Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘மதுரை மணி’

முருகபூபதியாரின் 110 வது பிறந்த நாள் கொண்டாட்டப் பதிவுகளை நான் உண்மையில் நேற்றோடு நிறைவு செய்ய நினைத்திருந்தேன்.

வித்வான் ஜெயந்த் அளித்த கச்சேரி பதிவாலும், Vishnuramprasad Vasudevan அனுப்பி வைத்த தமிழிசைச் சங்கக் கச்சேரி பதிவாலும் அது இன்னொரு நாள் நீண்டுவிட்டது. மகிழ்ச்சியை நீட்டித்தால் என்ன குறைந்துவிடப் போகிறது?

சில நாட்களுக்கு முன் குழலிசைக் கலைஞர் Flute J.A.Jayant அவர் தாத்தா டி.எஸ்.சங்கரனின் கச்சேரி பதிவை அனுப்பி வைத்திருந்தார். கலாசேத்ராவில் நடந்த அற்புதமான கச்சேரி.

அந்தக் கச்சேரியிலிருந்து ஒரு பகுதியை என் தளத்தில் வெளியிட்டுக் கொள்ளவும் அனுமதியளித்துள்ளார்.

பதிவுக்கான சுட்டி பின்னூட்டத்தில். முழுக் கச்சேரி கேட்க விரும்பின் யுடியூப் இணைப்பில் விவரங்களில் அந்த இணைப்பையும் வழங்கியுள்ளேன்.

வித்வான் ஜெயந்திற்கு இன்னொருமுறை நன்றி!

விஷ்ணுவுடன் நான் ‘மணி ஐயரும் முருகபூபதியும்’ என்று பேசிய உரையாடலை நீங்கள் என் யுடியூப் தளத்தில் பார்த்திருக்கக் கூடும். அதில் அவர் இந்தக் காம்போதி ராகப் பதிவை அன்று ஒலிக்கவிடத் திட்டமிட்டிருந்தாராம். நான் திருச்செந்தூர் கச்சேரியில் காம்போதி என்று மடைமாற்றியதும் இதை அன்று தவிர்த்துவிட்டார். அடுத்த நாள் எனக்கு இதை அனுப்பி வைத்தார். கேட்டதும் என்னால் இதைப் பகிராமல் இருக்க முடியவில்லை.

வயலின் வித்வான் மாயவரம் கோவிந்தராஜ பிள்ளையின் நினைவு தினம் சில நாட்கள் முன் (11-ம் தேதி) கடந்து போனது. துவாரம், ராஜமாணிக்கம் பிள்ளை, பாப்பா தலைமுறைக்கும் – லால்குடி, டி.என்.கிருஷ்ணன், எம்.எஸ்.ஜி தலைமுறைக்கும் இடையில் சிக்கி அதிகம் வெளியில் தெரியாத அற்புத வாசிப்பு கோவிந்தராஜ பிள்ளையினுடையது. பழைய ஸ்ருதி இதழின் நேர்காணல் ஒன்றில் தன்னைக் கவர்ந்த வாசிப்பென்று பிள்ளையின் வாசிப்பை மேதை லால்குடி சுட்டியிருப்பதையும் இங்கு பொருத்திப் பார்க்கலாம்.

அவருடைய வாசிப்பின் நல்ல உதாரணமாகவும் இந்தப் பதிவை அணுகலாம்.

பதிவைக் கேட்டதும் முழுக் கச்சேரியும் இடக் கூடாதா என்று நீங்கள் நிச்சயம் கேட்பீர்கள். அதுவும் விரைவில் வரும்.

Vaak-ன் யுடியூப் தளத்தில் முழுக் கச்சேரியும் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கான முன்னோட்டமாய் இந்தக் காம்போதியைக் கேட்டு மகிழுங்கள்.

Read Full Post »

முருகபூபதியார் வாசித்துக் கிடைக்கும் பதிவுகளை எடுத்துப் பார்த்தால், அளவிலும், பதிவு தரத்திலும், வாசித்திருக்கும் பாங்கிலும் மிகச் சிறந்த பதிவுகள் அவர் மதுரை மணி ஐயருக்கு வாசித்டஹ்வைதான் என்று சந்தேகமின்றி சொல்லலாம்.

இந்த இரு மேதைகளின் கூட்டணியைப் பற்றி நண்பரும், மதுரை மணி சங்கீதத்தில் கரை கண்டவருமான Vishnuramprasad Vasudevan-வுடன் ஜூம் சந்திப்பில் ஒன்றரை மணி நேரம் பேசினேன். அதில் பல பாடல்களை சேர்ந்து கேட்டு அனுபவித்தோம். எங்கள் உரையாடலை மூன்று பகுதகளாக என் யுடியூப் தளத்தில் வலையேற்றியுள்ளேன். 

Read Full Post »

ஒரு சங்கீத அரட்டையில் புதிய ராகங்கள், புதிய பாடல்களைப் பற்றிப் பேச்சு வந்தது. ஒரு கட்டத்தில் அருதியிட்டது போல் கூறினார் ஒரு நண்பர், “கர்நாடக சங்கீதத்தை ரசனையின் சாரம் கேட்டதையே கேட்டு, கேட்டதைப் பற்றி பேசி, பேசியதைத் திரும்பக் கேட்டு, சுற்றிச் சுற்றி அத்ற்குள்ளேயே உழலுவதுதான். ஆயிரம் ராகம் வரலாம். தேறி நிற்பது – தோடி, காம்போஜி, பைரவி, கல்யாணி, சங்கராபரணம், கரஹரப்ரியாதான்”.

அவர் சொன்னதை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவரும், அவர் சொல்வதை மொத்தமாக ஒதுக்க முடியாது. அவர் சொன்ன கர்நாடக சங்கீத ரசனைப் பட்டியலில் நான் தி.ஜானகிராமனையும் சேர்த்துக் கொள்வேன். எத்தனையோ முறை கேட்ட கல்யாணியில் புதியதாய் ஒரு பிரயோகம் அன்றலர்ந்து பூப்பது போல – படித்த ஜானகிராமன் கதைகளிலேயே புதியதாய் ஒரு கீற்று தோன்றுவதுண்டு.

இன்று ஏனோ ஜானகிராமன் மதுரை மணி ஐயரைப் பற்றி எழுதியதைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது.

இந்தக் கட்டுரையை நான் முதன் முதலில் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டுள்ள தி.ஜானகிராமன் படைப்புகள் – இரண்டாம் தொகுதியில் படித்தேன் என்று நினைக்கிறேன். அதன்பின் இந்தக் கட்டுரை பல இடங்களில் தட்டுப்பட்டதுண்டு. சமீபத்தில் பேராசிரியர் பசுபதி, அவர் வலைப்பூவில் இந்தக் கட்டுரையை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இன்று மீண்டும் அதைப் படிக்க ஐந்திணைப் பதிப்பகம்  வெளியிட்டுள்ள தொகுப்பைத் திறந்தேன். பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. கட்டுரையில் முதல் பாதிதான் அச்சிடப்பட்டிருந்தது. இதை எப்படி இத்தனை நாள் கவனிக்காமல் இருந்தேன் என்று தெரியவில்லை.

உடனடியாக சொல்வனம் இணைய இதழில் வெளியான ’மதுர மணி’ கட்டுரையை கணினியில் திறந்தேன். எனக்கு இன்னமோர் ஆச்சர்யம் காத்திருந்தது. கட்டுரையின் முதல் வரி ‘பதினைந்து ஆண்டுகட்குமுன்’ என்று தொடங்கியது சொல்வனம் கட்டுரையில். அதைப் பார்ப்பதற்கு முன் மூடி வைத்த ஐந்திணைப் பதிப்பிலோ முதல் வரி ‘கான கலாதர ஸ்ரீ மதுரை மணி அய்யர்’ என்று கட்டுரை தொடங்கியது. இந்த வேறுபாட்டையும் நான் இன்றுதான் கவனிக்கிறேன்.

சொல்வனம் கட்டுரை கணையாழியில் வெளியான கட்டுரையின் பிரதி. 1968-ல் மணி ஐயரின் மறைவை ஒட்டி, அவர் நினைவைப் போற்றும் வகையில் வெளியாகியுள்ள கட்டுரையில் ஒரு குறிப்பும் வெளியாகியுள்ளது. அந்தக் குறிப்பின் கடைசி வரி ”அந்த மலரில் தி. ஜானகிராமன் எழுதியிருந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே வெளியிடுகிறோம்.” என்றிருக்கிறது.

இந்தக் குறிப்பும் நான் முன்பு பார்த்திருந்த ஒன்றுதான் என்றாலும் ‘சில பகுதிகளை’ என்ற தொடரை நான் இன்றுதான் கவனித்தேன். உடனே முழுக் கட்டுரையைப் பார்க்க ஆவல் எழுந்தது.

வித்வான் திருவாலங்காடு சுந்தரேச அய்யரின் மகன் நீலகண்டன் தயவால் என்னிடம் மூலக் கட்டுரை பிரசுரமான மலரே உள்ளது.  அந்த மலரைப் பார்த்த போது தெளிவு கிடைத்தது.

ஒரு கிளைக் கதை: சுந்தரேச அய்யரைப் பற்றி தி.ஜா தனிக் கட்டுரை எழுதியிருப்பதால்தான் நான் நீலகண்டனைத் தேடிப் பிடித்தேன் என்பது. அவர் அடிக்கடி பேசும் போது திருச்சி மணி மண்டபம் என்ற இடத்தைக் குறிப்பிடுவார். திருச்சியில் அப்படியொரு இடம் எங்கு உள்ளது என்று நான் தேடியதுண்டு. ஒரு நாள் அவரிடமே கேட்டேன். அவர் பலமாகச் சிரித்திவிட்டு, ‘அப்படியொரு இடமே இல்லை. ஓரியண்டல் சீனிவாசன் (மாண்டி சீனிவாசன் என்றும் குறிப்பிடுவதுண்டு) வீட்டுக்குத்தான் அப்படி ஒரு பெயர். மதுரை மணி திருச்சிக்கு வந்தால் அஙு தங்குவார். அதனால் மணி ஐயர் ரசிகர்கள் அந்த இடத்தை மணி மண்டபம் என்று குறிப்பிட்டனர். இந்தப் பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்தது என் தந்தை சுந்தரேச ஐயர்தான். காலப்போக்கில் சீனிவாசன் பெயர் ‘மணிமண்டபம் சீனிவாசன்’ என்றே ஆகிவிட்டது.’, என்றார். இந்த விஷயம் மலரிலும் பதிவாகியுள்ளது.

கணையாழியில் வெளியாகியுள்ள கட்டுரையில் மூலக் கட்டுரையில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் விடுபட்ட பகுதிகளும் செறிவானவை. சில பிழையான புரிதல்களைத் திருத்தக் கூடியவை.

உதாரணமாக, கணையாழியின் குறிப்பில் “திருச்சியில் அவரைச் சுற்றி இயங்கிவந்த இலக்கிய ரஸிகர்கள் கூட்டமொன்று அவர் தேசீய விருதுபெற்ற 1960ம் ஆண்டில் அவருக்கே உரித்தான பட்டமொன்றை அளித்துப் பெருமையடைந்தது.”, என்று உள்ளது.  ஆனால் தி.ஜா-வின் கட்டுரையிலோ அல்லது மலரிலோ மணி ஐயருக்குக் கிடைத்த ஜனாதிபதி விருதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. தி.ஜா-வின் கட்டுரை, “கான கலாதர ஸ்ரீ மதுரை மணி அய்யர் அவர்கட்கு சென்னை சங்கீத வித்வத் சபை இவ்வருஷம் சங்கீத கலாநிதி விருதை அளிக்கப் போகிறது.” என்று தொடங்குகிறது. 1959 டிசம்பரில் மணி ஐயருக்கு சங்கீத கலாநிதி பட்டம் கிடைத்தது. இந்தக் கட்டுரை அதற்கு முன் எழுதப்பட்டது என்பது தெளிவாகிறது. 1960 ஏப்ரல் மாதத்தில் மலர் வெளியாகியுள்ளது. மலருக்கான பணிபல மாதங்களுக்கு முன்னரே தொடங்கியிருக்கலாம். அதனால் தி.ஜா இதை 1959 டிசம்பருக்கு முன் எழுதியிருக்கக் கூடும். அல்லது தி.ஜா முன்னரே எழுதிய கட்டுரையை மலரிலும் பயன்படுத்தியிருக்கக்கூடும். எப்படி இருப்பினும், இது மணி ஐயர் தேசிய விருதைப் பெற்றதை ஒட்டி வெளியிடப்பட்ட மலரல்ல என்பது தெளிவாகிறது.

கணையாழி குறிப்பில் “1960 ஆண்டு விழாவைப் பூர்த்தி செய்யும் முறையில் நடந்த வைபவத்தில் மணி ஐயருக்கு ‘நாதலோல’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது. இசையுலகில் ஒரு தனிச் சிறப்பு கொண்ட கட்டம்.”. ’கட்டம்’ என்பது எழுத்துப்பிழை என்று நினைக்கிறேன். ’தனிச் சிறப்பு கொண்ட பட்டம்’ என்பதே சரியென்று தோன்றுகிறது.

கணையாழி கட்டுரையில் விடுபட்டுள்ள இன்னொரு பகுதி மிக முக்கியமான ஒன்று.

அண்மையில் நவாவரணங்கள் உள்பட பல தீட்சிதர் கிருதிகளை மணி அய்யர் தம் தனிச் சிறப்புடன் பாடி வருகிறார். நவாவரணங்களுக்கு இன்னும் சற்று விளம்ப நடையைக் கையாண்டால் நல்ல பயன் கிடைக்கும் என்பது என் சொந்தக் கருத்து. கலந்த கட்டியான சபையில் விளம்ப காலம் எடுக்குமா என்று அவரே சந்தேகப்படலாம். ஆனால் இந்த மாதிரி கிருதிகளை கச்சேரிக்கு ஒன்று இரண்டுக்கு மேல் பாடப்போவதில்லை. ஆகவே இந்த முயற்சியைச் செய்து பார்க்கலாம். இன்னும் தீட்சதர், தியாகராஜர், கோபால கிருஷ்ண பாரதியார், பட்டணம் சுப்ரமண்யர் முதலியோருடைய அபூர்வ கிருதிகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. மணி அய்யரைப் போன்ற மாமேதைகள் அவற்றை எடுத்துக்கொண்டால் வாக்கேயகாரர்களுக்கு இன்னும் அதிகப்படியான நன்றி செலுத்தியதாக இருக்கும்.

எவ்வளவுதான் பெரிய மேதை என்றாலும் கலை என்பது கலைஞனைவிட பெரியது என்று காட்டும் பகுதி இது. மணி ஐயரின் சிறப்பைக் கூறிவிட்டு, அவர் பாட்டின் மேல் உள்ள விமர்சனத்தையும், அவர் பாட்டை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்ல தி.ஜா-வின் சிபாரிசையும் தவறாமல் கூறும் பகுதி இது. மணி ஐயரின் மறைவை ஒட்டி வெளியான கட்டுரையில் விமர்சனங்கள் தேவையில்லை என்ற எண்ணதினாலோ என்னமோ இந்தப் பகுதி கணையாழி பிரசுரத்தில் நீக்கப்பட்டுள்ளது.

எது எப்படியோ தி.ஜா-வின் நூற்றாண்டில் அவர் எழுத்தில் திளைக்கவும், பூரண மதுரத்தை அனைவரும் பார்க்கும்படி வெளியிடவும் எனக்கொரு வாய்ப்பு!

மதுர மணி

கான கலாதர ஸ்ரீ மதுரை மணி அய்யர் அவர்கட்கு சென்னை சங்கீத வித்வத் சபை இவ்வருஷம் சங்கீத கலாநிதி விருதை அளிக்கப் போகிறது. ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம். சுருதி, லயம் இரண்டிலும் மங்காத தனியரசு செலுத்தும் வயதிலேயே ஒரு மேதையைக் கௌரவிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிட்டியது மகிழ்ச்சிக்குரிய முக்கியமான செய்தி.

பதினைந்து ஆண்டுகட்குமுன் திருச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இலக்கிய மேதை கு.ப.ரா.வின் குடும்ப நிதிக்காக மணி அய்யர் செய்த கச்சேரி மறக்க முடியாத வகையில் அவர் செய்திருக்கும் எத்தனையோ கச்சேரிகளில் ஒன்று. கச்சேரி முடிவில் பேசிய தேசத் தொண்டர் டாக்டர் சாமிநாத சாஸ்திரியார், “மதுரை மணி அய்யர் என்பதைவிட மதுரமணி அய்யர் என்பதே பொருந்தும்” என்று கூறினார். பதினைந்து ஆண்டுகட்குப் பிறகு மதுரமாக முதிர்ந்துள்ளது அந்த மதுர சங்கீதம்.

கர்நாடக சங்கீத பரம்பரையில் இன்று மக்களை அதிகமாகக் கவர்ந்தவர் யாராவது உண்டு என்றால் அது மதுரமணி அய்யர்தான். அவருடைய கச்சேரி நடக்கும் இடத்தில் உள்ளேயும் வெளியேயும் நிறைந்து வழியும் மக்கள் திரள் ஒன்றே இதற்குச் சான்றாகும். ‘மக்களுக்குப் பிடித்தது மெத்தப் படித்தோரைக் கவராது’ என்ற பெரிய மனித முசுமுசுப்பையும் இங்கே காண முடியாது. பெரிய கலைமேதை ஒருவன் படித்தவர்களையும் நுணுக்கம் தெரிந்தவர்களையும் மட்டும் கவர்வதில்லை. செவியுள்ள, சுவையுள்ள எல்லா உள்ளங்களையும் கவர்ந்து விடுகிறான். மதுர மணி அய்யரின் சங்கீதமானது சங்கீதத்தில் முதிர்ந்த ஞானமுள்ளவர்களிலிருந்து சாதாரண ரசிகன் வரை – அத்தனை பேர் நெஞ்சையும் அள்ளக்க்கூடிய தனிப்பெருமை படைத்தது. அதாவது, உண்மையான மேதை. கலை விஷயங்களில் உண்மை மேதையானது சாஸ்திர அறிவுக்கும் மேற்பட்ட ஒரு நிலையில் நின்று உலகம் அனைத்தையும் கவர்ந்து விடுகிறது.

கச்சேரியில் உட்கார்ந்து ஆரம்பித்ததுமே களை கட்டி, சபையின் கவனம் முழுவதையும் அந்தக்கணமே ஒருமிக்கவைத்து, சலசலப்பில்லாத, வேறு எங்கும் திரும்பாத, தனியானந்த மௌன நிலையைச் சாதிக்கிற ஒரு அனுபவத்தைக்காண வேண்டுமானால், மதுர மணி அய்யரின் கச்சேரியில்தான் காண முடியும். சூடேற வேண்டும், பிடிக்க அரை மணி ஒரு மணி ஆக வேண்டும், அதுவரையில் பொறுமை காட்ட வேண்டும் என்ற தர்மசங்கடங்கள் எல்லாம் அவர் கச்சேரியில் ஏற்படுகிறதேயில்லை.

இவ்வளவு சக்தி அவர் சங்கீதத்தில் ஓங்கி நிற்பதன் ரகசியம் என்ன? அவருடைய சுருதி உணர்வும், ஸுஸ்வர கானமும், அழுத்தமாக உள்ளே இழைந்து அமைந்து விட்ட லய உணர்வும்தான்.

இவ்வளவு சுருதி உணர்வு குரலில் எந்தக் கணமும் கைவிடாமல் கவ்விவரும் நற்பேறு கர்நாடக சங்கீதத்தில் இன்றுள்ள அநேக வித்வான்களுக்குக் கிட்டவில்லை. உரிய காலத்தில் போதிய சாதகமின்மை காரணமாக இருக்கலாம், பிறவிக் குணமாகவும் இருக்கலாம், சாதகமின்மை என்று ஒரேயடியாகவும் சொல்லிவிட முடியாது. இன்று முன்னணியில் நிற்கும் வித்வான்கள் சாதகத்தில் பின்வாங்கியதில்லை. ஆனால், வருங்கால வித்வான்களைப்பற்றி ஒருவிதக் கவலை பலருக்கு இருந்து வருகிறது. சாதகத்தை இரண்டாம் பட்சமாக வைத்து இன்று செய்யப்படும் சங்கீதப் பயிற்சியைப் பார்க்கும்போது சுருதி சுத்தமான கானத்திற்குக் காலம் உண்டோ என்றெல்லாம் கலக்குமுறத் தோன்றுகிறது.

மணி அய்யர் பிறவியிலேயே இனிமையான சாரீரம் படைத்தவர். குரல் உடையும் பருவத்தில் சிரமசாதகம் செய்து அதைக் காப்பாற்றித் தனி மெருகும் ஏற்றிவிட்டார்.

மணி அய்யரின் சங்கீதத்தில் இன்னொரு தனிப் பெருமை அதன் விச்ராந்தி. சுருதி, லயம் இரண்டிலும் உள்ள நிச்சயமான பிரக்ஞையினால், அவருடைய புகழ் பெற்ற, பிரமிக்க வைக்கிற ஸ்வரகல்பனைகளில்கூட ஒரு அமைதி விரவி நிற்கிறது. விரைவான கதிகளிலோ, சிக்கலான ஸ்வரப் பின்னல்களிலோ கூட இந்த அமைதி நிலை ஊடாடி நிற்பதால் கேட்போர் உள்ளத்திலும் ஒரு பிரமிப்புக் கலந்த அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்றி விடுகிறது அது. யுத்தகள ரகளை, அதட்டல், இரைச்சல், விவகார கெடுபிடி – இவைகூட சங்கீதத்தின் பகுதிகள் என்று சிலர் கூறலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக சங்கீதத்தின் உயிர் ஆனந்த அனுபவம். தன்னை மறந்த ஒரு நிலைக்கு ஏற்றுவதுதான் அதன் பயன். நீண்டகாலம் அதன் கார்வைகள் கேட்போரின் உள்ளத்தே ஒலிக்க வேண்டும். இந்த ஆனந்த அனுபவத்தை மணி அய்யரிடம் இந்நாடு கணக்கற்ற முறை அடைந்திருக்கிறது.

எந்த ராகத்தையும் தனக்குள்ளே ஆழ்ந்து சிந்தித்து அனுபவித்து, அதனுடைய ஜீவகளைகளையெல்லாம் சுருக்கமாகத் திரட்டி அவர் அளிப்பதால் ரசிகர்களுக்குக் குறையில்லாத ஒரு திருப்தி கிடைத்து விடுகிறது.

எல்லா மேதைகளையும் போலவே மதுர மணி அய்யரின் நடை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய ஒரு தனி நடை. இதை ஸ்வரம் பாடும்போது மட்டுமின்றி, ராக சஞ்சாரத்திலும் கீர்த்தனைகளிலும் காண முடியும். வெட்டி வெட்டி, கத்திரித்துக் கத்திரித்துப் பாடுகிறார் என்று சிலர் சொல்லலாம். அது ஒரு கலைஞனின் நடை. தனக்காக வகுத்துக் கொண்ட நடை. அது கலைஞனின் உரிமை. ஒரு குறையையே நிறைவாகவும் அழகாகவும் மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் ஒரு மேதைக்கு உண்டு. அடுக்குக் காசித் தும்பை மலரில், புள்ளிகள் கொண்ட வகை உண்டு. அந்தப் புள்ளிகள் குறைகளல்ல. மலரின் அழகைப் பெருக்குபவை. மணி அய்யரின் கத்திரிப்பு நடைகூட ஒரு தனி அழகாகவே காலப்போக்கில் அமைந்து விட்டது.

மணி அய்யரின் தோடி, காம்போதி, சங்கராபரணம், மோகனம், ரஞ்சனி, ஆபோகி முதலியவற்றை யாரும் மறக்க முடியாது. அதேபோல காபிநாராயணி, சித்தரஞ்சனி, கன்னட கௌள முதலிய அபூர்வ ரகங்களில் உள்ள மிகச் சின்ன கீர்த்தனைகளைப் பெரும் காவியங்களாக அவர் பாடிக்காட்டும் தனித்திறமையும் பலர் உணர்ந்திருக்கிறார்கள். பாரதி பாட்டுகளை அவர் பாடும்போது அந்த மந்திரச் சொற்களுக்கு ஒரு புது வேகத்தையும் அர்த்தத்தையும் ஊட்டியிருக்கிறார். சங்கீதப் பெரிய மனிதர்கள் இதெல்லாம் துக்கடா நேரத்துக்காக ஆனவை என்று கீழ்நோக்குடன் புன்னகைக்கலாம். ஸாஹித்யம் பிரதானமில்லை என்ற விதண்டாவாத நிலையினால் பிறந்த துர்ப்பாக்கியம் இது. இதற்காக நாம் மண்டையை உடைத்துக்கொள்ளத் தேவையில்லை. விவேகம் சொல்லி வராது.

அண்மையில் நவாவரணங்கள் உள்பட பல தீட்சிதர் கிருதிகளை மணி அய்யர் தம் தனிச் சிறப்புடன் பாடி வருகிறார். நவாவரணங்களுக்கு இன்னும் சற்று விளம்ப நடையைக் கையாண்டால் நல்ல பயன் கிடைக்கும் என்பது என் சொந்தக் கருத்து. கலந்த கட்டியான சபையில் விளம்ப காலம் எடுக்குமா என்று அவரே சந்தேகப்படலாம். ஆனால் இந்த மாதிரி கிருதிகளை கச்சேரிக்கு ஒன்று இரண்டுக்கு மேல் பாடப்போவதில்லை. ஆகவே இந்த முயற்சியைச் செய்து பார்க்கலாம். இன்னும் தீட்சதர், தியாகராஜர், கோபால கிருஷ்ண பாரதியார், பட்டணம் சுப்ரமண்யர் முதலியோருடைய அபூர்வ கிருதிகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. மணி அய்யரைப் போன்ற மாமேதைகள் அவற்றை எடுத்துக்கொண்டால் வாக்கேயகாரர்களுக்கு இன்னும் அதிகப்படியான நன்றி செலுத்தியதாக இருக்கும்.

மதுரமணி அய்யரின் சங்கீதம் உன்னதமானது என்று இன்னொரு வகையிலும் சொல்ல வேண்டும். அது தெய்வத்தின் முன் நிற்கும் ஒரு பரிசுத்த நிலையை, ஒரு ஆனந்த மோன நிலையைப் பல சமயங்களில் உண்டாக்கியிருக்கிறது. இத்தகைய கலைஞர் பல்லாண்டு வாழவேண்டும். இதே விச்சராந்தி, சுருதிலயப் பிரக்ஞையைச் செயலில் காட்டும் திடகாத்திரத்தை இறைவன் அவருக்கு அருள வேண்டும்.

மதுரை மணி அய்யரை உரிய காலத்தில் பாராட்டி ஒரு முக்யமான கடமையைச் செய்ய முன்வந்த வித்வத் சபையும் நம் வாழ்த்துக்குரியதாகிறது.

Read Full Post »

ஜானகிராமனின் நூற்றாண்டில் – பல வருடங்களாய் செய்ய நினைத்த ஒரு விஷயத்தைச் செய்து முடித்தேன்.
என் சேகரிப்பில் – ஒரு வானொலி ஒலிபரப்பின் பதிவு உள்ளது. மதுரை மணி ஐயரின் மறைவுக்குப் பின் ஒலிபரப்பான நேஷனல் ப்ரோகிராமின் பதிவு அது. மதுரை மணி ஐயரின் கச்சேரிகளில் இருந்து பல பகுதிகள் ஒலிபரப்பாகியுள்ளன.
அத்தகைய பதிவுகள் பல நமக்குக் கிடைக்கக் கூடும். இந்தப் பதிவில் ஒரு விசேஷம் உண்டு.
இந்த நிகழ்ச்சியை தி.ஜானகிராமன் தொகுத்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் ஆங்கிலத்தில் தன் மென்மையான குரலில் மணி ஐயரை நினைவுகூர்ந்து பேசியுள்ளார்.
ஜானகிராமன், மணி ஐயர் இருவரும் எனக்கு ஆதர்சம். இந்தப் பதிவை பத்து வருடங்களுக்கு முன்னால் திருவனந்தபுரம் ஆறுமுகம் பிள்ளையிடம் இருந்து பெற்ற போது ஏற்பட்ட சிலிர்ப்பை தி.ஜா-வால்தான் எழுதமுடியும்.
யாம் பெற்ற இன்பம் – இவ்வையகமும் பெருக!
மதுரை மணி ஐயர் நெஷனல் புரோகிராம் – தி.ஜானகிராமனின் குரலுடன்.
இரண்டாம் பகுதி: https://www.youtube.com/watch?v=LjSl96Hbik4&feature=youtu.be
மூன்றாம் பகுதி: https://www.youtube.com/watch?v=5PWfjES08qI&feature=youtu.be

Read Full Post »