Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘அழக நம்பி பிள்ளை’

சபைகளில் இசைக் கச்சேரிகள் பிரபலமாவதற்கு முன்னர், அரசவைகளிலும், சமஸ்தானங்களிலுமே இசை வளர்ந்தது.

சோழர் காலத்தில் கலைகளில் சிறந்து விளங்கிய தஞ்சையில், தொடர்ந்து வந்த நாயக்கர், மராட்டியர் காலங்களிலும் கலைகள் தழைத்தன. குறிப்பாக இசையும் நாட்டியமும் தஞ்சை மன்னர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்தன.

இன்றைய மிருதங்கம் மராட்டியர் காலத்தில் தஞ்சையில் நுழைந்ததை போன கட்டுரையில் பார்த்தோம். இந்தப் பரம்பரையில் முதன் முதலில் உயரங்களை அடைந்தவர்கள் நாராயணசாமியப்பாவும், துக்காராமப்பாவுமே. நாராயணசாமியப்பா மஹா வைத்தியநாத சிவன் போன்றோருக்கு பக்க வாத்தியம் வாசித்துள்ளார். அவருடைய வாசிப்பில் சொற்களின் துல்லியமும், காலப்ரமாண சுத்தமும், நாதத்தில் சௌக்யமும் ஈடு இணையற்றதாய் விளங்கியது. அவர் காலத்தில் மிருதங்கம் என்றால் அது நாராயணசாமியப்பாதான் என்ற நிலை விளங்கியது.

பாலக்காடு மணி ஐயர் ஆற்றிய ஓர் உரையில், “நாராயணசாமியப்பாவுக்கு முன் மிருதங்கத்தை யாரும் வாசித்ததுண்டா என்று பலரை விசாரித்துப் பார்த்தேன். அவருக்கு முன் யாரும் வாசித்ததாகத் தெரியவில்லை. ஒரு முறை ராமநாதபுரம் மகாராஜா நாரயணசாமியப்பாவை தன் அரசவைக்கு வந்து வாசிக்குமாறு அழைத்தார். நாராயணசாமியப்பாவோ,”என்னால் அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியாது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், என் வீட்டிலேயே பஜனையில் வாசிக்கிறேன். மகாராஜாவுக்கு வேண்டுமானால் இங்கு வந்து கேட்கட்டும்.”, என்றாராம். மகாராஜாவும் அவ்வாறே வந்து, அவர் வாசிப்பைக் கேட்டு மகிழ்ந்து, அவருக்கு கனகாபிஷேகம் செய்து வைத்தாராம். இந்த விஷயத்தைப் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.”, என்று கூறியுள்ளார். அந்த உரையின் ஒலிப்பதிவு இன்றும் நம்மிடையே உள்ளது.

நாராயணசாமியப்பாவைப் போலவே அழகநம்பி பிள்ளையும் பெரும் புகழுடன் விளங்கினார். தஞ்சாவூர் வழியில் இரண்டு கிளைகள் இருந்ததாக முனைவர் பி.எம்.சுந்தரம் கூறுகிறார். ஒரு வழி நாட்டியத்துக்கு வாசிப்பதிலிருந்து வந்தது, மற்றொரு வழி ஹரிகதைக்கு வாசிப்பதிலிருந்து வந்தது. நாராயணசாமி அப்பா ஹரிகதை வழியில் வந்தவர். அழக நம்பியோ நாட்டியத்துக்கு வாசிக்கும் வழியில் வந்தவர். “இவர் கண்ணுசாமி நட்டுவனாரின் சிஷ்யர் என்று சொல்வதுண்டு”, என்று தா.சங்கரன் எழுதுகிறார்.

அழக நம்பிப் பிள்ளை முதலில் நிறைய நாட்டிய கச்சேரிகளுக்கே வாசித்தாலும், பின்பு கதாகால்ட்சேபம் மற்றும் பாட்டுக் கச்சேரிகளுக்கும் நிறைய வாசித்தார். ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதியின் ஆதரவைப் பெற்றிருந்த இவர், சரப சாஸ்திரி, கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் முதல் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் வரையிலான பல முன்னணி வித்வான்களுக்கு பக்க பலமாய் விளங்கியவர். புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் இணைந்து அனைத்து முன்னணி பாடகர்களுக்கும் வாசித்துள்ளார். தட்சிணாமூர்த்தி பிள்ளையின் நுட்பமான லய விவகாரங்களை தன் சௌக்யமான வாசிப்பின் மூலமே எதிர்கொண்டு அவருக்கிணையாய் பெயர் பெற்றிருந்தார். இவர் வாசிப்பைக் கேட்க பாலக்காடு மணி ஐயரும், பழநி சுப்ரமணிய பிள்ளையும் இவர் வாசிக்கும் கச்சேரிகளுக்கு தவறாமல் செல்வர். “ஒரு சாப்பு கொடுத்தால் சபையே நிறைந்து விடும்”, என்றெழுதுகிறார் இசையறிஞர் தா.சங்கரன்.

மிருதங்கத்தில் கண்கள் உண்டு. வலந்தலையையும் தொப்பியையும் இணைக்கும் எட்டு ஜோடி இடங்களை கண்கள் என்று குறிப்பதுண்டு. அனைத்து கண்களிலும் ஒரே விதமாய் ஸ்ருதி சேர்ந்தால்தான் கேட்க இனிமையாக இருக்கும். நடைமுறையில் அத்தனை கண்களிலும் சீராய் ஸ்ருதி சேர்வது கடினம். அழகநம்பிக்கோ ஒரு கண்ணில் ஸ்ருதி சேர்ந்தாலே, நாதம் வெகு சௌக்யமாய் வெளிப்படுமாம். ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருந்த அழகநம்பியைப் பற்றி சிலேடையாய், “அழக நம்பிக்கு ஒரு கண்ணே போதும்”,கூறியுள்ளனர்.

தஞ்சாவூர் வழியில், (இன்றைய வட இந்திய சங்கீதத்தில் உள்ளது போல), தாள வாத்தியக் கலைஞரின் முக்கிய பங்கு தாளத்தை சரியான முறையில் காக்கவும், காலப்ரமாணத்தை தக்க வைத்துக் கொள்வதுமே. அதிக லய விவகாரங்களுக்குள் ஈடுபடாது, அவ்வப்போது சிறு சிறு தீர்மானங்கள், மொஹ்ராக்கள் மூலம் கச்சேரியை மெருகூட்டுவதே இவ்வழியின் முக்கிய கூறுகளாய் இருந்தன.

மேற்கூறியதை அனைத்து தஞ்சாவூர் வழி கலைஞர்களுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடாது. ஆரம்ப காலத்தில் தஞ்சாவூர் வழியின் வாசிப்பில் சௌக்யத்துக்கே முதன்மை அளிக்கப்பட்டது என்ற போதும், காலப் போக்கில் அந்த வழியிலும் பல லய விவகாரங்கள் புக ஆரம்பித்தன. போக்குவரத்து வசதிகளும், கலைஞர்களுக்கிடையிலான பரிமாற்றமும் தஞ்சாவூர் வழியை பாதித்தன. பிற்கால கலைஞர்களை அவர்கள் வாசித்த விதத்தினால் மட்டுமே தஞ்சாவூர் வழியில் வந்தவர் என்று சொல்வதற்கில்லை. ஒருவரின் குரு பரம்பரை தஞ்சாவூரில் இருந்தால் அவரை தஞ்சாவூர் வழி கலைஞர் என்று அழைக்கிறோம். இதே கூற்று மற்ற வழிகளுக்கும் பொருந்தும்.

தஞ்சாவூர் வழியில், முன் குறிப்பிட்டவர்கள் தவிர தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர், மெலட்டூர் சாமி ஐயர், தஞ்சாவூர் ராமதாஸ் ராவ் ஆகியோர் ஹரிகதை மற்றும் கச்சேரிகளில் வாசித்து பெரும் புகழடைந்தனர். இவர்களுக்குப் பின் வந்த பாலக்காடு மணி ஐயர் சூராவெளியாய் இசையுலகில் நுழைந்து, நெடுங்காலம் கோலோச்சி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார். இதே பரம்பரையில் வந்த வித்வான் டி.கே.மூர்த்தி இன்றும் கச்சேரிகளில் சிறப்பாக வாசித்து வருகிறார்.

தஞ்சாவூர் தவிர புதுக்கோட்டை, இராமநாதபுரம், எட்டையபுரம் போன்ற பிராந்தியங்களை ஆண்ட குறுநில மன்னர்களும் இசைக் கலைஞர்களைப் பெரிதும் ஆதரித்து வந்தனர்.கலை ஆதரவைப் பொருத்த மட்டில், இக் குறுநில மன்னர்களின் பங்கை, தஞ்சாவூர் போன்ற மிகப் பெரிய சமஸ்தாங்களின் பங்கிற்கு எந்த விதத்திலும் குறைந்தென்று கூறிவிட முடியாது.

மராட்டியர் காலத்தில், மிருதங்கம் கச்சேரிகளில் இடம் பெறத் தொடங்கி ‘தஞ்சாவூர் வழி’ என்று வளர்ந்தது போலவே, புதுக்கோட்டையிலும் இன்னொரு வழி வளர ஆரம்பித்தது. ஹரிகதையும் நாட்டியமும் தஞ்சை வழிக்கு அடிப்படைகளாய் போல, நாகஸ்வரத்துடன் இசைக்கப் பட்ட தவில் புதுக்கோட்டை வழிக்கு அடிப்படையாய் அமைந்தது்.

தவில் வாசிப்புக்கும் மிருதங்க வாசிப்புக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு. முதல் வித்தியாசம் மிருதங்கம் ஸ்ருதி வாத்யம். தவிலை ஒரு ஸ்ருதியோடு இணைக்க முடியாது. மிருதங்கத்தில் ஸ்ருதியோடு இணைந்து ஒலிக்கும் சாப்பு, மீட்டு போன்ற சொற்களை வாசிக்கும் போது காதுக்கு இனிமையாக ஒலிப்பது போல, தவிலில் வாசிக்க இயலாது. இதனால் தவில்காரர்களுக்கு ‘விவகாரம்’ என்று குறிக்கப்படும் லய நுணுக்கங்கள் அவசியமாகிறது. வாத்தியத்தின் ஒலி மட்டுமே ரசிகர்களை கவர முடியாமல் போகும் போது, கணக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் வெவ்வேறு கோவைகள் (patterns) கேட்போரின் கவனத்தை தக்க வைக்க உதவுகின்றன. கச்சேரியில் மிருதங்கத்தின் பிரதானமான வேலை என்பது பாடுபவருக்கோ வாசிப்பவருக்கோ துணையாக இருப்பதே. தனி ஆவர்த்தனம் என்கிற கட்டத்தில்தான் மிருதங்க வித்வானின் முழு திறமை வெளிப்படுத்தும் வாய்ப்பு அமைகிறது.

தவிலிலோ, நாகஸ்வர வித்வான் ஆலாபனை செய்யும் போதும், கீர்த்தனையில் ஒரு பகுதி முடிந்து அடுத்த பகுதிக்கு (உதாரணமாய் அனுப்பல்லவியிலிருந்து சரணம்) செல்லும் போதும், கோவில் உற்சவங்களின் போது உற்சவ மூர்த்தியின் பவனியின் போதும் (அந் நேரங்களில் வாசிக்கப் படுபவை நடைச் சொற்கள் எனப்படும்) தாள வாத்தியக்காரர் தன் முழுத் திறமையைக் காட்டும் வாய்ப்புகள் உள்ளன. தவிர, மிருதங்கம் ஒலிக்கும் கச்சேரிகள் அதிக பட்சம் அந் நாட்களில் 4-5 மணி நேரம் நடந்தன. நாகஸ்வர கச்சேரிகளோ விழாக் காலங்களில் 10-12 மணி நேரத்துக்கும் மேலாக நடை பெற்றன. இதனால் தவில் தனி ஆவர்த்தனங்கள் குறைந்த பட்சம் 2 மணி நேரமாவது நடை பெற்றன. ஒரே தாளத்தில் இவ்வளவு நேரம் தனி வாசிக்க வேண்டுமெனில், லய விவகாரங்களில் ஆழ்ந்த தேர்ச்சி என்பது தவில் வித்வான்களுக்கு அடிப்படை தேவையாகிறது. மிருதங்க வாசிப்பு பெரிதும் வளர்ந்திருக்கும் இந்த நாளில் கூட, நுணுக்கமான லய விவகாரங்களை மட்டும் வைத்துப் பார்க்கும் போது, தவில் வாசிப்பு மிருதங்க வாசிப்பை விட பல மடங்கு நுட்பமாய் விளங்குகிறது.

தவிலின் அடிப்படையில் உருவான ’புதுக்கோட்டை வழியை’ தொடக்கி வைத்தவர் கஞ்சிரா வித்வான் மான்பூண்டியா பிள்ளை என்பவரே. இசை என்பது பரம்பரை சொத்தாய் கருதப்பட்டு வந்த காலத்தில், இசைத் துறைக்கு எந்த சம்பந்தமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த ஒருவர் இசையில் ஒரு புதிய வழியே ஏற்படுத்தியுள்ளார் என்னும் விஷயம் கதைகளில் வருவது போலத் தோன்றுகிறது.

இருப்பினும் பழநி சுப்ரமணிய பிள்ளை ரேடியோவில் ஆற்றிய உரை, முனைவர் பி.எம்.சுந்தரம் கூறிய தகவல்கள் மற்றும் ஸ்ருதி முதலான பத்திரிக்கைகளில் வந்த குறிப்புகளைப் பார்க்கும் போது நம்பத்தான் வேண்டியிருக்கிறது.

இவரைப் பற்றிய விவரங்களை அடுத்த கட்டுரையில் காண்போம்.

Read Full Post »