காதல் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலை சென்ற சில வாரங்களில் பலர் எழுத பார்க்க முடிந்தது.
இந்தக் கேள்வியை நான் எனக்குள் கேட்டுக் கொண்ட போதெல்லாம் ஒரு பாடல் மனத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

CHENNAI, TAMIL NADU, 08/09/2014: Carnatic singer Madurai T.N. Seshagopalan during an interaction in Chennai on september 08, 2014. Photo : K.V. Srinivasan
“சுந்தரி என் சொப்பனத்தில் வந்ததார்…”
அதுவும் சேஷகோபாலன் குரலில்.
போன வாரத் தொடக்கத்திலிருந்து கேட்டே ஆகவேண்டும் என்று உள்ளுக்குள் பரபரத்தது. நேரில் பலமுறை அவர் பாடிக் கேட்டிருந்தாலும் – கைவசம் ஒலிப்பதிவில்லை. இணையத்திலும் என் மேம்போக்கான தேடலில் அகப்படவில்லை.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து செஷகோபலன் அவர்களின் மகன் கிருஷ்ணாவுக்கு செய்தி அனுப்பினேன்.
“குடிகாரனுக்கு கைநடுங்கறா மாதிரி துடிப்பா இருக்கு. சீக்கிரம் அனுப்புங்க”, என்று கெஞ்சினேன்.
இன்று காலை அந்த அற்புதத்தை எனக்கு அனுப்பிவைத்தார்.
“சுந்தரி என் சொப்பனத்தில் வந்ததார் சொல்வாய்”
அந்த கமாஸ்!
ஐயோ!
சொல்லி மாளுமா அந்த சௌந்தர்யத்தை?
சுந்தரிக்கும் சொப்பனத்திக்கும் இடைப்பட்ட அந்த “என்”னில் குரலைக் குறுக்கி மெல்லினமாக்கி சொப்பனத்தை கொஞ்சம் கொஞ்சமாய் வளர விடும் அந்த சாமர்த்தியத்தை!
சங்கதிக்கு சங்கதி விரிந்து பரவும் அந்த சொப்பனம்….
அதுதான். அதேதான்!
நிச்சயமாய் சொல்வேன் – சேஷகோபாலன் குரலில் ஒலிக்கும் சுந்தரியில் வரும் “சொப்பனம்”தான் காதல்.