Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘television’ Category

டிசம்பர் மாலைகளில் டிவி-யில் கச்சேரி வருகிறது என்ற செய்தியே எனக்கு பல நாட்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் (எங்க இருக்கார்??) உடன் பலத்த விவாதத்தில் ஒரு முறை ஈடுபட்ட போதுதான் இந்த விஷயம் தெரிந்தது. அதன் பின் ஒன்றிரண்டு கச்சேரிகள் பார்த்ததாகத்தான் நினைவு. பார்த்தவையும் மனதில் நிற்கவில்லை. நிஜமிருக்க நிழல் எத்ற்கு என்பது போல், சபாவில் சென்று நாள் முழுவதும் கேட்பதை விடுத்து, கமர்ஷியல் ப்ரேக்குக்கு நடுவில் கச்சேரியைக் கேட்பானேன். கச்சேரியைக் காணச் செல்பவர்களுக்கு வேண்டுமானால் அவை உகந்ததாக இருக்கும் என்றே எண்ணிக் கொள்வேன்.

சென்ற வருடம், சஞ்சய் தண்டபாணி தேசிகர் பாடல்களை வைத்துக் கச்சேரி செய்தார் என்று அறிந்ததும், கேட்காமல் போனேனே என்று வருந்தினேன். அதற்கு முன், திருவருட்பாவை வைத்து, அவர் பாடிய கச்சேரியையும் கேட்க முடியவில்லை. சஞ்சயின் வலைப்பூவில் ஒரு podcast மூலமாகத்தான் தண்டபாணி தேசிகர் மேல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் கச்சேரிகளில் அவரது பாடல்களைப் பாடினால், விட்டதைக் கொஞ்சமாவது பிடிக்கலாம். சஞ்சயை 2003-ல் இருந்து தொடர்ந்து கேட்டு வருகிறேன். 2006-ல் நிறையவே கச்சேரிகள் கேட்டேன். அந்த வருடம் நிறைய பாரதி பாடல்களை விஸ்தாரமாகப் பாடினார். மலையமாருதத்தில், ‘சந்திரன் ஒளியில்’ பாடி, ‘பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்’ என்ற இடத்தில் அவர் பாடிய நிரவலும் ஸ்வரமும் ரொம்பவே நன்றாக அமைந்தது. பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி, கோடீஸ்வர ஐயர் என்று தமிழ்ப் பாடல்கள் நிறையவே பாடுகிறார். வாழ்க அவர் தமிழிசைப் பணி.

இந்த வருடம் ஜெயா டிவி-யில், மாயூரம் விஸ்வநாத சாஸ்திரியின் பாடல்களைக் கொண்டு செய்துள்ளாராம் (விவரம்: http://sanjaysub.blogspot.com/2009/12/seaso-kick-off-and-mayuram-viswanatha.html ).

“மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறளுக்கு அழகான ராகங்களின் மெட்டமைத்துள்ளார். முன்கோபியும், கோபம் வந்தால் அடிக்கக் கூடியவருமான அவரிடம் பாடம் கேட்க எல்லோரும் தயங்கினர். நான் துணிந்து அவரிடம் கற்று, அவற்றை வானொலியில் பாடிப் பரப்பினேன்.” என்று ஒரு முறை எஸ்.ராஜம் என்னிடம் கூறினார்.

இம்முறையாவது சஞ்சயின் கச்சேரியைக் கேட்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

இன்று சங்கீதத் துறையில் முன்னணியில் இருக்கும் இன்னொரு வித்வான் டி.எம்.கிருஷ்ணா. அவர் ஜெயா டிவியில் பாடியுள்ள லிஸ்டைப் பார்க்கும் போது, கச்சேரி ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். தமிழிசை பற்றிய என் பதிவில், “தமிழில் பக்திப் பாடல்கள் தவிர வேறொன்றுமில்லையா”, என்று ஜவஹர் கேட்டிருந்தார். அவருக்காகவே டி.எம்.கிருஷ்ணா கச்சேரி அமைத்தார் போலும்:-).

நம்பக் கூடிய வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல் படி:

1. முதல் பாடல் சங்க இலக்கியத்திலிருந்து. மீனவப் பெண் காதலைப் பற்றிப் பாடும் பாடல்.
2. அன்பைப் பற்றி ஸ்பென்சர் வேணுகோபால் அமைத்துள்ள பாடல்.
3. குளிர் காலத்தைப் பற்றிய கன்னடப் பாடல்
4. கிருஷ்ணாவின் மனைவி இசையமைத்திருக்கும் மலையாளப் பாடல். இது திருவனந்தபுரம் போகும் வழியைப் பற்றிய கவிதையின் பகுதி.
5. வயலின் வித்வான் ஸ்ரீராம் குமார் கவனம் செய்திருக்கும், ‘உலகத்தையும், வெவ்வேறு பருவங்களையும்” பற்றிய சமஸ்கிருதப் பாடல்.
6. வங்காள மொழியில் ரபீந்திர சங்கீத்
7. பாரதியின் ‘சின்னஞ் சிறு கிளியே’. வழக்கமான மெட்டில் இல்லாமல், நாசிகபூஷணி, சுத்த சாரங் முதலிய ராகங்கள் கொண்டு அமைக்கப்பெற்றதாம்.

இந்தக் கச்சேரியும் காண/கேட்கக் கிடைக்குமா என்று அறியவில்லை. டிவி-யில் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் டெக்னாலஜி கையில் இல்லை. எப்படியும் இணையத்தில் யாராவது ஏற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இது போன்ற முயற்சிகள் வரவேற்கப் பட வேண்டியவை. இவற்றுக்கு நிறைய ஆதரவு கிட்டி, இவை பெருகும் என்று நம்புவோம்.

Read Full Post »