விவியன் ரிச்சர்ட்ஸ் என்றொரு கிரிக்கெட் வீரர்.
1974-ல் சர்வதேச அரங்குக்கு வந்தார்.
அவர் வந்த நாளில், குருகுலவாச முறையில் வந்த சாஸ்திரோக்தமான ஆட்டக்காரர்கள் பந்தை மட்டையால் தொடலாமா என்று யோசித்து முடிப்பதற்குள் பந்து கீப்பர் கைகளில் இருந்து மூன்று நான்கு கைகள் மாறி மிட் ஆஃப்-க்கு சென்றிருக்கும்.
அச்சூழலில் நுழைந்த ரிச்சர்ட்ஸை வினோதமாய் பார்த்தனர். பந்து பௌலரின் கையை நீங்கிய மறுகணத்தில் பவுண்டிரியில் இருக்க வேண்டும் என்கிற ஒரே லட்சியத்துடன் மட்டையைச் சுழற்றினார் ரிச்சர்ட்ஸ்.
“கார்டே சரியா எடுக்கத் தெரியலை. பந்து படாத எடத்துல பட்டு பொட்டுனு போய்ச் சேற போறான்! ஆஃப் ஸ்டம்புக்கு வெளில விழற பாலை பூனை மாறி குறுக்க பூந்து அடிச்சுண்டு! எல்லாம் கலி காலம்”, என்று முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
அதையெல்லாம் பொருட்படுத்தாத ரிச்சர்ட்ஸ் ஆத்திரமேபடாமல் அடித்துத் துவைத்தார். ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர். பாரம்பரிய மொண்ணைகளின் குரல் ரசிகர்களின் ஆரவாரத்தில் மூழ்கிப் போனது.
அடுத்த பதினைந்து வருடங்கள் உச்சாணிக் கொம்பில்தான் ரிச்சர்ட்ஸ்.
மற்ற ஆட்டக்காரர்களும் ஆடினார்கள். ஆடாத போது வருங்காலத்தைப் பற்றி வருந்தினார்கள். சிலர் ரேடியோவில் பாடினார்கள். சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக சிஷ்ய கோடிகளை சேர்த்துக் கொண்டு ஆதிகால சங்கதிகளை அனவரதம் பாடி கருங்கல்லில் நார் உரித்தார்கள். சிலர் டிராமாவில் கூட நடித்தார்கள்.
”இது அவுட் ஆகிற வரைக்கும் காஜடிக்கிற ஆட்டமில்லையாம்பா! அம்பது ஓவர் ஆனா ஆட்டம் முடிஞ்சுதாம்!” – என்று இவர்கள் புரிந்துகொள்வதற்குள் இரண்டு உலகக் கோப்பைகள் வென்று ஆறாயிரம் ஓட்டங்களுக்கு மேல் குவித்துவிட்டார் ரிச்சர்ட்ஸ்.
ஆனால் பாருங்கள், ரிச்சர்ட்ஸும் மனுஷன்தானே. அவரும் சற்று தளர்ந்தார். பதினைந்து வருட ருத்ர தாண்டவம் சற்று அடங்கி ஒலித்தது.
முப்பது யார்ட் சர்க்கிளைத் தாண்டி பந்தை செலுத்தியிராதவர்கள் எல்லாம் துள்ளிக் குதித்தனர், “பார்த்தியா! பார்த்தியா! நாங்கதான் அப்பவே சொன்னோமே”, என்று தன் தலையில் தானே அட்சதை போட்டுக் கொண்டனர்.
ரிச்சர்ட்ஸை ஆதர்சமாய் கொண்டு அடித்து விளாசியபடி வளர்ந்து வந்த அடுத்த தலைமுறையின் தலைமயிரைக் கொத்தாய் பிடித்தபடி, “போடா போ! இப்படியே போனா ரிச்சர்ட்ஸ் கதிதான் உனக்கு”, என்றார் ஒரு மஹானுபாவர்.
“என்ன மாமா ரிச்சர்ட்ஸுக்கு?”, என்றது அந்த அபலை.
“என்னவா? நாசமாப் போச்சு!”
“….”
“என்னடா முழிக்கற?”
“….”
“ரெண்டு வருஷத்துல எத்தனை செஞ்சுரி அடிச்சான் உங்க ரிச்சர்ட்ஸ்?”
“நீங்க எவ்வளோ செஞ்சுரி அடிச்சேள்”, என்று கேட்க நினைத்து வாயையடைத்துக் கொண்டது அந்தத் தளிர்.
“மாமாவால் அடிக்க முடியாத சிக்ஸரா? அப்படியெல்லாம் வீர்யத்தை வீணாக்கக் கூடாது-னு வைராக்யமா இருக்கார்”, என்று எடுத்துக் கொடுத்தது ஒரு ஜால்ரா.
”சொல்றதை சொல்லிட்டேன். நம்ப பெரியவா எல்லாம் முட்டாளில்லை. அவாள்ளாம் ஒரு வழியை உண்டு பண்ணியிருக்கான்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். அதை மாத்தினோம்னா அடியோட கவுத்துடும். அதையும் மீறி நான் சீறித்தான் பாய்வேன்னா! பேஷா பண்ணு. அதுக்கு முன்னால ஒரு பென்ஷன் ஸ்கீம்-ல காசை போட்டுக்கோ”, என்று தன் ஹாஸ்யத்தை எண்ணி தானே சிரித்துக் கொண்டது அந்தரோ!
விரைவிலேயே ரிச்சர்ஸும் ரிட்டையர் ஆனார். மற்ற ஆட்டக்காரர்கள் மட்டுமென்ன மார்கண்டேயர்களா என்ன? அவர்களும் ரிட்டையர்தான் ஆனார்கள்.
ரிச்சர்ட்ஸுக்கு பென்ஷன் இல்லாமலேயே சுகஜீவனம் நடந்தது. பந்துக்கு பயந்து ஹெல்மெட் மாட்டிக்கொண்டவர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை இருப்பைத் தெரிவித்து கையெழுத்துப் போட்டு பென்ஷன் வாங்க வேண்டிய நிலையே வாய்த்தது.
காலம் உருண்டோடியது.
ரிச்சர்ட்ஸுக்குப் பின் சச்சின், சேவாக், கில்கிரிஸ்ட், கோலி என்ற வீரர்கள் சக்கை போடு போட்டனர்.
ரிச்சர்ட்ஸின் ஓய்வுக்குப் பின் பிறந்தவர்களின் ஆட்டத்தை, அவர்கள் உணராத போதும், ரிச்சர்ட்ஸின் ஆட்டம் பாதித்துதான் இருந்தது.
இதற்கிடையில் மஹானுபாவரின் நூற்றாண்டும் வந்தது. அவரது பங்களிப்பு என்ன என்பதை ஒரு பெரிய விசாரணை கமிஷன் பரிசீலித்தது. அந்தக் கமிஷனின் கண்டுபிடுப்புகளை, காலை வேளை டிஃபனுக்குக் கூடிய காதுகேளா ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கிடையில் மஹானுபாவரின் மகன் கூறிக்கொண்டிருந்தார்.
“நம்ப பெரியவா எல்லாம் முட்டாளில்லை…
#purinjavanpistha