Trichur Brothers (Srikrishna Mohan, Ramkumar Mohan), Trchur Mohan, D.V.Venkatasubramanian @ Brahma Gana Sabha
சீஸனில் நடக்கும் கச்சேரிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், ப்ரைம் ஸ்லாட் இல்லாத கச்சேரிகள் நடக்கும் சமயத்தில், பாட்டு கேட்பவர்களை விட பாடுபவர்கள் அதிகம் இருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இள பாடகர்களுக்கு இவை பெரும் வாய்ப்புகளாய் அமைகின்றன. என்னைப் போன்ற கர்ம சிரத்தையாய் கேட்பவர்கள் பாடுதான் திண்டாட்டம். எங்கே போவது என்று குழப்பம் தீராத ஒன்று.
நான் இதுவரை கேட்காதவர்கள் பலர் இருப்பதால், இளம் பாடகர்களின் கச்சேரிகளை யாரேனும் பரிந்துரைக்காமல் செல்வதில்லை. எப்படியும், நன்றாகப் பாடுவார் என்று நான் நினைப்பவரின் கச்சேரி, எங்கேயாவது இருக்கும் போது, பாடகரைப் பற்றி ஒன்றும் தெரியாமல் ஏன் செல்ல வேண்டும் என்ற எண்ணம்.
அந்த வகையில், இத்தனை நாள் திருச்சூர் சகோதரர்களின் கச்சேரியை கேட்காமல் இருந்தேன். சில நாட்கள் முன் சிமுலேஷன் ஒரு பின்னூட்டத்தில் இவர்களைப் பற்றி சொல்லியிருந்ததாலும், இவர்கள் கச்சேரி செய்த அரங்கில் இவர்களுக்குப் பிறகு காயத்ரி வீணை வாசித்ததாலும் இன்று பிரம்ம கான சபா சென்றேன்.
காயத்ரியின் வாசிப்பைப் பற்றி சொல்ல எனக்குக் கொஞ்சம் கூட அருகதை கிடையாது. வீணைக்கு வாணி எல்லாம் உல்லாலகாட்டிக்கு. வீணை என்றால் அது காயத்ரிதான் என்பது என் துணிபு. பந்துவராளி, ஆரபி, பிருந்தாவன சாரங்கா, தோடி, கோசலம் ஆகிய ராக தேவதைகள் புண்ணியம் செய்தவை. அதனால்தான், இன்று காய்த்ரியால் விஸ்தாரமாய் வாசிக்கப் பெற்றன. இத்துடன் அந்தக் கச்சேரியைப் பற்றி நிறுத்திக் கொள்கிறேன்.
இன்று திருச்சூர் சகோதரர்களுக்கு நாகை ஸ்ரீராம் வயலின் வாசிப்பதாய் இருந்ததாம். ஏதோ காரணத்தினால் அவர் வாசிக்க முடியாததால், கடைசி நிமிஷத்தில் கண்டதேவி விஜயராகவன் வாசிக்க ஒப்புக் கொண்டாராம். கச்சேரி தொடங்கும் முன், சகோதரர்களில் மூத்தவராய் தெரிந்தவர் இந்த விஷயத்தைக் கூறி, விஜயராகவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இருவருக்கும் நல்ல சாரீரம். மூத்தவரின் குரலில் நல்ல கனம். இளையவர் குரல் comparitively சன்னமாய் ஒலிக்கிறது. இருவரின் குரலும், மந்திர ஸ்தாயி மத்ய்மத்தை சுலபமாகத் தொடும் போதும் கூட, நல்ல கனத்துடன் ஒலிக்கிறது.
வர்ணங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை கமாஸில் “மாதே”, பைரவியில் “விரிபோனி”. இன்று கச்சேரி கமாஸ் வர்ணத்துடன் தொடங்கியது. முக்தாயி ஸ்வரத்தில், ஸ்வரத்தை முதல் காலத்திலும், சொற்கட்டுகளை திஸ்ரத்திலும், சாஹித்யத்தை இரண்டாம் காலத்திலும் பாடியது அற்புதமாய் அமைந்தது.
வர்ணத்தைத் தொடர்ந்து நடநாராயணியில் “மஹா கணபதே” பாடினர். இந்தக் கிருதியை வாத்யத்தில்தான் கேட்டுள்ளேன். நான் கேட்ட வரையில், இந்தக் கிருதியின் காலப்ரமாணம் துரிதமாகவே இருந்தது. இன்று, துரிதமும் இல்லாமல், ஒரேடியாய் சவுக்கமுமாய் இல்லாமல், இவர்கள் பாடிய கால்ப்ரமாணம், “இந்த அழகையா இவ்வளவு நாள் ரசிக்காமல் இருந்தோம்”, என்று எண்ண வைத்தது.
அடுத்து பாடிய பந்துவராளி sketch-ஐ தொடர்ந்து, “பரிபாலய” என்ற சுவாதி திருநாள் கிருதி பாடி, சரனத்தில் நிரவல் செய்தனர். நிரவல் விறு விறுப்பாக அமைந்து கச்சேரியை களை கட்ட வைத்தது. வயலினில் விஜயராகவன், பக்க பலமாய் விளங்கினார். அவரது மந்திர ஸ்தாயியும் கேட்க இனிமையாய் இருந்தது.
கச்சேரியின் முதல் பிரதான ராகமாக வசந்தாவை எடுத்து ஆலாபனை செய்தனர். ஆலாபனை வெகு நன்றாக அமைந்தது. இருவரின் குரலும் சர்க்கரை கரைச்சலாக இருக்கிறது. அகாரத்தில் கேட்க வெகு அற்புதமாய் இருக்கிறது. தார பஞ்சமத்தை அநாயாசமாக தொட்டுவிடும் சாரீரத்தை வைத்துக் கொண்டு, தார ஷட்ஜத்தில் நின்றபடி ‘ம்-காரத்தில்’ சஞ்சாரங்கள் தேவையா? வாயைத் திறந்து பாடினால் இன்னும் கூட நன்றாக இருந்திருக்குமே. இது ஒரு குறை அல்ல. அவர்கள் பாடியது அற்புதமாகத்தான் இருந்தது. இன்னும் கூட நன்றாக இருக்க வாய்ப்புகள் இருந்தனவோ என்று தோன்றியது. இன்னும் சில விஷயங்கள் கூட நெருடின. அவை, இன்று பாடப்பட்ட எல்லா ராகங்களுக்கும் பொருந்தும் என்பதால் கடைசியில் சொல்கிறேன்.
“ஹரிஹர புத்ரம்” என்ற தீட்சிதரின் கிருதி வசந்தாவின் இமயம். சவுக்க காலத்தில், கண்ட ஏகத்தில், கம்பீரமாய் மிளிரும் கிருதியை அற்புதமாய் பாடினர். இது போன்ற கிருதிகளுக்கு, நிட்ரவல் ஸ்வரம் எல்லாம் தேவையே இல்லை. கிருதியை ஒழுங்காகப் பாடினாலே ராக பாவம் முழுமையாய் வந்துவிடும். இதனை உணர்ந்து, அளவோடு நிறுத்திக் கொண்ட சகோதரர்களுக்கு சபாஷ்!
ஜி.என்.பி பல கிருதிகளை கச்சேரி மேடையில் புழங்கச் செய்துள்ளார். அவற்றை, அவர் பாடிய விதத்தில் கேட்கத்தான் எனக்கு விருப்பம். ஒரு கிருதியை மட்டும் அவர் பாடிய விதத்தில் பாடாமல் இருந்தால் நன்றாயிருக்குமே என்று எனக்குத் தோன்றும். பூர்ணசந்திரிகாவில் “தெலிஸி ராம”-தான் அந்த கிருதி. “ராமா என்றால் பரப்பிரம்மம் என்றும் பொருள், ஆனால் சிலர், பெண் என்றொரு அர்த்தமும் அதற்கு இருப்பதாகக் கூறுவர். அவர் காமாந்தகராய் இருந்தாலன்றி அவருக்கு இந்த அர்த்தம் தோன்றாது”, என்று கடுமையான சாடல் நிறைந்த பாடல். அதை அதி துரிதத்தில் சிட்டை ஸ்வரம் எல்லாம் போட்டுப் பாடும் போது, ஏதோ சந்தோஷமான பாடல் போன்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்தக் காரணத்தால், இன்று திருச்சூர் சகோதரர்கள், இந்தப் பாடலை துரித காலத்தில் பாடியதை என்னால் அதிகம் ரசிக்க முடியவில்லை. (அது அவர்கள் குற்றமல்ல.)
பொதுவாக, கச்சேரிகளில் சுத்த மத்யம ராகங்கள் ஒலிக்கும் அளவுக்கு பிரதி மத்யம ராகங்கள் ஒலிப்பதில்லை. இன்று விரிவாகப் பாடப்பட்ட ராகங்கள் முன்றுள், இரண்டு பிரதி மத்யம ராகங்களாக அமைந்ததைக் காண மகிழ்ச்சியாக இருந்தது.
கரணம் தப்பினால் மரணம் என்ற வகை ராகம் சுசரித்ரா. சுத்த ஸ்வரங்களை நன்றாக சாதகம் செய்திருந்தால்தான், இது போன்ற ராகங்களை கையாள முடியும். சிலர், இது போன்ற ராகங்களை கஷ்டப் பட்டு பாடுவார்கள். அதைக் கேட்பதும் கஷ்டமாகவே இருக்கும். இன்று இவர்கள், தோடி, கல்யாணி, பைரவி பாடுவது போல, பிரதான ராகமாக சுசரித்ராவை அநாயசமாக ஆலாபனை செய்தனர். அரைத்த மாவையே அரைக்காமல், புதியதாய் பாட முயன்றதற்கே இவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இருவரும் சேர்ந்து 16 நிமிடங்கள் ஆலாபனை செய்தனர்.அவர்கள் பாடியதை எல்லாம் பத்து நிமிடத்துக்குள் அடக்கி, அற்புதமாய் வாசித்தார் விஜயராகவன். சுசரித்ராவை ஆரம்பித்ததும், “வேலும் மயிலுமே” பாடப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆலாபனையைத் தொடர்ந்து, தானம் பாட ஆரம்பித்ததும், சற்றே வியந்தேன். தானத்தை, பெயருக்குப் பாடாமல், மத்யம காலத்தில், ராகம் முழுமையாய் வெளிப்படும் படி பாடியது நிறைவாய் இருந்தது. ஆனால் தானம் பாடி முடிக்கும் போதே, நேரம் நிறைய ஆகிவிட்டது.
“ராமா ராகவா பாஹிமாம். சுசரித்ர பட்டாபி”, என்ற ஆதி தாள பல்லவி. (2 களை, சமத்தில் எடுப்பு). நேரக் குறைச்சலால் நிரவல் செய்யாமல் நேரே ஸ்வரத்துக்குத் தாவிவிட்டனர். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், புரிந்து கொள்ள முடிந்தது. நிரவல் செய்யவே நேரம் இல்லாத போது, ஸ்வரப்ரஸ்தாரத்தை சுசரித்ராவிலேயே நிறைய பாடி இருக்கலாம். ஒரு ராகத்தை வெகு நேரம் பாடினால் அலுப்பு ஏற்படும் என்பதனால், ராகமாலிகை ஸ்வரங்கள் பாடும் பழக்கம் ஏற்பட்டது. சுசரித்ராவே முழுமையாகப் பாட நேரமில்லாத போதும், ஆனந்த பைரவி, வலஜி, ரேவதி போன்ற ராகங்களில் ராகமாலிகை தேவைதானா, என்ற கேள்வி எழுந்தது. அதுவும் ஆனந்த பைரவியின் mood-ம் சுசரித்ராவின் mood-ம் முற்றிலும் வேறுபட்டு இருந்தன. இதனால், நல்ல கனவு, திடீர் என்று கலைந்த உணர்வு ஏற்பட்டது.
கடைசியில் வைத்த கோர்வையில் ராக ஆரோகண, அவரோகணம் வரும்படியாக வைத்தது, நன்றாக இருந்தது. இது போன்ற அரிய ராகங்கள், ரசிகர் மனதில் புரிய ஏதுவாயிருக்கும். எனக்குப் பக்கத்தில் இருந்தவருக்கும், இந்த கோர்வையை கேட்டவுடன்தான், இது மேளகர்த்தா ராகம் என்று விளங்கியது.
ஸ்வரங்களுக்குப் பின், பல்லவியை திரிகாலம் செய்து, திஸ்ரமும் செய்தனர். கச்சேரியின் கடைசிக்குத் தனி தள்ளப்பட்டதால், crisp-ஆக அமைந்தது. மிருதங்கம் வாசித்தவர் சகோதரர்களின் தந்தை திருச்சூர் மோகன் என்பதால், வருத்தப்பட்டிருக்க மாட்டார். கடம் வாசித்தவர் டி.வி.வெங்கடசுப்ரமணியம். இருவரும் திஸ்ர நடையில் கொஞ்சம் கோடி காட்டிவிட்டு, சௌக்யமாக வாசித்தனர். தனியில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை என்றாலும், பாடல்களுக்கு நல்ல போஷாக்கு அளிக்கும் வகையில் வாசித்தனர்.
சரி, முன்னால் சொன்ன நெருடல்களுக்கு வருவோம்.
இரட்டையர்கள் கச்சேரிகளில், பொதுவாய், ஒருவர் ஒரு ராகத்தையும், மற்றவர் இன்னொரு ராகத்தையும் ஆலாபனை செய்வர். அன்றைய ஆலத்தூரிலிருந்து, இன்றைய லால்குடி siblings வரை இதுதான் நடைமுறை. இல்லாவிடில், பாதி ராகத்தை ஒருவர் நிர்வகிக்க, மீதியை மற்றவர் நிர்வாகம் செய்வார். திருச்சூர் சகோதரர்கள், நிமடத்துக்கு ஒரு தரம் மாறி மாறிப் பாடுகின்றனர். பெரியவரின் குரலில் அழகாக உருவாகும் வடிவம், முழுமை பெறும் முன்னரே அடுத்தவரின் குரல் கேட்கும் போது, கொஞ்சம் தொடர்ச்சி அடி வாங்குகிறது. உதாரணமாக, ஆலாபனையின் ஒரு இடத்தில் ஒரு வர்ஜ பிரயோகத்தை ஒருவர் ஆரம்பிக்க,அது முழுமையாய்ப் பாடு முன்னரே மற்றவர் வேறொரு பிரயோகத்தை ஆரம்பித்துவிட்டார். சில இடங்களில், இருவருமே ராகத்தின் ஒரே மாதிரியான பிடிகளை, அவரவர் பாணியில் அடுத்தடுத்து பாடுகின்றனர். இது போன்ற ஆலாபனை ஜுகல்பந்திகளுக்குப் பொருத்தமாக இருக்கும். அங்கு ‘sawal jawab’ வகையிலான விரிவாக்கங்களை எதிர்பார்த்துப் போவோம். ஆதலால், ஒருவர் பாடிய இடத்தை, அடுத்தவரும் பாடினாலும் அலுப்பு ஏற்படுவதில்லை. ஒருவர் பாடினால் 10 நிமிடத்தில் முடியும் ஆலாபனை, இருவரும் பாடுவதால் 15 நிமிடங்களுக்கு நீட்டிக்கப் படுகிறது.
இன்னொரு விஷயம். ஆலாபனையின் ஆரம்பத்தில் நிதானமாகப் பாடினாலும், சில இடங்களில் கற்பனையில் உதிப்பதை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்கிற வேகம் தென்பட்டது. மைசூர் பாகு செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? பாகாக்கி ஊற்றினால் மாடும் சாப்பிட முடியாது. உலரும் முன், அதை துண்டங்களாக்க வேண்டும். ஒரே பாகு என்றாலும், துண்டங்களுக்கு இடையில் கொஞ்சம் இடைவெளி வேண்டும். அளவும் சீராக இருக்க வேண்டும். அப்போதுதான் பார்க்கவும், சுவைக்கவும் ஏற்றதாய் இருக்கும். இது ராகங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, இருவரில் மூத்தவர் இதை நன்குணர வேண்டும். ஆலாபனையில் பல அழகிய கோவைகளுக்கு இடையே கொஞ்சம் நிறுத்தங்கள் (pause) கொடுத்துப் பாடினால், ராகத்தின் விரிவாக்கத்தை ரசிகர்கள் உள்வாங்கிக் கொள்ள ஏதுவாய் இருக்கும். இல்லையெனில், ஒரு சங்கதியை ரசிப்பதற்குள், மூன்று சங்கதிகள் கடந்து சென்றுவிடும்.
இவை எல்லாம் கொஞ்சம் நெருடினாலும், கச்சேரி ரொம்பவே ரசிக்கும் படி இருந்தது. சீஸனில் நிச்சயம் கேட்க வேண்டும் என்று நான் வைத்திருக்கும் பட்டியலில், இவர்களுக்கும் நிச்சயம் ஒரு இடமுண்டு.
Read Full Post »