நவம்பர் மாதம் ஸ்ருதி மாத இதழின் கவர் ஸ்டோரி –
ஸ்ருதி profile பெறாத, ஆனால் பெற்றிருக்க வேண்டிய கலைஞர்களின் எண்ணிக்கை, சமீப காலமாக குறைந்து வருவது நல்ல விஷயம். இந்த வரிசையில் மதுரை மணி, பாலக்காடு மணி ஐயர், தண்டபாணி தேசிகர் போன்ற ஜாம்பவான்களைப் பற்றி சமீபத்தில்தான் சிறப்பு மலர்கள் வெளி வந்தன. அந்தப் பட்டியலில் டி.என்.கிருஷ்ணனையும் சேர்த்துக் கொண்டுவிட்ட ஸ்ருதிக்கு சபாஷ்.
மலரில் வந்த விஷயங்கள் பற்றி நான் சொல்லப் போவதில்லை. நீங்களே வாங்கித் தெரிந்து கொள்ளுங்கள். (sruti.com)
டி.என்.கிருஷ்ணன் என்ற பெயரைக் கேட்டதும் எனக்கு புது வருடம் ஞாபகத்துக்கு வரும். பல வருடங்களாக என் புது வருடம் கபாலி கோயில் வழி கற்பகாம்பாள் மெஸ்ஸினுள்ளும், அங்கு காரியம் ஆனதும் அகாடமியில் டி.என்.கிருஷ்ணனின் கச்சேரியுடனும்தான் தொடங்கியிருக்கிறது. அடித்துப் பிடித்து இடத்தைப் பிடித்தால், “Wish you a very happy new year”, என்று மலையாள நெடியுடன் கிருஷ்ணன் வாழ்த்துச் சொல்வார். அப்படிக் கேட்ட ஒவ்வொரு கச்சேரியும் மறக்க முடியாத அனுபவங்கள்.
எனது முதல் ஜனவர் 1 கச்சேரி கேட்கும் அனுபவம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்று காலை, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் லால்குடி கச்சேரிக்குப் போகலாமா அல்லது அகாடமியில் கிருஷ்ணனின் கச்சேரிக்கு போகலாமா என்று நண்பர்களுடன் பெரிய பட்டிமன்றமே நடந்தேறியது. இறுதியில், நல்ல acoustics அகாடமியின் பக்கம் எங்களைத் திருப்பியது. அன்று, அரியக்குடி பிரபலப்படுத்திய நாலு ராகப் பல்லவி வாசித்தார். தோடி ஆலாபனையில் மந்திர ஸ்தாயி சஞ்சாரங்கள் இன்னும் காதுகளை நிறைக்கின்றன. அரியக்குடி, கே.வி.என் போன்றோர் அந்தப் பல்லவியை அதற்கு முன் பாடியிருப்பினும், நான் முதன் முதலில் கேட்டது டி.என்.கிருஷ்ணன் வாசித்துதான். “சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு” என்பதுதான் பல்லவி. கண நேரத்தில் மாறும் ராகங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின.
அந்தக் கச்சேரிக்குப் பிறகு, வருடா வருடம் அகாடமியில், ஜனவரி 1-ம் தேதி ஆஜர் ஆனேன். என்னைப் போலவே, பலர் அந்தக் கச்சேரிக்கு வருடம் தவறாமல் வருவதையும் கொண்டிருக்கிறேன். என்னுடைய சில 70+ வயது இளைய நண்பர்கள் அங்குதான் பரிச்சயம் ஆனார்கள். ஒரு முறை, நாராயண கௌளை ராக வர்ணத்தில் கச்சேரியைத் தொடங்கிய போது, ஒரு பெரியவர், “ரொம்ப வருஷம் முன்னால இப்படித்தான் தொடங்கினார். அன்னிக்கு தோடி-ல பல்லவி”, என்றார். அன்றும் தோடிதான் பல்லவிக்கான ராகமாக அமைந்தது!
சில வருடங்களுக்கு முன் நடந்த அகாடமி கச்சேரியை மறக்கவே முடியாது. சண்முகப்ரியா ராகத்தைப் பிழிந்து பிழிந்து வாசித்து, “இதை விட நன்றாக வாசிக்க ஏதுமேயில்லை” என்ற எண்ணம் எழுந்த வேளையில், சின்னக் சின்னக் கீற்றுகளாய் சில நிமிடங்களுகு மட்டும் தூவானமாய்த் தூவிய சிந்து பைரவி, அதற்கு முன் கேட்ட சண்முகப்ரியாவை மறக்கடிக்கச் செய்தது. மனதைப் பிழிந்த அந்த சிந்து பைரவி கடைசியில் சில சொட்டு கண்ணீரை வரவழைத்தது. அந்தச் சொட்டுகளுக்காகவே காத்திருந்தது போல், பெரியதொரு இன்பக் காற்று நெஞ்சில் வீசி, உதட்டில் புன்னகையை வரவழைத்தது. அன்று நான் கண்ணீருடன் சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்க்க வேடிக்கையாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
2-3 வருடங்களாய் கிருஷ்ணன் ஏனோ, ஜனவரி 1-ம் தேதி அன்று அகாடமியில் வாசிப்பதில்லை. போன வருடத்திற்கு முன் வருடம் முத்ராவில் வாசித்த போதும் சென்றிருந்தேன். அதுதான் நான் கேட்டதிலேயே மிகவும் சுமாரான கிருஷ்ணன் கச்சேரி.
நான் டி.என்.கிருஷ்ணனின் கச்சேரிக்கு விரும்பிச் சொல்லும் மற்றொரு இடம், ‘நாத இன்பம்’ இயங்கும் ‘ராக ஸ¤தா ஹால்’. நாத இன்பத்தை நடத்திஉஅ எஸ்.வி.கிருஷ்ணன், ஓரத்தில் இருக்கும் திண்ணை போன்ற இருக்கையில் அமர்ந்து கொண்டு பெருமை பொங்க டி.என்.கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டே இருப்பார். 2003-ல், செம்மங்குடி மறைந்த போது, தன் கச்சேரியை செம்மங்குடிக்கு சமர்பணம் செய்து, கல்யாணியில் ‘பிரான ப்ரோவ’ வாசித்தார். வாசித்து முடித்ததும், செங்கல்பட்டு ரங்கநாதன் எழுந்து “இதுதான் கல்யாணி”, என்ற போது அரங்கமே உணர்ச்சிவசப்பட்டது. அன்றைய ஹைலைட் சாவேரியில் வாசித்த ராகம் தானம் பல்லவி. கலைஞர்களைப் பாராட்டி பேசிய எஸ்.வி.கிருஷ்ணன், ‘TNK Special’ ராகங்களான யதுகுல காம்போதி, சுருட்டி போன்றவற்றை கோடி காட்டச் சொன்னார். அரை நிமிடத்துக்கு ஒரு ராகமாய் ஐந்தாறு ராகங்களை கிருஷ்ணன் வாசித்த போது சொக்கிப் போனேன். இவ்வளவு குறைந்த நேரத்தில், நாலே நாலு இழுப்பில், ராகத்தை இவ்வளவு முழுமையுடன் அளிக்க முடியுமென்று இன்னும் கூட நம்ப முடியவில்லை.
ஸ்ருதி பத்திரிகையைப் பாராட்டி ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன். அதை இவ்வாறு முடித்திருந்தேன்:
I have often felt that TNK’s bowing technique, crisp portrayal of ragas, tremendous energy and pleasant stage presence are probably not the only reasons for his success. One could find many violinists with adequate proficiency in all the above mentioned factors. TNK’s concert has an unexplainable element, which I call the “X-factor”. I have tried several times, unsuccessfully, to figure out what this factor could be. At the end of the day, who cares? I can enjoy his concerts any day, whether I know or not of the ‘X-factor’.
இந்த வருடம் 1-ம் தேதி நான் சென்னையில் இல்லை. இருந்தால் மட்டுமென்ன? எப்படியும் அன்று கிருஷ்ணன் அகாடமயில் வாசிக்கப் போவதில்லை!
Photo Courtesy: Ramanathan, Editor – Carnatica.net
Glad that my write-up in Sruti prompted such a post from you… 🙂
Ramanathan
PS – The collage pic that you have put up in the post twas taken by me at Carnatica’s December fest in 2006 at Tattvaloka and published in carnatica.net
Dear Ramanathan,
Congratulations once again on the write-up. It was long time due.
I have updated the post with due acknowledgements.
Regards
Lalitha Ram
இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் ஏதேனும் ஒரு விதத்தில் (ஆர்வம், வணிகம், பொழுதுபோக்கு….காரணங்களுக்காக) யாராலேனும் ஆவணப்படுத்தப்படுகின்றனவா? எவ்வளவோ வசதிகளும் வாய்ப்புகளும் பெருகிவிட்ட இக்காலத்திலாவது அது செய்யப்பட்டால் நன்றாயிருக்கும்.