கச்சேரிகளில் அதிகம் கேட்கக் கிடைக்கும் தமிழ்ப்பாடல்களுள் ஒன்று, “யாரோ, இவர் யாரோ”. இந்தப்பாடலை பொதுவாக பைரவியிலும், அரிதாக சாவேரியிலும் பாடுவார்கள்.
இந்தப் பாடலை பெரும்பாலானவர்கள் சீதை மாடத்தில் நின்றபடி ராமனைப் பார்த்துப் பாடுவதாகக் கருதுகின்றனர். இதில் கச்சேரி விமர்சன கலாநிதிகளும் அடக்கம். அவர்களின் மேல் உள்ள கரிசனத்தால் இந்தப் பதிவு.
இவர்கள் இந்தப் பாடலை கச்சேரியில் மட்டுமே கேட்டவர்கள். அதனால் பல்லவியில் வரும் “இவர் யாரோ” என்கிற பதம் இவர்களை மயக்குகிறது. ஆண் பெண்ணைப் பார்த்துப் பாடினால் “இவள் யாரோ” என்றுதானே இருக்க வேண்டும்? இங்கு “இவர் யாரோ” என்று இருப்பதால், இது பெண் ஆணைப் பார்த்துப் பாடியதாகத்தான் இருக்க வேண்டும் என்கிற பொதுக் கருத்தில் மயங்கியவர்கள்.
இராமநாடக கீர்த்தனையின் முழுத் தொகுப்பு, தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் வெளியீடாகக் கிடைக்கிறது. தமிழ் இணையக் கல்விக்கழகத்திலும் இந்தத் தொகுப்பு (இலவசமாகக்) கிடைக்கிறது. அதில், இந்தப் பாடலைப் பார்த்திருந்தால், பாடலுக்கு முன்னால் உள்ள குறிப்பு கண்ணில் பட்டிருக்கும்.
அந்தக் குறிப்பு:
ஸ்ரீராமர் சீதையைக் கண்டு ஐயுறல்
விருத்தம் -13
இடமாம் விசுவா மித்திரன் இந்தச் சேதி உரைக்க லட்சுமண
னுடனே நடந்து மிதிலையிற் போய் ஒருமா மணிமே டையில் சீதை
மடவாள் காணத் தனையந்த மயிலைத் தானும் ரகுராமன்
கடல்வாய் வருசெந் திருவெனவே கண்டான் விரதம் கொண்டானே
கச்சேரிகளில், பல்லவி/அனுபல்லவிக்குப் பின் மூன்றாவது சரணத்துக்குப் பாடகர் தாவிவிடுவது வழக்கம். முதல் சரணத்தை யாராவது பாடியிருந்தால் ஒருவேளை இந்த மயக்கம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
அந்தச் சரணம்:
1. பண்ணிப் பதித்தாற் போல் இரு ஸ்தனமும்-கூட
பாங்கியர்கள் இன்ன முந்துரைத் தனமும்
எண்ணத்தாலும் வண்ணத்தாலும் பங்கயப்
பெண்ணைப் போல் கண்ணிற் காணும் மங்கையர்(ஆரோ)
தெலுங்கு/சமஸ்கிருத சாஹித்யங்கள் எல்லாம் என்ன சொல்ல வருகின்றன என்றெல்லாம் வம்புக்குப் போகாமல் ராகம்/எழுதியவர் பெயர் என்று மளிகைக் கடை லிஸ்டாக ஜல்லி அடிக்கும் விமர்சகர்களைக் காவு வாங்க இது போன்ற தமிழ்க் கீர்த்தனைகள் வந்துவிடுகின்றன.
மஹானுபாவர்களே! “பண்ணிப் பதித்தாற் போல் இரு ஸ்தனத்தோடு” எல்லாம் ராமனை மனக்கண் முன் வரவழைக்காதீர்கள் ஐயா! கொஞ்சம் கருணை காட்டுங்கள். பிழைத்துப் போகிறேன்.