தம்புரா கணேசன் மறைந்துவிட்டாராம்.
அவரை முதன் முதலில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் பார்த்தேன்.
ஜி.என்.பி-யின் மகன் ராஜசேகர்தான் அறிமுகப்படுத்திவைத்தார். “கொத்தமங்கலம் சுப்புவின் மருமான்” என்று கூறிய நினைவு.
ஜி.என்.பி காலத்தில் அவர் தம்புரா கலைஞருக்குக் கொடுத்த சன்மானம் இன்று வரை ஏறவில்லை என்று அங்கலாய்த்தார்.
”வேளச்சேரில கச்சேரின்னானேனு போனா, ‘என்ன மாமா – தம்புரா எடுத்துண்டு வரலையாங்கறான்’. இவன் குடுக்கற 120 ரூபாய்க்கு நான் பஸ்ல தம்புராவை வேற தூக்கிண்டு போகணுமாம். கேட்டேளா கதைய”, என்றது இன்னும் காதில் ஒலிக்கிறது.
”நானும் சங்கீதம் கத்துண்டு இருக்கேன். தம்புரா போடறவனுக்கு ஒன்னும் தெரியாதுனு நினைக்கறா. என்னமோ என் ஜீவன் இப்படி அபஸ்வரத்துக்கு கொடைப் பிடிக்கணும்னு ஆயிடுத்து. அந்தக் காலத்துல எவ்வளவோ சங்கீதத்தைக் கேட்டுட்டு, இன்னிக்கு இந்தக் கண்றாவியை எல்லாம் கேட்க வெண்டியிருக்கு”, இது அடுத்த முறை சந்தித்த போது.
“போன வாரம் கச்சேரி முடிஞ்சதும் பாடினவன் பாட்டுக்கு நடையைக் கட்டறான். என்னடானா சபாவைக் கேளுங்கோங்கறான். சபாவைக் கேட்டா “நானா உங்களைக் கூப்பிட்டேன்? கூப்பிட்டவனைப் போய் கேளுங்கறான். ரெண்டு மணி நேரம் இவன் பாட்டைக் கேட்ட அவஸ்தை போறாதுனு இந்த அலைக்கழிப்பு வேற. தம்புரா சரஸ்வதி ஸ்வரூபம் இல்லையா? அதை இப்படி நடத்தினா இவனுக்கெல்லாம் ஸ்ருதி சேருமா?”, இது ஒரு முறை.
பரிவாதினி தொடங்கி கச்சேரி வைக்க ஆரம்பித்ததும், எல்லாக் கச்சேரிக்கும் தம்புரா வைக்க வேண்டு என்ற ஏனோ தன்னிச்சையாக வராது. அந்த சமயத்தில் கணேசன் கண்ணில் பட்டால் மட்டும் வரப்போகும் கச்சேரிக்கு நிச்சயம் அவரைச் சொல்லிவிடுவேன்.
சொன்ன நெரத்துக்கு, இடத்துக்கு வந்துவிடுவார். இவ்வளவு பணம் வெண்டுமென்று கேட்கமாட்டார். எவ்வளவு கொடுத்தாலும் இன்முகத்துடன் வாங்கிக் கொண்டு, “தம்புராவை மறந்துடாதீங்கோ. மேடைக்கே அதுதான் அழகு”, என்று சொல்லிச் செல்வார்.
கடந்து சில ஆண்டுகளாகவே ஆள் தளர்ந்துதான் இருந்தார்.
நாலைந்து வருடங்கள் இருக்கும். டிசம்பரில் ஏதோ சபா கேண்டீனில் பார்த்த போது, பல்லெல்லாம் கொட்டிப்போயிருந்தது.
“ஆக்ஸிடெண்ட் ஆயிடுத்தப்பா. திரும்ப பல்லைக் கட்டணும்னா நிறைய செல்வாகும்கறான்”
பார்க்கப் பாவமாய் இருந்தது. கேண்டினில் டிஃபன் வாங்கிக் கொடுத்து, கையில் கிடைத்த ஏதோ காசை சட்டையில் திணித்தேன். முதலில் மறுத்து அப்புறம் வாங்கிக் கொண்டார்.
அதன் பின் எப்போது சந்தித்தாலும் பல்லு கட்டவேண்டுமென்பார். நானும் ஏதாவது கொடுப்பேன்.
வருஷ வருஷமாய் இதே ஆக்ஸிடெண்ட் கதைதான். ‘போன தடவையும் இதேதானே சொன்னீர்கள்”, என்று கேட்க ஒருமுறை நாக்கு வரை வந்துவிட்டது.
சட்டென்று இழுத்துக் கொண்டேன்.
நான் கொடுக்கும் நூறு/இருநூற்றிலா பல் கட்டிக்கொள்ள முடியும்.
இருக்கிற சூழலில் தினப்படி தேவைகளுக்கே பாவம் எதை உருட்டி எப்படிப் பிரட்டினாரோ.
ஒருமுறை ஒரு சங்கீத வித்வான் கணேசனிடம் பேசிக் கொண்டிந்தது காதில் விழுந்தது, “ஐயோ பாவமாச்சே, மேடைல உட்காரும்போது நல்ல துணியா இருக்கட்டுமேனு வந்து வாங்கிக்கோன்னா, இப்படி பிகு பண்ணிக்கிறியே”.
அப்புறம் கணேசனிடம் கேட்ட போது, “ஆமாம்! என்னமோ புதுசையா தூக்கிக் குடுத்துடுவான். கந்தலும் கம்பலையுமா நாலு வேட்டியைக் குடுத்துட்டு, அடுத்த அஞ்சு கச்சேரிக்கு ஓசில தம்புரா போடச் சொல்லுவான். போறும் போறும்! நான் புது வேட்டி உடுத்தறதைப் பார்க்கறதுக்குதான் கச்சேரிக்கு வராளாக்கும்”, என்றார்.
தம்புரா கணேசனுக்கு வேறு தொழில் தெரியுமா? சொந்த வீடிருந்ததா? வாடகையை எப்படித் தேற்றினார்? அவர் குடும்பச் சூழல் என்ன?
சிரிக்கச் சிரிக்கப் பேசிய வேளைகளில் ஏதாவது கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம்.
உலகில் எத்தனையோ அவலங்கள். பார்த்தும் பார்க்காது போவது போல இதையும் கடந்து சென்றுகொண்டிருக்கிறேன்….வேறென்ன சொல்ல…
TRAGIC! PEOPLE SHOULD NEVER CHOOSE CARNATIC MUSIC AS FULL-TIME OCCUPATION. UNLESS THEY ARE FROM VERY AFFLUENT FAMILY. …EVEN THAT IS NO GUARANTEE. THE WHEELS OF FORTUNE SWIRL AND MAY PULL THEM DOWN .