Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘event’ Category

பரிவாதினியில் நாகஸ்வரத்துக்கு என்றுமே தனி இடமுண்டு. 2013-ல் தொடங்கி நாகஸ்வர நிகழ்ச்சிகள் இல்லாத பரிவாதினி இசைவிழாகள் இல்லாத நிகழ்ச்சி நிரலைக் காண முடியாது. இசைத் தொடரில் சம்பிரதாயமாக மங்கல வாத்யம் என்று ஒரு மணிக்கு குறைவாய் நாகஸ்வரக் கலைஞரை வாசிக்க வைப்பதில் என்றுமே எனக்கு உடன்பாடில்லை. அதனால் பரிவாதினியில் இடம் பெற்ற நாகஸ்வர கச்சேரிகள் அனைத்துமே மற்ற கச்சேரிகளுக்கு இணையான நேர அளவில்தான் அமையும்படி பார்த்துக் கொண்டு வருகிறோம்.

சில மாதங்களுக்கு வைணவ நாகஸ்வர மரபை ஆவணமாக்க இணையத்தில் உதவி கோரிய போது கிடைத்த ஆதரவு உண்மையில் நம்பமுடியாத வகையில் இருந்தது. அதுவே வழக்கமாக ஏற்பாடு செய்யும் வருடத்து ஒன்றிரண்டு நாகஸ்வர கச்சேரிகளைத் தவிர இன்னும் ஏதாவது செய்யத் தூண்டியது.

அந்த எண்ணத்தின் அடுத்த நிலைதான் நாத இன்பத்துடன் பரிவாதினி சேர்ந்து நடத்தும் இருமாதத்துக்கு ஒருமுறை நாகஸ்வர கச்சேரிகள். இதன் தொடக்கம் ஜூலை மாதம் நிகழ்ந்தது.

சின்னமனூர் விஜய்கார்த்திகேயனும், இடும்பாவனம் பிரகாஷ் இளையராஜாவும் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் அற்புதமாக வாசித்தனர். நாகஸ்வரத்துக்கே உரிய தத்தகாரப் பல்லவி அந்தக் கச்சேரியின் உச்சம் என்று நினைக்கத் தோன்றும் – அன்று அவர்கள் வாசித்த ராகமாலிகையைக் கேட்கும் வரை.

கோயில்களில் உற்சவ மூர்த்தி வீதி வலம் முடித்தபின், கோயில்வாசலுக்கு வந்து திருவந்திக் காப்பு முடித்து தன் இருப்பிடத்துக்குப் போகும் போது படியேற்றம் வாசிக்கப் படும். அதாவது ஒவ்வுரு படியாய் ஏறி தன் அறைக்குச் செல்லும் போது ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொருராகம் இசைக்கப்படும். கிட்டத்தட்ட பத்து வினாடிகளுக்குள் ஒருபடியைக் கடக்கும் கணத்தில் ஒரு ரகத்தைக் கடப்பார்கள் நாகஸ்வரக் கலைஞர்கள். இந்த நிகழ்வை மனக்கண் முன் நிறுத்தி அன்று கார்த்திகேயனும் இளையராஜாவும் வாசித்த ராகமாலிகையை நேரில் கேட்ட்வர்கள் புண்ணியம் செய்தவர்கள். (அவர்களைக் காட்டிலும் அளவில் சற்று குறைவாய் புண்ணியம் செய்தவர்களுக்காக இணைப்பு கீழே)

 

பரிவாதினி ஒருங்கிணைத்த நிகழ்வுகளில் கச்சேரி முடிந்தும் பல வாரங்களுக்கு பரபரப்பாய் பேசப்பட்ட நிகழ்ச்சி இதுதான்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இஞ்சிக்குடி மாரியப்பன் அவர்களின் கச்சேரி இடம் பெற்றது. ஆரம்பம் முதல் கடைசி வரை பல அரிய பாடல்களின் ஆவணமாக அந்தக் கச்சேரி அமைந்தது. அவர் வாசித்த நீதிமதி அந்தக் கச்சேரியின் சிகரம் எனலாம்.

 

அன்ர்த மூன்றரை மணி நேர இசை மழையைத் தொடர்ந்து வரும் நவம்பர் 3-ம் தேதி ஒரு அரிய நிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளது.

இணையத்தில் இசையைத் தேடி அடைபவர்களுக்கு யாழ்பாணம் பாலமுருகனின் இசையைத் தெரிந்திருக்கும். அவர் வாசித்த பல இசைத் துளிகள் ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் மிகவும் பிரபலம். சென்ற வருடம் கோலப்பன் ஹிந்துவில் எழுதியிருந்த கட்டுரையில், கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும் இந்தக் கலைஞனை அழைக்கும் அளவிற்கு தமிழ்நாடும், சென்னை சபைகளும் அழைப்பதில்லை என்று எழுதியிருந்தார். அந்தக் குறை பரிவாதினியின் மூலம் தீர்வதில் எனக்க்குப் பெருமகிழ்ச்சி.

balamurugan

நினைத்த மாத்திரத்தில் கேட்டுவிடும் தூரத்தில் இல்லாத ஓர் கலைஞனின் அரிய நிகழ்வென்பதால் ரசிகர்கள் திரளாக வந்து ரசித்து இன்புற வேண்டும் என்று கோருகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் திறமை வாய்ந்த, பொருளாதர வசதி அதிகம் இல்லாத மூன்று நாகஸ்வர மாணவர்களுக்கும் ஒரு தவில் மாணவருக்கும் வாத்தியங்கள் வழங்கி மகிழவுள்ளோம்.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் ஆதாரம் பரிவாதினியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அளித்து வரும் உதவியும் ஊக்கமும்தான். அதற்கு எத்தனை முறை நன்று கூறினாலும் ஈடாகாது.

இந்தத் தொடர் நிகழ்வுகளுக்கு பங்களிக்க விரும்புவோருக்காக க்வங்கிக் கனக்கு கீழே அளிக்கப்பட்டுள்ளது. பரிவாதினிக்கு அளிக்கும் நன்கொடைகள் செக்தன் 80ஜி-யின் கீழ் வருமானவரிச் சலுகைக்கு தகுதிபெற்றவை.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »

சங்கீத வித்வானும், ஓவியருமான மேதை எஸ்.ராஜம் அவர்களின் நூற்றாண்டு 2019 ஃபெப்ரவரியில் வருகிறது.

5 set

அதை முன்னிட்டு பல நிகழ்வுகள் திட்டமிடலில் உள்ளன. அதன் தொடக்கம் ஃபெப்ரவரியில் நடக்கவுள்ளது. அதை முன்னிட்ட ராஜம் அவர்கள் பாடிப் பிரபலபடுத்திய பாடல்களை வைத்து ஒரு பாட்டுப்போட்டி நடத்தி, வெல்பவர்களுக்கு அந்த நிகழ்ச்சியில் பரிசும், பின்பொரு தருணத்தில் பரிவாதினியில் கச்சேரி வாய்ப்பும் கொடுக்கப்படவுள்ளது.

போட்டியிn விவரங்களை ராஜம் அவர்களின் மாணவி விதுஷி விஜயலட்சுமி சுப்ரமணியத்தின் பின்வரும் குறிப்பில் காணலாம்

I am happy to inform you that 2019 is the birth centenary year of my esteemed guru, the late Sangita Kala Acharya Sri S. Rajam.

An eminent musician and painter, he has contributed immensely to both the arts. He hasimmortalized the image of the musical trinity, Thyagaraja, Muthuswamy Dikshitar and Syama Sastry through his paintings. His creations have adorned the covers of numerous editions of Kalki and Kalaimagal magazines, especially the Deepavali Malars. Many of his paintings have been preserved for eternity in a time capsule at the Hindu Temple in Kauai Island, Hawaii.

With his training under great gurus like Papanasam Sivan, Madurai Mani Iyer, TL Venkatarama Iyer and others, Sri S. Rajam was a repository of many kritis in their most authentic renditions.

He brought the 72-melakarta ragas into the fold of concerts and sang them effortlessly,mesmerizing listeners with their bhava in his haunting voice. S. Rajam set to tune many compositions and many popular musicians render these at performances.

Among his most iconic works, Sri S. Rajam brought a new dimension to many music compositions by capturing them in paintings. He elevated the experience of listening to kritis by bringing them visual beauty and allowing audiences to watch the songs as they heard them.

It is my deepest wish to bring to wide audiences, the beauty and rapture of Sri S. Rajam’s art and musical vidwat. This is a wonderful opportunity for your sabha / school to partake in spreading the works of this great artist and familiarizing today’s music lovers and students to his greatness.

Sangita Kalacharya Sri S. Rajam Centenary Music Competition
It is planned to organize a music competition at a Global level with selection at two levels–a preliminary and a final round. The preliminary selections will be held in Mumbai, Bengaluru
and Chennai and the International finals will be held in December 2018 at Chennai. The competition will be held based on the repertoire of Sri S. Rajam — compositions popularized by him and compositions set to music by him. A folder containing the renditions of kritis by Sri S.
Rajam will be uploaded and intimated to the participating Sabhas/ Institutions/ individuals.

http://www.vijayalakshmysubramaniam.com

1. There will be two categories of competition
Junior – 12 — 18 years Senior – 18 – 30 years

2. List of 8 songs to be given for Junior category. List of 10 songs for Senior category.

Inclusion of one Vivadi raga kriti is a must for both categories.

3. Manodharma – Ragam, niraval and swara – is compulsory for the senior category.

4. The Prizes will be given at the Inaugural of the Grand Centenary Celebrations on February 8 2019 at the iconic Main hall of the Madras Music Academy.

5. Senior First prize is a beautiful traditional Tambura. The other prize winners will be given equally cherishable prizes.

The First prize winners will be given an opportunity to perform a concert in Chennai during the year, under the auspices of Parivadini.

6. Dates of the competition – The competition is held at two levels – preliminary at Mumbai, Bengaluru and Chennai. The
dates and venue will be intimated soon. The Final competition will be at Chennai.

There is no entry fee and the competition is open to all, from anywhere across the world.

We are delighted to welcome your organization to join us in this venture — a wonderful opportunity globally for aspiring young musicians!

Please feel free to mail me at Vijayalakshmy.subramaniam@gmail.com if you have any questions.

Warm regards
Sincerely,
Vijayalakshmy Subramaniam

போட்டிக்கான பாடல் பட்டியலைக் காணவும், அந்தப் பாடல்களை வித்வான் ராஜத்தின் குரலில் கேட்கவும் இங்கு சொடுக்கவும்

https://www.dropbox.com/sh/w183w4ago97c2ll/AAArI_5XgPnVJi_Kj7x-0kNLa?dl=0

Read Full Post »

அப்படி இப்படி தட்டித் தடவி நான்கு வருடமாய் சிறியதும் பெரியதுமாய் இதையும் சேர்த்து நூறு பதிவுகள்.

‘புதுமை’யாய் இருக்கட்டுமே என்று அருண் நரசிம்மனுடன் இணைந்து எழுதியுள்ளேன்.

tkr-011

1912இல் திருச்சி மாவட்டம் வராஹனேரியில் ஜூன் மூன்றாம் தேதி பிறந்த ஒரு கர்நாடக சங்கீத வித்வானின் நூற்றாண்டு நினைவு விழாவிற்கு நேற்று மாலை சென்றிருந்தோம். சென்னை போக்குவரத்தை எங்கள் வாகனத்தில் கலந்தாலோசித்துக் கதைத்துக் கலைந்து சற்று தாமதமாக சபாவை அடைகையில், ஐந்தரை மணி என்று சொன்ன நேரத்திற்கு விழாவை தொடங்கிவிட்டிருந்தனர் என்பது தெரிந்தது. அவ்விழாவின் சொற்பமான நேர்த்தியான நிகழ்வுகளில் அது முதன்மையானது.

அரங்கினுள் ரசிகர்களாய் நாங்கள் எதிர்பார்த்ததைவிடவே நல்ல கூட்டம். அடாணா, கருடத்வனி, கௌரிமனோஹரி, வாகதீஸ்வரி, மாஞ்சி, நீலாம்பரி என்று கச்சேரி மேடைகளில் அரிதான ராகங்களின் ஆலாபனைகளில் சிறந்த நூற்றாண்டு விழா நாயகரின் இன்றும் மனத்தில் நிறையும் இசையின் ஆகர்ஷணம் என்றே எடுத்துக்கொள்வோம். விழா நாயகரின் கொடை பற்றி ஒரு கானொளி பிரஸண்டேஷன் ஓடிக்கொண்டிருந்தது. தோடி மற்றும் கல்யாணி ஆலாபனைகளை அவர் கையாண்ட விதத்திற்கு உதாரணங்களாய் அடுத்தடுத்து ஒலித்த இசைத்துண்டுகள் மனதை நிறைத்தது. ஒரு ராகத்தின் சுருதி பேதம் கேட்டது போலவும் உற்சாகமாகவே இருந்தது.

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக்கவும்

Read Full Post »

டிசம்பர் 11 அன்று சென்னை ராக சுதா அரங்கில் துருவ நட்சத்திரம் வெளியானது.

ஞாயிறு காலை 9.00 மணிக்கு அவ்வளவு பேர் கூடி அரங்கை நிறைத்தது ஆச்சர்யமாக இருந்தது.  இந்த விழாவுக்காகவே பெங்களூர், ஓசூர் போன்ற ஊர்களில் இருந்து நண்பர்கள் வந்து நெகிழ வைத்தனர்.

விழாவைப் பற்றி கிரியும், சுகாவும் விவரமாகவே எழுதியுள்ளனர்.

அன்றைய கச்சேரியில் பழனி வழியில் வந்திருக்கும் இரு இளம் வித்வான்களின் தனியை இங்கு காணலாம்.

நூல் வெளியான அன்று ஹிந்துவில், கோலப்பன் புத்தகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதியிருந்தார். சில நாட்களில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் ஒரு கட்டுரை வெளி வர, “என்ன செய்யற-னு தெரியல. ஆனா என்னமோ செய்யர போல இருக்கு”, என்கிற ரீதியில் பல நண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன.

இந்த இரு கட்டுரைகளின் உபயத்தில், ம்யூசிக் அகாடமியில் கர்நாடிக் ம்யூசிக் புக் ஸ்டோரின் ஸ்டாலில் புத்தகம் எதிர்பார்த்ததை விட நன்றாகவே விற்றது என்றால், இணையத்தில் நண்பர் சொக்கன் எழுதிய அறிமுகத்தினால் இந்தப் புத்தகத்தை வாங்கினோம் என்று பலர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினர்.  “இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு ஆர்டரா?” என்று உடுமலை.காம் சிதம்பரம் அதிர்ச்சியில் பல நாட்கள் இருந்தார். சில நாட்களாய் ஆர்டர் இல்லை என்று நேற்று பேசும் போது சொன்னார். அப்போதுதான் அவர் குரலில் கொஞ்சம் ஆசுவாசம் தெரிந்தது.

புத்தகம் எழுதும் போது, கதை போல எழுதிய அத்தியாயங்கள் எல்லாம் அதிகப் பிரசங்கம் ஆகி விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. இத்தனைக்கும் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற அத்தியாயங்கள் சொல்வனத்திலும், இந்த வலைப்பூவிலும் வெளியானவைதான். புத்தகத்தைப் படித்தவர்கள் அனைவருக்கும் அந்தப் பகுதிகளே பெரிதும் பிடித்திருக்கின்றன. பிரபல எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், இரா.முருகன் போன்றோரும் லா.ச.ரா-வின் மகன் சப்தரிஷி போன்ற தேர்ந்த ரசிகர்களும் இதனை உறுதி செய்தனர்.  இதுவரை இணையத்தில் வெளியாகாத ஓர் அத்தியாயம் சில நாட்களுக்கு முன் (சேதுபதியின் பதிப்புரையோடு) தமிழ் பேப்பரில் வெளியானது.

இ.பா-வும் அ.மி-யும் புத்தகத்தைப் பற்றிச் சொன்னவை இந்த வார சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் தினமணியிலும் புத்தகத்தில் இருந்து ஒரு சிறிய பகுதி வெளியாகியிருந்தது.

இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு விளம்பரம் நான் எதிர்பார்க்காத ஒன்று.

எல்லாவற்றையும் விட,  “இணையத்தில் ஓர் ஓரத்தில் எழுதவதன் மூலம் இவ்வளவு நண்பர்களா”, என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

அந்த நண்பர்களுள் பலரை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், பணி நிமித்தமாக இந்த வாரக் கடைசியில் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. திரும்ப ஒன்றரை மாதங்கள் ஆகும்.

புத்தகங்களுடனும், நண்பர்களுடனும் உறவாடும் அரிய வாய்ப்பை இழக்கத்தான் வேண்டி உள்ளது 😦

புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டாலில் (ஸ்டால் எண் 334)  ‘துருவ நட்சத்திரம்’ புத்தகம் கிடைக்கும்.

இணையத்தில் பெற: http://udumalai.com/?prd=thuruva+natchatram&page=products&id=10381

Read Full Post »

MKT 100

ஏழிசை மன்னர் எம்.கே.டி-யின் நூற்றாண்டு நேற்று தொடங்கியுள்ளது.

எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மூன்றெழுத்து சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கிய எம்.கே.டி-யின் நூற்றாண்டு இவ்வளவு அமைதியாகத் தொடங்கியிருப்பது நம்ப முடியாமல் இருக்கிறது!

பாகவதர் நூல் எழுதிய ஜெ.ராம்கியுடன் சில முறை எம்.கே.டி பற்றி சக விசிறியாய்ப் பேசியுள்ளேன். அவர்தான் மின்னஞ்சல் அனுப்பி நினைவுபடுத்தினார்.

பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், அதிகம் நான் தாத்தாவிடம்தான் வளர்ந்தேன். என் அப்பாவின் அப்பா பெரிய எம்.கே.டி ரசிகர். நன்றாகப் பாடக் கூடியவர். காலை எழுந்தது முதல் எம்.கே.டி பாடல்களாய் பாடிக் கொண்டே இருப்பார். சிறு வயதில் எனக்கு சிவகவி பாடல்கள் எல்லாம் அத்துப்படி. யாரேனும் பாடச் சொன்னால் “அம்பா மனம் கனிந்து” என்று ஆரம்பித்துவிடுவேனாம்.

எனக்குப் பத்து வயதாகும் போது தாத்தா மறைந்தார். அவர் மறைவுக்குப் 10 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடக இசையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதுதான் மீண்டும் எம்.கே.டி பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன்.

ஹரிதாஸ், சிந்தாமணி, சிவகவி பாடல்களை நூற்றுக் கணக்கான முறை கேட்டிருப்பேன். “கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே” பாடலைல் சுழற்று சழற்றி சங்கதி அடிப்பார் பாருங்கள்! ஆஹா…எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.

இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டுதானே! நிச்சயம் அவரைப் பற்றி உருப்படியாய் எதாவது எழுத வேண்டும்!

தமிழ்ப் பத்திரிக்கை உலகும் விரைவில் விழித்துக் கொண்டு, ஒரு மாபெரும் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பான முறையில் கொண்டாடும் என்று நம்புவோமாக!

Read Full Post »

ஜனவரி நாலாம் தேதியும், ஐந்தாம் தேதியும், ஜி.என்.பி-யின் நூற்றாண்டு விழா இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில், நடை பெறவுள்ளது. முதல் நாளில் ஜி.என்.பி-யைப் பற்றிய ஆவணப் படம் வெளியாகிறது. மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதிய  ‘இசையுலக இளவரசர் ஜி.என்.பி’ என்ற புத்தகம், இந்தப் படத்துக்கான script-ஆக அமைந்துள்ளது. எந்தெந்தப் பகுதியை யாரை வைத்துப் பேச வைக்கலாம், எந்தெந்த விஷயங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும், பல நூறு மணி நேர ஒலிப்பதிவுகளிலிருந்து, எந்தெந்த ஒலிப்பதிவுகளை, எவ்வளவு கால அளவுக்குச் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் மண்டையை உடைத்துக் கொண்டோம். இவை தவிர, ஜி.என்.பி-யின் biographer என்ற வகையில் நானும் இந்தப் படத்தில் பேசியுள்ளேன்.

சாதாரணமாய் பல மணி நேரம் ஜி.என்.பி-யைப் பற்றி வாய் ஓயாமல் பேசக் கூடியவன், என்ற போதும், கேமிரா முன் பேசுவது அத்தனை சுலபமாக இல்லை. நின்று கொண்டு பேசினால், “சார், இது ஃபோட்டோ இல்லை. சாதாரணமாய் இருங்க, இவ்வளவு விரைப்பு வேண்டாம்”, என்றனர். சரி இப்படிச் சொல்லிவிட்டார்களே, கொஞ்சம் நடந்தவாறு பேசினால், “சார்! ஃப்ரேமை விட்டு, ரொம்ப போறீங்க. கேமிராவைப் பார்த்து பேசுங்க. முகத்துல வேர்வை ரொம்ப இருக்கு (அசடு வழுவதைத்தான் சூசகமாகச் சொன்னார் போலும்)!”, என்றெல்லாம் சத்தாய்ப்புக்கு மத்தியில் பேச்சு எப்படி வரும். இரண்டு ஷாட்டுக்கு நடுவில் எதையேனும் சொன்னால், “சார்! இதை அப்டியே கேமிரா முன்னாடி சொல்லுங்க”, என்றார் இயக்குனர். அதை கேமிரா முன் சொல்லும் போது, முன்பு வந்த கோவையான மொழி மறுபடியும் வரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணியது. 15 நிமிடப் பேச்சுக்கு, ஒன்றரை மணி நேரம் ஷூட்டிங். இயக்குனர் காந்தன்தான் பாவம். நாம் எவ்வளவு உளறினாலும், “ரொம்ப நல்லா பேசினீங்க”, என்றார்.

சென்ற வாரம், ப்ரிவ்யூ பார்த்து, சிற்சில இடங்களை மாற்றியமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினேன். படம் எப்படி வந்திருக்கிறது என்று நான் சொல்லப் போவதில்லை. நாலாம் தேதி மாலை, வந்து பார்த்துவிட்டு, நீங்கள் சொல்லுங்களேன்!

ஜி.என்.பி நூற்றாண்டு மலர் வேலை, நான் எதிர்பாராமல் வந்த ஒன்று. யார் யாரோ செய்யப் போகிறார்கள் என்ற செய்தி, கடந்த ஒரு வருடமாகவே என் காதுகளில் விழுந்து கொண்டிருந்தன. ஆகஸ்ட் மாதம், ஜி.என்.பி-யின் பேரன் மகேஷ் தொலை பேசினார்.

“வழக்கமாய் வரும் souvenir-களில் விளம்பரங்களுக்கு இடையில், சில கட்டுரைகள் இருக்கும். அந்தக் கட்டுரைகளும், “ஜி.என்.பி பெல்லாரியில் உப்புமா சாப்பிட்டார்”, “மல் வேஷ்டியை மன்னார்குடியில் வாங்குவார்”, போன்ற செய்திகளும், சிரிப்பே வராத ஜோக்குகளும் நிறைந்திருக்கும். அப்படி இல்லாமல், ஜி.என்.பி என்ற கலைஞரின் கலையைப் பற்றி முழுமையான அலசல் இந்த நூலில் இடம் பெற வேண்டும். இரண்டாவதாக, ஜி.என்.பி-யும் அவரது தந்தையாரும் எழுதிய சங்கீதம் தொடர்பான அத்தனை கட்டுரைகளும் தொகுக்கப் பட வேண்டும். மூன்றாவதாக வேண்டுமானால், ஜி.என்.பி என்ற மனிதரைப் பற்றி, அவருடன் பழகிய குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் ஆகியோரின் எண்ணங்கள் இடம் பெறட்டும்.”, என்றேன்.

மகேஷும் இதே எண்ணத்தில் இருந்ததால், என்னிடம் மலர் தொகுக்கும் பொறுப்பை அளித்தார். கட்டுரைகளின் தலைப்புகளை முதலில் முடிவு செய்து கொண்டு, ஒவ்வொரு தலைப்புக்கும் உரியவரைத் தொடர்பு கொண்டு கட்டுரை கேட்டோம். SAK Durga, N.Ramanathan, S.Rajam, MA Bhagerathi, TM Krishna, TR Subramaniam என்று ஒரு பெரிய அறிஞர் பட்டாளமே இந்த மலருக்காக எழுதியுள்ளது. லால்குடி ஜெயராமன், டி.என்.கிருஷ்ணன், உமையாள்புரம் சிவராமன் என்று இசைத் துறையின் உச்சங்களைத் தொட்டவர்களும் அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஜி.என்.பி-யின் personal secretary-ஆக பல ஆண்டுகள் செயல்பட்ட அவரது மகள் சகுந்தலாவின் கட்டுரை மிகவும் உருக்கமாய் அமைந்துள்ளது.

நெருங்கி வந்த சங்கீத சீசனுக்கு இடையில், பல கலைஞர்கள் கட்டுரை கொடுத்தது பெரிய விஷயம்தான். சிலரை, விடாக்கண்டன் கணக்காக, தொலைபேசியில் நச்சரிக்க வேண்டியிருந்தது.

வேலை ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே, இது ஒருவரால் ஆகக் கூடிய வேலை என்று புரிந்தது. அந்த நேரம் பார்த்து, என் புத்தகத்தை ஸ்ருதி பத்திரிக்கையில் மொழி பெயர்த்து, தொடராக வெளியிட, ஸ்ருதியின் ஆசிரியர் ராம்நாராயண் தொடர்பு கொண்டார். அவருடன் பேசிய முதல் நாளே, அவரை ரொம்ப வருடம் தெரியும் என்பது போன்ற நினைப்பு ஏற்பட்டது. ராம்நாராயணின் simple yet beautiful English அவருடைய பெரும் பலம். இனியவரும்,  இசை வளர்ச்சிக்காக முனைந்து செயல்படுபவரான அவரை விட சிறந்த co-editor-ஐ நான் பெற்றிருக்க முடியாது. ரொம்பவே சீனியர் என்ற போதும், என்னை நிகராக நடத்திய அவரின் பெருந்தன்மையைக் கண்டு பல கணங்களில் நெகிழ்ந்திருக்கிறேன்.

வந்த கட்டுரைகளை, ஆளுக்கு ஒரு முறை சரி பார்த்துச் செதுக்கினோம். ஆகஸ்டில் தொடங்கி டிசம்பருக்குள், அம்பது கட்டுரைகளுக்கு மேல் தொகுத்து, 264 பக்கங்களில், எக்கெச்செக்க புகைப்படங்களோடு அற்புதமான மலர் சென்ற வாரம் எங்கள் கணினியில் ஜனனித்தது. இந்த வாரம் அச்சில் வெளி வந்து கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க art paper-ல் மலர் மலர்ந்து கொண்டிருக்கிறது என்று சற்று முன் கிடைத்த தகவல் கூறுகிறது.

மலர் எப்படி வந்திருக்கிறது?

நானே எப்படிச் சொல்வது? இருந்தாலும் மூன்று விஷயங்கள் சொல்கிறேன்.

1. ஓவியங்கள்: ஓவியர் மணியம் செல்வனின் அட்டைப்படம் – கண் முன் கலையுலக கந்தர்வரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஓவியர் ராஜம், தொண்ணூறைத் தாண்டி விட்ட போதும், இந்த மலருக்காக பிரத்யேகமாய், ஜி.என்.பி பாடி பிரபலப்படுத்திய ‘வாஸுதேவயனி’ பாடலை ஓவியமாய்த் தீட்டியுள்ளார்.

2. ஜி.என்.பி-யின் கையெழுத்துப் பிரதிகள்: ஐம்பது வருடங்களாய் அச்சில் ஏறாமல், கையெழுத்துப் பிரதிகளாய் மட்டுமிருந்த மூன்று கட்டுரைகள் இந்த மலரில் அரங்கேறுகின்றன. இது தவிர, பரவிக் கிடந்த அவரின்ப் மற்ற கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த மலரின், மற்ற எல்லாப் பகுதியை நீக்கி விட்ட போதும் கூட, இந்த ஒரு பகுதியே நூலைத் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறேன்.

3. ஜி.என்.பி இறப்பதற்கு சில மாதங்கள் முன், உடல்நிலை சரியில்லாத நிலையில், வெளிநாட்டில் ஆவரைக் கேட்க வந்த ரசிகருக்காகப் பாடிய ஒரு மணி நேர கச்சேரியின் ஒலிப்பதிவும், இந்தப் புத்தகத்துடன் இலவசமாக வழங்கப்படுகிறது. கச்சேரியைக் கேட்டால், “சாகப் போகும் மனிதனின் பாட்டு”, என்று நம்பவே முடியாது.

ஐந்தாம் தேதி மாலை, பால மந்திர் ஜெர்மன் ஹாலில் (தி.நகர்), புத்தகம் வெளியிடப்படுகிறது. இசைப் பிரியர்களும், புத்தகப் பிரியர்களும் நிச்சயம் வர வேண்டும்.

Read Full Post »

சங்கீத கலாநிதி ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் சங்கீதத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு, ஐம்பது வயதைத் தாண்டிய எவரைக் கண்டாலும், “ஜி.என்.பி-யை நேரில் பார்த்ததுண்டா?”, என்று கேட்பேன். அவர் இசையின் மேல் காதல் கொண்டிருந்த எனக்கு, 2003-ல் ஜி.என்.பி-யின் கடைக் குட்டியான திரு.ஜி.பி.இராஜசேகரின் அறிமுகம் கிடைத்தது. எண்ணற்ற வார இறுதிகளை அவர் இல்லத்தில் ஜி.என்.பி-யைப் பற்றி பேசியும், இசையைக் கேட்டும், ஜி.என்.பி தொடர்பாக அவர் குடும்பத்தாரிடம் இருந்த தொகுப்புகளைப் புரட்டியபடியும் கழித்திருக்கிறேன்.

அப்போதுதான், ஸ்ருதி ·பௌண்டேஷன் ஜி.என்.பி-யைப் பற்றி நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கின் விடியோ பதிவுகளைப் பார்க்க நேரிட்டது. பல மணி நேரம் செல்லக் கூடிய அந்த விடியோவில் எங்கோ ஒரு மூலையில், 1964-ல் கிருஷ்ண கான சபா வெளியிட்ட மலரைப் பற்றிய குறிப்பினை திரு. சஞ்சய் சுப்ரமணியத்தின் பேச்சு பதிவு செய்திருந்தது. அன்று தொடங்கி எங்காவது இந்தப் பாராட்டு மலர் கிடைக்குமா என்று சல்லடை போட்டுத் தேடத் தொடங்கினேன்.

வெளியிட்ட கிருஷ்ண கான சபையை அணுகியதும், அவர்களிடமும் ஒரு பிரதி கூட இல்லாததை அறிந்தேன். பல நாட்கள் தேடிய பின், ஜி.என்.பி-யின் குடும்பத்தினரின் சேகரிப்பிலேயே பிரதியின் xerox copy இருந்ததை அறிந்து நானும் ஒரு பிரதி பெற்றுக் கொண்டேன். திரு. ராஜமாணிக்கம் பிள்ளை, திரு. லால்குடி ஜெயராமன் போன்ற அரிய கலைஞர்களும், ஜி.என்.பி-யுடன் நெருங்கிப் பழகியர்கள் பலரும் எழுதியிருக்கும் கட்டுரைகளை படித்து மகிழ அந்த பிரதியே போதுமானதாக இருந்தது. இருப்பினும், பொக்கிஷமாய்ப் போற்றத் தக்க பல அரிய புகைப்படங்களை ரசிக்க என் பிரதி போதுமானதாக இல்லை. எங்கேனும் நல்ல பிரதி கிடைக்குமா என்ற தேடல் தொடர்கதையாகவே மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

2006-ல் விகடன் பிரசுரத்தார் அளித்த வாய்ப்பால் ஜி.என்.பி-யைப் பற்றி புத்தகம் எழுதத் தொடங்கினேன். பழைய இதழ் படிகளிலிருந்தும், நேர்காணல்கள் மூலமாகவும், ஜி.என்.பி-யின் பதிவு செய்யப்பட்ட இசைக் கச்சேரிகளில் இருந்தும், எழுத ஏராளமாய் விஷயங்கள் கிடைத்தன. இருப்பினும், புகைப்படங்கள் இல்லா புத்தகம், நெய்யில்லா சர்க்கரைப் பொங்கல் போன்றல்லவா மணமற்று இருக்கும்? 1965-ல் மறைந்துவிட்ட மாமேதையின் புகைப்படங்களோ அதிகம் கிடைக்காத நிலையில், கிருஷ்ண கான சபை வெளியிட்ட பாராட்டு மலரில் உள்ள படங்களையே நம்ப வேண்டிய நிலைக்கு ஆளானோம்.

சென்னை, பெங்களூர், ஐரோப்பா, அமெரிக்கா என்று உலகம் முழுவதும், இசையில் இருந்த ஈடுபாட்டால் உருவான எனது நண்பர் கூட்டமே இந்த மலரின் பிரதியைத் தேடத் தொடங்கியது. பல நாட்களுக்குப் பின், ஜி.என்.பி பக்தர் என்று கொள்ளக் கூடிய திரு.சிவராமகிருஷ்ணனை புத்தகத்துக்காக பேட்டி காணச் சென்றேன். பேட்டி முடிந்து கிளம்பும் தருவாயில், தன்னிடம் 1964-ல் வெளியான மலரின் பிரதி இருப்பதை திரு.சிவராமகிருஷ்ணன் தெரிவித்த போது என் கால்கள் தரையில் இல்லை.

ஒரு வழியாய் பிரதி கிடைத்த போதும், பல கை மாறி இருந்த புத்தகத்தின் பக்கங்கள் வெகுவாய் கசங்கியிருந்தன. நூல் அச்சாக சில வாரங்களே எஞ்சியிருந்த தருணத்தில், திரு.அதியமான் தொலை பேசினார். அவருடைய உறவினர் வாடகைக்கு தங்கி இருக்கும் வீட்டின் ஒரு பகுதியில், வீட்டுக்கு சொந்தக்காரர் பல புத்தகங்கள் வைத்திருப்பதாகவும், அவற்றுள் இந்த மலரின் படியும் இருப்பதாகவும் கூறினார். வீட்டுக்காரர் இந்தியாவிலேயே இல்லாததால், வீட்டை நிர்வகித்து வந்தவர்களிடம் மன்றாடிப் படிகளைப் பெற்றுத் தந்தார். அப்படிக் கிடைத்த பிரதியிலிருந்தே என் புத்தகத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் எடுக்கப்பட்டன. மலரில் இருந்த படங்களை அச்சில் ஏற்றுவதற்கு முன் நகாசு வேலை செய்து பரிமளிக்க வைத்த விகடன் பிரசுர்த்தாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். நூல் வெளியான பின், பல முதிய ஜி.என்.பி ரசிகர்கள் நூலில் இடம் பெற்ற படங்களை சிலாகித்துப் பேசினர். அவர்களின் பாராட்டுகள் அனைத்தும் கிருஷ்ண கான சபைக்கும், 1964-ல் மலர் வெளியிடக் காரணமாயிருந்த திரு.யக்ஜராமன் அவர்களையுமே சேரும்.

புத்தகம் நல்ல முறையில் வெளி வந்துவிட்ட போதும், எனக்கே எனக்கென்று மலரின் ஒரு பிரதி கூட இல்லையே என்ற ஏக்கம் என்னை மீண்டும் தேட வைத்தது.

நூல் வெளியாகி ஓராண்டு கழித்து, 2007-ம் ஆண்டு மே மாதம், சென்னை மூர் மார்கெட்டில் ஒரு பழைய புத்தகக் கடையில், அட்டைகள் இல்லாத நிலையில், மலர் எனக்குக் காட்சியளித்தது. அன்று அந்தக் கடைக்காரர் எவ்வளவு விலை கேட்டிருப்பினும் கொடுத்திருப்பேனெனினும், விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை, அதன் மதிப்பு உணராது சொற்ப விலைக்குச் சொன்ன கடைக்காரரிடம், பிடுங்காத குறையாய் மலரைப் பெற்ற பொது ஏற்பட்ட மன நிறைவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. முனைந்து செய்யும் முயற்சி, எத்தனை வருடங்களானாலும், மெய் வருத்தக் கூலி தரும் என்ற வாக்கின் உண்மைத் தன்மை எனக்குத் தெள்ளெனப் புரிந்தது.

உலகமே ஜி.என்.பி என்ற மாமனிதரின் நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், நூற்றாண்டு மலரினைத் தொகுக்கும் பேறு எனக்குக் வாய்த்துள்ளது. அந்த மலரை அலங்கரிக்க திரு. லால்குடி ஜெயராமனிடமிருந்த கட்டுரை பெற அவர் வீட்டுக்குச் சென்ற போது, என்னுடைய ஜி.என்.பி புத்தகத்தின் பிரதி ஒன்றைக் கொடுத்தேன். அடுத்த நாள், திரு.பிரபு தொலைபேசியில் அழைத்து, லால்குடி அவர்கள் கிருஷ்ண கான சபை வெளியிட்ட மலரைப் பற்றி என் புத்தகத்தில் இருப்பதாகக் கூறியதாகவும், அதனை மறுபதிப்பு செய்ய விழைவதாகவும் தெரிவித்து, என்னுடைய பிரத்யைக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.

அரிய பொக்கிஷங்கள் அனைவரின் பார்வைக்கும் கிடைத்தல் அரிது. அப்படிப் பட்ட ஒரு புதையலாக இருந்து வந்த இந்த மலரை குன்றின் மேலிட்ட விளக்கு போல, அனைவரையும் சென்றடையும் எண்ணத்தை திரு.பிரபு வெளியிட்ட போது பெரிதும் மகிழ்ந்தேன். ஜி.என்.பி நூற்றாண்டில், அவரை நினைவு கூறும் வகையில் நடக்கும் எண்ணற்ற நிகழ்வுகளுள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முயற்சியாக இந்த மலரின் மறுபதிப்பு அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

அக்டோபர் 24-ம் தேதி, கிருஷ்ண கான சபை அரங்கில், மலரின் மறுபதிப்பு வெளியிடப்படுகிரது. இசை ரசிகர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு மலரைப் பெற்றுக் கொள்ளும் அரிய வாய்ப்பை தவற விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்

Read Full Post »