப் பிள்ளையின் ஞாபகம் வந்தது.”, என்றனர். நான் பாடுவதைக் கேட்டு, என் மானசீக குருவான நாயனாப் பிள்ளையின் ஞாபகம் வந்திருக்கிறதென்றால், இதைவிட எனக்கு என்ன பெருமை கிடைத்துவிட முடியும்?

ராகங்கள் அனைத்துமே அற்புதமானவை. ஆனால், சிலர் விவாதி ராகங்கள் என்று அழைக்கப்படும் ராகங்களை, தோஷ ராகங்கள் என்று ஒதுக்கி வந்தனர். காலப்போக்கில், இந்த ராகங்களை யாருமே தீண்டாத நிலை ஏற்பட்டுவிட்டது. உண்மையில் அந்த ராகங்களைப் பாடினால் தோஷம் வராது. சந்தோஷம்தான் வரும்! எனக்கு, வழக்கமான கல்யாணி, காம்போதி பாடுவதை விட விவாதி ராகங்களைப் பாடவே விருப்பம். கோடீஸ்வர ஐயரின் கீர்த்தங்கனளில் ஆழ்ந்து ஊரியது அதற்குக் காரணம். கோடீஸ்வர ஐயர், ‘கந்த கானாமுதம்’ என்ற பெயரில் 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல் புனைந்துள்ளார். அவற்றை துணை நிலைய இயக்குனராக இருந்த த.சங்கரன் எனக்களித்துப் பாடச் சொன்னார். நானும், வானொலி நிலையத்தில் இருந்த வைதேகி என்ற பாடகியும் வாரம் இரு பாடல்களாக தொடர்ந்து வானொலியில் பாடினோம். அன்று தொடங்கி கோடீஸ்வர ஐயரின் பாடல்களையும், விவாதி ராகங்களையும் பரப்புவது என் வாழ்வின் முக்கிய லட்சியங்களாகக் கொண்டேன். இந்த 72 கிருதிகளை, ராகம் நிரவல் கல்பனை ஸ்வரங்களுடன் பாடி குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளேன். எண்ணற்ற பேர்களுக்கு, “நிச்சயம் ஒவ்வொரு கச்சேரியிலும் பாடுவேன்”, என்று சத்தியம் வாங்கிக் கொண்டு, கோடீஸ்வர ஐயரின் கிருதிகளைச் சொல்லிக் கொடுத்துள்ளேன். இன்று முன்னணி வித்வான்களாய் விளங்கும் பலர் கோடீஸ்வர ஐயரின் கிருதிகளைப் பரவலாகப் பாடுவதைக் காண நிறைவாக இருக்கிறது.

விவாதி ராகங்களைப் பாடினால் ஆகாது என்பவர்களின் வாக்கில் உள்ள பொய்யை என் வாழ்வே எடுத்துக்காட்டும். எத்தனையோ ஆண்டுகளாய் விவாதி ராகங்களைப் பாடி வருகிறேன் என்ற போதும், 90 வயதைத் தாண்டிவிட்ட போதும் என் வாழ்வு நிறைவானதாகவே அமைந்துள்ளது.

Read Full Post »

இந்த சீசனில் 14 இடங்களில் கச்சேரி செய்யும் அம்ருதாவுக்கு வயது 21. பெங்களூர் வாழ் பாடகர். சொல்வனம் இசைச் சிறப்பிதழுக்காக  இவரிடம் தொலை பேசினேன்.

முதலில் கொஞ்சம் பேசத் தயங்கினாலும்,  போகப் போக சரளமாகப் பேசினார். நேர்காணல் செய்யத்தான் நினைத்திருந்தேன். கடைசியில், அது உரையாடலாக முடிந்தது. உரையாடல் (எனக்கு) சுவாரஸ்யமாக அமைந்ததால், அப்படியே இங்கு அளிக்கிறேன்.

உரையாடலைப் படிக்க இங்கு செல்லவும்.

Read Full Post »

மைக்கில்லாத காலத்திலும் கச்சேரிகள் கேட்டவர் நீங்கள். மைக் சங்கீதத்தை எப்படி பாதித்துள்ளது. மைக் இல்லாத காலத்தில் ஆண்கள் கூட 4-5 கட்டை ஸ்ருதியில் பாடுவார்களாமே?

மைக்கின் வருகை சங்கீதத்துக்கு சாதகமாய்த்தான் அமைந்திருக்கிறது. அரியக்குடி, நாயினாப் பிள்ளை போன்றவர்கள், மைக் இல்லாத காலத்தில் 2-2.5 கட்டை ஸ்ருதியில்தான் பாடினார்கள். கச்சேரிகளுக்கு வரும் கூட்டம், மைக் வந்தவுடன்தான் அதிகரித்திருக்கிறது. பாடகர் உயிரைக் கொடுத்துப் பாடினால்தான் கேட்கும்.

அப்படியெனில், ராகம் பாடும் போது கையாளப்படும் நெளிவுசுளிவுகளான ‘சின்னது பெரியது’ சமாச்சாரங்கள், மைக் வரும் முன் அதிகம் இல்லையா?

ஆமாம். ‘சின்னது பெரியது’ பேதங்களை குரலில் காட்ட ஒலிப்பெருக்கி இருந்தால்தான் முடியும். ஒலிப்பெருக்கியால்தான் கச்சேரிகளுக்கு அதிக கூட்டம் கூட ஆரம்பித்தது. அதற்கு முன், சபா கச்சேரிகளுக்குக் கூட ஐம்பது பேருக்கு மேல் வர மாட்டார்காள். அதற்கு மேல் வந்தால், பின்னால் இருப்பவர்களுக்கு கச்சேரி சரியாகக் கேட்காது

மைக்கால் சங்கீதம் பாழாகிவிட்டது என்ற கருத்து பற்றி?

நிச்சயம் சங்கீதம் மைக்கால் நன்மைதான் அடைந்திருக்கிறது. சிலர், தங்களுடைய இயலாமைக்கு மைக்கின் மேல் பழியைப் போட்டிருக்கலாம். வாத்தியங்களின் உண்மையான நாதம் மைக்கால் பாதிக்கப்பட்டது என்ற வாதத்தில் வேண்டுமானால் உண்மை இருக்கலாம். இன்று இருக்கும் தொழில்நுட்பத்தில், இவை பெரிய பிரச்னைகள் அல்ல என்றுதான் நினைக்கிறேன்.

சில கச்சேரிகளில், மேடையில் இருப்பவர்கள், தங்களுடைய ego-வை மைக்கை வைத்தும் திருப்திப் படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். சில மிருதங்க வித்வான்களுக்கு, ஒலியின் அளவை எவ்வளவு அதிகப்படுத்தினாலும் போதவில்லை. சில பாடகர்கள் வயலினே கேட்காமல் இருக்க வழி செய்கின்றனர். இவை எல்லாம் மைக்கின் குற்றம் அல்ல, மனிதர்களின் குற்றம்தான்.

மைக் இல்லாத காலத்தில் கேட்டதில் நினைவில் இருக்கும் பாட்டு?

நாயினாப் பிள்ளை ‘ஜானகி ரமண’ பாடுவார். அவர் பாடினால், மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்தில் இருந்து தார பஞ்சமம் வரை நன்றாகக் கேட்கும்.

அந்த நாளுக்கும், இந்த நாளுக்கும் வித்தியாசம்?

அப்போது இவ்வளவு சபாக்கள் இல்லை. இன்று இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல சபாக்கள் செயல்படுகின்றன. என் இள வயதில் எனக்கு 22 வர்ணங்கள் தெரிந்திருந்தது என்பது மிகப் பெரிய விஷயம். இன்று, நூற்றுக் கணக்கில் வர்ணங்கள் மட்டுமே கற்கக் முடியும். புதிது புதிதாய் நிறைய கிருதிகள், ராகங்கள் என்று சங்கீதம் விருத்தி அடைந்திருக்கிறது. சங்கீதத் துறை அகலமானாலும், இப்போது பாடப்படும் சங்கீதத்தில் ஆழம் கொஞ்சம் குறைந்துள்ளதாகப் படுகிறது.

இன்னொரு முக்கியமான வித்தியாசம், அந்த நாளில் ஹரிகதை காலட்சேபங்கள் மிகப் பிரபலமாய் இருந்தன. முத்தையா பாகவதர் போன்ற சங்கீத மேதைகள் எல்லாம் ஹரிகதை விற்பன்னர்களாக இருந்தனர். கல்யாணங்களில் கூட, பாட்டுக் கச்சேரி இருக்கிறதோ இல்லையோ, ஹரிகதை கச்சேரி நிறைய உண்டு.  அந்தக் காலத்தில், ஹரிகதை பாகவதர்களுக்கு தெரிந்த அளவு கீர்த்தனங்கள், விட்வான்களுக்குக் கூடத் தெரியாது. நானே எக்கெச்செக்க அரிய கீர்த்தங்களை ஹரிகதை பாகவதர்களிடன் இருந்துதான் கற்றுக் கொண்டேன். அவர்களுக்கு சங்கீதம், பல பாஷைகளில் தேர்ச்சி, பாடல் புனையும் தகுதி, சரித்திரம், சாஸ்திரம் எல்லாம் தெரிந்திருந்தது. சரஸ்வதி பாய் கதை சொன்னார் என்றால் கண் முன்னே ஒவ்வொரு பாத்திரத்தையும் நிறுத்திவிடுவார். அவர் கதைக்கு தட்சிணாமூர்த்திப் பிள்ளை முதற் கொண்டு பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்கள். இன்று ஹரிகதை கிட்டத்தட்ட வழக்கொழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

நிறைய கீர்த்தனங்கள் வந்திருந்தாலும், இன்னும் கல்யாணி, காம்போதி, பைரவி, தோடி, சங்கராபரணம், கரஹரப்ரியா, மோகனம் தாண்டி அதிக ராகங்கள் விஸ்தாரமாய் பாடப்படுவதில்லையே?

இந்த ராகங்கள் time-tested என்பதால், இவற்றையே நிறைய பாடுகின்றனர். இதையே பாடினால் அலுப்புதான் வரும். இன்னும் எத்தனையோ அற்புதமான ராகங்களும் இருக்கின்றன.

பாட்டு கேட்பவர்களும், தவளாம்பரியையோ, சித்ராம்பரியையோ அதிகம் விரும்புவதில்லையே? தெரிந்த ராகமாய்ப் பாடுபவர்கள் கச்சேரிகளுக்குத்தானே கூட்டம் கூடுகிறது? “ராஜமா? அவர் தெரியாததைப் பாடுவாரே?”, என்ற பெயர் வந்த அளவுக்கு, உங்கள் கச்சேரிகளுக்குக் கூட்டம் வரவில்லையே?

அதுவும் உண்மைதான். பாடகர் தெரிந்ததைப் பாட வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது. புதியதாய்த் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகம் பேரிடம் இல்லை. இப்போது நிலை மாறி வருகிறது. இப்போது,  “விவாதி பாடுங்கள். அதுக்காகவே உங்கள் கச்சேரிக்கு வந்திருக்கிறோம்”, என்று என் மாணவர்களைக் கேட்கும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம்.

Read Full Post »

[ இது இம்மாத அம்ருதா இதழில் பிரசுரமான நேர்காணலில் மீள்பிரசுரம். அம்ருதா இதழுக்கு நன்றியுடன் ]
நேர்காணலின் முதல் பகுதி

லட்சுமண ராவைத் தொடர்ந்து வேறு யாரிடம் சங்கீதம் கற்றீர்கள்?

ஒரு முறை துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் கச்சேரிக்குச் என் குருவுடன் சென்றிருந்தேன். நாயுடு காருவை என் குரு அறிந்திருந்ததால் அவரிடம் சென்று பேசினோம். அப்போது என்னைப் பற்றி விசாரித்தார். நூறு கிருதிகளுக்கு மேல் நான் அறிந்து வைத்திருந்ததை என் குரு சொன்னதும் ஆச்சரியம் அடைந்த துவாரத்திடம், ராக ஆலாபனை, ஸ்வர கல்பனை முதலியவற்றைக் கற்றுத் தருமாரு என் குருநாதர் வேண்டிக் கொண்டார். அதற்கு சம்மதித்த துவாரம், அடுத்த கோடை விடுமுறையில் விஜயநகரம் வந்துவிடுமாறு என்னிடம் கூறினார்.

1932-ல் எனது இண்டர்மீடியட் படிப்பு முடிந்ததும், விஜயநகரம் சென்று மூன்று மாதங்கள் நாயுடுகாருவின் வீட்டில் தங்கினேன். ஒரு நாள் இரவு, உணவருந்திய பின் ‘ஆரகிம்பவே’ கிருதியைப் பாடி நிரவல் செய்ய ஆரம்பித்தார், அவர் சில ஆவர்த்தங்கள் பாடிய பின், நான் தொடர்ந்தேன். அவர் நினைத்ததை உள்வாங்கி நான் பாடியதைக் கேட்டு மகிழ்ந்த துவாரம், தினமும் பலப் பல ராகங்களை வாசித்து, என்னை கூர்ந்து கவனிக்கச் சொன்னார். விஜயநகரம் இசைக் கல்லூரியில் முதல்வராக இருந்த துவாரம் தினமும் கல்லூரியில் இரு முறை, வீட்டில் இரு முறை தவறாமல் சாதகம் செய்வார். அவர் பயிற்சியில் ஈடுபடும் போது அவரிடம் கற்றவர்களை அருகிலிருந்து கேட்க அனுமதிப்பார். அவர் சாயங்கால வேளையில் செய்யும் பயிற்சி ஒரு முழு கச்சேரியை சபையில் வாசிப்பது போலவே அமைந்திருக்கும்.

ஒரு முறை அவர் வீட்டில் வாசிக்கும் போது, என்னையறியாமல் ‘சபாஷ்’ என்றேன். அவர் வாசிப்பதை நிறுத்தி, ‘பாணி, நீ ஒரு மாணவன். சாதாரண ரசிகனைப் போல சபாஷ் என்ற்படி ரசிக்காமல், கூர்ந்து கவனி’, என்று தொடர்ந்தார். சற்றைக்கெல்லாம் என்னையும் அறியாமல் இன்னொரு சபாஷ் என் உதட்டிலிருந்து வெளிப்பட்டது. நாயுடு காரு என்னைப் பார்த்து, நான் வாசித்ததைப் பாடு என்றார். நான் அதைச் சரியாகப் பாடியதும், ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு வாசிப்பைத் தொடர்ந்தார். அவர் வீட்டுல் இருந்த மூன்று மாதங்களில், எனக்கு பல வருடங்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைத்தன. குறிப்பாக ராகம் பாடும் போது தேவையான punctuation-ஐ அவரிடம்தான் கற்றேன். (துவாரம் தோடி ராகத்தைக் கையாள்வதைப் பாடிக் காண்பிக்கிறார்.)

சென்னையின் பெருமையாய் விளங்கும் இசை விழாவிற்கு தாங்கள் வந்ததுண்டா?

1930-ல் என் பெற்றோர் ராமேஸ்வரம் சென்றனர். அது டிசம்பர் மாதம் என்பதால், என்னை சென்னையில் என் அத்தை வீட்டில் விட்டுவிடுமாறு வேண்டிக் கொண்டேன். அரியக்குடி, ஃப்ளூட் சாமிநாத பிள்ளை, காரைக்குடி சகோதரகள் போன்றவர்களின் கச்சேரிகள் என் செவிகளுக்குத் தீனி போட்டன. முசிறி ‘எந்த வேடுகோ’ பாடலில் பாடிய நிரவல் என்னை பல நாட்களுக்கு ஆட்கொண்டது. அவர் இசையிலிருந்துதான் விளம்ப கால கிருதிகள் பாடவும், நிரவல் பாடவும் கற்றுக் கொண்டேன். செம்பை நாலு களை பல்லவியில் ஒவ்வொரு முறையும் லாவகமாய் எடுப்பைப் பிடிப்பதைக் கேட்டுச் சொக்கிப் போனேன். நான் ஊருக்குக் கிளம்புவதற்கு முன் வெங்கடசாமி நாயுடுவிடம் விடைபெறச் சென்றேன். அவர், “இன்னம் ஒரு நாள் இருந்துவிட்டுப் போக முடியாதா? நாளை வீணை தனம்மாளின் கச்சேரி இருக்கிறது. அதைக் கேட்டுவிட்டுப் போ.”, என்றார். இசையின் மொத்த அழகையும் கொட்டிச் சேர்த்த தனம்மாளின் வீணை இசையை நான் தங்கிக் கேட்டேன். அதன் பாதிப்பு இன்று வரைத் தொடர்கிறது.

தங்கள் முதல் கச்சேரி எப்போது நடந்தது?

நான் சிறு வயதிலேயே கல்யாணங்களிலும் சிறு சிறு விழாக்களிலும் பாடிக் கொண்டிருந்தேன். கல்லூரி நாட்களில் ரேடியோவில் கச்சேரி செய்துள்ளேன். கடைசி வருட படிப்பின் போது, சென்னைக்குச் சென்று கச்சேரி செய்வதை அறிந்தால் காலேஜில் பிரச்னை வருமோ என்று எண்ணி, ‘வஸந்த்’ என்ற பெயரில் ரேடியோ கச்சேரி செய்துள்ளேன். ஒரு சபாவில் முதன் முதலில் பாடியது என்பது 1939-ல்தான். எனது கடைசி வருட மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில் விசாகப்பட்டினத்தில் அந்தக் கச்சேரி நிகழ்ந்தது.

அந்தக் கச்சேரிக்கு, அடுத்த நாள் கச்சேரி செய்யவிருந்த மைசூர் சௌடையா வந்திருந்தார். முன் வரிசையில் அமர்ந்து முழு மனதுடன் உற்சாகப்படுத்திய அந்த மாமேதையைக் கண்டதும், நானும் மிகவும் உழைத்துப் பாடினேன். கச்சேரி முடிந்ததும் சௌடையாவை அணுகி வணங்கினேன். அங்கு குழுமியிருந்த பலருக்கு சௌடையா என்ன சொல்லப் போகிறார் என்று அறிய ஆவலாக இருந்ததால், ஒரு கூட்டமே எங்களைச் சூழ்ந்தது. என்னை அணுகி, “நாங்கள் பல வருடம் உழைத்துப் பெற்ற விஷயங்கள் பல உனக்கு இள வயதிலேயே வாய்த்திருக்கின்றன. துவாரம் வெங்கடசாமி நாயுடுவால் ஆந்திராவுக்கு நிறைய பெருமை கிடைத்துள்ளது. அதே போல உன்னாலும் கிடைக்கும்”, என்று வாழ்த்தி என்னை மைசூருக்கு வருமாறு அழைத்தார் சௌடையா.

அவர் அழைப்பை சம்ப்ரதாயமான ஒன்றாகத்தான் நான் எண்ணினேன். இரண்டு நாள் கழித்து நடந்த செம்மங்குடியின் கச்சேரிக்கும் சௌடையாவே பக்கவாத்தியம் வாசித்தார். அந்தக் கச்சேரியைக் கேட்கச் சென்ற என்னைச் சுட்டிக் காட்டி, “நான் தங்களிடம் இந்த இளைஞனைப் பற்றித்தான் சொன்னேன்”, என்றார் செம்மங்குடியிடம். அடுத்த நாள், என் உணவை முடித்துத் திரும்புகையில், ஒரு கார் என்னைக் கடந்தது. அதிலிருந்த சௌடையா, என்னைக் கண்டதும் காரை நிறுத்தி, “நான் சொன்னது நினைவிருக்கட்டும். அவசியம் மைசூருக்கு வா.”, என்றார். அப்போதுதான் அவர் உண்மையிலேயே மைசூருக்கு அழைத்தார் என்று உணர்ந்தேன்.

அவர் அழைப்பைத் தாங்கள் ஏற்றீர்களா?

ஆமாம். மைசூருக்குச் சென்று சௌடையாவின் வீட்டிலேயே தங்கினேன். நிறைந்த அரங்கில் என்னை மைசூருக்கு அறிமுகப்படுத்தி எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தார் சௌடையா. கச்சேரி முடிந்து வீடு திரும்புகையில், “கச்சேரி நன்றாக இருந்தது. ஆனால் நான் ஒரு தவறு செய்துவிட்டேன். கச்சேரியில் நானே பக்கவாத்தியம் வாசித்திருக்க வேண்டும்”, என்றார். எந்த ஒரு விஷயத்திலும் உள்ள நல்லவற்றை மனதாறப் பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான். ஒவ்வொரு நாளும் அவர் என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார். ஒரு முறை ‘இந்த சௌக்ய’ கிருதியை, சேலம் கிருஷ்ண ஐயங்காரின் கிராம·போனைக் கேட்டறிந்த விதத்தில் பாடினேன். பொதுவாகப் பாடும் முறையை விட அது வித்தியாசமாக இருந்ததால் என்னை தினமும் பாடச் சொல்லி, தானும் உடன் வாசிப்பார்.

ஒரு நாள், நான் மாடியில் குளித்துக் கொண்டிருந்த போது யாரோ பாடுவது என் காதில் விழுந்தது. கீழே இறங்கிப் பார்த்த போது, இரு பெண்கள் பாடிக் கொண்டிருந்தனர். பெற்றோருடன் வந்திருந்த பெண்கள் சௌடையா மூலம் சபாக்களின் அறிமுகம் பெற்று கச்சேரி வாய்ப்பு பெற வந்திருந்தனர். அவர்களுக்கு கச்சேரி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காவிடினும், அந்தப் பெண்களுள் ஒருவருக்கு கணவன் கிடைத்தார். அவர்களும் தெலுங்கர் என்பதால் சௌடையாவின் பரிந்துரையில் என் திருமணம் 1940-ல் நடைபெற்றது.

ரங்கராமானுஜ ஐயங்காரையும், டி.எஸ்.வாசுதேவனையும் தங்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தவர்கள் என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளீர்கள். சென்னையில் இருந்த அவ்விருவரிடம் எப்படி கற்றுக் கொண்டீர்கள்?

முன் சொன்ன ஆசிரியர்களிடம் நான் பள்ளிப் படிப்பு படித்தேன் என்று வைத்துக் கொண்டால், பட்டப்படிப்பைப் படித்துத் தேறியது என்பது ரங்கராமானுஜ ஐயங்காரின் வழிக்காட்டலில்தான். நான் கடைசி வருட எம்.பி.பி.எஸ் படிக்கும் போது, மகப்பேற்றில் பயிற்சி பெற சென்னைக்கு வந்தேன். எனது குரு லட்சுமண ராவ் என்னை டி.எஸ்.வாசுதேவனை சந்தித்து பயன்பெறும் படிக் கூறியிருந்தார். எனது மருத்துவப் படிப்புக்குப் போக எஞ்சிய வேளையில் வாசுதேவனிடம் கிருதிகள் கற்கப் போவேன். தவறாமல் வீணை தனம்மாளின் வெள்ளிக் கிழமைக் கச்சேரிகளுக்குச் செல்வேன். ஒரு நாள், இரவுச் சாப்பாட்டை முடித்து திரும்புகையில் சைக்கிளில் இருந்தபடி ஒருவர் என்னை கதட்டி அழைத்தார். அவரை அணுகிய போது, தன்னை ரங்க ராமானுஜ ஐயங்கார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, எனக்கு தியாகராஜரின் ஆஹிரி ராகக் கிருதி தெரியுமென்று கேள்விப்பட்டதாகவும், அதைத் தான் அறிய விரும்புவதாகவும் கூறினார்.

எனக்கு ஆஹிரியில் ‘தீன ரக்ஷகா’ என்ற கிருதி தெரியும். ஆனால் அது தியாகராஜரின் கிருதி அல்ல என்று கூறினேன். அந்தக் கிருதியை தான் அறிய விரும்புவதாகவும், அதற்காக தன் வீட்டிற்கு வர முடியுமா என்றும் கேட்டார். அவர் வீட்டில் சென்று கிருதியை நான் பாட, அவர் ஸ்வரப்படுத்தி எழுதிக் கொண்டார். அதன் பின், எனக்குத் தெரிந்த கிருதிகளை எல்லாம் பட்டியலிட்டு எழுதிக் கொண்டார். அவருக்குத் தெரியாத கிருதிகளை என்னிடம் கேட்டுக் கொள்வதாகவும், பதிலுக்கு அவருக்குத் தெரிந்த கிருதிகளை எனக்குச் சொல்லித் தருவதாகவும் கூறினார்.

தனம்மாளின் சிஷ்யரான அவரிடம் பல கிருதிகள், பதங்கள் போன்ற அரிய பொக்கிஷங்களைப் பெற்றேன். அதைத் தவிர எங்களுக்கு முன்னிருந்த இசைக் கலைஞர்களைப் பற்றியும், அவர்கள் இசைக்கும் முறைகளைப் பற்றியும் விரிவாக அவர் பேசுவார். அப்படித்தான் கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், சிமிழி சுந்தரம் ஐயர் போன்றோரின் இசையின் நுணுக்கங்களை அறிந்து கொண்டேன். நல்ல இசையின் பரிமாணங்களை நேறிப்படுத்திக் கொள்ள எனக்கு ரங்கராமானுஜ ஐயங்கார் பெரிதும் உதவினார்.

பல கலைஞர்களின் இசையைப் பற்றி அலசிய ரங்கராமானுஜ ஐயங்கார் தங்களின் இசையைப் பற்றி ஏதாவது கூறினாரா?

என்னைப் பாராட்டியோ, என் இசையை விமர்சித்தோ அவர் ஒரு போதும் எதுவும் கூறவில்லை. என் கச்சேரிகளை அவருடன் சேர்ந்தே கூட ரேடியோவில் கேட்டு இருக்கிறேன். எத்தனையோ பெரிய வித்வான்களை கேட்ட அவர் காதுகளை என் இசையா நிறைத்துவிடும் என்று நானும் இருந்துவிட்டேன். ஒரு முறை ‘மஹாசுரம்’ கிருதியை ரேடியோ கச்சேரியில் பாடி, ‘குருகுஹ சாமர ப்ரணம்’ என்ற இடத்தில் நிரவல் பாடினேன், அடுத்த நாள் ரங்கராமானுஜ ஐயங்காரைச் சந்தித்த போது, “கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரே வந்து பாடியது போல உன் நிரவல் இருந்தது”, என்றார். அதுதான் அவர் என்னைப் பாராட்டிய ஒரே தருணம். அந்த ஒரு பாராட்டே இந்தப் பிறவிக்குப் போதும். (என்று கண் கலங்குகிறார்).

ஆந்திரத்தில் சிறந்த இசைக் கலைஞராகத் திகழ்ந்த தங்களை தமிழ்நாட்டில் பெரும்பாலும் இசை ஆராய்ச்சியாளர் (musicologist) என்று முத்திரை குத்திவிட்டனரே. இது எப்படி நடந்தது?

நான் அடிப்படையில் ஒரு மருத்துவன். அதனால், கச்சேரிகளை வலிந்து சென்று பெருவது எனக்கு அவசியமில்லாத ஒன்று. சென்னை சபைகளில் கச்சேரி வாய்ப்புகள் பெற பலரை அணுக வேண்டும். அப்படி அணுக எனக்கு விருப்பமில்லாததால், கிடைத்த வாய்ப்புகளில் மட்டும் பாடி, அதில் நிறைவை அடைந்தேன். என் காலத்தில், படித்த இசைக் கலைஞர்கள் மிக மிகக் குறைவு. அழகாகப் பாடும் பலரால் இசையின் நுணுக்கங்களை தெளிவாக விளக்க முடியாது. இசை நுணுக்கங்களை ஆராய்ந்து விளக்கக் கூடியவர்கள் மேடைக் கச்சேரியில் ஈடுபடுபவர்களாக இல்லை. எனக்கு சங்கீதத்தின் கூறுகளை அலசி அதைப் பற்றி தெளிவாகவும் பேச முடிந்ததால் என்னை musicologist வகுப்பில் சேர்த்துவிட்டனர் என்று நினைக்கிறேன்.

அதனால்தான் தங்களை அலங்கரிக்கும் பட்டங்கள் பல தாமதமாக வந்தடைந்தனவோ என்னமோ.

இருக்கலாம். 1970-லேயே இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸின் இசை விழாவுக்கு தலைமை வகித்தேன். அவர்கள் கூட, என்னை 1992 வரை மீண்டும் கச்சேரி செய்ய அழைக்கவில்லை.

என் கச்சேரி ரேடியோ நேஷனல் ப்ரோக்ராமில் வர வேண்டும் என்று பலர் கேட்டுக் கொண்டதற்கு, “அவர் musicologist. கச்சேரி செய்யும் வித்வான் அல்ல.”, என்றாராம் அன்று டெல்லியில் பொறுப்பில் இருந்த ஈமணி சங்கர சாஸ்திரி. இத்தனைக்கும் அவரும் ஆந்திரத்தைச் சேர்ந்தவர். பின்பு, 1972-ல் என்னை கச்சேரி செய்ய அவரே அழைப்பு விடுத்த போது, “If I was not fit twenty years before, my music has not become any better now”, என்று பதிலெழுதி மறுத்துவிட்டேன். என்னை மீண்டும் ஒரு முறை பரிசீலிக்கச் சொன்ன போது, “My previous reply stands good for now and for ever”, என்று எழுதினேன்.

1983-ல் எனக்கு சங்கீத கலாநிது பட்டம் வழங்கப்பட்டது. அந்த வருடம் கூட, கச்சேரி செய்யும் வாய்ப்பை எனக்கு சங்கீத வித்வத் சபை அளிக்கவில்லை. ஏனென்று சில கேட்டதற்கு, “பினாகபாணி போன்ற உயர்தரக் கலைஞரை, வெறும் மேடைக் கலைஞருள் ஒருவராகச் சேர்க்க வேண்டாம்”, என்று சாமர்த்தியமாய் கூறினார்களாம். அந்த ஆண்டில் நடந்த காலை வேளை விரிவுரைகளுக்கு மட்டும் தலைமை ஏற்று வந்தேன். திடீர் என்று ஒருநாள், எம்.டி.ராமநாதனுக்கு உடல் நலமில்லை என்பதால், என்னை கச்சேரி செய்யச் சொன்னார்கள். “இப்போது மட்டும் எனது சங்கீதம் மேடைக் கலைஞரின் நிலைக்குத் தாழ்ந்துவிட்டதா”, என்று கேட்டேன். அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் கச்சேரி செய்தேன்.

ஒரு கச்சேரியில் தாங்கள் பாடிய பல்லவியை, தங்களுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கிய போது வாழ்த்திப் பேசிய லால்குடி ஜெயராமன் நினைவு கூர்ந்துப் பேசியதைப் பற்றி, அவரே என்னிடம் கூறியிருக்கிறார். அதைப் பற்றி கூறுங்களேன்.

கர்னூலில் ஒரு சபையை என் நண்பர் வெங்கடரங்கம் ஐயங்கார் நடத்தி வந்தார். அந்த சபையில் வோலேட்டி, நேதனூரி போன்றோரின் கச்சேரிகளை நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். சபை தொடங்கிய மூன்றாம் ஆண்டு, “நீங்கள் ஏன் நம் சபையில் கச்சேரி செய்வதில்லை”, என்று கேட்டார் வெங்கடரங்கம் ஐயங்கார். “உங்களுக்கு வேண்டுமானால் நான் வீட்டுக்கு வந்து பாடுகிறேன். அப்படி என் பாட்டு சபையில் ஒலிக்க வேண்டுமானால் நான் கேட்கும் பக்கவாத்தியங்களை எனக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்”, என்று கூறினேன். அதற்கு அவர் இசையவும், லால்குடி ஜெயராமனை வயலினுக்கும், நாகர்கோயில் கணேச ஐயரை மிருதங்கத்துக்கும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். சென்னை சென்று லால்குடியை சந்தித்த வெங்கடரங்கம் ஐயங்காரிடம், அது வரை என் பாட்டைக் கேட்டிராத லால்குடி, ஆந்திராவுக்கு வந்து எனக்கு பக்கவாத்தியம் வாசிக்க தயங்கினாராம். அவரை எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார் சபா காரியதரிசி.

கர்னூலில் இருந்து 60 மைல் தூரத்தில் ஆதோனே என்றொரு ஊர் இருக்கிறது. அந்த நாளில் கர்னூலுக்கு கச்சேரி செய்ய யாரை அழைத்தாலும், அவரை ஆதோனேயில் இருந்த சபாவிலும் ஒரு கச்சேரி செய்யச் சொல்வோம். இதனால், செலவுகளை இரண்டு சபாக்களும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. லால்குடி ஜெயராமன், கணேச ஐயருடன் என் முதல் கச்சேரி அதோனேயில் நடந்தது.

அன்று கச்சேரியில் பல கிருதிகள் பாடி, பிரதான ராகமாக சங்கராபரணம் பாடி, “சரவணபவ குருகுஹ” என்ற பல்லவி பாடினேன். சதுஸ்ர நடை பல்லவியை மூன்று காலங்களில் பாடி த்ரிகாலம் செய்து அதன் பின் திஸ்ர நடையில் பாடி மறுபடியும் சதுஸ்ர நடைக்கு வருவது வழக்கமான ஒன்று. இந்தக் கச்சேரியில், திஸ்ர நடையில் பாடிய பின் கண்ட நடையிலும் அந்தப் பல்லவியைப் பாடினேன். இந்த நிகழ்ச்சியை எனது சங்கீத கலாநிதி பட்டமளிப்பு விழாவில் நினைவு கூர்ந்து, பாடியும் காண்பித்த லால்குடி ஜெயராமன், அதுவரை யாரும் அது போல பாடிக் கேட்டதில்லை என்றும் கூறுனார்.

நல்ல இசைக்கு எவையெல்லாம் அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

இது ஒரு முக்கியமான கேள்வி. இதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, நல்ல இசையின் கூறுகள். இன்னொன்று அவற்றிலன் சரியான கலவை. சரியான விஷயங்கள் சரியான அளவில் இருக்கும் போதே நல்ல இசை பிறக்க முடியும். ராகம் பாடும் போது, ஒவ்வொரு மூச்சிழுப்பிலும் ராக பாவம் சொட்ட வேண்டும். Every breath must contain melodious material. What is not melodious is not music. பாடும் போது ஒரு சங்கதிக்கும் அடுத்த சங்கதிக்கும் இடைப்பட்ட இடைவெளி சரியாக அமைவது மிக மிக முக்கியம். (சாவேரி ராகத்தை இடைவெளி இல்லாமலும், அளவான இடைவெளிகள் விட்டும் பாடுகிறார்.) இடைவெளி இல்லாமல் பாடும் போது ராக பாவம் அரவே நீங்கிவிடுகிறது. ஒவ்வொரு பிரயோகத்துக்கும் ஏதுவான காலப்ரமாணம் உண்டு. சில பிரயோகங்களை வேகமாகப் பாடும் போது நன்றாக ஒலிக்கும். அதே பிரயோகத்தை ஒரு இழை மெதுவாகப் பாடினால் பன் மடங்கு அதிகமாய் மெருகேறி ஒலிக்கும். அதீத வேகம் என்பது பாடகரின் திறமையை வேண்டுமானால் காட்டுமே தவிர, அழகுணர்ச்சியை வெளிப்படுத்த மெதுவான காலப்ரமாணமே சிறந்தது. நடனமாட வேண்டுமென்றால் முதலில் நிற்க வேண்டும். ஓடும் போது நடனமாடினால் பார்க்க நன்றாகவா இருக்கும்?

பாடும் ராகத்தின் தீர்க ஸ்வரங்கள் (நிற்கக் கூடிய ஸ்வரங்கள்), ரவை ஜாதி சங்கதி என்று கூறப்படும் துரிதமான பிரயோகங்கள், இந்திய இசையின் உயிரெனக் கருதப்படும் கமகங்கள், இவை அனைத்தும் சரியான அளவில் (right proportion), அவற்றுக்குரிய இடத்தில் (appropriate place), உரிய காலப்ரமாணத்தில் (correct kalapramana) அமைதல் வேண்டும். ராகம் பாடும் போது கேட்பவருக்கு குழப்பம் வரா வண்ணம் தெளிவான, பிரபலமான சங்கதிகள் பாடுவது மிக அவசியம். அதற்காக கற்பனையை பறை சாற்றும் புதிய சங்கதிகளை அரவே ஒதுக்கிவிடவும் கூடாது. ராகமோ, கீர்த்தனையோ, ஸ்வரமோ எதைப் பாடினாலும், சங்கதிகள் பாடலின் பொருள் அமைத்துள்ள பாவத்திலேயே இருத்தல் அவசியம். இவை அனைத்தும் நல்ல இசையின் முக்கியமான கூறுகள் எனலாம்.

தாங்கள் ஒரு சிறந்த இசைக் கலைஞராக உச்சங்களைத் தொட்டது போலவே, மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கியுள்ளீர்கள். தங்களுக்கு இருந்த நேரத்தை இரண்டு துறையிலும் எவ்வாறு பங்கிட்டீர்கள்?

இறைவன் நமக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கொடுத்துள்ளான். இந்த நேரத்தில் டி.வி பார்க்காமலோ, திரைப்படங்களுக்கு போகாமலோ இருந்தால், இரண்டு துறைகள் அல்ல, நான்கு ஐந்து துறைகளில் கூட சிறந்து விளங்குவது சாத்தியமாகும். என்னைப் பொறுத்த வரையில், மருத்துவத் துறையில் என்னை வளர்த்துக் கொள்ள ஒரு நாளைக்கு 6-7 மணி நேரம் செலவிட்டாலே போதுமானதாக இருந்தது. இசை மற்றும் மருத்துவம் தவிர, உடற் பயிற்சியிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. International Journal of Health and Sciences போன்ற இதழ்களுக்கு நான் பலமுறை கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒரு நண்பருடன் சேர்ந்து ‘ஹனுமான் ஜிம்னேஷியம்’ என்ற பயிற்சி கூடத்தைத் தொடங்கி ஆறேழு வருடங்கள் நடத்தியுள்ளேன். டென்னிஸ் விளையாடுவது என்றால் எனக்கு உயிர். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது நான் விளையாடாமல் இருந்ததில்லை. இதைத் தவிர, ஆன்மிகத்திலும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. சின்மயானந்தாவின் உரைகளை ஆழ்ந்து கேட்டதால் தோன்றிய ஈடுபாடு அது. கர்னூலில் சின்மயா மிஷனைத் துவக்கி அதன் தலைவர் பொறுப்பையும் பல காலம் வகித்துள்ளேன். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் எனில், நமக்கு இருக்கும் நேரத்தை சரியாக உபயோகிப்போமெனில், பல துறைகளில் சிறந்து விளங்குவது அத்தனை கடினமான ஒன்றல்ல என்பதை அருதியிட்டுக் கூறத்தான்.

தாங்கள் இசையிலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்கியதால், Music Therapy-ஐப் பற்றிய தங்கள் கருத்து சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இசையால் வியாதிகளை குணப்படுத்த முடியுமா?

இசையால் வியாதிகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. ஒருவன் குடித்து தன்னுடைய கல்லீரலை கெடுத்துக் கொண்டுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம், அவனுடைய பழுதான உடலை இசையைக் கொண்டு எப்படி சரி செய்ய முடியும்? இசையைக் கேட்பதன் மூலம், அவஸ்தையை வேண்டுமானால் சில நேரம் மறந்திருக்கலாமே ஒழிய, வியாதியை குணப்படுத்த முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

தாங்கள் மருத்துவராகவோ, இசைக் கலைஞராகவோ வர வேண்டும் என்று சிறு வயதிலேயே நினைத்தீர்களா?

அப்படி ஒன்றுமில்லை. பொறியியல், மருத்துவம் முதலான பல துறைகளுக்கு விண்ணப்பித்தேன். என் மதிப்பெண்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது அதனால் சேர்ந்தேன். என் இசைப் பயிற்சியும் விளையாட்டாகத்தான் தொடங்கியது. நாட்பட, அதன் போக்கிலேயே இரு துறைகளுமே என்னை ஆகர்ஷித்துக் கொண்டன.

தங்கள் எழுதிய புத்தகங்களைப் பற்றி கூறுங்களேன்.

எல்லோரும் ஒரு நாள் மரணமடையப் போவது என்பது உறுதி. இறக்கும் போது எதையும் கொண்டு செல்ல முடியாது. அதனால், என் மனதில் புதைந்து இருக்கும் சங்கீத விஷயங்களை ஒரு இம்மி அளவு கூட மிச்சமில்லாமல் இந்த உலகில் வைத்து விட்டுப் போய்விட வேண்டும் என்பது என் எண்ணம். இதுவே என்னைப் புத்தகங்கள் எழுதத் தூண்டின.

என் புத்தகங்கள் பெரும்பாலும் தெலுங்கிலேயே வெளியாகியுள்ளன. ‘சங்கீத சௌரபம்’ என்ற பெயரில் நான்கு தொகுதிகள் வெளியிட்டுள்ளேன். அவற்றில் நானறிந்த பல கிருதிகள், பதங்கள், தில்லானாகள், திருப்புகழ் என்று ஆயிரத்துக்கு மேற்பட்ட பல வகைப் பாடல்களை ஸ்வரப் படுத்தி வெளியிட்டுள்ளேன். ‘பல்லவி கான ஸுதா’ என்ற புத்தகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பல்லவிகளை, திஸ்ரம், த்ரிகாலம் போன்ற வின்யாஸங்களையும் மனதில் கொண்டு விவரமாக ஸ்வரப் படுத்தி வெளியிட்டுள்ளேன். சிம்ஹநந்தனம், சரபநந்தனம் போன்ற அரிய தாளங்களில் அமைந்துள்ள பல்லவிகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது. ‘மனோதர்ம சங்கீதம்’ என்ற புத்தகத்தில் நமது சங்கீதத்தின் அடிப்படைகளுள் ஒன்றான கற்பனையைப் பற்றி எழுதியுள்ளேன். இந்தப் புத்தகம் சென்னையில் இருக்கும் ப்ருஹத்வனி வாயிலாக தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மஹா வைத்தியநாத சிவனின் மேள ராகமாலிகையை, 72 ராகங்களுக்கு உரிய சஞ்சாரி ஸ்வரங்களுடன் சேர்த்து மாணவர்களுக்கு எளிதாக விளங்கும் வகையில் வெளியிட்டுள்ளேன். இதைத் தவிர என் சங்கீத அனுபவங்களை நான் தொடராக எழுதியதும், இன்று தொகுப்பாகக் கிடைக்கிறது.

பல வருடங்கள் நான் திரட்டிய லய சம்பந்தமான விஷயங்கள் மட்டும் கையெழுத்துப் பிரதிகளாகவே உள்ளன. அவற்றையும் வெளியிட அந்திரப் பல்கலைக்கழக இசைத் துறையிலிருந்து சிலர் வருவதாகக் கூறியுள்ளனர். அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

97 வயதில், கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது என்ன நினைக்கிறீர்கள்?

தஞ்சாவூர் பாணி என்ற உயர்ந்த வகை இசையைக் கேட்டு, அதனால் ஈர்க்கப் பட்டு, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆசையால் அயராது உழைத்து, இசையில் உயர்வானதையெல்லாம் திரட்டி, எனக்கென்று ஒரு பாணியை வகுத்து, ஓரளவு வெற்றியுடன் அதைக் கச்சேரிகளுலும் பாடியுள்ளேன். நான் அறிந்தவற்றை எல்லாம் தகுதியுள்ள மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, தஞ்சாவூர் பாணியை ஆந்திராவில் நிறுவ என்னால் இயன்றதைச் செய்துள்ளேன். இதைத் தவிர எனது திரட்டல்களையும், கருத்துகளையும் புத்தகங்களாக வெளியிட்டுள்ளேன். இதை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது, மிகுந்த நிறைவே ஏற்படுகிறது.

ஒரு புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்ட டாக்டர் பினாகபாணியிடம் விடை பெற்று, அன்று முழுவதும் என்னை உபசரித்த அவ்ர் குடும்பத்தாரிடம் சில நேரம் பேசிவிட்டு கர்னூலை விட்டு நீங்க, அந்தக் கலைஞரின் அறையைக் கடந்தேன். ஒரு நாள் முழுதும் பேசிய களைப்பை அவர் முகம் காட்டினாலும், அவர் வாய் மோகன ராகத்தை முணுமுணுத்தபடி இருந்தது.

Read Full Post »

[ இது இம்மாத அம்ருதா இதழில் பிரசுரமான நேர்காணலில் மீள்பிரசுரம். அம்ருதா இதழுக்கு நன்றியுடன் ]

சங்கீத கலாநிதி ஸ்ரீபாத பினாகபாணி இசைத் துறையின் உச்சங்களைத் தொட்டவர். பத்ம பூஷண் விருதினைப் பெற்ற இவர், தஞ்சாவூர் பாணியை ஆந்திரத்தில் நிறுவியவர். இன்று பிரபலமாய் விளங்கும் பல அன்னமாச்சாரியா கிருதிகளுக்கு மெட்டமைத்தவர். தான் கற்றவற்றை பரப்புவதை ஒரு தவமாகவே செய்து நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, வோலேட்டி வெங்கடேஸ்வருலு, ஸ்ரீரங்கம் கோபால்ரத்னம், நூகல சத்யநாராயணா போன்ற சங்கீத ஜாம்பவான்களை உருவாக்கியவர். இவரது பாணியைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு வெளியாகும் அளவிற்கு சாதனைகள் புரிந்தவர். முதுமை உடலைத் தாக்கி ஐந்து வருடமாய் படுக்கையில் தள்ளிவிட்ட போதும், இசையில் ஊறிப் போன மனது, 97-ஆவது வயதிலும் இளமையாகத்தான் இருக்கிறது. 1930-களில் நடந்ததை கூட நேற்று நடந்தது போல நினைவு கூறும் பினாகபாணி ஓர் அதிசய மனிதர். கடந்த மாதம் கர்னூலில் அவரைச் சந்தித்து ஒரு நாள் முழுதும் அவருடன் கழிக்கும் பேறு கிடைத்தது. அன்று கிடைத்த பல முத்துகளின் சில சிதறல்களை இந்த நேர்காணலில் காணலாம்.

தங்கள் இளமைக் காலத்திலிருந்து பேட்டியைத் தொடங்கலாமே.

நான் 1913-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுலம் ஜில்லாவில் உள்ள பிரியாக்ரஹாரத்தில் பிறந்தேன். என் அப்பா, ஸ்ரீபாத காமேஸ்வர ராவ், ராஜமுந்திரியில் இருந்த கவர்மெண்ட் ட்ரெயினிங் காலேஜில் ஜூனியர் ப்ரொபசராக பணியாற்றினார். அவர் ஐந்திற்கும் மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பெங்காலியிலிருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து பெங்காலிக்கும் பல நாடகங்களை அவர் மொழி பெயர்த்துள்ளார். மேடை நாடகங்களில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த அவரைக் காண அக் கால முன்னணி நடிகர்கள் பலர் வந்த வண்ணம் இருப்பர். அக் கால நாடகங்களில் இசை இன்றியமையாததாக இருந்ததால், எங்கள் வீட்டில் இசை ஒலித்த வண்ணம் இருக்கும். நான் சிறுவனாக இருந்த போது, பி.எஸ்.லட்சுமண ராவ் என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்து என் தமக்கைக்குப் பாட்டு கற்றுக் கொடுத்தார். அதைக் கேட்டுக் கேட்டு நானும் அவ்வழியே பாடுவேன். ஒரு முறை என் தமக்கை ஒரு சங்கதியைத் தவறாகப் பாடிய போது, வேறேதோ வேலையாக இருந்த நான் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டினேன். இதனைக் கண்டு மகிழ்ந்த லட்சுமண ராவ், என் பெற்றோரிடம் எனக்கு சங்கீத சிட்சை அளிக்க விரும்புவதாகக் கூறினார். அப்போது நான், சங்கீதமெல்லாம் பெண்களுக்குத்தான் என்று தட்டிக் கழித்தேன்.

பி.எஸ்.லட்சுமண ராவ் என் பள்ளியிலும் வாத்தியாராக இருந்தார். நான் முதல் ஃபாரத்தில் படித்த போது, எங்கள் தெலுங்கு வாத்தியார் வராத போதெல்லாம் இவர் பாடம் நடத்த வருவார். அவர் எப்போதுமே செய்யுள் பகுதிகளைத்தான் நடத்துவார். அப்படி நடத்தும் போது, ஒவ்வொரு பாடலையும் ராகத்துடன் பாடுவார். இப்படி ஒரு முறை, இரண்டு நாட்கள் நடத்திய பின், மூன்றாம் நாள் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு என்னைத் தொடர்ந்து பாடச் சொன்னார். அவர் பாடிய பைரவி ராகத்திலேயே நானும் தொடர்ந்து பாடினேன். இதனால் ஆச்சரியமடைந்த அவர், என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனக்கு சங்கீத சிட்சை அளிக்குமாறு பரிந்துரைத்தார். 9 நவம்பர் 1924 எனது சங்கீதப் பயிற்சி தொடங்கியது.

உங்கள் குருநாதரின் சிட்சை முறையைப் பற்றிக் கூறுங்களேன்.

இசையின் பெருமைகளை நான் உணராத போதும், இசை என்னை காந்தமாய்க் கவர்ந்தது. ஒவ்வொரு நாளும் என் குருவின் வீட்டுக்குச் செல்வேன். எனக்கு சொல்லிக் கொடுப்பதை உள் வாங்கிய பின், மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதையெல்லாம் கூர்ந்து கவனிப்பேன். நாளடைவில், என் குரு யாருக்கு எதைச் சொல்லிக் கொடுத்தாலும், அதை அவர் புத்தகங்களில் ஸ்வரப்படுத்தி எழுதும் வேலை எனதானது. நான் என்ன செய்கிறேன் என்று அறியாமலே என்னுடைய சங்கீத அடித்தளம் பலமாக அமைந்தது.

எனது குரு மைசூரில் இசை பயின்றவர். அவர் ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம் போன்றவற்றில் சிறந்து விளங்கவில்லை என்ற போதும் நிறைய அரிய கிருதிகளை நன்கறிந்திருந்தார். எது நல்ல இசை, எது நல்ல இசை அல்ல என்று நிர்மாணிப்பதில் அவர் சிறந்து விளங்கினார். ஒவ்வொரு கிருதியின் சங்கதிகளையும் முழுமையாகப் பாடும் வரை விட மாட்டார். ‘சக்கனி ராஜமார்கமு’ போன்ற கிருதிகளை மாதக் கணக்கில் நான் அவரிடம் கற்றதுண்டு. இப்படியாக 1924-லிருந்து 1929-க்குள் கிட்டத்தட்ட நூறு கிருதிகள் பாடம் செய்தேன். 1930-ல் காக்கிநாடாவில் எனது இண்டர்மீடியெட் படிப்பைத் தொடர்ந்தேன்.

காக்கிநாடாவில் சரஸ்வதி கான சபை அன்றே வெகு பிரபலமாய் விளங்கியதே.

ஆமாம். 1928-லிருந்து காக்கிநாடாவிலும், அதற்கு முன் ராஜமுந்திரியிலும் நிறைய கச்சேரிகள் கேட்டுள்ளேன். காக்கிநாடாவில் ஓவ்வொரு வருடமும் இசை விழா பத்து நாட்களுக்கு நடக்கும். முதல் ஐந்து நாட்களுக்கு ஆந்திரக் கலைஞர்களும், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்களும் கச்சேரி செய்வார்கள். இந்த விழாவில்தான் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை, கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை போன்றோரின் அற்புத இசையை முதன் முதலில் கேட்டேன். ‘ரா ரா மா இண்டி’, ‘ஸ்வர ராக ஸ¤தா’, ‘கிரி பை’ போன்ற கிருதிகளை தமிழ்நாட்டு வித்வான்கள் பாடிய முறை நான் கற்றிருந்த விதத்தில் அமையவில்லை. ஆந்திர வித்வான்களில் கச்சேரிகளை விட தமிழ்நாட்டு வித்வான்களின் கச்சேரிகள், கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆந்திர வித்வான்கள் பாடும் போது சுமாராக வந்த கூட்டம், தமிழ்நாட்டு வித்வான்கள் பாடும் போது அரங்கை நிறைத்தது. இதனால், இள வயதிலேயே எனக்கு தஞ்சாவூர் பாணி என்றழைக்கப்படும் தென்னாட்டு இசை முறையே என்னை வெகுவாகக் கவர்ந்தது.

தஞ்சாவூர் பாணியை ஆந்திராவில் நிறுவியவர் என்று பலராலும் புகழப்படுபவர் நீங்கள். இன்று கேட்கும் போது, ஆந்திர வழி, தமிழ்நாடு வழி என்று இரண்டு வழிகள் இருப்பதாகவே தெரியவில்லை. தாங்கள் சங்கீதம் கற்க ஆரம்பித்த காலத்தில் ஆந்திர சங்கீதம் எந்த நிலையில் இருந்தது?

முதலில், தஞ்சாவூர் பாணியை ஆந்திராவில் நிறுவியவன் என்று யாரும் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பின் நான் என் வாழ்வின் பொருளை அடைந்துவிட்டதாக நினைத்துக் கொள்வேன்.

அந்தக் காலத்தில், இசையில் ஆர்வமுள்ள ஆந்திர தேசத்தவர், நல்ல தேர்ச்சியைப் பெற வேண்டுமெனில், தமிழ்நாட்டின் காவிரி கரையிலிருந்த கலைஞர்களிடன் சென்றே கற்க வேண்டிய நிலை இருந்தது. பயணங்கள் கடினமாய் இருந்த காலத்தில் அவ்வாறு இசை பயில்வதென்பது கடினமான காரியம். அப்படியும் சிலர் தமிழ்நாட்டில் தங்கி இசை பயின்று, அவர்களால் முடிந்த வரை ஆந்திராவில் பரப்பிய போதும், தஞ்சாவூர் பாணி அளவிற்கு அதிகம் வளர்ந்திராத பாணியாகவே ஆந்திர பாணி இருந்தது. என் இளமைக் காலத்தில், நிரவல் செய்தல், பல்லவி பாடுதல் போன்ற சமாசாரங்களில் ஆந்திர கலைஞர்கள் ஈடுபடமாட்டார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில், பயண வசதிகள், ரேடியோ போன்ற தொலை தொடர்பு வசதிகளும் தகவல் பரிமாற்றத்தை சுலபமாக்கியுள்ளன. இதனால் தமிழ்நாட்டு கலைஞர்களின் இசையை ஆந்திராவில் அதிகம் கேட்கவும், ஆந்திராவில் இருந்து கலைஞர்கள் தமிழ்நாட்டில் பாடி பெயர் வாங்கவும் வசதிகள் பெருகியுள்ளன. இதனால்தான் இன்று ஆந்திர இசையை தமிழ்நாட்டு இசையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நீங்கள் சொன்ன வசதிகள் இல்லாத போதும் கூட, தாங்கள் தஞ்சாவூர் பாணியில் எப்படி தேர்ச்சியைப் பெற்றீர்கள்?

எங்கள் வீட்டருகில் தெலுங்கு வாத்தியாராக ஒருவர் இருந்தார். அவர் நல்ல பாடகர். அவர் என்னிடம் நான் கேட்ட கச்சேரிகளைப் பற்றி விசாரித்து, யார் யார் எப்படியெல்லாம் இசைத்தனர் என்று என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார். நாயினாப் பிள்ளை, கோவிந்தசாமி பிள்ளை, அரியக்குடி போன்றோரைப் போலவே நானும் பாட முயற்சி செய்வேன். குறிப்பாக அரியக்குடியின் இசைக்கு நான் அடிமையானேன். அவர் கிருதிகள் பாடிய அழகும், ராகம் பாடும் போது அவர் குரலில் பேசிய சங்கதிகளும், கமகமும், நிரவல், கல்பனை ஸ்வரங்களில் இருந்த நளினமும், அவர் கச்சேரியில் இருந்த கச்சிதமும் என்னை பெரிதும் பாதித்தன.

எனது பள்ளி நாட்களில் கிராமஃபோன் தட்டுகள் பிரபலமாக ஆரம்பித்தன. என் சகோதரனின் நண்பன் வீட்டில் ஒரு கிராம·போன் ப்ளேயர் இருந்தது. இசையில் ஆர்வமிருந்து அவர் வீட்டுக்கு அடிக்கடிச் சென்று பல இசைத் தட்டுகளைக் கேட்டு என் சங்கீதத்தை வளர்த்துக் கொண்டேன். இசைத் தட்டுகள் மூலம் வட நாட்டில் பிரபலமாயிருந்த பால கந்தர்வா (ஷ்யாம சுந்தர என்ற பால கந்தர்வா ரிக்கார்டைப் பாடிக் காட்டுகிறார்), அப்துல் கரீம் கான் போன்றோரின் இசையைக் கேட்டு, கேட்டவற்றை அப்படியே பாடவும் பழகிக் கொண்டேன்.

எனக்கு இயற்கையாகவே ஸ்வர ஞானம் அமைந்ததால், கிராமஃபோன் ரிக்கார்டில் கேட்ட ஒவ்வொரு சங்கதியையும் ஸ்வரப்படுத்தி எழுதிக் கொள்வேன். எந்த ஒரு கச்சேரிக்குச் சென்றாலும், கேட்பவற்றை விவரமாக குறிப்பெடுத்துக் கொள்வேன். கேட்டவற்றில் உள்ள நல்ல விஷயங்களை எல்லாம் குறித்துக் கொண்டு, அவற்றை என் இசையில் சேர்த்துக் கொண்டேன். நான் கேட்டதில் நல்லதையும் அல்லதையும் சீர் துக்கிப் பார்க்கும் ஆற்றல் எனக்கு இறைவன் கொடுத்த வரம். சரியானது என்று எனக்குத் தோன்றியதை நான் பாடுவதற்கு ஒரு போதும் திணறியதில்லை. கேட்டதை உடனே கிரஹிக்கும் திறனும், கிரஹித்ததை உடனே பாடக் கூடிய ஆற்றலும் எனக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தன.

Read Full Post »