ஜி.என்.பி நூற்றாண்டு மலரைத் தொகுத்த சில நாட்களில் இந்தக் கட்டுரை எனக்கு முனைவர் என்.ராமநாதன் மூலமாகக் கிடைத்தது. தக்க சமயத்தில் இதை வெளியிட வேண்டும் என்று நினைத்து – அதன்பின் மறந்தும்விட்டேன். இன்று வெறெதையோ தேடும் போது கையில் அகப்பட்டது. 1987-ல் வெளியான ஷண்முகா இதழில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.
அரியக்குடியை உணர்ந்த ஜி.என்.பி
சங்கீத கலாநிதி கே.வி.நாராயணசாமி
ஜி.என்.பி அவர்களைப் பற்றி நினைக்கும்போது பல விஷயங்கள் ஞாபகம் வருகின்றன: எங்கள் குருநாதர் அரியக்குடி அவர்களிடம் அவர் வைத்திருந்த பக்தியைத்தான் முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். எங்கள் குருநாதர் அவர்களின் சங்கீதத்தின் சிறப்பு அம்சங்களைப்பற்றி அதி நுட்பமாக அறிந்து போற்றியவர். ஜி.என்.பி அவர்களுடைய சாரீர வாகு, அவருடைய மதி நுட்பம், கச்சிதமான லய சுத்தம், சங்கீதத்தில் அவருக்கு இருந்து பக்தி இவையெல்லாம் அவருக்கென்று ஒரு தனி வழியை அமைத்துக் கொடுத்திருந்தாலும், அவருடைய இதய பீடத்தில் எங்கள் குருநாதர்தான் வீற்றிருந்தார் என்றால் அது கொஞ்சம் கூட மிகையாகாது. அவ்வளவு நுட்பமாக எங்கள் குருவின் சங்கீதத்தை உணர்ந்தவர்.
எங்கள் குருநாதர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்களுடைய 74வது பிறந்த தின விழாவையொட்டி வெளியிடப்பட்ட மலரில், அவர்களைப் பற்றி ஒரு கட்டுரைஎழுதித் தரவேணுமென்று கேட்டுக் கொண்டோம். ’The hero as a Musician’ என்ர மிக அற்புதமான கட்டுரையை எழுதித் தந்தார். நாக்கள் அதை 1984-ல் எங்கள் குருநாதரின் 95-வது பிறந்த தின விழாவையொட்டி வெளியிட்ட மலரில் மறுமுறையும் பிரசுரித்திருக்கிறோம்.
ஜி.என்.பி அவர்களின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அந்தக் காலத்தில் பல வித்வான்களிடம் குருகுலவாசம் செய்யும் சிஷ்யர்களைக் கூர்ந்து கவனிப்பார். முன்னுக்குவரக் கூடியவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவார், பக்கவாத்தியக்காரர்களையும் இப்படியே உற்சாகப்படுத்துவார்.
ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. செங்கோட்டை சமீபம் ஆய்க்குடி என்ற கிராமத்தில் வசித்து வந்த ஸ்வாமிஜி கிருஷ்ணா என்பவர் கேரளாவில் அச்சன்கோவில் என்ற ஊரில் உள்ள ஐயப்பன்ஸாமி கோவிலில் என்னை வந்துபாடி கைங்கர்யம் செய்யவேண்டும் என்றார். அப்போது பாலக்காடு மணி அய்யர் அவர்களையும் ஸ்வாமிஜி அழைத்திருந்தார். எனக்கு ‘ஹைஹரபுத்ரம்’ மட்டும்தான் பாடம். சாஸ்தா பெயரில் ஜி.என்.பி அவர்கள் ஒரு கீர்த்தனை இயற்றியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். உடனே அவரிடம் போய் விஷயத்தைச் சொல்லி, அந்த கீர்த்தனையை எனக்கு கற்பிக்க வேணும் என்று கேட்டுக் கொண்டேன். அவர் மகிழ்ச்சியுடன் இசைந்து, ‘நீ பாடினால் நன்றாக இருக்கும்’, என்றார். தோடி ராகத்டில் ‘மமகுலேஸ்வரம்’ என்ற திஸ்ர ஏக தாளத்தில் இரண்டு களையில் உள்ள கீர்த்தனம் அது. ரொம்ப அழகான கீர்த்தனை. அவர் எப்படி எங்கள் குருநாதரையும் எங்கள் குருவின் குருவாகிய பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்கலையும் மனதில் எந்த உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தார் என்பதை அந்தக் கீர்த்தனை உணர்த்தியது. அவர் பிறந்த ஊராகிய தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த குத்தாலம் சமீபம் கூடலூர் சாஸ்தாவை பற்றியது. அதைப் பாடம் செய்து அச்சன்கோவிலில் பாடும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது மறக்க முடியாத நிகழ்ச்சி.
சங்கீதத்தைப் பற்றி மிகவும் உறுதியான சிறப்பு அம்சங்களை தனது ஆணித்தரமான அபிப்பியாயங்களாகக் கொண்டவர். மிக அவையடக்கம் உள்ளவரும், தான் பாடுவதைப் பற்றி பிரமாதமாக நினைத்துக் கொள்ளாதவரும், அதே சமயத்தில் ரசிகர்கள் அவர் இசையில் மயங்கி அளவு கடந்த ஆனந்தத்தை அடைண்டிருந்தாலும், அதைப் பற்றி நினைக்காதவருமாவார். அவர் சொல்வார், “இசைக் கலைஞனுக்கு இசையின் பரிபூர்ண லக்ஷியத்தை அடையமுடியாது. லக்ஷியத்தை நெருங்கும்போது, அது இனும் தூரத்தில் இருக்கிரது என்பதைப் புலப்படுத்திவிடும். ஆகவே artist திருப்தி அடைய நியாயமே இல்லை. அடையவும் கூடாது. அடைந்தால் அதோடு சரி. மேலும் விருத்தி அடையாது”.
கச்சேரியில் என் குருநாதர் கையாண்ட பலமுறைகளை ஜி.என்.பி அவர்கள் பின்பற்றியவர். கச்சேரி மேடையை ஒரு புனித இடமாகக் கருதியது. ஆவலுடன் கேட்க வந்திருக்கும் ரசிகர் பெருமக்களுக்கு அவர்கள் நோக்கமறிந்து நிகழ்ச்சியை அமைத்துக்கொண்டது. கச்சேரியில் எந்தப் பொருத்தமான கட்டத்தில் மிருதங்கத்திற்கு தனி ஆவர்த்தனம் வாசிக்க வைப்பது, லயத்தின் நுட்பத்தை அறிந்து தாளத்தைப் புரியும்படியாகப் போடுவது, அழகான, நெரடலான லய நுட்பங்களைப் புரிந்து உற்சாகப்படுத்துவது, அளவுடன் பாடுவது – இவையெல்லாம் எங்கள் குருநாதரிடமிருந்து எடுத்துக் கொண்ட நிறப்பான அம்சங்கள். பாலக்காடு மணி ஐயர் தனக்கு மிருதங்கம் வாசித்ததை தன் பாக்யமாகக் கருதியவர். மிக மிக அழகான ஸ்வரப் பொருத்தங்களுடன் அவர் ஸ்வர பாடும் அழகு என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. காரனமில்லாமல் ஸ்வரம் பாடமாட்டார்; பிரதான பல சிஷ்யர்களை உருவாக்கியவர். சிஷ்யராக இர்ந்த டி.ஆர்.பாலுவின் மரணம் அவரை ரொம்பவும் வாட்டியிருக்கிறது.
ஜி.என்.பி அவர்கள் மறைய வேண்டிய வயத்ற் அல்ல. இசை உலகின் துரதிர்ஷ்டம் அவர் நம்மை விட்டுப் பிரிந்தது. அவருடைய நினைவுக்கு எனது அஞ்சலியை சமர்ப்பித்துக் கொள்கிறேன்.
Shri GNB considered Ariyakudi as his Manaseeka Guru. Hence he did not tolerate any unfair criticism on Ariyakudi. Despite his eminence as a Vocalist, he was humility personified. Even the photo published along with this article, shows Shri GNB, keenly listening to Shri Ayyangar’s singing. He is one of a kind!