மான்பூண்டியா பிள்ளையைப் பற்றி கிடைக்கும் தகவல்கள் ஒரு கதை போல உள்ளதாய் போன கட்டுரையில் எழுதியிருந்தேன்.
அதனால், கிட்டத்தட்ட ஒரு கதையாகவே இந்தக் கட்டுரையை எழுதிவிடலாம் என்று தொன்றியது:-) அவர் காலத்தில் இசைப் பதிவுகள் ஏதுமில்லாததாலும், அவரைக் கேட்டவர்கள் இன்றும் யாரும் இல்லாததாலும், இது போன்றே எழுத வேண்டியுள்ளது.
புதுக்கோட்டை மகாராஜா இராமச்சந்திர தொண்டைமானின் அரண்மனையில் கச்சேரி நடை பெற்று வந்தது. ஆஸ்தான வித்வான்களான நன்னுமியானும் சோட்டுமியானும் பாடிக் கொண்டிருந்தர்கள். டோலக் வாசித்துக் கொண்டே பாடுவதில் அவர்கள் வல்லவர்கள். அழகிய கார்வையில் ஸ்ருதியுடன் இணைந்து அவர்கள் நின்றபடியே, பளிச்சென்று முத்தாய்ப்பு ஒன்றை டோலக்கில் வைக்க, லாந்தர் விளக்கை ஏந்திக் கொண்டிருந்த மாமுண்டி தன்னையும் மீறி ‘ஆஹா’ என்றார். அரங்கில் இருந்தோரெல்லாம் அவர் பக்கம் திரும்ப, செய்வதறியாது தலையைக் குனிந்து கொண்டார்.
சில நொடிகள் ஆச்சர்யப் பார்வைகள் ஏளனப் பார்வைகளாயின. “லாந்தர்கார பாகவதரைப் பார்த்தீரா”, என்றொருவர் கூற அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது. மன்னர் இடை மறித்து “கச்சேரி தொடரட்டும்”, என்று சொல்லும் வரை சலசலப்பு தொடர்ந்தது. அனைவரின் கவனமும் கச்சேரியில் சென்று விட, மாமுண்டி என்று அழைக்கப்பட்ட மான்பூண்டியா பிள்ளை சிந்தனையில் ஆழ்ந்தார்.
“லாந்தர் சேவகம் செய்பவரின் மகன் சங்கீத வித்வான் ஆக முடியாதா? சங்கீதம் என்பது பரம்பரையாய் வரும் விஷயமா? அப்படியே பார்த்தாலும் சங்கீதத்துக்கும் எனக்கும் தொடர்பே இல்லையா? அரண்மனையில் நடப்பது மட்டும்தான் சங்கீதமா? வருடா வருடம் காமன் பண்டிகையில் நாடகம், லாவணி ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் எல்லாம் என் சுற்றத்தார்தானே? அவை எல்லாம் சங்கீதத்தில் சேர்த்தியில்லையா? நான்கு வருடங்களாய் காமன் பண்டிகையில் நான் தானே டேப் அடித்து வருகிறேன். அரண்மனை கச்சேரி, தெருவில் நடக்கும் நாடகம், இரண்டிலும் பொதிந்துள்ள லயம் ஒன்றுதானே?”, என்றெல்லாம் அவர் மனம் பல எண்ணங்களை அசை போட்டு வந்தது.
கச்சேரி முடிந்த உடன், “மாமுண்டி! உனக்கெதுக்கு லாந்தர் உத்தியோகம். முழு நேர சங்கீத வித்வானாகும் வழியைப் பாரேன்”, என்று விளையாட்டாய் கூறினார் ஓர் அரண்மனை பிரமுகர். மான்பூண்டியா பிள்ளையின் காதுகளுக்கோ அது தெய்வ வாக்காய் ஒலித்தது. “இன்றோடு இந்த லாந்தர் சேவைக்கு ஒரு முழுக்கு”, என்று முடிவுக்கு வந்தவராய் மாரியப்ப தவில்காரர் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
இரவுச் சாப்பாடை முடித்து திண்ணையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் மாரியப்ப தவில்காரர். அவரை அவசரமாய் அணுகி காலில் விழுந்த படி “அண்ணா, என்னை உங்க சிஷ்யனா ஏத்துக்க்ணும்”, என்றார் மான்பூண்டியாப் பிள்ளை.
“எழுந்திரு தம்பி. உன்னைப் பார்த்தா மாதிரி இருக்கு, ஆனா அடையாளம் தெரியலையே.”
“நான் ‘லாந்தர் சேவகம்’ அய்யாசாமி சேர்வையின் பிள்ளை. அரை மணி நேரத்துக்கு முன்னாடி வரை நானும் அரண்மனையில் அதே வேலையை செஞ்சுகிட்டு இருந்தேன். இனிமேல் உங்க கிட்ட குருகுலவாசம் செய்ய நினைக்கிறேன். நீங்கதான் மனசு வெக்கணும்”
“தம்பி! உன்னை நிறைய தடவை பார்த்திருக்கேன். போன வாரம் கூட கல்யாண ஊர்வலத்துல நான் வாசிச்ச போது, நீ தலையை ஆட்டி ஆட்டி என் வாசிப்பை ரசிச்சது இப்ப ஞாபகத்துக்கு வருது. ஆனால், இவ்வளவு வயசுக்கு மேல சங்கீதம் கத்துகிட்டு…”
“அப்படிச் சொல்லாதீங்கண்ணே. இவ்வளவு நாளா நான் அரண்மனையில வேலை பார்த்தாலும், என் மனசு முழுக்க லயம்தான் நெறஞ்சு இருக்கு.”
“உன் ஆர்வம் எனக்குப் புரியுது தம்பி. ஆனா, இன்னிக்கு தவில் வாசிக்கறவங்க எல்லாம் பரம்பரை பரம்பரையா இதையே தொழிலா வெச்சுக்கிட்டவங்க. நாளைக்கு நீ எவ்வளவு நல்ல தவில் வித்வானா வந்தாலும், உன்னை எந்த நாதஸ்வர கோஷ்டியிலையாவது சேத்துப்பாங்களானு தெரியலை.”
“அண்ணே! நான் தவில்காரங்களோட போட்டி போடணும்னு கத்துக்க நினைக்கல. ஒவ்வொரு நாளும் அரண்மனை கச்சேரியில வாத்யங்களை கேட்கும் போது, எனக்கும் வாசிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.”
“அப்ப ஒண்ணு செய். அரண்மனை வேலை முடிஞ்சதும் நேர நம்ப வீட்டுக்கு வந்துடு. ஒழிஞ்ச போது உனக்கு சொல்லி வைக்கிறேன். சங்கீதத்துக்காக நிரந்தர சம்பளத்தை விட்டுடாத”, என்றார் மாரியப்ப தவில்காரர்.
மான்பூண்டியா பிள்ளையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். அரண்மனையில் லாந்தர் உத்தியோக நேரம் போக மற்ற நேரங்களில் மாரியப்ப தவில்காரரின் வீட்டிலேயே கழித்தார். இயற்கையிலேயே நல்ல லய நிர்ணயம் கொண்டிருந்த மான்பூண்டியா பிள்ளைக்கு, தவில் வாசிப்பில் பொதிந்துள்ள கணக்குகள் சுலபமாகவே கைவந்தன. தன் சிஷ்யன் எவ்வளவுதான் நன்றாக வாசித்தாலும் அவரை எந்த நாதஸ்வர கோஷ்டியும் சேர்த்துக் கொள்ளாது என்பதை நன்குணர்ந்திருந்தார் மாரியப்ப தவில்காரர்.
தவில் கற்பதற்கு முன்னால் பல வருடங்களாய் டேப் அடித்துப் பழக்கம் இருந்ததால், குருநாதர் சொல்லும் சொற்களை எல்லாம் ஒற்றைக் கையால் மான்பூண்டியாப் பிள்ளை வாசிப்பதைக் கண்ட மாரியப்பத் தவில்காரருக்கு, ஒரு யுக்தி தோன்றியது.
தன் சிஷ்யனை அழைத்து, “மாமுண்டி, இவ்வளவு திறமையை வெச்சுகிட்டு நீ லாந்தர் உத்யோகம் பார்க்கிறது சரியில்லை. இப்பல்லாம் எல்லா சமஸ்தானங்களிலும் பாட்டுக் கச்சேரி நிறைய நடக்குது. அதுக்கெல்லாம் மிருதங்கமும் கடமும்தான் வாசிக்கறாங்க. நீ பல வருஷமா டேப் அடிக்கறையே, அதை கச்சேரிக்கு ஏத்த வாத்யமா மாத்த முடியுமானு பாரு. நான் சொல்லித் தரதையெல்லாம் அந்த வாத்யத்துல வாசிச்சுப் பழகு.”, என்றார் மாரியப்ப தவில்காரர்.
இதனைக் கேட்ட மான்பூண்டியாப் பிள்ளைக்குத் தலைகால் புரியவில்லை. அன்று முதல் டேப்பை கச்சேரிக்கு ஏற்ற வாத்யமாய் எப்படி மாற்றலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தார். பல விதமான மரங்களை வெவ்வேறு அளவுகளில் குடைந்து பார்த்தார். அதன் மேல் வெவ்வேறு தொல்களை மடாய்த்துக் கட்டினார். அவ்வாறு உருவாக்கிய வாத்யங்களின் நாதத்தை பரிசோதித்துப் பார்த்தார். இறுதியில், டேப்பை விட சற்றே சுற்றளவு குறைவாய், பலாக் கட்டையின் மேல் உடும்புத் தோல் போர்த்தியிருந்த வாத்யத்தில் எழுந்த நாதம் அவருக்கு திருப்தியளித்தது. உடும்புத் தோலில் கொஞ்சம் தண்ணீரைத் தடவியதும் வாத்யத்தின் ஒலி தாழ்ந்து ஒலித்து காதுக்கு இனிமையாய் கேட்டது.
மிருதங்கத்தில் உலோகப் பொடி கொண்டு வலந்தலையில் கரணை இடுவதால், உலோகத்தில் எழும் ரீங்காரம் மிருதங்கத்தில் எழுவதை உணர்ந்தார். அது போலவே, தான் உருவாக்கிய ஒற்றைக் கை வாத்தியத்திலும் உலோகத்தை சேர்க்க நினைத்தார். வாத்யத்தின் மரச் சட்டத்தைக் குடைந்து, உலோகத்தால் ஆன காசு போன்ற வட்டங்களை பொருத்தினார். உருட்டுச் சொற்கள் வாசிக்கும் போதும், இந்தக் காசுகளும் அதிர்ந்து, இனிமையான நாதத்தை எழுப்பின.
தன் கடின உழைப்பால் உருவாக்கிய கருவிக்கு கஞ்சிரா என்று பெயர் சூட்டினார் மான்பூண்டியா பிள்ளை. வாத்யத்தை கண்டு பெரிதும் மகிழ்ந்த மாரியப்பத் தவில்காரர், “மாமுண்டி இதுதான் உனக்கு ஏத்த வாத்யம். தொடர்ந்து இதில் சாதகம் செய்தால் நீ பெரிய வித்வானாய் வருவாய்.”, என்று வாழ்த்தினார்.
கஞ்சிராவில் விடாமல் சாதகம் செய்து, மிக வேகமான உருட்டுச் சொற்களைக் கூட தெளிவாகவும் இனிமையாகவும் வாசிக்கும் திறனை பெற்றார் மான்பூண்டியாப் பிள்ளை. அவர் கற்பனைக்கு உதித்த நடை பேதங்கள், மொஹ்ராக்கள், கோர்வைகள் ஆகியவை அதற்கு முன்னால் எவருக்குமே தோன்றாத புது வழியில் அமைந்திருந்தன. அவர் வாசிப்பைக் கேட்டவர்கள் எல்லாம், “கர்நாடக இசையில் ராகங்களின் நுணுக்கங்களை எல்லாம் வெளிக் கொணர தியாக பிரம்மம் தோன்றியது போல, லய நுணுக்கங்களை உலகத்தாருக்கு எடுத்துச் சொல்லத் தோன்றியவர் இவர்”, என்று கூறி மகிழ்ந்தனர். புதுக்கோட்டை அருகில் உள்ள பல பஜனை மடங்களில் கஞ்சிராவை வாசித்துப் பழகிய பின், கஞ்சிராவை கச்சேரிகளில் அரங்கேற்றம் செய்ய நினைத்தார்.
அந்தச் சமயத்தில் கச்சேரிகளில் வாசிப்பதில் முதன்மை இடத்திலிருந்த லய வித்வான் தஞ்சாவூர் நாராயணசாமியப்பாதான். அவருடைய ஒப்புதல் தன் வாசிப்புக்கும், வாத்யத்துக்கும் கிடைத்துவிட்டால் கஞ்சிராவை அரங்கேற்றிவிடலாம் என்றெண்ணி தஞ்சாவூர் சென்றார்.
வியாழக் கிழமை மாலை தஞ்சாவூரை அடைந்த மான்பூண்டியாப் பிள்ளை, நேராக நாராயணசாமியப்பாவை சந்திக்கச் சென்றார்.
“ஐயா! என் பேர் மான்பூண்டி. புதுக்கோட்டையிலிருந்து வரேன். நான் ஒரு கஞ்சிரான்னு வாத்யம் தயார் பண்ணி இருக்கேன். அதை உங்க கிட்ட வாசிச்சு அரங்கேற்றம் பண்ணனும்னு இவ்வளவு தூரம் வந்தேன்.”
“கஞ்சிராவா? ரொம்பப் புதுமையா இருக்கே. நாளைக்கு சாயங்காலம் நம்ம வீட்டுல பஜனை இருக்கு. அதுல நீங்க வாசிங்க. ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கிங்க, ராத்திரி ஜாகை நம்ம வீட்டுலையே போட்டிருலாம்.”, என்று உணவும், திண்ணையில் படுக்க இடமும் அளித்தார் நாராயணசாமியப்பா.
அடுத்த நாள், நிரம்பியிருந்த பஜனை கூடத்தில் நுழைந்த மான்பூண்டியா பிள்ளைக்கு மூலையில் ஓர் இடம் கிடைத்தது. தம்புரா ஸ்ருதி ஒலிக்க நாரயணசாமியப்பா தன் வாத்யத்தை ஸ்ருதியுடன் இணைத்துக் கொண்டார். மான்பூண்டியா பிள்ளை தன் வாத்யத்தை எடுத்ததும், அனைவரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பின. “ஸ்ருதியே இல்லாத வாத்யம் கேட்க இனிமையாக இருக்குமா? இரண்டு கையில் மிருதங்கத்தில் வாசிப்பதை எல்லாம் இந்த ஒத்தக் கை வாத்யத்தில் வாசிக்க முடியுமா?”, என்றெல்லாம் அவர்கள் எண்ணுகையில், சிறிது நீரை கஞ்சிராவில் தெளித்து வாத்யத்தை தன் காதருகே வைத்துத் தட்டிப் பார்த்தார். கஞ்சிராவிலிருந்து பிறந்த ஒலி தனக்கு திருப்தியானதும், கண்களை மூடி ஒருமுறை முருகனை வேண்டி, கஞ்சிராவில் ‘தீம்’ என்ற சொல்லைப் போட்டார்.
“இந்தப் புது வாத்யத்தின் ‘தீம்காரம்’ அரங்கையே நிரப்புகிறதே”, என்று நாராயணசாமியப்பா வியந்தார். “கீர்த்தனைக்கு கூட சேர்ந்து வாசிங்க”, என்றார். முதலில் நாரயணசாமியப்பா தன் மிருதங்கத்தில் அமைத்து வந்த நடையை எல்லாம் நிழலெனத் தொடர்ந்து வந்தார் மான்பூண்டி. “தம்பி, நான் வாசிக்கறதுதான் வாசிக்கணும்னு இல்ல. உங்க கற்பனைக்கு தோன்றிய படி வாசிங்க”, என்று நாராயணசாமியப்பா கூறவும், கீர்த்தனையின் ஒவ்வொரு வரிக்கும் தினுசு தினுசாய் நடைகள் அமர்த்தியபடி வாசிக்கத் தொடங்கினார். அன்று அவர் வாசித்த லய கோவைகளை அதுவரை தஞ்சையில் யாருமே கேட்டதில்லை. கஞ்சிராவின் கம்பீரமான நாதத்திலும், மான்பூண்டியாப் பிள்ளை அமர்த்திய சொற்கட்டுகளிலும் சொக்கிப் போன நாராயணசாமியப்பா, “தம்பி! பாட்டே வேண்டாம் போல இருக்கு. உங்க வாத்யத்தை மட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது. இதுல ‘தனி’ வாசிக்க வசதியுண்டா?”, என்றார்.
மான்பூண்டியாப் பிள்ளையும் உடனே தனி ஆவர்த்தனம் வாசிக்க ஆரம்பித்தார். அதுவரை பாடிய கீர்த்தனைகளில் உள்ள லய அபிப்ராயங்களை விஸ்தாரம் செய்து சில ஆவர்த்தங்கள் வாசித்த பின், ஓர் அட்சரத்துக்கு நான்கு மாத்திரை வீதம் சென்று கொண்டிருந்த சதுஸ்ர நடையை மாற்றினார். தாளம் போட்டு ரசித்து வந்தவர்கள் குழம்ப ஆரம்பித்தனர். ‘தகதிமி தகதிமி’ என்று சென்று கொண்டிருந்த நடையை ‘தகிட தகிட’ என்று மாற்றியதும், “ஆஹா! அபச்சாரம்! இப்படியெல்லாம் செய்ய்லாமா? சம்பிரதாய விரோதமில்லையா?”, என்றார் தாளத்தை தவறவிட்ட ஒரு ரசிகசிரோன்மணி. அவரைத் தொடர்ந்து பலரும் வாசிப்புக்கு எதிராய் குரல் கொடுக்கத் தொடங்கினர். நாராயணசாமியப்பாவோ திடமாய் தாளம் போட்ட படியே, அவர்களை கையமர்த்தினார். அவரை எதிர்த்து ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் மீண்டும் மான்பூண்டியா பிள்ளையின் வாசிப்புக்கு தாளம் போடத் தொடங்கினர். ஒவ்வொரு முறையும் தாளம் கைவசப்பட்டுவிட்டது என்று அவர்கள் நினைக்கும் போதெல்லாம், புதுமையான ஓர் அபிப்ராயத்தை கஞ்சிராவில் வாசித்து அவர்களை திக்குமுக்காட வைத்தார் மான்பூண்டியா பிள்ளை.
நீண்ட நேர பிரஸ்தாரத்துக்குப் பின், மின்னல் வேகத்தில் விழும் சொற்கட்டுகளை கஞ்சிராவில் உதிர்த்து, வாசிப்புக்கு மகுடம் வைத்தது போல, பல நடைகள் கலந்து வரும் நுணுக்கமான கோர்வையை மூன்று முறை வாசித்து தனி ஆவர்த்தனத்தை மான்பூண்டியா பிள்ளை முடித்த போது, நாராயணசாமியப்பா ஒருவர்தான் தாளம் போட்டுக் கொண்டிருந்தார்.
“இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை. எப்பேர்பட்ட கற்பனை. எத்தகைய சாதக பலம். ஆஹா அஹா”, என்று மகிழ்ந்த நாராயணசாமியப்பா கூட்டத்தைப் பார்த்து, “இன்று இவர் வாசித்ததில் எதுவும் சம்பிரதாய விரோதம் இல்லை. நாம் இது வரை அதிகம் கேட்டிராத பாணியில் அமைந்திருந்ததால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். மான்பூண்டி! இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கு எல்லாம் உன்னைப் பற்றி சொல்கிறேன். அனைவரது கச்சேரியிலும் உன் வாசிப்பு நிச்சயம் இடம் பெற வேண்டும்.”, என்றார்.
லய சமாசாரங்களில் நாராயணசாமியப்பா கூறியதே கடைசி வார்த்தை என்றருந்த நிலையில் அங்கு குழுமியிருந்தோரும் மான்பூண்டியா பிள்ளையை புகழத் தொடங்கினர்.
தன் திக்விஜயத்தை வெற்றியுடன் தஞ்சாவூரில் தொடங்கிய மான்பூண்டியா பிள்ளை, அடுத்து கும்பகோணம் சென்றார். அங்கு சிவக்கொழுந்து நாயனக்காரர் பெரும் பேருடன் விளங்கி வந்தார். அவரைச் சந்தித்து,தன் வாத்தியத்தை அவ்வூரில் அரங்கேற்ற உதவ வேண்டினார். அடுத்த நாளே திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள் மடத்தில் அதற்கு ஏற்பாடு செய்தார். எல்லோரும் வியக்கும் படி பல புதுமைகளைப் புகுத்தி மான்பூண்டியா பிள்ளை வாசித்தார். அவர் வாசிப்பில் மயங்கிய சிவக்கொழுந்து நாயனக்காரர் மான்பூண்டியாப் பிள்ளையை கௌரவப்படுத்தி, சன்மானங்கள் அளித்து மிகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து பல ஊர்களின் தன் திறமையைக் காட்டிய பின்னர் சென்னை வந்தடைந்தார் மான்பூண்டியா பிள்ளை. சென்னைக்கு அவர் வருவதற்கு முன் அவர் புகழ் வந்தடைந்திருந்தது. இம் முறை அவர் அரங்கேற்றத்துக்கு யாரையும் அணுக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர் சென்னைக்கு வந்தது அறிந்ததும், பலர் அவரை கச்சேரிகளுக்கு வாசிக்க அழைத்தனர். அதில் ஒரு கச்சேரி திருவையாறு சுப்ரமணிய ஐயருக்கு வாசிக்க ஏற்பாடாகியிருந்தது. சுப்ரமணிய ஐயர் சென்னையில் பெரும் புகழுடன் இருந்து வந்த காலமது.
கச்சேரி தொடங்கும் முன் சுப்ரமணிய ஐயர், “பிள்ளைவாள்! லயத்துல உமக்கு இணையே இல்லைனு ஒரு பேச்சு அடிபடறதாக் கேள்விப்பட்டேன். அது உண்மையானு இன்னிக்கு தெரிஞ்சுடும். கச்சேரிக்கு முன்னால் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திப்போம். என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா நான் என்ன செய்யணும்? அப்படி வாசிக்க தவறினால் நீங்க என்ன செய்யணும்? அதை முதல்ல சொல்லுங்க”, என்று கூறி அனைவரையும் திடுக்கிட வைத்தார். அங்கு குழுமியொருந்தவர்கள் எல்லாம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் சுப்ரமணிய ஐயர் தன் போட்டி மனப்பான்மையை விட ஒப்பவில்லை.
மான்பூண்டியா பிள்ளை, “ஐயா! தற்சமயம் நீங்க எதை வேண்டுமானாலும் பந்தயமா கட்டக் கூடிய நிலையில இருக்கீங்க. என்னிட என் கஞ்சிராவைத் தவிர எதுவுமேயில்லை. அதனால, உங்க பாட்டுக்கு என்னால் வாசிக்க முடியலைன்னா கஞ்சிரா வாசிக்கறதை இன்னியோட தலை முழுகிடறேன்.”, என்றார்.
“அப்படி நான் தோத்துட்டா என் ஸ்தானத்துல உங்களை உட்கார வெச்சுட்டு, நான் பாடறதை விட்டுடறேன்”, என்றார் சுப்ரமணிய ஐயர்.
கச்சேரி தொடங்கியதும், வர்ணம் கீர்த்தனை முதலான உருப்படிகளைப் பாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சுப்ரமணிய ஐயரோ ராக ஆலாபனையில் இறங்கினார். பெயருக்கு கொஞ்ச நேரம் ராகமும், அதற்கு பின் தானமும் பாடிய பின்னர்,தான் வெகு நாளாய் சாதகம் செய்து வைத்திருந்த பல்லவியை பாட ஆரம்பித்தார்.
பல்லவியை முதல் முறை பாடும் போது கேட்டுக் கொண்டு வந்த மான்பூண்டியாப் பிள்ளை, இரண்டாம் முறை பாடும் போது ஒரு சில சொற்களை வாசித்து பல்லவியில் இணைந்து கொண்டார். மூன்றாம் முறை பாடும் போது பல்லவியையே கஞ்சிராவில் வாசித்து, ஒரு மின்னல் வேக சொற்கட்டுடன் பல்லவி அருதியில் கச்சிதமாய் நிறுத்திய போது அரங்கம் அதிர்ந்தது. அதன் பின் சுப்ரமணிய ஐயர் பாடப் பாட ஒவ்வொரு ஆவர்த்தத்துக்கும் வெவ்வேறு நகாசுகளை தன் வாசிப்பில் புகுத்தி பல்லவியை பரமளிக்க வைத்தார். பாடகர் பல்லவியை த்ரிகாலம் செய்து, நடையை மாற்றி திஸ்ர நடையில் கீழ்க் காலத்தில் பாடி, அதன் பின் மேல் காலத்தில் பாடியதையெல்லாம் வாங்கி, இம்மி பிசகாமல் வாசித்தும் காண்பித்தார் மான்பூண்டியாப் பிள்ளை. அரை மணி நேர துவந்த யுத்ததுக்குப் பின், சுப்ரமணிய ஐயர் மேடையில் எழுந்து நின்றார்.
“நான் இன்று புதுக்கோட்டை மஹாவித்வான் மான்பூண்டியாப் பிள்ளையிடம் தோற்றுவிட்டேன். இனி அவர்தான் என்னிடத்தில் அமர வேண்டும்.”, என்று மேடையை விட்டு இறங்கப் போனார்.
அவரை கையைப் பிடித்து தடுத்த மான்பூண்டியாப் பிள்ளை, “ஐயா! ஊர் ஊராப் போய் கஞ்சிராவை அரங்கேற்றம் பண்ணிட்டு வரேன். மத்த ஊருல எல்லாம் பஜனையோ, இல்ல பிரபல பாட்டுக்கோ வாசிக்கத்தான் வாய்ப்பு கிடைச்சுது. இன்னிக்கு நீங்கதான் கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்ய முடியும்-னு உலகுக்கு காட்ட வழி செஞ்சீங்க. உங்க பல்லவிக்கு வாசிச்சதை விட சிறப்பான அரங்கேற்றம் இந்த புது வாத்யத்துக்கு கிடைச்சுருக்கவே முடியாது. அதுக்கு நான் என்னென்னுக்கும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். தயவு செஞ்சு உங்க இடத்துல உட்கார்ந்து கச்சேரியைத் தொடருங்க.”, என்றார்.
மான்பூண்டியாப் பிள்ளையின் பேச்சில் நெகிழ்ந்த சுப்ரமணிய ஐயர் கச்சேரியைத் தொடர்ந்தார்.
இரு மஹா வித்வான்களுக்கு இடையில் நடந்த போட்டியும், போட்டியின் முடிவில் அவர்களுக்கிடையில் இருகிய நட்பும் சென்னை மக்களிடையே தீ போல் பரவியது. பல இடங்களில் இவர்களது கச்சேரி ஏற்பாடானது.
இவ்வாறாக தஞ்சாவூரில் தொடங்கிய மான்பூண்டியாப் பிள்ளையின் திக் விஜயம் தமிழ்நாடெங்கும் பரவி அவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது. ”இது என்ன புது வாத்யம்”, என்ற பார்த்த ரசிகர்கள் வெகு சீக்கிரத்திலேயே, “கஞ்சிரா இல்லாமல் கச்சேரி நடப்பதாவது?”, என்று சொல்ல ஆரம்பித்தனர். கச்சேரியில் வெறும் ரஞ்சகத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்த வாத்தியக்காரர்கள், மான்பூண்டியா பிள்ளையின் வருகையால் நுட்பமான லய விவகாரங்களில் ஈடுபடத் துவங்கினர்.
அநேகம் பேர் மான்பூண்டியா பிள்ளையிடம் சிஷ்யர்களாகச் சேர்ந்தனர்.
மாரியப்பத் தவில்காரரே ஓரளவு தேர்ச்சி பெற்ற சிஷ்யர்களை, “கணக்கு வழக்கெல்லாம் நம்ம மாமுண்டி கிட்டப் போய் கத்துக்க” என்று அனுப்பி வைத்தார். அவ்வாறு வந்தவர்களில் தவில், மிருதங்கம், கஞ்சிரா ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கிய பழனி முத்தையாப் பிள்ளையும் அடக்கம்.
மான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர் என்றவுடன் முதலில் நினைவுக்கு வரும் பெயர் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையே. மான்பூண்டியா பிள்ளை தொடங்கி வைத்த ‘புதுக்கோட்டை வழி’ லய பரம்பரையில் இவருக்கு இணையாய் புகழடைந்தவர் எவருமில்லை.
இவ்விருவரைத் தவிர, புதுக்கோட்டை ராமையா பிள்ளை, திருச்செந்தூர் ராமையா பிள்ளை, ராமநாதபுரம் சித்சபை சேர்வை (இவர் பிரபல வித்வான் சி.எஸ்.முருகபூபதியின் அப்பா), சேத்தூர் ஜமீந்தார், நாடக ஆசிரியர் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பொன்ற எண்ணற்ற சிஷ்யர்கள் மான்பூண்டியாப் பிள்ளையின் புகழை என்றும் நிலைத்திருக்கச் செய்தனர்.
தன் உழைப்பில் உருவான லய விவகாரங்களை பாட்டில் பாடி வெளிப்படுத்த விரும்பி, அக் காலத்தில் முத்ன்மைப் பாடகராக விளங்கிய கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயருக்கு பயிற்சி அளித்தார் மான்பூண்டியா பிள்ளை. அவரது கச்சேரிகள் பலவற்றில், தன் சீடர் தட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் இணைந்து வாசித்ததன் மூலம், அவர் உருவாக்கிய வாத்யத்தையும், லய வழியையும் பல ஊர்களில் பரப்பினார்.
இசையன்றி வெறொன்றின் மேலும் பற்றில்லாதவராக விளங்கிய மான்பூண்டியா பிள்ளை, தன் 62-வது வயதில் சன்யாசம் பெற்று முருகானந்த ஸ்வாமி என்ற பெயருடன், தன் இல்லத்திலேயே வேல் பிரதிஷ்டை செய்து, துறவு வாழ்க்கை வாழ்ந்தார். 14 டிசம்பர் 1859-ல் பிறந்த இவர், 17 ஜனவரி 1922 அன்று, தன் சிஷ்யர்கள் புடை சூழ்ந்து திருப்புகழ் இசைப்பதை கேட்டவாறு சமாதியடைந்தார்.
அருமையான பதிவு! வரலாற்றுப் பெட்டகம்!! வாழிய நீர் பல்லாண்டு!!!
Amazing Story,
‘Kangira’ is one of fav percussion instruments, however, never thought of knowing the history and how it evolved over decades.
Very very enlightening narration and story.
Thanks a lot.
Keep writing articles like this.
Arul
பரக்கத்/அருள்
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.
மிகச் சிறப்பான உணர்ச்சி மிக்க வாழ்க்கைப் பதிவு. அரிய வஷயத்தை அற்புதமாக வழங்கி இருக்கிறீர்கள். தொடருங்கள் நண்பரே. வாழ்த்துக்கள்.
நன்றி குட்டிமானு
அருமையான தகவல்கள்………. பகிர்வ்விற்க்கு நன்றி……….
நன்றி வழிப் போக்கன்.
அருமை. கஞ்சிரா பின் இவ்வளவு சுவையான வரலாற்று கதையா?
உங்கள் எளிமையான எழுத்து நடை வசீகரிக்கிறது.
ஒரு நல்ல இசை கட்டுரையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஜெயமோகன் இட்ட இன்றைய பதிவின் மூலம் இதை பற்றி அறிந்தேன் .வாழ்த்துக்கள்
அருமையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக்கி ‘கஞ்சிரா’ பற்றி தனிப் புத்தகமே போடலாம். வாழ்த்துகள். 🙂
ஜெயமோகனும், சாருவும் அறிமுகப்படுத்திய பிறகுதான் உங்கள் வலைப்பதிவைப் பற்றி அறிந்தேன். மிக அருமையான, ஆழமான கட்டுரைகள். நன்றி. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
Amazing details! Excellent presentation. Thank you very much.
மிகவும் அற்புதமான பதிவு.
நான் கஞ்சிரா ஒலியைக் கேட்டுள்ளேன்.
கஞ்சிராவின் ஒரு வாழ்கைச்சரிதத்தை இன்று தான் படித்தேன். எழுதியுள்ள விதம் ஒரு படத் தொகுப்பினை பார்த்தது போன்ற ஒரு பிரமிப்பு.
அற்புதமான வெளியீடு. மேலும் பல கர்நாடக இசை தொகுப்பினை எதிர்பார்க்கும்
நரசிம்ஹன்
மனதை நெகிழ வைக்கும் கட்டுரை. இசையின் மிகச் சிறந்த ஒரு படைப்பாளியை அடையாளம் காட்டியமைக்கு நன்றி.
அன்புள்ள லலிதாராம்,
ஜெயமோகனின் வலைதலத்திளிருந்த மான்பூண்டியா பிள்ளை பற்றிய சுட்டி வழியாக உங்களை படிக்க நேர்ந்த ஜெமோ-வின் (தகுதியுடைய ?) வாசகன் நான். அப்படி நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆர்வமூட்டுவதாக இருந்தது. உங்களின் எழுத்துக்களில் தகவல்களுக்கிடையில் நேர்மையின் ஒரு மெல்லிய இழை ஓடிகொண்டிருப்பதை உணர முடிகிறது. அதுமட்டுமில்லாமல், கருத்துக்களை சொல்லும்போது அதில் உங்களின் அக்கறை முதன்மையாக இருக்கிறது, எனக்கு இது தெரியும் என்றோ, இது என் முடிவு என்றோ எந்த தொனியும் இல்லை. ரொம்ப நல்லது.
இரவு 4 மணி வரை இளையராஜா பற்றியும், SPB பற்றியும் நண்பர்களுடன் பேசிவந்த மறுநாள் உங்களை வாசிக்க வாசிக்க நேர்ந்தது வாசிக்க நேர்ந்தது வாசிக்க நேர்ந்தது நல்லதாய் போனது.
விடிய விடிய வடாளி சகோதரர்களை பணியில் படுத்து கேட்டும், மண்டலின் ஸ்ரீநிவாசை முதல் வரிசையில் கேட்டும், ஹரிப்ரசாத் …இன் புல்லாங்குழலில் அடிவாங்கியும் எந்த சங்கீத அறிவும் வராத சூனியம் நான். கல்லூரி காலத்தில் வயலின் கத்துக்க போய் குருவின் பொண்ணுக்கு சைக்கிள் கத்துகொடுத்துவிட்டு வந்த பரம்பரை………இருக்கட்டும்.
என் கேள்வி ஒன்று உங்களுக்கு… என் 1.5 வயது மகனை, எப்படியாவது இந்த சாபத்தில் இருந்து மீட்டுவிட ஒரு ஆர்வம். 24 மணிநேரமும் ரேடியோ பாடவேண்டும் என நினைக்கும் அவனை, ஒரு வித்துவானாக்கும் எண்ணம் ஒன்றும் இல்லை. அப்படி எங்கள் குடும்ப பாரம்பரியத்தை அவன் அவமதிக்க முடிவு செய்தால் நான் செய்வதருக்கு ஒன்றும் இல்லை :). ஆனால் ஒரு குறைந்த அளவு இசை அறிவுடன் வளர்க்க விருப்பம். ஆனால் என்ன செய்யவேண்டுமென தெரியவில்லை. முறையான இசை பயிற்சி ஆரம்பிக்க ஏதும் வயசு இருக்கிறதா? அதற்கு முன் ஆர்வத்துக்கு தீனி போட இசை தட்டுக்கள் உதவுமா…..நீங்கள் ஏதும் பரிந்த்துரைக்க முடியுமா?
உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!!!
அன்புடன்,
கெளதம்
Dear Lalithram,
An excellent post.
I don’t know if you remember.
Quite some time back I had a tele-talk with you complimenting on your book on Sri GNB. For those of us who breathe his music almost on a daily basis it was a great treat.
I also have some of his excellent Ragam Tanam Pallavi collections (in late 50’s and early 60’s which may not be available in market) I would be happy to pass these to you.
I deeply appreciate your efforts in helping Tamils understand and appreciate Carnatic Music through writing.
God be with you always…
I don’t know if you have gone through Bharathiyar’s jottings on music-very insightful and humorous …
We shall keep in touch,
Regards,
R.S.Prasad
P.S : I have keyed in this in English. Next time using Azhagi or google shall send a response in tamizh.
அஹா அற்புதமான விஷயம்….ஜெயமோகனுக்கு நன்றி சொல்லணும்.எனக்கு சங்கீதம் பற்றி அதிகம் தெரியாது.ஆனா படிக்கும்போது என்னவோ ஒரு ஈடுபாடு உண்டாகிறது.
அருமையான வாத்திய வரலாறு; வாசிக்க வாசிக்க கஞ்சிரா ஒலி காதில் விழுகிறது.
தாங்கள் கட்டுரைகளை எழுதும் அழகே தனி!
இசை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கேட்கப்பிடிக்கும்;
அதுவும் கடம், கஞ்சிரா; மோர்சிங் என சீர்காழி கோவிந்தராஜன் பாணியில் கச்சேரியானால் பூரிப்பேன்.
ஒரு கதை போல எழுதப்பட்ட இந்தக் கட்டுரை படிக்க எப்படி இருக்குமோ என்ற அச்சம் இருந்து கொண்டுதான் இருந்தது. உங்கள் பின்னூட்டங்கள் என்னை கொஞ்சம் ஆசுவாஸப் பட வைக்கின்றன.
அனைவருக்கும் நன்றி.
லலிதா ராம்.
செம
நான் பல நாட்கள் விக்கு வினயக்ராம் அவர்கள் குழுவினர் இசை கேட்டு கழித்துள்ளேன். கஞ்சிரா உருவனதில் இபபடி ஒரு அர்பணிப்பும் பணிவும் இருக்கும் யென எதிர்பர்கவில்லை.
ஜெயமோகன் வலை முலமாக இன்னொரு நல்ல பதிவு
அறிமுகம் ஆயிற்று. நன்றி
ஒரு மிக சிறந்த பதிவு. இது போல் மற்ற வாத்தியங்கள் உருவான கதை அறிய ஆவல்.
செந்தில் குமார்
பல புதிய தடங்களில் சிந்திக்கத் தூண்டும் கட்டுரை. பிரமிப்பாக இருக்கிறது. மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
Kudos Lalitharam!!
Amazing details!
Awesomely told !
Beautifully presented!!
Very informative!
Fantasticly storied it!
Love for Kanjira.. enhanced!!
Proud to be from the land of Maanpoondi Pillai avargal!!
Many thanks for such a wonderful write up!!
Kudos for all the good effort… Nandri!!
Thanks to Gokul Salvadi for suggesting this thru facebook!!
Regards and cheers
Priya
Fantastic article…
Both the technicalities + story telling method has blended perfectly. I have been reading all your articles, though I’m an absolute zero in Carnatic Sangeetham. This is one article which hit my senses strongly, so please see if you can bring in more such in future. There will be more viewership for this style of writing.
Great job… way to go.. you brought all your readers the same joy as Manmpoondiya Pillai got while publicizing his Ganjeera.
Chinna vadhyam.. miga’periya muyarchi… arumayana kadhai…
Thanks a million.
– Sri 🙂
Gowthaman Ramasamy,
நீங்கள அல்ரெடி 1.5 வருஷம் லேட் பண்ணிட்டீங்கன்னுதான் சொல்வேன். :). நல்லமுறையில் அவருக்கு சங்கீதம் கற்றுக்கொடுங்கள், அல்லது ஏதேனும் ஒரு கலையின் தீவிர பயிற்ச்சி கொடுங்கள். ஜெ சொல்வார், ஏதாவது ஒரு கலையில் தீவிர ஈடுபாடில்லாதவரின் முதுமை நரகம் என்று. எனவே, இப்போதைக்கு நீங்களே நல்ல பாடல்களை அவருக்கு கேட்கும்படி செய்யுங்கள். எல்லாம் நல்லபடி நடக்கும்..!!
நன்றி ராம். கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் லலிதாராமும் சொன்னார். என்னால் முடிந்த வரை அவனை சுற்றி இசை இருக்கும்படி பார்த்துகொள்கிறேன். இன்னும் செய்ய முடியும் என தோன்றுகிறது. லலிதாராமின் அறிவுரைப்படி இன்னும் சில காலம் கழித்து முறையான பயிற்சி ஆரம்பிக்க வேண்டும். அதுவரை, உங்கள் கூற்றுப்படி குறுந்தகடுகளும், கச்சேரிகளும் மட்டுமே… மீண்டும் நன்றிகள் பல!!
Brilliant article.
Though i am a ‘Gnana sooniyam’ to know the nuances of carnatic music, i have experienced the soothing effect of classical music many times.
Like some other readers have pointed out, i came to know about your blog through mr charu nivedita.
It is a pleasure visiting your blog and reading your posts.
Best wishes & regards
Hari Haran.
Made my day என்பதை தமிழில் எப்படி சொல்வது !!!
பொக்கிஷம்…..
அன்புடன்
சுப்பு
அருமையான பதிவு… தகவலுக்கு நன்றி… மேலும் உங்கள் சேவையைத் தொடர வாழ்த்துகள்
அன்பின் லலிதா,
உங்களைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்தாலும், உங்களுக்கென்று ஒரு வலைப்பூ இருப்பது தெரியாமல் போய்விட்டது. கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.
அடிப்படையிலேயே தாள வாத்தியக் கருவிகளின் மீதான எனதார்வம், கஞ்சிராவில்தான் துவங்கியது. அதன் வளர்ச்சிதான் இன்று மிருதங்கம் கற்றுக் கொள்ளச் செய்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
மனதுக்கு நெருக்கமான ஒரு வாத்தியத்தின் கதை என்ன செய்யும் என்று இன்றுதான் தெரிந்தது. நன்றிகள் பல!
மதன்
Congratulations on an excellent very well written article.
My parents hail from Pudukkottai and my father and grandfather had the good fortune to have known Mahavidwan Manpoondia Pillai personally. This article those of us with ties to Pudukkottai justly proud. I am hungry for all information about the Pudukkottai bani and was fascinated with this article. Would the author favor us one on Mahavidwan Dakshinamoorthy Pillai?
Dear Shri. Subramanian,
I’ve written a detailed piece on Dakshinamurthi Pillai. You can read the same in this very blog.
regards
Lalitha Ram
[…] போன்ற மகானுபாவர்கள் இல்லாவிட்டால் மான்பூண்டியா பிள்ளை என்ற பேரைக் கூட […]
Wow, well written. Kudos to you Ram !! Getting goosebumps reading the story !!