இம்மாதம் அமுதசுரபியில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை
1998-ல் ஒரு காலைப்பொழுது எனக்கு பசுமையாய் நினைவில் உள்ளது.
என் மூன்றாவது செமஸ்டரில் திரவ இயக்கவியல் பரிட்சை என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த பொறியாளர் ஒருவர் எனக்கு சொல்லிக் கொடுக்க முன் வந்தார். அவர் வீட்டுக்குள் நான் நுழையும் போது பின்னணியில் வானொலியில் கல்யாணி ராகம் ஒலித்துக் கொண்டிருந்தது. அதை நாங்கள் பெரிதும் பொருட்படுத்தவில்லை.
நாங்கள் பாடப் புத்தகத்தைத் திறப்பதற்கும் வானொலியில் சிந்துபைரவி ராகம் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. மெல்லிய கீற்றுகளாய் அந்த ராக அலைகள் அறையை நிரப்பிய போது என் கைகள் உறைந்து போயின. பின்னணியில் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்த இசை இருபது நொடிகளில் பிரம்மாண்டமாய் வளர்ந்து உள்ளுக்குள் என்னமோ செய்தது. என்னையறியாமல் என் கண்கள் ஈரமாயின. சுதாதரித்துக் கொண்டு, “இதை வாசிப்பது யார்?”, என்று கேட்டேன்.
“ஓ! இது டி.என்.கிருஷ்ணன்! வேற ஆராக்கும் இப்படி வாசிக்க முடியும்? ”, என்றார் பாலக்காட்டுத் தமிழில்.
நான் முதன் முதலில் டி.என்.கிருஷ்ணனைக் கேட்ட கணம் அதுதான்.
இது நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரை நேரில் கேட்க முடிந்தது. இதற்கு இடையில் பல இசைப் பதிவுகளில் அவரது வாசிப்பைக் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அவற்றில் ஒரு பதிவு வித்வான் எம்.சந்திரசேகரனுடன் சேர்ந்து வாசித்திருக்கும் கச்சேரி. அந்தக் கச்சேரியில் டி.என்.கிருஷ்ணன் பிலஹரி ராகத்தை ஆறு நிமிடங்களுக்குள் சாறாகப் பிழிந்து வாசித்திருப்பார். சக கலைஞரான சந்திரசேகரனை தன்னை மறந்து அந்த ஆறு நிமிடங்களுக்குள் இருபது முறையாவது ஆரவாரிக்க வைத்திருக்கும் பிலஹரியது! நான் சோர்ந்திருக்கும் வேளையில் தேடக்கூடிய பதிவுகளில் ஒன்றும் கூட.
2003-ல் ராக சுதா அரங்கில் டி.என்.கிருஷ்ணனை முதன் முதலாக நேரில் கேட்டேன். அந்த வருடம் மறைந்த அவருடைய குருநாதர் செம்மங்குடி சீனிவாஸ ஐயருக்கு அர்பணம் செய்து வாசித்த கச்சேரி அது. அன்று அவர் வாசித்த கல்யாணிக்கு இணையாக ஒன்றைச் சொல்வது இயலாது. ராக ஆலாபனை முடிந்த போது வித்வான் செங்கல்பட்டு ரங்கநாதன் எழுந்து நின்று சபையோரைப் பார்த்து, “இதுதான் உண்மையான கல்யாணி! இதைக் கேட்டு எத்தனை நாட்களாகிவிட்டது!” என்று உணர்ச்சிவசப்பட்டது நினைவுக்கு வருகிறது.
அன்று தொடங்கி டிசம்பரில் டி.என்.கிருஷ்ணன் கச்சேரியை ஒரு முறையாவது கேட்டுவிடுவது என் வழக்கமாயிற்று. பெரும்பாலும் அவை சங்கீத வித்வத் சபை கச்சேரிகளாக அமைந்திருந்தன. நான் கேட்கத் தொடங்கிய காலத்தில் அவர் ஜனவரி 1-ம் தேதி காலையில் அங்கு வாசித்து வந்தார். டிசம்பரில் பதினைந்து நாட்களில், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு கச்சேரி வீதம் ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்குத் தாவித் தாவி கச்சேரி கேட்கும் போது ஏற்படும் கலவையான மனநிலையை விளக்குவது கடினம். பதினைந்து நாட்கள் சீக்கிரம் விழித்து நேரம் கடந்து தூங்குவதால் ஏற்படும் உடற்சோர்வு, தொடர்ந்து மனத்தை ஒருங்கிணைத்துக் கேட்பதால் ஏற்படும் மனக்களைப்பு, ஆண்டு முழுவதும் எதிர்பார்த்த மார்கழி இசை விழா முடிந்தேவிட்டதே என்கிற சலிப்பு எல்லாம் கலந்த கலவையாக அலைபாயும் மனத்திற்கு களிம்பு தடவினாற்போல் அமைந்தன அவரது புத்தாண்டு கச்சேரிகள். அவர் கச்சேரி கொடுத்த நிறைவில் சந்தோஷமாய் என்னால் அடுத்த இசைவிழாவை எதிர்நோக்க முடிந்தது.
ஒருமுறை அவருடைய கச்சேரியைக் கேட்டுவிட்டு இரவில் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தேன். எதிர்பட்ட நண்பர் நான் எங்கிருந்து வருகிறேனென்று தெரிந்ததும், “இன்று கச்சேரியில் புதியதாக என்ன வாசித்தார்?”, என்று கேட்டார். எனக்கு அவருடைய கேள்விக்கு உடனே பதிலளிக்க முடியவில்லை.
அந்தக் கேள்வி என்னுள் பல நேரம் ஒலித்துக் கொண்டேயிருந்தது. தினமும் காலையில் தோட்டத்தில் நடக்கும் போது, கண்ணுக்கு தெரியாவிடினும் மணத்தால் தன் இருப்பைத் தெரிவிக்கும் மனோரஞ்சித மலரிடம் நாம் புதுமையை வேண்டுகிறோமா? கிருஷ்ணனின் வாசிப்பு அந்த மணத்தைப் போன்றது. அதில் புதுமை துருத்தித் தெரியாதது ஒரு குறையல்ல. அவர் பாணியின் சிறப்பம்சம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
அவர் வாசிப்பில் என்னை ஆச்சர்யப்படுத்தும் விஷயமொன்று உண்டு. அவர் நூர்த்த ஒவ்வொரு இசை இழையிலும் வல்லின மெல்லினங்களின் சேர்க்கை தன்னிச்சையாய் வந்து உட்காரும். அந்த மாயத்தை நான் நினைத்து நினைத்து மாய்ந்து போவதுண்டு. ஒரு ராகத்தை ஸ்வரங்களின் சேர்க்கையாகவோ, பிரயோகங்களின் அடுக்காகவோ அணுகாமல் அதற்கும் மேற்பட்ட முழுப் பரிமாணமாக அழகுணர்ச்சியுடன் வெளிப்படுத்த முடிந்ததை வித்வத், மேதமை என்று சொல்வதைவிட அதையொரு ‘ஸித்தி’ என்று சொல்லத் தோன்றுகிறது.
அவர் வாசித்த பூர்வி கல்யாணி நினைவுக்கு வருகிறது. அதில் அவர் தார ஸ்தாயியை நெருங்கும் போது ஒலி அளவை கால்வாசியாய்க் குறைத்து மெல்லிழையாய் அந்த ஷட்ஜத்தில் கலந்து கொண்டார். என் உடல் தன்னிச்சையாய் இருக்கையின் நுனிக்கு நடர்ந்தது, என் காதுகள் தீர்க்கமாவதை உணர முடிந்தது, தம்புரா ஷட்ஜத்துடன் ஐக்கியமான அந்த மெல்லிய வயலின் ஷட்ஜம் ஒரு பெரிய அலையை அந்த அரங்குக்குள் பிரம்மாண்டமாய் எழுப்பியது.
அந்த ஷட்ஜத்தை எந்த அளவில் ஒலிக்கவிட்டால் அந்த மோன நிலை பிறக்கும் என்று அவருக்கு எப்படித் தெரிந்திருந்தது?
எனக்கு இந்தக் கேள்விக்கான விடை இந்த ஜென்மத்தில் கிடைக்கப்போவதில்லை.
அதனால் என்ன? அந்த ஷட்ஜத்தின் சௌந்தர்யத்தில் கரைந்து போக அந்தக் கேள்விக்கான பதில் தெரிய வேண்டியதில்லையே.
இந்த ஜென்மத்துக்கு அது போதாதா என்ன?
பின்னூட்டமொன்றை இடுக