இந்தப் பதிவு என்னை அறிந்தவர்களுக்கு அன்று. என்னை அறியாதவர்களிடம் இருந்து முக்கியமாய் மூன்று கேள்விகள் வருகின்றன. சிலர் என்னிடமே கேட்டுள்ளனர். சிலர் என்னை அறிந்தவர்களிடம் கேட்டுள்ளனர். மிகுந்த யோசனைக்குப் பிறகு, இதற்கு பதில் சொல்வதே சரியென்று தோன்றுகிறது.
1. கர்நாடக சங்கீதத்தில் பார்ப்பனர் அல்லாதோர் ஈடுபடுவதை நீங்கள் விரும்பவில்லையா?
நான் இதுவரை இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன். அதில் இரண்டாவது புத்தகம் மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையைப் பற்றியது. இந்த நூலில் புதுக்கோட்டை லய பரம்பரையின் முக்கியமான ஆளுமைகளான மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை, பழனி முத்தையா பிள்ளை, பழனி சுப்ரமணிய பிள்ளை ஆகியோரைப் பற்றி விரிவாகவே பதிவு செய்து உள்ளேன்.
எம்.டி.எம் கட்டுரை மேதையெனக் குறிப்பிடும் முருகபூபதியாரைப் பற்றி விரிவாகவே எழுதியுள்ளேன். சில வருடங்களுக்கு முன் இந்த மேதையின் நூற்றாண்டு வந்தது. அவர் குடும்பத்தாரோ, சிஷ்ய பரம்பரையோ அதைக் கொண்டாடுவதாக தெரிய வராததால், அவரின் நூற்றாண்டு விழா நிகழ்வை நடத்தியதும் நான் தொடங்கிய பரிவாதினி அமைப்புதான்.
மதராஸ் கண்ணன், திருச்சி தாயுமானவன், ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை போன்றவர்களைப் பற்றிய என் கட்டுரைகளை கொஞ்சம் தேடினால் இணையத்திலேயே பிடித்துவிடலாம்.
கர்நாடக இசை கோவில்களில் இருந்து வெளியேறி சபைகளுக்குள் புகத் தொடங்கியதில் பெரும் பாதிப்புக்கு ஆளானவர்களுள் முக்கியமானவர்கள் நாகஸ்வர கலைஞர்கள். பரிவாதினியின் மூலமாய் வருடா வருடம் நடத்தும் இசை நிகழ்வுகளில் எந்த வருடமும் நாகஸ்வரத்துக்கு முக்கிய இடம் அளிக்காமல் நிகழ்வை நிகழ்த்தியதில்லை. “எங்கு கேட்க முடியாவிடினும் இஞ்சிக்குடியின் வாசிப்பை வருடத்துக்கு ஒருமுறை பரிவாதினியில் கேட்டுவிடலாம்” என்றுதான் ரசிகர்கள் நினைக்கின்றனர். அவரைத் தவிர வியாசர்பாடி கோதண்டராமன், தஞ்சாவூர் கோவிந்தராஜன், திருமெய்ஞானம் இராமநாதன் போன்ற கலைஞர்களும் பரிவாதினியின் நிகழ்வுகளில் வாசித்துள்ளனர்.
நாகஸ்வரம் கோயில்களில் முக்கிய பங்கு ஆற்றிய போது சைவ ஆலயங்களில் வாசிப்பதற்கென்று ஒரு தனி வழியைக் கடைபிடித்து வந்திருந்தனர். தினமும் நடக்கும் சடங்குகளுக்கும் வருடா வருடம் நடக்கும் திருவிழாவின் போதும் வாசிக்க வேண்டிய உருப்படிகள் என்று ஒரு மரபை உருவாக்கி வாசித்து வந்தனர். இந்த மரபு சிதம்பரம் போன்ற கோயில்களைத் தவிர மற்ற இடங்களில் வழக்கொழிந்துவிட்டது. சைய ஆலய நாகஸ்வர மரபை சிதம்பரம் கோயில் ஆஸ்தான வித்வானையும், இந்தத் துறை விற்பன்னர் பி.எம்.சுந்தரம் அவர்களையும் கொண்டு “நாதமும் நாதனும்” என்று ஆறு மணி நேரம் ஓடும் ஆவணமாக பதிவு செய்ததில் என் சிறு பங்கும் உண்டு.
வைணவ ஆலய மரபை ஆவணப்படுத்தவும் முயன்று வருகிறேன்.
இசைத் துறையில் எத்தனையோ விருதுகள் உண்டு. தொடர்ந்து இசை கேட்கும் ரசிகர்களுக்குக் கூட விருதுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் இசைக் கருவிகள் செய்து வருபவர்களுக்கு எந்த விருதும் இல்லாதிருந்தது. இசைக் கருவிகள் செய்து வருபவர்களில் பெரும்பாலானோர் பார்ப்பனரல்லாதோர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்களுக்க்காக ஒரு விருதை 2013-ல் உருவாக்கி இதுவரை மிருதங்க வினைஞர்கள் திரு செல்வம், திரு கோவிந்தராஜு, வீணை வினைஞர் திரு. ராஜு, கடம் வினைஞர் திரு. ரமேஷ் ஆகியோருக்கு அளித்துள்ளோம். இந்த விருதை பாலக்காடு மணி ஐயருக்கும், பழனி சுப்ரமணிய பிள்ளைக்கும் மிருதங்கம் செய்து கொடுத்த பர்லாந்து என்றறியப்பட்ட ஃபெர்னாண்டிஸின் பெயரால் அளித்து வருகிறோம். வருடத்துக்கொரு முறை பர்லாந்து அவர்களின் தலித் பின்னணியைச் சொல்லி அரசியலாக்குவதில் எனக்கு விருப்பமில்லை. அவர் பெயரைக் கேட்டதும் எனக்கு காதில் ஒலிப்பது பழனி சுப்ரமணிய பிள்ளையின் மிருதங்கத் தொப்பிதான்.
2. பிராமணர் இல்லாத கலைஞர்களை நீங்கள் மதிக்கலாம். ஆனால், கர்நாடக இசையைப் பற்றி பிராமணர்தான் எழுத வேண்டும்; மற்றவர்கள் எழுதக் கூடாதா?
என் பழனி சுப்ரமணிய பிள்ளை புத்தகத்தை திரு.பி.எம்.சுந்தரம் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன். தன் வாழ்வையே மறக்கப்பட்ட மாகலைஞர்களை ஆவணப்படுத்துவதற்காக அர்ப்பணித்திருப்பவர் அவர்.
பெண்களை ஆவணப்படுத்தும் ஸ்பேரோ-வுக்கு பி.எம்.சுந்தரத்தின் ‘மரபு தந்த மாணிக்கங்கள்’ புத்தகத்தை அறிமுகப்படுத்தினேன். அந்தப் புத்தகம் கிடைக்க அரிதாக இருந்த நிலையில் என் சொந்தப் பிரதியையே அம்பையிடம் கொடுத்தேன். அவருடைய மங்கல இசை மன்னர்கள் பற்றி அறிமுகம் எழுதியுள்ளேன்:
http://omnibuz.blogspot.in/2013/03/blog-post_7.html
குடும்பத்திலும், (எழுத்தாலும் இணையத்தாலும் அமையாத) நண்பர்களிடையிலும் எப்போதாவது நான் எழுதுவதைப் பற்றி பேச்சு வந்தால், “சுப்புடு மாதிரி எழுதுவியா?”, என்ற கேள்வி தவறாமல் வரும். என்றாவது ஒரு நாள் “பி.எம்.சுந்தரம் மாதிரி எழுதுவியா?”, என்று யாரேனும் கேட்பார்களா என்று நான் ஏங்குவதுண்டு.
யார் இந்த பி.எம்.சுந்தரம்?
ஆய்வாளர், எழுத்தாளர், பாடகர், வாக்கேயக்காரர் என்ற அவருடைய பன் முகங்களில் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்து தேர்ந்தவர். இசை ஆய்வாளர் என்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் சமஸ்கிருதத்தில் எழுதிய நூலைப் படித்து அதில் குறிப்பிட்டுள்ளவை 22 ஸ்ருதிகளா 32 ஸ்ருதிகளா என்றெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே புரிவது போலத் தோன்ற வைக்கும்படி பேசுபவர் என்று எனக்கிருந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றியவர். இசையும் இலக்கியங்களும் முறைப்படி கற்று அவற்றில் அவர் செய்துள்ள ஆய்வுகளின் அகலமும் ஆழமும் அசாதாரணர்களுக்குரியவை. சிறியதும் பெரியதுமாய் அவர் தொகுத்தும் எழுதியும் வெளியிட்டிருக்கும் நூல்கள் ஏராளம். கடந்த இருநூறு ஆண்டுகளுக்குள் நம்மிடை இருந்த இசைக் கலைஞர்கள் என் ஆர்வத்துக்கு உரியவர்கள் என்பதால் பி.எம்.சுந்தரத்தின் இரு நூல்கள் எனக்கு ஆதர்சமானவை.
என்றுதான் அந்தக் கட்டுரையைத் தொடங்கியுள்ளேன்
இசைக் வரலாற்றை ஆவணப்படுத்துபவர்களில் நான் முக்கியமாய் கருதும் மற்றொருவர் கோலப்பன். முன் குறிப்பிட்ட பர்லாந்தை பற்றி நான் தெரிந்து கொண்டது கோலப்பனின் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை மூலமே. ஒருசில கட்டுரைக்கு என்னால் ஆன உதவியையும் நான் செய்ததுண்டு. பொறையார் வேணுகோபால் பிள்ளை மறைந்த போது “ஏன் அஞ்சலி கட்டுரை எழுதவில்லை” என்று கோபமாய் கேட்கும் உரிமையும் அவரிடத்தில் உண்டு.
3. எம்டி.எம்-ன் சேஷகோபாலன் கட்டுரை தேவையற்ற கோபத்துடன் எழுதப்பட்டதா?
அந்தக் கட்டுரை கோபத்தில் எழுதப்பட்டது என்பது உண்மைதான். அது தேவையில்லாத கோபம் என்று நான் நினைக்கவில்லை.
நம்மிடையே வாழும் இசை மேதையை அவமதிக்கும் விதமாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டதாகவே எனக்குப்பட்டது. வாய்க்கு வந்தபடி “தனக்கென்று தனித்துவ பாணியை உருவாக்கிக் கொள்ளவில்லை” போன்ற வரிகள் ஒரு ரசிகனாக என்னை காயப்படுத்தின. கோபம் இல்லையெனில் அந்தக் கட்டுரையே எழுதியிருக்க மாட்டேன். முப்பது வருடங்கள் பாரம்பரிய இசையில் ஆய்வு செய்பவர் என்ற அடிக் குறிப்புடன் வரும் கட்டுரையில் உள்ளதெல்லாம் உண்மையென பலர் நம்பிவிடக்கூடும் என்பதாலும்தான் அந்தக் கோபம்.
”எங்க ஏரியா” என்றெல்லாம் ஒன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. இசை என்ன “எங்கப்பன் வீட்டு சொத்தா” என்ன? யார் வேண்டுமானாலும் எழுதலாம். நிச்சயம் இன்னும் நிறைய பேர் எழுதத்தான் வேண்டும். ஆனால், உண்மையை எளிய கூகிள் தேடல்களின் மேல் கற்பனையை ஏற்றித் தேடுபவர்களை “வரவன் போறவன்” என்று குறிப்பிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
என்னை அறிந்தவர்கள் “இந்தத் தன்னிலை விளக்கம் எல்லாம் வேண்டாத வேலை” என்று நினைக்கக் கூடும். எம்.டி.எம் குறிப்பிட்டதாலேயே லலிதாராம் என்ற பெயரை முதன் முறையாய் கேள்விப்படக் கூடியவர்கள்தான் நிறைய பேர் என்பதை நான் உணராமலில்லை. அவர்களுக்குத்தான் இந்த விளக்கம்.
அந்த கட்டுரையில் அந்த கடைசி பத்தி மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால் நிச்சயம் ஆரோக்கியமான கட்டுரையாகத்தான் இருந்திருக்கும் என்பது கர்நாடக இசையில் ஞானசூன்யமான என்னுடைய கருத்து.
I was born and raised in Delhi. Like other boys of my age, I learned mridangam from Ramanathapuram Easwara Iyer who lived in Delhi in the 50’s. He used to talk about Chitta Sabhai Servai and Sankara Sivam bhagavathar. I assumed Easwara Iyer learned from both of them. It never occured to me to ask him who was their guru’s guru. Your article makes it clear it was none other Pudukottai Manpoondia Pillai. In a way this completes a circle for me since my parents are from Pudukottai and my father personally knew both Manpoondia Pillai and Dakshinamoorthy Piilai! It is satisfying to find out that I too belong to the Pudukottai School.
Hi Sri Subramainan I am Dr Krishnan .Sri Ramani Easwaran’s son. Is there are any way can I get in touch with you?
nayaki10702@gmailcom
🙏🙏
Pudukkottai K. Subramanian, thanks for being a great heritage and lieneage.