Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘sindhuja’

ஜி.என்.பி-யின் கற்பனைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக ‘கமல சரணே’ கிருதியை சொல்லலாம். இவர் உருவாக்கிய ராகங்களுள் ஒன்றான அம்ருதபெஹாகில் இந்தக் கிருதி அமைந்துள்ளது.

“ஸ ம க ப நி த ஸ” என்ற வக்ர ஆரோகணமும் “ஸ நி த ம க ஸ” என்ற அவரோகணமும் பெற்றுள்ள இந்த ராகம், 65 மேளகர்த்தாவான மேஷகல்யாணியின் ஜன்யம்.

நாதஸ்வர மேத ராஜரத்தினம், கல்யாணி ராகத்தில் சில வர்ஜ வக்ர சஞ்சாரங்கள் வாசித்ததைக் கேட்டே ஜி.என்.பி இந்த ராகத்தை உருவாக்கினார் என்றும் சில கூறுகின்றனர். ராகங்கள் வெறும் ஸ்வரங்களால் ஆகியிருந்தால் மட்டுமே இது சாத்தியம். கல்யாணி போன்ற ராகங்களில் ஸ்வரங்கள் வெறும் கூடுதான். அதன் ஜீவன் என்பது ஸ்வரங்கலையும் தாண்டிய ஒன்று.

அம்ருத பெஹாக், கல்யாணி scale-ல் இருந்து பிறந்த ராகம் என்று சொல்லலாமே தவிர, கல்யாணி ராகத்துக்கும் இதற்கும் அதிக சம்பந்தம் இல்லை.  இந்த ராகம் சில இடங்களில் அமிர்தவர்ஷிணியை நினைவூட்டுகிறது.

‘கமல சரணே’ கச்சேரிகளில் பெரும்பாலும் பிரதான உருப்படிக்கு முன் பாடப்படும் வேகமான ஃபில்லராகப் பாடப் படுகிறது. வேகமான காலப்ரிமாணத்தில், குரலின் சர்வ வல்லமையும் காட்ட ஏதுவாய், பல துரித கால, ரவை ஜாதி சங்கதிகளுடன் உள்ள கிருதிகளுள் ‘கமல சரணே’ கிருதியும் அடங்கும்.  (Interestingly, இந்த வகை கிருதிகள் பல ஆதி தாளத்தில் ஒன்றரை இடம் தள்ளி எடுப்பில் அமைந்துள்ளன.)

அடுக்கடுக்காய் மலரும் சங்கதிகள், இந்த ராகத்திலுள்ல ஸ்வரங்களின் கொண்டாட்டத்தின் வெளிப்படாய் அமைந்துள்லன. தைவதத்தை சுற்றி  அமைந்த சில சங்கதிகள் பாவபூர்வமாகவும் அமைந்துள்ளன. அழகாக கோர்க்கப்பட்டிருக்கும் சிட்டை ஸ்வரம், இந்த ராகத்தை எளிதாகவும் சரியாகவும் புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

இந்தப் பாடலில் வரும் ‘விமர்சனானந்த’ என்ற பெயர் ஜி.என்.பி-யின் ‘தீக்ஷா நாமம்’ என்று அவர் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

சிந்துஜா இந்தப் பாடலை, வ்ழைமையாய் கேட்கும் break-neck speed-ல் பாடாமல், நிதானமாய் பாடி இருப்பது, இந்த ராகத்தின் எழிலை வெளிக் கொணரும் வகையில் அமைந்துள்ளது.

பாடலைக் கேட்கவும் தரவிறக்கவும் இங்கு செல்லவும்.

Read Full Post »

ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் வெகு நாள் கழித்து மூன்றாவது பாடலை இன்றுதான் வெளியிட முடிகிறது.

பல வேலைகளில் மாட்டிக் கொண்டிருப்பதால் இம் முறை தமிழிலும் கிருதி பற்றி எழுத முடியவில்லை.

சிந்துஜாவின் பாட்டையும், பாடல் பற்றிய என் குறிப்பையும் இங்கு கேட்கலாம்/படிக்கலாம்.

http://octaves.blogspot.com/2010/09/celebrating-gnb-3-nee-padame-gathi-in.html

வரும் வாரங்களில் ஒரு கிருதிக்கும் அடுத்த கிருதிக்கும் உள்ல லீட் டைமை குறைக்க நினைத்துள்ளோம். ஜனவரிக்குள் சிந்துஜாவுக்கு தெரிந்த பாடல்கள் அனைத்தையும் வலையேற்ற திட்டம்.

முந்தைய பாடல்கள்: https://carnaticmusicreview.wordpress.com/2010/05/21/gnb-kritis-nee-daya-varnam/ & https://carnaticmusicreview.wordpress.com/2010/04/12/gnb-kritis-srichakra/

பார்ப்போம்.

Read Full Post »

சிந்துஜாவுடன் இணைந்தளிக்கும் ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் இது இரண்டாவது பாடல்.

எனக்கு மிகவும் பிடித்த ராகங்களுள் ஒன்று ஆந்தோளிகா. கரஹரப்ரியாவின் ஜன்ய ராகமான இந்த ராகத்தின் ஆரோஹணத்திலும் அவரோஹணத்திலும் ஸ்வரங்களின் எண்ணிக்கை ஒன்றாக அமைந்த போதும், இதன் scale asymmetric-ஆக அமைந்துள்ளது. தியாகராஜரின் ‘ராக ஸுதா ரஸ’, இந்த ராகத்தில் அமைந்துள்ள கிருதிகளுள் பிரபலமான ஒன்று.

தியாகராஜர், கிருதியின் முதல் பிரயோகத்திலேயே ராகத்தின் ஜீவனை வெளிப்படுத்துகிறார். அதன் அடிப்படையில் அமைந்துள்ள ஜி.என்.பி-யின் வர்ணம் புதிய பரிமாணங்களையும் வெளிக் கொணர்ந்துள்ளது.

வர்ணத்தைப் பற்றி பார்ப்பதற்கும், ஜி.என்.பி-யின் ஆந்தோளிகாவைப் பற்றி சில வார்த்தைகள்.

ஜி.என்.பி-யின் விருப்பத்துக்குரிய ராகங்களில் பல கரஹரப்ரியா ஜன்யமாக அமைந்துள்ளன. ஆபோகி, ரீதிகௌளை, ஆந்தோளிகா, ஜெயமனோஹரி போன்ற ராகங்களை விரிவாகப் பாடியுள்ளார். அவர் கரஹரப்ரியாவை அதிகம் பாடாதது வியப்புக்குரியது.

இன்று கேட்கக் கிடைக்கும் ஆந்தோளிகாவின் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தவ்ர் ஜி.என்.பி-தான் என்பது பரவலான கருத்து. (நாயினாப் பிள்ளைக்கும் முத்தையா பாகவதருக்கும் கூட ஆந்தோளிகா மிகவும் உகந்த ராகம் என்று எஸ்.ராஜம் ஒரு முறை கூறினார்.)

ஜி.என்.பி-யின் 81-வது பிறந்த நாள் அன்று டி.எம்.தியாகராஜn, தஞ்சாவூரில் ஜி.என்.பி செய்த முதல் கச்சேரியைப் பற்றி விரிவாகப் பேசினார். சினிமாவில் நடித்திருந்த ஜி.என்.பி-யை அக் கால தஞ்சாவூர் ரசிகர்கள் ஏளனமாய்ப் பார்த்தனராம். ஜி.என்.பி அன்று பாடிய ஆந்தோளிகா, அவர்களது எண்னங்களை மாற்றிப் போட்டதாம். அவர்கள் அதுவரை கேட்டிராத ராகத்தில், அரிய பல கோவைகள் அநாயாசமாகப் பாடிய விதத்தை டி.எம்.டி கூறியது என் ஆழ் மனதில் பதிந்தது. பின்னாளில் ஜி.என்.பி-யைப் பற்றி நூலெழுதிய போது, இந் நிகழ்ச்சியைக் கொண்டே நூலைத் தொடங்கினேன்.

படே குலாம் அலி கான், ஜி.என்.பி-யின் ஆந்தோளிகாவுக்கு ரசிகர். ஜி.என்.பி பாடியதைக் கேட்ட பின் அவரும் தன் கச்சேரிகளில் இந்த ராகத்தைப் பாட ஆரம்பித்தார். (ஜி.என்.பி-யும் தன் பங்கிற்கு உஸ்தாதிடமிருந்து காவதியைப் பெற்று தென்னகத்தில் புகுத்தினார். இந்த ராகத்தில் ஒரு வர்ணமும் செய்துள்ளார்.)

ஜி.என்.பி பாடிய சில ஆந்தோளிகா-கள் இன்றும் நம்மிடையே கிடைக்கின்றன. குறிப்பாக திருவையாற்றில் லால்குடி ஜெயராமனும், உமையாள்புரம் சிவராமனும் சேர்ந்து வாசித்திருக்கும் கச்சேரியில் ஜி.என்.பி பாடியுள்ள ஆந்தோளிகா அற்புதமான ஒன்று. அந் நாளில் நேஷனல் ஒலிபரப்பான கச்சேரி அது. (லால்குடி-முருகபூபதி வாசித்துள்ள கச்சேரியில் இருக்கும் ஆந்தோளிகாவும் சிறப்பான ஒன்று).

சரி! வர்ணத்துக்கு வருவோம்!

“வர்ணங்கள் பயிற்சிக்குரிய உருப்படிகள். கச்சேரிகளில் குரல் பதமடைய வேண்டிப் பாடப்படும் உருப்படிகள்.”, என்று பரவலான கருத்துகள் உண்டு. சில எலிமெண்ட்ரி ஸ்கூல் வர்ணங்கள் வேண்டுமானால் இந்தக் கருத்துகளுடன் பொருந்தி வரும். பல சமயங்களில், ஒரு ராகத்தின் பல அழகிய பரிமாணங்களை வெளிப்படுத்த உதவும் சிறந்த கருவிகளாக வர்ணங்கள் இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், சில ராகங்களில் அமைந்துள்ள வர்ணங்கள்தான் அந்த ராகத்தில் உள்ள மிகச் சிறந்த உருப்படியாக அமைகின்றன. உதாரணமாக பைரவி வர்ணத்தையும், நாட்டைக்குறிஞ்சி வர்ணத்தையும் கூறலாம். ஜி.என்.பி-யின் வர்ணங்கள் ஒவ்வொன்றும் முத்தும் மாணிக்கமும் போல மிளிர்பவை. குறிப்பாக ஆந்தோளிகா, காவதி, கதனகுதூகலம் ஆகிய ராகங்களில் அமைந்துள்ள வர்ணங்கள், அந்த ராகங்களில் மறைந்திருந்த பரிமாணங்களை வெளிக் கொணர்பவை.

ஜி.என்.பி-யின் வர்ணங்களுள் மிகப் பிரபலமானது ஆந்தோளிகா வர்ணமே. மற்ற வர்ணங்களை ஜி.என்.பி ஸ்கூல் பாடகர்களே பாடுகின்றனர். இந்த வர்ணம், மற்ற பாணி பாடகர்களிடையிலும் கூட பிரபலமாக உள்ளது. டி.கே.ஜெயராமனின் version-ஏ என்னைப் பொறுத்த வரை சிறப்பானது.

ஆதி தாளத்தில் அமைந்துள்ள இந்த விறுவிறுப்பான வர்ணம், ஜி.என்.பி-யின் இஷ்ட தெய்வமான ‘நாதரூபசுந்தரி’-யின் மேல் அமைந்துள்ளது. “பொதுவாக சிவனைத்தான் நாத ருபமாகக் குறிப்பது வழக்கம். ’நாத தனுமனிஷம் சங்கரம்’ என்கிறார் தியாகராஜர். ஜி.என்.பி-யின் ‘நாதரூபசுந்தரி’ என்ற உருவகம் தனித்துவம் வாய்ந்தது.”, என்கிறார் டாக்டர் எஸ்.ஏ.கே.துர்கா.

இந்த வர்ணத்தில் பல அழகிய ஸ்வரக் கோவைகளை வெளிப்படுத்தியுள்ளார் ஜி.என்.பி.

ரி ம ப நாதரூப
ம ப நி ஸ நாதரூப
ரி ம ரி ஸ நாதரூப

போன்ற பொருத்தங்கள், ஜி.என்.பி-யின் கல்பனை ஸ்வரங்களில் காணக் கிடைக்கும் பொருத்தங்களை ஒத்து அமைந்துள்ளது.
மூன்றாவது சிட்டை ஸ்வரத்தில் ஷட்ஜமும், பஞ்சமும் நீங்கலாக வரும் பிரயோகம் (ரிரிம நிநிரி மமனி ரிரிம நிரிரிம) பெரும்பாலும் சுத்த ஸ்வரங்களாகவே அமைந்து, மெற்கத்திய இசையை நினைவு படுத்துகிறது. இன்று மத்யமாவதி போன்ற ராகங்களிலும் இது போன்ற பிரயோகங்களை கேட்க முடிகிறது.

நெருடலான கணக்கு வழக்குகளில் ஜி.என்.பி ஈடுபடவில்லை என்ற போதும், பல அழகிய pattern-களை கையாண்டுள்ளார். உதாரணமாக நான்காவது சிட்டை ஸ்வரத்தின் ஒரு பகுதி (ஸநிதமரி நிதமரி தமரி மரி) கோபுச்ச யதியில் அமைந்துள்ளது.

சிந்துஜா வழக்கம் போல நன்றாகப் பாடியிருப்பினும், கேட்பவருக்கு இன்னும் கொஞ்ச நேரம் தொடரக் கூடாதா என்ற எண்ணம் எழாமலிருக்காது. ஜி.என்.பி கச்சேரிகளில் வர்ணம் பாடும் போது, சிட்டை ஸ்வரங்கள் பாடியவுடன், சில ஆவர்த்தங்கள் கல்பனை ஸ்வரமும் பாடுவார். robably a few rounds of spontaneous swarams from Sindhuja would have served as the icing on the cake 🙂

பாடலைக் கேட்க இங்கு செல்லவும்.

இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வரிசையில் முந்தைய பாடல் இங்கு.

Read Full Post »

சிந்துஜாவை இங்கு ஏற்கனெவே அறிமுகம் செய்துள்ளேன்.

சில நாட்களுக்கு முன், “ஜி.என்.பி-யின் நூற்றாண்டில், அவரது பாடல்கள் சிலவற்றைப் பாடி என் வலைப்பூவில் வருடம் முழுவதும் போடலாம் என்று நினைத்துள்ளேன். அவற்றைப் பற்றி எழுத முடியுமா?”, என்று சிந்துஜா கேட்டார். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? உடனே ஒப்புக் கொண்டேன்.

முதல் பாடலாய், சிவசக்தி ராகத்தில் அமைந்துள்ள ‘ஸ்ரீ சக்ர ராஜ’ பாடலைப் பாடியுள்ளார். பாடலுக்குள் செல்வதற்கு முன்னால், ஜி.என்.பி என்ற வாக்கேயக்காரரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

பிரபல வாக்கேயக்காரர்களாய் விளங்கியவர்கள் அதம் கச்சேரி செய்து புகழ் பெற்றவராக இருப்பதில்லை. அப்படி இருந்த ‘மஹா வைத்தியநாத சிவன்’, ‘பட்டிணம் சுப்ரமணிய ஐயர்’, ‘பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்கார்’, ‘ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதர்’ போன்றோர் அடங்கிய elite list-ல் ஜி.என்.பி-க்கும் தனி இடமுண்டு. அவரது கச்சேரிகளைப் போலவே, அவரது பாடல்களும், அறிவுத் திறனும், அழகுணர்ச்சியும் சேர்ந்த அழகிய கலவைகள். சாம்பமூர்த்தி, “ஜி.என்.பி-யின் ப்ரந்த கச்சேரி அனுபவங்களும், அந்த அனுபவங்கள் மூலம் ரசிகர்களுக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என்று உணர்ந்திருப்பதும், அவருடைய கிருதிகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது”, என்கிறார். பல சமயங்களில், அறிவுத் திறனை வெளிக்காட்ட நினைக்கும் போது அது அழகுணர்ச்சிக்கு எதிராக அமைந்துவிடுகிறது. ஜி.என்.பி, தனது கிருதிகளில், ஸ்வராக்ஷரப் பிரயோகங்கள், நெருடலான சிட்ட ஸ்வரங்கள், அது வரை கையாளப்படாத எடுப்புகள், அவர் உருவாக்கிய ராகங்கள், என்று பல அறிவுப் பூர்வமான முயற்சிகளைக் கையாண்ட போதும் அவரது பாடல்களைக் கேட்கும் போது ‘natural’-ஆகவே ஒலிக்கின்றன.

‘இசைக் கனவுகள்’ என்று தன் பாடல்களைக் குறிப்பிடும் ஜி.என்.பி, “எனக்கு சில சமயங்களில் ஸ்வரக் கோவைகள் கண் முன் உருவங்களாய் தெரிவதுண்டு. அவற்றை எழுதி வைத்துக் கொள்வேன். காலப் போக்கில் அவற்றை மறந்தும் விடுவேன். அப்படி மறக்காமல், நிரந்தரமாய் உரு கொடுப்பதற்காகவே அவற்றை கீர்த்தனைகளாக புனைந்தேன். அதன் பின், அவற்ரை சிஷ்யர்களிடம் விட்டுவிடுவேன். நான் அவற்றை திரும்பிப் பார்ப்பதில்லை.”, என்கிறார். ( “அவர் தன் கிருதிகளைப் பாடாமல் விட்டது, சங்கீத உலகத்துக்கு அவர் இழைத்த பெரும் துரோகம்”, என்பார் எஸ்.ராஜம்) அவர் திரும்பிப் பார்க்காத போதும், அவர் இருந்த போது அவருடைய கிருதிகள் சில பிரபலமாய் விளங்கின. அதற்குக் காரணம் அவருடைய சிஷ்யர்கள் டி.ஆர்.பாலசுப்ரமணியமும், எம்.எல்.வசந்தகுமாரியுமே.

ஜி.என்.பி, 250 பாடல்களுக்கு மேல் புனைந்தார் என்று பல குறிப்புகள் கூறுகின்றன. 1948-ல் சுதேசமித்ரன் ஆசிரியர் நீலத்துக்கு ஜி.என்.பி எழுதிய கடிதத்தில், அப்போதே 50 கிருதிகளுக்கு மேல் இருப்பதை அவரே குறிப்பிட்டுள்ளார். எம்.எல்.வி ஒரு நேர்காணலில், அவர் 1950-களில்தான் நிறைய பாடல்கள் புனைந்தார் என்கிறார். ’கான பாஸ்கர மணிமாலையில்’ (ஜி.என்.பி பாடல்களின் முதல் தொகுதி) “அவர் இஷ்ட தெய்வம் ராஜராஜேஸ்வரியின் மேல் மட்டுமே நூற்றுக் கணக்கான பாடல்கள் புனைந்துள்ளார்”, என்கிறார் மைசூர் வாசுதேவாச்சாரியார். ஜி.என்.பி பாடல்கள் இது வ்ரை மூன்று தொகுதிகளாக வெளியாயுள்ளன. அவற்றுள், 7 வர்ணங்கள், 73 கிருதிகள், 1 தில்லானா ஆகியவை ஸ்வரப் படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவர் புனைந்தவற்றில், 50 விழுக்காடுக்கு மேல் தொலைந்து விட்ட போது, கிடைக்கின்றன கிருதிகளே அவரின் கற்பனைத் திறனையும், நுண்ணறிவையும் பறை சாற்றுகின்றன.

“Sahithya in Krithis” என்ற கட்டுரையில் “Dikshitar’s kritis are detached and impersonal description and stothras of the hindu panthoen while those of Tyagaraja are records of his personal and emotional experience of God”, என்கிறார் ஜி.என்.பி. ஜி.என்.பி-யின் கிருதிகள் இரு வகையிலும் உள்ளன. அவர் ‘தன்மையில்’ (first person) எழுதிய கீர்த்தனைகள் அனைத்தும் அவரது சொந்த உணர்ச்சிகளையும், அனுபவங்களையும் குறிக்கின்றன என்று சொல்வதற்கில்லை. ஜி.என்.பி-யின் கீர்த்தனைகளின் சாஹித்ய பாவத்தை விட, இசை நயம் பலராலும் போற்றப்பட்டுள்ளது. காவதி, ஆந்தோளிகா, கதனகுதூகலம் போன்ற அரிய ராகங்களிலும், ஹிந்தோளம், வராளி, ரஞ்சனி, யதுகுலகாம்போதி போன்று பிரபல வர்ணங்கள் ஏதும் அமையாத ராகங்களிலும் அமைந்துள்ளன.

அட தாளத்தில் அமைந்திருக்கும் யதுகுல காம்போதி வர்ணத்தைத் தவிர, அனைத்து வர்ணங்களும் ஆதி தாளத்தில் அமைந்துள்ளன. ‘அம்போருஹ’ என்ற ரஞ்சனி வர்ணம் இன்று பிரபலாமடைந்திருக்கிறது.

கதனகுதூகலம் ராகத்தை முதலில் கையாண்டவர் பட்டணம் சுப்ரமணிய ஐயர். அவரது ‘ரகுவம்ஸ ஸுதா’ என்ற கிருதி, மேற்கத்திய இசையை நினைவூட்டும் சங்கதிகள் நிறைந்து, வாத்திய இசைக்கென்றே அமைக்கப்பட்டது போலிருக்கிறது. ஜி.என்.பி-யின் கதனகுதூகல வர்ணம், பல அழகிய கோவைகளுடன், பாடுவதற்கேற்ப அமைந்துள்ளது. விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் தனது கட்டுரையில், “The popular composition in this raga has virtually been hijacked by the instrumentalists, if I may be permitted to use such a word. GNB’s handling, is beautiful, melodic and quite different from Raghuvamsa Sudha”, என்கிறார்.

மாளவி. செஞ்சு காம்போதி, நாராயணி, கதனகுதூகலம், ஸரஸ்வதி, ரஞ்சனி, தேவ மனோகரி, நளின காந்தி, பூர்ண சந்திரிகா போன்ற கிருதிகள் குறைவாக அமைந்த ராகங்களில் ஜி.என்.பி அமைத்துள்ள கிருதிகளை ‘a welcome addition’, என்று கூறலாம். ரஞ்சனியில் அமைந்த ‘ரஞ்சனி நிரஞ்சனி’ கிருதியும் ஸரஸ்வதி ராகத்தில் அமைந்த ‘ஸரஸ்வதி நமோஸ்துதே’ கிருதியும் நவராத்திரியின் போது அதிகம் கேட்கக் கிடைக்கும் பாடல்களாகக் திகழ்கின்றன. இவை தவிர, ‘வீணாதரி’, ‘ஸாரங்க தரங்கிணி’ போன்று புத்தகங்களில் மட்டுமே இருந்த ராகங்களில் கிருதி அமைத்த பெருமையும் ஜி.என்.பி-க்கு உண்டு.

அரிய ராகங்களிலும், புதிய பிடிகளிலும் கிருதிகள் அமைத்ததைத் தவிர, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரைப் போல் புதிய ராகங்களை உருவாக்கி, அவற்றிலும் கிருதிகள் அமைத்துள்ளார். ‘அமிர்த பெஹாகும்’, ‘சிவசக்தியும்’ இவரது கண்டுபிடிப்புகளே.

ஜி.என்.பி-யின் சாஹித்யங்களின் விசேஷமான அம்சம் என்று அவரது ஸ்வராக்ஷர பிரயோகங்களைக் கூறலாம். ‘நீ பாதமே கதி’, ‘ஸதா பாலய’, ‘பாத பஜன’ போன்ற கிருதிகளை அழகான ஸ்வராக்ஷரங்களில் தொடங்கியுள்ளார். பல கிருதிகளில் ராகத்தின் பெயர் சாஹித்யத்தில் வரும் வகையிலும் அமைத்துள்ளார். சில கீர்த்தனைகள் சிட்டை ஸ்வரங்களுடன் அமைந்துள்ளன. இச் சிட்டை ஸ்வரங்களில், தாட்டு வரிசை பிரயோகங்கள் கோபுச்ச யதி போன்ற கோவைகளை அழகுற பயன்படுத்தியுள்ளார்.

ஜி.என்.பி, மற்ற வாக்கேயக்காரர்கள் போல முத்திரை வைக்கவில்லை என்பது பரவலான கருத்து. ஆனால், ஒரு நிகழ்ச்சியில் விதுஷி எஸ்.ஏ.கே.துர்கா, “அவர் பாடல்களே அவருடைய முத்திரைதான். அந்தப் பாடல்களைக் கேட்டாலே அவை ஜி.என்.பி பாடல்கள்தான் என்று சந்தேகமின்றி தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றன. அதை மீறி தனியாக ஒரு முத்திரை எதற்கு?”, என்று அழகாக விளக்கினார்.

ஜி.என்.பி கிருதிகளைப் பற்றிய இந்த அறிமுகத்துடன், இந்த வரிசையில் மலர்ந்திருக்கும் முதல் பாடலைப் பார்ப்போம்.

ஜி.என்.பி உருவாக்கிய ராகங்களுள் ஒன்றான சிவசக்தி, கரஹரப்ரியாவின் ஜன்யம். அரோஹணத்தில் ‘ஸ,க,ம,த’ என்ற நான்கு ஸ்வரங்களும், அவரோஹணத்தில் ‘ஸ,நி,த,ம,க’ என்ற ஐந்து ஸ்வரங்களுடன் அமைந்துள்ள ராகம்.

ஒரு ராகத்தில், அரோஹணத்திலும் அவரோஹணத்திலும் குறைந்த பட்சம் ஐந்து ஸ்வரங்களாவது இருக்க வேண்டும் என்றொரு லட்சணம் உண்டு. பாலமுரளிகிருஷ்ணா இந்த லட்சணத்தை உடைத்து, ‘மஹத்தி’ போன்ற ராகங்களை உருவாக்கிய போது பெரும் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது. ஆனால், இதையே ஜி.என்.பி செய்த போது பெரிய எதிர்ப்பொன்றும் கிளம்பவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவரது கிருதியைக் கேட்கும் போது, unconventional-ஆன ஒன்றை கேட்கிறோம் என்ற உணர்வு சற்றும் ஏற்படாமல் இருப்பதே.

இந்த  ராகத்தை ஜி.என்.பி எப்படி அமைத்தார் என்பதை வீணை எஸ்.பாலசந்தர் ஒருமுறை விளக்கினார். “சிவசக்தி ராகம் ‘ஸ்ரீ சக்கரத்தை’ ஒத்து அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது முகங்களில் நான்கு சிவனையும், ஐந்து சக்தியையும் குறிப்பது போல, சிவசக்தி ராகத்தின் அரோஹணத்தில் நான்கு ஸ்வரங்கள் சிவனையும், அவரோஹணத்தின் ஐந்து ஸ்வரங்கள் சக்தியையும் குறிக்கின்றன”. கிருதியில் வரும் ‘ஸ்ரீ சக்ர ராஜ நிலையே’, ‘சிவசக்தி ஐக்ய ரூபிணி’ போன்ற வரிகள் இந்த கூற்றை நிறுவும் வகையில் அமைந்துள்ளன.

மத்யம கால கிருதி என்ற போதும், இந்தப் பாடலை விஸ்தாரமாய்ப் பாடும் பாடல்களுக்கு இடையில் வரும் துரித காலத்திலும் கேட்டிருக்கிறேன். அனு பல்லவியின் அமைப்பு, துரித காலத்தில் பல சங்கதிகள் பாடத் தோதாய் அமைந்துள்ளது. இந்த ராகம் விஸ்தாரமாய் பாடுவதற்கும் நிறைய வாய்ப்பளிப்பதாய் அமைந்துள்ளது. நெஞ்சை உருக்கும் ‘hindholamish phrases’ நிறைந்த பூர்வாங்கமும், உற்சாகமான ‘aboghiyish phrases’ நிறைந்த உத்தராங்கமும், கலந்த ஒரு அரிய கலவையாக இந்த ராகம் (வரமு என்ற இதற்கு மிக நெருங்கிய ராகமும்) அமைந்துள்ளது.

‘த்விதியாக்ஷரப் ப்ராஸம்’ என்பது கிருதியின் சங்கீதத் தன்மையை மேம்படுத்தும் விஷயம். அதாவது வரிகளில் தொடங்கும் வார்த்தைகளில் இரண்டாவது எழுத்து rhyming-ஆய் அமைவதை இப்படிக் குறிப்பதுண்டு. இந்தப் பாடலின் அனு பல்லவியிலும் சரணத்திலும், எல்லா வரிகளிலுமே ‘த்விதியாக்ஷரப் ப்ராஸம்’ அமைந்திருப்பது சிறப்பாகும். வித்வான் டி.ஆர்.சுப்ரமணியம், “It is uncommon to find a composer using ‘dvitIyAkshara prAsam’ on all lines of a compositions. In GNB’s case it is a regular feature”, என்கிறார்.

எம்.எல்.வி வெளியிட்டு பிரபலமான குரு வந்தனம் என்ற கிராமஃபோன் ரிக்கார்டில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்போது, சுதா ரகுநாதன் நிறைய கச்சேரிகளில் இந்த ராகத்தையும் பாடலையும் விஸ்தாரமாகப் பாடி வருகிறார். இதே ராகத்தில், ‘வினுத பாலினி’ என்ற பாடலையும் ஜி.என்.பி அமைத்துள்ளார். காலப் போக்கில், அந்தப் பாடலும், ‘ஸ்ரீ சக்ர ராஜ’ அடைந்துள்ள பிராபல்யத்தை அடையும் என்று நம்புவோம்.

இதே மேட்ட்ரை ஆங்கிலத்தில் படிக்கவும் பாடலைக் கேட்கவும் இங்கு க்ளிக்கவும்.

பாடலை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Read Full Post »

முதன் முதலில் எழுத ஆரம்பித்தது, கல்லூரியில் மாணவர் பத்திரிக்கைக்குத்தான். பத்திரிக்கையின் ஆஸ்தான கவிஞன் நான். நான் எழுதிய கவிதைகள் எல்லாம் நன்றாக எழுதப்பட்டவை என்று நிஜமாகவே நம்பியிருந்தேன். 2001-ல் மேல் படிப்புக்கு அமெரிக்கா சென்றதும்தான் இணையம் பரிச்சியம் ஆனது. forumhub போன்ற இடங்களில் எண்ணற்றவர் கவிதைகள் புனைந்தனர். அந்த கவிதைகளைப் படித்த போது, நானும் கவிஞன்தான் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன். வாரத்துக்கு 2 வீதம் கவிதை என்ற பெயரில் கிறுக்கிக் கொண்டிருந்த போது, ‘தினம் ஒரு கவிதை’ என்ற மடலாடல் குழு பற்றி தெரிய வந்தது.

எழுத்தாளர் சொக்கனின் தனி முயற்சியால், மிக மிகப் பிரபலமாய் விளங்கிய குழு அது. தினமும் ஒரு கவிதையை பிரசுரிப்பார் சொக்கன். அதற்கு நம் கவிதைகளையும் அனுப்புவோமே என்று 4-5 கவிதைகளை அனுப்பினேன். மிகப் பொறுமையாய் ஒவ்வொரு கவிதையையும் விமர்சனம் செய்திருந்தார். எல்லா விமர்சனத்தின் சாராம்சமும் ‘கவிதை சகிக்கலை’ என்பதுதான். ஆனால் சொக்கனின் சொற்கள் என்னை உற்சாகப்படுத்தின.

கவிதை எழுதினேனோ இல்லையோ, தினமும் பல மின்னஞ்சல்கள் பரிமாறிக் கொண்டோம். ஒரு நாள் சொன்னார்,  “கவிதை எழுதறதை விட்டிட்டு கதை எழுதிப் பாரேன்”. சரி முயன்று பார்ப்போம் என்று 3-4 கதை எழுதினேன். எழுதியதில் எதுவும் எனக்கே சகிக்கவில்லை. இருப்பினும் திண்ணை தமிழோவியம் போன்ற வலைப் பத்திரிக்கைகள் அதனைப் பிரசுரித்தன.

சொக்கனுக்கும் நானும் உரையாடியதில் 90% இளையராஜாதான் வருவார். அவரது பாடல்களில் உள்ள ராகங்களைப் பற்றி பேசிய போது, இதையே ஒரு தொடராக எழுதலாமே என்றார் சொக்கன். தினம் ஒரு கவிதையிலேயே அந்தத் தொடர் வந்தது. கவிதை, கதையை விட, கட்டுரை கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது. அன்றே கவிதைக்கும் கதைக்கும் போட்டேன் ஒரு முழுக்கு! (இன்னும் உன் கட்டுரைகள் சகிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை:-))

எனக்கு வராத ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்ததில் இருந்து என்னை விடுவித்ததற்கு நான் சொக்கனுக்கு பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன்.

சரி இந்த ஃபிளாஷ் பேக் எல்லாம் இப்போ எதுக்கு?

இன்று காலையில் மின்னஞ்சலைத் திறந்ததும் நண்பர் சிந்துஜாவிடம் இருந்து ஒரு மடல். படித்த போது பூர்வ ஜென்மத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது போல இருந்தது. சிந்துஜா எனக்கு நெட்டில் அறிமுகமான முதல் சில நண்பர்களுள் ஒருவர். நல்ல ஸ்வரஞானி. அழகாய் பாடக் கூடியவர். அவர் தாயார் எழுதிய வரிகளுக்கு அற்புதமாய் மெட்டமைத்திருக்கிறார். அவரது வலைப்பூவில் இன்று ஒரு பாடலை பாடி upload செய்துள்ளார். பாடலின் விசேஷம்(?) என்னவென்றால், பூர்வாஸ்ரமத்தில், எனக்கு கவிதை எழுத வரும் என்று நினைத்து, நான் எழுதிய வரிகளைத்தான் பாடலாக்கியுள்ளார். அம்புஜம் கிருஷ்ணா பாடல்கள் சாயலில் எழுதிய வரிகள். இப்போது படித்தால் cliched-ஆக இருக்கிறது.

வரிகள் மொக்கையாக இருந்தாலும் சிந்துஜா பாடியிருக்கும் சஹானாவும் ரஞ்சனியும் கேட்க நன்றாக இருந்தன. நீங்களும் கேட்டுப் பாருங்களேன்!

பாடலைக் கேட்க இங்கு கிளிக்கவும்.

பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்கவும்.

Read Full Post »