Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘parlandu’

இந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது

மிருதங்க வினைஞர் பர்லாந்தைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். அவர் பெயரில் விருது ஒன்று 2013-ல் தொடங்கப்பட்டது. அதனை முதலில் பெற்றவர் பர்லாந்தின் மகன் செல்வம். இவரும் தன் தந்தையாரைப் போலவே மிருதங்கம் தயார் செய்வதில் தேர்ச்சியும் தனித்தன்மையும் பெற்றிருந்தார்.

தன் இளமைக்காலங்களை ஒருமுறை நினைவுகூர்ந்த செல்வம்,

“என் தந்தையார் மிருதங்க வேலையில் பேர் பெற்றவர் என்றாலும் நான் அவரிடம் தொழில் கற்கவில்லை. பள்ளிக்குச் சென்று ஈ.எஸ்.எல்.சி வரை படித்தேன். 1950-களின் கடைசியில் அப்பாவுக்கு சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது. வேலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அதனால் படிப்பைத் தொடராமல் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். மாஜிஸ்டிரேட் அலுவலகத்தில் “பங்கா” (மின்விசிறிக்கு முந்தைய காலத்தில் இருந்த கையால் இழுத்து இயக்கப்பட்ட விசிறி) இழுக்கும் வேலை கிடைத்தது.

எங்கள் குடும்பத்துக்கு மணி ஐயரும், அவர் குருநாதரும் நிறைய ஆதரவு அளித்துள்ளனர். என் தாத்தா செபாஸ்டியனுக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது வைத்தியநாத ஐயர்தான். குடிசைவீட்டை கட்டிடமாக்க மணி ஐயர் உதவியுள்ளார். அப்படி அவர்கள் ஆதரவு இருந்தும் நான் ஏன் இந்த வேலையில் இருக்கவேண்டும் என்று பலர் கேட்ட போதும் எனக்கு அவர்களிடம் செல்லத் தோன்றவில்லை. ஒருநாள் மணி ஐயரே அழைத்தார்.

“உன் அப்பாவுக்கு முடியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. உன்னால் செய்ய முடியுமா?”, என்று கேட்டார்.

நான் சற்றும் தயங்காமல், “செய்ய முடியும்”, என்றேன்.

”இதுவரை என்ன வேலை செய்திருக்கிறாய்?”

“அப்பாவும் சித்தப்பாவும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். நான் வேலை செய்ததில்லை”, என்றேன்.

அப்போது அப்பாவும் மணி ஐயர் வீட்டுக்குள் நுழைந்தார்.

”என்ன பர்லாந்து! உன் பையன் வேலை செஞ்சது இல்லை. பார்த்ததை வெச்சே செய்வேன்கறானே!”, என்று கேட்டார்.

அதற்கு என் அப்பா, “அவன் செய்வேன்னு சொன்னா நிச்சயம் செய்வான்.”, என்று அடித்துக் கூறினார்.

மகிழ்ந்த மாஸ்டரும், “மாடிக்குப் போ! உனக்குத் தெரிஞ்ச வேலையை செய்!”, என்றார்.

அன்று வேளாங்கன்னி மாதாவிடம், “என்னை மாஸ்டருக்கு கெட்ட பெயர் வரவழைக்காத படியும், என் தந்தையைவிட அதிக பேர் வாங்காதபடியும் வைக்க வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டு வேலையில் இறங்கினேன்.

அந்த அறைக்குள் 60 மிருதங்கங்கள் இருப்பது கண்டு மிரண்டு போனேன். பெரும்பாலான மிருதங்கங்களில் ஒரு துண்டு பேப்பர் சொருகியிருந்தது. அதில் இருந்த குறிப்புகள்தான் என் குரு. அவற்றில் எந்த மிருதங்கத்தில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று மாஸ்டர் எழுதியிருந்ததை வைத்து என் வேலையைத் தொடங்கினேன்.

என் அப்பா மாஸ்டரைப் பார்த்தாலே எழுந்துவிடுவார். என்னிடம் மாஸ்டர் இன்னும் நெருக்கமாக பழகினார் என்றே தோன்றுகிறது. நான் அவர் அருகில் தைரியமாக அமர்ந்து பேசுவேன். என்னிடம் என் அப்பாவின் வேலையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.

“காசுக்காக என்றைக்கும் உன் அப்பா வேலை செய்ததில்லை. கச்சேரிக்கு நிறைய ஊர் ஊராகப் போகும் போது வீட்டுக்கு வரக் கூட நேரமிருக்காது. அந்த மாதிரி சமயங்களில் இடையில் எதோ ஒரு ஊரின் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட வேலை செய்திருக்கிறார். நேரமில்லாவிட்டால் அடுத்த ஸ்டேஷன் வரை டிக்கெட் வாங்கி ஓடும் வண்டியில் கூட வேலை செய்திருக்கிறார். அந்த ஸ்ரத்தை உனக்கு வர வேண்டும்”, என்று அவர் சொன்னதுதான் எனக்கு வேத வாக்கு.

அந்த அறையிலேதான் இருப்பேன். தூக்கம் வந்தால் மிருதங்கங்களுக்கிடையிலேயே தூங்குவேன். சாப்பாடு மாஸ்டர் வீட்டிலிருந்தே வந்துவிடும். என் அப்பாவைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.  ஒரு வாத்யத்தை தொட்டதும் அதில் என்ன வேலைகள் செய்ய வேண்டும், எந்த ஸ்ருதிக்கு சரியாக இருக்கும், எப்படி வார் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளணர்வில் தெரிய வேண்டும். அந்த உள்ளுணர்வு கிட்டிவிட்டால் வேலை சிறப்பாக இருக்கும். மாஸ்டரின் குறிப்புகள் என் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தன.

நாளடைவில் எனக்கு சரியாகப்பட்டதையே செய்ய ஆரம்பித்தேன். இது மாஸ்டருக்குத் தெரியும். ஒருமுறை, என் அப்பாவிடம் பேசும் போது, “இப்போது பாரு, நான் இந்த மிருதங்கத்தில் சில வேலைகள் சொல்கிறேன். செல்வம் பேசாமல் கேட்டுவிட்டு தனக்கு சரியென்று தோன்றும் வகையில் செய்து முடிப்பான்”, என்று கூறி என்னை அழைத்து அந்த வேலையைக் கொடுத்தார்.  நானும் அவர் எதிர்பார்த்தபடியே என் பாணியில் வாத்தியத்தை தயார் செய்து கொடுத்தேன். இருவரும் அதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியுற்றது ஒருவகையில் என் வேலைக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.

பெங்களூரில் ஆலத்தூர் பிரதர்ஸ் கச்சேரிக்கு மாஸ்டர் வாசிக்க இருந்தார். ஏதோ காரணத்தினால் அவர்கள் வரமுடியாததால் மாலியின் கச்சேரி மாற்றாக ஏற்பாடாகியது. ஆலத்தூரின் ஸ்ருதி ஒரு கட்டை. மாலியின் ஸ்ருதியோ ஐந்து கட்டை. அரை நாளில் வாத்தியங்களை மாற்றி தயார் செய்தேன். கச்சேரி முடிந்ததும் மாஸ்டர் என்னை அழைத்து மாலி என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். மாலியைச் சென்று பார்த்த போது என்னை மிகவும் பாராட்டி, மிருதங்கத்தின் நாதம் தன்னை வாசிக்கத் தூண்டியதாகக் கூறினார்.

செல்வத்தை குடும்பத்தில் ஒருவராக பார்த்த மணி ஐயரின் மகன் ராஜாராம்,

“என் அண்ணாவின் காம்பஸ் போன்ற உபகரணங்களை மிருதங்க வேலையில் உபயோகிப்பதில் அப்பா, செல்வம் இருவருக்கும் பெரிய ஆவல் உண்டு. ஒருமுறை வெட்டுத்தட்டு எடுக்க காம்பஸில் வட்டம் போட செல்வம் அண்ணாவை அணுகிய போது அண்ணா ஏதோ வேலையாய் இருந்தார். இரண்டு மூன்று அழைத்தும் அண்ணா செவி சாய்க்காதலால் செல்வம் கோபத்தில் வெறும் கையால் எடுத்த வெட்டுத்தட்டு கச்சிதமாய் காம்பஸில் போட்ட வட்டம் போல் வந்ததைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம்.”

வேலையில் அசகாயசூரந்தான் என்றாலும், செல்வத்திடம் குறும்பும் உண்டு.

ஒருமுறை அப்பா தன் விருப்பத்திற்கு ஏற்றார் போன்ற நாதம் மிருதங்கத்தில் வரவில்லை என்று மீண்டும் மீண்டும் மாற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். செல்வமும் செய்து செய்து அலுத்துப் போய், “நாளைக்கு செஞ்சுத் தரேன் பாருங்க, உங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும்”, என்று கிளம்பிவிட்டார். அடுத்த நாள் கொண்டு வந்த வாத்யம் அப்பா எதிர்பார்த்த ஒலியை ஏற்படுத்தியது ஆனால் அதை வாசித்ததுமே, “என்னமோ சரியில்லையே, எதோ பெரிய சில்மிஷம் பண்ணி இருக்க!, என்ன பண்ணினாய்?”, என்று கேட்டார்.

செல்வமும் சிரித்துக் கொண்டே, பன்றியின் தோலை உபயோகித்ததாகவும், நீங்கள் கேட்ட ஒலி அதில்தான் வரும் என்றும் கூறிச் சிரித்தார். பர்லாந்திடம் இல்லாத இது போன்ற தைரியம் செல்வத்திடம் நிறைய உண்டு.

மணி ஐயர் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த போது செல்வமும் சென்னைக்கு வந்து தொழிலைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக 1995-ல் நடந்த சாலைவிபத்தில் செல்வம் தன் வலது கரத்தை இழந்தார்.

2017 ஃபெப்ரவரியில் செல்வம் மறைந்தார். அவர் மகன்கள் இன்றும் மிருதங்க வினைஞர்களாகத் தொழில்புரிந்து வருகின்றனர்.

Read Full Post »

சென்ற வாரம் தொடங்கி இன்மதியில் ஒரு தொடர் எழுதுகிறேன்.

இந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது

இசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்களையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட அரிய மிருதங்க வினைஞர்தான் பர்லாந்து.

கடந்த சில நூற்றாண்டு கால வரலாற்றை பார்க்கும் போது, மிருதங்க வித்வானாய் நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் தஞ்சாவூர் நாராயணசாமியப்பா. மிருதங்க வினைஞர்களை பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் செவுத்தியான் என்றறியப்பட்ட செபஸ்டியன். செபஸ்டியன் நாராயணசாமியப்பாவுக்கு வேலை செய்தாரா என்று தெரியவில்லை. அவர் சமகாலத்தில் இருந்த மான்பூண்டியாபிள்ளை, அதற்கு அடுத்த தலைமுறையினரான தட்சிணாமூர்த்தி பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் போன்றோருக்கு வேலை செய்தவர் என்று தெரிய வருகிறது.

செபஸ்டியனின் மகன்கள் செங்கோல், பர்லாந்து, செட்டி ஆகிய மூவரும் தஞ்சாவூரில் இருந்தபடி வாத்தியங்களுக்கு வேலை செய்து வந்தனர். தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டிலேயே பெரும்பாலும் இந்த வேலைகள் நடை பெறும்.

சாதி/மத பாகுபாடுகள் மலிந்திருந்த காலகட்டத்திலும்,  இந்த சகோதரர்களின் கைவண்ணம் சமூக அடுக்குகளை தளர்த்தியது.  தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டில் தலித் கிருஸ்துவ பின்னணியில் இருந்து வந்த இவர்கள் நினைத்த வண்ணம் புழங்க முடிந்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும் தான் காரணம்”, என்று ஒருமுறை உருக்கமாய் கூறியது அன்று அந்த அரங்கில் இருந்தவர்களை சற்றே அசைத்தது.

miruthangam

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு வெகு நாட்களாய் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதங்கத்தை ஒரே நாளில் சரிபடுத்திக் கொடுத்த இளவயது பர்லாந்தின் கைகளில் தெய்வீகத்தன்மை நிறைந்திருப்பதாக தட்சிணாமூர்த்தி பிள்ளை கூறியுள்ளார் என்று ஒரு நேர்காணலில் சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன் கூறியுள்ளார்.

இந்தச் சகோதரர்களுள் பர்லாந்து என்கிற ஃபெர்னாண்டிஸுக்குத் தனி இடமுண்டு.

தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் இசை பயின்ற போதும், மணி ஐயரின் வீடு பாலக்காட்டில் தான் இருந்தது. மணி ஐயருக்கு கச்சேரிகளில் வாசிப்பதை விட, மிருதங்கம் என்கிற வாத்தியத்தை மேம்படுத்துவதில் ஈடுபாடு அதிகம். அவர் அந்த வாத்தியத்தில் செய்த பரிசோதனை முயற்சிகள் ஏராளம். இதனால் இயற்கையாகவே அவருக்கும் பர்லாந்துக்கும் ஒரு நெருங்கிய உறவு ஏற்பட்டது. நாளடைவில் தான் பாலக்காட்டிலும், மிருதங்க வேலை தஞ்சாவூரிலும் நடைபெறுவதை பொறுக்க முடியாமல் தன் இருப்பிடத்தையே தஞ்சைக்கு மாற்றிக் கொண்டார் அந்த மேதை.

தன் வீட்டிலேயே இடம் ஒதுக்கி எந்த நேரமும் மிருதங்க வேலை நடக்கும்படி பார்த்துக் கொண்டார். பல ஊர்களுக்கு கச்சேரி சென்றுவிட்டு வரும் போது சற்று ஓய்வெடுக்க மதியம் ஓய்வெடுக்கும் போதும், பர்லாந்து வேலை செய்து முடித்த பின் அந்த வாத்தியத்தை சரிபார்க்க சில நாத திவலைகளை எழுப்பினால் களைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு புத்துணர்ச்சியுடன் கிளம்பிவிடுவார் மணி ஐயர். எப்படித் தோல் பார்ப்பது, எந்த அளவில் வலந்தலை வைத்துக் கொள்வது, சாதம் எப்படி போடுவது, எப்படி மூட்டடிப்பது என்றெல்லாம் பர்லாந்துடன் கலந்து பேசி எண்ணற்ற மிருதங்க பரிசோதனைகளை மணி ஐயர் மேற்கொண்டுள்ளார்.

மணி ஐயரின் சமகால மேதையான பழனி சுப்ரமண்ய பிள்ளைக்கும் பர்லாந்துதான் மிருதங்க வேலை செய்து வந்தார். இந்த மூவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராம் கூறுகையில்:

ஒரு முறை, சில நாட்களுக்கு பர்லாந்து எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.

அவர் திரும்ப வந்த போது, பழனி ஐயாவுக்கு வேலை பார்க்கப் போயிருந்ததாகக் கூறினார்.  உடனே அப்பாவும் பழனியின் வாத்யத்தைப் பற்றி ஆர்வமாகக் விசாரித்த பின், “பழனியின் தொப்பி இவ்வளவு சுகமா இருக்கே. அது மாதிரி எனக்கு வேலை செஞ்சு தர மாட்டேங்கறியே”, என்றார்.

“அதுக்கென்ன ஐயா! அடுத்த மிருதங்கத்துல செஞ்சுட்டா போச்சு.”, என்றார் பர்லாந்து.

சில நாட்களுக்கெல்லாம், சொன்னது போலவே பழனி தொப்பி போல செய்திருப்பதாகச் சொல்லி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து எடுத்து வந்தார்.

அப்பா வாசித்துப் பார்த்து விட்டு, “இல்லைடா! பழனி தொப்பி மாதிரி இது இல்லையே.”, என்றார்.

“பழனி ஐயாவுக்கு செய்யறா மாதிரித்தான் செஞ்சேன். ஆனால், உங்களுக்காக கொஞ்சம் மாத்தினேன். அடுத்த தடவை அப்படியே செஞ்சு கொண்டு வரேன்.”

சொன்னாரே தவிர அதன் பின் அப்படி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து கொண்டு வரவே இல்லை. அப்பா பர்லாந்தைப் பார்க்கும் போதெல்லாம் பழனி தொப்பியைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்.

சில மாதங்களில் பொறுமை இழந்தவராய், “நீ எப்போ பண்ணி தரப் போறாய்? இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே!”, என்றார்.

அப்போது அப்பா பாம்பே கச்சேரிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.

“புதுத் தோல் வந்திருக்குங்க. நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. வரும் போது பழனி தொப்பியோட மிருதங்கம் தயாரா இருக்கும்.”, என்றார் பர்லாந்து.

அப்பா பாம்பே டூர் போய்விட்டு திரும்பியதும் வீட்டுக்குள் நுழையவில்லை. தோட்டம் தாண்டியதும், வீட்டுக்கு வலப்புறத்தில் ஒரு கொட்டகை உண்டு. அங்கு 20-25 மிருதங்கங்கள் இருக்கும். வேலையெல்லாம் அங்குதான் நடக்கும். பர்லாந்து அங்கு இருந்ததைப் பார்த்ததும், அப்பா நேராக கொட்டகைக்குள் சென்றுவிட்டார். பெஞ்சின் மேல் ஒரு மிருதங்கத்தை தயாராக வைத்திருந்தார் பர்லாந்து.

“இது பழனி தொப்பி மாதிரி பண்ணி இருக்கியா?”

“நீங்க வாசிச்சு பாருங்க ஐயா! அப்படியே பண்ணி இருக்கேன்”

அப்பா எடுத்து வாசித்துப் பார்த்தார். அவருக்குத் திருப்தியில்லை.

“ஏய்! இதுல அந்த சுகம் கிடைக்கலையேடா!”, என்றார்.

பர்லாந்து மெதுவாக சிரித்த படி, “அது அவர் கை வாகுங்க”, என்றான்.

“அப்ப எனக்கு வராதா!”, என்று குழந்தையைப் போல அப்பா கேட்டார்.

இந்த சம்பவம், மிருதங்க கலையில் உச்சத்தில் இருந்த மணி ஐயர் தன் சக கலைஞரிடமும் தனக்கு வேலை செய்த வினைஞரிடமும் வைத்திருந்த பெருமதிப்பை அழகாகப் படம்பிடிக்கிறது.

பலமுறை கச்சேரிக்குப் பின் தனக்கு அளிக்கப்பட்ட சால்வை போன்ற மரியாதைகளை பர்லாந்துவுக்கு அளித்து மகிழ்ந்துள்ளார் மணி ஐயர்.

“சொர்க்கம் என்றால் அது நல்ல சந்தன மரத்தில் சோமு ஆசாரி கடைந்து, பர்லாந்து வாத்தியத்தை மூட்டடித்து தயார் செய்து, அதில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு வாசிக்க நேர்வதுதான்”, என்றும் மணி ஐயர் கூறியுள்ளார்.

பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தைப் பற்றி கூறும் பல கலைஞர்கள், “அவரிடம் எந்தப் பாடகருக்கு கச்சேரி என்று சொல்லிவிட்டால் போதும். எந்த ஸ்ருதி என்று கூடச் சொல்ல வேண்டாம். மிருதங்கம் தேவையான ஸ்ருதியில் தயாராக இருக்கும். இத்தனைக்கும் அவரிடம் தம்புராவோ ஸ்ருதி பெட்டியோ இருந்ததில்லை. அத்தனை ஸ்ருதியும் அவர் மனத்தில் அத்துப்படியாய் இருந்தது”, என்கின்றனர்.

”ஒருமுறை முசிறி சுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்க வந்தபோது, என்னை செண்ட்ரல் காலேஜில் அன்று சாயங்காலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வாசிக்கச் சொன்னார். நான் முசிறிக்கு வாசிக்க எடுத்து வந்த இரண்டு வாத்யங்களை சில மணி நேரங்களில் பர்லாந்துவும் செட்டியும் எம்.எஸ்-க்கு வாசிக்கத் தோதாய் தயார்படுத்திவிட்டனர்.”, என்கிறார் டி.கே.மூர்த்தி.

பொதுவாக புது மிருதங்கத்தை நேரடியாக கச்சேரிகளில் வாசிக்க முடியாது. அதில் சிஷ்யர்கள் வாசித்து பழகுவர். முதல் சாதம், இரண்டாம் சாதம் உதிர்ந்து மூன்றாம் சாதம் போட்டவுடனேயே கச்சேரி மிருதங்கமாக அந்த வாத்யம் தகுதியுறும். பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தால் புது மிருதங்கமே பக்குவமான மிருதங்கம் போல இருக்கும். அப்படிப்பட்ட புது மிருதங்கத்தை வைத்துக் கொண்டு பாலமுரளி கிருஷ்ணாவுக்கு நேஷனல் புரோகிராம் வாசித்ததாகவும், அந்த வாசிப்பைக் கேட்டவர்கள் வாத்தியத்தின் நாதத்தை வெகுவும் புகழ்ந்ததையும் திருச்சி சங்கரன் நினைவுகூர்ந்துள்ளார்.

இன்றும் பர்லாந்தின் சந்ததியினர் சென்னையில் இருந்தபடி அனைத்து முன்னணி வித்வான்களுக்கும் மிருதங்கம் தயார் செய்து கொடுக்கின்றனர். 2013-ல் பர்லாந்தின் பெயரில் விருது ஒன்று நிறுவப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு சங்கீத வாத்யம் தயாரிக்கும் வினைஞருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. முதல் பர்லாந்து விருதை அவரது மகன் செல்வம் பெற்றார்.

Read Full Post »

என் பழனி சுப்ரமண்ய பிள்ளை நூலைப் படித்திருப்பவர்களுக்கு பர்லாந்தின் அறிமுகம் தேவைப்படாது. ஒற்றை வரியில் சொன்னால் மணி ஐயருக்கும், பழனி சுப்ரமணிய பிள்ளைக்கும் மிருதங்கம் செய்துகொடுத்த மேதாவி. அவர் பெயரில் ஒரு விருதைத் தொடங்கி சென்ற வருடம் அவர் மகன் செல்வம் அவர்களுக்கு வழங்கினோம். அந்தச் சமயத்தில் பர்லாந்தைப் பற்றிய ஆவணப் படம் ஒன்ரையும் எடுக்கத் தொடங்கினோம். அதிலிருந்து ஒரு துளி இங்கே உங்களுக்காக.

முழுமையான ஆவணப்படத்தின் வெளியீட்டைப் பற்றியும், இந்த வருடத்துக்கான பர்லாந்து விருதினைப் பற்றிய விவரங்கலையும் விரைவில் தெரியப் படுத்துகிறேன்.

Read Full Post »