இன்று ஜி.என்.பி-யின் பிறந்த நாள். அதை முன்னிட்டு அவரைப் பற்றி நான் எழுதிய நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறேன். இந்தச் சம்பவத்தை சங்கீத கலாநிதி டி.எம்.தியாகராஜன் ஜி.என்.பி-யின் எண்பதாவது பிறந்த நாள் விழாவில் கூறியுள்ளார்.
“என்னையா சுத்தப் பைத்தியக்காரனா இருக்க? புதுக்கோட்டை-ல இருந்து கும்மோணத்துக்குள்ள எத்தனை வித்வான்கள் இருக்கா! 10 ரூபாய் சன்மானம் கொடுத்தா மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரையோ, அரியக்குடி இராமானுஜ ஐயங்காரையோ கூட்டிண்டு வந்து ராத்திரி முழுக்க ஆனந்தமா பாட்டு கேட்கலாம். எவனோ டாக்கி பாடகனை எல்லாம் மெட்ராஸ்-ல இருந்து கூட்டிண்டு வர அளவுக்கா நம்ம தஞ்சாவூர் கௌரவம் குறைஞ்சு போச்சு?”, என்று பொறுமினார் ஆஞ்சனேயர் கோயில் உத்சவ கமிட்டி மெம்பர்.
“மகாலிங்கம் பிள்ளைவாள்! ரெண்டு வருஷமா நான் சொல்லிண்டே இருக்கேன். நானும் காவேரி தண்ணி குடிச்சு வளர்ந்தவன்தாங்காணும். எனக்கும் ஏதோ கொஞ்சம் சங்கீத ஞானம் இருக்கறதாலதான் இத்தனை வருஷம் கமிட்டியில குப்பை கொட்டியிருக்கேன். ஒரே ஒரு தடவை கூப்பிட்டு”, வாக்கியத்தை தண்ணித்தொட்டி வெங்கடராம ஐயர் முடிப்பதற்குள் பத்ம வியூகத்தில் அகப்பட்ட அபிமன்யுவைச் சூழ்ந்தது போல பலர் சூழ்ந்து கொண்டனர்.
“ஐயர்வாள்! உம்ம ஆளு நடிச்ச டாக்கிய நானும்தான் பார்த்தேன். நாரதர்-னா தாடியும் மீசையும் வெச்சுண்டு, தம்புராவை மீட்டிண்டு நாராயணன் நாமம் பாடுவார். உம்ம பி.ஏ ஹானர்ஸ் நாரதர், நாகரீகமா ஷவரம் பண்ணிண்டு அழகுக்காக தம்புராவை தொங்க விட்டுண்டு, ‘நாரதரோட சிஷ்யரான தியாகராஜர் பாட்டு-னு’ கூட தெரியாம, அபத்தக் களஞ்சியமா “கோடினதுலு தனுஷ்கோடி” பாட்டை பாடினவர்தானே. அவர் பாட்டை போய் வெக்கச் சொல்லி ரெண்டு வருஷமா சிபாரிசு பண்றீரே. நாளைக்கு கச்சேரி நன்னா இல்லைன்னா தஞ்சாவூரே நம்மைக் கமிட்டியைப் பார்த்து வழிச்சுண்டு சிரிக்கும்.”
வெங்கடராம ஐயரின் முகம் சுண்டிப் போனதைக் கண்டு வருந்திய மஹாலிங்கம் பிள்ளை, “இந்த வருஷத்துக்குதான் 8 கச்சேரிக்கு பணம் இருக்கே. ஒரு கச்சேரிதான் மோசமா போனா என்ன குறைஞ்சுட போறது. வெங்கடராமனும் சும்மா சொல்லக் கூடிய ஆளில்லை. கேட்ட பாட்டையே கேட்டுண்டு இருக்கறதுக்கு பதிலா ஒரு தடவை பட்டணத்து பாட்டையும்தான் கேட்டுப் பார்ப்போமே. வைத்தியநாத ஐயர்வாள் நீர் என்ன சொல்றீர்?”
“புது ஆளைக் கூப்பிடறதுல எனக்கு ஒண்ணும் துவேஷம் இல்லை. என் சிஷ்யன் பாலக்காட்டு மணி 15 வயசுக்குள்ள சூராவளியா புறப்படையா என்ன? இருந்தாலும் கும்மோணத்துல இருந்தோ, மாயவரத்துல இருந்தோ ஆளைக் கூப்பிட்டா ரயில் டிக்கெட் ஏழறையணா, வண்டிச் சத்தம் ஒரணாவோட போச்சு. மெட்ராஸ்-ல இருந்து வந்தா போட் மெயில் டிக்கெட்டே நாலே முக்கால் ரூபா செலவு”, என்று தன்னுடைய எண்ணத்தை சூசகமாக தெரிவித்தார் வைத்தியநாத ஐயர்.
“தெருவுல போற மாடு எல்லாம் கஷ்டப்படாம இருக்கணுமேன்னு தண்ணித் தொட்டி கட்டி, தினம் ரெண்டாளு கூலி கொடுத்து தண்ணி இறைக்கறேன்யா நான். போட் மெயில் டிக்கெட்தான் பிரச்சனைனா, இன்னும் 10 நாளைக்குச் சேர்த்து கூலி கொடுத்ததா நினைச்சுக்கறேன்” என்று மீண்டும் சீறினார் தண்ணித்தொட்டி வெங்கடராம ஐயர்.
“அப்படியென்னங்காணும் அந்த கண்றாவிப் பாட்டுல கண்டுட்டீர்”
“பாட்டைக் கேட்காமலே நாக்கு மேல பல்லைப் போட்டு பேசற உம்ம கிட்டபேச எனக்கு போது இல்ல. மகாலிங்கம் பிள்ளைவாள்! நீர் சொல்லும், கடைசியாக் கேட்கறேன். மணியை கச்சேரிக்குக் கூப்பிட முடியுமா? முடியாதா?”
“ஐயர்வாள்! நீங்க நிம்மதியா வீட்டுக்குப் போங்க. உம்ம இஷ்டப்படியே மணி கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணிடலாம்.”, என்று அத்தனை எதிர்ப்பையும் மீறி ஸ்திரமாகக் கூறினார் மகாலிங்கம் பிள்ளை.
பலர் முகத்தில் அதிருப்தி வெளிப்பட்டாலும், வீடு செல்லும் வெங்கடராம ஐயரின் முகத்தில் தெரிந்த நிறைவைக் கண்டு மகாலிங்கம் பிள்ளைக்கு மகிழ்ச்சி. ஆனால், அம்மகிழ்ச்சி நெடு நேரம் நிலைக்கவில்லை.
“நாலு கால் மண்டபக் கச்சேரினா உமக்கு கிள்ளுக் கீரையா போச்சா? எந்த ஊரில பேர் வாங்கினவனும் தஞ்சாவூருக்கு வர்ரதுன்னா பயப்படுவான். வெங்கடேச பெருமாள் கோயில் மேல் படியில உட்கார்ந்து நாம லேசா தலையை ஆட்ட மாட்டோமா? நம்ம பாட்டுக்கு சாபல்யம் கிடைக்காதான்னு பெரிய பெரிய ஆளெல்லாம் தவம் கிடக்கறான். நீர் என்னடான்னா டாக்கி பாட்டுக்காரனையெல்லாம் கூப்பிடறேன்னு சொல்றீர்?”
“உம்ம ருசிக்கு ஏத்தாப் போல முடிகொண்டான் வெங்கடராமையர் பாட்டை ஏற்பாடு பண்ணிடறேன். போறுமா? இந்த கச்சேரி வைக்க எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா? தண்ணித்தொட்டி வெங்கடராம ஐயர் நம்ம ஊருக்காகவும் உத்சவத்துக்காகவும் எவ்வளவோ பண்ணி இருக்கார். இரண்டு வருஷமா வேற கேட்கறார். ஒரு தடவை அவருக்காகத்தான் அந்த மணியை கூப்பிட்டுதான் தொலைப்போமே. நமக்கு ஆயிரம் வேலை இருக்கு. இங்க ஒரு நாள் பாட்டை எவனோ பாடிட்டு போய் தொலையட்டும். நம்ம மத்த வேலையைப் பார்ப்போம்.”, என்று சமாதானம் சொன்னார் மஹாலிங்கம் பிள்ளை.
ஒரு வழியாய் மெட்ராஸ¤க்கு பணமும் அனுப்பி கச்சேரிக்கும் நாள் குறித்தாயிற்று. உத்சவத்துக்கு நோட்டீஸ் அடிக்கும் நேரத்தில், ‘அரியக்குடிக்கு நான் வாசிக்கறேன்’, ‘முசிறிக்கு நான் வாசிக்கறேன்’, என்று பக்கவாத்தியக்காரர்கள் போட்டி போட்ட படி இருந்தார்கள். மெட்றாஸிலிருந்து வரும் ‘டாக்கி புகழ்’ வித்வானுக்கு வாசிக்க ஒருவர் கூட முன் வரவில்லை.
வைத்தியநாத ஐயரிடம் கேட்டதற்கு, “ஆமாம்! நான்தான் என் சிஷ்யப் பயலுவளை வாசிக்க வேண்டாம்னும் சொன்னேன். மூர்த்தி சின்னவனா இருந்தா என்ன? அவனுக்கும்தான் நல்ல பேர் இருக்கு. இந்த மாதிரி அரைவேக்காட்டு பாகவதருங்களுக்கு எல்லாம் அவன் ஏன் வாசிக்கணும்.”
“ஐயர்வாள். ‘அரைவேக்காடு’-னு எல்லாம் வார்த்தையை இறைக்கலாமா?, அந்த டாக்கி விளம்பரத்துலேயே ஹட்சின்ஸ் ப்ளேட் புகழ் சங்கீத வித்வான்-னுதான் விளம்பரம் பண்ணி இருக்காளாம்”, என்றார் மஹாலிங்கம் பிள்ளை
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? நீரும்தான் சங்கீத வித்வான். நம்மை மாதிரி உங்க டாக்கி வித்வான் குருகுலவாசம் பண்ணியா சங்கீதம் கத்துண்டார்? என்னமோ காதுல விழுந்ததைக் கேட்டும், சினிமாவும் சொல்லித் தரவங்களைக் கேட்டும் பாடறவரு லட்சணம் எப்படி இருக்கும்னு நான் சொல்லி உமக்குத் தெரியணுமா என்ன? இந்த வித்துவான் கத்துவானுக்கு எல்லாம், உம்ம பையனையும் சேர்த்து, என் எந்த சிஷ்யனையும் வாசிக்க நான் அனுமதிக்கவே மாட்டேன்.”, என்று சூடாகவே கூறினார் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர்.
எந்த பிரபல பக்கவாத்தியக்காரரும் முன் வராததால், வேறு வழியில்லாமல் தனது சிஷ்யர் நடராஜசுந்தரம் பிள்ளையை மிருதங்கம் வாசிக்க ஏற்பாடு செய்தார். பலரிடம் கேட்டுச் சலித்தபின் பத்மநாப சராலயா என்ற வயலின் வித்வானை ஒரு வழியாய் சம்மதிக்க வைத்தார் மஹாலிங்கம் பிள்ளை.
உத்சவமும் ஆரம்பித்து கச்சேரிகளும் இனிதே நடந்த வண்ணம் இருந்தன. முடிகொண்டான் வெங்கடராம ஐயரின் கச்சேரிக்கு அடுத்த தினம் ஹட்சின்ஸ் ப்ளேட் புகழ் ‘பி.ஏ. ஹானர்ஸ்’ வித்வானின் கச்சேரி.
‘கச்சேரியை வெக்கவே கூடாது’, ‘இந்தக் கச்சேரி பக்கம் தலை வெச்சுப் படுக்க மாட்டேன்’, ‘டாக்கியில கூட டூயட் பாடினாரே கிருஷ்ணமூர்த்தி, அவரையும் அழைச்சுண்டு வருவாரோ?’, என்றெல்லாம் தஞ்சாவூருக்கேவுரிய கிண்டலுடன் பேசிய அத்தனை வீரர்களும் வெங்கடேச பெருமாள் கோயில் மேற்படியில் ஆஜரானார்கள்.
“என்னதான் பாடிடப் போறான் இந்தப் புதுப் பயல், பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் காலத்துல இருந்து பாட்டு கேட்கறவனாக்கும்”, என்று ஜம்பம் பேசினர் சிலர். “எப்படாப்பா தப்பு பண்ணுவான். நம்மை தலையை பலமா ஆட்டி, இவனை அடியோட கவுத்து, தஞ்சாவூர் பக்கமே இனி தலை வெச்சு படுக்க விடாம செய்யலாம்”, என்று காதைத் தீட்டிக் கொண்டனர் சிலர். “பாட்டு கிடக்குது கழுத. டாக்கியில நடிச்சவர் எப்படியிருக்கார்-னு பார்க்கலாம்” என்று கச்சேரியைப் பார்க்க வந்தனர் சிலர். “பட்டணத்து காலேஜ் கிராஜுவேட்டுக்கு எப்பேற்பட்ட ஷோக்கு இருக்கும்” என்றறியும் ஆவலால் உந்தப் பட்டு சபைக்கு வந்தோர் சிலர். எது எப்படியிருப்பினும் கச்சேரி ஆரம்பிப்பதற்கு அரை மணிக்கு முன்பே சபை நிறைந்துவிட்டது.
தண்ணித்தொட்டி வெங்கடராமையர் இருகிய முகத்துடன் வர, அவரைத் தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கிக் காத்திருக்கும் ‘டாக்கி பாடகனும்’ வந்து சபையை வணங்கி மேடையேறினான். சிவந்த மேனியும், கூரிய மூக்கும், சற்றே துருத்தலாக அமைந்த காதுகளும், நீண்ட விரல்களும், மின்னலடிக்கும் வைரக் கடுக்கண்களும், அழகிய ஜவ்வாதுப் பொட்டும், அந்த இருபத்தைந்து வயது இளைஞனுக்கு அங்கு நடப்பவைகள் புரியாமல் இல்லை. தண்ணித்தொட்டி வெங்கடராமையர் தான் பட்ட கஷ்டங்களை மதியம் கூறியதிலிருந்து மனதை யாரோ பிழிவது போன்ற ஒரு உணர்ச்சி. ஒரு நிமிடம், தனது வீட்டிச் சூழலை நினைத்துப் பார்த்தான் அந்த இளைஞன். தன் தந்தை நாராயணசாமி ஐயர் தலையாட்டலுக்கு காத்திருந்த வித்வான்களை நினைத்தான். பார்த்தசாரதி சங்கீத சபாவின் காரியதாரிசியாய் தந்தை இருக, சபையே தனக்குச் சொந்தம் போல திரிந்த நாட்களை நினைத்துக் கொண்டது அவன் மனம். அரியக்குடி இராமானுஜ ஐயங்காரும், பல்லடம் சஞ்சீவ ராயரும், ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியும், அவனைப் பாராட்டி ஊக்குவித்த கணங்களை எல்லாம் அவன் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. வித்வான்களின் ஊக்கத்தையும், நண்பர்களின் பாராட்டையும், எதிர்பாராமல் வந்த வாய்ப்புகளில் பாடிய போது கிடைத்த கைதட்டல்களையும் மட்டுமே பார்த்திருந்த அவனுக்கு காவிரி பாயும் தஞ்சை தரணியின் வேற்று முகம் ஜீரணிக்கக் கடினமாகத்தான் இருந்தது.
‘பி.ஏ படித்தற்கும் நான் பாடப் போகும் பைரவிக்கும் என்ன சம்பந்தம்? நான் டாக்கியில் பாடியதில் என்ன குறை என்று இது நாள் வரை ஒருவரும் கூறக் காணோம். நாரதராய் நடித்து தியாகராஜர் கிருதி பாடியது என் குற்றமா என்ன? நாடக மேடையில் நுழையும் போது பாடும் பாடல் எடுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ‘ஸ்ரீ வள்ளி’ நாடகத்தில் “அம்ம ராவம்மா” பாடி இவர்கள் கேட்டதில்லையா என்ன? ஒருவேளை அப்பா சொன்னதுதான் சரியோ? சங்கீத வித்வான் எல்லாம் நம் முன் கைகட்டி நிற்கும் நிலைக்கு உயரும் வகையில் வக்கீலுக்கே படிக்கவே போயிருக்கலாமோ? இந்த நிமிஷத்தில் கூட,உங்க ஊரும் வேண்டாம், சம்பாவனையும் வேண்டாம் என்று உதறிவிட்டுப் போய்விடலாம். அப்படிச் செய்தால், இத்தனை நாள் நான் நினைச்சது எல்லாம் தவறென்றல்லவா ஆகிவிடும். அப்பாவை எதிர்த்துப் போட்ட சண்டைகள், பிடித்த பிடிவாதங்கள் அனைத்தும் வீணல்லவா?’
‘இந்தக் கச்சேரியை ஒழுங்காப் பாடிட்டா இந்த வருஷம் திருவையாற்றில் பாடலாம் என்றுதானே கனவு கண்டோம். ஆனது ஆகட்டும்! நான் சபைக்காகப் பாடவில்லை. தியாகப் பிரும்மத்துக்கு அஞ்சலி செய்யும் வேட்கையில்தான் இங்கு பாட வந்தேன். ஒரு வேளை திருவையாற்றில் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமலே போய்விடலாம். அதனால், இந்தக் கச்சேரியையே எனது அஞ்சலியாக பாவிச்சுப் பாடறேன். அதன்பின் நடப்பது தியாகப்ரும்மத்தின் செயல்’, என்று மனதை திடப்படுத்திக் கொண்டான். மனதிலே உண்டான தெளிவு அவன் உதட்டில் புன்னகையாய்ப் பரவ, “இவர் பாடிக் கேட்கவே வேண்டாம். இந்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே கூட போதும்”, என்று கூட சிலர் நினைத்தனர்.
தன் பக்கவாத்தியக்காரர்களைப் பார்த்து ஒருமுறை புன்னகைத்த பின் நாலரைக் கட்டை ஸ்ருதியில் சேர்ந்து, மனதுள் தியாகபிரம்மத்தை தியானித்தபடி வர்ணத்தைத் தொடங்கினான். அந்த கனமான சாரீரத்தில், மத்யம கால வர்ணம் அழகுற பவனி வர ஆரம்பிக்க வெஙகடேச பெருமாள் கோயில் படிக்கட்டுகளில் லேசான சலசலப்பு ஆரம்பமானது.
‘குரல் பேசறது! ஆனா, வர்ணம் எல்லாம் குழந்தை கூடப் பாடும். டாக்கியில பாடறவாளுக்கு கல்பித சங்கீதம் நன்னாதான் வரும். நம்ம இசைல கல்பிதத்தைவிட கல்பனைக்குதானே முக்கியத்துவம்?’, என்றார் ஒரு படிக்கட்டு விமர்சகர்.
விறுவிறுவென மத்யம காலத்தில் 3 கீர்த்தனைகள் பாடிவிட, ‘பத்ததி எல்லாம் அரியக்குடி பாணியில இருக்கு. ஆனால், இன்னும் ராகம் பாடவேயில்லையே’, என்றார் கேட்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்த ரசிக சிகாமணி.
மெல்லிய கீற்றாய் ராகத்தை கோடி காண்பித்தவுடன், படிக்கட்டு சலசலப்பு சற்று அதிகமாகவே கேட்டது.
“என்ன ஓய்! மத்யமாவதி எடுக்கறான் போல இருக்கு”
“நாசமாப் போச்சு! மத்ய்மாவதிக்கு ஏது ஓய் தைவதம். அவரோகணத்துல தெளிவா தைவதம் கேட்கற்தே”
“தவறிடுத்தோ என்னமோ! அதான் அப்போவே அடிச்சுண்டேனே, இந்த கச்சேரி வேண்டாம்-னு. யாரேனும் கேட்டேளா”
“ஓய்! அவன் பாடறதைப் பார்த்தா, தெளிவா பாடறாப்லதான் இருக்கு. ஆரோஹணத்துல நிஷாதம் கேட்கறது, அவரோஹணத்துல தைவதம் கேட்கறது. தப்பாப் பாடினா, ஒவ்வொரு முறையும் இதே போல வராது. அவன் ஆரம்பத்துல காட்டின ராக ஸ்வரூபத்தோட சாயல்ல சுவாமிகள் பாட்டு கூட ஒண்ணு இருக்கு. என்னனுதான் சட்டுனு நியாபகம் வரலை.”
படிக்கட்டு கோஷ்டி என்ன ராகம் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே ஆரோஹணம் ஒரு ஸ்வரக் கோவை, அவரோஹணத்தில் வேறு ஸ்வரக் கோவை என்று வக்கிரமாக இருக்கும் ஆந்தோளிகா ராகத்தில், இன்னும் சில வக்கிரப் பிடிகளையும், சில ஸ்வரங்களை விடுத்துப் பிடிக்கும் வர்ஜப் பிடிகளையும், பிடித்து உலுக்கி தன் கற்பனைத் திறனை கோடிட்டுக் காட்ட ஆரம்பித்தான் அந்த இளைஞன். நினைத்த மாத்திரத்தில், மந்திர ஸ்தாயி, மத்ய ஸ்தாயி, தார ஸ்தாயிகளில் எந்த ஸ்வரத்திலிருந்து எந்த ஸ்வரத்துக்கு வேண்டுமானாலும் பாலம் அமைத்து, அதுவரைக் கேட்டிராத அபூர்வ பிடிகளை எல்லாம் தன் அதி துரித பிருகாக்கள் மூலம் படம்பிடித்துக் காட்டினான் அவ்விளைஞன்.
குத்தலும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருந்த கூட்டம் சட்டென்று வாயடைத்துப் போனது. அவ்விளைஞன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று ஆவலுடன் நோக்க ஆரம்பித்தது.
‘ராகஸ¤தா ரச’ கீர்த்தனம் பாடி, ஸ்வரம் பாடிய பின். பிரதான ராகமாக ‘காம்போதி’ ராகத்தை எடுத்துக் கொண்டான் மணி. காம்போதியின் காந்தாரத்திலும், பஞ்சமத்திலும் நின்று, சுற்றி சுற்றி பல அழகிய ச்வரப் பின்னல்களை இழையோட விட்ட போது, வாய்விட்டே கூட்டம் ரசிக்க ஆரம்பித்தது. ‘பேஷ்களும்’, ‘பலேக்களும்’ சபையெங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. தன்னை மறந்த நிலையில் அவ்விளைஞன் காம்போதியின் ஒவ்வொரு ஸ்வரமாய் இழைத்து, தார ஸ்தாயியில் நீண்ட கார்வைகள் கொடுத்து, அங்கிருந்தபடிய கொஞ்சம் கொஞ்சமாய் பிருகாக்கள் கொடுத்து, பிறகு ராகத்தின் மூலை முடுக்கெல்லாம் மின்னல் வேகத்தில் சஞ்சாரம் செய்து, தார ஸ்தாயி மத்யமம், பஞ்சமம் என்று தொட்டு, அதுவரை யாரும் கேட்டிறாத தைவதம், நிஷாதத்தையெல்லாம் கூட எட்டிப்பிடித்தது அந்த கந்தர்வக் குரல். தஞ்சவூர் வைத்தியநாத ஐயர் ஒரு கட்டத்தில் பெருமாள் கோயில் படிக்கட்டை விட்டெழுந்து, மேடைக்கருகே விரைந்தார். அவரைத் தொடர்ந்து ‘அரண்டு போன’ கூட்டமும் மேடையருகே சென்றமர்ந்து, ராகக் கடலில் மூழ்கியது.
அந்த மகத்தான கச்சேரி முடிந்த போது தண்ணித்தொடி வெங்கடராம ஐயரின் முகம் பெருமிதத்தில் மிதந்தது. “பத்து ரூபாய் கொடுத்து இந்த பாட்டைக் கேட்கத் தயங்கினோமே”, என்றொரு கூட்டம் வெட்கியது. “இப்படிப் பாடுபவரின் கச்சேரியை வைக்கவே இத்தனை எதிர்ப்பென்றால், நாமெல்லாம் எங்கு பாடி, என்றைக்கு பேர் வாங்குவது”, என்று சிலர் கவலையில் ஆழ்ந்தனர். “இந்த மனுஷன் எங்கையாவது இன்னிக்கே மெட்ராஸ¤க்கு கிளம்பிடப் போறார். இவரை எப்படியும் இன்னும் ஒரு வாரம் இங்கயே மடக்கிப் போட்டு, இன்னும் நாலு தடவையானும் இவர் கச்சேரியைக் கேட்கணும்”, என்று திட்டமிட்டனர் சிலர்.
அன்றிலிருந்து தொடங்கி எத்தனையோ அலைகளின் மேல் பயணம் செய்து பல உச்சிகளைத் தொட்டு, பல அலைகளுக்குள் மூழ்கிப் போராடி எதிர் நீச்சலிட்டு, தான் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின் பிறந்தோரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தச் செய்யும் ஆகர்ஷண சக்தியுடன் வாழ்ந்த அந்த இளைஞனே ‘ஜி.என்.பி’ என்று பரவலாக அழைக்கப்படும் கூடலூர் நாராயணசாமி பாலசுப்ரமணியம்.
ராம்….உங்க புத்தகத்தை இரண்டு முறை படித்திருக்கிறேன்….இப்போது படிக்கும்போதும் அதே த்ரில்லிங் அனுபவம்…..
டாக்கியிலிருந்து தஞ்சாவூருக்கு – அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கமகம்
Classical Music