இன்று விதுஷி சுகுணா புருஷோத்தமனின் எண்பதாவது பிறந்த நாள்.
நான் அவரைப் பற்றி 2007-ல்தான் தெரிந்து கொண்டேன்.
அந்த வருட டிசம்பர் இசை விழாவில் அகாடமியில் அவர் சிம்மனந்தன தாளத்தில் அமைந்த பல்லவியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார் என்ற செய்தியில்தான் நான் அவரைப் பற்றி முதன் முதலில் தெரிந்து கொண்டேன்.
நான் லக்ஷுமீஸம், சிம்மனந்தனம் போன்ற தாளங்களின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனேயன்றி அவற்றை யாரும் பாடிக் கேட்டிருக்கவில்லை. அதனால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல ஆவல் எழுந்தது.
பல்லவியை விதுஷி சுகுணா பாடுவதற்கு முன் சிறியதாக தோடி ராகத்தில் ஆலாபனையும், தானமும் பாடினார். பத்து நிமிடங்களுக்குக் குறைவாகவே அவற்றைப் பாடியிருப்பார். ஆனால் அவற்றில் சொட்டிய தோடி ராகம் அன்று அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது பல்லவிக்காகத்தான் என்கிற எண்ணத்தை மறக்கடிக்கச் செய்தது.
தாளங்களில் அதிக அளவு அட்சரங்கள் கொண்ட தாளம் சிம்மனந்தனம் (128 அட்சரங்கள்). அதிகம் காணக் கிடைக்காத குரு, புளுதம், காகபாதம் போன்ற அங்கங்களைக் கொண்ட தாளத்தை அன்று அவர் பிரமிக்கத்தக்க வகையில் கையாண்டார். திரிகாலம், திஸ்ரம் போன்ற பல சாகஸங்களை அனாயாசமாகச் செய்தார். அவற்றைக் காணத்தான் நான் அங்கு சென்றிருந்தேன் என்றாலும் என் மனம் அவர் பாடிய தோடியிலேயே சொக்கிக் கிடந்தது. வெறும் சதுஸ்ர நடையை மனத்தில் ஓட்டியபடி அவர் பாடிய தோடியின் சௌந்தரியத்தில் மட்டும் திளைக்கவே மனம் விரும்பியது.
அன்று தொடங்கி எனக்கு வாய்ப்பு அமைந்த போதெல்லாம் அவருடைய கச்சேரிகளையும், பதிவுகளையும் கேட்டு வந்தேன். அவருடைய சங்கீதத்துக்கு இணையாக அவருடைய மேடை ஆகர்ஷணமும் (stage presence) அவர் பேசிய போதெல்லாம் பளீரிட்ட நகைச்சுவையுணர்வும் என்னை அவர் நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் நாட வைத்தன.
அடுத்த 5/6 வருடங்களில் கிட்டத்தட்ட பத்து கச்சேரிகளை நேரில் கேட்டிருப்பேன். 2010-வாக்கில் இசைக் கலைஞர்களைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில் விதுஷி சுகுணாவையும் ஒரு நாள் சந்திக்க வேண்டுமென்ற நினைத்திருந்தேனே தவிர அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. 2013-ல் பரிவாதினி தொடங்கிய போது, அதில் நிறைய நேர்காணல்கள் செய்ய வேண்டுமென்றும் திட்டமிருந்தது. அப்போதுதான் விதுஷி சுகுணாவை எனக்குத் தெரிந்தவர் மூலமாக தொடர்பு கொள்ள முயன்றேன்.
அப்போது அவர் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தார். சில வாரங்களுக்கு ஒருமுறை விசாரித்து வந்தேன். நிலைமையில் முன்னேற்றமில்லை என்ற செய்திதான் வந்துகொண்டிருந்தது. ஒருநாள், “ராம்! அந்த நேர்காணல் நடக்காதுனு நினைக்கறேன்”, என்று என் நண்பர் சொல்லவும் நான் வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டேன். பல மாதங்கள் கழித்து 2014 செப்டம்பரில் ஒருநாள் அதே நண்பர் அழைத்தார். “நீ அதிர்ஷ்டசாலி! சுகுணா மாமி நன்றாகத் தேறி வந்துவிட்டார். நீ அவர்களைச் சந்திக்கலாம்”, என்றார்.
நேர்காணலுக்கு அனுமதி வாங்கித் தருவதாகவும் சொன்னார். சொன்னவரை அடுத்த பல நாட்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இறுதியில் ‘நாத இன்பம்’ சபையை நடத்தும் திருமதி.ஜெயலட்சுமியின் முயற்சியில் நேர்காணலுக்கான வாய்ப்பு கிடைத்தது.
2014-ல் செப்டம்பர் மாதக் கடைசியில் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். நான் முன்பு பார்த்திருந்ததற்குப் பாதியாய் இளைத்திருந்தார். முகத்தில் இருந்த பிரகாசமும், அவ்வப்போது பளீரிடும் குறும்பு கலந்த புன்னகையும் வழக்கம் போல இருந்தன. சந்தோஷமாகப் பேசவும், பாடவும் செய்தார் என்றாலும் பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை இளைப்பாற வேண்டியிருந்தது.
இரண்டு மணி நேரத்துக்கு அவரைப் பதிவு செய்த பின்னும் கூட எனக்குக் கேட்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் அவரை அதற்கு மேல் துன்பப்படுத்தலாகாது என்று சம்பிரதாயமாய் கேட்கும் கடைசி கேள்விக்குள் தாவினேன்.
உள்ளுக்குள் இன்னொரு முறை சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக அந்த இன்னொரு சந்திப்புக்கான வாய்ப்பே அமையவில்லை. சில மாதங்களுக்குள் அவர் உடல்நிலை மீண்டும் மோசமாகி 2015-ன் தொடக்கத்தில் அவர் மறைந்தும் போனார்.
அவரை இன்னொருமுறை சந்திக்கலாம் என்று எழுதாமல் வைத்திருந்த நேர்காணலை அவர் மறைவுக்குப் பின் எழுதக் கைவரவேயில்லை. சில நாட்களுக்கு முன்னால் அவருடைய 80-வது பிறந்த நாள் ஏப்ரல் 4-ம் தேதி வருகிறது என்று ஒரு பதிவைப் பார்த்தேன். அந்தப் பதிவு என்னை மீண்டும் அந்த நேர்காணலை நோக்கிச் செலுத்தியது.
மீண்டும் ஒருமுறை கேட்டுப் பார்த்த போது நான் பதிவு செய்து வைத்திருந்தது முழுமையான பார்வையைக் கொடுக்காது என்றாலும், இருக்கும் வரையிலும் கூட அது ஒரு பொக்கிஷம் என்றுபட்டது. பிறந்த நாளுக்குள் எழுதிவிட வேண்டும் என்று கையோடு எழுதி முடித்துவிட்டேன்.
அவர் என்னிடம் சொன்னதை ஒன்று விடாமல் இந்த நேர்காணலில் கொடுத்துள்ளேன். சொல்லாமல் போனதை நினைத்துக் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் அவையும் காற்றுமண்டலத்தில் எங்கோ மிதந்து கொண்டுதான் இருக்குமென்று தோன்றுகிறது.
ஏனெனில் உன்னதக் கலைஞர்கள் சாஸ்வதர்கள். அவர்கள் எழுப்பிய கலையலைகள் காலச்சுழலில் சில காலம் வெளியில் தெரியாமல் இருக்கலாம். கீழ் செல்லும் அலை ஒருநாள் மேல் வந்துதானே ஆக வேண்டும்?
ஆர்ப்பரிக்காத ஆனால் அழுத்தமான இந்த இசையலையின் சிறு ஸ்பரிசத்தை அவரது எண்பதாவது பிறந்த நாளையொட்டிப் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி என்று சொல்வதைவிட ஆசுவாசமாய் இருக்கிறது.
ஒரு நல்ல இசைமேதையின் 80ம் பிறந்த நாளை எங்களுக்கு நினைவூட்டியதற்க்கு மிக்க நன்றி.
அருமை