சில வருடங்களுக்கு முன்னால் இந்தப் பதிவை எழுதியிருந்தேன்.
===================
ஒரு நவராத்ரியில் பரிவாதினியின் வருடாந்திர கச்சேரிகள் வைத்திருந்தோம். தொடரின் முத்தாய்ப்பாய் பாச்சா ஸாரின் வீணை கச்சேரி.
மேடையில் அமர்ந்து ஒலிஅமைப்பை எல்லாம் சரி பார்த்து, இப்போது திரையை விலக்கிவிடலாம் என்று நான் நினைக்கும்போது என்னை அருகில் வருமாறு சைகை காட்டினார் பாச்சா ஸார்.
“நவராத்ரி கச்சேரி இது. அதுக்காக முழுசா அம்பாள் பாட்டா வாசிக்கணும்னு எல்லாம் தயார் பண்ணிண்டு வரலை. அம்பாளானாலும், பெருமாளானாலும் எனக்கு எல்லாம் ராகம்தான். ராகம்தான் அம்பாள். ராகம்தான் பெருமாள். பரவாயில்லைதானே?”
எனக்கு பதில் சொல்ல வாயெழவில்லை. அவர் வந்து உட்காந்து ஷட்ஜத்தை சேர்த்தாலே எனக்கு சிலிர்த்துவிடும். வேகமாக தலையாட்டிவிட்டு மேடையிலிருந்து இறங்கி இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.
“மா….”
தந்தி இழுப்பில் முன்னும் பின்னுமாய் அவசரமே இல்லாமல் கம்பீரமாய் ஊஞ்சலாடும் அந்தப் ப்ரதி மத்யமம்!
நொடிப் பொழுதில் அரங்கு முழுவதும் பரவிப் பெருக்கெடுத்த பிரதி மத்யமம்.
”பாச்சா ஸார்! அம்பாள் வந்துவிட்டள்! இதோ தெரிகிறாளே பிரதி மத்யமத்தில்”, என்று உலகுக்கே கேட்க கத்த வேண்டும் என்று வேகம் எழும்போதே மேல் ஷட்ஜத்தைத் தொட்டும் தொடாமலும் கொஞ்சிக் குலவும் அந்த ஹம்ஸநாத நிஷாதம்!
அடுத்த பன்னிரெண்டு நிமிடங்களுக்கு உலகின் அத்தனை உருவிலும் கொலுவிருக்கும் அன்னையின் எத்தனை தரிசனங்கள்!
ஆமாம்! தரிசனமேதான்! உள்ளும் புறமுமாய் எத்தனை தரிசனங்கள்!
அத்தனைக்கும் நன்றி பாச்சா ஸார்!
இன்னும் ஒரு நூற்றாண்டு நீங்கள் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
=====================
இன்று எதையோ தேடப் போய் என் சேகரத்தில் அந்தக் கச்சேரி கண்ணில் பட்டது. ஹம்ஸநாதத்தை உடனே என் தளத்தில் வலையேற்றிவிட்டேன்.
யாம் பெற்ற இன்பம்.
வாழ்க பாச்சா சார் புகழ்.