Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Documentary’ Category

மூன்றாம் திருநாளில் வாசிக்கப்படும் ராகம் சக்ரவாகம்,

இந்தக் காணொளியில் சுருக்கமாய் வாசிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய ஆலாபனையைக் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து அதே ராகத்தில் பல்லவி இடம் பெரும்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

இரண்டாம் திருநாளுக்கு உரிய ராகம் ரீதிகௌளை.

இன்றைய முதல் காணொளியில் ரீதிகௌளை ராக ஆலபனையைக் காணலாம்.

ஆலாபனையைத் தொடர்ந்து பல்லவி வாசிக்கப்படும்.

 

 

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

என் பழனி சுப்ரமண்ய பிள்ளை நூலைப் படித்திருப்பவர்களுக்கு பர்லாந்தின் அறிமுகம் தேவைப்படாது. ஒற்றை வரியில் சொன்னால் மணி ஐயருக்கும், பழனி சுப்ரமணிய பிள்ளைக்கும் மிருதங்கம் செய்துகொடுத்த மேதாவி. அவர் பெயரில் ஒரு விருதைத் தொடங்கி சென்ற வருடம் அவர் மகன் செல்வம் அவர்களுக்கு வழங்கினோம். அந்தச் சமயத்தில் பர்லாந்தைப் பற்றிய ஆவணப் படம் ஒன்ரையும் எடுக்கத் தொடங்கினோம். அதிலிருந்து ஒரு துளி இங்கே உங்களுக்காக.

முழுமையான ஆவணப்படத்தின் வெளியீட்டைப் பற்றியும், இந்த வருடத்துக்கான பர்லாந்து விருதினைப் பற்றிய விவரங்கலையும் விரைவில் தெரியப் படுத்துகிறேன்.

Read Full Post »

சாயங்காலம் 4.00.

எஸ்.எம்.எஸ் இ.பா-விடமிருந்து. எஸ்.ராஜம் பற்றிய ஆவணபப்டத்தின் டிவிடி வந்து சேர்ந்தது என்றது அந்த எஸ்.எம்.எஸ்.

6.30 மணிக்கு மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ். ஆபீஸை விட்டு கிளம்பும் வேளையில் அலுத்துக் கொண்டே பார்த்தேன். மீண்டும் இ.பா. படத்தை பார்த்த கையோடு அனுப்பி இருந்தார். 2 மணி 8 நிமிட படத்தை கையோடு அவர் பார்ப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. Thank you sir for taking the same.

Brilliant integration of painting and music! Dynamic harmony! Rajam was a sheer genius! Especially when singing those apoorva ragas and integrating them with aesthetically chosen colors to represent them in Art. Poetry in motion! It is a feather in your and Khanthan’s cap.

கொஞ்சம் கிறுகிறுத்டதபடி வானில் வட்டமடித்து தரை இறங்கினேன்.
Made my day!

Read Full Post »

கடந்த ஞாயிறன்று (11-11-12) நெடு நாள் கனவு நனவானது. வித்வான் எஸ்.ராஜம் பற்றிய ஆவணப்படம் வெளியானது.

அப்போதிலிருந்து மிதந்து கொண்டுதானிருக்கிறேன். அதிகம் எழுதக் கை வரவில்லை. இப்போதைக்கு சில படங்கள் மட்டும்.

 

படத்தின் ட்ரெயிலரை முன்பே இங்கு கொடுக்காததால், இப்போது அளிக்கிறேன். இங்கு காணலாம்: http://www.youtube.com/watch?v=M0dczot3ZTw&list=UUwxEa9lxuNaOPvrnM9cDKQA&index=1&feature=plcp

டிவிடியை இங்கு வாங்கலாம்: http://www.kalakendra.com/shopping/rajam-p-3174.html

 

 

Read Full Post »

ஜனவரி நாலாம் தேதியும், ஐந்தாம் தேதியும், ஜி.என்.பி-யின் நூற்றாண்டு விழா இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில், நடை பெறவுள்ளது. முதல் நாளில் ஜி.என்.பி-யைப் பற்றிய ஆவணப் படம் வெளியாகிறது. மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதிய  ‘இசையுலக இளவரசர் ஜி.என்.பி’ என்ற புத்தகம், இந்தப் படத்துக்கான script-ஆக அமைந்துள்ளது. எந்தெந்தப் பகுதியை யாரை வைத்துப் பேச வைக்கலாம், எந்தெந்த விஷயங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும், பல நூறு மணி நேர ஒலிப்பதிவுகளிலிருந்து, எந்தெந்த ஒலிப்பதிவுகளை, எவ்வளவு கால அளவுக்குச் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் மண்டையை உடைத்துக் கொண்டோம். இவை தவிர, ஜி.என்.பி-யின் biographer என்ற வகையில் நானும் இந்தப் படத்தில் பேசியுள்ளேன்.

சாதாரணமாய் பல மணி நேரம் ஜி.என்.பி-யைப் பற்றி வாய் ஓயாமல் பேசக் கூடியவன், என்ற போதும், கேமிரா முன் பேசுவது அத்தனை சுலபமாக இல்லை. நின்று கொண்டு பேசினால், “சார், இது ஃபோட்டோ இல்லை. சாதாரணமாய் இருங்க, இவ்வளவு விரைப்பு வேண்டாம்”, என்றனர். சரி இப்படிச் சொல்லிவிட்டார்களே, கொஞ்சம் நடந்தவாறு பேசினால், “சார்! ஃப்ரேமை விட்டு, ரொம்ப போறீங்க. கேமிராவைப் பார்த்து பேசுங்க. முகத்துல வேர்வை ரொம்ப இருக்கு (அசடு வழுவதைத்தான் சூசகமாகச் சொன்னார் போலும்)!”, என்றெல்லாம் சத்தாய்ப்புக்கு மத்தியில் பேச்சு எப்படி வரும். இரண்டு ஷாட்டுக்கு நடுவில் எதையேனும் சொன்னால், “சார்! இதை அப்டியே கேமிரா முன்னாடி சொல்லுங்க”, என்றார் இயக்குனர். அதை கேமிரா முன் சொல்லும் போது, முன்பு வந்த கோவையான மொழி மறுபடியும் வரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணியது. 15 நிமிடப் பேச்சுக்கு, ஒன்றரை மணி நேரம் ஷூட்டிங். இயக்குனர் காந்தன்தான் பாவம். நாம் எவ்வளவு உளறினாலும், “ரொம்ப நல்லா பேசினீங்க”, என்றார்.

சென்ற வாரம், ப்ரிவ்யூ பார்த்து, சிற்சில இடங்களை மாற்றியமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினேன். படம் எப்படி வந்திருக்கிறது என்று நான் சொல்லப் போவதில்லை. நாலாம் தேதி மாலை, வந்து பார்த்துவிட்டு, நீங்கள் சொல்லுங்களேன்!

ஜி.என்.பி நூற்றாண்டு மலர் வேலை, நான் எதிர்பாராமல் வந்த ஒன்று. யார் யாரோ செய்யப் போகிறார்கள் என்ற செய்தி, கடந்த ஒரு வருடமாகவே என் காதுகளில் விழுந்து கொண்டிருந்தன. ஆகஸ்ட் மாதம், ஜி.என்.பி-யின் பேரன் மகேஷ் தொலை பேசினார்.

“வழக்கமாய் வரும் souvenir-களில் விளம்பரங்களுக்கு இடையில், சில கட்டுரைகள் இருக்கும். அந்தக் கட்டுரைகளும், “ஜி.என்.பி பெல்லாரியில் உப்புமா சாப்பிட்டார்”, “மல் வேஷ்டியை மன்னார்குடியில் வாங்குவார்”, போன்ற செய்திகளும், சிரிப்பே வராத ஜோக்குகளும் நிறைந்திருக்கும். அப்படி இல்லாமல், ஜி.என்.பி என்ற கலைஞரின் கலையைப் பற்றி முழுமையான அலசல் இந்த நூலில் இடம் பெற வேண்டும். இரண்டாவதாக, ஜி.என்.பி-யும் அவரது தந்தையாரும் எழுதிய சங்கீதம் தொடர்பான அத்தனை கட்டுரைகளும் தொகுக்கப் பட வேண்டும். மூன்றாவதாக வேண்டுமானால், ஜி.என்.பி என்ற மனிதரைப் பற்றி, அவருடன் பழகிய குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் ஆகியோரின் எண்ணங்கள் இடம் பெறட்டும்.”, என்றேன்.

மகேஷும் இதே எண்ணத்தில் இருந்ததால், என்னிடம் மலர் தொகுக்கும் பொறுப்பை அளித்தார். கட்டுரைகளின் தலைப்புகளை முதலில் முடிவு செய்து கொண்டு, ஒவ்வொரு தலைப்புக்கும் உரியவரைத் தொடர்பு கொண்டு கட்டுரை கேட்டோம். SAK Durga, N.Ramanathan, S.Rajam, MA Bhagerathi, TM Krishna, TR Subramaniam என்று ஒரு பெரிய அறிஞர் பட்டாளமே இந்த மலருக்காக எழுதியுள்ளது. லால்குடி ஜெயராமன், டி.என்.கிருஷ்ணன், உமையாள்புரம் சிவராமன் என்று இசைத் துறையின் உச்சங்களைத் தொட்டவர்களும் அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஜி.என்.பி-யின் personal secretary-ஆக பல ஆண்டுகள் செயல்பட்ட அவரது மகள் சகுந்தலாவின் கட்டுரை மிகவும் உருக்கமாய் அமைந்துள்ளது.

நெருங்கி வந்த சங்கீத சீசனுக்கு இடையில், பல கலைஞர்கள் கட்டுரை கொடுத்தது பெரிய விஷயம்தான். சிலரை, விடாக்கண்டன் கணக்காக, தொலைபேசியில் நச்சரிக்க வேண்டியிருந்தது.

வேலை ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே, இது ஒருவரால் ஆகக் கூடிய வேலை என்று புரிந்தது. அந்த நேரம் பார்த்து, என் புத்தகத்தை ஸ்ருதி பத்திரிக்கையில் மொழி பெயர்த்து, தொடராக வெளியிட, ஸ்ருதியின் ஆசிரியர் ராம்நாராயண் தொடர்பு கொண்டார். அவருடன் பேசிய முதல் நாளே, அவரை ரொம்ப வருடம் தெரியும் என்பது போன்ற நினைப்பு ஏற்பட்டது. ராம்நாராயணின் simple yet beautiful English அவருடைய பெரும் பலம். இனியவரும்,  இசை வளர்ச்சிக்காக முனைந்து செயல்படுபவரான அவரை விட சிறந்த co-editor-ஐ நான் பெற்றிருக்க முடியாது. ரொம்பவே சீனியர் என்ற போதும், என்னை நிகராக நடத்திய அவரின் பெருந்தன்மையைக் கண்டு பல கணங்களில் நெகிழ்ந்திருக்கிறேன்.

வந்த கட்டுரைகளை, ஆளுக்கு ஒரு முறை சரி பார்த்துச் செதுக்கினோம். ஆகஸ்டில் தொடங்கி டிசம்பருக்குள், அம்பது கட்டுரைகளுக்கு மேல் தொகுத்து, 264 பக்கங்களில், எக்கெச்செக்க புகைப்படங்களோடு அற்புதமான மலர் சென்ற வாரம் எங்கள் கணினியில் ஜனனித்தது. இந்த வாரம் அச்சில் வெளி வந்து கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க art paper-ல் மலர் மலர்ந்து கொண்டிருக்கிறது என்று சற்று முன் கிடைத்த தகவல் கூறுகிறது.

மலர் எப்படி வந்திருக்கிறது?

நானே எப்படிச் சொல்வது? இருந்தாலும் மூன்று விஷயங்கள் சொல்கிறேன்.

1. ஓவியங்கள்: ஓவியர் மணியம் செல்வனின் அட்டைப்படம் – கண் முன் கலையுலக கந்தர்வரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஓவியர் ராஜம், தொண்ணூறைத் தாண்டி விட்ட போதும், இந்த மலருக்காக பிரத்யேகமாய், ஜி.என்.பி பாடி பிரபலப்படுத்திய ‘வாஸுதேவயனி’ பாடலை ஓவியமாய்த் தீட்டியுள்ளார்.

2. ஜி.என்.பி-யின் கையெழுத்துப் பிரதிகள்: ஐம்பது வருடங்களாய் அச்சில் ஏறாமல், கையெழுத்துப் பிரதிகளாய் மட்டுமிருந்த மூன்று கட்டுரைகள் இந்த மலரில் அரங்கேறுகின்றன. இது தவிர, பரவிக் கிடந்த அவரின்ப் மற்ற கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த மலரின், மற்ற எல்லாப் பகுதியை நீக்கி விட்ட போதும் கூட, இந்த ஒரு பகுதியே நூலைத் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறேன்.

3. ஜி.என்.பி இறப்பதற்கு சில மாதங்கள் முன், உடல்நிலை சரியில்லாத நிலையில், வெளிநாட்டில் ஆவரைக் கேட்க வந்த ரசிகருக்காகப் பாடிய ஒரு மணி நேர கச்சேரியின் ஒலிப்பதிவும், இந்தப் புத்தகத்துடன் இலவசமாக வழங்கப்படுகிறது. கச்சேரியைக் கேட்டால், “சாகப் போகும் மனிதனின் பாட்டு”, என்று நம்பவே முடியாது.

ஐந்தாம் தேதி மாலை, பால மந்திர் ஜெர்மன் ஹாலில் (தி.நகர்), புத்தகம் வெளியிடப்படுகிறது. இசைப் பிரியர்களும், புத்தகப் பிரியர்களும் நிச்சயம் வர வேண்டும்.

Read Full Post »

a9இந்தியப் பாரம்பரிய இசையையும், இசைக் கலைஞர்களையும் பற்றிய ஆவணப் படங்கள் அரிது. அப்படியே வந்தாலும் அவற்றில் என்ன இருக்கும்?

இந்த வருடம், இந்த நாளில் இவருக்கும் அவருக்கும் மகனாகவோ  மகளாகவோ பிறந்தார் என்று தஞ்சாவூர் ஜில்லா கிராமத்து வீட்டை லாங் ஷாட்டில் காட்டுவர். அதன் பின், பிறந்த சில நாட்களிலேயே காலையில் கல்யாணியையும், மதிய உணவுக்கு மத்யமாவதியையும், சாயங்காலமாக சாயா தரங்கிணியும், ராத்திரிக்கு ராகவர்த்தினியையும் உட்கொள்ள ஆரம்பித்தார் என்று காலம் காலமாக அவ்விசைக் கலைஞரின் குடும்பத்தில் சுழன்று வரும் கட்டுக்கதையை கர்ம சிரத்தையாய் பதிவு செய்வர். அக் கலைஞரின் குருவின் மங்கிப் போன புகைப்படத்தைக் காட்டிய பின், அவர் முதல் கச்சேரி நடந்த இடம், தேதி எல்லாம் பட்டியலிடுவர். முதல் பத்து நிமிடம் இவை எடுத்துக் கொள்ள, அடுத்த 50-60 நிமிடங்களோ அந்தக் கலைஞரின் உறவினர், உடன் இசைத்தோர், பழகியோர், நண்பர்கள், சீடர்கள் என்று பலரின் நேர்காணல்களின் தொகுப்பாக அமையும். இந்தத் தொகுப்பில் மிஞ்சிப் போனால் ஐந்து நிமிடங்களுக்குத்தான் கலைஞரின் இசையைப் பற்றிய செய்திகள் இடம் பெறும். மற்ற நேரமெல்லாம் ‘trivia’ எனப்படும் உப்பு பெறாத சமாசாரங்கள் இடம் பெறும். அவர் உபயோகித்த தட்டு வெள்ளியில் தங்க முலாம் பூசியிருக்கும், அவர் ஆந்திராவுக்கு சென்ற போது உப்புமாவை விரும்பி சாப்பிட்டார், குடுமி வைத்துக் கொண்டல்தான் சிஷ்யனாக சேர்த்துக் கொள்வார், போன்ற அவசியமே இல்லாத செய்திகள்தான் நேரத்தை வீணடிக்கும். இவற்றின் நடுவே சேர்க்கப்பட்டிருக்கும் கலைஞரின் இசையும், புகைப்படங்களுமே அந்த ஆவணத்தை ஒரு முறை முழுமையாக காண வழி செய்யும். கடைசி வரை, அந்த இசைக் கலைஞரின் இசைச் சிறப்பு என்ன? அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்தும் அழியாமல் இருக்கும் அவர் இசையின் கூறுகள் எவை, என்றெல்லாம் மருந்துக்கும் செய்தியிராது.

மேற் சொன்ன விமர்சனம் பொதுவான ஒன்று. அதைப் பொய்யாக்கும் வகையில் சமீபத்தில் ஒரு ஆவணப் படத்தைக் காண நேரிட்டது. ‘Sanskriti Series’-ல் வெளியாகியிருக்கும் ‘Ramanathapuram Krishnan – The Musician’s Musician’ என்ற ஆவணப் படம்தான் அது. மதுரை மணி ஐயர், அரியக்குடி, ஜி.என்.பி, செம்மங்குடி போன்ற ஜாம்பவான்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த போதும், தனக்கென ஒரு முத்திரை பதித்து, இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்ற இராமநாதபுரம் கிருஷ்ணனின் இசையை அழகாகப் படம் பிடித்திருக்கிறது இவ்வாவணம்.

புகழ் பெற்ற ஹரிகதை விற்பனரான பாலகிருஷ்ண சாஸ்த்ரிகளின் மகன் எஸ்.பி.காந்தன் இயக்கியிருக்கும் இந்தப் படம், இராமநாதபுரம் கிருஷ்ணனின் அழகிய சஹானா ராக ஆலாபனையை, நித்யஸ்ரீ, சௌம்யா, ஹரிஹரன், ரவிகிரண், உமையாள்புரம் சிவராமன் போன்ற பிரபல கலைஞர்கள் கேட்டு ரசிப்பது போன்ற காட்சியமைப்புடன் தொடங்குகிறது. பைரவி ராக தானம் பின்னணியில் ஒலிக்க கிருஷ்ணனின் பூர்வீக ஊர், பிறந்த ஊர், பெற்றோர் பற்றிய செய்திகள் நிமிட நேரத்துக்குள் விரிந்து மறைகின்றன. கிருஷ்ணனை செதுக்கிய இராமநாதபுரம் சங்கர சிவ பாகவதரைப் பற்றிய சிறு குறிப்புக்குப் பின், கிருஷ்ணனின் இசைக்கு அடித்தளம் வகுக்கும் வகையில் அமைந்த ஜி.என்.பி-யின் இசையும், வீணை தனம்மாளின் கச்சேரிகளும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடந்தவற்றை விவரிக்க ஓவியங்களை உபயோகித்திருக்கும் உத்தி அற்புதம். மணியம் செல்வனின் ஓவியங்கள், ஜி.என்.பி கச்சேரியின் முதல் வரிசையில் உட்கார்ந்து ரசிக்கும் கிருஷ்ணனையும், வீணை தனம்மாளின் வாரக் கச்சேரிகளில் தன்னை இழக்கும் கிருஷ்ணனையும் அழகுற கண்முன் கொணர்ந்து நிறுத்துகின்றன. அதைப் போலவே கிருஷ்ணனின் ரேடியோ கச்சேரியை கேட்கும் பிருந்தாவின் வரைபடமும், நாராயண தீர்த்தரின் பாடல்களான ‘கோவர்த்தன கிரிதாரா’ மற்றும் ‘கலைய யசோதே’ பாடல்களில் கண்ணன் செய்யும் லீலைகளை எழிலுற படம்பிடித்திருக்கும் ம.செ-வின் ஓவியங்கள் பேரழகு. சமஸ்கிருதம் தெரியாதவரையும் கிருஷ்ணனின் குரல் காட்டும் பாவங்கள் அடைந்து மனதை ஆட்கொள்ளும் என்ற போதும், அவர் குரலுடன் சேர்ந்து பாடலின் பொருளையும் மனதில் பதிக்க இந்த ஓவியங்கள் பெரிதும் உதவுகின்றன.

ஓவியங்கள் கொண்ட காட்சிகளைப் போலவே, மற்ற காட்சிகளிலும் சொல்ல வந்த கருத்து தெளிவாக பார்ப்பவரைச் சென்றடைய வேண்டுமென்பதில் இயக்குனரின் ஈடுபாடு தெளிவாகத் தெரிகிறது. இராமநாதபுரம் கிருஷ்ணனின் சாயலில் ஒருவரை தேர்வு செய்து, அவரை நிழலுருவாய் காட்டி, பின்னால் ஒலிக்கும் இசையை கிருஷ்ணனே பாடுவது போன்ற மாயையை உருவாக்கியிருப்பது மகத்தான சாதனை. பெருக்கெடுக்கும் ராகப்ரவாகத்தில் தெரிக்கும் கமகங்களும், பிருகாக்களும், இதர சஞ்சாரங்களும் ஒலிக்க மட்டும் செய்தால் கேட்பவர் பாடுவதை அவரவர் சௌகரியத்துக்கு கற்பனை செய்து கொள்ளலாம். அதையே ஒருவர் நடித்துக் காட்டுதல் என்பது சிக்கல்கள் பலவுண்டு. நெருடலான பல இடங்கள் ஒலிக்கும் போது அவ்விசைக் கேற்ப நடித்திருப்பவரின் அங்க அசைவும் அமைவது மிகக் கடினம். அதைச் செய்து காட்டியிருக்கும் இயக்குனரை எத்தனை புகழ்ந்தாலும் தகும். அதே போல, இசை ஒலிக்கும் போது தோன்றும் காட்சிகளும் கச்சிதமாய் பொருந்துகின்றன. இராமநாதபுரம் கிருஷ்ணனின் பேகடை ஒலிக்கும் போது காட்டப்படும் அருவியின் பெருக்கெடுப்பின் பல பரிமாணங்கள், ஒலிக்கும் ராகத்தின் பல பரிமாணங்களை பரிமளிக்க வைப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. ‘சங்கராபரணம்’ ராகம் ஒலிக்கும் போது, ராகத்தின் பெயருக்கு ஏற்ப சங்கரனை நடராஜ மூர்த்தியாய் காட்டி, அந்த சங்கரன் பூணும் ஆபரணமாய் பாடகரின் இசையை ஒலிக்கச் செய்திருப்பது நல்ல symbolic portrayal. அவரின் இசை மற்றவர்களை எப்படி பாதித்தது என்று மூத்த புல்லாங்குழல் கலைஞர் ரமணி, அவரை நேரில் கண்டிராத போதும் அவர் இசைக்கு வசப்பட்ட சௌம்யா, கர்நாடக இசைக் கலைஞராக இல்லாத போதும் அவரின் இசையிலிருந்து பாடங்கள் கற்ற கஜல் மற்றும் திரையிசைப் பாடகர் ஹரிஹரன் போன்றோரின் விளக்கங்களும் நன்றாக அமைந்துள்ளன.

சொல்ல வேண்டிய விஷயங்களை முன்னரே திட்டமிட்டு, இன்னார் இதை இதைச் சொல்ல வேண்டும் என்று நிர்ணயித்து, சொல்லப்பட்ட கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இசைச் செருகல்களை அமைத்திருப்பது அழகு. உதாரணமாக ராகம் தானம் பல்லவியில் அவருக்கு இருந்த ஆளுமையைக் கூறும் இடத்தில் ஒலிக்கும் கண்ட ஜாதி திரிபுடை தாளத்தில் அமைந்த வராளி ராக பல்லவி, “காணக் கிடைக்கும் சபேசன் தரிசனம்”, மற்றும், அவர் பாடும்போது ஒலிக்கும் வல்லின மெல்லினங்களைப் பற்றி சௌம்யா கூறிய பின் ஒலிக்கும் “துளஸம்மா” பாடல், பாபநாசம் சிவன் இவருக்காகவே எழுதியது போன்ற “கற்பகமே” பாடல், சஹானா கிருஷ்ணன் என்ற பெயர் இருந்தது சரிதான் என்று எளிதாக உணரும் வகையில் ஒலிக்கும் ‘ஸரியெவ்வரே’ பாடல், லயத்தில் நல்ல தேர்ச்சி இருந்த போதும் ஸர்வலகு ஸ்வரங்களை அரிய கோவைகளாக்கும் கிருஷ்ணனின் கல்பனை ஸ்வரங்களை லால்குடி விஜயலட்சுமி கூறிய பின் ஒலிக்கும் “அம்ம ராவம்ம” பாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

* 1957-ல் அகாடமி கச்சேரியில் கண்ட நடை பல்லவியை கிருஷ்ணன் பாடிய போது, ரசிகர்களில் ஒருவர் அதே பல்லவியை சங்கீர்ண நடையில் பாடுமாறு கேட்டுக் கொள்ள, அதே கணத்தில் பாடியதைக் கேட்ட மைசூர் சௌடையா, “இப்படிப்பட்ட திறமைசாலி எல்லாம் அகாடமியின் ப்ரைம் ஸ்லாட்டில் அல்லவா பாட வேண்டும்”, என்று கூறியதும் அடுத்த வருடமே அகாடமியில் சாயங்கால கச்சேரியில் கிருஷ்ணன் பாட, அவருக்கு சௌடையாவே பக்கவாத்யம் வாசித்தார்.

* ஜி.என்.பி, அகில இந்திய வானொலியின் ஸ்டேஷன் டைரக்டராக இருந்த போது, கிருஷ்ணனுக்கு ராகம் தானம் பல்லவி கச்சேரி பாட contract அனுப்பினார். அந்த contract வருவதற்கு சில நாட்களுக்கு முந்தான் ரேடியோவில் ராகம் தானம் பல்லவி கச்சேரி ஒன்றை கிருஷ்ணன் பாடியிருந்தார். அதனால், பதிலளிக்காமல் காலம் கடத்த, ஒரு நாள் ஜி.என்.பி-யே நேரில் வந்து விசாரித்தார். விவரத்தை கிருஷ்ணன் கூறவும், “ஹாலந்தில் இருந்து அற்புதமான ஒலிநாடாக்கள் வந்துள்ளன. அவற்றில் உன் ராகம் தானம் பல்லவியை வருகின்ற சந்ததிக்காக வேண்டி பதிவு செய்ய நினைத்தேன். அதனால்தான் மீண்டும் ஒருமுறை ராகம் தானம் பல்லவிக்கே contract அனுப்பினேன்”, என்று ஜி.என்.பி கூறிய பின் ராமநாதபுரம் கிருஷ்ணன் பாடிக் கொடுத்தார்.

* மறைவதற்கு சில நாட்கள் முன், “அந்த அம்மா என் பாட்டை ஒத்துண்டுட்டா. அப்போ நான் நல்லாத்தான் பாடியிருப்பேன்.”, என்று பிருந்தாவின் அங்கீகரிப்பைப் பெருமையாக நினைத்தார் கிருஷ்ணன். அவர் மறைந்த பல ஆண்டுகள் கழித்து, பிருந்தாவின் சிஷ்யர் ஒருவர், கீரவாணி ராகத்தில் ‘ஒரு ராக கச்சேரி’ பாடியதாக பிருந்தாவிடம் கூற, சில நிமிடங்கள் கண்ணை மூடி தன்னை மறந்த நிலைக்குச் சென்ற பிருந்தா, கண் விழித்த பின், “கீரவாணி-னா ஐயர் பாடி கேட்கணும்”, என்று ராமநாதபுரம் கிருஷ்ணனைக் குறிப்பிட்டார்.

மேற்கூறியது போன்ற தகவல்கள் கலைஞரின் தரத்தை உணரும் வகையில் அழகுற பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதைப் போன்ற anecdotes அளவு மீறாமல் செய்திருப்பது சிறப்பு.

இத்தனை சிறப்பாக அமைந்துள்ள ஆவணத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. சஹானா ராகம் Ramnad Krishnan’s speciality என்ற போதும், அதை பல இடங்களில் மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்யாது, அந்த நேரத்தில் வேறு சில ராகங்களை சேர்த்திருக்கலாம். பைரவி, அடாணா போன்ற ராகங்கள் கூட ஒரு முறைக்கு மேல் ஒலிப்பதை தவிர்த்திருக்கலாம். அவரது ஆலாபனைக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் அவரின் இசையின் மற்ற பரிமாணங்களுக்கு கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஆலாபனையில் கூட கச்சேரியின் தொடக்கத்தில் பாடிய ராகங்கள், பிரதான ராகங்கள், ராகம் தானம் பல்லவியில் பாடிய ராகங்கள் ஆகியவற்றில் அவரது ஆலாபனை அணுகு முறை எப்படி அமைந்தது என்று கூறியிருக்கலாம். நிரவல், கல்பனை ஸ்வரம் பற்றியெல்லாம் குறிப்பிடுவதோடு நிறுத்தியிருக்காமல் அவற்றின் தனிக் கூறுகளை விளக்கி, அவர் பாடியிருக்கும் கிருதிகள் பற்றியும் இன்னும் ஆழமாக சென்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

படத்தில் ஒரு காட்சி தவறுதலாய் இரண்டு முறை வருகிறது. அவர் பாடுவதைக் கேட்டு ரசிப்பது போன்று அமைத்திருக்கும் காட்சியில், அவர்களின் ரசிகானுபவத்தை  super slow motion-ல் காட்டியிருப்பது சில சமயம் out of synch-ஆக தோன்றுகிறது. பஹ¤தாரி, பலமஞ்சரி, பூர்ண ஷட்ஜம் போன்ற அரிய ராகங்களை கிருஷ்ணன் அழகாகப் பாடுவார் என்று கூறிய பின் ஒலிக்கும் ராகம் எது பலர் குழம்பக் கூடும் (ஒலிப்பது பலமஞ்சரிதான்).   ‘Temple tower effect’ என்பதை passing mention-ஆக கூறிய பின் தொடரும் ராகத்தில், தஞ்சை பெரிய கோயில் விமானத்தை காட்டிய போதும், மேல் செல்லச் செல்ல குரலின் ஒலி குருகுவதை பின்னொலிக்கும் இசை தெளிவாகக் காட்டியிருக்கலாம். விஸ்தாரமாகப் பாடுவதற்கு ஏற்ற ராகங்களை பெரிய ராகங்கள் என்றும் அப்படி இல்லாத வற்றை சிறிய ராகங்கள் என்று பொதுவாகக் குறிப்பிடினும், அவற்றை ஆங்கிலத்தில் ‘Major Scales’ என்றும் ‘Minor scales’ என்றும் குறித்தல் குழப்பம் ஏற்படுத்தும். மேற்கத்தைய இசையில் இந்தப் பதங்களுக்கு வேறு அர்த்தம் இருப்பதை உற்று நோக்கின் இக் குழப்பம் புரியும். இசை ஒலிக்கும் போது, ஒலிக்கும் ராகம், கிருதி, பல்லவியின் தாளம் போன்ற செய்திகளையும் காட்டியிருப்பின், மாணவர்களுக்கும், இசைப் பயிற்சி அதிகம் இல்லாதோருக்கும் உதவியாக இருந்திருக்கும்.

இதைப் போன்ற சிறு சிறு குறைகள் இருக்கும் போதும், மொத்தத்தில் ராமநாதபுரம் கிருஷ்ணனின் இசை வாழ்வின் செம்மையான பதிவாகவே இந்தப் படைப்பு அமைந்திருக்கிறது. இதைப் போன்ற இன்னமும் பல ஆவணங்களை இந்த நிறுவனம் எடுக்க வேண்டும். அப்படிச் செய்ய இசை ரசிகர்களும், ஆர்வலர்களும் இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.

நான் டிவிடி வாங்கிவிட்டேன். நீங்க?

மேலும் விவரங்கள்: http://www.kalakendra.com/shopping/ramanathapuramramnad-krishnan-musicans-musician-p-618.html

Read Full Post »